30.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 14

பத்மா, மரகதம் இருவரும் அவரையே பதற்றத்துடன் பார்த்தனர். ‘அப்பா என்னப்பா, என்ன செய்யிதுப்பா..’ அடி வயிற்றிலிருந்து கதறிய பத்மாவின் குரல் கேட்டு அதுவரை விழித்தெழுந்து தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மதனும், தாழ்வார மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த மீனாவும் எழுந்து ஓடிவந்தனர்..

தன் அறையை விட்டு வெளியே வந்த மதன் தனக்கு முன்னால் சென்ற மீனாவை பிடித்து நிறுத்தினான். ‘ஏய், நீ டென்ஷனாகாம போய் உங்கம்மே உக்கார வச்ச எடத்துலயே உக்கார். நான் போய் என்னான்னு பார்க்கறேன்.’

கலங்கி நின்ற கண்களுடன் தன் தந்தையையே கலவரத்துடன் பார்த்தாள் மீனா. ‘வேணாம்பா. நீங்க இப்ப அங்க போனீங்கன்னா மாமாவுக்கு உங்க மேல இருக்கற கோபம் ஜாஸ்தியாயிரும். நீங்க உங்க ரூமுக்குள்ளவே கொஞ்ச நேரம் இருங்கப்பா.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்ல.. நான் போய் பார்த்துட்டு வந்து சொல்றேம்ப்பா.. ப்ளீஸ்ப்பா..’

கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீருடன் தன்னை கெஞ்சி நின்ற மகளை அப்படியே இறுக அணைத்துக்கொண்டான் மதன். தன் பேரிலேயே அவனுக்கு கோபம் வந்தது.. ‘சே, என்ன மனுஷன் நான்’ என்று தன்னையே நொந்துக்கொண்டான். பிறகு, திரும்பி தன் அறையை நோக்கி நடந்தான்.

‘நில்லுங்க அங்கேயே..’

தன் தந்தை தான் கேட்டுக்கொண்டதற்கிணங்கி அவனுடைய அறைக்கு திரும்பிச் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மீனா தன் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டு மிரண்டு போய் திரும்பி பார்த்தாள்.

மாணிக்கம் ஆத்திரத்துடன் தன் தந்தையையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டாள். அதற்குள் மாணிக்கத்தின் குரலைக் கேட்டு பத்மாவும், மரகதமும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

‘டேய் மாணிக்கம். உங்கப்பா அங்க மூச்சு விடக்கூட முடியாம தடுமாறிக்கிட்டிருக்கார். அவர பாக்கறத விட்டுட்டு மறுபடியும் தகராறு பண்லாம்னு இறங்கிட்டியா? போடா, போய் அவர் பக்கத்துல இரு.. போ..’ என்ற தாயை ஒரு கையால் விலக்கி விட்டு மதனை நோக்கி அடங்கா ஆத்திரத்துடன் முன்னேறிய மாணிக்கத்தை முன் வந்து அமைதியுடன் எதிர்கொண்டான் மதன்.

இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நிற்க பத்மா இருவர் நடுவில் புகுந்து, ‘அண்ணே, போறும்னே.. அப்பாவ போய் பாருங்க..’ என்று அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள். பிறகு தன் கணவனைப் பார்த்தாள்.. மதனின் முகத்தில் துளியேனும் வருத்தம் தெரிகிறதா என்று பார்த்தாள். அவனுடைய முகம் இறுகிப்போய் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் இருந்ததைக் கண்டாள். ஒன்றும் பேசாமல் தன் தந்தை இருந்த படுக்கையறைக்கு திரும்பினாள்.

மரகதமும் மாணிக்கமும் இருபக்கமும் அமர்ந்திருக்க பத்மாவின் தந்தைகட்டிலில் படுத்து விட்டத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். ‘எப்படி இருக்காங்க அப்பா?’ என்பது போல் தன் தாயைப் பார்த்தாள்.

‘இப்ப ஒன்னுமில்லேடி.. இதுக்கு முன்னால ரெண்டு முறை அப்பாவுக்கு வந்திருக்கு.. மாத்திரை சாப்டதும் கொஞ்ச நேரத்துல சரியாயிரும்.. இப்பவும் அப்படி ஆயிரணும். ஊருக்கு போனதும் பழனிக்கு வரேண்டாப்பான்னு நேந்திருக்கேன்.. முருகன் பார்த்துப்பான். அவங்கள விடு.. ஒன்னும் ஆகாது. இப்ப ஆக வேண்டியத பாப்பம். மாப்பிள்ளை என்னதான் சொல்றாரு.. நா வேணா கேக்கட்டுமா?’

மாணிக்கம் கோபத்துடன் இடைமறிக்க.. ‘டேய் இப்பத்தான சொன்னேன்? அப்பா கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும். நீ போய் நான் லிஸ்ட் போட்டு வச்சிருக்கற ஜாமானையெல்லாம் வாங்கிக்கிட்டு வா.. போ..’ என்று தன் மூத்த மகனை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தாள் மரகதம்.

அவன் சென்றதும் தன் முன்னே நின்ற மகளைப் பார்த்தாள். ‘என்னடி சிலையாட்டம் நிக்கறே? நேத்தைக்கி மாப்பிள்ளை ஏன் உன்னை அடிச்சார்? நீ என்ன பண்ணே?’

பத்மா வெறுமனே நிற்க, மீனா தன் அம்மேயை பார்த்து ‘இங்க வாங்கம்மே நான் சொல்றேன்.’ என்று அழைத்தாள்.

மரகதம் அருகில் வந்து அமர்ந்ததும் நேற்று இரவு நடந்ததை முழுவதும் ஒன்றுவிடாமல் தன் தந்தைக்கு கேட்காவண்ணம் கூறினாள். ‘இதான் அம்மே நடந்திச்சி. அப்பாவுக்கு தெரியாம அம்மா உங்களுக்கு ஃபோன் பண்ணதுதான் இதுக்கெல்லாம் காரணம். நீங்க போயி சமாதானமா அப்பாக்கிட்ட பேசுங்கம்மே. அப்பா சம்மதிக்காம எனக்கு நீங்க எதுவும் செய்யவேணாம்.. எனக்கு பிடிக்கலே..’

மேலே பேச முடியாமல் தன் மடியில் தலைசாய்த்து விம்மிய தன் பேத்தியை தட்டிக்கொடுத்தபடியே தன் மகளை பார்த்தாள் மரகதம். ‘சரிடா கண்ணு.. அம்மே போய் பேசறேன். நீ கண்ண துடைச்சிக்கிட்டு நிமிர்ந்து உக்கார். அம்மே இப்ப வந்திர்றேன்.’

மீனா எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு அமர மரகதம் எழுந்து சென்று தன் மகளை இழுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். ‘ஏண்டி அறிவு கெட்டவளே. நீ எதுக்கு மாப்பிள்ளைக்கு தெரியாம அப்பாவுக்கு ஃபோன் பண்ணே? நீயாவே பிள்ளைய வீட்ல தனியா விட்டுட்டு வெளியே போய் பண்ணியா? அறிவு கெட்டவளே, நீ போயிருந்தப்போ குழந்தைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருந்தா.. சரி.. நீ செஞ்சது தப்புன்னு மாப்பிள்ளை கிட்ட ஒத்துக்கலாமில்ல.. அத விட்டுட்டு ஏறுக்குமாறா பதில் சொல்லியிருக்கே.. இல்லே?’

தாயின் சீற்றத்தை முற்றிலும் எதிர்பாராத பத்மா, ‘என்னம்மா நீங்க? நான் கேட்டிருந்தா மட்டும் ஃபோன் பண்ண விட்டுருவாங்களா அவங்க? எல்லாம் ஆம்பிளைங்கற திமிரு.. இனியும் நா இதுக்கு மசியமாட்டேன்..’

மரகதம் வீம்புக்கு வாக்குவாதம் செய்யும் தன் மகளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். ‘ஏய், உனக்கென்ன உங்கண்ணன மாதிரி கிறுக்கு பிடிச்சிருக்கா? மாப்பிள்ளைக்கு மீனாவுக்கு சடங்கு செய்யறது பிடிக்கலேன்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குவம்? என்ன செய்யறதா உத்தேசம்?’

பத்மா குரோதத்துடன் தன் தாயைப் பார்த்தாள். ‘ஊம்? போய்யா சரிதான்னுட்டு என் பிள்ளைங்க ரெண்டையும் கூட்டிக்கிட்டு உங்க கூடவே புறப்பட்டு வந்துருவேன்.’

மரகதம் அதிர்ந்துபோய் தன் மகளையே பார்த்தாள். ஆத்திரம் தாங்காமல் அவளை அடிக்க கை ஓங்கினாள். ‘என்னடி சொன்னே? அவ்வளவு ஆங்காரம் இருக்கா உன் மனசுல? பொட்டக்களுத.. கொளுப்பு ஜாஸ்தியாயிருச்சா? ஒரே பொண்ணாச்சே செல்லம் குடுத்தேன் பாரு.. என்ன சொல்லணும்.. சரி புறப்பட்டு வந்திட்டேன்னே வச்சுக்குவம்.. ஊர்ல வந்து எங்க தங்குவ? வீட்ல இருக்காளுகளே மூனு மவராசிங்க.. உன்ன நிம்மதியா தங்க விட்டுருவாளுகன்னா நினைக்கறே? மூளை கெட்ட சிறுக்கி.. புறப்பட்டு வந்துருவாளாம்.. இங்க பாருடி, ஒரு பொம்பள பிறந்த வீட்டுக்கு கவுரவமா வரணும்னா ஆம்பிளையோட வரணும்டி.. தனியா வந்தா வாழாவெட்டியாத்தான் வந்துருக்கா போலன்னு உன் மதனிமாருகளே கேலி பண்ணுவாளுங்க.. மறந்துராத..’

தன் தாயை இத்தனை கோபத்துடன் கண்டறியாத பத்மா.. 'ஆமா.. இந்த ஒரு சொல்லையே சொல்லி எங்கள மாதிரி ஆளுங்க வாய அடைச்சிருங்க.. அடிபட்டு உதைபட்டு கிடக்கறதே என்ன மாதிரி பொம்பளைங்களுக்கு விதி..’ என்று தனக்குள் முனகினாள்.

‘என்னடி முனகுறே? நான் சொன்னத அப்புறமா யோசிச்சி பாரு.. இப்ப வேலைய பாரு. காலைலருந்து காப்பி கூட குடிக்காம வாடி வதங்கி போயிருக்கு பாரு பிள்ளைங்க ரெண்டும்.. போ.. மாப்பிள்ளை வேற பாவம் காலைலருந்து ரூம்லயே அடைஞ்சி கிடக்குராறு.. ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மாவா லட்சணமா இருக்கப் பாரு. இன்னமும் சின்ன குழந்தைன்னு நினைச்சிக்கிட்டு அழும்பு பண்ணாத. போயி காப்பிய போட்டுக்கிட்டு மாப்பிள்ளைய போய் குளிக்க சொல்லு. அப்பா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்ததுக்கப்புறம் மாப்பிள்ளைக் கிட்ட பேசிக்கலாம். முறைக்காத, போடி.’

சிறிது நேரம் எரிச்சலுடன் தன் தாயையே பார்த்துக்கொண்டிருந்த பத்மா வேறு வழி தெரியாமல் அடுக்களைக்குள் நுழைந்து டிகாஷன் இறங்கியிருந்த காப்பியை மீண்டும் சுடவைத்து ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

‘ஏய் வீனா.. இங்க வா. இந்த காப்பிய கொண்டுபோய் உங்கப்பாக்கிட்ட குடு.’

வீனா தாத்தாவின் அருகிலேயே அமர்ந்துக்கொண்டு, ‘போங்கம்மா.. நா மாட்டேன். போனா அப்பா என்னையும் அடிச்சாலும் அடிப்பார். நீங்களே போய் குடுங்க.’ என்றாள்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற மகளையும் பிடிவாதத்துடன் சிணுங்கும் பேத்தியையும் மாறி, மாறி பார்த்த மரகதம், ‘இங்க கொண்டா.. நான் போய் கொடுக்கறேன்.’ என்ற கோப்பையை எடுத்துக்கொண்டு முன் அறைக்கு சென்றாள். மதனின் படுக்கையறைக் கதவு மூடப்பட்டிருக்கவே லேசாக தட்டினாள்.

அறையினுள் இருந்தவாறே வெளியில் நடப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மதன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று திறந்தான். ‘வாங்க அத்தை.’ என்றான் லேசான புன்னகையுடன்.

பதிலுக்கு புன்னகைத்த மரகதம் அவன் கையில் கோப்பையைக் கொடுத்துவிட்டு திரும்பினாள்.

‘மாமாவுக்கு இப்ப எப்படியிருக்கு?’ என்ற மதனைத் திரும்பி பார்த்தாள். ‘இப்ப பரவாயில்லை. நீங்க போய் குளிச்சிட்டு உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் பக்கத்துலருந்தா கொஞ்சம் வரச்சொல்ல முடியுமா.. அவங்களுக்கு பிரஷர் பார்த்துட்டா நிம்மதியா இருக்கலாம்.’

மதன் யோசித்தான். அவனுக்கு தேனாம்பேட்டை மார்க்கெட்டுக்கு அருகில் இருந்த ஒரு இருதயநோய் மருத்துவரைக் கடந்த சில மாதங்களுக்கு முன் போய் பார்த்த நினைவு வந்தது. அவர் கூப்பிட்டால் வீட்டுக்கு வருவாரோ என்னவோ. போய் பார்ப்போம் என்று தீர்மானித்தான்.

காப்பி கோப்பையைப் பார்த்தான்.. ஆடை படிந்து இருந்தது. அவனையுமறியாமல் முகத்தை சுளித்தான். அப்படியே மரகதத்திடம் திருப்பிக் கொடுத்தான்.

‘என்ன மாப்பிள்ளை? அப்படியே கொடுக்கறீங்க?’

அவளுடைய கேள்விக்கு அறைக்கு வெளியே இருந்து பதில் வந்தது. ‘அது ஒன்னுமில்லேம்மா.. அதுல ஆடை படிஞ்சிருக்கில்லே.. அதான்.. குடிக்கற காப்பி கூட அவங்க ரூல்படிதான் இருக்கணும்.. ஆனா அவங்க மட்டும் எந்த சட்டம், சம்பிரதாயத்தையும் கடைபிடிக்க மாட்டாங்க.’

மரகதம் அதிர்ந்துபோய் மதனைப் பார்த்தாள். அவனுடைய முகத்தில் கோபத்தின் சாயல் தெரியவே விரைந்து சென்று தன் மகளைப் பார்த்து முறைத்தாள். ‘ஏய் உன்னை கேட்டனா? போடி உள்ளே.. போய் மாப்பிள்ளைக்கு வேற காப்பிய போட்டுட்டு பலகாரத்தை எடுத்து வை.. போ..’

திரும்பி அறைக்குள் நின்றிருந்த மதனைப் பார்த்தாள். ‘அவளை தப்பா நினைச்சிக்காதீங்க மாப்பிள்ளை. விவரம் கெட்டவ.. நான் சொன்ன டாக்டர்..’

மதன் புன்னகையுடன் ‘சரி’ என்று தலையை அசைத்தான். ‘இருக்காருங்க அத்தை.. நான் குளிச்சிட்டு போய் பாக்கறேன். வீட்டுக்கு வருவாரான்னு தெரியலை.. கேட்டு பாக்கறேன். நீங்க போங்க.’

அறையிலிருந்து வெளியேறி மூலையில் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான். மீனாவும் ‘அப்பாடா.. இனி அம்மே பார்த்துக்குவாங்க’ என்ற நிம்மதியில் தன் தந்தையைப் பார்த்து ஒரு அகண்ட புன்னகையை வீசினாள்.

மதனுக்கும் தன் மகளுடைய சிரிப்பு சந்தோஷத்தைத் தந்தது. தாழ்வாரத்தில் இருந்த வாளியை எடுத்து அடிபைப்பில் 'டபக்,டபக்' என்று தண்ணீர் நிரப்ப தொடங்கினான்.

தொடரும்..

29.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 13

ஒன்றுக்கும் விடை கிடைக்காமல் குழம்பிப் போய் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான் மதன்.

***

அதிகாலையில் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய பத்மாவின் பெற்றோரும் மூத்த சகோதரனும் வீடு வந்து சேர்ந்த போது முன் அறைக் கதவு திறந்து கிடக்க மதன் அறையிலிருந்த சாய்வு நாற்காலியில் உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு திகைத்துபோய் ஒருவரையொருவர் பார்த்தனர்.

மதன் சாதாரணமாக உறங்கச் செல்வதற்கு முன் அறைக்கதவை மட்டுமல்லாமல் ஜன்னல் கதவுகளையும் அடைத்து தாளிடுவது வழக்கம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘ஏண்டி பத்மா, நீயாவது மாப்பிள்ளைக் கிட்ட சொல்லக்கூடாது? இப்படி எல்லா கதவையும் சாத்திக்கிட்டு தூங்கினா சுத்த காத்து எப்படி ரூம்புக்குள்ளாற வரும்? உங்க ரெண்டு பேரையும் விடு.. வளர்ற பிள்ளைங்களையும் இந்த மாதிரி போட்டு அடைச்சி.. நம்ம வீட்ல இப்படியா வளர்த்தோம் உங்கள? என்னடி குடும்பம் நடத்தறீங்க.. படிச்சி பட்டம் வாங்கி என்ன பிரயோசனம்? இந்த மாதிரி விஷயங்கள பாக்க வேணாம்? கேட்டா நான் சொன்னா அவர் கேட்டாத்தானம்மான்னு புலம்புவே.. இப்படியே அவருக்கு பயந்து, பயந்து எத்தன வருஷத்துக்குத்தான் சாவப் போறியோ போ.’ என்று சென்ற முறை வந்தபோது தான் கூறி வருத்தப்பட்டதை நினைத்துப் பார்த்தாள் பத்மாவின் தாயார் மரகதம் .

‘என்னங்க இது, ஒரு நாளும் இல்லாம மாப்பிள்ளை இப்படி எல்லாத்தையும் திறந்து வச்சிட்டு.. அதுவும் சேர்லயே சாஞ்சி தூங்கறாங்க? வாங்க, பத்மாவையும் பிள்ளைங்களையும் பாப்போம்.’ என்றவாறு அவள் தன் கணவனுக்கு முன்னே சென்று அவர்களுடைய அறை திறந்து கிடப்பதையும், பத்மாவும் பிள்ளைகளும் கட்டிலில் அல்லாமல் நிலத்தில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவதையும் பார்த்து திகைத்து நின்றாள்.

பதற்றத்துடன் முதலில் அறைக்குள் நுழைந்து, ‘ஏய் பத்மா, எழுந்திரு..’ என்று தன் மகளை பிடித்து உலுக்கினாள்.

பதறி எழுந்த பத்மா தன் முன் நிற்கும் தாயை கட்டிப் பிடித்து அழ, சப்தம் கேட்டு எழுந்த மீனா தன் தாயையும் ஊரிலிருந்து வந்தவர்களையும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு நிமிடம் பார்த்தாள்.

‘என்ன இது எல்லா கதவும் திறந்து கிடக்கு? மாப்பிள்ள சேர்லயே சாஞ்சிக்கிட்டு தூங்கறாங்க. நீங்க என்னடான்னா கட்டில்ல படுக்காம தரையில கிடக்கறீங்க? என்னாச்சிடீ? அது சரி மீனாவ எதுக்கு வீட்டுக்குள்ளாற விட்ட? ஏண்டி, தீட்டாச்சே இது கூடவா ஒரு பொம்பளைக்கு தெரியாது?’ படபடவென பொரிந்த தன் தாயையும், தன் தந்தை மற்றும் சகோதரனையும் கலக்கத்துடன் பார்த்தாள் பத்மா. ‘இவங்க கிட்ட என்னன்னு சொல்றது? வீட்ல நேத்து நடந்த விஷய்த்த அப்படியே சொன்னா அண்ணன் கோவத்துல என்ன செய்வாங்கன்னே சொல்ல முடியாது. அப்பாவுக்கு ப்ரஷர்.. உங்க மருமகன் என்னை கைநீட்டி அடிச்சிட்டார்ப்பா என்று சொன்னால் டென்ஷனாயிருவாங்க. சரி, இப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளிப்போம். மீனா அப்பா எழுந்து அம்மா, அப்பாகிட்ட எப்படி நடந்துக்கறாங்கறத பொறுத்து சொல்லிக்கலாம்.’ என்ற முடிவுடன் தன் தாயை பார்த்தாள்.. ‘ஒன்னுமில்லம்மா.. மீனாவுக்கு ஒடியாடி வேலை செஞ்சதுல களைப்பா இருந்திச்சி.. அதான்..’

மாணிக்கம் அவளை இடைமறித்தான். ‘அப்ப ஏன் உன் மூஞ்சிம் பிள்ளைங்க மூஞ்சிம் அழுதா மாதிரி தெரியிது? ராத்திரி முச்சூடும் அழுது அழுது முகமெல்லாம் ஊதி போயிருக்கு? ஒன்னுமில்லேன்னு கதை விடறியா? சொல்லு என்னாச்சி?’

பத்மாவின் தந்தை தன் மகனின் தோள் மேல் கைவைத்து, ‘டேய், மாணிக்கம் வந்த இடத்துல அநாவசியமா பிரச்சினை பண்ணாத.. நீ எழுந்து போய் முகத்த அலம்பிக்கிட்டு வாம்மா, போ..’ என்றவர் தன் மனைவியைப் பார்த்தார். ‘மரகதம் நீ மீனாவ கூட்டிக்கிட்டு போயி வராந்தா மூலைய சுத்தம் பண்ணி துணி மாத்தி உக்கார வை..’

பத்மா அவசர அவசரமாக எழுந்து அறை வாசலில் நின்று முன் அறைவாசலை பார்த்தாள். மதன் இன்னும் எழுந்திருக்கவில்லையா அல்லது எழுந்தும் இங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு தன் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கிறானா? சரி, அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவி அழுந்த துடைத்தாள்.

பிறகு அடுக்களைக்குள் காப்பி, பலகார வேலையில் மும்முரமானாள்.

பத்மாவின் தந்தைக்கு தன் மகள் கூறியதில் சந்தேகம் இருந்தது. முந்தைய நாள் இரவில் கணவன் மனைவிக்குள் ஏதோ பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதை தங்களிடம் இருந்து மறைக்கிறாள் என்று நினைத்தார். இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் தன்னை மறந்து உறங்கும் வீனாவைப் பார்த்தார். அவரையுமறியாமல் அவருடைய உதடுகளில் புன்னகை பூத்தது.

அவருக்கு பத்மாவின் இரண்டு குழந்தைகள் மீதும் உயிர். மாதத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு வந்துவிடுவார். தன் மகன்கள் வழியில் பேத்தி ஒன்றுகூட அமையவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர் தன் மகள் மூலமாக கிடைத்த இரண்டு பேத்திமார்களையும் தன் செல்வமாக நினைத்தார்.

அதிலும் கடைக்குட்டி வீனா என்றால் கொள்ளைப் பிரியம். அவள் பிறந்தவுடந்தான் நான் வணிகத்தில் எதிர்ப்பாராத முன்னேற்றம் அடைந்தேன் என்று பார்ப்பவர்களிடத்திலெல்லாம் சொல்லி மகிழ்வார். அதில் தன்னுடைய மூன்று மருமகள்களுக்கும் வருத்தம் என்று தெரிந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலையே படமாட்டார்.

அதிலும் இரண்டு பேத்திமார்களும் கான்வெண்ட் ஆங்கிலத்தில் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதைப் பார்க்கும்போதெல்லாம் பூரித்துப் போவார். ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதெல்லாம் இருவருக்கும் ஏதாவது ஒரு ஆபரணத்தை செய்துகொண்டு வந்து அவர்களை அணிவித்து அழகு பார்ப்பார். மதனுக்கு இதில் துளியும் விருப்பம் இருக்காது. அவர் வந்து போனதும் பத்மாவுக்கு அர்ச்சனை நிச்சயம் உண்டு. ‘ஏண்டி அவர்தான் பாசத்துல கண்ண மூடிக்கிட்டு இப்படி பண்றார்னா நீயும் பல்ல இளிச்சிக்கிட்டு வாங்கி, வாங்கி வச்சிக்கறே? ஊர்ல மூனு பசங்களுக்கும் பேரப்பிள்ளைங்க இருக்கில்ல? அவங்கல்லாம் என்ன நினைப்பாங்க நம்மளப்பத்தி?’ என்பான். பத்மா ‘இவுகளுக்கு பைத்தியம் முத்தித்தான் போயிருக்கு. வீட்டுக்கு வர லட்சுமிய யாராவது வேண்டாம்பாங்களா?’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு வாயே திறக்கமாட்டாள்.

இப்போதும் அவருடைய காலடியில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த தன் பேத்தியை பார்த்ததும் அவரையுமறியாமல் உணர்ச்சிவசப்பட்டார். ‘பாவம் புள்ள, ராத்திரியெல்லாம் தரையிலேயே கெடந்தில்ல ஒறங்கியிருக்கு? கட்டில்ல எடுத்து போடுவம்.’ என்ற முனகலுடன் குனிந்து வீனாவை இரண்டு கைகளிலும் அள்ளி கட்டிலில் கிடத்தினார்.

சட்டென்று கண் விழித்த வீனா அவரைக் கண்டதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ‘தாத்தா, நேத்து இங்க என்ன நடந்திச்சி தெரியுமா?..’

அடுக்களையில் வேலையாயிருந்த பத்மா வீனாவின் குரல் கேட்டு கையிலிருந்த பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு படுக்கையறைக்குள் ஓடி சென்று வீனாவின் வாயைப் பொத்தினாள், ‘ஏய். வாயை மூடிக்கிட்டு இரு. அப்பா நீங்க போங்கப்பா. இவளுக்கு வேற வேல இல்ல.. இப்படித்தான் எதையாவது சொல்லி வீட்டுக்குள்ள குளப்பம் பண்ணுவா..’

பத்மாவின் தந்தை இருவரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு ஒன்றும் பேசாமல் வாசலை நோக்கி திரும்பினார். வாசலை அடைத்துக்கொண்டு கடுங்கோபத்துடன் நின்ற மகனைப் பார்த்தார். அவனை நோக்கி ‘என்ன?’ என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.

மாணிக்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. ‘என்னப்பா, ஒன்னுமே நடக்காதமாதிரி என்னைப் பாத்து என்னங்கறீங்க?’ என்றவாறு உள்ளே நுழைந்து வீனாவை நெருங்கி, ‘சொல்லும்மா நேத்து என்ன நடந்திச்சி? நீ சொல்லு. அம்மாவ பாக்காத. மாமா இருக்கேன்ல? சொல்லு வீனா என்ன நடந்திச்சி?’ என்றான்.

பத்மா குறுக்கிட்டாள். ‘நான் சொல்றேன்னே.. நான் நேத்தக்கி அவங்கக்கிட்ட ரொம்ப மரியாதையில்லாம பேசிட்டேன். அடிக்க கை ஓங்கிட்டாங்க.. ஆனா அடிக்கலை.. பிள்ளைங்க ரெண்டும் இடையில வந்து தடுத்திருச்சிங்க.. அதான் நேத்து வீட்ல யாருமே சாப்டாம கொள்ளாம படுத்துட்டோம். அதாம்பா நடந்தது.. அவங்க எழுந்திரிச்சதும் நீங்களே கேளுங்க..’

‘இல்ல மாமா. அம்மா பொய் சொல்றாங்க. அப்பா, 'உங்கம்மா, அப்பாவுக்கெல்லாம் ஏண்டி போன் பண்ணி வரச்சொன்னே'ன்னு கேட்டு அடிச்சாங்க மாமா. கீழ் வீட்டு ஆளுங்கல்லாம் வந்து கேட்டப்போ கூட நீங்கல்லாம் உங்க வேலைய பாத்துக்கிட்டு போங்கன்னு விரட்டிட்டு அம்மாவ கழுத்த பிடிச்சி வெளியே தள்ளி உன்ன இன்னையோட தல முழுகிட்டேன் எங்கயாவது தொலிஞ்சி போடி, பிள்ளைங்க ரெண்டு பேரைமட்டும் நான் விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க மாமா.’ அதற்கு மேல் பேசமுடியாமல் வீனா தன் தாய்மாமனைக் கட்டிப்பிடித்து அழலானாள்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மாணிக்கம் சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் அறையை சுற்றிலும் பார்த்தான். பிறகு அடுக்களைக்குள் ஓடி மூலையில் கிடந்த அடுப்பெறியும் விறகில் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

தாழ்வாரத்தின் கிழக்கு மூலையை கழுவி, சுத்தம் செய்து, மீனாவை குளிப்பாட்டி, உடை மாற்றி ஒரு மரப்பலகையின் மேல் அமர்த்திய மரகதம் வீனாவின் குரல் கேட்டு படுக்கையறையை நோக்கி ஓடிச்சென்றாள். கையில் கட்டையுடன் கோபத்துடன் நின்ற தன் மகனைப் பிடித்து நிறுத்தினாள்.

‘டேய், உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? கையில கட்டையோட யார அடிக்கறதுக்கு ஓடறே? என்னங்க நீங்களும் பாத்துக்கிட்டு நிக்கறீங்க? இவன் கோபத்துல போயி ஒன்னுகிடக்க ஒன்னு செஞ்சிட்டான்னா.. என்ன பண்றது?’

பத்மாவின் தந்தை நடந்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டு என்ன செய்வதென தெரியாமல் லேசாய் தலைசுற்றுவதுபோல் உணரவே மெளனமாய் கட்டிலில் அமர்ந்தார்.

பத்மா, மரகதம் இருவரும் அவரையே பதற்றத்துடன் பார்த்தனர். ‘அப்பா என்னப்பா, என்ன செய்யிதுப்பா..’ அடி வயிற்றிலிருந்து கதறிய பத்மாவின் குரல் கேட்டு அதுவரை விழித்தெழுந்து தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மதனும், தாழ்வார மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த மீனாவும் எழுந்து ஓடிவந்தனர்..

தொடரும்

28.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 12

அதீத கோபத்தில் அவனுடைய வலதுகை விரல்கள் நடுங்குவதை பார்த்து பயந்துபோனாள் பத்மா.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்ற மதன் முன் அறைக்கு திரும்பி சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். சுவற்றை பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

‘இங்க பார் பத்மா. மீனா இருக்கற இந்த நிலையில நான் கோபப்பட்டா அவளுக்கு உடம்புக்கு ஏதாவது ஆயிருமோன்னு பாக்கறேன். ஆனா நான் இனியும் கோபபபடாம இருக்கணும்னா நீ உடனே ஊருக்கு போன் போட்டு உங்க வீட்லருந்து யாரும் வரவேண்டாம்னு சொல்லிறனும். அடுத்த தடவை உங்கப்பா வியாபார விஷயமா வரும்போது வேணும்னா உங்கம்மாவையும் கூப்டுக்கிட்டு வரச்சொல்லு. மீனா பரீட்சைக்கு இன்னும் முழுசா ஒரு மாசம் கூட இல்லங்கறதும் ஒன்பதாவது படிக்கறவளுக்கு இந்த வருஷம் முக்கியமானதுங்கறதும் உனக்கு தெரிஞ்சிருக்கணும். இந்த நேரத்துல சடங்கு வைக்கறேன்னு ஊர்லருக்கறவங்களையெல்லாம் வரவச்சி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்க முடியாது. என்ன சொல்றே?’

பத்மாவுக்கு அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. என்ன சொல்றாங்க இவங்க? சடங்கு பண்றதப்போய் கலாட்டா, கிலாட்டாங்கறாங்க? இவங்க சொல்றத கேட்டு நான் போய் ஃபோன் பண்ணாமட்டும் வராம இருந்துறுவாங்களா, என்ன? இவங்ககிட்ட திட்டு வாங்கனது போறாதுன்னு அங்க அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் திட்டு வாங்கணும். இவங்க திட்டறதுதான் எப்பவும் நடக்குதே. திட்டிட்டு போட்டும். அண்ணாவுக்கு கோபம் வந்தா அவ்வளவுதான், வீட்டையே ரெண்டாக்கிருவாங்க.

மதன் எரிச்சலுடன் பத்மாவையே பார்த்தான். ‘ஏய் என்ன ஒன்னும் பேசாம நிக்கற?’

பத்மா ஒரு முடிவுக்கு வந்தவளாய், ‘என்னால முடியாதுங்க.’ என்றாள்.

மதனுக்கு அவளுடைய குரலிலிருந்த உறுதி அடக்க முடியாத கோபத்தை உண்டாக்கியது. இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவளை எரித்துவிடுவதுபோல் பார்த்தான். ‘என்னத்தடீ முடியாதுங்கற?’

பத்மா அவனுடைய பார்வையிலிருந்த உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள். மெல்லிய குரலில், ‘ஊருக்கு ஃபோன் பண்ண முடியாதுன்னு சொன்னேன்.’ என்றாள். மேலே பேசமுடியாமல் குரல் நடுங்க புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே தரையில் சரிந்து விம்மத் துவங்கினாள்.

அவளுடைய அழுகை மதனின் கோபத்தைத் தணிப்பதற்கு பதில் அதிகரிக்கவே செய்தது. முன் அறைக் கதவை மூடி தாளிட்டான். பிறகு இருக்கையில் அமர்ந்து பத்மா அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்தான்.

மதன் அறைக் கதவை மூடி தாளிடுவதை நிமிர்ந்த பத்மா கலவரத்துடன் அவனை பார்த்தாள். ‘எதுக்கிப்போ கதவை மூடுறீங்க? நீங்க சத்தம் போடறதுதான் இந்த வீட்லருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மீனாவுக்கும்தான் கேக்கட்டுமே.. கேட்டுட்டு அழட்டும். பொம்பளையா பொறந்ததுக்கு என்ன மாதிரியே அதுங்களுக்கும் அழறத தவிர வேறென்ன தெரியும்? ஓ! ஒருவேளை திட்டறது போறாதுன்னு புதுசா அடிக்க வேற ஆரம்பிக்க போறீங்களா? செய்ங்க. ஆனா ஒன்னு,நீங்க என்னை அடிச்சாலும், கொலப்பண்ணாலும் சரி. நான் எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணப்போறதில்ல.. வேணும்னா நீங்களே போய் பண்ணி எம் பெஞ்சாதிக்கு பைத்தியம் அதனால அவ பேச்ச கேட்டுக்கிட்டு ஓடி, கீடி வந்துராதீங்கன்னு சொல்லுங்க..’

திருமணமானதிலிருந்து தன்னை எதிர்த்துப் பேசி அறியாத பத்மாவைப் பார்த்து அதிர்ந்துபோய் சில நிமிடங்கள்வரை என்ன பேசுவதென புரியாமல் அமர்ந்திருந்தான் மதன். என்னாச்சி இவளுக்கு? அவளுடைய கோபமும், பேச்சும் ... உண்மையிலேயே புத்தி கித்தி பிரண்டு போயிருச்சா? அடிக்க கை ஓங்கறதுக்குள்ளயே அடிக்க போறீங்களான்னு கேக்கறாளே.. இந்த தைரியம் இவளுக்கு எங்கருந்து வந்தது?

தன் குடும்பத்தினரை விரோதித்துக்கொண்டு மதன் தனிக்குடித்தனம் வந்த புதிதில் பத்மாவின் பெற்றோருடன் அவளுடைய மூத்த சகோதரனும் வந்திருந்தார். திருமணத்தன்றே அவருடைய பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் கழுத்தில் பிரதானமாய் தொங்கிய வடச் சங்கிலியும் புலிநகமும் மதனை அருவருப்படைய செய்திருந்தது. அதே கோலத்தில்தான் பத்மாவின் வீட்டுக்கும் வந்திருந்தார். அடர்ந்து வளர்ந்திருந்த தலைமுடியுடன் அக்கால நடிகவேள் கோலத்தில் வந்து நின்றவரைக் கண்டதுமே உள்ளுக்குள் கொதித்துப்போன மதன், ‘ஏய் உங்கண்ணா என்ன பெரிய வில்லன்னு நினைப்பா. அவர் தல முடியும், துணிமனியும், சங்கிலியும்.. இங்க இருக்கற வரைக்குமாவது கோலத்த மாத்த சொல்லு.. பத்திக்கிட்டு வருது.. போடி போய் சொல்லு, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு..’ என்றான்.

பத்மா தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள் ‘அதெப்படிங்க? நான் போய் சொன்னா அண்ணா மட்டுமில்ல அம்மாவுக்கும் வருத்தப்படுவாங்க. ரெண்டு நாளைக்குத்தாங்க.. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்குங்களேன்.’

மதனுக்கு கோபம் அதிகரித்தது. ‘ஏய் நான் சொல்றத மரியாதையா போய் சொல்றதவிட்டுட்டு எங்கிட்ட வியாக்கியானமா பண்றே? நீயா சொல்றியா, இல்ல நான் சொல்லவா?’
மதனுடைய கோபத்தைப் பார்த்து மிரண்ட பத்மா தயங்கி, தயங்கி போய் தன் தந்தையிடம் அவன் சொன்னதைக் கூறினாள். அவரும், ‘சரிம்மா.. நான் மாணிக்கத்துக்கிட்ட சொல்றேன். அவன் குணம்தான் உனக்கு தெரியுமேம்மா.. தாம், தூம்னு குதிச்சாலும் குதிப்பான். அந்த நேரத்துல மாப்பிள்ளை வீட்ல இருந்தா நல்லாவா இருக்கும்? அதனால அவர் ஆஃபீசுக்கு புறப்பட்டு போவட்டும். சொல்றேன். நீ வயித்துப் பிள்ளக்காரி.. இதப் பத்தி கவலைப் படாமே உன் வேலைய பாரு.’ என அவளை சமாதானப் படுத்தியது இப்போது நினைவுக்கு வந்தது.

அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டு போனதும் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவன் வீடு திரும்பியபோது தன் மைத்துனரின் உடையும் நடையும் முற்றிலும் மாறியிருந்ததைப் பார்த்து சமாதானம் அடைந்தான்.

அன்று அவளுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தான் கூறியதை அப்படியே தன் தந்தையிடன் போய் கூறிய அந்த பத்மாவா இப்போது தன்னையே எதிர்த்து பேசுகிறாள்? இதை முற்றிலும் எதிர்பார்க்காத மதன் இதை இப்படியே விட்டால் நாளைக்கு இவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்று நினைத்தான். தன்னுடைய கோபத்தை இவளுக்கு புரியவைப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான். அதற்காக தேவைப்பட்டால் அவளை கை நீட்டி அடித்தாலும் தப்பில்லை என்றே நினைத்தான், அதனுடைய பின் விளைவுகளை பொருட்படுத்தாதவனாய்.

பத்மா தான் மறுத்துப் பேசியதும் மதன் கோபத்தின் உச்சிக்கே போய் தன்னை அடிக்கவும் தயங்கமாட்டான் என்று எதிர்பார்த்தாள்.ஆனால் இத்தனை நேரம் ஒன்றும் பேசாமல் அவன் சுவற்றையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு குழம்பினாள். மதனுடைய முகம் மெள்ள மெள்ள இருகி பாறையைப் போல் மாறுவதிலிருந்து அவன் தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை என்பதை உணர்ந்தாள். வருவது வரட்டும் தானும் தன் நிலையிலிருந்து மாறப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் அவனைப் பார்த்தாள்.

‘என்ன ஒன்னும் சொல்லாம முளிக்கிறீங்க? போய் ஃபோன் பண்றதுதானே?’ என்றாள் குரலில் வெறுப்பு கொப்பளிக்க.

அவளுடைய பதில் கொதித்துக்கொண்டிருந்த மதனின் கோபத்தை மேலும் அதிகரிக்க என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பாய்ந்து சென்று பத்மாவின் தலைமுடியை இடது கையால் அள்ளிப்பிடித்து வலது கையால் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ‘என்ன திமிர் இருந்தா என்கிட்டவே சவால் விடறே. இன்னும் அஞ்சி நிமிஷத்துல எழுந்துபோயி ஃபோன் பண்ணிட்டு வரலே இன்னையோட உன்ன தலை முழுகிருவேன் ஜாக்கிரதை. போ எழுந்து.’

'அது ஒன்னுதான் பாக்கி. தலைய முழுகிருங்க. நானும் என் பொண்ணுகளும் எங்கயாவது போய்க்கறோம். போறும். உங்க கிட்ட இத்தனை வருஷமா பேச்சு மட்டும்தான் கேட்டுக்கிட்டிருந்தேன். இப்ப கைநீட்டி அடிக்கவும் செஞ்சிட்டீங்க. இன்னும் தலை முழுகறது ஒன்னுதான் பாக்கி, அதையும் செஞ்சிருங்க.' என்று பிடிவாதத்துடன் கூவிய பத்மாவைப் பார்க்க, பார்க்க் அவனுடைய கோபம் அதிகரிக்கவே செய்தது.

அறைக் கதவைத் திறந்து பத்மாவின் பின்னங்கழுத்தில் கைவைத்து வெளியே தள்ளிக் கதவை சாத்தினான். 'போடி போ.. இன்னையோட உன்ன தலை முழுகியாச்சி. ஆனா என் பிள்ளைகள உன்கூட அனுப்புவேன்னு மட்டும் நினைக்காத. அது மட்டும் நடக்காது, சொல்லிட்டேன்.'

அறைக்கதவு மூடப்படும் ஓசை கேட்டு வந்து தன் தாயும் தந்தையும் அறைக்குள் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக்கொண்டுதானிருந்த மீனாவின் காலடியில் பத்மா சென்று விழா அவள் பதறிப்போய் ‘அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து கதறினாள்.

தன்னை கழுத்தைப் பிடித்து மதன் தள்ளுவான் என்பதை எதிர்பார்க்காத பத்மா தன் மேல் விழுந்த மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழலானாள். இருவருடைய கதறலையும் கேட்டு படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த வீனாவும் திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்து தரையில் கிடந்து அழுதுக்கொண்டிருந்த தன் தாயையும் தமக்கையையும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழத்துவங்கினாள். கீழ்வீட்டில் குடியிருந்தவர்களும் அவர்களுடைய அழுகுரல் கேட்டு படியேறி ஓடி வர அடுத்த சில நிமிடங்களில் வீடு இரண்டுபட்டுப் போனது.

இதையெல்லாம் பார்த்தும் தன் கோபத்தின் மடத்தனத்தை உணராத மதன் வெளியே வந்து குடித்தனக்காரர்களைப் பார்த்து உரத்த குரலில் கூவினான். ‘யார் உங்கள இங்க வரச்சொன்னது? உடனே இறங்கி போகலே, இந்த நிமிஷமே வீட்ட காலி பண்ணிட்டு போக வேண்டியிருக்கும். சொல்லிட்டேன்.’

மதனுடைய கோபம் அவர்களுக்கு முன்பே பரிச்சயம்தான் என்றாலும் அவன் இந்த அளவுக்கு உக்கிரமத்துடன் நடந்துக்கொண்டு அவர்கள் பார்த்ததேயில்லை. நமக்கேன் வம்பு என்பதுபோல் அனைவரும் மறுநிமிடமே இறங்கி ஓட இதற்கெல்லாம் நீ தான் காரணம் என்பதுபோல் தன் மனைவியை வெறுப்புடன் பார்த்தான்.

‘ஏய், எழுந்திருங்கடி போறும். மூனு பேருமா சேர்ந்துக்கிட்டு ஏண்டி என் மானத்தை வாங்கறீங்க? ஏய் மீனா, வீனா நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமுக்கு போங்க. இங்க என்ன நடந்தாலும் வெளிய வரக்கூடாது. என்ன புரிஞ்சிதா?’

மீனாவும், வீனாவும் தன் தந்தையையே ஒரு நிமிடம் வெறுப்புடன் பார்த்தனர். பிறகு இருவரும் பத்மாவை பிடித்து தூக்கி கைத்தாங்கலாய் தங்கள் அறைக்கு அழைத்து சென்றனர்.

மதனுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் மூவரையும் பார்த்தான். ‘இந்த ரெண்டு குட்டிகளுக்கும் என்ன தைரியம்? போங்கடின்னு சொன்னா அம்மாவையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போவுதுங்க? இப்ப என்ன பண்றது? சே.. நாம இந்த விஷயத்த ஹேண்டில் பண்ண விதத்துலதான் தப்பு போலருக்கே.. பத்மாவ மட்டுமில்லாம பிள்ளைகளையும் விரோதிச்சிட்டேன் போல தெரியுதே.. திட்டறதோட நிறுத்தியிருக்கலாம்.. கை நீட்டிருக்க வேணாம்.. கீழ் வீட்டுக்காரங்க அக்கம்பக்கத்துல எல்லாம் போய் சொல்லி.. சே.. நாளைக்கு பத்மா அம்மா, அப்பா வரும்போது சொன்னா ஏதாச்சும் பிரச்சினையாயிருமோ.. மாணிக்கம் ஏற்கனவே மூர்க்கன்.. இதுங்க மூனும் அழுத மூஞ்சோட அவன் முன்னால போய் நின்னு.. அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு சொல்ல முடியாதே. இப்ப அவங்க மூனுபேரும் வராம எப்படி தடுக்கறது?

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். இனி ஊருக்கு ஃபோன் செய்தாலும் பயனில்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து புறப்பட்டிருப்பார்கள். அப்படியே நேரமிருந்தாலும் யார் போய் ஃபோன் பண்றது? இத்தனைக்கப்புறம் பத்மா நிச்சயம் படியிறங்கி போய் செய்யமாட்டாள். நான் போய் என்னன்னு சொல்றது?

ஒன்றுக்கும் விடை கிடைக்காமல் குழம்பிப் போய் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.

தொடரும்..

22.12.05

அப்பா ஒரு ஹிட்லர் .. 11

பத்மா ஆச்சரியத்துடன் தன் மகளையே பார்த்தாள். பாரேன். இந்த காலத்து குட்டிகள! நமக்கெல்லாம் அந்த காலத்துல இது வந்தப்போ பயந்து, நடுங்கி, வெளியில வரதுக்கே வெக்கப்பட்டுகிட்டு.. இதுங்க என்னடான்னா.. கேர்ஃப்ரீ, வேர்ஃப்ரீன்னுக்கிட்டு.. ஊம் காலம் கெட்டுக்கிடக்குடா சாமி.. சரி, சரி. இவ சொல்றதும் சரிதான். பார்வதி வரட்டும்..

‘சரிடி, அவ வரட்டும். வாங்கி வரச்சொல்றன். நீ முதல்ல போய் மூலைல உக்கார். நீ பேசிக்கிட்டிருந்தேன்னா எனக்கு வேலை ஓடாது.’

மீனா சலித்துக்கொண்டே போய் உட்கார பத்மா அடுக்களைக்குள் நுழைந்து அடுப்பை மூட்டி வேலையை ரம்பித்தாள்.

**

மாலை அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வந்த மதன் குளித்து முடித்து பிள்ளைகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்தான். மீனா அதே இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். அருகில் சென்று தரையில் அமர்ந்தான். ‘ஏம்மா இங்கேயே உக்காந்துக்கிட்டிருக்கே.. அம்மா எங்கே?’

‘அம்மா கடைக்கு போயிருக்காங்கப்பா. தாத்தாவும் அம்மேவும் மாமாகூட நாளைக்கு வராங்களாம். அதான் சமையல் பண்றதுக்கு ஒன்னுமே இல்லை. நா போயிட்டு வாங்கிட்டு வந்திடறேன்னுட்டு போயிருக்காங்கப்பா.’

எதுக்கு இப்ப அவ ஊருக்கு ஃபோன் பண்ணா? காலைல படிச்சி, படிச்சி சொல்லியும் நான் சொன்னத கேக்காம ஊருக்கு ஃபோன் பண்ணி சொல்லி.. அவங்க புறப்பட்டு வந்து.. என்ன பண்றது இவள? மதன் கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக்கொண்டு மீனாவை பார்த்தான். ‘நீ ஏதாச்சும் படிச்சியா?’

‘ஆமாப்பா படிச்சேன். நீங்க பிரிப்பேர் பண்ணி வச்சிருந்த கொஸ்ச்சின் பேப்பரையும் சால்வ் பண்ணி வச்சிருக்கேன். இந்தாங்க.’ என்றவள் தயக்கத்துடன் பின்னந்தலையை சொறிவதைப் பார்த்தான். அவனையுமறியாமல் புன்னகைத்தான்.

‘என்ன சொல்ல வரேன்னு புரியுது. சரி, சரி. ரெண்டு மூனு நாள் போட்டும்.’ என்றவன் மகளின் மடியிலிருந்த புத்தகத்தை மூடி கட்டிலில் வைத்தான். ‘படிச்சது போதும். ரெஸ்ட் எடு.’ பிறகு, பக்கத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வீனாவைப் பார்த்தான். ‘இவ வந்ததுலருந்து தூங்கிக்கிட்டேதான் இருக்காளா?’ என்றான். பிறகு திரும்பி மீனாவைப் பார்த்தான். ‘கீழ் வீட்லருந்தெல்லாம் ஆளுங்க வந்து உன்ன பாத்தாங்களாம்மா?’

மீனா தயக்கத்துடன் அவனையே பார்த்தாள். ‘ஆமாப்பா எல்லாரும் வந்தாங்கப்பா.’ என்று அவனிடம் உண்மையைச் சொன்னால் அவ்வளவுதான், அம்மா வந்ததும் கேப்பாங்க. அம்மா ஏன்டி சொன்னேன்னு கேட்டு பிரச்சினை பண்ணாலும் பண்ணுவாங்க. ஆனா நான் பொய் சொன்னேன்னு அப்பாவுக்கு தெரிஞ்சா.. அதுவும் பிரச்சினைதான்.

தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலை குனிந்துக்கொண்ட மீனாவையே பார்த்தான். அவளுடைய தலையை வருடிவிட்டு எழுந்து அடுக்களையை எட்டி பார்த்தான். எப்போதும்போலவே எல்லாம் தாறுமாறாக கிடந்தது. காலையில் சமைத்த நண்டு ஓடுகள் ஒரு பேப்பரில் அரைகுறையாக பொதியப்பட்டு மூலையில் கிடந்ததைப் பார்த்து முகத்தை சுளித்தான். ‘எருமை மாடு, எத்தனை தரம் சொன்னாலும் திருந்தவே மாட்டா.’ அக்கம்பக்கத்திலிருந்து வந்த பெண்கள் இதை பார்த்து என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைத்த மாத்திரத்திலேயே கோபம் உச்சிக்கேறியது.

அடுக்களைக் கதவை மூடிவிட்டு முன் அறைக்குச் சென்று வானொலி பெட்டியை முடுக்கிவிட்டான். முக்காலியில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து காலையில் விட்டுப் போன பகுதிகளைப் படிக்க முயற்சி செய்தான். மனம் அதில் ஒட்டாமல் சற்று முன் மீனா கூறியதையே யோசித்துக் கொண்டிருந்தான்.

எத்தன தரம் படிச்சி, படிச்சி சொன்னேன்? கீழ யார்கிட்டயும் சொல்லாதேன்னு. சொல்லும்போது தலைய ஆட்டிட்டு கீழ் வீட்ல சொன்னது போறாதுன்னு ஊருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிருக்கான்னா இவளை என்ன பண்றது? எங்க போய் ஃபோன் பண்ணிருப்பா? கீழ் வீட்லருந்தா? இவ வீட்லருக்கற ஆளுங்க வந்தாங்கன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா ஏன்டா என்கிட்ட சொல்லலைன்னு கேட்டா என்ன பண்றது? சே.. ஊர்லருந்து வர்ற ஜனங்க என்னெல்லாம் பண்ணி கலாட்டா பண்ண போறதுங்களோ தெரியலையே..

நினைக்க, நினைக்க ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது மதனுக்கு. ‘வரட்டும் வச்சிக்கறேன்.’ என்று மனதுக்குள் கறுவினான். அதே சமயம், மீனாவை நினைத்தாலும் பாவமாக இருந்தது. பத்மாவ திட்ட போய் இவ டென்ஷனாயி ப்ளீடிங் ஜாஸ்தியான பிள்ளை பாவம் சோர்ந்து போயிருமே..

சரி வரட்டும். சாந்தமாவே பேசுவோம். என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.

பத்மாவின் காலடி ஓசை படிகளில் கேட்டது. மதன் செய்தித்தாள் படிப்பதில் மும்முரமானான்.

கடைசிப் படியில் கால்வைத்த பத்மா முன் அறையில் அமர்ந்திருந்த மதனின் தலையைப் பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றாள். மனம் லேசாக கலவரம் அடைந்தாலும் இன்னைக்கி இந்த மனுஷன பார்த்து பயந்து நிக்காம நாம நெனச்சிக்கிட்டிருக்கறத சொல்லிரணும் என்ற முடிவுடன் அவன் முன் போய் நின்றாள்.

‘என்னங்க, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?’

மதன் அவளை மேலும் கீழும் பார்த்தான். பரவாயில்லை. டிரஸ் கிஸ் எல்லாம் நல்லாத்தான் பண்ணியிருக்கா. அவள் கையில் பிதுங்கி வழிந்த பையைப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் தன் பார்வயை செய்தித்தாளுக்கு திருப்பினான்.

ஐயா ரொம்ப கோபமாயிருக்காக போலருக்கு. இந்த மீனா என்னத்தையெல்லாம் சொன்னாளோ. ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன், ‘காப்பி போட்டு கொண்டு வரேன், இருங்க.’என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி தாழ்வாரத்தில் இறங்கி அடுக்களையை நோக்கிச் சென்றவள் கதவுகள் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தாள். ‘நாம மூடலையே அவர்தான் அடுக்களைக்குள்ள நுழைஞ்சி பார்த்திருக்காக போலருக்கு.’ திறந்துக்கொண்டு நுழைந்தாள்.

கையிலிருந்த பையை வைத்துவிட்டு பரபரவென்று அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுக்களையை ஒழுங்கு படுத்தினாள். காப்பி போட்டு கோப்பையில் ஊற்றிக்கொண்டு முன் அறைக்கு செல்லும் வழியில் பிள்ளைகள் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். தன்னை நிமிர்ந்து பார்த்த மீனாவைப் பார்த்து ‘ஏய், அப்பா என்ன கேட்டாங்க? நீ ஏதாச்சும் சொன்னியா?’ என்றாள்.

மீனா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். ‘கீழ இருக்கறவங்க வந்தாங்களான்னு கேட்டாங்கம்மா. நா ஒன்னும் சொல்லலை. ஆனா அப்பாவுக்கு கோவம்னு நினைக்கிறேன். அப்பா எதாச்சும் சொன்னாங்கன்னா நீங்க பேசாம இருந்துருங்க. தாத்தா, அம்மே எல்லாம் வந்ததும் பாத்துக்கலாம்மா.’

பத்மா சரி, சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காப்பி கோப்பையுடன் முன் அறைக்கு விரைந்தாள். ‘பிள்ளையாரப்பா நீதான் எனக்கு தைரியத்தை குடுக்கணும்’ என்று மனதுக்குள் பிரார்த்திக்கொண்டு மதனின் முன் போய் நின்று கோப்பையை நீட்டினாள்.

மதன் நிமிர்ந்து பார்த்தான். கோப்பையை வாங்கி குடித்து முடித்து முக்காலியில் வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்தான். எதிரிலிருந்த மேசைக்கருகில் இருந்த நாற்காலியைக் காண்பித்தான்.

‘அந்த சேரை இழுத்து போட்டு உக்கார். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.’

பத்மா அமரும்வரை காத்திருந்தவன் அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு தொடர்ந்தான்: ‘நான் காலைல அவ்வளவு தூரம் சொல்லியும் கீழ் விட்லல்லாம் சொல்லி அசிங்கப் படுத்துனது போறாதுன்னு ஊருக்கு வேற ஃபோன் பண்ணி சொல்லிட்டியா? எங்கருந்து ஃபோன் பண்ணே, கீழ் வீட்லருந்தா?’

‘இல்லீங்க.’ என்று தயக்கத்துடன் கூறியவளைப் பார்த்தான். சரியான கல்லுளிமங்கி. செய்யறதையெல்லாம் பூனை மாதிரி செஞ்சிட்டு இப்ப ஒன்னும் தெரியாதமாதிரி முளிக்கறத பாரு.. சரி, சரி. கோபப்படாம பொறுமையா கேளு..

‘என்ன இல்லீங்க?’ அவனையுமறியாமல் குரலில் கோபம் கொப்புளித்தது.

இவர் முகத்த பார்த்தா நம்ம தைரியமெல்லாம் ஓடிப்போயிரும். பாக்கக்கூடாது, இவர் முகத்த கண்டிப்பா பாக்கக் கூடாது. பார்வையை சுவர் நோக்கித் திருப்பிக்கொண்டாள். ‘கீழ் வீட்லருந்து பண்ணலைன்னு சொன்னேன்.’

ஆச்சரியமாக இருந்தது மதனுக்கு. கீழ் வீட்ல இல்லன்னா, வேற எங்க போய் பண்ணிருப்பா? ‘பின்னே?’

‘தந்தியாபீஸ்ல போய் பண்ணேன். அப்பாதான் போன தடவ வந்தப்ப அங்கருந்து பண்ணலாமான்னு சொன்னாங்க.. அதான்..’

மதன் வியப்புடன் பத்மாவையே பார்த்தான். அதெல்லாம் கூட உனக்கு தெரியுமா? சரிதான்.. உன்ன இனி கட்டுப்படுத்தி வைக்கறது முடியாது போலருக்கு. சரி.. இப்ப என்ன பண்ணலாம். ஊருக்கு போன் பண்ணது முடிஞ்சிபோன விஷயம். மேல்கொண்டு இதப்பத்தி பேசி பிரயோசனமில்லை.

‘சரி.. ஊர்ல மாமா என்ன சொன்னாங்க?’

‘அப்பா, அம்மாவையும் எங்க மூத்த அண்ணாவையும் கூட்டிக்கிட்டு இன்னைக்கே பொறப்பட்டு வாராவளாம், தாய் மாமன் சீரோட. இங்கன வந்து உங்க கிட்ட பேசி சடங்குக்கு நாள் குறிச்சிட்டு சாதி சனத்துக்கெல்லாம் சொல்லிரலாம்னு சொன்னாக..’ கோபத்தால் மதனின் முகம் சிவந்து போவதைக் கண்ட பத்மா தான் சொல்லிக்கொண்டிருந்ததை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமல் அறைக்கு வெளியே பார்த்தாள். துணி உலர்த்தும் கொடியில் அமர்ந்திருந்த இரண்டு குருவிகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்தன. பொதுவாகவே இத்தகையை காட்சிகளை ரசித்து பார்த்து சந்தோஷமடையும் பத்மா இன்று அவற்றைக் கண்டும் காணாததுபோல் இருந்தாள்.

தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போன மதன் சட்டென்று எழுந்து அறையை விட்டு வெளியேறி தாழ்வாரத்தில் இறங்கி எதிரே தெரிந்த டிரைவ் இன் ரெஸ்டாரன்டில் வந்து போன கார்களையே பார்த்துக்கொண்டு நின்றான். அதீத கோபத்தில் அவனுடைய வலதுகை விரல்கள் நடுங்குவதை பார்த்து பயந்துபோனாள் பத்மா.

தொடரும்

21.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 10

குறும்பாய் பேசுவதிலும் கைதேர்ந்தவள் என்பதால் பள்ளியில் தோழிகளுக்கு பஞ்சமே இல்லை.

அவளுடைய பள்ளி பெண்கள் பள்ளி. ‘ஏய் நம்ம மூனு பேர் மட்டும் கோ-எட்டுல இருந்தா நம்ம கலருக்கும், அழகுக்கும் எவ்ளோ பாய் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருப்பாங்க தெரியுமா’ என்பார்கள் அவளுடைய நெருங்கிய தோழிகள் சூசனும் (சென்னையில் பிறந்து வளர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்), காத்தரீனாவும் (ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்தவள்).

சூசன் போனமாசம்தானே அம்மா சொல்றா மாதிரி பெரிய மனுஷியானா? ஆனா ஒரு வாரத்திலேயே ஸ்கூலுக்கு வந்திட்டாளே. அப்புறம் அந்த காத்தரீன் கூட அப்படித்தான சொன்னா? அவங்க ஒன்னும் இந்த மாதிரி தீட்டு, வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னுல்லாம் சொல்லலையே.

இந்த அம்மா மட்டும் என்னத்துக்கு இப்படி பண்றாங்க? இப்ப தாத்தா வீட்டுக்கு இதை ஏன் போன் பண்ணி சொல்லணும்? அப்பாவுக்கு தெரியுமோ, தெரியாதோ தெரியலையே? அப்பா சாயந்திரம் வந்ததும் சத்தம் போடுவாரோ?

அடுக்களை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களின் முன்னால் போய் நின்றாள். எல்லா கடவுளையும் பார்த்து பொதுவாய் ஒரு கும்பிடு போட்டாள். தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.

அப்பா ஒருநாளும் சாமி படங்களுக்கு முன் நின்று வேண்டிக்கொண்டதை அவள் பார்த்ததே இல்லை. கோவிலுக்கு சென்றாலும் அவன் வெளியிலேயே நின்றுக்கொள்வான். அம்மா கொண்டுவந்த பிரசாத தட்டிலிருக்கும் திருநீறு அல்லது குங்குமத்தை மட்டும் எடுத்து சும்மா பேருக்கு முடியில் தடவிக்கொள்வான். நெற்றியில் இட்டு அவள் பார்த்ததே இல்லை.

அம்மாவும் இதுவரை ‘ஏங்க இப்படி?’ என்று கேட்டதே இல்லை. ‘உங்கப்பாவ புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்டி. ஏங்க சாமிமேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு கேட்டோம்னு வச்சிக்க. அதுக்கு பெரிசா குதர்க்கம் பேசி அப்புறம் சாமி குத்தம் ஆயிருமோன்னு பயந்துதான் நான் கேக்கறதேயில்லை. எதுக்கு வம்பு?’ என்பாள் அம்மா. ‘அப்பா ஒரு மிஸ்டரி’ என்று நினைத்துக்கொள்வாள் மீனா.

அடுக்களையிலிருந்த காலை பலகாரத்தை தட்டில் வைத்து சாப்பிட்டு முடித்தாள். அம்மா சொன்ன முட்டை நினைவுக்கு வரவே ஸ்டவ்விலிருந்த பாத்திரத்தில் இருந்த வெது வெதுப்பான நீரில் கிடந்த இரண்டு முட்டைகளையும் எடுத்து தரையில் லேசாய் தட்டி லாகவமாய் ஓட்டை நீக்கி, சாப்பிட்டாள். வீனாவை நினைத்துக்கொண்டாள். எதுவானாலும் அவளுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் சாப்பிடவே மாட்டாள். ‘பாவம் வீனா. ஸ்கூல்ல இருந்தாலும் அவ வீட்டையேத் தான் நினைச்சிக்கிட்டிருப்பா.’ என்று நினைத்தாள்.

சாப்பிட்டு முடித்து தட்டை வெளியே வாளியில் இருந்த நீரில் கழுவி அடுக்களை அலமாரியில் வைத்தாள். முன் அறைக்குச் சென்று மதன் தயாரித்து வைத்திருந்த வினாத்தாள்களையும், அறிவியல் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்து படிக்கத் துவங்கினாள்.

சற்று நேரம் கழித்து ‘அம்மா! என்னா, வூட்ல யாரும் இல்ல போலக்கீது?’ என்று குரல் வரவே எட்டிப் பார்த்தாள். வேலைக்காரி.

‘அம்மா வீட்ல இல்ல பார்வதிக்கா. அப்புறமா வாங்களேன்.’ என்றாள்.

‘இன்னா மீனா. நீ ஸ்கூலுக்கு போல?’

‘இல்ல, எனக்கு ஜுரம்.’

‘ஜுரமா? பார்றா. ஜுரம்கறெ? புச்சா சட்டை பாவாடை யெல்லாம் போட்டுக்கினு, என்னைக்கில்லாம மூஞ்சில மஞ்சள பூசிக்கினு..’ என்றவள் சந்தோஷத்துடன் இரண்டு முட்டைக் கண்களையும் விரித்து.. ‘ஏய் நிஜமா சொல்லு. ஜுரமா இல்ல.. பெரிய மனுஷியாயிட்டியா?’ கையை தலைக்கு மேலே உயர்த்தி விஷமத்துடன் கேட்டவளைப் பார்த்து வியந்து போய் நின்றாள் மீனா. இவங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?

‘சரி, சரி. நீ பயந்துக்காத.. நாம் அம்மா கிட்டவே கேட்டுக்கிறேன். நீ போய் மூலைல குந்து.. தீட்டு. நா அப்பால வாரன்.’

தடதடவென அவள் இறங்கி ஓட மீண்டும் போய் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். ‘சே.. இந்த மஞ்சள கழுவினாலும் போகாது போலருக்கே. பார்வதியக்கா போயி எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிக்க போறாங்க.. அப்பா சொன்னா மாதிரி அம்மா என்னெ எக்சிபிஷன் ஆக்கிருவாங்க போலருக்குதே..’ நினைத்த மாத்திரத்தில் அவளுடைய கண்கள் கலங்கி கன்னத்தில் வடிந்தது. துடைத்துக்கொண்டு கட்டிலில் அமர சென்றவள் என்ன நினைத்தாளோ திரும்பிச் சென்று மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்தாள்.

கண்கள் புத்தகத்தை மேய்ந்தாலும் மனம் அதில் பதியாமல் எங்கெங்கோ சென்றது. கண்கள் தூக்க கலக்கத்தில் மூட சிறிது நேரத்தில் அப்படியே தரையில் படுத்து உறங்கிப் போனாள்.

**

காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்த பத்மா வாசிலிலேயே அக்கம்பக்கத்து பெண்கள் கூடி நிற்பதைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். பிறகு வேக வேகமாக ஓடி வந்து, ‘என்ன எல்லாரும் கூடி நிக்கறீங்க? என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருச்சா?’ என்றாள் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன்.

எல்லோரும் சிரித்தனர். பத்மாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது. ‘ஏன் வூட்டுக்காரம்மா.. நீ சொல்லாக்காட்டி எங்களுக்கு திரியாமயே போயிரும்னா நெனச்சே.. அதான் பார்வதி இப்போ எல்லார்கிட்டயும் சொல்லிருச்சே.. இப்போ என்னா பண்ணுவே? அய்யே.. இதுல என்னா ரகச்சியம் இருக்குன்னு மறைச்சே..’ என்றாள் ஒருத்தி.

வேறொருத்தி, ‘அய்யே இன்னா நீ வெவரம் புரியாத ஆளாருக்கே.. அதான் அந்தம்மாவோட வூட்டுக்கார அய்யாத்தான் கடுவம் பூனையாச்சே.. இந்தம்மா இன்னா பண்ணும்? அதான் சைலண்டா இருந்துக்குச்சி.. இன்னாம்மா மீனாம்மா.. நான் சொல்றதுல தப்பேதாச்சும் கீது?’ என்றாள் பத்மாவைப் பார்த்து.

பத்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு சிறு புன்னகையுடன் ஆமாம், இல்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு அவர்களை விலக்கிக்கொண்டு மாடிக்குச் செல்லும் படிகளில் வேக வேகமாக ஏறினாள். விட்டால் போதும் என்றிருந்தது. ‘அந்த மனுஷன் சாயந்திரம் வரட்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

‘இன்றைக்கு ராத்திரி எந்நேரமானாலும் புறப்பட்டு நாளை காலைல நா, அம்மா, உன் மூத்த அண்ணன் மூனு பேரும் தாய் மாமன் சீரோட வந்துர்றோம்மா. நீ ஒன்னுத்துக்கும் கவலப் படாதே. பாப்பாவ பத்திரமா பாத்துக்க. சடங்குக்கு நாள் குறிச்சதுக்கப்புறம் சாதி சனத்துக்கெல்லாம் சொல்லிரலாம், என்ன?’ என்று அவளுடைய தந்தை கூறியதைக் கேட்டதும் பொங்கி வந்த சந்தோஷம் வீட்டை அடைந்ததும் இந்த மனுஷன் என்ன சொல்வாரோ தெரியலையே என்ற நினைப்பில் கலவரமானது.

பதட்டத்துடன் தாழ்வாரத்திலிருந்த வாளியிலிருந்த நீரை காலில் கவிழ்த்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து கையிலிருந்த துணிப்பையை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்தாள்.

தரையில் காலை மடக்கியவாறு அமர்ந்த நிலையிலேயே தரையில் கிடந்த மகளைப் பார்த்ததும் பதறிப்போய், ‘ஏய் என்னாச்சிடி? மூச்சி பேச்சில்லாமல் கெடக்கறே?’ என்றவாறே நெருங்க தூக்கம் கலைந்து எழுந்த மீனா ஒன்றும் புரியாமல் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் தன் முன்னே அமர்ந்திருந்த தாயைப் பார்த்தாள். பிறகு எரிச்சலுடன், ‘என்னம்மா நீங்க?ராத்திரியெல்லாம் தூங்காம அசதியா இருந்திச்சேன்னு அப்படியே படுத்தேன். அதுக்குள்ள கலாட்டா பண்ணி.. சீ போங்கம்மா!’

பத்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாள். வயித்துல பால வார்த்தியே முருகா என்றவாறு சாமி படங்களின் முன் போய்நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள். ‘சாமி, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தி கொடுப்பா. சாயந்திரம் வந்து ஒரு தகராறும் பண்ணக்கூடாதே சாமி. நான் உன்னத்தான் நம்பியிருக்கேன் பிள்ளையாரப்பா.’


மீனா தன் தாயையே பார்த்தாள். சாமி படத்துக்கு முன்னால அம்மா என்ன பண்றாங்க? கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச் சொன்னோமே? வாங்கிட்டு வந்தாங்களா? இல்ல மறந்துட்டாங்களா? எழுந்து அடுக்களையில் வைத்திருந்த பையைத் திறந்து கவிழ்த்தாள். வெளியே வந்து விழுந்த குட்டி நண்டுகள் நாலா புறமும் ஓட ‘ஐயோ அம்மா’ என்று அலறியவாறு பாவாடையைத் தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் தாவினாள்.

சாமி படங்களின் முன் கண்மூடி நின்றிருந்த பத்மா மீனாவின் அலறலைக் கேட்டு பதறிப்போய் அவளைப் பார்த்தாள். பிறகு கவிழ்ந்திருந்த பையையும் குறுகுறுவென்று அடுக்களைக்குள் இங்கும் அங்குமாய் ஓடும் நண்டுகளையும் பார்த்தாள். தாழ்வாரத்தில் இறங்கி நின்றுக்கொண்டு பயத்துடன் நண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளையும் பார்த்தாள்.

சிரிப்பும், எரிச்சலும் ஒரே நேரத்தில் வந்தது. குனிந்து நாலாபுறமும் ஓடிய நண்டுகளை ஒவ்வொன்றாகப் பிடித்து கால்களை ஒடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடினாள்.

கவிழ்ந்துக் கிடந்த பையை நிமிர்த்தி இறைந்து கிடந்த காய்கறிகளை அள்ளி பைக்குள் மீண்டும் போட்டுவிட்டு தாழ்வாரத்தில் நின்றுக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளை நெருங்கினாள். ‘ஏய் உன்னை மூலைலதானே உக்கார வச்சேன். வா உக்காரு. ஊர்லருந்து வர்ற நேரத்துல நீ இங்கயும் அங்கயும் ஓடறத யாராவது பார்த்தா அவ்வளவுதான் என் மண்டைதான் உருளும். சொல்றத கேளு. வா. உக்காரு. சின்ன நண்டு சூப்பு இந்த நேரத்துல ரொம்ப நல்லதாம். அதான் வாங்கிட்டு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ரெடியாயிரும். அதுவரைக்கும் பேசாம உக்காந்திரு.’

மீனாவுக்கு எரிச்சல் தாங்க முடியாமல் தன் தாயைப் பார்த்தாள். ‘அம்மா நான் கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச்சொன்னேனே. மறந்துட்டீங்களா? இந்த துணியெல்லாம் எனக்கு சரி வராதுமா ப்ளீஸ்மா. பார்வதியக்கா வந்ததும் வாங்கிட்டு வரச்சொல்லுங்கம்மா.’

பத்மா ஆச்சரியத்துடன் தன் மகளையே பார்த்தாள். பாரேன், இந்த காலத்து குட்டிகள! நமக்கெல்லாம் அந்த காலத்துல இது வந்தப்போ பயந்து, நடுங்கி, வெளியில வரதுக்கே வெக்கப்பட்டுகிட்டு.. இதுங்க என்னடான்னா.. கேர்ஃப்ரீ, வேர்ஃப்ரீன்னுக்கிட்டு.. ஊம், காலம் கெட்டுக்கிடக்குடா சாமி.. சரி, சரி. இவ சொல்றதும் சரிதான். பார்வதி வரட்டும்..

தொடரும்..

அப்பா ஒரு ஹிட்லர்.. 10

குறும்பாய் பேசுவதிலும் கைதேர்ந்தவள் என்பதால் பள்ளியில் தோழிகளுக்கு பஞ்சமே இல்லை.

அவளுடைய பள்ளி பெண்கள் பள்ளி. ‘ஏய் நம்ம மூனு பேர் மட்டும் கோ-எட்டுல இருந்தா நம்ம கலருக்கும், அழகுக்கும் எவ்ளோ பாய் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருப்பாங்க தெரியுமா’ என்பார்கள் அவளுடைய நெருங்கிய தோழிகள் சூசனும் (சென்னையில் பிறந்து வளர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்), காத்தரீனாவும் (ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்தவள்).

சூசன் போனமாசம்தானே அம்மா சொல்றா மாதிரி பெரிய மனுஷியானா? ஆனா ஒரு வாரத்திலேயே ஸ்கூலுக்கு வந்திட்டாளே. அப்புறம் அந்த காத்தரீன் கூட அப்படித்தான சொன்னா? அவங்க ஒன்னும் இந்த மாதிரி தீட்டு, வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னுல்லாம் சொல்லலையே.

இந்த அம்மா மட்டும் என்னத்துக்கு இப்படி பண்றாங்க? இப்ப தாத்தா வீட்டுக்கு இதை ஏன் போன் பண்ணி சொல்லணும்? அப்பாவுக்கு தெரியுமோ, தெரியாதோ தெரியலையே? அப்பா சாயந்திரம் வந்ததும் சத்தம் போடுவாரோ?

அடுக்களை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களின் முன்னால் போய் நின்றாள். எல்லா கடவுளையும் பார்த்து பொதுவாய் ஒரு கும்பிடு போட்டாள். தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.

அப்பா ஒருநாளும் சாமி படங்களுக்கு முன் நின்று வேண்டிக்கொண்டதை அவள் பார்த்ததே இல்லை. கோவிலுக்கு சென்றாலும் அவன் வெளியிலேயே நின்றுக்கொள்வான். அம்மா கொண்டுவந்த பிரசாத தட்டிலிருக்கும் திருநீறு அல்லது குங்குமத்தை மட்டும் எடுத்து சும்மா பேருக்கு முடியில் தடவிக்கொள்வான். நெற்றியில் இட்டு அவள் பார்த்ததே இல்லை.

அம்மாவும் இதுவரை ‘ஏங்க இப்படி?’ என்று கேட்டதே இல்லை. ‘உங்கப்பாவ புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்டி. ஏங்க சாமிமேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு கேட்டோம்னு வச்சிக்க. அதுக்கு பெரிசா குதர்க்கம் பேசி அப்புறம் சாமி குத்தம் ஆயிருமோன்னு பயந்துதான் நான் கேக்கறதேயில்லை. எதுக்கு வம்பு?’ என்பாள் அம்மா. ‘அப்பா ஒரு மிஸ்டரி’ என்று நினைத்துக்கொள்வாள் மீனா.

அடுக்களையிலிருந்த காலை பலகாரத்தை தட்டில் வைத்து சாப்பிட்டு முடித்தாள். அம்மா சொன்ன முட்டை நினைவுக்கு வரவே ஸ்டவ்விலிருந்த பாத்திரத்தில் இருந்த வெது வெதுப்பான நீரில் கிடந்த இரண்டு முட்டைகளையும் எடுத்து தரையில் லேசாய் தட்டி லாகவமாய் ஓட்டை நீக்கி, சாப்பிட்டாள். வீனாவை நினைத்துக்கொண்டாள். எதுவானாலும் அவளுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் சாப்பிடவே மாட்டாள். ‘பாவம் வீனா. ஸ்கூல்ல இருந்தாலும் அவ வீட்டையேத் தான் நினைச்சிக்கிட்டிருப்பா.’ என்று நினைத்தாள்.

சாப்பிட்டு முடித்து தட்டை வெளியே வாளியில் இருந்த நீரில் கழுவி அடுக்களை அலமாரியில் வைத்தாள். முன் அறைக்குச் சென்று மதன் தயாரித்து வைத்திருந்த வினாத்தாள்களையும், அறிவியல் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்து படிக்கத் துவங்கினாள்.

சற்று நேரம் கழித்து ‘அம்மா! என்னா, வூட்ல யாரும் இல்ல போலக்கீது?’ என்று குரல் வரவே எட்டிப் பார்த்தாள். வேலைக்காரி.

‘அம்மா வீட்ல இல்ல பார்வதிக்கா. அப்புறமா வாங்களேன்.’ என்றாள்.

‘இன்னா மீனா. நீ ஸ்கூலுக்கு போல?’

‘இல்ல, எனக்கு ஜுரம்.’

‘ஜுரமா? பார்றா. ஜுரம்கறெ? புச்சா சட்டை பாவாடை யெல்லாம் போட்டுக்கினு, என்னைக்கில்லாம மூஞ்சில மஞ்சள பூசிக்கினு..’ என்றவள் சந்தோஷத்துடன் இரண்டு முட்டைக் கண்களையும் விரித்து.. ‘ஏய் நிஜமா சொல்லு. ஜுரமா இல்ல.. பெரிய மனுஷியாயிட்டியா?’ கையை தலைக்கு மேலே உயர்த்தி விஷமத்துடன் கேட்டவளைப் பார்த்து வியந்து போய் நின்றாள் மீனா. இவங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?

‘சரி, சரி. நீ பயந்துக்காத.. நாம் அம்மா கிட்டவே கேட்டுக்கிறேன். நீ போய் மூலைல குந்து.. தீட்டு. நா அப்பால வாரன்.’

தடதடவென அவள் இறங்கி ஓட மீண்டும் போய் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். ‘சே.. இந்த மஞ்சள கழுவினாலும் போகாது போலருக்கே. பார்வதியக்கா போயி எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிக்க போறாங்க.. அப்பா சொன்னா மாதிரி அம்மா என்னெ எக்சிபிஷன் ஆக்கிருவாங்க போலருக்குதே..’ நினைத்த மாத்திரத்தில் அவளுடைய கண்கள் கலங்கி கன்னத்தில் வடிந்தது. துடைத்துக்கொண்டு கட்டிலில் அமர சென்றவள் என்ன நினைத்தாளோ திரும்பிச் சென்று மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்தாள்.

கண்கள் புத்தகத்தை மேய்ந்தாலும் மனம் அதில் பதியாமல் எங்கெங்கோ சென்றது. கண்கள் தூக்க கலக்கத்தில் மூட சிறிது நேரத்தில் அப்படியே தரையில் படுத்து உறங்கிப் போனாள்.

**

காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்த பத்மா வாசிலிலேயே அக்கம்பக்கத்து பெண்கள் கூடி நிற்பதைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். பிறகு வேக வேகமாக ஓடி வந்து, ‘என்ன எல்லாரும் கூடி நிக்கறீங்க? என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருச்சா?’ என்றாள் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன்.

எல்லோரும் சிரித்தனர். பத்மாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது. ‘ஏன் வூட்டுக்காரம்மா.. நீ சொல்லாக்காட்டி எங்களுக்கு திரியாமயே போயிரும்னா நெனச்சே.. அதான் பார்வதி இப்போ எல்லார்கிட்டயும் சொல்லிருச்சே.. இப்போ என்னா பண்ணுவே? அய்யே.. இதுல என்னா ரகச்சியம் இருக்குன்னு மறைச்சே..’ என்றாள் ஒருத்தி.

வேறொருத்தி, ‘அய்யே இன்னா நீ வெவரம் புரியாத ஆளாருக்கே.. அதான் அந்தம்மாவோட வூட்டுக்கார அய்யாத்தான் கடுவம் பூனையாச்சே.. இந்தம்மா இன்னா பண்ணும்? அதான் சைலண்டா இருந்துக்குச்சி.. இன்னாம்மா மீனாம்மா.. நான் சொல்றதுல தப்பேதாச்சும் கீது?’ என்றாள் பத்மாவைப் பார்த்து.

பத்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு சிறு புன்னகையுடன் ஆமாம், இல்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு அவர்களை விலக்கிக்கொண்டு மாடிக்குச் செல்லும் படிகளில் வேக வேகமாக ஏறினாள். விட்டால் போதும் என்றிருந்தது. ‘அந்த மனுஷன் சாயந்திரம் வரட்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

‘இன்றைக்கு ராத்திரி எந்நேரமானாலும் புறப்பட்டு நாளை காலைல நா, அம்மா, உன் மூத்த அண்ணன் மூனு பேரும் தாய் மாமன் சீரோட வந்துர்றோம்மா. நீ ஒன்னுத்துக்கும் கவலப் படாதே. பாப்பாவ பத்திரமா பாத்துக்க. சடங்குக்கு நாள் குறிச்சதுக்கப்புறம் சாதி சனத்துக்கெல்லாம் சொல்லிரலாம், என்ன?’ என்று அவளுடைய தந்தை கூறியதைக் கேட்டதும் பொங்கி வந்த சந்தோஷம் வீட்டை அடைந்ததும் இந்த மனுஷன் என்ன சொல்வாரோ தெரியலையே என்ற நினைப்பில் கலவரமானது.

பதட்டத்துடன் தாழ்வாரத்திலிருந்த வாளியிலிருந்த நீரை காலில் கவிழ்த்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து கையிலிருந்த துணிப்பையை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்தாள்.

தரையில் காலை மடக்கியவாறு அமர்ந்த நிலையிலேயே தரையில் கிடந்த மகளைப் பார்த்ததும் பதறிப்போய், ‘ஏய் என்னாச்சிடி? மூச்சி பேச்சில்லாமல் கெடக்கறே?’ என்றவாறே நெருங்க தூக்கம் கலைந்து எழுந்த மீனா ஒன்றும் புரியாமல் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் தன் முன்னே அமர்ந்திருந்த தாயைப் பார்த்தாள். பிறகு எரிச்சலுடன், ‘என்னம்மா நீங்க?ராத்திரியெல்லாம் தூங்காம அசதியா இருந்திச்சேன்னு அப்படியே படுத்தேன். அதுக்குள்ள கலாட்டா பண்ணி.. சீ போங்கம்மா!’

பத்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாள். வயித்துல பால வார்த்தியே முருகா என்றவாறு சாமி படங்களின் முன் போய்நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள். ‘சாமி, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தி கொடுப்பா. சாயந்திரம் வந்து ஒரு தகராறும் பண்ணக்கூடாதே சாமி. நான் உன்னத்தான் நம்பியிருக்கேன் பிள்ளையாரப்பா.’


மீனா தன் தாயையே பார்த்தாள். சாமி படத்துக்கு முன்னால அம்மா என்ன பண்றாங்க? கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச் சொன்னோமே? வாங்கிட்டு வந்தாங்களா? இல்ல மறந்துட்டாங்களா? எழுந்து அடுக்களையில் வைத்திருந்த பையைத் திறந்து கவிழ்த்தாள். வெளியே வந்து விழுந்த குட்டி நண்டுகள் நாலா புறமும் ஓட ‘ஐயோ அம்மா’ என்று அலறியவாறு பாவாடையைத் தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் தாவினாள்.

சாமி படங்களின் முன் கண்மூடி நின்றிருந்த பத்மா மீனாவின் அலறலைக் கேட்டு பதறிப்போய் அவளைப் பார்த்தாள். பிறகு கவிழ்ந்திருந்த பையையும் குறுகுறுவென்று அடுக்களைக்குள் இங்கும் அங்குமாய் ஓடும் நண்டுகளையும் பார்த்தாள். தாழ்வாரத்தில் இறங்கி நின்றுக்கொண்டு பயத்துடன் நண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளையும் பார்த்தாள்.

சிரிப்பும், எரிச்சலும் ஒரே நேரத்தில் வந்தது. குனிந்து நாலாபுறமும் ஓடிய நண்டுகளை ஒவ்வொன்றாகப் பிடித்து கால்களை ஒடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடினாள்.

கவிழ்ந்துக் கிடந்த பையை நிமிர்த்தி இறைந்து கிடந்த காய்கறிகளை அள்ளி பைக்குள் மீண்டும் போட்டுவிட்டு தாழ்வாரத்தில் நின்றுக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளை நெருங்கினாள். ‘ஏய் உன்னை மூலைலதானே உக்கார வச்சேன். வா உக்காரு. ஊர்லருந்து வர்ற நேரத்துல நீ இங்கயும் அங்கயும் ஓடறத யாராவது பார்த்தா அவ்வளவுதான் என் மண்டைதான் உருளும். சொல்றத கேளு. வா. உக்காரு. சின்ன நண்டு சூப்பு இந்த நேரத்துல ரொம்ப நல்லதாம். அதான் வாங்கிட்டு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ரெடியாயிரும். அதுவரைக்கும் பேசாம உக்காந்திரு.’

மீனாவுக்கு எரிச்சல் தாங்க முடியாமல் தன் தாயைப் பார்த்தாள். ‘அம்மா நான் கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச்சொன்னேனே. மறந்துட்டீங்களா? இந்த துணியெல்லாம் எனக்கு சரி வராதுமா ப்ளீஸ்மா. பார்வதியக்கா வந்ததும் வாங்கிட்டு வரச்சொல்லுங்கம்மா.’

பத்மா ஆச்சரியத்துடன் தன் மகளையே பார்த்தாள். பாரேன். இந்த காலத்து குட்டிகள! நமக்கெல்லாம் அந்த காலத்துல இது வந்தப்போ பயந்து, நடுங்கி, வெளியில வரதுக்கே வெக்கப்பட்டுகிட்டு.. இதுங்க என்னடான்னா.. கேர்ஃப்ரீ, வேர்ஃப்ரீன்னுக்கிட்டு.. ஊம், காலம் கெட்டுக்கிடக்குடா சாமி.. சரி, சரி. இவ சொல்றதும் சரிதான். பார்வதி வரட்டும்..

17.12.05

அப்பா ஒரு ஹிட்லர்.. 9

வீனா அடுக்களைக்குள் நுழைந்து பத்மாவைக் காணாமல் தங்கள் படுக்கையறையை எட்டி பார்த்தாள். கண்களிரண்டும் வியப்பால் விரிய புது பட்டுப்பாவாடை, சட்டையுடன் நின்ற மீனாவைப் பார்த்தாள்.

‘ஏய் அக்கா. என்னாச்சி? புது சட்டை, புது பாவாடை! அம்மா, என்ன இன்னைக்கி? அக்காவோட பிறந்தநாளா? இல்லையே, பிப்ரவரிலதான வரும்?’ என்றவாறே மீனாவை நெருங்கி அவளுடைய முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள். ‘ஏய் என்னக்கா அம்மாவோட மஞ்சள எடுத்து நீ பூசிக்கிட்டிருக்கே?’

பத்மா அவளுடைய கைகளைத் தட்டிவிட்டாள். ‘ஏய் வீனாக்குட்டி. நீ இப்ப அக்காவை தொடக்கூடாது. தீட்டாயிரும். நீ போய் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு போற வழிய பாரு. அக்கா ஒரு ரெண்டு வாரத்துக்கு ஸ்கூலுக்கு வரமாட்டா.. நீ அப்பா கூடத்தான் போணும். லேட்டாக்குனே அப்புறம் அப்பாகிட்டருந்து ஒதத்தான் வாங்குவ.. வா.. காப்பிய தரேன். குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு ரெடியாவு. ஓடு.’

வீனா தன் தாயைப் பார்த்தாள். 'தீட்டா? அப்படீன்னா?'

பத்மா முறைத்தாள். 'ஊம்? உன் தலை. சும்மா கூடக்கூட கேள்வி கேட்டிட்டு இருக்காம காப்பிய குடிச்சிட்டு போய் குளிக்கற வழியப்பாரு. வாயாடி.'

சவரம் செய்துக்கொண்டிருந்த மதனுக்கு பத்மாவின் குரல் கேட்டும் ஒன்றும் மறுத்து பேசாமல் சவரம் செய்து முடித்து அடிபைப்பில் தனக்கும் வீனாவுக்கும் சேர்த்து இரண்டு வாளிகளில் நீரை நிரப்பி வீனாவின் வாளியை குளியலறையில் கொண்டு வைத்தான். ‘ஏய் வீனாகுட்டி வா. உன் தண்ணி ரெடி. சீக்கிரம் குளிச்சிட்டு வந்தேன்னாத்தான் தலை காயும். அப்புறம் ஈர தலையோட போய் ராத்திரியில இருமாதே.’ அடுக்களையில் இருந்து வேண்டா வெறுப்புடன் வெளியே வந்த வீனாவிடம் தன் கையிலிருந்த டவலை திணித்தான். ‘போ.. என்ன மசமசன்னு நிக்கறே.’ வீனா குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள மதன் அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தான். ‘பத்மா, பலகாரத்த ரெடி பண்ணி முன் ரூம்ல வை. டைம் ஆச்சி.’

பிறகு பிள்ளைகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்து அறையில் ஒரு மூலையில் தரையில் குந்த வைத்து அமர்ந்திருந்த மகளை அணுகினான். பாசத்துடன் அவளுடைய தலையை வருடினான். நிமிர்ந்து பார்த்த மீனாவின் மஞ்சள் அப்பிய முகத்தைப் பார்த்ததும் சுர்ரென்று எழுந்த வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவளைத் தொட்டு தூக்கினான். ‘எதுக்கு மூலைல உக்காந்திருக்கே? என்றான்.

மீனா கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்; ‘அம்மாத்தான்பா சொன்னாங்க. கட்டில்ல, சேர்லல்லாம் நான் உக்காரக்கூடாதாம். என்னமோ தீட்டாம்ப்பா.’

மதன் தலையிலடித்துக்கொண்டான். மீனாவை பிடித்து கட்டிலில் அமர்த்தினான். ‘இங்க பார் மீனா. தீட்டு, கீட்டுன்னு அம்மா சொல்றதயெல்லாம் மைன்ட் பண்ணாத. இது ஒன்னும் பெரிய காரியமில்ல. You have attained puberty, that is all. அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமான காரியத்தயெல்லாம் நீ செய்யக்கூடாது. புரியுதா? திஸ் ஈஸ் ஒன்லி எ த்ரீடே அஃபேர். சரி, இது முதல் தடவைங்கறதுனால யூ நீட் சம் ஹெல்த்தி ஃபுட். அப்புறம் ஒரு அஞ்சாறு நாளைக்கு கம்ப்ளீட் ரெஸ்ட். அதுக்குன்னு சும்மா உக்காந்திருக்கணும்னு இல்ல. அப்பா உன் புக்ஸ்லருந்து ப்ரிப்பேர் பண்ண க்வெஸ்ச்சின் பேப்பர்ச உன் ஸ்டடி டேபிள்ல வச்சிருக்கேன். அப்புறமா எடுத்து சால்வ் பண்ணி வைக்கணும், புரிஞ்சிதா?’ என்றான்.

மீனா, ‘சரிப்பா.’ என்றாள்.

மதன் பேசியதை அடுக்களைக்குள் இருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த பத்மா வாயைத் திறந்தால் வீண் பிரச்சினை என்ற நினைப்புடன் தான் செய்து முடித்த பகல் உணவை வீனாவின் உணவு பாத்திரத்தில் வைத்து மூடி, குடிநீரை ப்ளாஸ்டிக் பேக்கில் ஊற்றினாள். பிறகு இரண்டு தட்டில் சுடச்சுட இட்லியும், மிளகு பொடியும், சட்னியும் வைத்து முன் அறைக்கு கொண்டுசென்று மேசையில் வைத்தாள். காலை நேரங்களில் முன் அறையில் வைத்து உணவருந்துவதுதான் மதனுடைய வழக்கம். அலுவலகத்துக்கு செல்லும் உடையுடன் பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு போவதற்கு அதுதான் வசதி என்று நினைப்பான். பிள்ளைகளும் பள்ளி சீருடையுடன்தான் மதனுடன் சேர்ந்து பலகாரம் உண்பார்கள்.

மதனும் வீனாவும் புறப்பட்டு செல்லும் வரையில் முன் அறையிலேயே அவர்களுடன் இருந்தாள் பத்மா. மதன் புறப்படும் நேரத்தில் தன் அறையிலிருந்த ‘உதிரி’ டப்பாவை எடுத்து வந்து பத்மாவிடம் நீட்டினான். ‘இதுலருக்கற பணத்துலருந்து மீனாவுக்கு இந்த ஒரு வாரத்துக்கு வேண்டிய எக்ஸ்ட்ரா சாப்பாட்டு செலவு பண்ணு. இன்னும் வேணும்னா காலியானதும் கேளு. புரியுதா? அக்கம்பக்கத்துல எல்லாம் போய் சொல்லி அவள ஒரு எக்ஸிபிஷனாக்கிராத. புரிஞ்சிதா? நான் ஆஃபீஸ்லருந்து வந்ததும் மேற்கொண்டு பேசிக்கலாம்.’

பத்மா அவன் கூறியதற்கெல்லாம், ‘சரிங்க, சரிங்க.’ என்று தலையாட்டினாள்.

‘சொல்லும்போது மட்டும் தலைய நல்லா ஆட்டு. அப்புறம் உன் இஷ்டத்துக்கு செய்யி..’ என்றவனை பார்க்காமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

மதனும், வீனாவும் படியிறங்கி சென்ற பிறகுதான் நிம்மதியடைந்தாள் பத்மா. ‘அப்பாடா.. போயாச்சி.. இப்ப என்ன பண்றது? கீழ யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரே.. வீட்டுக்கு ஃபோன் பண்ணனும்னா கீழ் வீட்லதான இருக்கு? வீட்டுக்கு ஒரு ஃபோனை எடுங்கன்னு எத்தனை மாரடிச்சாச்சி, கேட்டாத்தானே? நம்ம வீட்ல வாடகைக்கு இருக்கறவங்க வீட்லல்லாம் ஃபோன் இருக்கு. அங்க போயி அசடு வழிஞ்சிக்கிட்டு எப்படி கேக்கறது? அதுவும் ட்ரங்க் கால் போட்டுட்டு அது கிடைக்கறவரைக்கும் அங்கேயே உக்காந்தா அவ்வளவுதான். ‘என்னா வீட்டுக்காரம்மா? இங்க வந்து குந்திக்கினு உங்கூட்டுக்கு ஃபோன் பண்றே . என்னா வீட்ல ஏதாச்சும் விசேஷமா’ன்னு கேட்டா என்னத்த சொல்றது? என்று நினைத்தாள்.

சே.. அக்கம்பக்கத்துலருக்கற ஆளுங்கக் கிட்டக்கூட இப்ப சொல்லலைன்னா நாளைக்கி அம்மா வந்து நிப்பாங்களே..அப்ப தெரியாதா? என்ன நினைப்பாங்க நம்மளப் பத்தி? சரி கீழ் வீட்ல மட்டும் சொல்லிரலாம். அங்க சொன்னா போறாதா? அடுத்த நிமிஷமே சுத்து வட்டத்துல எல்லாருக்கும் தன்னால தெரிஞ்சிரப்போவுது.’

அவளுடைய தந்தை அவளுடைய வீட்டுக்கு வரும் சமயங்களில் அவளுடைய வீட்டுக்கருகில் இருந்த தந்தியலுவலகத்திற்குச் சென்று ஊருக்கு பேசிவிட்டு வருவதைக் கண்டிருக்கிறாள். ‘நம்ம வீட்டுல மாதிரி ட்ரங்க் புக் பண்ணிட்டு காத்திருக்க வேண்டாம்மா. அங்க என்னமோ எஸ்.டி.டின்னு புதுசா ஒரு வசதியிருக்காமே அதுல சட்டுன்னு உடனே கிடைச்சிருது. குரலும் தெளிவா சுத்தமா இருக்குது. நீ கூட நம்ம கடைக்கி பேசணும்னா அங்க போயி பேசேன். எதுக்கு கடுதாசியெல்லாம் போட்டுகிட்டு..’ என்பார்.

அதை நினைத்துப் பார்த்தாள் பத்மா. ‘பேசாம பக்கத்துலருக்கற தந்தியாபீஸ்ல போயி ஃபோன் பண்லாமா. அதுவரைக்கும் இவ தனியா இருப்பாளே..

‘அம்மா.. இங்க வாங்களேன்.’ என்ற மீனாவின் குரல் கேட்கவே உள்ளே ஒடினாள் பத்மா.

‘என்னடி.. என்ன.. எதுக்கு கூப்டே.. பயந்தே போய்ட்டேன்?’

பயத்துடன் தன்னையே பார்த்த மீனாவை கட்டிலிலிருந்து இறக்கி மீண்டும் மூலையில் உட்கார வைத்தாள்.

மீனா சினுங்கினாள். ‘என்னம்மா நீங்க? அப்பா எங்க வேணாலும் உக்காரலாம்னாரே.. நீங்க முன் ரூம்லருக்கற அப்பாவோட சேர கொண்டாங்க. எவ்வளவு நேரம் இப்பிடியே குந்த வச்சி உக்கார்றது? கால் வலிக்குதும்மா.. இடுப்பும் பயங்கரமா வலிக்குது..’

பத்மா தன் மகளையே பார்த்தாள். ‘ஏய் உங்கப்பாவுக்கு வேற வேலை இல்லடி. எதுக்கெடுத்தாலும் குதர்க்கமா பேசறத விட்டா வேற என்ன தெரியும் அவருக்கு? எங்க ஊர்லல்லாம் வீட்டுக்கு வெளிய குருத்து கட்டி உக்கார வச்சிருவாங்க. சடங்கு அன்னைக்கித்தான் வீட்டுக்குள்ளாறயே வரமுடியும். சரி, தாழ்வாரத்துல ஒரே தண்ணியா கிடக்கேன்னுதான் இங்க உக்கார வச்சிருக்கேன். பேசாம அப்படியே இரு. உங்க அம்மே வரட்டும். அப்புறம்தான் உனக்கு என்ன பண்ணனும்னு எனக்கே தெரியும். நீ பெட்ரூம் கதவ சாத்திக்கிட்டு உள்ளவே இரு. நான் பக்கத்துலருக்கற தந்தி ஆபீசுக்கு போய் தாத்தா கடைக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு ஒரே ஓட்டத்துல வந்திர்றேன். என்ன சரியா? வேலைக்காரி வந்தா அவ கிட்ட ஒன்னும் சொல்லாத. உடம்புக்கு முடியலன்னு மட்டும் சொல்லு. போய்ட்டு அம்மா வந்ததும் வான்னு சொல்லு, என்ன?’

மீனா சரிம்மா என்று தலையாட்டினாள். ‘அம்மா, நீங்க போம்போது அப்பா, டேபிள்ல வச்சிருக்கற கொஸ்ச்சின் பேப்பரையும் என் சைன்ஸ் புத்தகத்தையும் கொண்டு குடுத்துட்டு போங்கம்மா. அப்பா வந்து கொஸ்ச்சின் கேக்கும்போது சரியா சொல்லலைன்னா தலையில குட்டுவாங்க..’

பத்மா மகளை பாசத்துடன் பார்த்து அவளுடைய தலைமுடியை வருடியவாறே சிரித்தாள். ‘போடி இவளே. இந்த நேரத்துலல்லாம் ஒன்னும் படிக்க வேணாம். உங்கப்பா வந்தா நா சொல்லிக்கறேன். நான் ரேடியோவ போட்டுட்டு போறேன். பாட்டு போடுவான். கேட்டுக்கிட்டு இரு.. அதுக்கு முன்னால பலகாரம் சாப்டு.. ரெண்டு முட்டையும் அவிச்சி வச்சிருக்கேன், மிச்சம் வைக்காம சாப்டு. நான் போய் தாத்தா கடைக்கு ஃபோன் பண்ணிட்டு அப்டியே மார்க்கெட்டுக்கு போய்ட்டு வரேன். பயப்படாம இருக்கணும். என்ன?’

‘சரிம்மா.’ என்ற மீனா, அப்பாக்கிட்ட நா சொல்லிக்கறேங்கற அளவுக்கு அம்மாவுக்கு எப்படி தைரியம் வந்தது என்று நினைத்தாள்.

பத்மா இறங்கி சென்றதும் எழுந்து படுக்கையறையிலிருந்த அலமாரி கதவில் பொருத்தியிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். முகத்தில் பூசியிருந்த மஞ்சள் சற்று அதிகமாகவே தெரிந்தது. சே! எல்லாம் இந்த அம்மாவால. என்ன அசிங்கமா இருக்கு? எதுக்குத்தான் இந்த அம்மா இத பூசிக்கிறாங்களோ? அப்பா அடிக்கடி சொல்றாமாதிரி அம்மா சரியான பட்டிக்காடுதான்.

மீனா பத்மாவைப் போல் நல்ல சிவப்பு. அதே வட்ட முகம். ‘அசப்புல அப்படியே உங்க அம்மாவ பாத்தா மாதிரியே இருக்குடி’ என்று அவளுடைய தோழிகள் பலரும் சொன்னதுண்டு. அவள் மதனைப் போலல்லாமல் எல்லோரிடமும் நன்றாக பழகுவாள். வாயாடி இல்லையென்றாலும் சாமர்த்தியமாக பேசுவதில் பலே கெட்டிக்காரி. பள்ளியில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டின்னு ஒன்று விடாமல் பங்கு கொண்டு கலக்குவாள். குறும்பாய் பேசுவதிலும் தேர்ந்தவள் என்பதால் பள்ளியில் தோழிகளுக்கு பஞ்சமே இல்லை.

தொடரும்..

பி.கு.: நான் அலுவல் விஷயமாக வெளியூர் செல்லவேண்டியிருப்பதால் அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன்தான். காத்திருக்கவும் :-))

16.12.05

அப்பா ஒரு ஹிட்லர்.. 8

பத்மா தினமும் மதன் எழுந்திருப்பதற்கு முன்னரே எழுந்து விடுவாள். அலாரமெல்லாம் தேவையிருந்ததில்லை.

வேலைக்காரி, மதன் அலுவலகத்திற்கு சென்ற பிறகுதான் வருவாள். அவள் வரும்வரை முந்தையநாள் இரவில் உபயோகித்த எச்சில் பாத்திரங்களை அப்படியே வைத்திருப்பது மதனுக்கு பிடிக்காது.

ஆகவே பத்மா ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பரபரவென்று பாத்திரங்களை கழுவி எடுத்துவிடுவாள். பால்காரன் சரியாக ஐந்தரை மணிக்கு வந்து நிற்பான். அந்த நேரத்தில் படியிறங்கி ஓட வேண்டுமே என்று முந்தைய இரவே ஒரு பாத்திரத்தை கீழ்வீட்டில் கொடுத்து வைப்பாள்.

அன்றும் அப்படித்தான். பாத்திரங்களையெல்லாம் தாழ்வாரத்தில் அடிபைப்பின் அருகில் அமர்ந்து கழுவி கவிழ்த்துவிட்டு கீழிறங்கி போய் பாலை வாங்கி வந்தாள். ஸ்டவ்வில் சீமெண்ணை இருக்கிறதா என்று பார்த்தாள். காலை நேர காப்பி, பலகார வேலையெல்லாம் ஸ்டவ்வில்தான். மதன் சென்ற பிறகுதான் அடுப்பை மூட்டுவாள். அடுக்களையிலிருந்து புகை அடுக்களை சுவரில் இருந்த துவாரங்கள் வழியே தாழ்வாரம் சென்று மதன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் முன் அறைக்கும் போய்விட்டாலோ, அவ்வளவுதான். ருத்திர தாண்டவம் டிவிடுவான். மதனுக்கும் வீனாகுட்டிக்கும் புகை என்றாலே அலர்ஜி!

காப்பி போட்டு ஒரு டம்ளர் குடித்தாள். மீதமிருந்த காப்பியை மீண்டும் சுடவைத்தாள். மதனுக்கு காப்பி சுடச்சுட வேண்டும். ஆடை, கீடை படிந்திருக்கக் கூடாது. சூடு ஆறுவதற்கு முன்பே ஒரு கப்பில் காப்பியை ஊற்றி முன் அறைக்கு செல்ல அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். முன் அறைக்குச் செல்லும் வழியில் பிள்ளைகள் இருவரும் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தாள்.

வீனாகுட்டி கையையும் காலையும் விரித்துக்கொண்டு வாயை திறந்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டாள். மீனாவை கட்டிலில் காணவில்லை. வியப்புடன் தாழ்வாரத்தில் இறங்கி குளியலறைக்கும் கழிப்பறைக்கும் பொதுவான மின் விளக்கு எரிவதைப் பார்த்தாள். எரிந்துக்கொண்டிருந்தது. ‘இந்த நேரத்துல பாத்ரூம்ல என்ன பண்றா?’ என்ற கேள்வியுடன் குளியலறையை நெருங்கி கதவை லேசாக தட்டினாள். ‘ஏய் மீனா. உள்ள நீயா?’

உள்ளிருந்து பதில் வரவில்லை. மீனா அழுவது போன்ற சப்தம் லேசாக கேட்டது. கையிலிருந்த காப்பி கோப்பையை சுவரை ஒட்டியிருந்த பித்தளை அண்டாவின் மீது வைத்துவிட்டு பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அங்கே மூலையில் மீனா குந்த வைத்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் பத்மாவுக்கு புரிந்துவிட்டது! கண்கள் வியப்பாலும், சந்தோஷத்தாலும் விரிந்தன.

மீனா பெரிய மனுஷியாகி விட்டாள்!

அவளை நெருங்கி இரு கைகளையும் அவளுடைய கைகளுக்கிடையில் கொடுத்து தூக்கினாள். முகத்தை தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள். ‘சீ கழுதை’ என்று செல்லமாய் மகளுடைய தலையில் குட்டினாள். ‘நீ வயசுக்கு வந்துட்டேடி. பயப்படாதே. அம்மாவுக்கு மாசம் ஒருதரம் மூனு நாளைக்கு வருமே. அதான். இரு, வேற பாவாட, சட்ட எடுத்துக்கிட்டு வரேன்.’ என்றவள் குளியலறைக்கு வெளியே பித்தளை அண்டாவில் பிடித்துவைத்திருந்த தண்ணீரை தொட்டுப் பார்த்தாள். ‘ரொம்ப ஜில்லுன்னு இருக்கு. இரு, நான் புதுசா தண்ணி அடிச்சித் தரேன். அப்பா எழுந்துக்குறதுக்குள்ள குளிச்சிட்டு துணி மாத்திக்க. ஒரு மூனு, நாலு நாளைக்கு நீ ஸ்கூலுக்கு போமுடியாது. வீனாவ அப்பாகூடத்தான் அனுப்பணும்.’

அடிபைப்புக்கு சென்று அவள் ‘டபக், டபக்’கென்று அடிக்க, சப்தம் கேட்டு மதன் வெளியே வந்தான். சுர்ரென்று வந்த கோபத்துடன் மனைவியை நெருங்கினான். ‘ஏய்.. காலைல எதுக்கு இப்ப அடிக்கறே? காலைல பலார வேலைய பாக்காம இப்ப என்ன அவசரம்? போடி.. நான் இன்னைக்கி சீக்கிரம் போவணும்.’

பத்மா அடிப்பதை நிறுத்தாமல் அவனைப் பார்த்தாள். ‘இந்த மனுஷன் கிட்ட எப்படி சொல்றது? அதுக்கு வேற ஏதாவது குதர்க்கம் சொல்வானோ தெரியலையே?’ என்று ஓடியது அவளுடைய எண்ணங்கள்.

மதனுக்கு கோபம் தலைக்கேறியது. ‘என்னாச்சி இவளுக்கு? நான் சொல்ல, சொல்ல கேக்காம அடிச்சிக்கிட்டே இருக்கறத பாரு. ரொம்ப துளிர் விட்டுப்போச்சின்னு நினைக்கிறேன்.’ என்று நினைத்தான். ‘ஏய், என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ அடிச்சிக்கிட்டே இருக்கே?’

பத்மா பக்கெட் நிறைந்ததும் அடிப்பதை நிறுத்தினாள். மதனைப் பார்த்தாள். ‘ஏங்க, இந்த பக்கெட்டை கொஞ்சம் பாத்ரூம்ல கொண்டு வைங்களேன்.’ என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் நாக்கை கடித்துக்கொண்டாள். பக்கெட்டை எடுக்க குணிந்தவன் கைகளை பிடித்து ஒதுக்கிவிட்டு தானே தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து உடனே கதவை மூடி தாளிட்டாள். ‘ஏய் சட்டுன்னு குளிச்சி முடி. ஷெல்ஃபுல நான் தேச்சிட்டு வச்சிருக்கற மஞ்சள் துண்டு இருக்கு பார். அத பக்கத்துலருக்கற செங்கல்ல தேய்ச்சி குளிச்சி முடிச்சதுக்கப்புறம் மூஞ்சில பூசிக்கோ. அம்மா தேய்க்கறத பாத்திருக்கே இல்லே. குளிச்சி முடிச்சிட்டு உள்ளருந்தே கூப்பிடு. என்ன?’

மதனுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்மாவின் பின்னால் குளியலறை வரை சென்றவன் அவள் பேச்சுக் குரல் கேட்டு மூடியிருந்த கதவை திறக்காமல் வெளியிலேயே நின்றான். ‘யார் கிட்ட பேசறா இவ? யார் உள்ள? அதுவும் கதவ தாள்ப்பாள் போட்டுக்கிட்டு’ என்று நினைத்தவன் ஒட்டியிருந்த பிள்ளைகளுடைய படுக்கையறையை எட்டி பார்த்தான். அங்கே மீனாவை மட்டும் காணவில்லை.

அவன் மீண்டும் குளியலறையைப் பார்த்தான். குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்த பத்மா அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

‘என்னடி, என்ன விஷயம். சொல்லேன்.?’ என்றவனைப் பார்த்தாள். ‘நம்ம மீனா பெரிய மனுஷியாய்ட்டாங்க.’ என்றாள் வெட்கத்துடன்.

மதன் அவளை விஷமத்துடன் பார்த்தான். ‘அதுக்கு நீயேன்டி இப்படி வெக்கப் படறே? பொண்ணு பெரிய மனுஷியாய்ட்டா, நீ இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே கோணங்கித்தனம் பண்ணு. சரி அதுக்கு என்ன இப்போ? எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கறதுதானே.. சரி, சரி, போய் காப்பி போட்டு கொண்டுவா.. அவள ஒரு வாரத்துக்கு வீட்ல வச்சி கறியும் மீனும் ஆக்கிப்போடு. வீட்லருந்தே படிக்கட்டும். ஹாஃப் இயர்லி பரீட்சைக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்ல. இன்னைக்கி என்ன கிழமை? புதன்.. அடுத்த வியாழக்கிழமை ஸ்கூலுக்கு போயிரணும், என்ன?’

அவன் பேசிக்கொண்டே போக பத்மா அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள். ‘என்ன சொல்றார் இவர்? பெரிய மனுஷியாய்ட்டாங்கறேன். என்னமோ அவளுக்கு சாதாரண ஜுரம் மாதிரி ஒரு வாரம் லீவு போட்டுட்டு ஸ்கூலுக்கு போணுங்கறார்? சடங்கு வைக்கணும், தாய் மாமன் சீர் கொண்டுவரணும், சாதி சனங்களையெல்லாம் கூப்பிடணும். அதுவும் என் வீட்டுல மீனாதான் மூத்த பொண்ணு. ‘மத்ததெல்லாம் ஆம்பிள்ளையா போயிருச்சிடி. உம்பொண்ணு பெரிய மனுஷியாயிட்டா ஒன்னுக்கு மூனு தாய் மாமன்க இருக்கானுங்க. சீர் செஞ்சி செமத்திரமாட்டான்க? குடுத்து வச்சவடி உம் பொண்ணுன்னு போனமாசம் வந்தப்பவே அம்மா சொல்லிட்டு போனாங்களே.. இந்த மனுஷன் என்னடான்னா அடுத்த வியாழக்கிழமையே ஸ்கூலுக்கு போணுமாமே.. எங்க போய் சொல்றது இந்த கூத்த?’

ஆனால் காலை நேரத்தில் அவனோட விவாதம் செய்தால் தான் நினைத்திருந்த எல்லா காரியமும் கெட்டுப்போகும் என்று நினைத்து வாயை மூடிக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து அவனுக்கும், வீனாகுட்டிக்கும் காப்பி, பலகாரம் செய்வதில் முனைந்தாள்.

மதனிடம் அவனுடைய காப்பி கோப்பையைக் கொடுத்துவிட்டு, குளியலறைக்கு வெளியே தான் சற்று முன் வைத்த காப்பியை கீழே ஊற்றிவிட்டு கோப்பையைக் கழுவி அடுக்களை அலமாரியில் கவிழ்த்தினாள். இன்னமும் உறங்கிக்கொண்டிருந்த வீனாவை எழுப்பி முன் அறையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மதனிடம் ஒப்படைத்தாள். ‘இன்னைக்கி மட்டும் இவளை நீங்க ஸ்கூலுக்கு ரெடி பண்ணுங்க. நான் மீனாவ பாக்கணும். அப்படியே நீங்க ஆஃபீசுக்கு போம்போது இவளை ஸ்கூல்ல போய் விட்டுருங்க. அதே மாதிரி திரும்பி நீங்கதான் கூட்டிக்கிட்டு வரணும்.’ பேசி முடித்து பரபரப்புடன் ஓடும் பத்மாவைப் பார்த்தான். அவனையுமறியாமல் அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘பொண்ணு பெரிய மனுஷியாய்ட்டானதும் அம்மாவ கைல பிடிக்க முடியலையே.’

தூக்க கலக்கத்துடன் தன்னைப் பார்த்த வீனாவைப் பார்த்தான். ‘ஏய்.. தூங்கனது போறும். போய் பல்லைத் தேய்ச்சிட்டு நில்லு. அப்பா வந்து தண்ணியடிச்சி தரேன். குளிச்சிட்டு அரை மணியில ரெடியாயிரணும். அக்காக்கு உடம்பு சரியில்லை. நீ மட்டும்தான் இன்னைக்கி ஸ்கூலுக்கு. அப்பா ஸ்கூல்ல விட்டுட்டு போறேன். சாயந்திரம் ஆஃபீஸ் பியூன் மாரி அங்கிள் வருவாரு. அவர்கூட வந்துரு என்ன?’

வீனா, ‘மீனா போலனா.. நானும் போல, போப்பா.’ என்று சினுங்கினாள்.

மதன் சட்டென்று வந்த கோபத்துடன் ‘ஏய் போட்டன்னா?’ என்று கை ஓங்கினான். ‘வயசு ஒம்பதாச்சி. இன்னும் என்ன குழந்தையாட்டம்? ஓடு.. ஒரு அடி வைக்கறதுக்குள்ள ஓடிப்போய் பல்ல தேய்ச்சிட்டு நிக்கணும். போ.’

பிடிவாதத்துடன் நின்ற மகளை தோளில் கைவைத்து தள்ளிக்கொண்டே போய் தாழ்வாரத்தில் அடிபைப்புக்கு அருகிலிருந்த சுவர் அலமாரியிலிருந்து பேஸ்ட், பிரஷ்ஷை எடுத்து அவள் கையில் திணித்தான். ‘அப்பா அஞ்சு நிமிஷத்துல ஷேவ் பண்ணிட்டு வருவேன். அதுக்குள்ள பல்லு தேய்ச்சிட்டு காப்பிய குடிச்சிட்டு ரெடியா நிக்கணும். சரியா? இல்லன்னா ஒத தான். சொல்லிட்டேன். எனக்கு இன்னைக்கி ஆஃபீசுக்கு சீக்கிரம் போணும். உன்னால லேட்டாச்சி? கொன்னுருவேன். தேய் சீக்கிரம்.’

மதன் பேசிக்கொண்டே அவனுடைய அறைக்கு செல்ல அவன் மறைந்ததும் வீனா அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தாள். பத்மாவைக் காணாமல் குழப்பத்துடன் பரபரவென்று பல்லைத் தேய்த்து குவளையில் இருந்த தண்ணீரை எடுத்து கொப்புளித்தாள். கையில் சவர பிரஷ்ஷ¤டன் வெளியே வந்த மதன், ‘குட்.. போய் காப்பிய குடி. அப்பா ஷேவ் பண்ணிட்டு தண்ணிய அடிக்கறேன்.’ என்றவாறு தாழ்வாரத்து சுவரில் அடித்திருந்த ஆணியில் ஒரு சிறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி சவரம் செய்ய ஆரம்பித்தான்.

வீனா அடுக்களைக்குள் நுழைந்து பத்மாவைக் காணாமல் தங்கள் படுக்கையறையை எட்டி பார்த்தாள். கண்களிரண்டும் வியப்பால் விரிய புது பட்டுப்பாவாடை, சட்டையுடன் நின்ற மீனாவைப் பார்த்தாள்.


தொடரும்

15.12.05

அப்பா ஒரு ஹிட்லர்... 7

மாதத்தின் முதல் நாள் மதனுக்கு வேறொரு முக்கியமான வேலையும் உண்டு.

அவனுடைய அறையில் ஒரே அளவிலான ஐந்தாறு பிளாஸ்டிக் டப்பாக்கள் இருக்கும். ஒவ்வொன்றின் தலையிலும், பால், கரண்ட், படிப்பு, ஞாயிறு, வாரநாள் மற்றும் உதிரி என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி வைத்திருப்பான்.

சம்பளப் பணத்தை பிரித்து ஒவ்வொரு டப்பாவிலும் அதனதற்குரிய தொகையை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை தன் அலமாரியில் வைத்து பூட்டிவிடுவான். அத்துடன் ‘சேமி’ என்ற டப்பாவும் இருக்கும். மாதக் கடைசியில் மற்ற டப்பாக்களில் இருக்கும் தொகையும் அலமாரியில் வைத்து பூட்டிய தொகையில் அவனுடைய கைச்செலவு போக மீதமிருந்தால் அதனுடன் சேர்த்து இந்த ‘சேமி’ டப்பாவுக்கு மாற்றப்படும். மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சேரும் தொகை வங்கி கணக்கில் போய் சேரும்!

பால், கரண்ட், படிப்பு, உதிரி என்றால் புரிகிறது. அதென்ன ஞாயிறு மற்றும் வாரநாள்?

வாரத்தில் ஒருநாள், அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ஆடு அல்லது கோழிக்கறி நிச்சயம் வாங்கவேண்டும். அப்புறம் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா. இந்த இரண்டு நாட்களிலும் சினிமாவுக்கு செல்லவில்லையென்றால் பத்மாவுக்கு தலை வெடித்துவிடும். சென்னையிலிருக்கும் எல்லா அரங்குகளிலும் ஓடுகின்ற சினிமாவையும் பார்த்துவிடலாமே என்ற எண்ணத்தில் மதனை திருமணம் புரிந்தவளுக்கென மதன் கொடுக்கும் ஆறுதல் பரிசு. அதற்காகும் செலவுக்கு தேவையான பணத்தை ஞாயிறு டப்பாக்களில்!

வார நாட்களில் எந்தெந்த நாளில் என்ன சமையல் செய்ய வேண்டும். அதற்கு எத்தனை செலவிடலாம் என்று முதல் தேதியே நிர்ணயிக்கப்பட்டு அதற்கு தேவையான தொகை வார நாள் டப்பாவில்!

இதுதான் சமையல் அட்டவணை! திங்கள் கிழமை: சாம்பார், செவ்வாய் மற்றும் வியாழன்: மீன் குழம்பு, புதன்: குருமா அல்லது வத்தக்குழம்பு, வெள்ளி:ரசம், சனி பத்மாவின் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப..!

இந்த அட்டவணையை அடுக்களை சுவற்றில் ஒட்டி வைத்திருப்பான். பத்மாவுக்கு மறந்துவிடக்கூடாதே என்ற நினைப்பில்!

மதனுடன் தனிக்குடித்தனம் வந்த ஆரம்ப காலத்தில் அவனுடைய இந்த திட்டங்களைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்பாள் பத்மா. அவளுடைய வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் பார்த்துக்கொள்வாள். அன்றைக்கு என்ன சமைக்க வேண்டும் என்று தீர்மானிப்பதெல்லாம் அவளுக்கு நினைவு தெரிந்தவரை அம்மாதான். ‘அதுவும் எப்போ? மார்க்கெட்டுக்கு போனதுக்கப்புறம். அங்கே என்ன கிடைக்கிதோ அதுதான் அன்றைக்கு. இங்கன என்னாடான்னா? இதுக்குன்னு போய் வேல மெனக்கெட்டு சின்ன பிள்ளை கணக்கா.. டப்பா, டப்பாவா வச்சிக்கிட்டு..! ஐயோ, இந்த ஆம்பிள கூட என்னத்த குடும்பத்த நடத்தி எப்படி சீரழியப்போறேனோ தெரியலையே’ என்று புலம்புவாள்.

மீனாவின் முதல் வருட பிறந்தநாள் மற்றும் காதுகுத்து விசேஷத்துக்கு வந்திருந்த பத்மாவின் குடும்பத்தார் இதையெல்லாம் பார்த்துவிட்டு மலைத்துப் போய் நின்றனர்.

‘அடியே, என்னாடி இது? என்ன மனுஷன்டி இவன்? ஒரு பொம்பளைக்கி என்னத்த சமைக்கிறதுன்னு கூட முடிவெடுக்க முடியாம இதென்னடி கூத்து. நல்ல மாப்பிள்ளைய பாத்த போ..’ என்று பத்மாவின் பாட்டி தாடையில் இடித்துக்கொண்டு தன் மகனைப் பார்த்து நீட்டி முழக்கியபோது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் பத்மாவின் தந்தை.

அதோ, இதோ என்று பதினைந்து வருடங்கள்!

ஆரம்பத்தில் ‘இதென்ன சின்ன பிள்ளை விளையாட்டா இருக்கு’ என்று புலம்பிய பத்மா இப்போதெல்லாம் எல்லா மாதமும் தவறாமல் நடைபெறும் இச்சடங்கில் முழு ஈடுபாட்டுடன் கலந்துக்கொள்வாள்.

மதன் எல்லா டப்பாக்களிலும் இம்மாத தொகையை வைப்பதற்கு முன் டப்பாக்களை திறந்து மேசையின் மேல் ஒவ்வொன்றாக கவிழ்த்தான். ‘ஞாயிறு’ டப்பாவிலிருந்து சில ஐந்து ரூபாய் நோட்டுகளும் சில்லரைகளும் விழுந்து சிதறின. எண்ணிப்பார்த்தான். பதினைந்து ரூபாய் மற்றும் சில்லரை. கடந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியிலிருந்து இரவு முடிய விடிய, விடிய நல்ல மழை. அதனால் சினிமா கட்டாகிப்போனது.

‘உதிரி’ டப்பாவில் சுளையாய் நாற்பது ரூபாய்! கடந்த மாதம் யாரும் நோய்வாய் படவில்லை. விருந்தாளிகள் வரவில்லை!

இரண்டு டப்பாக்களிலும் இருந்த தொகையை ‘சேமி’ டப்பாவுக்கு மாற்றிவிட்டு பத்மாவைப் பார்த்து புன்னகைத்தான். ‘நாம இந்த டப்பாவ கவுத்து நாலு மாசமாவுது. எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்துரலாமா?’

பத்மாவும் ஆவலுடன் ‘நாந்தான் எண்ணுவேன்’ என்று பரபரப்புடன்
டப்பாவை கவிழ்க்க அதிலிருந்து விழுந்து சிதறிய சில்லரை காசுகள் அறையின் நாலா திசையிலும் ஓடின.

‘கழுதை, கழுதை. எத்தனை தடவை சொன்னாலும் நீ திருந்தவே மாட்டேடி. எத எடுத்தாலும் அவசரம்தான். போ.. எல்லாத்தையும் பொறுக்கு.’ என்றான் மதன் பொய்க்கோபத்துடன்.

‘வெளக்குமாத்த எடுத்துக்கிட்டு வரேன், இருங்க’ என்ற அடுக்களைக்கு ஒட முயன்றவளை பிடித்து நிறுத்தி தலையில் செல்லமாய் குட்டினான்.

‘என்னங்க?’ என்றவளைப் பார்த்து முறைத்தான். ‘ஏன்டி லூசு. காசு பணத்த யாராவது விளக்குமாத்த வச்சி கூட்டுவாங்களா? நீதான கொட்டுன? குனிஞ்சி ஒவ்வொன்னா எடு.’

‘ஐயோ, ஐயோ. மூட நம்பிக்கை அது இதுன்னு லெக்சர் அடிப்பீங்க. காசுன்னதும் லட்சுமி வெளக்குமாத்தால பெருக்கக் கூடாதும்பீங்க. நீங்களும் உங்க நம்பிக்கையும்.’ தனக்குள்ளே முனகிக்கொண்டே அறையின் நாலாபுறத்திலும் சிதறிக்கிடந்து சில்லரைக் காசுகளை தேடி எடுத்தாள் பத்மா.

‘இந்தாங்க.’ என்று கைகளை நீட்டியவாறு நின்றவளைப் பார்த்து புன்னகைத்தான் மதன்.

‘இப்ப தெரியுதில்ல? சிதறிவிடறது சுலபம், சேக்குறது கஷ்டம்னு! இங்க பார். போன மூனு, நாலு மாசத்துல சிறுக சிறுக சேமிச்சது எவ்வளவு தெரியுமா, ஐநூறு ரூபாய்! இதையும் சேர்த்தா பாங்குல எவ்வளவு இருக்கும்னு நினைக்கறே. குத்து மதிப்பா சொல்லு?’

மதனின் தன் கையிலிருந்த பாங்க் பாஸ் புத்தகத்தை வாங்க நீட்டிய பத்மாவின் கையை தட்டிவிட்டான். ‘அதெல்லாம் தர மாட்டேன். நீ சொல்லு. எவ்வளவு இருக்கும்?’

பத்மா இரண்டு கருவிழிகளும் மேலே சொருகிக்கொள்ள விட்டத்தை பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றாள். பிறகு கண்கள் இரண்டும் விரிய மதனைப் பார்த்தாள். ‘ஒரு ரெண்டாயிரம்? இல்ல, இல்ல.. அஞ்சாயிரம்..’ மதன் இல்லை என்பது போல தலையசைக்கவே, அப்ப பத்தாயிரமா?’ என்றாள்.

மதன் இல்லை என்று தலையசைத்துவிட்டு தன் கையிலிருந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தான். பத்மாவின் கண்களும் உதடுகளும் சேர்ந்து விரிந்தன.

‘அடேங்கப்பா! பதினஞ்சாயிரமா? எப்படிங்க? போன மூனு, நாலு மாசத்துல இம்புட்டு பணத்த எப்படீங்க சேக்க முடியும்? பொய் சொல்லாதீங்க.’

மதன் சிரித்தான். ‘மக்கு, மக்கு. அத இப்படி கொண்டா. இந்த கணக்க தொடங்கி பன்னிரண்டு வருஷம் ஆவுது. உங்கப்பா இந்த வீட்டை வாங்கி குடுத்தாரே ஞாபகம் இருக்கா? அந்த மாசம் தொடங்குனது.’

பத்மா குழப்பத்துடன், ‘ஆமா’ என்றாள். ‘அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?’

‘உங்கப்பாவுக்கு நாம் அந்த பணத்தை திருப்பித் தர வேணாமா? ஒரு லட்சம்னா சும்மாவா?’

பத்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் தன் கணவனையே பார்த்தாள். ‘இந்த மனுஷனுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்கிறது? இந்த பணத்த அப்பாவுக்கு திருப்பி குடுத்தா அவங்க என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.

‘ஏய் என்ன பதிலே சொல்லாம நிக்கறே? இந்த பதினஞ்சாயிரத்த உங்கப்பாவுக்கு இந்த மாசமே அனுப்பிடலாம்னு பாக்கறேன்.’

பத்மா சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். ‘மணி இப்பவே பதினோரு மணியாயிருச்சி. இப்ப போயி இத இவர்கிட்ட பேசப்போயி.. அப்புறம் தூக்கத்துக்கு கோவிந்தா போடறாப்பல ஆயிரும். காலைல பார்த்துக்கலாம்.’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் ‘சரிங்க. நீங்க சொன்னபடியே செய்யலாம். போய் படுங்க. நான் பிள்ளைங்க தூங்கிட்டாங்களான்னு பார்த்துட்டு லைட்டெல்லாம் அனைச்சிட்டு அஞ்சு நிமிஷத்துல வரேன்.’ விட்டால் போதும் என்பது போல் ஓடுபவளைப் பார்த்து புன்னைகத்தவாறே எழுந்த மதன் மேசையிலிருந்த டப்பாக்களை எல்லாம் மூடி முன் அறை மற்றும் தாழ்வாரத்தில் எரிந்துக் கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.

தொடரும்

14.12.05

அப்பா ஒரு ஹிட்லர் .. 6

நாற்காலியையும் முக்காலியையும் எடுத்து முன் அறையில் அவை இருந்த இடத்திலேயே போட்டான். எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும் என்பதில் எப்போதும் குறியாயிருப்பான் மதன்.

அப்படி பத்மாவோ குழந்தைகளோ நடந்துகொள்ளாவிட்டால் அவ்வளவுதான். கோபத்தில் வீட்டையே இரண்டாக்கிவிடுவான். பத்மாவோ அதற்கு நேர் எதிர். இந்த விஷயத்தில் மூத்தவள் மதனையும் இளையவள் தன் தாயையும் கொண்டிருந்தார்கள்.

‘கரண்ட் சட்டுன்னு போய்ட்டாக்கூட நமக்கு வேண்டியதை கரெக்டா எடுக்க முடியணும். அதான் குடும்ப பொம்பளைக்கு லட்சணம். ஆஃபீஸ்ல எங்கிட்ட ரெண்டு மாசம் ட்ரெய்னிங் எடுக்கற பசங்க கூட இந்த பழக்கத்த படிச்சிருவானுங்க. ஆனா உன்னைப் பாரு, பதினஞ்சி வருஷமா என்கூட குடித்தனம் பண்ணியும் இப்பவும் அப்படியேத்தான் இருக்கே. நானும் நாயே, பேயேன்னு திட்டிப் பார்த்துட்டேன். திருந்தினாத்தானே. இந்த விஷயத்துல நான் முழுசா தோத்துப் போனது உங்கிட்டதான்டி. உன்னை பாத்து வீனா குட்டியும் அதே மாதிரி பண்ணுது. மீனா மட்டுமாவது என்ன மாதிரி வந்தாளே.’ என்பான் சமயம் கிடைக்கும்போதெல்லாம்.

பத்மாவின் தாயாரும் அவளுடைய வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன் மகளைக் கண்டிப்பாள். ‘ஏன்டி, உனக்கு சூடு சுரணைங்கறதே கிடையாதா? மாப்பிள்ளைதான் பாவம் எத்தனை தடவை கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லியிருப்பார். நானும் உன்னை மாதிரி பட்டிக்காட்டுலதானடி பொறந்து வளர்ந்தேன். மாப்பிள்ளை நம்ம வீட்டுல வச்சி உங்கிட்ட சொன்னதுலருந்து நம்ம வீடே மாறிப்போச்சேடி. நீயும் பார்த்தே இல்ல? நீ வீட்ல இருந்தப்போ இருந்தா மாதிரியா இருக்கு? நாங்கல்லாம் மாறிடலே? நீ மட்டும் ஏன்டி அப்படியே இருக்கே? பாருடி உம் மூத்த பொண்ண! அது இத்தனூண்டு இருந்துக்கிட்டு என்ன லட்சணமா அதுஞ் சாமான்களையெல்லாம் ஒழுங்கா வச்சி எடுக்குது! உன் வயத்துல பொறந்த பொண்ணான்னு ஆச்சரியமா இருக்கு. அவள பார்த்தாவது நீ திருந்தக்கூடாது? மனுஷியா பொறந்தா மாறணும்டி.’

அப்போதெல்லாம், ‘இனிமே அத்தான் சொல்றா மாதிரி நடந்துக்கணும். பாவம் அவங்களும் எத்தன தடவைத்தான் சொல்வாங்க.’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொள்வாள். அடுத்த நாள் விடியற்காலையிலேயே எழுந்து மதன் அடுக்களைக்குள் வருவதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு அவனிடம் காட்டுவாள். ‘பாருங்க. எப்படி வச்சிருக்கேன்னு.’ என்பாள்.

அவனும் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையில் செல்லமாய் குட்டுவான். ‘போடி லூசு. இன்னைக்கி சாய்ந்திரம் நான் வந்து பாக்கும்போது இதே மாதிரி வச்சிருந்தேன்னா நீ திருந்திட்டேன்னு ஒத்துக்கறேன்.’ என்று நக்கலடிப்பான்.

‘இல்லீங்க. இன்னைக்கி சாயங்காலமென்ன, நாளைக்கு வேணும்னாலும் பாருங்க, இப்படியேத்தான் இருக்கும்’ என்று பதிலளிப்பாள். மதனும் சிரித்துக்கொண்டே போவான்.

ஆனால் அன்று மாலையே பழைய குருடி, கதவை திறடி என்பதுபோல் அவன் திரும்பி வரும்போது காலையில் பார்த்த அடுக்களையா என்பதுபோல் தலைகீழாய் புரட்டி போட்டிருப்பாள் பத்மா. அவன் அடுக்களைக்குள் நுழைந்து ஒன்றும் பேசாமல் அடுப்பு மேடை, அலமாரிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவளைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டு போவான்.

‘ஏன் நல்லாத்தானே இருக்கு. எதுக்கு தலையடிச்சிக்கிட்டு போறாங்கடி உங்கப்பா?’ என்பாள் பத்மா மீனாவிடம். மீனாவும் தன் தாயை சில வினாடிகள் விஷமத்துடன் பார்ப்பாள். பிறகு தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து, விழுந்து சிரிப்பாள்.

பத்மா கோபத்துடன் ‘ஏய் என்ன கிண்டலா? கொன்னுருவேன்.’ என்று அவளை அடிக்க கை ஓங்குவாள். மீனா அவளுடைய கைகளில் அகப்படாமல் தள்ளி நின்றுகொண்டு மீண்டும் சிரிப்பாள். ‘நீங்க திருந்தவே மாட்டீங்கம்மா. கிச்சனையே தலை கீழா பொரட்டி போட்டுட்டு நல்லாத்தானே இருக்குன்னா சிரிப்பு வராம என்ன பண்ணும்?’

அப்போதும் தன்னைச் சுற்றி ஒரு நோட்டம் விடுவாள். அடுப்பு மேடையில் சிதறிக் கிடக்கும் பாத்திரங்களையும், மசாலா டப்பாக்களையும் பார்த்துவிட்டு, ‘போடி என்னால இவ்வளவுதான் முடியும். ஒத்த கையில கிடந்து மாரடிக்குது உனக்கும் உங்கப்பாவுக்கும் எங்க தெரியுது? அவரு ஜாலியா ஆஃபீஸ் போய்ட்டு வராரு. நீ ஸ்கூலுக்கு போய்ட்டு வரே. தனியா கிடந்து சாவறது நான்தானே. சொல்ல மாட்டே?’ என்பாள்.

மதன் முன் அறையிலிருந்து மறுகுரல் கொடுப்பான். ‘ஏய், சரி, நீ நாளையிலருந்து ஏதாவது வேலைக்கு போ. நான் வீட்டைப் பார்த்துக்கறேன். என்ன சரியா?’

பத்மாவும் ஏட்டிக்கு போட்டியாக, ‘ஏன்? உங்க வேலைய என்னால செய்ய முடியாதாக்கும்? பேனாவ பிடிச்சி நீட்டுன எடத்துலல்லாம் கையெழுத்து போட்டுட்டு தஸ் புஸ்சுன்னு இங்கிலீஷ்ல பேசிட்டு மாசம் ஒன்னாம் தேதியானா சம்பளத்த வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. என்னை மாதிரி தினம் இந்த அடுப்பை கட்டிக்கிட்டு மாரடிச்சி பாருங்க. ரேஷன்ல ரெண்டு லிட்டர் சீமெண்ணைத் தரான். அது எந்த மூலைக்கு வருது? ஈர விறக வச்சிக்கிட்டு ஊதி ஊதி என் மூச்சே நின்னுரும் போலருக்கு. உங்களுக்கு என்னடானா விளையாட்டா இருக்கு. இதுல உங்களுக்கும் உங்க மூத்த பொண்ணுக்கும் தினமும் மீனு, கருவாடு இல்லாம சாப்பாடு தொண்டையில இறங்காது. மார்க்கெட்டுக்கும் நான்தான ஓட வேண்டியிருக்கு. நீங்களா போறீங்க? என்னைக்காவது ஒருநா உங்கள அனுப்பினாலும் கண்ண மூடிக்கிட்டு அவன் என்ன அழுகிப்போனத குடுத்தாலும் அப்படியே வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. சரி நான் கேக்கறேன். என்னை மாதிரி உங்களால நாக்குக்கு ருசியா சமைக்க முடியுமா, சொல்லுங்க?’ என்பாள் படபடப்புடன்.

மதன் சரண்டராகிவிடுவான். ‘அம்மா தாயே. ஆளை விடு. ஒத்துக்கறேன். உன்னை மாதிரி நம்மால ருசியா சமைக்க முடியாதுதான். அதுல உன்னை மிஞ்ச எங்கம்மாவாலயும் முடியாது, உங்கம்மாலயும் முடியாது. ஒத்துக்கறேன். அந்த ஒன்னுக்காகத்தானே நீ என்ன அக்கிரமம் பண்ணாலும் சகிச்சிக்கிட்டு போறேன். நீ அடுக்களைய எப்படி வேணும்னாலும் வச்சிக்கோ. முன் அறைய மட்டும் குப்பையாக்காம இருந்தா சரி. ஏய் மீனா, வீனா, அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கிட்டா ஜாலியா பாத்துக்கிட்டே இருப்பீங்களே. வாங்கடி, புஸ்தகத்த எடுங்க. படிக்கலாம்.’ என்று அத்துடன் வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவான்.

தன்னையுமறியாமல் மீண்டும் பழைய நினைவுகளுக்கு சென்று திரும்பிய மதன் தன் மனைவியையும் அவளுடைய ஒழுங்கீனத்தையும் நினைத்து பார்த்தான். அவனுடைய உதடுகள் புன்னகையில் விரிந்தன. முன் அறையிலும் தாழ்வாரத்திலும் எரிந்துக்கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

***

மீனாவும் வீனாவும் அவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்த சர்ச்பார்க் கான்வெண்டில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். மதியம் 3.30 மணிக்கே பள்ளி முடிந்து விடும். இருவரும் தலையில் புத்தக பையை மாட்டிக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து வீட்டை அடைவார்கள்.

அன்றும் அப்படித்தான். வீட்டு படியேறிக்கொண்டிருந்தபோது மீனா தன் தங்கையைப் பார்த்தாள்.

‘ஏய் வீனாக்குட்டி. இன்னைக்கி என்ன ஸ்பெஷல் சொல்லு?’

ஏற்கனவே புத்தகப் பையையும் சுமந்துக்கொண்டு படியேற முடியாமல் திணறிக்கொண்டிருந்தவள் எரிச்சலுடன், ‘என்னடி?’ என்றாள்.

மதன் இதைக் கேட்டிருந்தால் உடனே கன்னத்தில் ஒரு அறை விழும். ‘என்ன இது அஞ்சி வயசு பெரியவள பாத்து எடி, பிடிங்கற? கழுதை, இனிமே அக்கான்னு கூப்பிடாம பேசி பாரு.. வாயிலயே சூடு வைக்கச் சொல்றேன் அம்மாவ.’ என்பான்.

ஆனால் மதன் வீட்டில் இல்லாதபோதும் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போதும் மீனா அக்கா இல்லை மறுபடியும் எடி, பிடிதான். மீனாவும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவளுக்கு வீனா என்றால் அத்தனை பிரியம். அவளுக்கு வீனாக்குட்டி எது செய்தாலும் பிடிக்கும்.

தலையில் பளுவுடன் படியேற முடியாமல் சிரமப்படும் தங்கையிடமிருந்து அவளுடைய பையை வாங்கிக்கொண்டு, ‘ஏய் இன்னைக்கி ஒன்னாம் தேதி. மறந்துட்டியா?’ என்றாள்.

வீனாவின் கண்களில் திடீர் பிரகாசம். வாயெல்லாம் பல். ‘ஐ! ஆமா இல்ல? மறந்தே போய்ட்டேன்டி. இன்னைக்கி SKC இருக்கு.. ஹைய்யா.. ஜாலி’ சந்தோஷத்துடன் தலைப்பளுவும் குறையவே வீனா துள்ளலுடன் படிகளில் தாவியேறி ஒடினாள்.

அதென்ன SKC? மாதம் முதல் தேதி என்றால் மதன் சம்பளக் கவருடன் அலுவலகத்திலிருந்து வரும்போது வாங்கி வரும் Sweet, Karam, பாக்கெட்டுடன் வீட்டில் தயாரித்த ஸ்பெஷல் Coffeeயும் சேர்த்து அவர்கள் இருவருக்கும் ஒரு குட்டி விருந்தே கிடைக்கும்.

அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களிடையில் ஏறத்தாழ எல்லோரிடத்திலும் காணப்படுவதுதான் இந்த பழக்கம். சென்னையிலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலக வளாகத்தினுள் மாத முதல் தேதியன்று மாலை நான்கு மணிக்கே இனிப்பு மற்றும் கார (மிக்சர், பக்கோடா, சமோசா வகையறாக்கள்) பாக்கெட்டுகளில் விற்பவர்கள் கடைபரப்பிவிடுவார்கள்.

மதனுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லாவிட்டாலும் சம்பிரதாயம் என்று ஒரு இருக்கிறதே. எல்லோரும் வாங்கிக்கொண்டு செல்லும்போது இவன் மட்டும் ஒன்றும் வாங்காமல் போனால், ‘சரியான கருமிடா இவன்.’ என்று சக அதிகாரிகள் எங்கே தனக்கு பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.

ஆகவே தான் மாதத்தின் முதல்நாள் என்றாள் வீனாவுக்கு இரட்டிப்பு குஷி. அத்துடன் பத்மாவுக்கும் பிள்ளைகள் இருவருக்கும் மணக்க, மணக்க மல்லிப் பூவும் வாங்கிக்கொண்டு வருவான். ஒரு முழம் பூவை மொட்டைத் தலை முடியில் இரண்டு பக்கத்திலும் க்ளிப் குற்றி வைத்துக்கொண்டு அவள் போடும் ஆட்டம் சிடுமூஞ்சி மதனுடைய முகத்திலும் சிரிப்பை வரவழைத்துவிடும்.

சாதாரண நாட்களில் மாலையில் பிள்ளைகள் இருவரும் வீடு வந்து சேர்ந்தவுடன் ஒரு க்ளாஸ் கேழ்வரகு கஞ்சிதான். ‘ஐயே.. கஞ்சியா.. உவ்வே..’ என்று வீனா அருவருப்புடன் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பாள். பிறகு, ‘ஏய் வேணாம். அப்புறம் அப்பா வந்தா சொல்லிக் குடுத்துருவேன்.’ என்று பத்மா பயமுறுத்தியவுடன் வேண்டா வெறுப்பாய் குடித்து வைப்பாள். கேழ்வரகு கஞ்சி உடம்புக்கு அதுவும் சிறுபிள்ளைகளுக்கு நல்லதாம்! மதனுடைய நியதிகளுள் இதுவும் ஒன்று!

மாதத்தின் முதல் நாள் மதனுக்கு வேறொரு முக்கியமான வேலையும் உண்டு.

தொடரும்

அப்பா ஒரு ஹிட்லர் .. 6

நாற்காலியையும் முக்காலியையும் எடுத்து முன் அறையில் அவை இருந்த இடத்திலேயே போட்டான். எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும் என்பதில் எப்போதும் குறியாயிருப்பான் மதன்.

அப்படி பத்மாவோ குழந்தைகளோ நடந்துகொள்ளாவிட்டால் அவ்வளவுதான். கோபத்தில் வீட்டையே இரண்டாக்கிவிடுவான். பத்மாவோ அதற்கு நேர் எதிர். இந்த விஷயத்தில் மூத்தவள் மதனையும் இளையவள் தன் தாயையும் கொண்டிருந்தார்கள்.

‘கரண்ட் சட்டுன்னு போய்ட்டாக்கூட நமக்கு வேண்டியதை கரெக்டா எடுக்க முடியணும். அதான் குடும்ப பொம்பளைக்கு லட்சணம். ஆஃபீஸ்ல எங்கிட்ட ரெண்டு மாசம் ட்ரெய்னிங் எடுக்கற பசங்க கூட இந்த பழக்கத்த படிச்சிருவானுங்க. ஆனா உன்னைப் பாரு, பதினஞ்சி வருஷமா என்கூட குடித்தனம் பண்ணியும் இப்பவும் அப்படியேத்தான் இருக்கே. நானும் நாயே, பேயேன்னு திட்டிப் பார்த்துட்டேன். திருந்தினாத்தானே. இந்த விஷயத்துல நான் முழுசா தோத்துப் போனது உங்கிட்டதான்டி. உன்னை பாத்து வீனா குட்டியும் அதே மாதிரி பண்ணுது. மீனா மட்டுமாவது என்ன மாதிரி வந்தாளே.’ என்பான் சமயம் கிடைக்கும்போதெல்லாம்.

பத்மாவின் தாயாரும் அவளுடைய வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன் மகளைக் கண்டிப்பாள். ‘ஏன்டி, உனக்கு சூடு சுரணைங்கறதே கிடையாதா? மாப்பிள்ளைதான் பாவம் எத்தனை தடவை கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லியிருப்பார். நானும் உன்னை மாதிரி பட்டிக்காட்டுலதானடி பொறந்து வளர்ந்தேன். மாப்பிள்ளை நம்ம வீட்டுல வச்சி உங்கிட்ட சொன்னதுலருந்து நம்ம வீடே மாறிப்போச்சேடி. நீயும் பார்த்தே இல்ல? நீ வீட்ல இருந்தப்போ இருந்தா மாதிரியா இருக்கு? நாங்கல்லாம் மாறிடலே? நீ மட்டும் ஏன்டி அப்படியே இருக்கே? பாருடி உம் மூத்த பொண்ண! அது இத்தனூண்டு இருந்துக்கிட்டு என்ன லட்சணமா அதுஞ் சாமான்களையெல்லாம் ஒழுங்கா வச்சி எடுக்குது! உன் வயத்துல பொறந்த பொண்ணான்னு ஆச்சரியமா இருக்கு. அவள பார்த்தாவது நீ திருந்தக்கூடாது? மனுஷியா பொறந்தா மாறணும்டி.’

அப்போதெல்லாம், ‘இனிமே அத்தான் சொல்றா மாதிரி நடந்துக்கணும். பாவம் அவங்களும் எத்தன தடவைத்தான் சொல்வாங்க.’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொள்வாள். அடுத்த நாள் விடியற்காலையிலேயே எழுந்து மதன் அடுக்களைக்குள் வருவதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு அவனிடம் காட்டுவாள். ‘பாருங்க. எப்படி வச்சிருக்கேன்னு.’ என்பாள்.

அவனும் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையில் செல்லமாய் குட்டுவான். ‘போடி லூசு. இன்னைக்கி சாய்ந்திரம் நான் வந்து பாக்கும்போது இதே மாதிரி வச்சிருந்தேன்னா நீ திருந்திட்டேன்னு ஒத்துக்கறேன்.’ என்று நக்கலடிப்பான்.

‘இல்லீங்க. இன்னைக்கி சாயங்காலமென்ன, நாளைக்கு வேணும்னாலும் பாருங்க, இப்படியேத்தான் இருக்கும்’ என்று பதிலளிப்பாள். மதனும் சிரித்துக்கொண்டே போவான்.

ஆனால் அன்று மாலையே பழைய குருடி, கதவை திறடி என்பதுபோல் அவன் திரும்பி வரும்போது காலையில் பார்த்த அடுக்களையா என்பதுபோல் தலைகீழாய் புரட்டி போட்டிருப்பாள் பத்மா. அவன் அடுக்களைக்குள் நுழைந்து ஒன்றும் பேசாமல் அடுப்பு மேடை, அலமாரிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவளைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டு போவான்.

‘ஏன் நல்லாத்தானே இருக்கு. எதுக்கு தலையடிச்சிக்கிட்டு போறாங்கடி உங்கப்பா?’ என்பாள் பத்மா மீனாவிடம். மீனாவும் தன் தாயை சில வினாடிகள் விஷமத்துடன் பார்ப்பாள். பிறகு தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து, விழுந்து சிரிப்பாள்.

பத்மா கோபத்துடன் ‘ஏய் என்ன கிண்டலா? கொன்னுருவேன்.’ என்று அவளை அடிக்க கை ஓங்குவாள். மீனா அவளுடைய கைகளில் அகப்படாமல் தள்ளி நின்றுகொண்டு மீண்டும் சிரிப்பாள். ‘நீங்க திருந்தவே மாட்டீங்கம்மா. கிச்சனையே தலை கீழா பொரட்டி போட்டுட்டு நல்லாத்தானே இருக்குன்னா சிரிப்பு வராம என்ன பண்ணும்?’

அப்போதும் தன்னைச் சுற்றி ஒரு நோட்டம் விடுவாள். அடுப்பு மேடையில் சிதறிக் கிடக்கும் பாத்திரங்களையும், மசாலா டப்பாக்களையும் பார்த்துவிட்டு, ‘போடி என்னால இவ்வளவுதான் முடியும். ஒத்த கையில கிடந்து மாரடிக்குது உனக்கும் உங்கப்பாவுக்கும் எங்க தெரியுது? அவரு ஜாலியா ஆஃபீஸ் போய்ட்டு வராரு. நீ ஸ்கூலுக்கு போய்ட்டு வரே. தனியா கிடந்து சாவறது நான்தானே. சொல்ல மாட்டே?’ என்பாள்.

மதன் முன் அறையிலிருந்து மறுகுரல் கொடுப்பான். ‘ஏய், சரி, நீ நாளையிலருந்து ஏதாவது வேலைக்கு போ. நான் வீட்டைப் பார்த்துக்கறேன். என்ன சரியா?’

பத்மாவும் ஏட்டிக்கு போட்டியாக, ‘ஏன்? உங்க வேலைய என்னால செய்ய முடியாதாக்கும்? பேனாவ பிடிச்சி நீட்டுன எடத்துலல்லாம் கையெழுத்து போட்டுட்டு தஸ் புஸ்சுன்னு இங்கிலீஷ்ல பேசிட்டு மாசம் ஒன்னாம் தேதியானா சம்பளத்த வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. என்னை மாதிரி தினம் இந்த அடுப்பை கட்டிக்கிட்டு மாரடிச்சி பாருங்க. ரேஷன்ல ரெண்டு லிட்டர் சீமெண்ணைத் தரான். அது எந்த மூலைக்கு வருது? ஈர விறக வச்சிக்கிட்டு ஊதி ஊதி என் மூச்சே நின்னுரும் போலருக்கு. உங்களுக்கு என்னடானா விளையாட்டா இருக்கு. இதுல உங்களுக்கும் உங்க மூத்த பொண்ணுக்கும் தினமும் மீனு, கருவாடு இல்லாம சாப்பாடு தொண்டையில இறங்காது. மார்க்கெட்டுக்கும் நான்தான ஓட வேண்டியிருக்கு. நீங்களா போறீங்க? என்னைக்காவது ஒருநா உங்கள அனுப்பினாலும் கண்ண மூடிக்கிட்டு அவன் என்ன அழுகிப்போனத குடுத்தாலும் அப்படியே வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. சரி நான் கேக்கறேன். என்னை மாதிரி உங்களால நாக்குக்கு ருசியா சமைக்க முடியுமா, சொல்லுங்க?’ என்பாள் படபடப்புடன்.

மதன் சரண்டராகிவிடுவான். ‘அம்மா தாயே. ஆளை விடு. ஒத்துக்கறேன். உன்னை மாதிரி நம்மால ருசியா சமைக்க முடியாதுதான். அதுல உன்னை மிஞ்ச எங்கம்மாவாலயும் முடியாது, உங்கம்மாலயும் முடியாது. ஒத்துக்கறேன். அந்த ஒன்னுக்காகத்தானே நீ என்ன அக்கிரமம் பண்ணாலும் சகிச்சிக்கிட்டு போறேன். நீ அடுக்களைய எப்படி வேணும்னாலும் வச்சிக்கோ. முன் அறைய மட்டும் குப்பையாக்காம இருந்தா சரி. ஏய் மீனா, வீனா, அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கிட்டா ஜாலியா பாத்துக்கிட்டே இருப்பீங்களே. வாங்கடி, புஸ்தகத்த எடுங்க. படிக்கலாம்.’ என்று அத்துடன் வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவான்.

தன்னையுமறியாமல் மீண்டும் பழைய நினைவுகளுக்கு சென்று திரும்பிய மதன் தன் மனைவியையும் அவளுடைய ஒழுங்கீனத்தையும் நினைத்து பார்த்தான். அவனுடைய உதடுகள் புன்னகையில் விரிந்தன. முன் அறையிலும் தாழ்வாரத்திலும் எரிந்துக்கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

***

மீனாவும் வீனாவும் அவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்த சர்ச்பார்க் கான்வெண்டில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். மதியம் 3.30 மணிக்கே பள்ளி முடிந்து விடும். இருவரும் தலையில் புத்தக பையை மாட்டிக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து வீட்டை அடைவார்கள்.

அன்றும் அப்படித்தான். வீட்டு படியேறிக்கொண்டிருந்தபோது மீனா தன் தங்கையைப் பார்த்தாள்.

‘ஏய் வீனாக்குட்டி. இன்னைக்கி என்ன ஸ்பெஷல் சொல்லு?’

ஏற்கனவே புத்தகப் பையையும் சுமந்துக்கொண்டு படியேற முடியாமல் திணறிக்கொண்டிருந்தவள் எரிச்சலுடன், ‘என்னடி?’ என்றாள்.

மதன் இதைக் கேட்டிருந்தால் உடனே கன்னத்தில் ஒரு அறை விழும். ‘என்ன இது அஞ்சி வயசு பெரியவள பாத்து எடி, பிடிங்கற? கழுதை, இனிமே அக்கான்னு கூப்பிடாம பேசி பாரு.. வாயிலயே சூடு வைக்கச் சொல்றேன் அம்மாவ.’ என்பான்.

ஆனால் மதன் வீட்டில் இல்லாதபோதும் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போதும் மீனா அக்கா இல்லை மறுபடியும் எடி, பிடிதான். மீனாவும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவளுக்கு வீனா என்றால் அத்தனை பிரியம். அவளுக்கு வீனாக்குட்டி எது செய்தாலும் பிடிக்கும்.

தலையில் பளுவுடன் படியேற முடியாமல் சிரமப்படும் தங்கையிடமிருந்து அவளுடைய பையை வாங்கிக்கொண்டு, ‘ஏய் இன்னைக்கி ஒன்னாம் தேதி. மறந்துட்டியா?’ என்றாள்.

வீனாவின் கண்களில் திடீர் பிரகாசம். வாயெல்லாம் பல். ‘ஐ! ஆமா இல்ல? மறந்தே போய்ட்டேன்டி. இன்னைக்கி SKC இருக்கு.. ஹைய்யா.. ஜாலி’ சந்தோஷத்துடன் தலைப்பளுவும் குறையவே வீனா துள்ளலுடன் படிகளில் தாவியேறி ஒடினாள்.

அதென்ன SKC? மாதம் முதல் தேதி என்றால் மதன் சம்பளக் கவருடன் அலுவலகத்திலிருந்து வரும்போது வாங்கி வரும் Sweet, Karam, பாக்கெட்டுடன் வீட்டில் தயாரித்த ஸ்பெஷல் Coffeeயும் சேர்த்து அவர்கள் இருவருக்கும் ஒரு குட்டி விருந்தே கிடைக்கும்.

அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களிடையில் ஏறத்தாழ எல்லோரிடத்திலும் காணப்படுவதுதான் இந்த பழக்கம். சென்னையிலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலக வளாகத்தினுள் மாத முதல் தேதியன்று மாலை நான்கு மணிக்கே இனிப்பு மற்றும் கார (மிக்சர், பக்கோடா, சமோசா வகையறாக்கள்) பாக்கெட்டுகளில் விற்பவர்கள் கடைபரப்பிவிடுவார்கள்.

மதனுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லாவிட்டாலும் சம்பிரதாயம் என்று ஒரு இருக்கிறதே. எல்லோரும் வாங்கிக்கொண்டு செல்லும்போது இவன் மட்டும் ஒன்றும் வாங்காமல் போனால், ‘சரியான கருமிடா இவன்.’ என்று சக அதிகாரிகள் எங்கே தனக்கு பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.

ஆகவே தான் மாதத்தின் முதல்நாள் என்றாள் வீனாவுக்கு இரட்டிப்பு குஷி. அத்துடன் பத்மாவுக்கும் பிள்ளைகள் இருவருக்கும் மணக்க, மணக்க மல்லிப் பூவும் வாங்கிக்கொண்டு வருவான். ஒரு முழம் பூவை மொட்டைத் தலை முடியில் இரண்டு பக்கத்திலும் க்ளிப் குற்றி வைத்துக்கொண்டு அவள் போடும் ஆட்டம் சிடுமூஞ்சி மதனுடைய முகத்திலும் சிரிப்பை வரவழைத்துவிடும்.

சாதாரண நாட்களில் மாலையில் பிள்ளைகள் இருவரும் வீடு வந்து சேர்ந்தவுடன் ஒரு க்ளாஸ் கேழ்வரகு கஞ்சிதான். ‘ஐயே.. கஞ்சியா.. உவ்வே..’ என்று வீனா அருவருப்புடன் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பாள். பிறகு, ‘ஏய் வேணாம். அப்புறம் அப்பா வந்தா சொல்லிக் குடுத்துருவேன்.’ என்று பத்மா பயமுறுத்தியவுடன் வேண்டா வெறுப்பாய் குடித்து வைப்பாள். கேழ்வரகு கஞ்சி உடம்புக்கு அதுவும் சிறுபிள்ளைகளுக்கு நல்லதாம்! மதனுடைய நியதிகளுள் இதுவும் ஒன்று!

மாதத்தின் முதல் நாள் மதனுக்கு வேறொரு முக்கியமான வேலை உண்டு.

தொடரும்

13.12.05

அப்பா ஒரு ஹிட்லர்.. 5

பத்மா பதிலேதும் கூறாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். மதனும் அவளை அணைத்துக்கொண்டு மேசையின் மேல் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.15!

‘அட! என்னாச்சி எனக்கு? இப்படி நேரம் போறது தெரியாமயே தூங்கியிருக்கேன்!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு தன்னை அணைத்துக்கொண்டிருந்த பத்மாவின் தாடையில் கைவைத்து தன்னை நோக்கி உயர்த்தினான். ‘ஏய்.. பைத்தியம்.. பழச எதையாவது நினைச்சிக்கிட்டியா? சரி, போ..சாப்பாட எடுத்துவை.. நான் மீனாவ கூட்டிக்கிட்டு வரேன்.’

அவள் சென்றதும் தன் மகளை நெருங்கி, ‘ஏய் திருடி.. போதும் தூங்குனது.. அப்பா கிட்டருந்து இன்னைக்கி தப்பிச்சிட்டே.. நாளைக்கு பாக்கலாம். எழுந்திரு. சாப்டுட்டு தூங்கு..’

மீனா தூக்க கலக்கத்தில் பாதிக்கண்களுடன் மதனைப் பார்த்தாள். ‘எனக்கு தூக்கம் வருதுப்பா.. ப்ளீஸ்.. எனக்கு சாப்பாடு வேணாம்..’ என்று சிணுங்கினாள். அவன் கோபப்படாமல் இருக்கவே.. ‘அப்பா அப்படியே என்ன தூக்கிகிட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..’ என்று கெஞ்சினாள்.

மதனும் சிரித்துக்கொண்டு அவளை அப்படியே தன் இரு கைகளிலும் அள்ளிக்கொண்டு படுக்கையறையை நோக்கி நடந்தான்.

‘என்னங்க நீங்க? பதினஞ்சு வயசு ஆகப்போகுது.. அவதான் இன்னும் குழந்தையாட்டம் விளையாடறான்னா நிங்களும் அவ கூட சேந்துக்கிட்டு. நீங்க ஊர்ல இல்லாத நாள்லல்லாம் தூங்குடி, தூங்குடின்னு கெஞ்சினா கூட ராத்திரி பதினோரு மணி வரைக்கும் தூங்காம காமிக்ஸ் படிச்சிக்கிட்டிருப்பா. இன்னைக்கி என்ன? எல்லாம் நடிப்பு.’ என்ற பத்மாவைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்த மதன் மீனாவை கட்டிலில் கிடத்தி போர்வையை இழுத்து விட்டுவிட்டு பத்மாவை நெருங்கினான்.

அவனுடைய எண்ணத்தைப் புரிந்தும் புரியாதது போல் நடித்தாள் பத்மா.. ‘சரி, சரி. வாங்க. நீங்க சாப்டு முடிச்சீங்கன்னா நானும் பாத்திரத்தை சிங்க்ல போட்டுட்டு படுப்பேன். என்ன பாக்கறீங்க? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னைக்கி அது... புரியுதில்ல? வந்து நல்ல பிள்ளையாட்டம் சாப்டுட்டு படுங்க. இந்த தடவை என்னமோ தெரியல. இடுப்பெல்லாம் பயங்கரமா வலிக்குது.’

மதன் பத்மாவை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டான். ‘சீ பைத்தியம். எனக்கு தெரியாதாக்கும்? காலண்டரைப் பாரு. இன்னைக்கி ரெட் இங்க்ல ரவுண்ட் பண்ணியிருக்கேன்ல..?’ என்றான் விஷமத்துடன்.

அதுவரை 'எதுக்கு காலண்டர்ல வட்டம் போட்டிருக்கு'ன்னு யோசித்து யோசித்து விளங்காத பத்மா கணவனைப் பார்த்து, ‘சீ உங்களுக்கு விவஸ்தையே இல்லீங்க. ரெண்டு நாளா மீனா காலண்டர பார்த்துட்டு ஏம்மா இன்னைக்கி, நாளைக்கி, நாளான்னைக்கின்னு மூனு நாளைக்கும் வட்டம் போட்டிருக்கு? யார் போட்டா? ஏதாவது விசேஷத்துக்கு போறோமாம்மா’ன்னு என்னை போட்டு குடைஞ்சி எடுத்துட்டா. உங்களுக்கு எதுக்குத்தான் கணக்கு வைக்கிறதுன்னு ஒரு வரைமுறையே இல்லையா? நாளைக்கு உங்க மக பெரிய மனுஷியானா அவளுக்கும் இப்படித்தான் சரியா வருதான்னு பார்த்துக்கிட்டே இருப்பீங்களா? நல்ல ஆளுங்க.. சரி சரி. பேசிக்கிட்டிருந்தா டைம் போய்கிட்டே இருக்கும். வாங்க, உக்காருங்க. இன்னைக்கி நைட்டுக்கு தனியா குழம்பு வைக்க முடியல.. பகலுக்கு வச்ச மீன் குழம்பும் அப்பளமும்தான். குழம்புலருக்கற மீனை வச்சிக்கிட்டு நல்ல பையனாட்டம் சாப்டு முடிங்க. ரசமும் இருக்கு.’

‘பைத்தியம். உன் கையால ரசம் வச்சாலும் போறும்டி. எடுத்து வச்சிட்டு நீயும் உக்கார். சாப்டதும் நான் பாத்திரத்த எல்லாம் எடுத்து வைக்கிறேன். நீ சாப்டதும் போய் படு. காலைல முடிஞ்சா எழுந்து சமை. இல்லன்னா நான் பண்ணிட்டு, பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு போறேன். என்ன?’ என்ற மதனைப் பார்த்தாள் பத்மா.

இந்த மாதிரி ஆம்பிளை கிடைக்கறதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணியிருப்பேன் என்று நினைத்த மாத்திரத்திலேயே கண்கள் குளமாக முகத்தை திருப்பிக் கொண்டு சேலையால் முகத்தைத் துடைத்தாள். ‘ஏய் எருமை.. எத்தன தடவை சொல்லியிருக்கேன். சேலையால துடைக்காத.. இந்தா இத வச்சி துடை..’ என்றவாறு தன் தோளில் கிடந்த பூத்துவாலையை எடுத்து கொடுத்தான்.

துவாலையால் முகத்தை அழுந்த துடைத்த பத்மா அவனைப் பார்த்து ‘இப்படி நீங்க எருமை, கழுதைன்னு ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கூப்பிடலன்னா எனக்கு தூக்கமே வராதுங்க.’ என்றவாறு கலகலவென்று சிரிக்க மதன் பொய்கோபத்துடன் உறங்கிக் கொண்டிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்து ‘முளிச்சிக்க போவுதுங்கடி. என்னாச்சி உனக்கு இன்னைக்கி.’ என்றான்.

இருவரும் உண்டு முடித்ததும் பாத்திரங்களை எடுக்க முனைந்த மனைவியின் கைகளை தட்டி விட்டுவிட்டு, ‘நீ போய் படு. நான் எடுத்து வச்சிட்டு போய் படுக்கறேன். எனக்கு இப்போ தூக்கம் வராது போலருக்கு. அப்படியே கொஞ்ச நேரம் வெராந்தாவுல உக்காந்து ஆகாசத்த பாக்கப் போறேன், தூக்கம் வரவரைக்கும். நீ லைட்ட அனைச்சிட்டு படு.’

பாத்திரங்களை அடுக்களை சிங்கில் ஒழுங்காக வைத்து அருகில் பிளாஸ்டிக் பக்கெட்டிலிருந்த தண்ணீரை குவளையில் எடுத்து பாத்திரங்களின் மேல் சுற்றி ஊற்றிவிட்டு லைட்டை அனைத்தான். அடுக்களையை ஒட்டியிருந்த படுக்கையறையில் கட்டிலில் கிடந்த தன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு லைட்டை அணைத்துவிட்டு முன் அறையை ஒட்டியிருந்த தன் படுக்கையறையை நோக்கி நடந்தான்.

மதன்-பத்மா ஜோடிக்கும் பிள்ளைகளுக்கும் என இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, அடுக்களை, உணவருந்த ஒரு சிறு அறையென அவ்வீடு கச்சிதமாக இருந்தது. டாய்லெட்டும், குளியலறையும் வெளியே வானம் பார்த்த தாழ்வாரத்தின் மூலையில் அமைந்திருந்தன. பத்மா 'அந்த மூன்று' நாட்களில் மட்டும் குழந்தைகளுடனேயே படுத்து உறங்குவாள். தேர்வு நேரங்களில் மீனா இரவில் கண்விழித்து படிக்கும் நாட்களிலும் பத்மா அவள் உறங்கும் வரை குழந்தைகளுடனேயே படுத்துக்கொண்டிருப்பாள். மற்ற நாட்களில் குழந்தைகள் இருவரும் உறங்கிய பிறகு எழுந்து கதவை லேசாக மூடிவிட்டு தங்கள் அறைக்குச் சென்று படுப்பது வழக்கம்.

அடுக்களையை ஒட்டியிருந்த படுக்கையறையிலிருந்து முன் அறைக்கும், மதனின் படுக்கையறைக்கும் செல்ல தாழ்வாரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

முன்னறையிலிருந்த சாய்வு நாற்காலியையும் ஒரு சிறிய முக்காலியையும் தாழ்வாரத்தில் எடுத்து இட்டு அமர்ந்த மதன் நாற்காலியில் சாய்ந்து கால்களை முக்காலியின் மேல் நீட்டிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாய் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் தெளிவாய் நட்சத்திரங்கள் மின்ன பார்க்க மிகவும் அழகாய் தென்பட்டது. குளிர்ந்த காற்றின் மணத்தை தன் நெஞ்சு முழுக்க உள்ளிழுத்து சுவாசித்தான். மனசில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் எழுந்தது.

பத்து வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் இதே போர்ஷனில் மாத வாடகைக்குத்தான் வந்தான். அப்போது மீனாவுக்கு நான்கு வயது. வீனா இன்னமும் பிறக்கவில்லை. குடிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென ஒருநாள் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருக்கும்போது வீட்டு உரிமையாளர் வந்தார். ‘சார், நான் இந்த வீட்டை வித்துரலாம்னு இருக்கேன். நீங்க ஒரு மாசத்துக்குள்ள வீட்டை காலி பண்ணிட்டீங்கன்னா வாங்கறவங்கள கூட்டிக்கிட்டு வந்து காட்றதுக்கு வசதியாயிருக்கும். அதுக்கு முன்னால கொஞ்சம் வீட்டை பெயிண்ட், கிய்ண்ட அடிச்சி பார்வையா மாத்தலாம்னு பார்க்கறேன்’ என்றார்.

‘சரி சார். பாக்கறேன்.’ என்று அலுவலகம் புறப்பட்டுச் சென்ற மதன் அன்று பகல் முழுவதும் வீட்டுக்காரர் கூறியதைப் பற்றி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அன்று மாலையே வீட்டுக்காரரை அவருடைய வீட்டில் போய் பார்த்தான்.

‘சார். நானே உங்க வீட்ட வாங்கிக்கறேன். விலைய சொல்லுங்க. ஒரு மூனு மாசம் டைம் குடுத்தீங்கன்னா பணத்தை முழுசா செட்டில் பண்ணிடரேன். நீங்க பெயின்ட்டிங்க் எல்லாம் ஒன்னும் செய்ய வேணாம். அப்படியே நான் வாங்கிக்கறேன்.’ என அவர் கூறிய விலை நியாயமாய் படவே பத்மாவிடம் வந்து தன் யோசனையை கூறினான்.

பத்மா உடனே தன் தந்தைக்கு கடிதம் எழுத அவர் தன் மூத்த மகனுடன் உடனே புறப்பட்டு வந்து நின்றார். அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்த மதனுக்கு தன் மனைவி மீது அசாத்திய கோபம் வந்தது. திருமணம் ஆனபின் முதன் முறையாக, தன் மாமனார் முன்னால் அவளை அடிக்கவே போய்விட்டான்.

‘ஐயோ நான் சும்மாத்தாங்க எழுதினேன். வீட்ட வாங்கறதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுவாங்களேன்னுதான் எழுதினேன். அப்பா உடனே புறப்பட்டு வருவாங்கன்னு நான் நினைச்சேனா?’ என்றாள் பத்மா.

பிறகு அடுத்த ஒரு வாரம் பத்மாவின் தந்தை அங்கேயே தங்கியிருந்து மருமகனை தினமும் கெஞ்சி ‘சும்மா வேணாம் மாப்பிள்ளை. கடனாவே நினைச்சிக்குங்க’ என்றெல்லாம் சமாதானம் பேசி அவனை சம்மதிக்க வைத்து, முழுப்பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி, வீட்டை தன் மருமகன் பேரில் கிரையம் செய்துவிட்டுத்தான் ஊர் போய் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் முசுடு, கோபக்காரன், தன் மகளுடைய வாழ்க்கை நாசமாக்கிருவான் என்றெல்லாம் நினைத்திருந்தவர்கள் மதன் தன் மகளை கண்கலங்காமல் மட்டுமல்ல மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கிறான் என்று நாளடைவில் கண்டுக்கொண்ட பத்மாவின் பெற்றோர் தங்கள் நன்றியை காட்டும் முகமாகத்தான் இதை செய்தார்கள் என்பதை பிறகு தன் மனைவி மூலமாக கேள்விப்பட்டான் மதன்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்த மதன் தன் மேல் விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூரலால் நினைவுகள் கலைந்து எழுந்து திரும்பி சுவர்க்கடிகார்த்தைப் பார்த்தான். மணி நள்ளிரவைக் கடந்திருந்தது. வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். சற்று முன் களங்கமில்லாமலிருந்த வானம் கருத்த மழை மேகங்களுடன் பயமுறுத்தியது. தொடுவானத்தில் ஓரிரு மின்னல்கள் கீறலாய் வானத்தை மேலிருந்து கீழாக கிழித்தன.

நாற்காலியையும் முக்காலியையும் எடுத்து முன் அறையில் அவை இருந்த இடத்திலேயே வைத்தான்.

எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும் என்பதில் எப்போதும் குறியாயிருப்பான் மதன்.

தொடரும்..