28.2.07

சூரியன் 179

அன்று இரவு நாடார் சற்று முன்னதாகவே வீட்டை வந்தடைந்திருந்தார்.

அன்று மாலை அவருடைய ஆடிட்டரிடமிருந்து ராசேந்திரனும் அவனுடைய தந்தையும் வந்து சென்ற விவரம் அறிந்ததிலிருந்தே மனம் ஒரு நிலையில் நில்லாமல் அவரை அலைக்கழித்தது.

ராசேந்திரனைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை. அவன் ஒரு சுகவாசி ஆனால் ஆபத்தில்லாதவன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவருடைய சம்மந்தி ரத்தினவேல் அப்படிப்பட்டவரல்ல.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் கரண்டியுடன் வந்து நின்ற ரத்தினவேல் அல்ல இன்று தனக்கு போட்டியாக நிற்கும் ரத்தினவேல். கரண்டி பிடித்து பழுப்பேறிப்போன அவருடைய கரங்களைப் போலவே பேராசை என்ற 'பழுப்பு' அவனுடைய இதயத்தைப் பிடித்திருப்பதை அவர் உணர்ந்துதானிருந்தார்.

'அய்யா மோகன்.. அவனுங்க ரெண்டு பேரையும் சமாளிச்சி அனுப்பிட்டோம்னு நினைச்சிறாதீங்க. அவனுக இப்ப அடிப்பட்ட புலிங்க.. முக்கியமா ரத்தினவேலு.. அவன் என்ன வேணும்னாலும் செய்ய துணிஞ்சி நிக்கறத பாக்க முடியுதுய்யா.. எதுக்கும் சாக்கிரதையாவே இருங்க.. எந்த எடத்துலருந்து எப்படி, என்னமாதிரியான தாக்குதல் வரும்னு சொல்ல முடியாதுய்யா.. பாத்துக்கிருங்க.. நம்ம ஆடிட்டர்கிட்டயும் சொல்லி வைங்க..'

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய அலுவலக மேலாளரை அழைத்து, 'காலையில ஃபோன் போட்டார்னு சொன்னீய இல்லய்யா, நம்ம மாப்பிள்ளை. அவர் மறுபடியும் போன் போட்டார்னா பொஸ்தகங்கள காட்ட முடியாதுன்னு ஒரேயடியா சொல்லிறாதீய்ங்க.. . இப்ப கைவசமில்ல.. ஆடிட்டர் கிட்ட போயிருக்கு.. இன்னும் ரெண்டு நா கழிச்சி போன் போடுங்கன்னு சொல்லி வைங்க.. என்ன வெளங்குதா?'

அவர் தலையை ஆட்டிய வேகத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். 'என்னத்த வெளங்குதோ போங்க.. சொல்லும்போது மண்டைய, மண்டைய ஆட்டிட்டு பெறவு குட்டைய கொளப்பிருங்க.. போய் நா சொன்னத மறந்துராம செய்ங்க.. போங்க..'

'இந்த நேரம் பார்த்து இந்த செல்வம் பய இல்லாம போய்ட்டானே.. ' என்றிருந்தது அவருக்கு. 'சரி வீட்டுக்கு போய் ராசம்மாக்கிட்டயும் சொல்லி வைப்போம்.. பொட்டப் பொண்ணுன்னாலும் அதுவும் வெவரமாத்தானே இருக்கு.' என்றவர் மணியைப் பார்த்தார். எட்டு மணி அடித்திருந்தது. 'எலேய் டிரைவர கார எடுக்கச் சொல்லு' என்றவாறு கிளம்பி வீடு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

வீட்டில் நுழைந்ததுமே ஹாலில் டி.விக்கு முன்னால் அமர்ந்திருந்த தன் மகளைப் பார்த்தார். 'என்ன புள்ள ஆச்சரியமா டி.வி. பொட்டி முன்னால ஒக்காந்திருக்கே?' என்றவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராய், 'ஓ பாம்பேல நடந்ததப்பத்தி சொல்றாங்களாக்கும்.. என்னத்த சொல்றது? நல்ல வேளையாலே.. நம்ம பிராஞ்ச் இருக்கற எடங்கள்ல ஒன்னுமில்லையாம்.. செல்வம் ஊர்லருந்தே ஃபோன் போட்டு கேட்டுட்டு சொன்னான். என்ன இருந்தாலும் செல்வம் இல்லாம கை ஒடஞ்சா மாதிரி இருக்கு ராசிம்மா.'

அவர் பேசுவதை ஒரு காதிலும் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து நிரூபர் பேசுவதை ஒரு காதிலும் கேட்பதில் கவனமாயிருந்த ராசம்மாள் சற்று நேரத்தில் தொலைக்காட்சி பெட்டியின் ஒலியைக் குறைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். 'ஒங்களுக்கு இந்த விஷயம் தெரியுமாப்பா?'

'எதச் சொல்றே.. அந்த பாம்ப் விஷயந்தானே.. அதான் முக்குக்கு முக்கு ரேடியோ அலறுதே.. அதானே நம்ம ஆஃபீஸ்லருந்து இங்கன வந்து சேர்றதுக்கே இன்னைக்கி ஒரு மணி நேரமாயிருக்கு.. '

'அதில்லப்பா..'

நாடார் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார். 'பின்னே.. வேற எதச் சொல்றே?'

'நம்ம பேங்கோட புது சேர்மன் இருக்காரில்ல அவரப்பத்தி.'

'என்ன சொல்றே.. அவருக்கென்ன? அவர் ஜாய்ன் பண்ணதப் பத்தி ஏதாச்சும் சொல்றாய்ங்களா என்ன?'

'அவர்னா.. அவரப்பத்தியில்ல.. அவர் பையனப் பத்தி.' என்ற ராசம்மாள் சற்று முன் தான் டிவியில் கேட்டதை விவரிக்க நாடார் கண்களை மூடியவாறு யோசனையில் ஆழ்ந்துப்போனார்.

'என்னப்பா என்ன யோசிக்கறீங்க?'

நாடார் பதிலளிக்காமல் தன் செல்ஃபோனை எடுத்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'எலேய் நாந்தாலே.. நீ ஒரு வேலை ச்செய்யி.. ஒடனே நம்ம தாதர் பிராஞ்சுக்கு போன் போட்டு நம்ம மேனேஜர நான் சொல்ற எடத்துக்கு போயி என்ன ஏதுன்னு கேட்டுக்கிட்டு எனக்கு போன் போடச் சொல்லு என்ன?.' என்றார். 'லேய்.. இது ரகசியமா இருக்கணும்.. அவனால முடியுமான்னு தெரியல.. ஏதாச்சும் முளிச்சான்னா நம்ம தாராவி ஆள கூப்டு..ஒனக்குத்தான் தெரியுமே.. என்ன செய்யணுமோ செய்யி.. ஆனா அடுத்த அரை மணிக்குள்ள.. அங்கத்து விஷயம் முழுசும் எனக்க வந்துரணும்.. என்ன ச்சரியா?'

'யார்ப்பா அது? செல்வமா?' என்ற மகளைப் பார்த்தார்.

'ஆமாம்மா.. அவனெ விட்டா இதுக்கு யார் இருக்கா?' என்றவர் தன் செல்ஃபோன் அடிப்பதைப் பார்த்தார். 'இவனுக்கு மூக்குல வேர்த்துருமே.. கரெக்டா கூப்டறான் பார்.' என்றவாறு தன் மகளைப் பார்த்து சிரித்தார். 'யார்.. டாக்டர் அங்கிள்தானெ.' என்றாள் ராசம்மாள் புன்னகையுடன்..

'சொல்லும்யா டாக்டரே.. என்ன விஷயம்?'

எதிர் முனையிலிருந்து வந்ததை பதில் பேசாமல் கேட்டு முடித்து, 'ச்சரிய்யா.. இப்ப என்ன செய்யலாம் அதச் சொல்லு.. போறவர் என்ன ஏதுன்னு தெரியாமலே போயிருக்கார். இதுல நம்மக்கிட்ட சொல்லாம போய்ட்டாரேன்னு சொல்றீரேய்யா.. புள்ள சமாச்சாரமாச்சே.. அதுவும் ஒரே பையன்னு கேள்வியாச்சே.. போய்ட்டு ஆற அமர வரட்டும்யா.. இப்ப என்ன குடியா முளுகிப் போயிருச்சி..' என்றவர் தொடர்ந்து, 'டாக்டரே அந்த சேதுப் பய சொல்றதையெல்லாம் நம்பாதீரும்.. அவன் ஒரு... அண்ணன் எப்பச் சாவான் திண்ண எப்ப காலியாவும்னு பாக்கற பய இல்ல.. மாட்டுக்கறி திங்கற பயலுவ.. அவனெ விட்டுத்தள்ளும்..' என்றார்.

'இல்லை நாடார்.. எனக்கென்னவோ மாதவன் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவார்னு தோனலை..டிவியில சொல்றத பார்த்தா அந்த பையன் இன்னும் போலீஸ் கஸ்டடியிலதான் இருக்காப்ல இருக்கு. ஒங்களுக்கு போலீஸ் விஷயம்லாம் தெரியுமில்லே.. அதனாலதான் சொல்றேன்....'

'நீர் சொல்றதும் சரியாத்தான் இருக்கு இல்லேங்கலே.. ஆனா அந்த சேதுவையெல்லாம் ஆக்ட்ங் சேர்மனாக்கறது நடக்காத காரியம்யா... கொஞ்சம் யோசிச்சித்தான் செய்யணும்..'

'எனக்கும் யோசனையாத்தான் இருக்கு நாடார் ஆனா இதுவரைக்கு சேது ரெண்டு தரம் போன் போட்டு என்னென்னவோ சொல்றாரே.. அந்த பையன் ஏற்கனவே ட்ரக் அடிக்டாமே?'

'என்னது.. என்னய்யா சொல்றீரு அப்படின்னா?' என்றவாறு மகளைப் பார்த்தார் நாடார். அவள் 'போதைப் பொருள் பழக்கம்ப்பா' என்றாள்

'யார் நாடார் பக்கத்துல பொண்ணா?'

'ஆமாம்யா.. இப்பல்லாம் நம்மளவிட அதுங்களுக்குத்தானே எல்லாம் தெரியுது.' என்றார். 'சரிய்யா.. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?'

சோமசுந்தரம் சிரித்தார். 'இங்கயும் அதேதான் நாடார்.. எப்படா அப்பா சீட்ட புடிச்சிக்கலாம்னு காத்துக்கிட்டுருக்கா ஒருத்தி. சரி அது இருக்கட்டும். இந்த பையனோட விஷயம் வெளிய நீயூஸ் பேப்பர்காரங்களுக்கு தெரிஞ்சிதுன்னு வைங்க அப்புறம் மாதவனால அவ்வளவு சீக்கிரமா திரும்பி வரமுடியாது.. அதான் யோசிக்கேன்.'

நாடார் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். முதலில் அந்த சேதுமாதவனின் முயற்சியை முறியடிக்க வேண்டும். 'இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு இந்த ஃபிலிப் ஏன் நமக்கு ஃபோனே பண்ணலை?'

'சரிய்யா.. நாம நாளைக்கு இதப்பத்தி பேசலாம்.. பத்து மணி போல நா ஒம்ம ஈஸ்ட் கோஸ்ட் பங்களாவுக்கு வரேன்.. நம்ம செட்டியாரையும் கூப்டுவோம்.. அவரும் நம்ம மேனேஜ்மெண்ட் கமிட்டி மெம்பர்தானே.. மத்தவன் எவனுந்தான் ஊர்ல இல்லையே..நாம பேசி முடிவு செஞ்சிட்டு அவன்க கிட்ட சொல்லிக்கிருவம்.. என்ன சொல்றீரு?' என்றவர் எதிர் முனனயில் ஒத்துக்கொண்டதும் இணைப்பைத் துண்டித்துவிட்டு உடனே ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணைச் சுழற்ற ஆரம்பிக்க, 'என்ன சொல்றார்ப்பா..?' என்ற மகளைப் பார்த்தார் 'ஒரு நிமிஷம்மா.. நம்ம ஃபிலிப் சார் கிட்ட பேசிட்டு முழுசும் சொல்றேன்.'

தொடரும்..

22.2.07

சூரியன் 178

சாதாரணமாக வந்தனா அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப இரவு எட்டு மணிக்கு மேலாகிவிடும்.

சோர்வுடன் வீடு வந்து சேர்ந்ததுமே முகம், கை, கால் கழுவிக்கொண்டு முதலி ஸ்டவ்வைப் பற்ற வைத்து சூடாக ஒரு ஸ்ட்ராங் காப்பியைக் குடித்துவிட்டு அன்றைய இரவு எட்டு மணி சன் நீயூசைப் பார்ப்பது வழக்கம். அதற்குப் பிறகு அன்று காலையில் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்தவற்றை எடுத்து மைக்ரோ வேவில் சூடாக்கி பேருக்கு கொறித்துவிட்டு குளித்து முடிப்பார்.

மீண்டும் படுக்கைக்குச் செல்லும் முன்பு ஆங்கிலச் செய்தி. தலைப்புச் செய்திகளை மட்டும் கேட்டால்தான் தூக்கம் வரும்..

இதுதான் வந்தனா மேடத்தின் டெய்லி ரொட்டீன்..

ஆனால் அது அலுவலகத்திற்கு செல்லும் நாட்களில்..

கடந்த மூன்று நாட்களாகத்தான் அவர் வீட்டிலேயே அடைந்துக்கிடக்கும்படி ஆகிப்போனதே..

இருப்பினும், 'ஒங்கள இங்கருந்து டிஸ்சார்ஜ் பண்றதே ஒங்க ஃப்ரெண்ட்ஸ் ஒங்கள பாத்துக்கறேன்னு சொன்னதாலத்தான்.. ஒங்க ப்ரெஷர் லெவல் மறுபடியும் நார்மலா வர்ற வரைக்கும் எந்த காரியத்துக்கும் எக்சைட் ஆகக் கூடாது.. இதுல எந்த எக்ஸ்க்யூசும் கிடையாது. அதனால நா சொல்ற வரைக்கும் டி.வி பக்கம் போகவே கூடாது.. பேப்பர் கூட படிக்காம இருந்தா நல்லது. இன்னைக்கி நாட்டுல நடக்கற விஷயங்களப்பத்தி தெரிஞ்சிக்காம இருக்கறதே நல்லது.. அதுவும் ஒங்கள மாதிரி ட்ரீட்மெண்ட்ல இருக்கறவங்களுக்கு.. புரியுதா? ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் லிக்விடா எதையாச்சும் சாப்ட்டுட்டு எட்டு மணிக்கெல்லாம் இந்த ஸ்லீப்பிங் டாப்ளட்ச போட்டுக்கிட்டு தூங்க போயிரணும்.. வர்ற ஒரு வாரத்துக்கு எவ்வளவு தூங்க முடியுமோ அவ்வளவு தூங்குங்க.. நா வேணாம்னு சொல்ற வரைக்கும் இந்த டாப்ளெட்ச யூஸ் பண்ணுங்க.. And don't worry about anything or anybody.. Am I clear? ' என்ற மருத்துவரின் ஆலோசனையை வேறு வழியின்றி கடைப்பிடிக்க வேண்டியிருந்ததால் வந்தனா அன்றும் இரவும் எட்டு மணிக்கே வந்தனாவை உறங்க வைத்துவிட்டுத்தான் இரவு சமையல் வேலையை கவனித்தாள் அவளுடன் தங்கியிருந்த நளினி.

அதுவும் நல்லதாய் போய்விட்டது என்று நினைத்தனர் இரவு எட்டு மணிக்கு NDTV செய்தியைக் கேட்ட நளினியும் நந்துவும். 'எந்தா நளினி இது.. மாதவன் சாரோட மகனா.. எனிக்கி விசுவசிக்கானே பற்றில்லா..' என்றான் நந்து டிவியிலிருந்த கண்ணெடுக்காமல்.

நளினி உதடுகளில் விரலை வைத்து எச்சரித்தாள். 'நந்து மெதுவா.. மேடம் முளிச்சிக்கப் போறாங்க.. சார் வந்து சார்ஜ் எடுத்த நேரம் சரியில்லையா இல்ல நம்ம பேங்குக்குத்தான் போறாத காலமா? இப்ப என்ன பண்ணுவாங்க?'

நந்தக்குமார் குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தான். 'யார சொல்ற? சேர்மனையா?'

'இல்லீங்க. இந்த பையனத்தான் சொல்றேன்.. அவந்தான் போலீசுக்கு ஃபோன் பண்ணான்னு சொல்றாங்க. ஆனா எப்படி? ஃபோன் பண்ணியா? அது ஒரு பெரிய குத்தமா? எங்கயாவது யாராவது பேசிக்கிட்டிருந்தத கேட்டிருப்பான். ஒடனே நல்ல பிள்ளையாட்டம் பொறுப்பா போலீசுக்கு ஃபோன் பண்ணியிருப்பான்... அது ஒரு பெரிய குத்தமா?'

நந்தக்குமார் டிவியை அணைத்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தான். 'குத்தமில்லதான். ஆனா அப்படி சொன்னா போலீஸ் நம்பணுமே.. அந்த பையனும் அந்த டெரரிஸ்ட் கேங்க்ல ஒருத்தன்னுதான் போலீஸ் நினைக்கும்.. அதான் நடக்குது. இதுல சம்பந்தப்பட்டிருக்கற பையன நமக்கு தெரியுங்கறதுனால நாம இதுல இவன் சம்பந்தப்பட்டிருக்க மாட்டான்னு நினைக்கறோம்.. ஆனா போலீசுக்கு இவனும் ஒரு கல்ப்ர்ட்ங்கற எண்ணம்தான் இருக்கும்.. என்ன பண்றது.. இவன் என்பேர்ல எந்த குத்தமும் இல்லேன்னு நிரூபிக்கணும்.. அதுவரைக்கும் கஸ்டடியிலருந்து தப்பிக்க முடியாதுன்னு நினைக்கேன். இதுல நம்ம சார் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்ங்கறது இனிமேத்தான் தெரியும்.. சாரும் அவங்க ஃபேமிலியும் திடீர்னு மும்பை கெளம்பி போயிருக்காங்கன்னு நா முரளிய பாத்துட்டு திரும்பி வந்துக்கிட்டிருக்கறப்பத்தான் கேள்விப்பட்டேன். அப்போ என்ன ஏதுன்னு தெரியலை.. இதப்பத்தி கேட்டுட்டுத்தான் போயிருக்கார் போலருக்கு.. அவ்வளவு சீக்கிரம் அவர் திரும்பி வருவார்னு எனக்கு தோனலை.. சரி வா சாப்ட்டு படுப்போம்.. நாளைக்கு காலைல என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. நீ வந்தனா மேடத்துக்கிட்ட எதையும் சொல்லிராத.. என்ன?'

நளினியும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றாள். 'இதுல நம்ம விஷயமும் சிக்கலாயிரும் போலருக்கே.'

நந்தக்குமார் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். 'நம்ம விஷயமா? அப்படீன்னா?'

'என்னங்க நீங்க.. இந்த கன்ஃப்யூஷன்ல நம்ம டிரான்ஸ்ஃபர பத்தி யார் கவலைப்படப் போறா?'

'ஓ அதுவா? அது நடக்கறப்போ நடக்கட்டும்.. அதுவுமில்லாம நா இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் முரளி ஃபோன் பண்ணான்.' என்றவாறு நந்தனா படுத்திருந்த அறை மூடியிருக்கிறதா என்று பார்த்தார்.

'என்னங்க? என்ன புதிர் போடறீங்க?'

நந்தக்குமார் நளினியை அருகில் வருமாறு கூறினான். 'நம்ம மாணிக்கவேல் சார் இருக்காரில்லே?'

'ஆமாம். அவருக்கென்ன?'

'குறுக்கே பேசாம பொறுமையா கேளு. இன்னைக்கி காலைல அவரோட அப்பாவ அவரே கொலை பண்ணிட்டாராம்.'

நளினி தன்னையுமறியாமல் உரக்க 'ஐயையோ.. என்னங்க.. குண்ட தூக்கிப் போடறீங்க?' என்றாள்.

'ஏய்.. ஏய்.. சத்தம் போடாத.. மேடத்துக்கு மட்டும் கேட்டுது வேற வெனையே வேணாம்.. இதுக்குத்தான் ஒங்கிட்ட சொல்லாம இருந்தேன்..'

'சரி.. சரி.. கத்தலை.. சொல்லுங்க.. சாரும் அவங்கப்பாவும் ரொம்ப க்ளோஸ்னு கேள்விப்பட்டிருக்கேனேங்க.. நாம வீட்டுக்கு போயிருந்தப்போ கூட என் அப்பாவப்பத்தித்தான் கவலையாருக்குன்னுல்லாம் சொன்னாரேங்க?'

'உண்மைதான்.. ஆனா அவரோட ஒய்ஃபே போலீஸ்ல இந்த மாதிரி ஸ்டேண்ட்மெண்ட் குடுத்துருக்காங்களாமே..?'

நளினி நம்பமுடியாமல் நந்துவையே பார்த்தாள். 'எனக்கென்னமோ அந்த மேடம் மேலயே சந்தேகமாருக்கு நந்து. நாம போன அன்னைக்குக்கூட அவங்க மேல எனக்கு பச்சாதபமே வரல.. சாரையும் அவரோட சன் இருக்காரே அவரையும் பார்த்தப்போ மனசுல ஏற்பட்ட துக்கம் அந்த மேடத்த பார்த்தப்போ வரல.. ஏன்னு தெரியலை.. ஆனா அதான் உண்மை..'

நந்து வியப்புடன் அவளைப் பார்த்தான். 'ஏன் அப்படி சொல்றே?'

நளினி மலையாளிகளுக்கே உரிய பாணியில் தோள்களை குலுக்கினாள். 'ஏன்னு சொல்ல முடியல.. ஆனா.. அப்படியொரு ஃபீலிங்.. சாரோட அப்பா கொலையில கூட எனக்கு அந்தம்மா மேலதான் சந்தேகப்பட வைக்கிது. அதுவும் அந்தம்மாவே சார் மேல குத்தம் சொல்றத பார்த்தா.. சார் ரொம்ப பாவம்க.. ஒரே வாரத்துல மகளையும் அளவுக்கதிகமா நேசிச்ச அப்பாவையும் இழந்து.. ச்சே.. நாம என்னமோ நமக்கு நடந்தத பெரிசா நினைச்சிக்கிட்டிருக்கோம்..' என்றவள் நந்தக்குமாரை நெருங்கி வந்து, 'நந்து இது வந்தனா மேடத்துக்கு நாளைக்கொரு நா தெரிய வந்தா நம்ம ரெண்டு பேரையும் தப்பா நெனைக்க மாட்டாங்களா?' என்றாள்.

'நீ சொல்றதும் சரிதான். ஆனா அவங்க இப்ப இருக்கற நிலையில எப்படி நளினி..? அப்புறம் அவங்களுக்கு மறுபடியும் ஏதாவது ஆயிருச்சின்னா? வேணாம்.. இப்போதைக்கு அவங்களுக்கு தெரிய வேணாம்.. நீயும் ரெண்டு மூனு நாளைக்கு டி.விய போடாத.. பார்ப்போம்.. நல்லதா முடிஞ்சா சொல்லலாம்..'

நளினி அப்போதும் தயங்கினாள். 'இருந்தாலும் மாணிக்கவேல் சாரோட அப்பா இறந்தத.. எப்படீங்க?'

நந்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று தோன்றினாலும்... 'இல்ல நளினி.. இப்ப வேணாம்.. அப்புறம் பாக்கலாம்.. நீ போ.. ஊண் எந்தெங்கிலும் இண்டாக்கிட்டுண்டோ..' என்றான் பேச்சை மாற்றி..

நளினிக்கும் அவனுடைய யுக்தி புரிந்தது.. என்ன இருந்தாலும்.. இந்த சென்னை விஜயம் தனக்கும் நந்துக்கும் இடையிலிருந்து தூரத்தை வெகுவாக குறைத்திருந்ததை நினைத்துப் பார்த்தாள். மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பரவ.. 'அதே நந்து.. இதோ ஒரு மினிட்டு.. விளம்பாம்..(பரிமாறுகிறேன்).. நந்து ட்ரெஸ் சேஞ்ச் செய்துட்டு வா.. பொக்கோ..’

தொடரும்

21.2.07

சூரியன் 177

ஜோவும் மாணிக்கவேலுவுடன் அன்று வீடு திரும்பியபோது இரவு பத்து மணியைக் கடந்திருந்தது.

ராணியின் உடலைப் பெற்றுக்கொண்டு முதலில் வீடு திரும்பிய ஜோ வீட்டு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் 'சார் கொஞ்சம் காத்திருக்கணுமே.' என்றான் சோர்வுடன். 'ஒங்க கஷ்டம் புரியுது சார்.. ஒரெ நேரத்துல ஒரே வீட்டுல ரெண்டு சாவுங்கறது.. என்னதான் தினம் தினம் இதையே நாங்க பாத்துக்கிட்டிருந்தாலும் ஒரு உயிர்ங்கறது உயிருதான சார்.. நீங்க கவலைப்படாதீங்க.. அவர் வரும்போது வரட்டும்.. காத்திருக்கேன்.' என்ற ஒட்டுனரைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தான் ஜோ. பொருளாதாரத்தில் நலிந்தவன் இன்னும் மனிதனாகவேதான் இருக்கிறான். நம்மளப் போல நடுத்தர வர்க்கந்தான் நாளுக்கொரு வேஷத்த போட்டுக்கிட்டு.. சொந்தங்களையே நம்பாம..

மாணிக்கவேல் அவருடைய தந்தையின் உடலுடன் சென்னை பொது மருத்துவமனையிலிருந்து வரும்வரை ஆம்புலன்சிலேயே அமர்ந்திருக்கவிரும்பாமல் வெளியில் இறங்கி நின்றான்.

அன்று மாலை நான்கு ஐந்து மணியிலிருந்து துவங்கிய போராட்டம்.. மாணிக்கவேலின் தந்தை மற்றும் அவருடைய மனைவியின் உடல்களைப் பெற்றுக்கொள்ளத்தான் என்ன பாடுபடவேண்டியிருந்தது.

விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரானி மரணமடைந்த செய்தி ஒருபுறம் வேதனையை அளித்தாலும் அவர் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் மாணிக்கவேலுவை விடுவித்துவிட்டு சென்றார் என்பதைக் கேட்டதும் ஜோவுக்கு நிம்மதியாய் இருந்தது. காவல்நிலையத்திலிருந்து ராணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான் வழக்கறிஞர் சபரியுடன். செல்லும் வழியில், 'சார் நீங்க மட்டும் இன்னைக்கி வரலைன்னா நா என்ன செஞ்சிருப்பேன்னே தெரியல. எனக்கு வந்த ஆத்திரத்துல நான் எதையாவது முட்டாத்தனமா செஞ்சி மாட்டிக்கிட்டிருப்பேன். நீங்க நாள் முழுசும் இதுக்காகவே அலைஞ்சிருக்கீங்க. ரொம்ப தாங்ஸ் சார்.' என்றான்.

'சேச்சே. என்ன ஜோ நீங்க..இது எங்க தினசரி வேலை.. எல்லா கேசும் இந்த மாதிரி ஈசியா முடிஞ்சிராது.. சில நேரங்கள்ல வாரக் கணக்குல இழுத்தடிக்கும்.. எப்படியோ செய்யாத தப்புக்கு ஒரு நா முழுக்க ஸ்டேஷன்ல இருக்க வேண்டி வந்துதே அவருக்கு எப்படி இருந்திருக்கும்.. God is greatன்னு சும்மாவா சொன்னாங்க? மேற்கொண்டு எங்க ஹெல்ப் எப்ப வேணும்னாலும் ஆஃபீசுக்கு வாங்க ஜோ.'

'தாங்யூ சார்..' என்ற ஜோ. 'சார் என்னெ ஹாஸ்ப்ட்ல இறக்கி விட்டுட்டு நீங்க இந்த கார்லயே ஒங்க ஆஃபீசுக்கு போயிருங்க. எப்படியிருந்தாலும் எனக்கு ஒடனே கார் தேவைப்படாது. சாரோட அப்பாவும் இறந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. ஜி.எச். மார்ச்சுவரியிலதான் இருக்காம். எங்க சார் போனாத்தான் ரிலீஸ் பண்ண முடியும். இங்கயும் ராணி மேடத்தோட பாடிய எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சி ரிலீஸ் பண்றதுக்கு எப்படியும் ராத்திரியாயிடும்னு நினைக்கேன். அதனால நீங்க ஆஃபீசுக்கு போய்ட்டு திருப்பியனுப்புனா போறும்.' என்றான் தொடர்ந்து.

சபரியும் சரியென்று தலையை அசைத்தார். 'இங்க ஏதாச்சும் எங்க ஹெல்ப் வேண்டியிருக்குமா ஜோ?'

'தெரியல சார். நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் சார பார்த்து பேசிட்டு போயிருங்களேன். சாருக்கு எதுவும் ஒங்கக்கிட்ட சொல்ல இருக்குமோ என்னவோ?'

'அதுவும் சரிதான்...' என்ற சபரி வாகனம் மருத்துவமனையை அடைந்ததும் ஜோவுடன் இறங்கி வரவேற்பறையில் சோர்வுடன் அமர்ந்திருந்த மாணிக்கவேலுடன் சிறிது நேரம் பேசினார்.

'ஒங்களுக்கு நேர்ந்த இந்த சிக்கலுக்கு ரொம்ப வருந்தறேன் மிஸ்டர் மாணிக்கவேல்.. ஒங்கள மாதிர் ஆளுங்களயும் இந்த போலீஸ் ஒரு கன்விக்ட் மாதிரி ட்ரீட் பண்ணது ரொம்ப கஷ்டமாருந்தது. ஆனா என்ன பண்றது சட்டத்துக்குத்தான் கண்ணே இல்லையே.. எங்களுக்கு இது சகஜமா போயிருச்சி.. ஆனா நீங்கதான் பாவம்.. I am really sorry for what happened.'

மாணிக்கவேல் ஒரு வறட்டு புன்னகையுடன் சபரியைப் பார்த்தார். 'அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க சார். எங்களால ஒங்களுக்குத்தான் ஒரு நா முழுக்க வேஸ்ட். ஒங்க ஹெல்புக்கு ரொம்ப தாங்ஸ் மிஸ்டர் சபரி.. இங்க எல்லாம் ஃபார்மாலிட்டியும் முடிஞ்சதுக்கப்புறந்தான் பாடிய தருவேன்னு சொல்லிட்டாங்க.. நான் கையெழுத்து போட்டு குடுத்துட்டேன்.. இனி ஜோ இங்கருந்து பாத்துக்குவார். ராணியோட கார்ட் ஃபாதர் பொறுப்பிலருக்கற மதருக்கும், சர்ச் ஃபாதருக்கும் இன்ஃபர்மேஷன் குடுக்கணும். நான் நேர்ல போறதுதான் நல்லது. அதனால நானும் ஒங்களோடயே வந்து ஒங்கள ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு அங்க போய்ட்டு அப்படியே ஜி.எச். சுக்கு போறேன்.' தனக்கு நேர்ந்த பெரும் இழப்புகளை மிக எளிதாக தாங்கிக்கொண்டு பேசியவரை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார் சபரி..

'இல்ல சார்.. நா வேணும்னா ஒரு ஆட்டோவுல போய்க்கறேன்.. You carry on..' என்றார்.

'நோ.. நோ.. That's not fair.. இன்னைக்கி நாள் முழுசும் எங்களுக்காக போராடியிருக்கீங்க.. நீங்க வாங்க.. Don't worry about me.. I've already accepted what God has destined for me.. þôÀ நா செய்ய வேண்டியதெல்லாம் வெறும் ஃபார்மாலிட்டீஸ் மட்டுந்தான்.. ஒரு பக்கம் அப்பா.. ஒரு பக்கம் மனைவி.. சம்பிரதாயமா ஒருத்தர எரிக்கணும். ஒருத்தர அடக்கம் பண்ணணும்.. இனி என்ன கவலைப்பட்டாலும் போனவங்க திரும்பி வரப்போறதில்லையே.. இப்ப என் கவலையெல்லாம் ஹாஸ்பிட்டல்லருக்கற என் மகன்.. எனக்குன்னு உலகத்துலருக்கற ஒரே பந்தம், அவன பத்தித்தான்.. Before that I've got to discharge my duties as a son, as a husband.. That's all. Come.. I'll drop you at your office.. வரேன் ஜோ.. ஆம்புலன்சுக்கும் நா பணம் கட்டிட்டேன்... நீங்க ராணியோட பாடியோட வீட்டுக்குப் போயிருங்க. நா ஜி.எச்ல வேல முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடறேன். வீட்டு சாவி என் கிட்ட இல்ல.. போலீஸ் ஸ்டேஷன்லயே இருக்கு போலருக்கு.. ஒடச்சித்தான் தொறக்கணும்.. நீங்க மொதல்ல போனீங்கன்னா.. பக்கத்துல யாரையாவது வச்சி தொறக்கப் பாருங்க..இல்லன்னா நா வந்ததும் பாத்துக்கலாம்..'

உயிருக்குயிராய் அவர் நேசித்த தந்தையின் இழப்பை இத்தனை சாதாரணமாக ஒரு மகனால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற வியப்பில் மலைத்துப்போய் சபரியின் தோள்களைச் சுற்றி கையிட்டவாறு வாகனத்தை நோக்கி நடந்தவரைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஜோ..

***

மாணிக்கவேல் பூட்டு என்ற சொன்னது நினைவுக்கு வர ஜோ வாசற்கதவைப் பார்த்தான். பிறகு அருகில் சென்று இழுத்துப் பார்த்தான். நல்லவேளையாக கோத்ரெஜ் பூட்டு இல்லை. ஒரே கல்லில் திறந்துவிடலாம் என்று நினைத்தவன் அருகில் ஏதாவது கல் கிடக்கிறதா என்று பார்த்தான். 'சார்.. நீங்க தள்ளுங்க.. என் வண்டியிலருக்கற ஸ்பானரால ஒரு போடு போட்டா தொறந்துக்கும்.' என்றவாறு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அடுத்த சில நொடிகளில் பூட்டை உடைக்க ஜோ ஹாலுக்குள் நுழைந்து வாசல் விளக்கு மற்றும் ஹால் விளக்கு சுவிட்ச்களை போட்டான்.

ஹாலில் நடுநாயகமாக கமலியை கிடத்தி வைத்திருந்த மேசை மெழுகு திரிகளுடன் வெள்ளைத் துணியை போர்த்திக்கொண்டு கிடந்ததைப் பார்த்தான். அவனையுமறியாமல் கண்கள் கலங்கின.. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் சாருடைய வாழ்க்கையே தலைகீழாய் போய்விட்டதே என்ன கொடுமை இது. இந்து மதத்தை தழுவியவரானாலும் ஒரு கிறிஸ்த்துவ குடும்பத்தில் வளர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் தன்னுடைய வாழ்வில் வசந்தம் வரும், தன்னுடைய பெற்றோர்களை தன்னுடைய சகோதரர்களின் மனைவியரைப் போலல்லாமல் பாசத்துடன் பார்த்துக்கொள்வாள் என்று எத்தனை நம்பிக்கையுடன் அவர் ராணி மேடத்தை திருமணம் புரிந்திருப்பார்.

ஒரு உண்மையான கிறிஸ்த்துவ குடும்பத்தலைவரைப் போலவே தன் மனைவி மற்றும் மக்களுடன் ஞாயிறு தவறாமல் கோவிலுக்கு வருவாரே.. அவரையா இந்த கடவுள் இத்தனை இன்னல்களுக்கு ஆளாக்கினார். என்ன கடவுளோ.. என்ன விசுவாசமோ..

இறைவன் யாரை மிகவும் அதிகமாக நேசிக்கிறாரோ அவரைத்தான் பெருந்துன்பங்களுக்கு ஆளாக்குவார் என்ற மறைநூல் வாசகத்தை நினைவுகூர்ந்தான்.. அதற்காக இப்படியா.. ஒரே வாரத்தில் அவர் மிகவும் நேசித்த இருவருடைய உயிரை எடுத்துக்கொள்வது? எந்த ஊர் நியாயம் இது? சரி.. அது போறாதென்று கொலைக் குற்றம்.. அதுவும் யாரால்? சொந்த மனைவியால்.. அதுவும் போறாததற்கு சாருக்கு மிச்சமிருந்த ஒரே மகனை அரைகுறை பைத்தியமாக்கி.. ச்சே.. நம்ம எதிரிக்கும் வரக் கூடாது இந்த கொடுமை.. இத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி அவரால் இவ்வளவு தெளிவாக சிந்திக்க முடிகிறது? ஒரு நாள் முழுக்க ஒரு கொலை காரனைப் போல் கேவலப்படுத்த பட்டாரே.. எந்த ஒரு கோபமோ.. விரக்தியோ.. எத்தனை அற்புதமான மனிதர் அவர்!

நம்மால் அந்த வயதில் அப்படியிருக்க முடியுமா? சட்டென்று நினைவுக்கு வர செல் ஃபோனை எடுத்து தன் மனைவியை அழைத்தான். எதிர்முனையில் மனைவியின் குரல், 'என்னங்க.. காலையில போனீங்க.. ஒரு ஃபோனாவது பண்ணக் கூடாது? என்னன்னு நினைக்கிறது? இப்ப எங்க இருக்கீங்க?'

'சாரிம்மா.. காலையிலருந்து ஒரே அலைச்சல்.. ஒங்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு நடந்து போச்சி..' என்று துவங்கி அன்று நாள் முழுவதும் நடந்தவற்றையெல்லாம் கடகடவென சொல்லி முடித்தான். 'ஐயையோ.. பாவங்க சாரி.. நல்லவேளை நீங்க கூடவே இருந்தீங்க.. சரி.. இன்னைக்கி வருவீங்களா இல்ல காலையிலதானா?'

'சார் வந்தப்புறம்தான் சொல்ல முடியும்.. அவர தனியா விட்டுப்போட்டு எப்படிப்பா வர்றது? சென்னையிலருக்கற தம்பிங்களுக்கே இந்த விஷயம் தெரியாது போலருக்கு.. அப்புறம் ஊர்லருக்கறவங்க வேற.. ஏற்கனவே கமலியோட சாவுக்கு வந்துட்டு இப்பத்தான் ஊர் போய் சேர்ந்திருப்பாங்க. ஹும் என்ன பண்றது.. சாருக்கு நடந்தா மாதிரி யாருக்கு நடந்திருக்கு..; என்றவன் வாசலில் நுழைந்த ஆம்புலன்சைப் பார்த்ததும், 'சரிம்மா. சார் வந்துட்டார். நா அப்புறம் கூப்பிடறேன்.' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை நோக்கி ஓடினான்.

தொடரும்..

16.2.07

சூரியன் 176

'டேய் சீனி.. வாசல்ல யாரோ வந்து பெல்லடிக்கறாளே.. என்ன செய்யறது?'

கடந்த சில மணி நேரங்களாக தன்னுடைய படுக்கையறைக்குள் அடைந்துக் கிடந்த சீனிவாசன், 'என்னமும் பண்ணுங்கோ மாமி.. எனக்கு இப்போ வெளிய வர்ற மூடில்லை.' என்றான்.

சிவகாமி என்ன செய்யலாம் என்று ஒரு நொடி ஆலோசித்தாள். ஹாலின் மறுகோடியிலிருந்த சன்னல் வழியாக வாசலைப் பார்த்தாள். முன் கேட் இன்னமும் மூடியேத்தான் இருந்தது. ஆனால் வாசலில் நின்றிருந்த கும்பல் கலைந்து செல்வதாயில்லை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் காலையில் அலுவலகம் சென்றிருந்த வாகனங்கள் ஒவ்வொன்றாய் திரும்பி வர துவங்கும். இவர்கள் கேட்கும் கேள்விகளைத் தவிர்க்க முடியாமல் அவர்கள் திண்டாடக்கூடிய வாய்ப்புள்ளதென்று நினைத்தாள்.

வாசலில் விடாது மணியோசை கேட்கவே வேறு வழியில்லாமல் சென்று கதவைத் திறந்தாள். மாதவனுடன் பணியாற்றிய உயர் அதிகாரி. தமிழர். சுந்தரராஜன். அதே குடியிருப்பில் குடியிருப்பவர். தமிழ்நாடு அதுவும் சென்னையைச் சேர்ந்த ஐயங்கார். சற்று முன்னர்தான் அவருடைய வாகனம் வளாகத்திற்குள் நுழைந்ததையும் வாசலில் குழுமியிருந்த கூட்டத்துடன் கோபத்துடன் பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்திருந்தாள். இவர் வேறு என்ன சொல்லப் போகிறாரோ என்ற நினைப்பில், 'வாங்கோ.. என்ன வேணுமாம் அவாளுக்கு?' என்றாள் பொதுவாக.

'என்ன மாமி இது இப்படி சர்வசாதாரணமா கேக்கறேள்.. ப்ரெஸ் காரா என்னென்னமோ சொல்றாளே.. ஊர் கிடக்கற நிலைமையில இவன் பேர்லருக்கற இந்த பொல்லாப்புக்கு பதில் சொல்லணுமே. இப்படி உள்ளயே அடைஞ்சி கிடந்தா இதுக்கு என்னதான் வழி? அவ கேக்கற கேள்விக்கு பதில் சொல்லிட்டு வந்துர வேண்டியதுதானே.. இல்லன்னா அவாளா ஏதாச்சும் கதைய கட்டிருவா. அப்புறம் அவஸ்தை அவனுக்கு மட்டுமில்லை.. நாம எல்லாருக்குந்தான். இந்த நியூஸ் சிவசேனாவுக்கு மட்டும் தெரிஞ்சிதுன்னு வச்சுக்குங்கோ.. இந்த பில்டிங்கையே நாசம் பண்ணிருவா.. போலீச கூப்ட்டா கூட வருவாளோ மாட்டாளோ.. அவனெ செத்த கூப்டுங்கோ.' என்றவாறு அவர் சுதந்திரமாக வீட்டிற்குள் நுழைந்து சீனிவாசனின் அறைக்கதவைத் தட்டினார்.

சிவகாமி வேறுவழியில்லாமல் வாசற்கதவை மூடி தாளிட்டுவிட்டு சீனிவாசனின் அறையை நெருங்கினாள். 'டேய் சீனி.. செத்த வெளியில வாயேன். பக்கத்து ஃப்ளாட் மாமா வந்திருக்கார்றா.. வந்து பேசேன்..'

'மாமி நீங்க போயி சூடா ஒரு காப்பி போட்டு கொண்டாங்கோ.. இவனாண்ட நா பேசிக்கறேன்.'

'சரி' என்றவாறு சிவகாமி சமையலறையை நோக்கி நடக்க சுந்தரராஜன் சீனிவாசனின் கதவை தட்டியவாறு நின்றார். 'சீனி.. பயப்படாம வெளிய வாயேன். ஒன்னெ போலீஸ் அழைச்சிண்டு போனாள்னு சொல்றாளேடா.. என்ன விஷயம்னு எங்கிட்ட சொல்லு.. அவாள நா பாத்துக்கறேன்..'

ஒரு சில நிமிடங்கள் கழித்து கட்டைகளை ஊன்றியவாறு காலில் கட்டுடன் வெளியில் வந்தவனைப் பார்த்ததும் ஓரடி பின்வாங்கினார் ராஜன். 'என்னடாயிது கட்டு.. சொல்லவேயில்லையே.. எப்ப ஆச்சிது இது? இத்தோடயா ஒன்னெ போலீஸ் வந்து கூப்ட்டுண்டு போனா?'

சீனிவாசன் அசிரத்தையுடன் தலையை அசைத்தவாறு தட்டுத் தடுமாறி ஹாலுக்குள் நுழைந்து தெருவோர சன்னல் வழியாக வாசலில் கேட்டருகே நின்றிருந்த கும்பலைப் பார்த்தான். பிறகு திரும்பி அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த தன் தந்தையின் சிநேகிதரைப் பார்த்தான்.

சுந்தரராஜன் அவனை நெருங்கி அவனருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். 'என்னடா சீனி.. என்ன நடந்துதுன்னு சொல்லேன். நோக்கு அவாள பாக்க விருப்பமில்லையா.. எங்கிட்ட சொல்லு நா பேசி அனுப்பறேன்.. இல்லன்னா அவா போமாட்டாளேடா?'

'என்ன சொல்லணுங்கறீங்க அங்கிள்?' என்றான் சீனி சலிப்புடன். 'காலைல திபுதிபுன்னு நாலஞ்சு போலீஸ் வந்தாங்க. என்ன ஏதுன்னு கேக்கவிடல. ஜீப்ல ஏத்திக்கிட்டு போனாங்க. அப்புறம் அங்க நம்ம டி.ஜி.பி ரெபைரோ வந்தார். அடுத்த நிமிசமே இந்த பையனுக்கு அதுல எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னார். அப்புறம் ஒன்னோட ஃபோன எப்ப தொலைச்சேன்னு அவராவே கேட்டார். நான் சொன்னேன்.. அவர் அத வச்சித்தான் அந்த கும்பல் போலீசுக்கு இன்ஃபர்மேஷன் குடுத்துருக்குன்னு சொல்லிட்டு இவனெ கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு அவன் ஃபோனோட IMIE நம்பர மட்டும் வாங்கியாங்கோன்னு சொன்னார். ஆனால் மத்த போலீஸ் ஆஃபீசர்ங்களுக்கு என்னெ விடறதுல இஷ்டமில்லேங்கறது நல்லாவே தெரிஞ்சது. வீட்டுக்கு வர்ற வழியில எங்கிட்ட என்னென்னவோ கேட்டாங்க... நீ தாதர்ல விழுந்தேங்கறே.. அங்கயே நிறைய க்ளினிக் இருக்கறப்போ செம்பூர்லருக்கற அந்த டாக்டர்கிட்ட ஏன் போனே, நீ தனியா போனியா இல்ல யாராச்சும் ஒன்னெ கூப்ட்டுக்கிட்டு போனாங்களான்னு என்னென்னவோ சம்பந்தமில்லாத கேள்விங்கல்லாம் கேட்டுட்டு நா சொன்னத எழுதிக்கிட்டாங்க.. அப்புறம் என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு என் செல்ஃபோன் ஐ.டி நம்பர வாங்கிட்டு போய்ட்டாங்க.. இதான் நடந்தது.. என் பேர்ல சந்தேகமில்லேங்கறா மாதிரி வீட்ல கொண்டு வந்து விட்டுட்டதுக்கப்புறம் ப்ரெஸ் ப்யூப்பிளுக்கு யார் சொன்னான்னுதான் தெரியல.. இப்ப இவங்களுக்கு நா எதுக்கு அங்கிள் பதில் சொல்லணும்.. என்ன இருக்கு இவங்ககிட்ட பேசறதுக்கு? அத்தோட எப்படியோ எங்க வீட்டு நம்பரும் தெரிஞ்சிக்கிட்டாங்க.. அப்பத்துலருந்து போன் அடிச்சிக்கிட்டே இருக்கு.. ரெண்டு மூனுதரம் எடுத்தேன்.. நீ இன்னைக்கி ராத்திரியோட க்ளோஸ்னுல்லாம் எவனெவனோ மிரட்டுறான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் அங்கிள் ரூமுக்குள்ளயே அடைஞ்சி கிடக்கேன்.. அப்பாவுக்கும் அம்மாவுக்கு இது மட்டும் தெரிஞ்சா..' என கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்தான் சீனிவாசன்.

ராஜனுக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. மாதவனுக்கு இப்படியொரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். ரெண்டு வருசத்துக்கு முன்னால இவன் ட்ரக்சுக்கு அடிக்டாயி இவனால குடும்பமே ரெண்டா போற அளவுக்கு வந்துதே.. எப்படியோ அதுலருந்து தப்பிச்சான்.. மறுபடியும் எங்க அந்த ஃப்ரெண்ட்சோட சேர்ந்து கெட்டுப்போயிருவானோன்னு நினைச்சித்தான் மும்பைய விட்டே போயிரலாம்னு மாதவன் நினைச்சார். ஆனா அதுவும் இப்ப நடக்காதுங்கற மாதிரி பண்ணிட்டு வந்து நிக்கறான்.. மாதவனுக்கு இன்னும் தெரியாது போலருக்கே?

'இப்பத்தான் நானும் ஆஃபீஸ்லருந்து வந்தேன். என்னாண்ட அவா கேட்ட கேள்வியிலருந்துதான் நேக்கு ஒன் விஷயமே தெரிஞ்சிது. சொல்லு. ஒனக்கு அவாள ஃபேஸ் பண்ண தைரியம் இருக்கா. Can you handle their questions Seeni?'

சீனிவாசன் தன்னால் இயலாது என்பதை சைகையால் தெரிவித்துவிட்டு எழுந்து நின்றான். 'தப்பா நினைச்சிக்காதீங்க அங்கிள். அவங்க எப்படியெல்லாம் கேள்வி கேட்டு மடக்குவாங்கறதத்தான் டி.வியில பாக்கறமே.. I am fed up.. really fed up. நான் என்னோட செல் ஃபோன தொலைச்சத தவிர வேறெந்த தப்பையும் செய்யல. I don't think I need to explain that to those people. Let them wait.. I don't simply care. If you want to tell them this.. that's left to you. Sorry Uncle.. I would like to take some rest.. அப்பாவோடயே நானும் போயிருந்தேன்னா இந்த பிரச்சினையில சிக்கியிருக்க மாட்டேன்.. இப்போ நா நெனச்சாலும் போக முடியாது போலருக்கு.. You should not leave Mumbaiன்னு டி.ஜி.பியே சொல்லிட்டார்.. What do you expect me to do? I am just stuck up in this damned place.. It's like hell.. I was never pushed into this kind of mess.. I am tired.. damned tired..'

தட்டுத்தடுமாறியவாறு தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்தியவனை தடுக்க மனமில்லாமல் சிறிது நேரம் இருக்கையிலேயே அமர்ந்திருந்த சுந்தரராஜன் மெள்ள எழுந்து காப்பிக் கோப்பையுடன் நின்றிருந்த சிவகாமியைப் பார்த்தார். 'இவனெ பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு. அவன் சொல்றதும் சரிதான். இவா ஒரு வல்ச்சர்ஸ் மாதிரி. என்ன செய்வான்னே சொல்ல முடியாது. சரி.. அவாள அவாய்ட் பண்ணாலும் தப்பாச்சே.. எதையாச்சும் சொல்லி அனுப்ப பாக்கேன். வரேன் மாமி, இந்த காப்பிய கொண்டு அவன்கிட்ட கொடுங்கோ..'

அவர் வாசலை நோக்கி நடக்க உடனே தொலைபேசி அலறியது. சிவகாமி மாமி அதை பொருட்படுத்தாமல் காப்பி கோப்பையுடன் சீனியின் அறையை நோக்கி நடக்கலானாள்.

******
'ச்சே.. எதுக்கு எடுக்க மாட்டேங்கறான்? மாமி இருப்பாளே.. அவளாவது எடுக்கப்படாதா?' சலிப்புடன் செல்போனை அணைத்து சோபாவில் எறிந்தாள் மைதிலி.

அவளையே கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் பெற்றோரை வெறுப்புடன் பார்த்தாள்.

'இப்ப திருப்தியா ஒங்க ரெண்டு பேருக்கும்? அங்க தன்னந்தனியா என்ன பண்றதுன்னு தெரியாம ரூமுக்குள்ளயே முடங்கிக் கிடக்கான் போலருக்கு. இத்தன நாள் பழகுன பழக்கத்துக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்டேளேப்பா.' மேற்கொண்டு பேச முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழும் மகளை தேற்றுவதெப்படியென புரியாமல் பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். 'நான் என் பொண்ணுக்காக செஞ்சது தப்பாடி.. மரம் மாதிரி நிக்கறயே.. சொல்லேன்... நா அவளோட நல்லதுக்காகத்தானேடி இவ்வளத்தையும் பண்றேன்.. இவளுக்கேன் புரியமாட்டேங்குது?'

'நீங்க வேற ஏன்னா புலம்பிக்கிட்டிருக்கேள். அவளுக்கு எல்லாம் தெரியும். நீங்க செத்தெ சும்மாயிருங்கோ.. வேணும்னா வெளியில போய்ட்டு வாங்கோளேன்.. நா அவ கிட்ட பேசறேன்.. போங்கோ..'

'என்னமோ போ.. நீயாச்சு ஒன் மகளாச்சி.. நா போறேன்.. கறிகா எதாச்சும் வாங்கணுமா?' என்றவாறு எழுந்து நின்றார் பட்டாபி.

'ஒன்னும் வேணாம்.. காலாற ஒரு நடை போய்ட்டு அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு வாங்கோ.. ஒன்னும் அவசரமில்லை..'

பட்டாபி வாசலை நோக்கி நடக்க ஜானகி தன் மகளை பார்த்தாள். 'இவள பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு. என்ன பண்றது.. அந்த பகவாந்தான் அந்த பையன மறக்கறதுக்கு வழி பண்ணணும்.. ஈஸ்வரா.. என்றவாறு சமையல்கட்டை நோக்கி நகர்ந்தாள்..

தொடரும்..

15.2.07

சூரியன் 175

ஃபிலிப் மாதவன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு தன்னுடைய குடியிருப்பை அடைந்து உடை மாற்றிக்கொண்டு இரவு உணவை தயாரிக்க மனமில்லாமல் இருக்கையிலமர்ந்து டி.வியை ஆன் செய்தார்.

அவர் படுக்கச் செல்லுமுன் சுமார் ஒரு மணி நேரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் சேனல்களின் செய்திகளைக் கேட்காமல் இருந்ததில்லை. அத்துடன் அன்று மும்பையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திருந்ததால் உடை மாற்றி அமர்ந்ததுமே அதைக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார்.

மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ND TVயின் ஆங்கிலச் செய்தியைக் கண்டுவிட்டு சன் நியூஸ் சானலைப் பார்க்கலாம் என்ற நோக்கில் ND TV சானலைத் தேடிப்பிடித்தார்.

எடுத்த எடுப்பிலேயே மாதவனுடைய பெயர் கேட்கவே திடுக்கிட்டு உன்னிப்புடன் கேட்கலானார். அவர் கேட்டதை அவராலேயே நம்பமுடியவில்லை. மாதவன் சாருடைய மகனா? இதில் தொடர்புள்ளதா? என்ன சோதனை? அதனால்தான் என்ன ஏது என்று சொல்லாமலேயே புறப்பட்டு போனாரா?

டி.வியில் காண்பித்த குடியிருப்பையும் அதன் வாசலில் குழுமி நின்றிருந்த நிரூபர் கூட்டத்தையும் பார்த்த ஃபிலிப் அதில் மாதவன் தெரிகிறாரா என்று துழாவினார். ஹுஹூம்.. காணவில்லை.. ஒருவேளை இன்னமும் சென்று சேர்ந்திருக்க மாட்டாரோ.. சுபோத் எந்த ஃப்ளைட்டில் டிக்கட் எடுத்து கொடுத்திருந்தார் என்பது தெரியாததால் அவனை உடனே அழைத்தாலென்ன என்று நினைத்து செல் ஃபோனை நெருங்கினார்.

அவர் சுபோத்தின் எண்ணைத் தேடி எடுக்கவும் அது ஒலிக்கவும் சரியாக இருந்தது. சுபோத் எதிர் முனையில்!

'சார் நா சுபோத் பேசறேன்.. டி.வி நியூஸ் கேட்டீங்களா சார்?'

'ஆமா சுபோத். மாதவனுக்கு எந்த ஃப்ளைட்ல டிக்கட் எடுத்தீங்க?'

'8.50 ஃப்ளைட்ல சார்.. இப்பத்தான் ஏர் க்ராஃப்ட்லருந்து சார் ஃபோன் பண்ணார். எப்படியும் ரெண்டு மூனு நாளைக்குள்ள நா வந்துருவேன். சிஜிஎம் கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு ப்ரெஸ் கான்ஃபரன்ஸ் எப்படி போச்சின்னுல்லாம் கேட்டார் சார். அவர் டோன்லருந்து பிரச்சினை ஒன்னுமில்லேன்னுதான் நினைச்சேன்.. ஆனா நியூச பார்த்தா...' என்ற சுபோத் சட்டென்று, 'நா வேணும்னா நம்ம பாந்தரா பிராஞ்ச் சி.எம் வீட்ல கூப்ட்டு போய் பாக்க சொல்லட்டுமா சார்?' என்றான்.

'வேணாம் சுபோத்.. It might unnecessarily complicate the matter. We will wait.. ' என்றார் ஃபிலிப். அவருடைய குரலிலிருந்த எரிச்சலைப் புரிந்துக்கொண்ட சுபோத், 'சாரி சார்.. I just thought.. OK Sir.. Goodnight.' என்றவாறு துண்டித்தான்.

இணைப்பைத் துண்டித்த ஃபிலிப் சுந்தரலிங்கத்தை அழைக்கலாமா என்று ஒரு நொடி ஆலோசித்தார். ஆனால் அடுத்த நொடியே வேண்டாம்.. அவரா கூப்பிடறாரான்னு பார்ப்போம்.. ஒருவேளை இது மும்பை ப்ரெஸ் பண்ற யூஷுவல் guess workஆ இருக்கும்.. இவங்களுக்குத்தான் எந்த நியூசையும் சென்சேஷனலைஸ் பண்ணி வ்யூவர்ஷிப்ப கூட்டறதுதான முக்கியம்? அதனால பாதிக்கப்படப் போறவங்களபத்தி இவங்களுக்கு என்ன வந்தது?

இனியும் விழித்திருக்க விருப்பமில்லாமல் பேருக்கு ஒரு தம்ளர் போர்ன்விட்டாவைக் கலக்கி குடித்துவிட்டு சிறிது நேர பிரார்த்தனைக்குப் பிறது படுக்கையில் விழுந்தார்.

ஆனால் உறக்கம் வரவில்லை. இப்படியொரு சூழ்நிலையில மாதவன் உடனே திரும்பி வருவாரா? அவர் திரும்பி வந்ததும் அவரிடம் தன்னுடைய ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துவிடலாம் என்ற தன்னுடைய நினைவு நனவாகுமா? அவர் ஒத்துக்கொண்டாலும் சிலுவை மாணிக்கம் நாடார் ஒத்துக்கொள்வாரா? அதுக்கு முன்னால யூ.எஸ் சுக்கு ஃபோன்போட்டு எஸ்தர் கிட்ட பேசுவோமா?

ஒவ்வொரு சிந்தனையும் அவருடைய குழப்பத்தை அதிகரித்து தூங்கவிடாமல் செய்ய படுக்கையில் நெடுநேரம் உறக்கம் வராமல் படுத்துக்கிடந்தார்.

*****

'ஏய்.. மாயே.. இங்கோட்டு வாடி.. ஒரு ஹேப்பி நியூஸ்.' என்று குடிபோதையின் உச்சியில் இரைந்தார் சேதுமாதவன்.

தன்னுடைய படுக்கையறையில் அமர்ந்தவாறு மலையாள வாரப்பத்திரிகை ஒன்றில் மூழ்கிப் போயிருந்த அவருடைய மனைவி சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தாள். ஒங்களுக்கென்ன வேலை.. மூச்சு முட்ட குடிக்க வேண்டியது.. ஃபேஷன் டிவியில அரைகுறை அம்மணமா அலையற பொண்ணுங்கள பார்த்துட்டு அப்பப்போ கத்த வேண்டியது.. வெவஸ்த கெட்ட மனுசன்.. பேரன் பேத்தி எடுத்தப்புறமும் வாலிபன்னு நெனப்பு..

சேதுமாதவனுக்கு சந்தோஷம் தலைக்கேறியது. கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்கில் சாய்த்தார். போதை உச்சந்தலைவரை ஏற எழுந்திருக்க முயன்று முடியாமல் சோபாவிலேயே விழுந்தார். 'ஏட்டி. இங்கன வந்நு நோக்கு..' என்றார் மீண்டும்.

தான் இனியும் சென்று பார்க்காமல் இருந்தா மனுஷன் கத்தறத நிறுத்தமாட்டார் போலருக்கே என்று நினைதவாறு படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை படுக்கையில் கவிழ்த்து வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்து டி.வியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்தாள். 'எந்தான..?' என்றாள் எரிச்சலுடன்.

சேதுமாதவன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தாள். 'ஏடி.. நமக்கு நல்ல காலமாக்கும்.. மாதவன் இந்நு மும்பை பொறப்பட்டு போயின்னு பறஞ்சில்லே? அது எந்துனான்னு அறியோ?'

மாயாவுக்கு எரிச்சலு கூடியது. இவருக்கு வேற வேலையில்லை. இருந்தாலும் கேட்காவிட்டால் விடமாட்டார் என்பதால், 'எந்துனா? பறயு!'

சேதுமாதன் இன்னொரு கோப்பை நிறைய திரவத்தை ஊற்றி ஒரே மடக்கில் தள்ளியவாறு சிரித்தார். 'எடி.. அயாள்டே மோன் போலீஸ் லாக்கப்பிலா.. அவனானத்தற ப்ளாஸ்ட்டெ குறிச்சி போலீஸ்லேக்கி போன் செஞ்சது.. அதனால அவனெ கூட்டிக்கிட்டு போயி என்க்வயரி பண்றாங்களாம்... அவன் இத்தோட க்ளோஸ்..'

மாயா அதிர்ச்சியுடன் அவரை நெருங்கி, 'என்ன சொல்றீங்க? குடிச்சிட்டு வாய்ல வந்ததயெல்லாம் உளராதீங்க.' என்றாள் கோபத்துடன்.

சேதுமாதவன் டி.வியை சுட்டிக்காட்டினார். 'நானா சொல்றேன்.. தோ.. ந்யூஸ்லயே வந்துருச்சே.. நீ மிஸ் பண்ணிட்டே.. இப்படி ஒக்கார் மறுபடியும் ஹெட் லைன்ஸ்ல சொல்வான்.. நீயே கேளு..' என்றவாறு மாயாவின் கைகளைப் பிடித்து இழுக்க அவர் மீது அடித்த விஸ்க்கியின் நாற்றம் தாங்காமல் முகத்தைச் சுளித்துக்கொண்டு அடுத்திருந்த சோபாவில் அமர்ந்த மாயா டிவியைக் கவனிக்கலானாள்.

சேதுமாதவன் கூறியது சரிதான் என்பதுபோலிருந்த செய்தியறிவிப்பாளரின் இறுதி தொகுப்பு.. அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான் என்றாலும் அந்த குடும்பத்தில் அவளுக்கு பிடித்தது சீனிவாசனைத்தான். ஆண்பிள்ளை இல்லாதிருந்த அவளுக்கு சீனிவாசனை என்ன காரணத்தாலோ பிடித்திருந்தது. சரோஜாவை தன்னுடைய எதிரியாய் கருதிய அவளால் அந்த பதினைந்து வயது சிறுவனை வெறுக்க முடியவில்லை. அவனா இந்த கதிக்கு ஆளாகிப் போனான்? பாவமாயிருந்தது அவளுக்கு. சேதுமாதவனை வெறுப்புடன் பார்த்தவாறு எழுந்து நின்றாள். 'இதுல ஒங்களுக்கு ஏங்க இவ்வளவு சந்தோஷம்.. ஒங்களுக்கு மாதவந்தானே எதிரி.. இந்த பையன் என்ன பண்ணுவான் பாவம்.. ஆண்ட்டி, ஆண்டின்னு எப்ப பார்த்தாலும் நம்ம வீட்டையே சுத்தி, சுத்தி வந்த பையங்க அவன்.. நீங்களும் ஒங்க பாலிடிக்சும்.. ச்சீ.. குடிச்சி, குடிச்சி மிருகமாவே ஆய்ட்டீங்க..'

'அடப் போட்ட்டி.. பிராந்தி.. அவன் அந்த மாதவனோட மகந்தானடி.. அவனுக்கு புள்ளையா பொறந்ததுக்கு இவனுக்கு வேணும்..'

மாயா வெறுப்புடன் முகத்தை சுளித்தவாறு எழுந்து தன் அறையை நோக்கி நகர சேதுமாதவன் இன்னுமொரு முழு அளவு கோப்பையை ஊற்றி குடித்தார்.. 'எடோ திரு.. ஷாப்பிடறதுக்கு என்ன இருக்கு.. ஸ்வீட் இருந்தா எடுத்து வை.. இன்னைக்கி கொண்டாடிருவோம்..' என்று மேலும் உச்சஸ்தாயியில் இரைய என்னவோ ஏதோ என்று பதறியடித்துக்கொண்டு நான்கு கால் பாய்ச்சலில் மாடிப்படிகளில் ஏறிவந்தான் திருநாவுக்கரசு.

தொடரும்..

14.2.07

சூரியன் 174

'நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?' என்றாள் மைதிலி தன் தந்தையைப் பார்த்து கோபமாக.

பட்டாபி பதிலளிக்காமல் சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார். வாகனம் பாந்த்ராவைக் கடந்து விரைந்துக்கொண்டிருந்தது.

மருத்துவர் ராஜகோபாலனுடைய தொலைப்பேசி வந்ததுமே பதறியடித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து மருத்துவமனையை அடைந்து அவர் காவல்துறையிலிருந்து இரு அதிகாரிகள் வந்து போன விஷயத்தைக் கூறியதுமே என்ன செய்வதென தெரியாமல் கலக்கமடைந்தார் பட்டாபி.

'என்ன கோபால் சொல்றே?' என்றார் தான் கேட்டதை நம்பமுடியாமல்.

'ஆமா சார். இப்பத்தான் வந்து கால் மணி நேரமா குடஞ்சி எடுத்துட்டு போறாங்க. அவங்களுக்கு நா சொன்னதுல அவ்வளவா நம்பிக்கையில்லேன்னு நினைக்கேன். அந்த பையன அவ்வளவு ஈசியா விடமாட்டாங்கன்னு நினைக்கேன். ஆனா மைதிலி இங்கருந்து போறதுக்கு முன்னால அவன்கிட்டருந்து ஃபோன் வந்தா மாதிரித்தான் தெரியுது. ஆனா என்ன ஏதுன்னு நா கேக்கறதுக்கு முன்னால அவ கெளம்பிப் போய்ட்டா. அதுக்கப்புறம் இவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கப்புறந்தான் தெரியுது இன்னும் அந்த பையன் கஸ்டடியிலதான் இருக்கான்னுட்டு. இந்த நேரத்துல இவ அந்த பையனோட வீட்டுக்கு எங்கானும் போயி போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டான்னா அப்புறம் இவ வாழ்க்கையும் சேர்ந்து க்ளோஸ்.. அதான் ஒங்கள கூப்ட்டு வரச்சொன்னேன். என்ன செய்யப் போறீங்க? எதாருந்தாலும் அதிகம் தாமசிக்காம செஞ்சிரணும். Time is the most important factor now.'

'என்ன கோபால் என்னென்னவோ சொல்றீயே.. நேக்கு என்ன பண்றதுன்னே தெரியலையே.. இப்ப மைதிலி எங்க போயிருப்பான்னு நினைக்கறே?'

'எனக்கென்னவோ அவ அந்த பையன் வீட்டுக்குத்தான் போயிருப்பான்னு தோனுது.. அந்த வீடு ஒங்களுக்கு தெரியுமோல்லியோ?'

பட்டாபி ஆமாம் என்று தலையை அசைத்தார். 'நா இதுவரைக்கும் போய்ட்டில்லை.. ஆனா மைதிலி சொன்னத வச்சி கண்டுபிடிச்சிரலாம்னு நினைக்கேன். ஒரு கார் மட்டும் வேணும்.. அவ அங்க இருந்தான்னா அவள அதிகமா பேச விடாமல் ஃபோர்சா கார்ல ஏத்திக்கிட்டு வந்துரவேண்டியதுதான். அதுக்கு கோபால் நீயும் வந்தா நன்னாருக்கும். நேக்கு தனியா போறதுல பிரச்சினையில்லன்னாலும் பயமாருக்கு கோபால்.'

ராஜகோபாலன் மறுபேச்சு பேசாமல் கிளம்பினார். தன்னுடைய வாகனத்தில் செல்வதைவிட ஒரு டாக்சியில் செல்வதுதான் உசிதமென தீர்மானித்து தனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தை அழைத்து ஒரு வாகனத்தை அனுப்பச் சொல்லி அது வந்ததும் பட்டாபி விலாசத்தை சொல்ல வாகனம் பாந்த்ராவை நோக்கி விரைந்தது.

மாதவன் முன்பு உயர் பதவியிலிருந்த வங்கியின் அதிகாரிகளுடைய குடியிருப்பு என்பதால் அவர்களால் மிக எளிதாக இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. குடியிருப்பை நெருங்குவதற்கு முன்பே வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நிறுவன வாகனங்களையும் காமிரா சகிதம் நின்றிருந்த ஒரு சிறு கும்பலையும் கண்ட பட்டாபி ராஜகோபாலனைப் பார்த்தார். 'என்ன கோபால் விஷயம் நாம நினைச்சதுக்கு மேல சிக்கலாருக்கும் போலருக்கே. இவனுங்கள தாண்டி நம்மால ஃப்ளாட்டுக்குள்ள போக முடியுமா?'

ராஜகோபாலன் பதிலளிப்பதற்கு முன்னரே பட்டாபி சாலையோரத்தில் நின்றிருந்த தன் மகளைப் பார்த்துவிட்டார். 'கோபால்.. அங்க பார்.. அது மைதிலிதானே..'

ராஜகோபாலன் ஆமாம் என்று தலையை அசைத்தார். 'இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்கோ.. அப்படியே கிட்டக்க போயி நிறுத்தி அவள ஏறச்சொல்லலாமா?'

'சரி.. ஆனா கார நிறுத்தி நாம இறங்கி கூப்பிட்டு அவ அவ்வளவு ஈசியா வரமாட்டா. அங்க வச்சிண்டு தகராறு பண்ணிக்கிட்டிருந்தோம்னா அவா எல்லாரும் பாக்கறதுக்கும் சான்ஸ் இருக்கு. அதனால வண்டிய அவ பக்கத்துல போய் நிறுத்தச் சொல்லு.. இஞ்சின ஆஃப் பண்ண வேணாம்.. நா கதவ மட்டும் தொறந்து அவள இழுத்து உள்ள போட்டுடறேன்.. கார் ஒரு நிமிசம் கூட தாமசிக்காம அங்கருந்து கெளம்பிறணும்.. என்ன சொல்றே?'

ராஜகோபாலன் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தார். 'இது நடக்குமா? மைதிலி ஒங்கள சரியா பாக்காம சத்தம் போட ஆரம்பிச்சானா அது வேற பிரச்சினையாயிரும். யோசிச்சிக்கோங்கோ..'

'வேற வழியில்ல கோபால். அந்த ரிஸ்க் எடுக்கத்தான் வேணும்.. அவ சுதாரிக்கறதுக்குள்ள நாம செஞ்சிரணும்.. நீ நா சொன்னபடி போ.. மத்தத நா பாத்துக்கறேன்.'

நல்லவேளையாக அவர் நினைத்தபடியே மைதிலி தன்னை இழுத்து வாகனத்திற்குள் ஏற்றியது யார் என்பதை கண்டுக்கொள்வதற்கு முன்பே வாகன ஓட்டி லாவகமாக வாகனத்தை கிளப்ப காரியம் கனகச்சிதமாக முடிந்தது.
***
மைதிலி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜகோபாலனைப் பார்த்தாள். 'நீங்க செஞ்ச வேலையா இது அங்கிள். I am sorry but I did not expect this from you.'

பட்டாபி திரும்பி தன் மகளைப் பார்த்தார். 'ஏய் மைதிலி.. கோபால் மட்டும் இல்லன்னா ... நீ என்ன காரியம் செய்ய இருந்தேன்னு தெரிஞ்சிதான் பேசறியா?'

மைதிலியின் கண்கள் இரண்டும் கோபத்தால் சிவந்து போயிருந்தன. 'என்னத்தப்பா செஞ்சிட்டேன்? எதுக்கு இப்போ என்னெ அங்கருந்து கெளப்பிக்கிட்டு வந்தேள்? யாராச்சும் பார்த்து கார நிறுத்தியிருந்தா என்ன செஞ்சிருப்பேள். நா ஒங்க பொண்ணு நீங்க சொல்லியிருந்தாக் கூட யாரும் நம்பியிருக்கமாட்டா.. நீங்க செஞ்சது கிட்நாப் மாதிரி இருந்தது.. அத நெனச்சி பாத்தேளா நீங்க?'

பட்டாபி பதிலளிக்காமல் தன் தோள்களைக் குலுக்கினார். 'அதான் யாரும் பாக்கலையே.. பகவான் நம்ம பக்கம் இருக்கறச்சே நாம நெனச்சா மாதிரிதானே நடக்கும்?'

'இப்ப நீங்க வண்டிய நிறுத்தப் போறேளா இல்ல நா குதிச்சிரவா?'

பட்டாபி அதிர்ந்துபோய் தன் மகளுடைய கையைப் பிடித்துக்கொண்டார். 'ஏய்.. நோக்கென்ன பைத்தியமா? ஓடிட்டிருக்கற வண்டியிலருந்து குதிச்சி சாகற அளவுக்கு அந்த பையன் நோக்கு முக்கியமா படறதா? அப்ப நானும் ஒங்கம்மாவும் முக்கியமில்லை நோக்கு.. அப்படித்தானெ?'

'ஐயோ அப்பா.. ஒங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னே தெரியலை.. சீனிக்கு ஹெல்ப் பண்றதுக்கு நம்மள விட்ட வேற யாரும் இல்லப்பா.. அங்கிளும் ஆண்டியும் சென்னைக்கு போய்ட்டான்னு நா சொன்னேனே மறந்துட்டேளா? என்னெ இறக்கி விட்டுறுங்கப்பா.. ப்ளீஸ்..' மேலே தொடரமுடியாமல் மைதிலி கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விசும்ப பட்டாபி என்ன செய்வதென தெரியாமல் ராஜகோபாலனைப் பார்த்தார். 'நீங்க ஒன்னும் பேசாம இருங்கோ' என்பதுபோல் அவர் சைகைக் காட்டிவிட்டு, 'ஜரா ஜல்தி சலாதோ..' என்றார் டிரைவரிடம்.. இதற்கெனவே காத்திருந்ததுபோல ஆக்சிலரேட்டரை மிதித்தார் டிரைவர். வாகனம் சீறிக்கொண்டு முன்னேறியது.

********

'என்னவாம்? அவர் இருந்தாரா இல்லையா?'

மாதன் பதிலளிக்காமல் தன் மகளைப் பார்த்தார்.

'அவர் லைன்ல வரலம்மா. என்னமோ மீட்டிங்ல இருக்காராம். நாம மும்பை போய் இறங்குனதும் கூப்பிடணுமாம்.'

சரோஜா நம்பிக்கையில்லாமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். என்னத்தையோ அப்பனும் பொண்ணும் எங்கிட்டருந்து மறைக்குதுங்க. அந்த சீனிப் பயலுக்கு ஏதாச்சும் பிரச்சினையா மட்டும் இருக்கட்டும். வச்சிக்கறேன்.. நீயும் வேணாம் ஒன் ஒறவும் வேணாம்னுட்டு போயிடறேன்..

'உண்மையத்தான் சொல்றீங்களா? இதுக்கா அப்பனும் மகளுமா குசுகுசுன்னு பேசிக்கிட்டு நீன்னீங்க? உண்மையச் சொல்லுங்க.. சீனிக்கு ஒன்னுமில்லையே?'

மாதவன் தன் மனைவியின் அருகில் அமர்ந்து அவருடைய கரங்களைப் பற்றினார். 'இங்க பார் சரோ.. அனாவசியமா எதையாச்சி கற்பனை பண்ணாத.. சீனிக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நம்ம சேர்மன் எங்கிட்ட சொல்லாம இருக்க மாட்டார். இது வேற யார்கிட்டயும் சொல்லக் கூடிய விஷயமும் இல்லையா அதான் ஏர்போர்ட்லருந்து கூப்பிடச் சொல்லுன்னு மட்டும் சொல்லி வச்சிருக்கார். இந்தா நீயே வேணும்னா பண்ணிக் கேளு...'

சரோஜா வேண்டாம் என்று தலையை அசைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூட அவளுடைய கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை பரிதாபமாகப் பார்த்தனர் மாதவனும் வத்ஸ்லாவும். 'சொல்லிரலாமா?' என்று உதடுகளை அசைத்தார் மாதவன். 'வேணாம்ப்பா.. ப்ளீஸ்.' என்று வத்ஸ்லா கைகளைக் கூப்பினாள்..

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் செல்லவிருந்த விமானம் புறப்பட தயாராக இருக்கிறதென்ற அறிவிப்பு வர மூவரும் எழுந்து வாசலை நோக்கி விரைந்தனர்.

தொடரும்..

9.2.07

சூரியன் 173

மைதிலி் சீனியின் வீட்டை நெருங்கியபோது வாசலில் நின்றிருந்த கூட்டம்தான் முதலில் அவளுடைய கண்களுக்கு தென்பட்டது. தொலைக்காட்சி வாகனங்கள், காமராக்கள் சகிதம் நின்றிருந்தவர்களைப் பார்த்ததுமே சீனியை காவல்துறையினர் கைது செய்த விஷயம் எப்படியோ இவர்களுக்கு தெரிந்துவிட்டிருக்கிறது என்பது மட்டும் அவளுக்கு விளங்கியது.

ஆட்டோவை சற்றுத் தொலைவிலேயே நிறுத்தி இறங்கி நடக்கவாரம்பித்தாள். கூட்டத்தின் விளிம்பில் நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் குர்க்காவைத் தவிர யாரையும் காணவில்லை. கண்ணுக்கெட்டியவரை சீனியையோ அல்லது மாமியையோ காணவில்லை. ஆக சீனி இவர்களை அதுவரை சந்திக்கவில்லை என்பதை உணரமுடிந்தது.

இந்த கூட்டத்தை சமாளித்து எப்படி சீனியை சந்திக்கப்போகிறேன் என்பது மலைப்பாக இருந்தது அவளுக்கு. சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு கூட்டத்திலிருந்து விலகி செல் ஃபோனை எடுத்து டயல் செய்தாள். எதிர்முனையில் அடித்துக்கொண்டே இருந்தது. ஒன்று சீனி வீட்டில் இல்லை.. இல்லையென்றால் அவனுக்கு எடுத்து பதில்பேச துணிவில்லை. சீனி வீட்டில் இல்லையென்றால் மாமி எங்கே.. சீனியை அவனுடைய செல்ஃபோனில் அழைத்தாலென்ன என்று தோன்றியத.

சீனியின் செல்ஃபோன் என்றதும் சட்டென்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஐயோ.. அதுவும் அவங்கிட்ட இல்லையே.. அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பகலில் ராஜகோபாலனுடைய மருத்துவமனையில் தான் பத்திரிகையில் வாசித்தது நினைவுக்கு வர.. சீனியின் கைதுக்கு பின்னாலிருந்த மர்மம் அவளுக்கு விளங்கியது. 'That's it.. அன்னைக்கே சீனி சொன்னானே போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும்னு.. நாந்தான் முட்டாத்தனமா இருந்துட்டேன் போலருக்கே.. அதான்.. அவனோட செல்ஃபோன எடுத்த ராஸ்கல்தான் இந்த வேலைய செஞ்சிருக்கணும்.. அது போலீஸ்க்கு பின்னாலதான் தெரிய வந்துருக்கும். அதான் அவனெ விட்டுட்டா.. ஆனா இது எப்படி இவாளுக்கு தெரிய வந்துது.. மழை விட்டும் தூறல் விடலேங்கறா மாதிரி.. இது எப்படி? சீனியோட செல்ஃபோன யூஸ் பண்ண கேங்கே இதயும் செஞ்சிருக்குமோ.. அவங்களுக்கு கிடைச்ச செல்ஃபோன் யாரோடதுன்னு அவங்களாலயா கண்டுபிடிச்சிருக்க முடியாது.. இது அவங்க வேலையாத்தான் இருக்கும்..

சரி.. இப்ப இத எப்படி டீல் பண்றது? ப்ரெஸ் ஆளுங்க பயங்கரமான ஆளுங்களாச்சே.. சீனியோட பழைய பழக்கங்கள் முக்கியமா அவனுக்கு போதைப் பொருள் யூஸ் இருந்துதுன்னு கண்டுபிடிச்சி அதப்பத்தி அவன்கிட்ட எதையாவது கேட்டு.. அது பேப்பர்லெல்லாம் வந்தா.. ஐயோ அத நினைக்கவே பயமாருக்கே.. சரோஜா ஆண்டிக்கு மட்டும் இது தெரியவந்தா என்னாவறது.. அதுமட்டுமா அந்த பையனோட சகவாசமே ஒனக்கு வேணாம்னு அப்பா வேற மறுபடியும் ஆரம்பிச்சிருவாரே.. ராஜகோபலன் அங்கிள் வேற சொல்லிட்டாரோ என்னவோ.. அவர்கிட்ட உதவி கேக்கப் போனது எத்தன முட்டாத்தனம்.. என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டு சாலையோரத்தில் நின்றிருந்தாள் மைதிலி.

அடுத்த நொடியே அவளுக்கு மிக அருகில் ஒரு வாகனம் வந்து நின்றது. அவள் யாரென்று நிதானிக்கும் முன்பே ஒரு கரம் அவளை வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்து கதவை மூட சுற்றிலுமிருந்தவர்கள் நிதானிக்கும் முன்பே வாகனம் சர்ரென கிளம்பி சென்றது.

********

மாதவன் அவருடைய மனைவி மற்றும் மகள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து புறப்பாடு கூடத்தில் அமர்ந்திருந்தனர். நல்லவேளையாக மும்பையிலிருந்து வந்து திரும்பிச் செல்லவிருந்த விமானம் சரியான நேரத்தில் வரவிருப்பதாக அறிவிப்பு வந்திருந்தது.

'கடவுள் புண்ணியத்துல ஃப்ளைட் சரியான நேரத்துக்கு கிளம்புனா நல்லாருக்கும்.. அவன் என்ன அவஸ்தை படறானோ தெரியலையே..' என்ற தனக்குள்ளேயே முனகியவாறு அமர்ந்திருந்த தன் தாயை பரிதாபத்துடன் பார்த்தாள் வத்ஸ்லா.. 'Don't worryமா.. அதான் அனவுன்ஸ் பண்ணிட்டானே.'

'ஒங்கப்பா எங்கடி காணம்?' என்றாள் சரோஜா கூடத்தை ஒருமுறை அலசிவிட்டு.

'அப்பா அவரோட சேர்மன கூப்ட போயிருக்கார். செல் ஃபோன்ல க்ளியரா இல்லையாம். ஏர் டெல் பூத்லருந்து பேச போயிருக்கார். இப்ப வந்துருவார்.'

'இங்கருந்து பேசி என்னடி புண்ணியம்? இன்னும் ரெண்டு மணி நேரத்துல போயி சேந்துரப் போறோம். அப்பவே கூப்டுங்கன்னு சொன்னேன். அப்பாவும் பொண்ணுமா தடுத்துட்டீங்க. அதெப்படிதான் என்ன நடந்தாலும் அசராம இருக்கீங்களோ ரெண்டு பேரும்.. என்னால முடியலடிம்மா.. முடியல..'

சரோஜாவுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் இருந்ததை நினைத்துக்கொண்டாள் வத்ஸ்லா. 'அம்மா ப்ளீஸ்.. நீ பேசி பேசியே டென்ஷயாருவே.. ப்ர்ஷர் ஏறிடப்போவுதும்மா.. அப்படியே சாஞ்சி கண்ணெ மூடு.. அப்புறம் ஒனக்கேதும் ஆயிருச்சின்னா சீனிய பாத்து ஒழுங்கா பேசக் கூட முடியாம ஆயிரப்போவுது..'

சரோஜா தன் மகளை எரிச்சலுடன் பார்த்தாள். 'ஏன்டி ஒன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா.. கருநாக்கு, கருநாக்கு.. பலிச்சிரப் போவுதுடீ..'

வத்ஸலா எரிச்சலுடன் இது ஒனக்கு தேவையா என்றாள் தனக்குத்தானே.. 'சாரிம்மா.. தெரியாம சொல்லிட்டேன்.. நீ கொஞ்சம் கண்ணெ மூடிக்கிட்டு ரெஸ்ட் எடுக்க ட்ரை பண்ணேன்..'

சரோஜா வேறு வழிய் தெரியாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கையில் சாய தூரத்தில் மாதவன் பரபரப்புடன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த வத்ஸ்லா உடனே எழுந்து அவரை நோக்கி விரைந்தாள். 'என்ன டாட்.. என்னவாம்?'

மாதவன் உற்சாகத்துடன் காணப்பட்டார். 'ஏய் வத்ஸ்.. சீனிய ரிலீஸ் பண்ணிட்டாங்களாம். சேர்மனுக்கு இப்பத்தான் நியூஸ் வந்ததாம். உடனே மும்பை மெட்ரோ போலீஸ் டிஜிபியவே போன்ல கூப்ட்டு கேட்டுட்டாராம். சீனியோட செல்ஃபோன யாரோ யூஸ் பண்ணிருக்காங்கன்னு சீனிய விசாரிச்சப்பதான் தெரிஞ்சிதாம்.' என்றவர் தொடர்ந்து, 'இந்த இடியட் செல் ஃபோன தொலைச்சிட்டு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணாம இருந்துருக்கான். இவன் பண்ண வேல இப்ப எல்லாருக்கும் டென்ஷன்.. டைம் வேஸ்ட்.. ச்சே.. இப்ப என்ன பண்லாம் வத்ஸ்?'

வத்ஸ்லா திரும்பி தன் தாயைப் பார்த்தாள். 'டாட்.. நாம மூனு பேரும் போய்ட்டே வந்துடறதுதான் நல்லதுன்னு படுது. நீங்க என்ன சொன்னாலும் அம்மா நம்பப் போறதில்லை. இந்த ட்ரிப்ப கேன்சல் பண்றதுக்காக நீங்க சும்மா சீனி ரிலீஸ் ஆய்ட்டான்னு சொல்றீங்கன்னு சொல்வாங்க. அதனால..'

இடைமறித்தார் மாதவன். 'அதனால? அம்மாகிட்ட இத சொல்ல வேணாங்கறியா? சேர்மன் என்ன சொல்வார்னு கேப்பாளே?'

'லைன் கெடைக்கலேன்னு சொல்லிருங்கப்பா. அம்மாவுக்கும் ஒரு ப்ளெசண்ட் சர்ப்ரைசா இருக்கட்டுமே.'

மாதவன் புரியாமல் தன் மகளைப் பார்த்தார். 'அது சரி வராது வத்ஸ். அவளுக்கு ஏற்கனவே ப்ரஷர் இருக்கு.. பாசிட்டிவ் எமோஷன்சும் கூட அத பாதிக்கும். நாம போய் இறங்கி சீனிய வீட்டுல பார்த்ததும் ஒருவேள அவ ஓவரா ரியாக்ட் பண்ணிட்டா.. ஏற்கனவே இருநூறுக்கு மேலருக்கற சிஸ்டாலிக் ப்ரஷர் இன்னும் ஜாஸ்தியாயி ஏதாச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிர சான்ஸ் இருக்கு..'

கருநாக்கு, கருநாக்கு என்று சரோஜா தன்னை பழித்தது நினைவுக்கு வர தன்னையுமறியாமல் புன்னகைத்தாள் வத்ஸலா.

அவளுடைய புன்னகையின் பொருள் விளங்காமல் எரிச்சலுடன் பார்த்தார் மாதவன். 'ஏய், என்ன, நா சீரியசா பேசிக்கிட்டிருக்கேன்.. நீ ஸ்மைல் பண்றே?'

வத்ஸ்லா வாய்விட்டுச் சிரித்துவிட்டு சற்று முன் தன் தாய் தன்னை பழித்ததை கூறினாள். மாதவனுக்கும் தன்னுடைய தவறு உணர்த்த, 'சாரிடா.. அம்மா சொல்றது உண்மைதான்.. நம்ம ரெண்டு பேருமே நிறைய விஷயங்கள்ல இப்படித்தான் நெகட்டிவாவே திங்க் பண்றோம்.. I think we will have to change..' என்றார் சரோஜா கண்விழித்து தங்கள் இருவரையும் கவனிப்பதைப் பார்த்தவாறு. 'ஏய் அம்மா நம்மளையே பாக்கறா.. நீயே எதையாவது சொல்லி சமாளி.. நா வாய் தொறக்கலை..'

தொடரும்..

8.2.07

சூரியன் 172

மைதிலி சயான் சதுக்கத்தை அடைந்தபோது போக்குவரத்து சீரடைந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அவள் விட்டுச்சென்றிருந்த இரு சக்கர வாகனத்தை அவள் நிறுத்திவைத்திருந்த இடத்தில் காணவில்லை.

பதற்றமடையாமல் அருகிலிருந்து பெட்டிக்கடையை நெருங்கினாள். அவள் விவரிப்பதற்கு முன்பே அவளைப் பார்த்து புன்னகைத்த கடைப்பையன், 'காடியேன்னா மேம்சாப்.. போலீஸ் வாலோன் லேக்கே கயாலே (வேன்ல தூக்கிப் போட்டுக்கிட்டு போய்ட்டாங்க)' என்றான்.

அவள் அதை எதிர்பார்த்ததுதான். சாதாரண நாட்களிலேயே சாலையோரத்தில் நிறுத்திவைத்திருந்தாலே அள்ளிக்கொண்டு போய்விடும் மும்பை பெருநகர காவல்துறை இன்று கேட்கவா வேண்டும். எப்படியும் சயான் போக்குவரத்து காவல்துறை அலுவலகம்வரை சென்றால்தான் வண்டியை மீட்க முடியும். அதற்கு எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். வாகனம் நல்ல இடத்தில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. அதை விட முக்கியம் சீனியை சென்று சந்திப்பது. இரவு திரும்பி வரும் வழியில் சயானில் இறங்கி வாகனத்தை மீட்டுக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்.

*******

மருத்துவர் ராஜகோபாலன் தன்னுடைய மருத்துவ மனையில் அவுட் பேஷண்ட் வார்டில் மும்முரமாக இருந்த சமயத்தில், 'சார் ஒங்கள பாக்க ரெண்டு போலீஸ் ஆஃபீசர்ஸ் வந்திருக்காங்க. ஒங்க ரூமுக்கு வெளிய ஒக்கார வச்சிருக்கேன்.' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார். எதிரில் நின்றிருந்த தன்னுடைய ரிசிப்ஷனிஸ்டைப் பார்த்தார். 'என்னையா.. எதுக்குன்னு கேட்டீங்களா?'

அவர் பதிலுக்கு இல்லையென்று பதிலளிக்க, 'சரி.. இப்ப வர்றேன்னு போய் சொல்லுங்க.' என்று கூறிவிட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த நோயாளிக்கு தேவையான மருந்துகளை எழுதிக்கொடுத்துவிட்டு, 'ஒரு நிமிஷத்துல வந்திடறேன்.. சாரி' என்றவாறு எழுந்து தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

அவர் இதற்கு முன்பு சந்தித்திராத இரு அதிகாரிகள் தன்னுடைய அறை வாசலில் காத்திருப்பதைக் கண்டு, 'இவங்களுக்கு என்ன வேணும்?' என்று சிந்தித்தவாறு அவர்களருகில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

'Doctor we would like to ask you a few questions about one of your patients.' என்ற அதிகாரி தன்னுடைய சகாவைப் பார்த்தார். 'He is one Mr.Sreenivasan, a Madrasi'

ராஜகோபாலனுக்கு புரிந்தது. அந்த பையன் இங்க சிகிச்சை எடுத்துக்கொண்டது உண்மைதானா என்பதை விசாரிக்க வந்திருக்கிறார்கள்.'ஓகே.. ப்ளீஸ் கம் இன்' என்று அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு தன்னுடைய வரவேற்பாளரை அழைத்து அடுத்த பத்து நிமிடங்களுக்கு யாரையும் தன் அறைக்குள் அனுப்பவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

அடுத்த சில நிமிடங்கள் சீனிவாசன் தன்னுடைய மருத்துவமனைக்கு வந்த நேரம், அவனுக்கு ஏற்பட்டிருந்த எலும்பு முறிவின் தீவிரம், அவன் எவ்வளவு நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்தான், எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான் என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார் ராஜோகோபாலன்.

அவர் கூறியவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்ட அதிகாரிகளுள் ஒருவர் சட்டென்று, 'டாக்டர் மிஸ்டர் சீனிவாசன் அடிபட்டது சயான்ல.. இங்கருந்து சுமார் அஞ்சி கிலோ மீட்டருக்கு அப்புறம். அங்க பக்கத்துல நிறைய க்ளினிக் இருக்கறப்ப அவர் ஏன் ஒங்க க்ளினிக்க தேடி வரணும்? ஒங்கள அவருக்கு ஏற்கனவே தெரியுமா?'

ராஜகோபாலன் தான் இக்கட்டில் சிக்கிக்கொள்ள இருப்பதை உணர்ந்தார். அவருக்கு மைதிலியின் பெயரை இதில் இழுத்துவிடுவதில் விருப்பமில்லை. ஆனால் காவலர்களின் இந்த கேள்விக்கு உண்மையாக பதில் சொல்ல வேண்டுமென்றால் மைதிலியின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அப்படியே வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டாலும் அடுத்த வினா அவருடைய முழுவிவரத்தையும் பற்றியதாகவே இருக்கும். என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

'என்ன டாக்டர் இவ்வளவு யோசிக்கிறீங்க. Do you know him personally or not?'

'அந்த பையன எனக்கு தெரியாது. ஆனா யாரோ ஒருத்தர் அவர என்னோட க்ளினிக் வரைக்கும் கூட்டிக்கிட்டு வந்துட்டு உள்ள வராமயோ போய்ட்டார்னு மட்டும் சீனிவாசன் சொன்னது நினைவுக்கு வருது. அப்போ அது பெரிய விஷயமா படலை.. அதனால நானும் கேட்டுக்கலை.'

அவருடைய பதிலில் நம்பிக்கையில்லாமல் தங்களுக்குள் பார்த்துக்கொள்வதைக் கண்ட ராஜகோபாலன் தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து நொந்துப்போனார். அதெப்படி நம்மளையுமறியாம இப்படியொரு பொய் வந்துது.. இது சிக்கல பெருசாக்குமோ தெரியலையே.. இவங்க நம்ம க்ளினிக் ஸ்டாஃபுங்கள விசாரிக்காம போமாட்டாங்களே..

அதிகாரிகளுள் ஒருவர் புன்னகையுடன். 'டாக்டர் நீங்க நிலைமை புரியாம பேசறீங்கன்னு நினைக்கிறேன். நடந்துருக்கறது ஒரு சீரியசான க்ரைம். It is not targeted at any particular individual but whole of Mumbai.. அதனால அந்த கல்ப்ரிட்ட கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டியது நம்ம எல்லாருடைய கடமை. அதுவும் ஒங்களப்போல ரெஸ்பான்சிபிள் சிட்டிஜன்சோட ட்யூட்டியும் கூட. நீங்க சொல்ற பதில் உண்மையாருக்கணும். இல்லேங்கற பட்சத்துல ஒங்க மேலயே சந்தேகம் திரும்ப சான்ஸ் இருக்கு. From your facial expression we are sure that you know the person who brought Mr.Sreenivasan to your clinic. நீங்க அவர் ஷீல்ட் பண்றதுக்கு காரணம் இருக்கலாம்.. ஆனா அத எங்களால ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சிர முடியும்.. ஆனா அத ஒங்க வாய்லருந்து வரணும்னுதான் நாங்க விரும்பறோம்.. So please cooperate.. We are in a hurry to find out the culprit and those who are with him' கூற ராஜகோபாலன் வேறு வழியில்லாமல் மைதிலியைப் பற்றி கூறினார்.

'I see.. We understand your concern for the girl Doctor.. ஆனா அந்த சீனிவாசன பத்தி வேற ஏதாவது விஷயம் தெரியுமா. தெரிஞ்சிருந்தா தயங்காம சொல்லுங்க. It might help in our investigation.'

சற்று தயங்கிய ராஜகோபாலன் சீனிவாசனைப் பற்றி தன்னிடம் மைதிலி கூறியிருந்த தகவல்களை சுருக்கமாகக் கூறி முடித்தார்.

அவருடைய பதிலில் திருப்தியடைந்த அதிகாரிகள் எழுந்து நின்றனர். 'One last question Doctor..'

'Yes?'

'In your opinion do you think that boy could have been part of the conspiracy?'

ஆமாம் என்று கூறிவிட்டால் என்ன என்று ஒரு நொடி நினைத்தார் ராஜகோபாலன். அத்தோடு மைதிலியையும் அவளுடைய குடும்பத்தையும் பிடித்துள்ள இந்த தொல்லை ஒரேயடியாக நீங்கிவிடுமே. ஆனால் அடுத்த நொடியே தன்னுடைய தொழில் தர்மத்திற்கு அது நேர் எதிரானது என்பதை உணர்ந்தார். 'I don't think so officer.'

'Ok.. Thank you for your cooperation.'

அவர்கள் இருவரையும் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த ராஜகோபாலன் தன் அறைக்கு திரும்பியதும் மைதிலியின் வீட்டுக்கு டயல் செய்தார். எதிர்முனையில் பட்டாபி எடுத்ததும், 'சார் நீங்க ஒடனே பொறப்பட்டு என் க்ளினிக்குக்கு வாங்க. ஒரு முக்கியமான விஷயம். என்னால இப்ப அங்க வர முடியல அதான் ஒங்கள கூப்பிடறேன். என்ன வேலையிருந்தாலும் அப்படியே போட்டுட்டு வாங்க..'

******

மருத்துவ மனையிலிருந்து வெளியேறி வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே 'தூ க்யாச் சோச் ரஹா ஹை?' என்ற தன்னுடைய சகாவை திரும்பிப் பார்த்தார் அந்த காவல்துறை அதிகாரி ராம்காந்த் காவ்டே.. அவருக்கு டிஜிபி ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவர் ஒரு வீக் ஆசாமி என்ற கணிப்பு. ஒரு டிஜிபிக்கு வேண்டிய துணிவு அவரிடம் இல்லை என்று நினைத்திருந்தார்.. 'எனக்கென்னவோ அந்த மதறாஸிக்கு இதுல என்னமோ தொடர்பு இருக்குன்னு தோனுது. இல்லன்னா இந்த பொண்ண பத்தி அவன் ஏன் நம்மக்கிட்ட மறைக்கணும்? சார் அவனெ அவ்வளவு சீக்கிரம் விட்டிருக்கக் கூடாதுன்னுதான் நினைக்கேன். சரி.. நாம ஒன்னு பண்ணுவோமா?'

'என்ன?' என்றார் அவருடைய சக அதிகாரி விஜய் டால்வி. அவருக்கு காவ்டேயைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை. ஊழல் பேர்வழி என்பதுடன் காவல்துறையின் ரகசியங்களை பத்திரிகைகளுக்கு காசுக்கு விற்பவர் என்ற எண்ணமும் இருந்தது. வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டிருந்தார்.

'நாம பேசாம நம்ம இ.எ. ரிப்போர்ட்டர கூப்ட்டு இந்த பையன பத்தியும் அந்த பொண்ண பத்தியும் சொல்லிருவமா?'

அதான பார்த்தேன். இதுலயும் முடிஞ்ச வரைக்கும் காசு பண்ணிருவியே. 'எதுக்கு? அதால நமக்கு என்ன பிரயோசனம்? அத்தோட அந்த பொண்ண பத்தி நம்ம ரெண்டு பேரையும் தவிர வேற யாருக்கும் தெரியாதுன்னு நம்ம டிஜிபிக்கு கண்டுபிடிக்க முடியாதாக்கும்? வேணாம்..'

'சரி.. அந்த பொண்ணோட பேர விட்டுருவோம்.. இந்த பையன பத்தி மட்டும் சொல்லிருவோம்.. அவங்க அவனெ துருவி துருவி கேக்கறதுல ஏதாவது வெளிய வரும் இல்லே? என்ன சொல்றே?'

டால்வி இது தேவையா என்பதுபோல் பார்த்தார். 'Is it necessary?' என்றார் எரிச்சலுடன்.

'நிச்சயமா இது தேவை.. அந்த பயல அவ்வளவு ஈசியா விட்டுருக்கக் கூடாதுன்னுதான் நா இப்பவும் நினைக்கிறேன். நாம எவ்வளவு கஷ்டப்பட்டு அவனெ ட்ரேஸ் பண்ணோம்.. இப்படி சட்டுன்னு ஒரு மணி நேரத்துக்குள்ள அவனெ ரிலீஸ் பண்ணியிருக்கக் கூடாது.. டிஜிபிக்கு வயசாயிருச்சின்னு நினைக்கிறேன். முன்னே மாதிரி இல்ல அவர். ரொம்பவும் சாஃப்டாயிட்டார்.'

இனி நீ என்ன சொன்னாலும் கேக்கப்போறதில்லை. எப்படியோ போ என்று மனதுக்குள் நினைத்த டால்வி, 'உங்க இஷ்டம்.. ஆனா இப்பவே சொல்லிட்டேன். இதுல எனக்கு பங்கில்லை. அதனால ஏதாவது ஏடாகூடமா நடந்து நம்ம இன்வெஸ்டிகேஷன்ல பாதிப்பு ஏற்பட்டுதுன்னா அதுக்கு நா பொறுப்பில்லை.' என்றவாறு விலகிக்கொள்ள 'போடா தொடநடுங்கி' என்று மனதிற்குள் அவரை சபித்தவாறு தன்னுடைய பத்திரிகை நிரூபரை அழைக்கலானார் காவ்டே அதனால் தனக்கு ஏற்படப்போகும் பின்விளைவுகளை மறந்தவராய்.

7.2.07

சூரியன் 171

'அந்தம்மா கோமாவுலருந்து திரும்பாமயே இறந்துட்டாங்க சார்..'

சபரி பதற்றத்துடன் துணை ஆய்வாளரைப் பார்த்தார். 'என்ன சார் சொல்றீங்க? நீங்க அவங்க வாக்குமூலத்த வாங்கனீங்களா இல்லையா?'

துணை ஆய்வாளர் எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். 'ஆமா சார்.. அதுக்கென்ன இப்போ?'

சபரிக்கு லேசாக புரிந்தது. மாணிக்கவேலின் மனைவி முன்பு தான் கூறிய குற்றச்சாட்டை மறுத்திருப்பார். இவர் வேறு வழியில்லாமல் மாணிக்கவேலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வந்திருப்பார். அதனால்தான் இந்த எரிச்சல், கோபம் எல்லாம். உள்ளுக்குள் இருந்த மகிழ்ச்சியை வெளியில் காட்டிக்கொள்ளாமல், 'சார் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.. ப்ளீஸ்.' என்றார் பணிவுடன். ஆடற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற பாடி கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க?

'இன்னும் என்னத்த சார் சொல்றது? இன்னைக்கி காலைலருந்து இந்த கேசுக்கு ஓடுனது எல்லாமே வேஸ்ட்டுங்கறா மாதிரி அந்த பொம்பள செஞ்சிருச்சி.. சாவப் போற நேரத்துல புருசன புடிக்காமத்தான் நான் அந்த பழிய அவர் மேல போட்டேன். அந்த கொலைய நாந்தான் செஞ்சேன்னு ஒத்துக்கிருச்சி.. பிறகென்ன ஒங்க ஆள அங்கனயே விட்டுப்போட்டு வந்துட்டேன்.. போங்க சார்.. காலைல யார் மொகத்துல முளிச்சனோ தெரியல இன்னைக்கின்னு பார்த்து மும்பைல பாம்ப் ப்ளாஸ்ட் வேற.. இருக்கற வேல போறாதுன்னு இந்த கர்மம் புடிச்ச கேஸ் வேற..'

தான் வந்த வேலை இத்தனை எளிதில் முடிந்துவிடும் என்று நினைத்திராத சபரி, 'சாரி சார்.' என்றவாறு ஜோ நின்றிருந்த இடத்திற்கு விரைந்தார்.

********

மோகன் தன்னெதிரில் அமர்ந்திருந்த ராசேந்திரனையும் அவனுடைய தந்தை ரத்தினவேலுவையும் பார்த்தார்.

'சொல்லுங்க.. ஒங்களுக்கு இப்ப என்ன வேணும்?'

பதில் பேச முனைந்த ராசேந்தரனை சைகைக் காட்டி அமர்த்தினார் ரத்தினவேலு. 'என்ன தம்பி இப்படி சாவகாசமா கேக்கீக. எங்களுக்கு ச்சேரவேண்டிய தொகைய எவ்வளவுன்னு தெரிஞ்சிக்க எங்களுக்கு உரிமை இருக்கா இல்லையாய்யா? அது அந்த பயலுக்குத்தான் தெரியல. யாரால முன்னுக்கு வந்தோங்கறதையே மறந்துட்டு ஆடிட்டிருக்கான். ஒங்களுக்குத்தான் தெரியுமில்ல தம்பி.. கரண்டி புடிச்ச கைய அவன் மறந்துட்டாலும் உண்மை உண்மைதானுங்களே.. ஆரம்பத்துல என் கைமணம்தான தம்பி அவனெ தூக்கிவிட்டுருச்சி.. பிற்பாடி என் பையன்.. அவன் படிச்சிருக்கற படிப்ப வச்சிக்கிட்டுத்தானே போன ரெண்டு வருசமா வளந்தது கம்பெனி.. இப்ப அவனுக்கு நாங்க வேண்டாதவங்களா போய்ட்டமாக்கும்? சரி அது கெடக்குது களுத.. கிளிஞ்சிப் போனத ஒட்டவா முடியும்.. கிளிஞ்சது கிளிஞ்சதுதான்.. அப்படியே இருந்துட்டு போட்டும்.. எங்களுக்கு ச்சேர வேண்டியத வம்பு பண்ணாம கொடுத்துட்டா நல்லது.. இல்லன்னா...'

மோகன் பதில் பேசாமல் புன்னகைத்தார். பிறகு தனக்கருகில் அமர்ந்திருந்த தன் நண்பரும் நாடாரின் தணிக்கையாளருமான பாலசுந்தரத்தைப் பார்த்தார். 'என்ன சார் இவங்களுக்கு சேர வேண்டியதுன்னு ஏதாச்சும் இருக்கா. பார்த்து சொல்லிருங்களேன்.'

அவருடைய குரலிலிருந்த கேலி ரத்தினவேலுவை உசுப்பிவிட்டது. 'என்ன தம்பி ஒங்க கொரல்ல கேலி இருக்காப்ல இருக்கு?' என்றார் கோபத்துடன்.

மோகன் பதற்றமடையாமல் அவரைப் பார்த்தார். 'கேலி இல்லாம என்னய்யா ச்செய்யும்? நியாயமா பாக்கப் போனா நீங்கதான் நாடாருக்கு குடுக்க வேண்டியிருக்குன்னு சொல்லணும்.'

ரத்தினவேலு தன்னுடைய இருக்கையை பின்னால் தள்ளிவிட்டு எழுந்து நின்றார். 'எலேய் ராசேந்திரா நா ஒனக்கு அப்பவே சொன்னேன். இந்த பயலுவள பாத்து பேசி ஒன்னும் ஆகப்போறதில்லேன்னு.. எளுந்து வாலே.. எங்க பேசிக்கணுமோ அங்கன பேசிக்கிறுவம்.. யார எங்க அடிச்சா யார் எங்க அளுவாங்கறது இவனுங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கும்.. ஆனா எனக்கு அப்படியில்லலே..'

ராசேந்திரனுக்கு மோகன் என்ன சொல்ல வருகிறார் என்பது லேசாக விளங்கியதால் எழுந்து தன் தந்தையின் கரத்தைப் பற்றி இருக்கையில் அமர்த்தினான். 'அப்பா பதறாம ஒக்காருங்க. இவங்க ரெண்டு பேரும் என்ன சொல்ல வராங்கன்னுதான் கேப்பமே..'

மோகன் பாலசுந்தரத்தை பார்த்தார். அவர் தன் முன் மேசை மீது விரித்து வைத்திருந்த கோப்பைப் பார்த்தவாறு அதிலிருந்து ராசேந்திரன் கடந்த ஒன்றரையாண்டு காலமாக நிறுவன வங்கி கணக்கிலிருந்து எடுத்த தொகையை தேதி வாரியாக வாசிக்க ரத்தினவேலு பதில் பேச முடியாமல் சிலையென அமர்ந்திருந்தார்.

நிதானமாக வாசித்து முடித்த பாலசுந்தரம் நிமிர்ந்து ரத்தினவேலுவைப் பார்த்தார். 'இப்ப சொல்லுங்கய்யா. என்ன செய்யலாம்?'

ரத்தினவேலு திரும்பி தன் மகனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'என்னலே ராசேந்திரா.. என்ன பேசாம ஒக்காந்துருக்கே..'

ராசேந்திரன் அலட்சியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். 'எல்லாம் பிசினசுக்காக எடுத்ததுதான்..'

பாலசுந்தரம் இடைமறித்தார். 'சரி தம்பி.. பிசினசுக்காகன்னே வச்சிக்குவம். பேங்க்லருந்து நீங்க எடுத்த பணத்த கம்பெனி கணக்குல எந்த தலைப்புலயாவது எழுதியிருக்கணுமில்ல.. அத காணங்கறதாலத்தான கணக்குல வராத தொகைன்னு பேங்க் ரிகன்சிலியேஷன் ஸ்டேண்ட்மெண்ட்ல எங்க அசிஸ்டெண்ட்ஸ் எழுதி வச்சிருக்காங்க?'

'சார் அது ஒங்க அசிஸ்டெண்ட்ஸ் வேணும்னே செஞ்சது. ஒருவேளை மாமாவே இத அவங்கக்கிட்ட இப்படி எளுதுங்கன்னு சொல்லியிருக்கலாம். அவரெ போய் கேளுங்க இந்த கேள்விய.'

ரத்தினவேலுவுக்கு லேசாக புரிந்தது. பாம்பின் கால் பாம்பறியும்கறது சும்மாவா? எலேய் ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி இப்ப என் மடியிலயே கைவச்சிட்டியேடா படுபாவிப் பயலே.. இந்த எளவ எங்கிட்ட நேத்தே சொல்லியிருந்தேன்னா இங்கன வந்து இந்த வேலக்கார பயக முன்னால மூக்கறு பட்டிருக்கவேண்டாம்லலே.. இப்ப என்ன ச்செய்யலாம்.. என்ன இருந்தாலும் இவன் எம்புள்ளயா போய் தொலச்சுட்டானே.. இவனயும் இவனுங்க முன்னால விட்டுக்குடுத்துர முடியாதே.. அதே சமயத்துல ஒரேயடியா அடாவடித்தனமா பேசினாலும் அந்த பயல உசுப்பி விட்டா மாதிரி ஆயிரும்.. தப்ப நம்ம மேல வச்சிக்கிட்டு அவன் மேல மோதறது நமக்கே வெனையா போயிருமே.. சரீ.. இம்புட்டு பணத்தையும் இந்த பய என்ன செஞ்சிருப்பான்? ஒன்னு சூது.. இல்ல அந்த குட்டிங்க ஷோக்கு..

மோகனும் பாலசுந்தரமும் அமைதியுடன் ஆலோசனையில் அமர்ந்திருந்த ரத்தினவேலுவைப் பார்த்தனர். 'நீங்க என்னய்யா சொல்றீங்க?' என்றார் மோகன்.

ரத்தினவேலு அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'என்னெ எதுக்குய்யா கேக்கீக. அதான் எம்புள்ள சொல்லிட்டான்லே.. அவன் ச்சொல்றா மாதிரி ஒங்க மொதலாளி ஏன்யா செஞ்சிருக்கக் கூடாது. அவந்தான் எமகாதகப் பயலாச்சே.. பெத்த பொண்ணையே கட்டுன புருசனுக்கும் மாமனாருக்கும் எதிரா தூண்டிவிட்டவந்தானய்யா.. பணத்துக்கு வேண்டி என்ன வேணும்னாலும் செய்ய துணிஞ்சவனாச்சே.. இதுவும் ச்செய்வான் இதுக்கு மேலயும் ச்செய்வான்.. ஒங்கக் கிட்ட பேசி ஒன்னும் பேறாதுன்னு இவன் அப்பவே ச்சொன்னான். நாந்தான் கேக்காம சரீ.. சமாதானமா போயிருவமேன்னு இளுத்துக்கிட்டு வந்தேன்.. இனி ஒங்கக்கிட்ட பேசி பயனில்லைங்கறதுதான் தெரிஞ்சிப் போச்சே.. கோர்ட்ல பாத்துக்குவம்யா..'

பாலசுந்தரம் மோகனைப் பார்க்க அவர் புன்னகையுடன் எழுந்து நின்றார். 'அது ஒங்க இஷ்டம்யா.. ஆனா ஒன்னு.. அது ஒங்களுக்கும் ஒங்க மகனுக்குமே ஆபத்தா முடியாம இருந்தா சரி..'

ரத்தினவேலு கண்கள் சிவக்க அவரைப் பார்த்தார். 'வேணாம் தம்பி.. அதிகமா பேசாதீங்க.. வாங்கற சம்பளத்துக்கு என்ன ச்செய்யணுமோ அத ச்செஞ்சீட்டீங்கல்லே.. அத்தோட நிறுத்திக்குங்க.. சொல்லிட்டன்.. எலேய் எதுக்குலே இன்னமும் ஒக்காந்துருக்கே? எளும்பி வாலே..' என்றாவாறு ஆவேசத்துடன் வெளியேற ராசேந்திரன் வேறு வழியில்லாமல் அவரைப் பிந்தொடர்ந்தான்.

அவன் வாசலை நெருங்குவதற்குள் எழுந்து அவன் பின்னால் சென்றார் மோகன். 'தம்பி ஒரு நிமிஷம்.'

'என்ன?'

'நீங்க செஞ்சிருக்கற சித்து விளையாட்டுகள்ல ஒரு சின்ன பகுதியத்தான் நாங்க இப்ப சொன்னோங்கறது ஒங்களுக்கே தெரியும்.. நீங்க ராசம்மாவோட நகை அத்தனையையும் எடுத்து அந்த பொண்ணுக்கு போட்டுருக்கறது ராசம்மாவுக்கே தெரியாது.. பேங்க் லாக்கர்லதான் இருக்குன்னு நினைச்சிக்கிட்டிருக்கா. நாடாருக்கும் இதுவரைக்கும் தெரியாது. அத மட்டும் நா அவர்கிட்ட சொன்னேன்னு வச்சிக்குங்க..'

ராசேந்திரன் பதில் பேசாமல் வெளியேற மோகன் பாலசுந்தரத்தைப் பார்த்து கண்ணடித்தார். 'பாத்தீங்களா பாலு நாடார் கூட சேர்ந்து நமக்கு இந்த மிரட்டற வேலையெல்லாம் லேசா வர ஆரம்பிருச்சி..'

பாலசுந்தரம் உரக்க சிரித்தார். பிறகு..'வேணாம் மோகன்.. இத்தோட நிறுத்திக்குங்க.. இவனுங்க ரெண்டு பேரும் விஷப் பாம்புங்க.. இவங்கள ஹேண்டில் பண்ற திறமை நாடாருக்கு மட்டுந்தான்.. நம்ம ரெண்டு பேருக்கும் சுத்தமா கெடையாது.. பரமசிவன் கழுத்துல பாம்புங்களே அதுமாதிரிதான் நம்ம நிலமையும்.. நாடார் இருக்கற தைரியத்துல நாமளும்ம் இப்படியெல்லாம் நடிக்கலாம். அவ்வளவுதான்..' என்றார் சீரியசாக.

மோகன் உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்தார். 'உண்மைதான் பாலு.. எதுக்கும் நாடாருக்கு போன் செஞ்சி சொல்லிருவோம். அதுக்கப்புறம் அவர் பாடு இவங்க பாடு.'

****

2.2.07

சூரியன் - 170

ஜோ கிளம்பிச் சென்றதும் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருந்த பத்திரிகை நிரூபர்களின் கூட்டம் நினைவுக்கு வர மாதவனின் காரியதரிசி சுபோத்திடம் எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டதா என்று வினவும் நோக்கத்துடன் இண்டர்காமை எடுத்தார் ஃபிலிப் சுந்தரம்.

எதிர்முனையில் வெகுநேரம் யாரும் எடுக்காதிருக்க சலிப்புடன் இணைப்பைத் துண்டிக்க முயல சுபோத்தின் உதவியாளருடைய குரல் கேட்கவே, ‘Where is Mr.Subodh? What happened to the Press Meet?’ என்றார்.

சற்று நேர இடைவெளிக்குப் பிறகு தயக்கத்துடன் வந்த குரல் அவரை திடுக்கிட வைத்தது. ‘What do you mean?’

‘Yes Sir.. Subodh Sir has been summoned to the ED’s cabin half an hour back. He told me just a minute back that the meet would be presided over by our ED and our CGM Mr.Sundaralingam Sir.’

ஃபிலிப் சுந்தரம் ஒரு நொடி யோசித்துவிட்டு தன்னுடைய மேலதிகாரிகளின் நடத்தையைக் குறித்து சுபோத்தின் உதவியாளரிடம் விவாதிப்பது முறையல்ல என்பதை உணர்ந்தவராய், ‘It’s ok...’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

நிர்வாக இயக்குனர் சேதுமாதவன் இப்படி செய்வார் என்பது அவர் எதிர்பார்த்திருந்ததுதான். அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தார். மாதவன் புறப்பட்டுச் சென்றபோது இதைத்தான் செய்திருக்க வேண்டும் என்று அப்போதே நினைத்தவர் ஃபிலிப். ஆகவே அவராகவே கூட்டத்தை தலைமையேற்ற தீர்மானித்ததில் வியப்பில்லை. ஆனால் அவரிடமிருந்து மறைத்ததில்தான் அவருக்கு லேசான வருத்தம். அதொன்றும் பெரிதில்லை. சேதுமாதவனிடத்திலிருந்து அதை எதை எதிர்பார்த்ததுதான் தன்னுடைய முட்டாள்தனம் என்று ஆறுதலடைந்தார்.

ஆனால் சுந்தரலிங்கத்தின் போக்கைக் கண்டுதான் அவர் கூடுதல் வேதனையடைந்தார். அவருமல்லவா தன்னை புறக்கணித்துவிட்டார்! இத்தனை வருடப் பழக்கத்திற்கு அர்த்தமே இல்லாமல் செய்துவிட்டாரே என்று மாய்ந்துப் போனார்.

ஆயினும் இதைப் பெரிதுபடுத்தி மற்ற அதிகாரிகள் மத்தியில் குழுப்பத்தை உண்டுபண்ண விரும்பவில்லை அவர். ஆகவே சிறிது நேரம் கழித்து அவருடைய அறைக்குள் நுழைந்து, ‘என்ன சார் நீங்க ப்ரஸ் மீட்டுக்கு போகலையா?’ என்று வினவிய அவருடைய காரியதரிசி ராஜியிடம், ‘I am not feeling well Raji.. that’s why I’ve asked our CGM to assist our ED.. I am going home..’ என்று அவரை அனுப்பிவைத்தார்.

அத்துடன் நில்லாமல் நிரூபர்கள் கூட்டம் முடிவுறும் சமயத்தில் தான் அலுவலகத்தில் இருப்பது சரியல்ல என்ற நினைத்து இண்டர்காமில் வரவேற்பாளரை அழைத்து தன்னுடைய வாகன ஓட்டுனரை வாகனத்தை போர்ட்டிகோவுக்கு கொண்டுவர பணித்தார். அடுத்த சிலநொடிகளில் கிளம்பி தன்னுடைய காரியதரிசியைத் தவிர வேறு யாரிடமும் கூறிக்கொள்ளாமல் தன் அறையை விட்டு வெளியேறினார்.

அவர் போர்ட்டிகோவில் நுழைந்தவுடன் அங்கு குழுமியிருந்த பல அதிகாரிகளின் பார்வை தன்னைத் துளைப்பதைப் பொருட்படுத்தாமல் வாகனத்தில் ஏறி புறப்பட்டு வளாகத்தைக் கடந்ததும், ‘வீட்டுக்கு போகாதீங்க. நேரா சர்ச்சுல டிராப் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போங்க. என் வேல முடிஞ்சதும் நானே கார எடுத்துக்கிட்டு போறேன்.’ என்று கூறிவிட்டு பின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினார். ‘போதும்.. இது போதும்.. Time has come for me to leave..’ என்று அவரையுமறியாமல் அவருடைய உதடுகள் முனுமுனுத்தன.

***

‘ஏங்க இன்னொரு தடவ வீட்டுக்கு போன் போட்டு பாருங்களேன். மேக்கொண்டு விசாலத்துக்கு ஏதாச்சும் விவரம் கிடைச்சிதான்னு கேக்கலாமில்லே?’

பெட்டிகளில் துணிகளை அடுக்கி முடித்து அப்போதுதான் சோபாவில் சாய்ந்த மாதவன் தன் மனைவியை சலிப்புடன் பார்த்தார். ‘எதுக்கு சரோ. அப்புறம் அந்த மாமியோட புலம்பலத்தான் கேக்க வேண்டி வரும். பேசாம கிளம்பி போவோம். மிஞ்சிப்போனா இன்னும் நாலு மணி நேரம். அப்படியே ஏதாச்சும் டெவலப்மெண்ட் இருந்தாலும் சேர்மன் கூப்பிடுவார். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரேன்.’

‘ஆமாம்மா. போலீஸ் சீனிய பிக்கப் பண்ணதுன்னு உண்மைன்னா அவ்வளவு சீக்கிரம் விட்டுர மாட்டாங்க. வேணும்னா மைதிலிக்கு ஃபோன் பண்லாம். அதையும் நீ வேணாங்கற. அவங்களுக்கே ஃபோன் பண்ணக்கூடாதுன்னா வேற யாருக்குமே ஃபோன் பண்ண முடியாது. அதனால அப்பா சொல்றா மாதிரி நீ கொஞ்சம் பொறுமையா இருக்கறதுதான் நல்லது. ப்ளீஸ்மா’ என்றாள் வத்ஸலா.

அவளுக்கு சரோஜாவைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும் எங்கே சிவகாமியை மீண்டும் அழைத்து அவள் சீனியை இன்னும் விடவில்லையென்றோ அல்லது அவனுக்கிருந்த போதைப் பழக்கத்தைப் பற்றி மாலைப் பத்திரிகைகளில் வந்துவிட்டதென்றோ சொல்லிவிட்டால் தன் தாயைக் கட்டுப்படுத்த முடியாதோ என்ற அச்சமும் இருந்தது. பிறகு மும்பைச் சென்று சேரும் வரை அழுது ஆர்ப்பட்டம் செய்து தன்னையும் தன் தந்தையையும் சேர்த்து டென்ஷனாக்கிவிடுவார்கள் என்று நினைத்தாள்.

சீனிவாசனுக்கும் வத்ஸலாவுக்கும் இடையிலிருந்த நெருக்கம் அவன் போதைப் பொருட்களுக்கு அடிமையானதும் குறைந்து நாளடைவில் மறைந்தே போயிருந்தது. அவனைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்ததோ அதே அளவுதான் அவனுடைய நட்பு வட்டத்தைப் பற்றியும். ஆனால் அவனுக்கிருந்த விரும்பத்தகாத நட்புகளெல்லாம் மைதிலியுடன் பழக ஆரம்பித்து பிறகு போதைப் பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டதும் அறவே அற்றுப்போனதையும் அவனுடைய போக்கில் ஏற்பட்ட மாறுதலையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

தன்னைப் போன்றே மைதிலியும் MSW முடித்து அரசு சாரா சேவை மையங்களுடைய பொதுநல தொண்டு திட்டங்களில் ஒருங்கினைப்பாளராக பணியாற்றி வந்திருந்ததால் தன்னுடைய சகாக்கள் வழியாக அவளைப் பற்றி தெளிவாக கேட்டறிந்திருந்தாள். அவளுடைய அலுவலில் ஒருபாகமாகத்தான் சீனியை அவனுடைய போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து புனர்வாழ்வு அளிக்க அவள் முயல்கிறாள் என்றும் அவளுக்கு சீனியின் மீதிருந்தது வெறும் நட்பு மட்டும்தான் என்றும் நினைத்திருந்தாள்.

ஆனால் அது சீனியைப் பொறுத்தவரைக் காதல் என்பதும் அவன் அவளையே திருமணம் செய்துக்கொள்வதில் உறுதியாயிருந்தான் என்பதும் சரோஜா சொல்லித்தான் தெரியவந்தது. கல்லூரிப் படிப்பை முழுவதும் முடிக்காமல், ஒரு வேலையும் இல்லாமல் சுதந்திரமாய் சொல்லப் போனால் எவ்வித பொறுப்பும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இவனுடைய விருப்பத்தை மைதிலி ஏற்றுக்கொள்வாள் என்பது வத்ஸலாவைப் பொறுத்தவரை நம்பமுடியாததாகவே இருந்தது. ஆகவே அவர்களுடன் மும்பைக்குப் புறப்பட்டு வராமல் மும்பையில் தங்கி மைதிலியை இறுதியாக சந்தித்துவிட்டு வருகிறேன் என்றபோது ‘சரி முயற்சித்து பார்க்கட்டுமே’ என்ற நினைப்பில் அவளும் சேர்ந்து தன்னுடைய தாயிடம் பரிந்துபேசினாள். ஆனால் அதுவே இப்படியொரு பிரச்சினையில் கொண்டு விடும் என்று அவளும் நினைக்கவில்லை.

‘நீயும் ஒங்கப்பாவோட சேர்ந்துக்கிட்டு அவனெ அங்க விட்டுட்டு வரலாம்னு சொல்லாம இருந்திருந்தே இதுக்கு நா சம்மதிச்சே இருக்க மாட்டேன். இப்ப பார்.. நாம இல்லாத நேரத்துல.. அவன் பாவம் அங்க என்னெல்லாம் கஷ்டபடறானோ தெரியலையேடி..’ என்று மும்பையிலிருந்து ஃபோன் வந்தவுடனே இதற்கு நீதான் காரணம் என்பதுபோல் சரோஜா பழித்ததும் நினைவுக்கு வரவே இனியும் ஒருமுறை ஃபோன் செய்தால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்தாள் வத்ஸலா.

‘என்னமோ போங்க.. ஊருக்கு எப்ப போவோம் சீனிய எப்ப பாப்போம்னு இருக்கு. நாம போறதுக்குள்ள அவன அந்த மராத்தி பயலுங்க என்ன பாடுபடுத்திருவானுங்களோ தெரியலையேங்க..’ என்று மீண்டும் சரோஜா அங்கலாய்க்க வத்ஸலா தன் தந்தையைப் பார்த்தாள். அவர் ‘நீ ஒன்னும் பதில் பேசாதே.. பேசாம இரு..’ என்பதுபோல் கண்களால் சைகை செய்ய வத்ஸ்லா இங்கிருந்தால் வம்பு என்ற நினைப்பில் பால்கணிக்குச் சென்று சாலையில் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்று தோற்றுப் போய் பெருமூச்சுடன் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களை சுவாரஸ்யத்துடன் வேடிக்கைப் பார்க்கலானாள். சென்னையும் மும்பைக்கு சளைத்ததில்லைப் போல.. இருந்தும் இடுக்குகளில் லாவகமாக நுழைந்துச் செல்லும் இரு சக்கர வாகனங்களை செலுத்தும் இளைஞிகளைக் கவனித்தவள் ‘பாரேன்.. சென்னை girls பயங்கரமான ஆளுங்கதான் போலருக்கு..’ என்று முனுமுனுத்தாள்.

****

ஜோ மீண்டும் காவல் நிலையத்தில் நுழைந்ததுமே அங்கு மாணிக்கவேல் இல்லையென்பதைக் கவனித்தான். உடனே திரும்பி சபரியைப் பார்த்தான்.

‘பதட்டப்படாதீங்க. கேட்போம்.’

நிலையத்தில் நடுநாயகமாக இருந்த மேசையில் உதவி ஆய்வாளரையும் காணவில்லை. சபரி திரும்பி வலதுபுறமிருந்த இரு சிறையறைகளையும் பார்த்தார். காலியாயிருந்தன.

வலதுகோடியில் அமர்ந்திருந்த காவலர் ஒருவரை அணுகி, ‘எஸ்.ஐ. இல்லைங்களா?’ என்றார்.

அவர் அசுவாரஸ்யத்துடன் நிமிர்ந்துப் பார்த்து, ‘ஓ நீங்களா?’ என்று கூறிவிட்டு தன் வேலையைக் கவனிக்கலானார்.

ஜோவுக்கு ஆத்திரமாக வந்தது. ‘பார்த்தீங்களா சார்?’ என்று சபரியின் காதைக் கடித்தான். ‘நீங்க சொன்னீங்களேன்னு பாக்கேன்.’

அவன் ரகசியமாய் கூறியது காவலருடைய காதில் விழுந்துவிட்டது போலும். அவர் அவனைப் பார்த்து அலட்சியத்துடன் சிரித்தார். ‘தம்பி ஒங்களுக்கு வயசு போறாது. அதான் நீங்க எங்கன இருக்கீங்கன்னு மறந்துட்டு பேசறீங்க. அவர் வேணும்னா ஒங்களுக்கு பெரிய சாரா இருக்கலாம். எங்கள பொறுத்தவர அவர் ஒரு சாதாரண குற்றவாளி.. அதுவும் மர்டர் கேஸ்.. நீங்க எதிர்பாக்கற மரியாதையெல்லாம் இங்க குடுக்க மாட்டோம்.. பேசாம போய் அங்கன ஒக்காருங்க.. ஐயா வரட்டும்.. அத்தோட இன்ஸ்பெக்டர் அய்யாவும் வர்ற நேரம்.. இங்கன எல்லாம் நீங்க நிக்கப்படாது.. போங்க போய் ஒக்காருங்க..’

சபரி ஜோவைப் பார்த்தார். ‘போங்க ஜோ.. நா பேசிட்டு வரேன்..’

வேறு வழியில்லாமல் ஜோ வாசலை நோக்கி நகர சபரி காவலருடைய மேசையில் சாய்ந்து, ‘சார்.. இத வச்சிக்குங்க..’ என்ற கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை அவர் கையில் வைத்து மூடினார். அடுத்த நொடியே அது மாயமாய் மறைந்துபோக காவலரின் முகத்தில் ஒரு அசட்டு புன்னகை மலர்ந்தது. ‘ நீங்க அவர் பேசினத மனசுல வச்சிக்காதீங்க.. நாங்க போறப்போ இங்க இருந்த மாணிக்கவேல் சார எஸ்.ஐ. எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுப் போயிருக்காரான்னு மட்டும் சொல்லுங்க. மத்தத நாங்க தனபால்சாமி சார்கிட்ட பேசிக்கறோம். அவர் சொல்லித்தான் மறுபடியும் எஸ்.ஐய பாக்க வந்தோம்.’

எஸ்.பி தனபால்சாமியின் பெயரைக் கேட்டதுமே காவலர் உஷாரானார். பொய் சொல்லுகிறானோ என்ற சந்தேகத்தில் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சபரி சட்டைப்பையிலிருந்த எஸ்.பியின் அட்டையை எடுத்து நீட்ட காவலருடைய முகத்தில் கலவரம் பற்றிக்கொண்டது. ‘சார்.. எஸ்.பி சார தெரியும்னு அப்பவே சொல்லியிருக்கலாமில்ல.. என்ன சார்.. நா வேற நீங்க நீட்டுனத வாங்கிக்கிட்டேன்.. ஒக்காருங்க சார்.. அவர்கிட்ட போயி நம்மள போட்டுக் குடுத்துராதீங்க சார்.. நா இப்பத்தான் கொஞ்சம் இங்கன நிம்மதியாயிருக்கேன்.. இது அவருக்கு தெரிஞ்சதுன்னா நா தொலைஞ்சேன்..’

சபரி ஒரு புன்முறுவலுடன், ‘அதெல்லாம் சொல்ல மாட்டேன்.. நீங்க நா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்..’ என்றார்.

கை நீட்டி பணத்தை வாங்கும்போது சுற்றும் முற்றும் பார்க்காத காவலர் மறுகோடியில் அமர்ந்திருந்த காவலரைப் பார்த்தார். பிறகு குரலை சற்றே இறக்கி. ‘சார்.. அந்த ஹாஸ்பத்திரியிலருந்து ஃபோன் வந்துது.. அதான் இவரையும் கூட்டிக்கிட்டு போயிருக்காரு.. போய் ஒரு மணி நேரத்துக்கு மேல வுது.. அந்தம்மா மரண வாக்குமூல ஏதாச்சும் குடுக்கணும்னு சொன்னதா கேள்வி.. சரியா தெரியலை.. மத்தியானம் பாம்பேல பாம்ப் ஏதோ வெடிச்சிருச்சாமே.. என்னையும் அதோ அங்கன இருக்காரே அவரையும் ஸ்டேஷன பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு இன்ஸ்பெக்டரய்யாவும் கமிஷனர் பீசுக்கு கெளம்பிப் போய்ட்டாரு.. ரெண்டு பேரும் வர்ற நேரம்தான்.’

‘தாங்ஸ்ங்க..’ என்றவாறு எழுந்த சபரி ஜோவை நோக்கி நகரவும் வாசலில் வந்து நின்ற ஜீப்பிலிருந்து எஸ்.ஐ இறங்கவும் சரியாக இருந்தது. மாணிக்கவேலைக் காணவில்லை.

ஜோ பதற்றத்துடன் சபரியைப் பார்க்க அவர்.. ‘Please Joe.. மறுபடியும் அப்செட் ஆகி ஏதாவது பேசி காரியத்த கெடுத்துராதீங்க.. நா பேசிக்கறேன்..’ என்றார்.

தொடரும்..