27.10.06

சூரியன் 136

சுபோத் வெளியேறி வெகுநேரமாகியும் தன் இருக்கையிலேயே யோசனையுடன் அமர்ந்திருந்தார் ஃபிலிப் சுந்தரம்.

சுபோத்துடன் பேசுவதற்கு முன்பு நாடாரிடம் நடத்திய தொலைப்பேசி சம்பாஷனை நினைவுக்கு வர அதை எப்படி செயல்படுத்துவதென மேலும் யோசித்தார்.

***

‘என்னவேய்.. காலையிலருந்து பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீரு செய்யறது ஒன்னும் சரியில்லவேய்.. அம்புட்டுத்தான் சொல்வேன்..’

நாடார் என்ன சொல்ல வருகிறார் என்பது விளங்கியும், ‘என்ன சார் சொல்றீங்க, நான் என்ன செஞ்சேன்?’ என்றார்.

எதிர் முனையில் சிரிப்பொலி கேட்டது.. ‘இங்கன பார்றா.. ஒமக்கு நடிக்கவும் தெரிஞ்சிருக்குவேய்.. சரி.. நேராவே கேக்கேன்.. அதென்ன திடீர்னு எச்.ஆர் தலைவர மாத்தாலாம்னு அந்த டாக்டர் பய சொல்றான்? அதுவும் அந்த ப்ராடுப் பய பாபு சுரேஷ சிபாரிசு பண்றான்? அவன்ய ரெண்டு பேரும் அடிச்ச கூட்டுக் கொள்ள போறாதாமா? புது சேர்மனுக்குத்தான் இந்த எளவு பிடிச்சவனுங்கள பத்தி தெரியாதுன்னா நீரும் சேர்ந்துக்கிட்டில்லய்யா ஆடுறீரு?’

சுந்தரம் எப்படி பதிலளிப்பதென யோசித்தவாறு அமர்ந்திருக்க அதற்கு தயாராயில்லையென்பதுபோல் எதிர்முனையிலிருந்து கோபத்துடன் குரல் வந்தது. ‘என்னய்யா.. எப்படி சமாளிக்கலாம்னு யோசிக்கீறீராக்கும்?’

‘அப்படியெல்லாம் இல்ல சார். டாக்டர் என்கிட்ட காலையில இந்த யோசனையெ சொன்னதும் நான் மறுத்து பேசத்தான் சார் செஞ்சேன்.. ஆனா எதுக்காக இவர வேணாங்கறீங்கன்னு வெளிப்படையா கேட்டதும்.. என்னால பதில் பேச முடியல.. வந்தனா ஹாஸ்ப்பிட்டல்லருந்து வந்ததும் இதப்பத்தி பேசி முடிவெடுக்கலாம்னு சொல்லிப் பார்த்தேன். சரின்னு சொல்லிட்டு போனா மாதிரித்தான் தெரிஞ்சது.. ஆனா திடீர்னு சேர்மன் சேம்பர்ல வச்சி கேட்டதும்..’

எதிர்முனையில் சற்று நேர இடைவெளிக்குப் பிறகு குரல் வந்தது. ‘சரிய்யா.. நீரு சொல்ற வெளக்கமும் சரியாத்தான் இருக்கு.. அது போட்டும்.. இப்ப அந்த பயதான் போர்ட்ல இல்லையே.. நீரு அந்த பாபு சுரேஸ் விஷயத்துல நா மறுபடியும் சொல்றவரைக்கும் எந்த ஆர்டரும் போடப்படாது.. வெளங்குதா?’

அதெப்படி? சேர்மன் கேட்டால்?

அதற்கேற்றார்போல் எதிர்முனையிலிருந்து பதில் வர சுந்தரம் அசந்துப் போனார்.

‘சேர்மன் கேட்டார்.. சீர்மன் கேட்டார்னு ஆர்டர் ஏதாச்சும் போட்டீரு.. சும்மாருக்க மாட்டேன்..’

இதென்னடா புது சோதனை என்று நொந்துப்போனார் சுந்தரம். இருப்பினும் வேறு வழியின்றி, ‘சரி சார்..’ என்றவாறு இணைப்பைத் துண்டிக்க முயன்றார்.

நாடார் விடுவதாயில்லை. ‘இரும்யா.. அப்படியென்ன வெட்டி முறியற வேலை?’

சுந்தரம் ஒலிவாங்கியின் வாயை மூடியவாறு மேசை மீதிருந்த குடிநீரை எடுத்து ஒரு வாய் பருகினார். ‘சொல்லுங்க சார்.’ என்றார்.

‘டாக்டர் எடத்துல யார் வருவான்னு ஏதாச்சும் பேச்சு நடக்குதா?’

ஃபிலிப் சுந்தரம் என்ன சொல்வதென யோசித்தார். இதுவரை அதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லையே.. டாக்டர் சோமசுந்தரம் ஓய்வு பெற்றதும் அவருடைய பிரதிநிதி ஒருவரைத்தான் தன்னுடைய இடத்திற்கு நியமிப்பார் என்பது உயர் அதிகாரிகள் அனைவரும் தங்களுக்குள் நினைத்திருந்தனர்.

‘அநேகமா அவரோட ஆடிட்டர் இருக்காரே.. அதான் அந்த வேணு.. அவராத்தான் இருக்கும்.. அவரோட ஹாஸ்ப்பிடல் ஆடிட்டரே அவர்தானே..’ என்று சுந்தரலிங்கம் தன்னிடம் கூறியது நினைவுக்கு வர ‘டாக்டரோட ஆடிட்டராத்தான் இருக்கும்னு எங்களுக்குள்ளே ஊகிச்சிருக்கோம் சார்.’ என்றார் ஃபிலிப்.

எதிர்முனையில் ஏளன சிரிப்பு. ‘அவனுந்தான இந்த கொளப்பத்துல மாட்டிக்கிட்டிருக்கான்? அவனெ எப்படி கொண்டுவர்றது?’

‘என்ன சார் சொல்றீங்க?’

‘என்னவேய் நீரு? டாக்டரு கடன் வாங்கியிருக்கற அந்த கம்பெனி போர்ட்ல இந்த வேணுகோபால்தானய்யா டைரக்டரு? அந்தாளும் அங்கருந்து இந்நேரம் ராஜிநாமா செஞ்சிருப்பானே.. அவனெப் போயி நம்ம போர்ட்ல வப்பானா அந்த டாக்டரு? நிச்சயமா மாட்டான்..’

சரி.. அதுக்கு நா என்ன செய்யணுங்கறீங்க? என்று தனக்குள் முனகினார் ஃபிலிப். அவருக்கு தேவையில்லாத விஷயம் இது என்று நினைத்தார்.

‘தெரியலையாக்கும்.. சரி தொலையட்டும்.. நா மனசுல நினைச்சிக்கிட்டிருக்கறத ஒம்ம காதுல போட்டு வக்கேன். நீர் ஒன்னு செய்யும்.. சமயங் கெடைக்கறப்ப நம்ம சேர்மன் காதுல இத போட்டு வையும்.. என்னய்யா செய்வீறா?’

இதென்னடா புது தலைவலி என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட ஃபிலிப், ‘சொல்லுங்க சார்..’ என்றார்.

அடுத்த சில நொடிகள் எதிர்முனையிலிருந்து வந்த தகவல் அவரை திடுக்கிட வைத்தது. என்ன ஆள் இவர்? குட்டைய கெளறி விட்டு மீன பிடிக்கப் பாக்காரே.. ஞாயித்துக் கிழமையானா கோயிலுக்கு போறவருக்கு எப்படி இப்படியெல்லாம் யோசிக்க தோனுது?

‘என்னய்யா.. நா சொல்றது பிடிக்கலையாக்கும்? சைலண்டாருக்கீரு?’

ஃபிலிப் தயங்கினார்.

‘ஒமக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. நீருதான் பைபிள் ப்ரீச்சராச்சேய்யா.. பிரசங்கம் பண்றதுக்கு முன்னாடி அதுலருக்கா மாதிரியே நாம நடந்துக்க வேணாமான்னு யோசிக்கறவராச்சே..’

ஃபிலிப் மவுனம் சாதித்தார்.

‘சரிய்யா.. நா சொன்ன வெசயத்த மறந்துரும்.. நானே பாத்துக்கறேன்.. நா ஒம்ம கிட்ட சொன்ன வெசயத்த யார்கிட்டயாவது சொல்லாம இருந்தாப் போறும்.. என்னய்யா.. அதாவது முடியுமா? இல்ல அதயும் போட்டு ஒடச்சிருவீரா?’

ஃபிலிப் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார்.

‘என்னய்யா.. இதுக்கும் ஒத்துவர மாட்டீராக்கும்..’ எரிச்சலுடன் எதிர்முனையிலிருந்து குரல் வர ஃபிலிப் அவசர, அவசரமாக மறுத்தார். ‘இல்ல சார்..’

‘இல்லன்னா? சொல்வேங்கறீரா..இல்ல சொல்ல மாட்டேங்கறீரா?’

‘இல்ல சார்.. சொல்ல மாட்டேன்.. என்னெ தப்பா நெனச்சிக்காதீங்க..’

எதிர்முனையில் நாடார் சிரித்தார். ‘ஒம்ம எனக்கு தெரியாதாய்யா.. இருந்தாலும் கேட்டு வைக்கலாமேன்னு பார்த்தேன்.. சரி.. அப்புறம் ஒரு விசயம்.’

ஏதோ இந்த மட்டுக்கு விட்டாரே என்ற திருப்தியுடன், ‘சொல்லுங்க சார்..’ என்றார்.

‘நீரு அந்த சேர்மனோட பி.ஏ. இருக்கானே.. அதான்யா அந்த ஹிந்திக்கார பய.. அவனெ கொஞ்சம் மெரட்டி அந்த நியூசு எங்கருந்து வந்துது, யார் அனுப்புனான்னு கேட்டு சொல்லும்.. அது யாராருந்தாலும் எனக்கு தெரிஞ்சாவணும்.. வெளங்குதா?’

இது வேறயா?

ஆயினும் வேறு வழியில்லை. இதையும் தம்மால் முடியாது என்று அவர் மறுத்தால் அவ்வளவுதான்.. கேட்கவே வேண்டாம்..

‘சரி சார்.. நாளைக்குள்ள நா விசாரிச்சி சொல்றேன்....’

‘அதென்னய்யா நாளைக்கு.. இப்பவே அந்த பயல கூப்ட்டு மெரட்டறத விட்டுட்டு.. இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ளாற தெரிஞ்சாவணும்.. வெளங்குதா.. ஆறு மணிக்குள்ள.. வச்சிடறேன்..’

அவருக்கு பதிலளிக்க வாய்ப்பில்லாமல் இணைப்பு துண்டிக்கப்படவும் தன்னுடைய அறைக்கதவு தட்டப்படவும் சரியாயிருந்தது..

தயங்கி நின்ற சுபோத் மிஷ்ராவைப் பார்த்ததும்..இவனிடமிருந்து எப்படியாவது விஷயத்தை கறந்துவிடவேண்டும் என்று நினைப்புடன்.. ‘கம் இன்’ என்றார்.

****

ஃபிலிப் சுந்தரம் தன் மேசை மீதிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.

மணி ஐந்தரை!

இன்னும் அரை மணிநேரத்தில் நாடார் அழைத்தாலும் அழைப்பார். சுபோத் கூறிய விவரத்தை அவரிடம் தெரிவிப்பதற்கு முன் சேர்மனிடம் இந்த விஷயத்தைக் கூற வேண்டும்.

இண்டர்காமை எடுத்து சேர்மனுடைய காரியதரிசி அலுவலகத்தை அழைத்தார்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், ‘Is Chairman free Subodh?’ என்றார்.

‘No Sir.. A visitor is there..’

விசிட்டரா.. இந்நேரத்திலா? ‘Who is that Subodh?’

எதிர்முனையில் சற்று தயங்குவது தெரிந்தது. ‘Sir.. one Mr.Thanapal.. from Chennai Crime branch.. A police officer Sir..’

போலீஸ் அதிகாரியா? அதுவும் இந்த நேரத்தில்! என்னாவாயிருக்கும்? இதை வெளிப்படையாக அவருடைய காரியதரிசியிடம் கேட்பது நன்றாயிருக்காது என்று நினைத்தார்.

‘ஓக்கே.. அவர் வெளியேறுனதும் என்னெ கூப்டுங்க.. நா சார் போறதுக்குள்ள பாக்கணும்.. It’s urgent..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்து தன்னுடைய பிரத்தியேக பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தைக் கழுவி துடைத்தார்.

அறையில் தன்னுடைய செல்ஃபோன் சிணுங்கும் ஓசை கேட்க துவாலையை தோளில் இட்டுக்கொண்டு விரைந்து சென்று யாரென பார்த்தார்.

வந்தனா!

இவரை மறந்தே போனேனே.. என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டு எடுத்து ‘ஹலோ..’ என்றார்..


தொடரும்..

26.10.06

சூரியன் 135

சிவகாமி மாமி ஒலிவாங்கியின் வாயைப் பொத்தியவாறு சீனியைப் பார்த்தாள்.

‘டேய் சீனி, சரோஜா ரொம்பவும் கோபமா இருக்கா. நீ பேசலேன்னுட்டாருக்கும். நீயும் கோபமா பேசி காரியத்த கெடுத்துராத. ஒடனே கெளம்பி வந்தாலும் வந்துருவோ.. அதனால ஜாக்கிரத.. ஒன் கால் பிரச்சினையை சொல்றதும், சொல்லாம இருக்கறதும் ஒன் இஷ்டம்.. ஆனா நிதானமா பேசு..’

சீனிவாசன் சரி மாமி என்றவாறு ஒலிவாங்கியை வாங்கி, ‘ஹாய்.. மம்மி..’ என்றான் வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன்.

எதிர் முனையிலிருந்து சரோஜா சரமாரியாக கேள்விகளைக் கேட்க சீனி நிதானத்துடன் பதிலளித்ததைப் பார்த்து மைதிலியும் சிவகாமி மாமியும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.

‘It is not like that Mom.. நான் காலையிலருந்து வீட்டுல இல்ல.. என் ஃப்ரெண்ட்சையெல்லாம் பார்த்து சொல்ல போயிருந்தேன்.. இப்பத்தான் வந்தேன்..’

‘எல்லாரையும் பார்த்து சொல்லியாச்சுன்னா இன்னும் எதுக்குடா அங்க தனியா இருக்கணும்.. நாளைக்கே பொறப்பட்டு வந்துரேன்..’

சரோஜாவின் உரத்த குரல் ஒலிவாங்கியைத் தாண்டி அருகில் நின்றிருந்த மைதிலிக்கும் கேட்டது. அவள் புருவங்களை உயர்த்தி சீனிவாசனைப் பார்த்தாள். நான்கு விரல்களை காட்டினாள்.

‘இல்ல மம்மி.. எல்லாரையும் பாக்க முடியல.. இன்னும் நாலஞ்சு நாள்.. இனி எப்போ இங்க வரப்போறேன்.. Let me be here till this week end.. நான் கமிங் சண்டே பொறப்பட்டு வந்துடறேன்.. மாமிய ட்ரெய்ன்ல ஏத்தி அனுப்பிட்டு.. .. அப்புறம் சென்னைதான்.. அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் மம்மி..  ப்ளீஸ்..’

எதிர்முனையில் அம்மா அப்பாவிடம் பேசுவது கேட்டது. அப்பா சாதாரணமாக நள்ளிரவுக்கு முன்பு வந்து அவனுக்கு நினைவில்லை. மணியைப் பார்த்தான்.. ஆறு மணி!

Dad has changed.. I should also.. I should land a job as soon as I reach Chennai.. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே.. மைதிலிய கல்யாணம் செஞ்சிக்கணும்னா எனக்கு ஒரு வேல வேணும்.. Or I should start a venture of my own..  

மைதிலியைப் பார்த்தான்.. என்ன என்பதுபோல் அவள் புருவத்தை உயர்த்த ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தான் சீனி..

சிவகாமி இதை கவனியாதவள்போல் ‘இனி இவாளே சமாளிச்சிப்பா ..’ என்று தனக்குள் பேசியவாறே சமையலறையை நோக்கி நடந்தாள் புன்னகையுடன்..

சற்று நேர இடைவெளிக்குப் பிறகு எதிர்முனையில் தன் தந்தை பேசுவதை உணர்ந்த சீனிவாசன்.. ‘ஹாய் டாட்.. First day in the office.. எப்படி இருந்தது?’ என்றான்.

மைதிலி வியப்புடன் புருவங்களை உயர்த்தினாள். ஹேய்.. பரவால்லையே என்று உதடுகளை அசைத்தாள் ஒலி வராமல்.. சீனி தன் தந்தையைப் பார்த்தாலே விலகிச் சென்றுவிடுவான் என்றுதான் அவள் கேள்விப்பட்டிருந்தாள். Dad hates me like anything என்று சீனியே அடிக்கடி சொல்லி அலுத்துக்கொள்வதையும் கேட்டிருக்கிறாள்..

எதிர்முனையிலிருந்து என்ன பேசினாரோ சீனியின் முகமெல்லாம் மலர்ந்துபோனதை வியப்புடன் பார்த்தாள்.

‘ஆமா டாட்.. மைதிலியையும் பார்த்து பேசணும்.. தாங்ஸ் டாட்.. Yes.. Dad.. I didn’t expect this from you.. Dad.. Thanks..’ உணர்ச்சி மிகுதியால் சீனிவாசனின் உதடுகள் நடுங்குவதைக் கண்ட மைதிலி அவனுடைய கரத்தை ஆதரவாக பற்றினாள்..

அடுத்த சில நிமிடங்களில் இணைப்பைத் துண்டித்துவிட்டு மைதிலியின் உதவியுடன் ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த சீனிவாசன் முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருக்க மைதிலி அவனை தொந்தரவு செய்யாமல் அவனெதிரில் அமர்ந்தாள்..

சற்று நேரம் கழித்து நிமிர்ந்து மைதிலியைப் பார்த்தான். ‘You know what Dad said?’

‘என்ன?’

‘ஒன்னைய பார்த்து பேசிட்டு வரச் சொன்னார்.’

‘என்னன்னு? என்னெ சுத்தமா மறந்துருன்னுட்டா?’

சீனி சில நொடிகள் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.. பிறகு இல்லையென்று தலையை அசைத்தான்.

மைதிலி எழுந்து அவனருகில் சென்றமர்ந்தாள்.. ‘என்ன சீனி சொல்றே? அங்கிள் சரின்னுட்டாரா?’

‘இல்ல.. அப்படியில்ல..’

‘பின்னே..?’

‘நாம ரெண்டு பேரும் ஆற அமர ஒக்காந்து பேசணுமாம்.. நம்ம ரெண்டு பேருடைய லைஃப பத்தி.. அதனால பாதிக்கப்படப் போறவங்கள பத்தி..’

மைதிலி அவனை நெருங்கி அமர்ந்து அவனுடைய கரங்களை எடுத்து தன்னுடைய கரங்களுக்கு பொதிந்துக்கொண்டாள்..

‘I did not expect this Sreeni.. Of all the people.. from Uncle..’ என்றாள்.. கண்களில் கண்ணீருடன்..

சீனிவாசன் சிவகாமி மாமி கையில் காப்பி கோப்பைகளுடன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தன்னுடைய கரங்களை விடுவித்துக்கொண்டு சற்று தள்ளியமர்ந்தான்.

‘என்னடா என்ன சொல்றா ஒங்கம்மா? ஒடனே பொறப்பட்டு வந்தாத்தான் ஆச்சுங்கறாளா?’ என்றவாறு வந்த மாமி ஒரு கோப்பையை அவனிடமும் இன்னொரு கோப்பையை மைதிலியிடமும் கொடுத்துவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திராமல் திரும்பி நடந்தாள்..

‘இல்ல மாமி.. இந்த வாரக் கடைசியில ஒங்களையும் கூட்டிக்கிட்டு வரேன்னு சொன்னேன். அம்மா, அப்பா ரெண்டு பேருமே சரின்னுட்டாங்க..’

சிவகாமி சட்டென்று நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். ‘அப்படியா.. பேஷ்..’ என்றவள் மைதிலையைப் பார்த்தாள். ‘ஏண்டிம்மா.. இவனுக்கு அதுக்குள்ள கட்டு பிரிச்சிருவாளா என்ன?’

மைதிலி யோசனையுடன் இருவரையும் பார்த்தாள். ‘ஆமாம் மாமி.. நேக்கும் அதான் யோசனையாருக்கு.. டாக்டர் அங்கிள்கிட்டதான் நாளைக்கு கேக்கணும்.. நானும் ஏதோ யோசனையில நாலுன்னு விரல காட்டுனேன்.. இவனும் நாலு நாள்னு கணக்கு போட்டு இந்த வீக் எண்டுன்னு சொல்லிட்டான்.. ஹேர் லைன் க்ராக்னுதானெ சொன்னார் மாமி.. பிரிச்சிருவார்னு நினைக்கேன்.. மாட்டேன்னு சொன்னார்னா அப்படியே போயிரவேண்டியதுதான்.. என்ன சீனி?’

சீனிவாசன் கையிலிருந்த காலி கோப்பையை மாமியிடம் நீட்டினான். ‘இனிமேலும் மம்மிக்கிட்ட பொய் சொல்ல முடியாது மாமி.. கட்டோடயே போயிர வேண்டியதுதான்.. இல்லன்னா மம்மியே பொறப்பட்டு வந்தாலும் வந்துருவாங்க..’ என்றவாறு அவன் மைதிலியை நோக்கி திரும்ப மாமி புரிந்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்..

‘நீ என்னமோ சொல்ல வந்தியே.. மை..?’

மைதிலி அவனை நெருங்கியமர்ந்தாள். ‘அங்கிள் சொன்னத யோசிச்சி பார்த்தேன் சீனி.. அவர் அம்மா அப்பாவத்தான் மீன் பண்ணித்தான சொன்னார்?’

ஆமாம் என்பதுபோல் தலையையசைத்தான் சீனி. ‘அப்படித்தான் நானும் நெனக்கிறேன். அப்பா பேசன டோன்லருந்து I think he has realised the intensity of our friendship.. He has changed.. My.. I am unable to believe that he could change his attitude towards so dramatically.. I just can’t believe this.. I knew that he was totally against my friendship with you till last week..’

அவன் கூறியதை ஆமோதிப்பதுபோல் தலையை அசைத்த மைதிலி எழுந்து நின்றாள். ‘நான் கெளம்பறேன் சீனி.. இப்ப கெளம்பினாத்தான் எட்டு மணிக்காச்சும் வீடு போய் சேரமுடியும்.. Don’t worry.. I will talk to அம்மா.. அவோ அப்பாக் கிட்ட பேசி சம்மதிக்க வைப்பான்னு நினைக்கறேன்.. நீ ரிலாக்ஸ் பண்ணு.. ரெண்டு நா கழிச்சி நல்ல நியூசோட ஃபோன் பண்றேன்.. நான் ஒன்னெ கூப்டற வரைக்கும் நீ என் மொபைலுக்கு பண்ணாத.. I need some time to think about this.. I mean the shift to Chennai.. I’ll have to talk to my boss.. my friends and like.. ரெண்டே நாள்.. பை..’ என்றவள் சமையலறைக்குள் சென்று.. ‘மாமி நா வரேன்.. நாழியாயிருச்சி.. சீனிய பாத்துக்குங்கோ.. ஏதாச்சும் வேணும்னா என் மொபைலுக்கு ஃபோன் பண்ணுங்கோ.. சீனியாண்ட என் நம்பர் இருக்கு..’ என்று விடைபெற்றுக்கொண்டு திரும்பும் வழியில் சீனியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு விடுவிடுவென வாசலை நோக்கி நடந்தாள்..

*******

‘இங்க பார்த்தியாடி ஒங்கப்பாவ. நா அப்பவே சொல்லல ,இவர் நம்மள மறந்தே போயிருப்பார்னு.. நீதான் கேக்க மாட்டேன்னுட்டே..’

ஹாலிலிருந்த சோபாவில் சாய்ந்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த பாபு சுரேஷ் திடுக்கிட்டு விழித்து வீட்டிற்குள் நுழைந்த தன் மனைவியையும் மகளையும் பார்த்தார்..

‘என்னப்பா நீங்க.. ஆஃபீஸ்லருந்து வந்ததும் ஃபோன் பண்றேன்னு சொன்னீங்க?’ என்ற ரம்யா அவருடைய முகத்தைப் பார்த்துவிட்டு சோபாவில் தன் தந்தையின் அருகில் அமர்ந்தாள். ‘என்ன டாட், எதுவும் பிரச்சினையா?’ என்றாள் மிருதுவாக..

சூசீந்தராவும் அப்போதுதான் தன் கணவனின் முகத்தைக் கவனித்தாள். அதில் அன்று காலையில் காணாத ஒருவித கலக்கம் தென்பட அவளும் கையிலிருந்த பொருட்களை தரையில் வைத்துவிட்டு அவரருகில் அமர்ந்தாள். ‘என்னங்க.. என்ன என்னவோ மாதிரி இருக்கீங்க?’

பாபு இருவரையும் பார்த்தார். இன்னைக்கி வரைக்கும் ஆஃபீஸ் விஷயத்த இவங்க ரெண்டு பேர்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணதேயில்லையே.. இன்னைக்கி மட்டும்... ஒருவேளை நடந்த விஷயத்த இவங்ககிட்ட சொல்றதுனால ஒருவேளை தன்னுடய பாரம் குறைஞ்சாலும் குறையலாமே..

‘என்ன டாட்.. ஆஃபீஸ்ல ஏதும் ப்ராப்ளமா? எங்ககிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க..’

பாபு தன் மகளைப் பார்த்தாள். அவளுடைய முகத்திலிருந்த பாசத்தை இதற்கு முன் அவர் பார்த்ததே இல்லை.. ‘ஆமாம்மா.. கொஞ்சம் சீரியசான விஷயம்தான்..’

‘என்னங்க.. சொல்லுங்களேன்.. புது சேர்மன் ஜாய்ன் பண்றார்னு கேள்விப்பட்டேனே.. அதுவா?’ என்றாள் சுசீந்தரா?

அட! என்ற வியப்பு மேலோங்க தன் மனைவியைப் பார்த்தார். ‘அதுவுந்தான்.. அது சரி ஒனக்கெப்படி சேர்மன் இன்னைக்கி ஜாய்ன் பண்றார்னு தெரியும்?’

நளினிதான் இன்னைக்கி கடைக்கி போற வழியில சொன்னா.. ஹிண்டுல போட்டிருந்திச்சாமே..

‘ஆமா டாட்.. நாந்தான் சொன்னேன்.. அதிருக்கட்டும்.. அதுக்கும் ஒங்க டென்ஷனுக்கும் என்ன சம்பந்தம் டாட்?’

‘எங்க போர்ட்லருந்து ஒரு சீனியர் டைரக்டர் போட்லருந்து ராஜிநாமா செஞ்சிட்டார்மா.. அவர் எனக்கு காட்ஃபாதர் மாதிரி.. அவருக்காக நான் சில முட்டாள்தனமான காரியம்லாம் செஞ்சிருக்கேன்.. என்னெ எப்படா பழிவாங்கலாம்னு துடிச்சிட்டிருக்கற சில எக்ஸ்யூட்டிவ்ஸ் அவர் இல்லாத இந்த நேரத்துல ஏதாச்சும் செஞ்சிருவாங்களோன்னு...’

ரம்யா தன் தந்தையை கரங்களை ஆதரவுடன் தொட்டாள். ‘டாட்.. நடக்க இருக்கறது நடக்கத்தான் செய்யும்.. ஒங்களுக்கு என்ன ஆனாலும் நாம மூனு பேரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம்.. Why do you worry? இந்த நேரத்துல இந்த கல்யாணத்த நடத்தறது சரியில்லைன்னு பட்டா.. தள்ளி வச்சிரலாம் டாட்.. may be for two, three months.. குமார் வீட்டுல ஒத்துக்கிட்டா சரி.. இல்லன்னா வேற எடம் பாத்துக்கலாம்.. I am not too concerned about my marriage..’

சூசீந்தரா அதிர்ச்சியுடன் தன் மகளைப் பார்த்தாள். ‘ஏய் என்ன பேசறே? மாப்பிள்ளை வீட்டுல போயி இவருக்கு பிரச்சினைன்னு சொல்ல சொல்றீயா? வேற வெனையே வேணாம்.. எதுக்கு இந்த சம்பந்தம்னு வெலகிறுவாங்க.. நீ சும்மா இரு.. அபசகுணமா ஏதாச்சும் சொல்லிக்கிட்டு.. அப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டும்.. ஏங்க.. நா போயி சூடா ஒரு காப்பி போட்டு கொண்டு வாரேன்.. நீங்க அத குடிச்சிட்டு போய் குளிங்க.. என்னைக்கோ நடந்தத நெனச்சி டென்ஷனாவுறதுல எந்த பிரயோசனமும் இல்ல.. நடக்கறது நடக்கட்டும்.. ஏய் நளினி.. நீ எழுந்து ஒன் ரூமுக்கு போய் இந்த சாமானையெல்லாம் சரிபார்த்து பீரோவில வச்சிட்டு குளிச்சிட்டு கிச்சனுக்கு வா..’ என்றவாறு எழுந்து அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் சமையலறையை நோக்கி மிடுக்காக நடந்த தன் மனைவியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் பாபு சுரேஷ்..

‘பாத்தியாடா ஒங்கம்மாவ.. எவ்வளவு க்ளியரா திங்க் பண்றா? யெஸ்.. அப்பா கொஞ்ச நேரம் ஒக்காந்து யோசிச்சா இதுக்கு ஆன்சர் கிடைச்சுரும்னு நினைக்கேன்.. அதுக்காக கல்யாணத்தையெல்லாம் நிறுத்த வேணாம்.. நா குளிச்சிட்டு அந்த டைரக்டர் கிட்ட பேசறேன்.. I think there is point in what your mom says.. she may be correct..’ என்ற தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்தாள் நளினி..

‘ஆமா டாட்.. அம்மா நீங்க நெனக்கறா மாதிரி இல்லை.. பயங்கர Shrewd.. இன்னைக்கி அவங்க ஷாப்பிங் பண்ண ஸ்டைல பார்த்து நானே அசந்துட்டேன்.. இவ்வளவு நா பார்த்த அம்மாவான்னு நெனச்சேன்.. நான் ரூமுக்கு போய்ட்டு வரேன் டாட்.. வேணும்னா டின்னர் சாப்பிடறப்போ பேசலாம்.. பை..’

நளினி டீப்பாயிலும் தரையிலும் சிதறிக்கிடந்த பைகளை எடுத்துக்கொண்டு தன் அறையை நோக்கிச் செல்ல பாபு சுரேஷ் எழுந்து சமையலறையை நோக்கி நடந்தார்..

தொடரும்..

16.10.06

சூரியன் 134

எதிர்முனையில் வந்தனா மேடம் என்று அறிந்தபோது ஒரு நொடி எப்படி பதிலளிப்பதென தெரியாமல் தடுமாறிப்போனார் மாணிக்கவேல்.

‘என்ன மாணிக்கம் எப்படியிருக்கே?’

‘மேடம் நீங்க எப்படி இருக்கீங்க? அதச் சொல்லுங்க.’

எதிர் முனையிலிருந்து வந்தனாவின் பலஹீனமான சிரிப்பொலி கேட்டது. மாணிக்கம் ஒரு நொடி அவருக்காகப் பரிதாபப்பட்டார்.

மேடமும் கமலியும் எத்தனை நெருக்கமாக இருந்தார்கள் என்பது எனக்குத்தானே தெரியும்? வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாத நேரத்தில் கமலியின் அன்பும், பாசமும் அவருக்குக் கிடைத்தபோது எத்தனை மகிழ்ந்துப்போனாங்க மேடம்!

‘எனக்கென்னா நா நல்லாத்தான் இருக்கேன். நம்ம கொச்சி ப்ராஞ்சில சீஃப் மேனேஜரா இருக்காங்களே நளினி, அவங்களும் அவங்க ஹஸ்பெண்ட் நந்தக்குமாருந்தான் சரியான நேரத்துல ஹாஸ்ப்பிடலுக்கு வந்து என்னெ டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டாங்க மாணிக்கம். இல்லன்னா நா இப்பவும் அந்த இருட்டுப்பிடிச்ச வார்ட்லயே இருந்திருப்பேன்.. Thanks to both of them I am at home now.. சொல்லு நீ எப்படி இருக்கே, சந்தோஷ் எப்படியிருக்கான்.. அப்புறம் ராணி.. இன்னமும் கோபமாத்தான் இருக்காளா என் பேர்ல?’

ராணி இன்னமும் கோபமாத்தான் இருக்காளா? என்னவென்று சொல்வேன்? அவள் எப்படியிருக்கிறாள் என்று எனக்கே தெரியவில்லையே? அவளை எந்த அளவுக்கு இப்போது நம்பலாம் என்று தெரியவில்லையே? சந்தோஷ¤க்கு தன் தாயின் மீது இருக்கும் நம்பிக்கை எனக்கு என் மனைவியின் மீது இல்லையே?

என்றைக்கு அவள் என்னுடைய மனைவியாக இருந்திருக்கிறாள் அவளை நான் நம்புவதற்கு? திருமணம் முடிந்து வந்த நாள் முதலே என் தாயையும் தந்தையையும் ஏதோ வேண்டாதவர்களைப்போல் பார்த்தவளாயிற்றே? எப்போது இவர்கள் இருவரும் மண்டையைப் போடுவார்கள் என்று நினைத்தவளாயிற்றே?

கூட இருந்தே குழி தோண்டுவான் பங்காளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் கூட இருந்தே என் தந்தைக்கு குழி தோண்ட காத்திருப்பவளாயிற்றே என் மனைவி?

‘என்ன மாணிக்கம் சத்தத்தையே காணோம்.. யாராச்சும் பக்கத்துல இருக்காங்களா? அப்புறமா பண்ணவா?’

மாணிக்கம் ஒரு நொடி யோசித்தார். மேடம் சொன்னா மாதிரிதான்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிருவோமா? இந்த சூழ்நிலையில இவங்களோட நா பேசறத கேட்டுட்டு வந்து ராணி ஏதாச்சும் பேசிட்டா பிரச்சினையாயிருமே?

ஆனால் அவரையுமறியாமல், ‘இல்ல மேடம்.. யாரும் இல்லை.. நீங்க பேசுங்க..’ என்றார்.

‘நான் என்னத்த பேசறது.. பேசத் தொடங்கினா அழுகையாத்தான் வருது மாணிக்கம். ஏதோ நளினி இருக்கறதுனால கொஞ்சம் ஆறுதலாருக்கு.. வீட்டுக்கு வந்திருந்தவங்கள்லாம் போயாச்சா.. அப்பா எப்படி இருக்கார். ஒடம்புக்கும் ஏதும் இல்லையே? கமலி, கமலின்னு அடிச்சிக்கிட்டே இருப்பாரே மாணிக்கம்?’

மாணிக்கவேல் தன் தந்தையின் அறையை திரும்பிப் பார்த்தார். அவர் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. திரும்பி சமையலறையைப் பார்த்தார். ராணி நிற்பது தெரிந்தது. ஒருவேளை நான் பேசுவதை அங்கிருந்தே ஒட்டுக் கேட்கிறாளோ? இருக்கும்..

‘ஆமாம் மேடம்.. டாக்டர் அட்வைஸ்படி ரெண்டு தடவ செடேட்டிவ் இஞ்ஜெக்ட் பண்ணிருக்கேன்.. ரெண்டு மூனு நாளைக்கு அவர் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா நல்லதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.. கடவுள்தான் அவருக்கு இந்த துயரத்த தாங்கற சக்தி குடுக்கணும்.. Take care of yourself madam.. நளினி ஒங்கள பாக்க வர்றதுக்கு முன்னால நந்தக்குமாரோட இங்க வந்திருந்தாங்க. நான் எதிரிப்பார்க்கல..’

‘சரி மாணிக்கம்.. அப்புறம் கூப்பிடறேன்.. சந்தோஷையும், ராணியையும் விசாரிச்சதா சொல்லு. கமலிய நினைச்சி மனச போட்டு அலட்டிக்காதே.. அப்புறம் ஒரு விஷயம்..’

‘என்ன மேடம்?’

‘உன்னால முடிஞ்சா இங்க கொஞ்சம் வந்து போ.. ஒன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்..’

மாணிக்கம் யோசித்தார். இந்த நேரத்தில் மேடத்தைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பிச் சென்றால் ராணி என்ன நினைப்பாள்? யாரை யாருடன் சேர்த்து பேசுவதென்ற வரைமுறையில்லாமல் சிந்திப்பவளாயிற்றே..
இருப்பினும் தன்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று மேடம் கூறும்போது எப்படி போகாமல் இருப்பது? சந்தோஷிடம் மட்டும் கூறிவிட்டு போவோம். ராணி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்கச் சொல்வோம்.

‘என்ன மேடம்.. ஏதாச்சும் முக்கியமானதா? அஃபிஷியலா?’ என்றார்.

எதிர்முனையிலிருந்து சிறிது நேரத்திற்கு பதில் இல்லை.. அங்கு யாருடனோ மேடம் பேசுவது கேட்டது. பொறுமையுடன் காத்திருந்தார். சமையலறையிலிருந்து ராணி ஒட்டுக்கேட்பதுபோல் உணர்ந்தார்.

‘மேடம்?’

‘பரவால்ல மாணிக்கம்.. நீ வரவேணாம். அப்புறம் பாத்துக்கலாம்.. வச்சிடறேன்.’

அவருக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட, துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்ற மாணிக்கவேல் சட்டென்று திரும்பி சமையலறையைப் பார்த்தார். ராணி தன்னையே பார்த்துக்கொண்டு வாசலில் நிற்பது தெரிந்தது. அடுத்த நிமிடமே அவள் திரும்பி சமையலறைக்குள் திரும்பிச் சென்றுவிட மாணிக்கம் தன் அறைக்கு திரும்பினார்.

சமையலறையில் இருந்தவாறே அவர் பேசுவதை வைத்தே எதிர்முனையில் யார் என்பதை ஊகித்த ராணி தனக்குள் பற்களைக் கடித்தாள்.

சண்டாளி.. குடி கெடுக்க வந்தவ.. எம் பொண்ணெ எங்கிட்டருந்து நிரந்தரமா பிரிச்சிடியேடி பாவி.. இரு.. மொதல்ல இந்த கிழம்.. அப்புறம் நீ..

செய்யறதையும் செஞ்சிட்டு துக்கமா விசாரிக்கற துக்கம்.. இரு வச்சிக்கறேன்..

எரிந்துக்கொண்டிருந்த ஸ்டவ்வின் மீதிருந்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பதையும் உணராமல் வெறித்துப் பார்த்தவாறு ராணி நின்றுக்கொண்டிருக்க சமையலறைக்குள் நுழைந்த சந்தோஷ், ‘அம்மா என்ன பண்றீங்க.. கை சுடல?’ என்றவாறு தன் தாயின் கைகளை விலக்கியவாறு நேர் குத்திய பார்வையுடன் நின்ற தன் தாயை அதிர்ச்சியுடன் பார்த்தான். ‘அம்மா, என்னாச்சி.. are you alright..’

ஒரு நொடியில் சுதாரித்துக்கொண்ட ராணி சந்தோஷின் கைகளை விலக்கிவிட்டாள். ‘எனக்கு ஒன்னுமில்ல சந்தோஷ்.. கமலிய நினைச்சிக்கிட்டேன்.. என்னெ கொஞ்சம் தனியா விடு.. போ..’ என்றவாறு அவனை தள்ளிவிட்டாள்.

தன் தாயையே பார்த்தவாறு சற்று நேரம் நின்ற சந்தோஷ் மெள்ள வாசலை நோக்கி நடந்தான் சிந்தனையுடன். டாட் சொன்னது சரிதான்.. அம்மா இன்னமும் திருந்தல போலருக்கு.. திருந்துனா மாதிரி ஆக்ட் பண்றாங்கன்னு அப்பா சொன்னது சரியாருக்குமோ.. She has got something in her mind.. என்னவாருக்கும்.. கண்டுபிடிக்கணும்.. அப்பாகிட்ட சொல்லாம நாமளா கண்டுபிடிக்கணும்.. I will have to watch her carefully.. அப்பா சொன்னா மாதிரி ஒரு ப்ரொஃபஷனல் நர்ஸ் அப்பாய்ண்ட் பண்றது சரிதான்ன்னு நினைக்கேன்.. அப்பாக்கிட்ட கோ அஹெட்னு சொல்லணும்.. Yes. அம்மாவ நம்பி தாத்தாவ விட முடியாது..

தனக்குத்தானே பேசியவாறு தன் தந்தையின் அறைக்குள் நுழைந்த சந்தோஷ் வாசலில் நின்றிருந்த தன் தந்தையின் மீது மோதிக்கொள்ள அவனைப் பிடித்து நிறுத்திய மாணிக்கவேல் வெளிறிப் போயிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்து அதிர்ந்துப் போனார். ‘ஏய்.. சந்தோஷ்.. என்னாச்சி.. ஏன் இப்படி பேயப் பார்த்தா மாதிரி.. என்ன நடந்தது?’

சந்தோஷ் சுதாரித்துக்கொண்டு, ‘ஒன்னுமில்ல டாட்.. I am tired.. that’s all..’ என்றவாறு அறைக் கதவை மூடி தாளிட்டான்.

மாணிக்கவேல் வியப்புடன், ‘இப்ப எதுக்கு கதவ மூட்றே? அப்பா வந்தனா மேடம் வீடு வரைக்கும் போய்ட்டு வரலாம்னு பாக்கேன். அவங்க ஹாஸ்ப்பிடல்லருந்து டிஸ்சார்ஜ் ஆயி வந்துட்டாங்களாம். ஃபோன் பண்ணாங்க..’ என்றார்.

சந்தோஷ் தன் தந்தையைப் பார்த்தான். ‘டாட்.. அந்த நர்ஸ் விஷயம்.. டாக்டர் கிட்ட பேசினீங்களா?’

மாணிக்கவேல் என்னாயிற்று இவனுக்கு என்பதுபோல் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சந்தோஷ், ‘இல்ல டாட்.. எனக்கும் நீங்க சொன்ன ஐடியா நல்லதுன்னு தோனிச்சி. அதான்.. ஃபோன் பண்ணீங்களா டாட்?’ என்றான்.

மாணிக்கவேல் யோசனையுடன் தன் மகனையே பார்த்தார். என்னமோ நடந்திருக்கு.. இல்லன்னா அறைக்குள்ள நுழைஞ்சதும் கதவ சாத்தியிருக்க மாட்டான். ஒரு நர்ச ஏற்பாடு பண்ணப்போறேன்னு சொன்னப்போ எதிர்த்தவன் இப்ப உள்ள வந்ததும் வராததுமா ஏற்பாடு செஞ்சிட்டீங்களான்னு ஏன் கேட்டான்? ராணிய பத்திய சந்தேகம் இவனுக்கும் வந்திருச்சோ?
‘டாக்டர் க்ளினிக்லயும் இல்ல, வீட்லயும் இல்ல சந்தோஷ்.. நான் மேடத்த பார்த்துட்டு வர்ற வழியில க்ளினிக்ல போய் பார்த்துட்டு வரேன்.. நீயும் வரயா? தாத்தா எழுந்திருக்கறதுக்குள்ள வந்துரலாம்..’

சந்தோஷ் திடுக்கிட்டு தன் தந்தையைப் பார்த்தான். ‘இல்ல டாட் நா வரல.. நா தாத்தாவ பாத்துக்கிட்டு இங்கயே இருக்கேன்.. நீங்க போய்ட்டு வாங்க..’ என்றான் படபடப்புடன்.

அவனுடைய குரலில் இருந்த படபடப்பைக் கவனிக்க தவறாத மாணிக்கவேல் அவனையே சற்று நேரம் பார்த்தார். ‘ஏன் அம்மாதான் வீட்ல இருக்காள்லே.. நீ ஏன் இவ்வளவு டென்ஷனாவுற?’

தன் தவறையுணர்ந்த சந்தோஷ், ‘ஒன்னுமில்ல டாட்.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்கேன்.. I am really tired dad.. Don’t mistake me.. எனக்கும் மேடத்த பாக்கணுந்தான்.. ஆனா இப்ப இங்க யாராச்சும் இருக்கணும்.. அம்மாவ நம்பமுடியாது..’ என்றவன் தான் மீண்டும் செய்த தவறை உணர்ந்தவனாய் நாக்கைக் கடித்துக்கொண்டு தன் தந்தையைப் பார்த்தான்.

‘என்ன சொல்றே.. அம்மாவ நம்ப முடியாதா? அப்படீன்னா?’

சந்தோஷ் சிரித்தான். ‘நம்ப முடியாதுன்னா.. டாட்.. அவங்க சமையல்கட்டுலருக்கற வேலையில தாத்தா எழுந்து பசிக்குதுன்னு எதையாச்சும் கேட்டா தெரியாதுல்லே.. அவங்கதான் ஒரு வேலையில இருந்தா வீடே இடிஞ்சி விழுந்தாலும் கண்டுக்க மாட்டாங்களே.. அதச் சொன்னேன்.’

‘நீ சொல்றதும் சரிதான்.. அவ அப்படித்தான்.. நீ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு.. இருந்தாலும் தாத்தா¨ மேலயும் ஒரு பார்வை இருக்கட்டும்.. நான் அரை மணி நேரத்துல வந்துருவேன்.. ஜோ கூப்ட்டார்னா என்னெ மொபைல்ல காண்ட்டாக்ட் பண்ணச் சொல்லு..’ என்றவாறு புறப்பட்ட மாணிக்கவேல் தன் வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் தீவிரமாயிருந்த போக்குவரத்துடன் கலந்தாலும் சற்று முன் சந்தோஷ் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தார்.


தொடரும்..

13.10.06

சூரியன் 133

தனபால்சாமி, SP(Crime Branch)..

என்ன வேணும் இவருக்கு? ஏதாவது லோன் சமாச்சாரமா? அதற்கெதுக்கு நம்மள வந்து பாக்கணும்? ஏதாச்சும் ஃபங்ஷனுக்கு இன்வைட் பண்ண வந்திருப்பாரோ..

‘May I come in?’ என்ற கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தவர் தன் முன்னால் விரைப்புடன் நின்றவரைப் பார்த்தார். நல்ல வேளை, சீருடையில் இல்லாமல் இருந்தார்.

மாதவன் எழுந்து புன்னகையுடன், ‘Yes, Mr.Dhanapal.. please come in..’ அவரை வரவேற்று எதிரிலிருந்த இருக்கைகளில் ஒன்றைக் காட்டினார்.

‘சொல்லுங்க.. ஏதாவது முக்கியமான விஷயம் இல்லாம வந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். இன்னைக்கித்தான் நான் சார்ஜ் எடுத்திருக்கேன்.. கொஞ்சம் பிசி..’

தனபால் சாமி புன்னகையுடன், ‘You are right Mr.Madhavan, it is an important matter. நீங்க இன்றைக்குதான் சேர்மனாக சார்ஜ் எடுத்திருக்கீங்கன்னும் தெரியும். இருந்தாலும் what I am going to tell you now is so important I thought you should be forewarned about what you should expect...’

மாதவன் ஒன்றும் விளங்காமல் அவரையே பார்த்தார். என்ன சொல்றார் இவர்.. Forewarning? About what?

‘நான் சொல்றது ஒங்களுக்கு வியப்பா தெரியலாம் Mr.Madhavan. ஆனா ஒரு பத்து நிமிஷம் எனக்காக ஸ்பேர் செஞ்சீங்கன்னா ஒங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்.’

என்னடா இது? இன்னைக்கி இதுவரைக்கும் நடந்தது போறாதுன்னா இவர் வந்து.. பத்து நிமிஷம் சொல்ற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கப் போவுது. ஒரு வேள அந்த சோமசுந்தரம் விஷயமாருக்குமோ..

‘சொல்லுங்க.. பத்து நிமிஷத்துக்குள்ள முடிச்சிட்டீங்கன்னா நல்லாருக்கும்.’

தனபால் சாமி மீண்டும் புன்னகையுடன், ‘Thank you Mr. Madhavan. You won’t regret it.’ ஆரம்பித்தார்.

‘If you don’t mind.. could you tell me at what time you reached Chennai?’

மாதவன் வியப்புடன் அவரை பார்த்தார். Is he interrogating me? But why?

‘எதுக்கு இந்த கேள்வின்னு நா தெரிஞ்சிக்கலாமா?’ என்றார்.

தனபால் சாமி, ‘Sir Please cooperate with me.. I have reason to believe that someone in your own organization has intentionally used your name for a nefarious act when you were not even in Chennai.. That’s why this question. Please answer my question.’ என்றார் பொறுமையுடன்.

‘Used your name for a nefarious act’ என்ற வாக்கியம் மாதவனை பயமுறுத்தியது. என்னவாருக்கும்? கொலையா? கடத்தலா?

‘Mr.Madhavan?’

மாதவன் நிமிர்ந்து எதிரிலிருந்தவரைப் பார்த்தார். ‘நேற்று சாயந்தரம் சுமார் ஆறு மணி இருக்கும். மும்பையிலருந்து நான், என் மனைவி, என் மகள்னு மூனு பேர் ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்ல வந்தோம். என்னெ ரிசீவ் பண்ண வந்திருந்த என்னோட சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் will vouch this.’

தனபால் சாமி தேவையில்லை என்பதுபோல் தலையை அசைத்தார். ‘நீங்க எந்த ஃப்ளைட்ல எத்தன மணிக்கு வந்தீங்கன்னு ஏற்கனவே தெரிஞ்சிக்கிட்டுத்தான் ஒங்கள பாக்கவே வந்தேன்.. Don’t mistake me.. I just wanted to confirm..’

‘சொல்லுங்க Mr.தனபால்.. நீங்க கேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்? You said someone in my organization used my name for unwanted act.. You actually said nefarious act. Is it an illegal act, a crime.. or..’

‘சொல்றேன். அதுக்கு முன்னால இங்க ஒங்க பேருக்கு சிமிலரா பேர் இருக்கற எக்ஸ்க்யூட்டிவ்ஸ், ஐ மீன் மேல்மட்டத்துல, யாராவது இருக்காங்களா?’

மாதவன் யோசித்தார். வேறு யார் இருக்க முடியும் சேதுமாதவனைத் தவிர.. அவர் காலையில் கமிட்டி கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்னரே அவருடன் தலைமையகத்திலிருந்து அனைத்து உயர் அதிகாரிகளுடைய பெர்சனல் கோப்பையும் மேல்வாரியாக ஆராய்ந்திருந்ததால் சேதுமாதவனைத் தவிர தன்னுடைய பெயரில் வேறு யாரும் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. ‘இல்லன்னுதான் நினைக்கேன். அட்லீஸ்ட் நீங்க சொன்ன மேல் மட்டத்துல யாரும் இல்லை.. மிஸ்டர் சேதுமாதவனைத் தவிர.’

தனபால்சாமியின் முகம் சட்டென்று ஒரு நொடி பிரகாசமானது. ஆனால் அடுத்த நொடியே தன்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, ‘What is he?’ என்றார்.

‘He is our Executive Director. ஏறக்குறைய முப்பது வருட வங்கி அனுபவம் உடையவர். He is my number two..’

‘I see..’ என்று தனபால்சாமி சற்று நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார்.

‘இப்ப சொல்லுங்க மிஸ்டர் தனபால்.. What was the thing that he or someone else had done in my name? I would like to know.’

தனபால்சாமி அவரைக் கூர்ந்து பார்த்தார். ‘அவரோ அல்லது அவருடைய உத்தரவின்பேரில் வேறு சிலரோ தமிழ்நாட்டின் ஒரு பெரிய தொழிலதிபரை கடத்திச் சென்று, இரண்டு நாட்கள் சென்னையில் ஒரு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவிட்டு அவர்களுடைய காரியம் நிறைவேறியதும் விடுவித்திருக்கிறார்கள்.’

மாதவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடத்தல், துன்புறுத்தல் அல்லது கொலை மிரட்டல்.. சேதுமாதவன் தன்னோட காரியத்த சாதிக்க என்ன வேணும்னாலும் செய்வார் போலருக்கே.. will he attempt these things on me as well? ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.. சரீஈஈஈ.. எதுக்கு என் பேரை உபயோகிச்சார்.. அதுவும் நான் சென்னையில் இல்லாத சமயத்தில்.. நான் சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்த அன்று சென்னையில் இல்லை.. அல்லது இந்த வங்கிக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை என்பதை எளிதாக நிரூபிக்கக் கூடிய சூழ்நிலையில் என் பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் ஒரு முட்டாளா என்ன?

‘அதெப்படி சார்.. அவர்தான் இந்த சம்பவத்துக்கு பின்னால இருக்கார்னு அவ்வளவு உறுதியா சொல்றீங்க? Do you have any evidence?’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தார் தனபால்சாமி. ‘அவரோட ஆட்களால கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒரு கணிசமான தொகையை ஒங்க பேங்க்லருந்து கடனா வாங்கிட்டு கட்ட முடியாம தவிச்சிக்கிட்டிருக்கறவர். ஆனால் அவர் வேண்டுமென்றே கடனை அடைப்பதை தவிர்க்கிறார் என்று நினைத்து அவரை அடியாட்களை வைத்து கடத்தி, மிரட்டி, துன்புறுத்தி ஒரு வாரத்திற்குள் அவர் கடனில் பாதியை அடைப்பதாக வாக்குறுதியளித்தவுடன் விடுவித்திருக்கிறார்கள்..’

மாதவன் வியப்புடன் தனபால்சாமியைப் பார்த்தார். ‘இப்பவும் நீங்க circumstantial evidence வைத்துத்தான் பேசறீங்கன்னு நினைக்கிறேன். How can you be so sure that it was Sedhumadhavan who is behind this.. Then, how do you say that he used my name?’

தனபால் என்ன சொல்வதென தனக்குள்ளேயே ஒத்திகைப் பார்ப்பதுபோல் சற்று நேரம் மவுனமாய் இருந்தார். பிறகு, ‘அந்த தொழிலதிபர் விடுவிக்கப்பட்டதும் நேரா வந்தது எங்கக்கிட்டதான். அவர் கொடுத்த புகார்ல டிஸ்க்ரைப் பண்ண ஆட்கள தற்செயலா வேறொரு கேஸ்ல புடிச்சோம். அதுல ஒருத்தன் எங்கள அனுப்புனவர் மாதவன்.. இந்த பேங்க்ல பெரிய ஆஃபீசர்னு ஒத்துக்கிட்டான். அதுக்கப்புறம் அவன்கிட்டருந்து வாங்குன நம்பருக்கு ஒரு எஸ்.ஐ ஃபோன் செஞ்சப்போ இவர் நான் மாதவன் இல்லன்னு சொல்லியிருக்கார். கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வந்து போக முடியுமான்னு எங்க எஸ்.ஐ கேட்டப்போ இவர் தான் இன்னார்னு சொல்லி அவரையே மிரட்டியிருக்கார். அதுக்கப்புறம் ஒரு மணி நேரத்துல மினிஸ்டர் லெவல்லருந்து ஃபோன் வந்து அந்த ஆளுங்கள கேஸ் ஒன்னும் ஃபைல் பண்ணாம விட்டிருக்காங்க. அதனாலதான் அவ்வளவு உறுதியா சொல்றேன். இவர் அந்த வேலைய செஞ்சதுமில்லாம தன்னோட ஆட்கள் சொன்ன ஆளே தான் இல்லேன்னு மறுத்திருக்கார். அதுக்கப்புறந்தான் நான் கேள்விப்பட்டேன் புதுசா சேர்மனா வர்றவர் பெயர் மாதவன்னு.. அதனாலதான் சொல்றேன் அவர் ஒங்க பெயர யூஸ் பண்ணிருக்கார்னு..’

கடன் வாங்கிவிட்டு இன்சால்வன்சி பெட்டிஷன் கொடுத்து ஏமாற்ற நினைக்கும் பெரும் பணமுதலைகளை அடியாட்களை வைத்து மிரட்டும் வேலை அவருடைய முந்தைய வங்கியிலும் உள்ளதுதான். ஆனால் அத்தகைய செயலில் வங்கியின் உயர் அதிகாரிகள் எவருமே நேரடியாக தலையிடமாட்டார்கள். அப்படியே தலையிட்டாலும் தங்களுடைய பெயர் அத்தகைய அடியாட்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்..

ஆனால்.. சேது.. ச்சே.. ஒன்று சரியான முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவமாக இருக்க வேண்டும். முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை.. என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்று நினைப்பவர்தான் மிகவும் ஆபத்தானவர் என்பது மாதவன் அறிந்ததுதான்..

‘I understand Mr.Dhanapal.. you said they were caught in some other case as well.. Was my name used in that case also?’

‘இருக்கலாம்..’

‘அது என்ன கேஸ்னு நா தெரிஞ்சிக்கலாமா?’

தனபால் சற்று யோசித்தார். வீனாக அந்த இளம் பெண்ணின் பெயரை சந்திக்கு கொண்டுவரவேண்டுமா என்ன? பாவம் முன் பின் யோசியாமல் செய்த காரியந்தானே.. அதுவும் தன் மகளுடைய சிநேகிதியாயிற்றே.. வேண்டாம் என்ற முடிவுடன், ‘சாரி மிஸ்டர் மாதவன்.. That is still under investigation.. அதுவுமில்லாம அதுல ஒங்க பெயர யூஸ் பண்ணதும் இன்னும் தெளிவாகவில்லை.. உங்களை எச்சரித்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்துடனேயே இங்கு வந்தேன். தேவைப்பட்டால் மீண்டும் சந்திப்பேன்.. உங்களுடயை முழு ஒத்துழைப்பும் எனக்கு தேவைப்படும். பெரிய அதிகாரிகள் என்ற போர்வையிலும், அரசில் உள்ளவர்களுடன் ஒத்துழைப்பு இருக்கிறது என்பதாலும் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை சட்டம் பார்த்துக்கொண்டிருக்காது என்பதையும் தெளிவுபடுத்தவே முன்னறிவிப்பில்லாமல் உங்களை சந்திக்க வந்தேன்.. குட் பை..’

விறைப்புடன் வெளியேறிய தனபால்சாமி அறைக்கதவை மூடிக்கொண்டு செல்லும்வரை தன் இருக்கையில் அமர்ந்திருந்த மாதவன்.. what a day.. என்று முனுமுனுத்தவாறு தன் செல்ஃபோனை எடுத்து மகளை அழைத்தார். எதிர் முனையில் எடுத்ததும், ‘டேய்.. அப்பா பொறப்பட்டுட்டேன்.. ரூமுக்கு வந்துட்டீங்களா?’ என்றார்.

‘எஸ் டாட்.. சீக்கிரம் வந்து சேருங்க.. அம்மா ஃபோன கையில பிடிச்சிக்கிட்டு டென்ஷனோட இருக்காங்க.. நீங்க இன்னும் கால் மணியில இங்க இல்லன்னா அம்மா சீனிக்கு ஃபோன் பண்ணிருவாங்க போலருக்கு.. சீக்கிரம்.’

மாதன் புன்னகையுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய லாப்டாப்பை எடுத்துக்கொண்டு வெளியேற அறை வாசலில் காத்திருந்த அவருடைய ஓட்டுனர் அதை பெற்றுக்கொண்டு முன்னே சென்றான். ‘ஓக்கே சுபோத் நாளைக்கு பாக்கலாம்..’ என்றவாறு வெளியேறி லாபியில் அவருக்காக காத்திருந்த உயர் அதிகாரிகளிடம் கையைசைத்து விடைபெற்று வாகனத்தில் ஏறி அமர்ந்தார் மாதவன்..

தொடரும்..

11.10.06

சூரியன் 132

வங்கியின் பயிற்சிக் கல்லூரி தலைவர் சேவியர் ஃபெர்னாண்டோ சாதாரணமாக சீனியர் மேலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும் தினங்களில் மட்டுமே ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் வகுப்புகளை எடுப்பார்.

குமாஸ்தா மற்றும் கடைநிலை, இடைநிலை அதிகாரிகளுக்கான பயிற்சிகள் நடக்கும் நேரங்களில் வரவேற்பு மற்றும் பரிசளிப்பு விழாக்களக்களில் மட்டுமே கலந்துக்கொள்வார். மற்ற வகுப்புகளை அவரிடம் பணியாற்றிய மற்ற அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்.

வங்கியின் புதிய தலைவர் மாதவன் பங்குகொண்டு துவக்கி வைத்த பயிற்சி சீனியர் மேலாளர்களுக்கான பயிற்சி என்பதால் முதல் நாள் வகுப்புகளில் தன்னுடைய வகுப்பை எடுத்து முடித்துவிட்டு தன் அறைக்கு சென்று அமர்ந்து வங்கி முதல்வர் மாதவன் அன்று ஆற்றிய உரையை அம்மாத இறுதியில் வெளியாகவிருந்த கல்லூரியின் மாத இதழில் வெளியிடும் நோக்கத்துடன் சுருக்கமாக தன்னுடைய கணினியில் பதிந்து வைத்தார்.
வங்கியின் புதிய முதல்வர் மாதவன் ஆந்திராவிலுள்ள ஒரு கிளையில் மேலாளராக இருந்தபோது சேவியரும் அவருடன் பணிபுரிந்திருந்ததால் அவருடைய புத்திக் கூர்மை, அபாரமான நினைவாற்றல், எதிலும் சட்டென்று சாதக ,பாதங்களை கணக்கிட்டு முடிவெடுக்கும் திறன் சேவியருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

ஆகவே, அவர் தலைவராக இருக்கும் வரும் மூன்றாண்டுகளில் தன்னுடைய பொற்காலமாகவும் இருக்கும் என்று நினைத்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மும்பையில் தனியாக வசித்து வந்த காலத்தில் விளையாட்டாக ஒரு கணினியை வாங்கி அதனுடன் இரவும் பகலும் போராடி, டிபேஸ், ஃபாக்ஸ்ப்ரோ, வேர்ட் ஸ்டார் போன்ற மென்பொருள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடிப்பிடித்து படித்து தன்னுடைய நேரத்தைப் போக்கியது இப்போது வங்கியில் தன்னுடைய நிலையிலிருந்த அதிகாரிகளுக்கிடையில் தனக்கு மட்டுமே கணினியைப் பற்றிய ஓரளவு ஞானம் இருந்தது என்பதை அவரும் அறிந்துதான் இருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவர் மும்பையிலிருந்து மாற்றம் பெற்று துணைப் பொது மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டபோது இவரை எந்த பதவியில் அமர்த்துவது என்ற பிரச்சினை எழுந்தது.

இவருக்கு பதவியுர்வு கிடைத்ததே வங்கியின் இயக்குனர் சிலுவை மாணிக்கம் நாடாருடைய தயவால்தான் என்பது அவரும் தெரிந்தே வைத்திருந்தார். அதற்கு காரணம் ஃபிலிப் சுந்தரம்தான் என்பதும் அவருக்கு தெரியும். அவருடைய பதவி உயர்வை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் ஈ.டி. சேது மாதவன் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.

பதவி உயர்வு நேர்காணல் முடிந்த அன்றே பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு அவருடன் பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் அவரவர்களுடைய அடுத்த பதவி (Posting) அறிவிக்கப்பட்டது அவரைத் தவிர.

‘என்ன ஃபெர்னாண்டோ.. ப்ரொமோஷன் குடுத்ததே ஜாஸ்தி.. கொஞ்ச நாளைக்கு போர்ட்ஃபோலியா இல்லாத மினிஸ்டரா இருக்கட்டும் நினைச்சிட்டாங்களா என்ன?’ என்று கேலியுடன் அவருடன் பதவி உயர்வு கிடைக்காத நண்பர்கள் அவரைக் கேட்க வெறுப்புடன் சென்னைக்கு திரும்பினார் சேவியர்.

அடுத்த சில நாட்களில் அவரை வங்கியின் பயிற்சி கல்லூரி தலைவர் பதவிக்கு நியமித்திருப்பதாக செய்தி வெளியானதும் அவர் அப்போது பணி புரிந்திருந்த சென்னை வட்டார அலுவலகத்தில் இருந்த சிலர், ‘இவர் வேறெந்த போஸ்ட்டுக்கும் லாயக்கில்லன்னா எதுக்குய்யா ப்ரொமோட் பண்ணணும்? அந்த நாடார போயி ஜால்ரா அடிச்சி கிடைச்ச ப்ரொமோஷனாச்சே.. அதான் நம்ம ஈ.டி. யோட விரோதம் இவர் மேல பாய்ஞ்சிருக்கு.. போய் காலேஜ்ல ஈயோட்டிக்கிட்டு இருன்னு அனுப்பிட்டாரு.. பாப்போம்.. அங்க போயி என்னத்தெ கிழிக்காருன்னு..’ என்று அவர் காதுபடவே பேசுவதைக் கேட்டு துவண்டுப் போனார்.

ஆனால் அப்போது அவருடைய உயர் அதிகாரியாக இருந்த சென்னை வட்டார மேலாளர், ‘சேவியர்.. கவலைப் படாதீங்க. ஒங்கள எனக்கு அசிஸ்டெண்ட்டா இவ்வளவு பெரிய ஜோனல் ஆஃபீஸ்ல போட்டப்போ கூடத்தான் ஒங்களால என்ன முடியும்னு கேலி பண்ணாங்க.. நீங்க நெனச்சா இப்ப தூங்கிக் கிடக்கற காலேஜ மறுபடியும் செயல்பட வைக்க முடியும்.. ஒங்க டைரக்ட் பாஸ் ஃபிலிப் சார்தான.. அப்புறம் என்ன.. அந்த ஈ.டி கெடக்காரு..’ என்று ஆறுதலாய் பேசியது அவருக்கு இப்போதும் நினைவிருந்தது.

அவர் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றதும் அவர் செய்த முதல் காரியம் கல்லூரியில் வகுப்பு நடத்தும் பாணியை மாற்றியதுதான். தன் மீது மதிப்பு வைத்திருந்த ஃபிலிப் சுந்தரத்தின் உதவியுடன் ஐம்பது வயதைக் கடந்திருந்த பயிற்சி அதிகாரிகளை அனைவரையும் மாற்றி நாற்பது வயதுக்குள்ளிருந்த இடைநிலை அதிகாரிகளை அவரே நேர்காணல் செய்து ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடியவர்களை தேர்ந்தெடுத்தார்.

அத்துடன் சென்னையில் அப்போது கணினி பயிற்சியில் பிரபலமாயிருந்த NIIT நிறுவனம் நடத்திவந்த மாலை வகுப்புகளில் தன்னுடைய கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் அனைவரையும் சேர்த்து அடிப்படை கணினி பயிற்சி கிடைக்கச் செய்தார். ‘முக்கியமா PP பிரசண்டேஷன் செய்ய கத்துக்குடுங்க சார்..’ என்று கேட்டுக்கொண்டு கல்லூரியில் வகுப்பு நடத்தும் முறையையே அடியோடு மாற்றினார்.

அவருடைய நோக்கம் நல்லதாக தெரியவே எச்.ஆர் இலாக்காவிற்கு தலைவராயிருந்த வந்தனாவும், பொது மேலாளர் ஃபிலிப் சுந்தரமும் முழு ஒத்துழைப்பு கொடுக்க கல்லூரியிலிருத கரும்பலகை, சாக் பீஸ் முறை மாறி ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்சிடி ப்ரொஜக்டரும்.. வெள்ளைத் திரையும் அலங்கரித்தன.

சுமார் ஐம்பது கணினிகளைக் கொண்ட கணினி வகுப்பறை ஒன்றும் அவருடைய முயற்சியால் அமைக்கப்பட்டு ஆரம்பத்தில் NIIT பயிற்சியாளர்களே ஒப்பந்த அடிப்படையில் வகுப்புகளை நடத்தி வந்தனர். நாளடைவில் கல்லூரியின் பயிற்சியாளர்களே அவ்வகுப்புகளை நடத்த ஆரம்பிக்க ஆரம்பத்தில் அக்கறை காட்டாத பயிற்சிக்கு வரும் அதிகாரிகளும் விருப்பம் காட்ட துவங்கினார்.. வேலை பளுவிலிருந்து ஓய்வு கிடைக்கும் நோக்கத்துடனேயே கல்லூரிக்கு வந்து சென்ற வங்கி ஊழியர்கள் சேவியர் பொறுப்பேற்ற பிறகு ஒரு வார பயிற்சிக்கு வருவதில் அதிகம் ஆர்வம் காட்ட துவங்க.. அவர் பதவியேற்று ஒரே வருடத்தில் கல்லூரியின் போக்கே மாறிப்போனது..

மாலை ஆறுமணியானால் அடைக்கப்படும் கல்லூரி கதவுகள் இரவு எட்டுமணி வரை திறந்து கிடக்க ஆர்வத்துடன் பயிற்சியாளர்கள் கணினி பயிற்சி பெற கல்லூரியின் பெயர் வங்கி கிளையெங்கும் பேசப்பட்டது. சேவியர் அவருடைய சர்வீசில் முதல்முறையாக அப்போதிருந்த வங்கி முதல்வரின் பரிந்துரைப்படி வங்கி இயக்குனர்களின் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்டு பாராட்டப் பட்டார். ஆனால் அதுவரை அவர் மீது அதிகம் ஆர்வம் காட்டாதிருந்த எக்ஸ்யூட்டிவ் இயக்குனர் சேதுமாதவனின் வெறுப்பும் அவர்மீது விழ ஆரம்பித்தது.

அதன் ஒரு வெளிப்பாடுதான் இன்று காலையில் கல்லூரிக்கு பயிற்சிக்கு வந்திருந்த எல்லா மாணவர்களுக்கும் முன்னர் தன்னை அவர் அவமானப்படுத்தியது என்று நினைத்தார் சேவியர்..

‘சார்.. May I come in’ என்ற குரல் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்ட சேவியர் தன் முன் நின்றிருந்த இளம் அதிகாரியைப் பார்த்து மகிழ்ச்சியுடன், ‘என்ன ப்ரதர்.. எங்க இங்க?’ என்றார்.

சிவராமகிருஷ்ணனை முதன் முதலில் தலைமையகத்தில் வைத்து சந்தித்த போதே சேவியருக்கு மிகவும் பிடித்துபோனது. தன்னுடைய கல்லூரிக்கு தேவைப்பட்ட கணினி, மற்றும் ப்ரொஜக்டர், உபகரணங்கள்.. என எது தேவைப்பட்டாலும் சந்தையில் இருந்ததில் நல்ல பொருட்களை நியாயமான விலைக்கு வாங்கி கொடுத்திருந்தது சிவாதான்.. அவருடைய செயல்பாட்டில் எந்தவித தில்லுமுல்லும் இல்லாதிருக்க அப்போது EDP இலாக்கா தலைவராயிருந்த அதிகாரி ஓய்வு பெற்றதும் வந்தனா மற்றும் ஃபிலிப் சுந்தரத்துடனான தன்னுடைய நெருக்கத்தைப் பயன்படுத்தி அவரையே அந்த இலாக்காவிற்கு தலைவராக்கினார்.

அதிலிருந்து சிவாவுக்கும் அவர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. பயிற்சிக் கல்லூரியின் தலைவர் என்ற முறையில் சேவியர் அங்கத்தினராகவிருந்த வங்கியின் எச்.ஆர் கமிட்டியில் EDP தலைவர் என்ற முறையில் சிவாவையும் அங்கத்தினராக்கினார்.

நாற்பது வயதைக்கூட கடக்காத தனக்கு கிடைத்த அந்தஸ்த்து தன் வயதையொத்த பல இளம் அதிகாரிகளுக்கும் பொறாமையாக இருந்ததை சிவராமகிருஷ்ணன் உணர்ந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனக்கு மிகவும் பிடித்தமான வேலையில் தன்னுடைய திற்மையைக் காட்ட வங்கியில் அவருடைய மதிப்பு பன்மடங்காக்கியது.

இதற்கு முக்கிய காரணகர்த்தாவாயிருந்த சேவியரே ஒருமுறை ‘இந்த மாதிரி க்ரிட்டிடிசத்துக்கு இந்த மாதிரிதான் பதிலடி குடுக்கணும்.. இப்ப பாருங்க.. ஒங்க ஒத்துழைப்பு இல்லாம பேங்க்ல எந்த டிப்பார்ட்டுமெண்டுமே சரியா ஒர்க் பண்ணாதுங்கற நிலமைய கொண்டுவந்திட்டீங்கல்லே.. இனிமே கம்ப்யூட்டர் இல்லாம யாரும் ஒன்னும் பண்ண முடியாது சிவா.. ஒங்க வயசுக்கு இதே மாதிரி டெடிக்கேட்டடா இருந்தீங்கன்னா.. Sky is the limit.. You can reach the top most position in our Bank.. Keep that in mind..’ என்று பாராட்டியபோது சிவா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..

அப்படிப்பட்ட ஒருவரோடு இணைந்து தன்னுடைய வங்கியின் மிகப்பெரிய கணினி இணைப்பை (Network) தலைமையகத்தில் ஏற்படுத்தப் போகிறோம் என்ற நினைப்பே அவருக்கு மகிழ்ச்சியையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் கொடுத்தது. அதுவும் புது சேர்மனுடைய ஒத்தாசையுடன்.. !

‘அப்படியா.. குட்.. சேர்மன் சாரப்பத்தி நா நெனச்சிருந்தது சரியா போயிருச்சி சிவா. ஆனா ஒன்னு..’ என்ற சேவியரைப் பார்த்தார் சிவா.. ‘சொல்லுங்க சார்.. என்ன ப்ராப்ளம்னாலும் சமாளிச்சிரலாம்..’

சேவியர் லேசாக சிரித்தார். ‘சிவா.. ஒங்க வயசு இவ்வளவு உற்சாகத்த குடுத்திருக்கு.. ஆனா இந்த விசயத்துல நாம ரெண்டு பேருமே ரொம்ப கவனமாருக்கணும்.. இந்த நெட்வொர்க் எஸ்டாப்ளிஷ் பண்றதுக்கு நமக்கு வேண்டிய கம்ப்யூட்டர் எல்லாத்தையுமே வாங்கித்தான் ஆகணும்.. இப்பருக்கற மெஷின்ஸ் எதுவுமே லான்ல கொண்டுவர லாயக்கில்லாதது.. நம்ம காலேஜ்ல வச்சிருக்கறா மாதிரி பெண்டியம் மெஷின்ஸ்தான் சரி.. அப்புறம் லான் ஸ்விட்ச்சஸ்.. கேப்ளிங் வர்க்.. இதெல்லாம் நமக்கு முன்ன பின்ன பரிச்சியமில்லாத விஷயங்கள்.. அதனால இத எல்லாத்தையும் டர்ன் கீ பேசிஸ்ல செஞ்சி குடுக்கற கம்பெனி ஒன்னெ புடிக்கணும்.. முதல் கோட்ஸ் (quotes) நீங்க ஒரு RFP ப்ரிப்பேர் பண்ணணும்.. அதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்றேன்.. இங்க கம்ப்யூட்டர் லாப்ல நெட்வொர்க் செஞ்சி குடுத்த கன்சல்டண்ட் கம்பெனியோட பேர குடுக்கேன்.. நீங்க இன்னைக்கி சாயந்தரமே அங்க போயி நா சொல்ற ஆள பார்த்து ஒங்களுக்கு என்ன வேணுங்கறத சொல்லி ஒரு டிராஃப்ட் RFP டாக்குமெண்ட் ப்ரிப்பேர் செஞ்சி குடுக்க சொல்லுங்க.. அப்புறமா நாம ரெண்டு பேரும் ஒக்காந்து டிஸ்கஸ் பண்ணி ஃபைனலைஸ் பண்லாம்..என்ன சொல்றீங்க?’

அவர் பேசி முடிக்கும் வரை அவரையே வாய் மூடாமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சிவா. ஐம்பது வயதைக் கடந்தும் இவரால்மட்டும் எப்படி இதைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்ற வியப்பு குரலில் தொனிக்க, ‘எப்படி சார் இப்படி க்ளியரா திங்க் பண்ணி டைரக்ஷன் குடுக்க முடியுது? சாயந்திரம் என்ன சார்.. இப்பவே போறேன்..’ என்று எழுந்தான் சிவா..

‘பிரயோசனமிருக்காது சிவா.. நா சொன்ன ஆள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலதான் இருப்பார்.. நீங்க ஆஃபீசுக்கு போய் அவரோட செல்ஃபோனுக்கு ஒரு கால் போட்டு நீங்க வரப்போற விஷயத்த சொல்லுங்க.. அப்புறமா போய் பாருங்க.. ரெண்டு மூனு நாள்ல வேணுங்கறா மாதிரி பேசுங்க.. குடுத்ததும் கொண்டு வாங்க.. ஆல் தி பெஸ்ட்..’ என்றவாறு சேவியர் விடைகொடுக்க வந்த வேலை முடிந்தது என்ற திருப்தியுடன் வெளியேறினான் சிவா..

தொடரும்..

9.10.06

சூரியன் 131

ராசம்மாள் தொலைப்பேசி இணைப்பை துண்டித்து ஒலிவாங்கியை அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு எதிரிலிருந்த தன்னுடைய தந்தையையும் சுந்தரத்தையும் பார்த்தாள்.

‘என்ன சொல்லுறா செல்வி?’ என்றான் செல்வம்.

‘இதுல சொல்றதுக்கு என்னலே இருக்கு? ராசம்மாதான் க்ளியரா சொல்லிப்போட்டாளில்லே.. எனக்கென்னவோ அந்த புள்ள புத்திசாலி புள்ளயாத்தான் தெரியுது. ராசம்மா சொன்னத கேட்டுக்குவான்னுதான் படுது.. மத்தபடி.. உள்ளாற பூந்து அவ அம்மாக்காரி குட்டைய குளப்பாம இருந்தாச் சரி..’ என்ற சிலுவை மாணிக்கம் நாடார் தன் மகளையும் மருமகனையும் பார்த்தார். ‘சரிலே அது கெடக்கட்டும். நீங்க வக்கீல பாக்க போனீகளே அது என்னாச்சி?’

செல்வம் ராசம்மாளைப் பார்த்தான் நீயே சொல்லேன் என்பதுபோல.
ராசம்மாள் வழக்கம் போலவே தன் இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னலோரம் சென்று சாலையை பார்த்தாள்.

‘ஏய்.. என்ன இது.. எப்பவும் போல சன்னல பாக்க போய்ட்டே. நா கேக்கேன்ல? எனக்கு வேற சோலி இருக்கு.. சட்டுன்னு சொல்லு.. நா கெளம்பட்டும்?’ என்று நாடார் படபடக்க ராசம்மாள் சன்னலிலிருந்து பார்வையை எடுக்காமலே பதிலளித்தாள்..

‘அப்பா.. அவர்கிட்டருந்து டைவர்ஸ் வாங்கறது அவ்வளவு கஷ்டமில்லன்னு சொன்னார்.. அதுக்கு ரெண்டு வழியிருக்காம். ஒன்னு அவர் நடத்த கெட்டவர்.. இன்னும் சில பொம்பளைங்களோட சகவாசம் வச்சிருக்கறவர்னு நிரூபிக்கணும்..’

‘அடச் சீ.. அதெதுக்கு நமக்கு? அதுல ஒம்பேருமில்ல நாறிப்போயிரும்.. அதென்ன ரெண்டாவது வழி? அதச் சொல்லு..’

‘அவர் என்னெ அடிச்சி துன்புறுத்தினார்னு வழக்கு போடலாமாம்.’

நாடார் கோபத்துடன் இருக்கையிலிருந்து எழுந்து இருவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘ஏம்லே செல்வம்? இவளுக்குத்தான் புத்தி கெட்டுக் கெடக்குன்னா ஒனக்கு எங்கலே போச்சி புத்தி? எலே எம் பொன்னெ எம் மாப்பிள அடிச்சி தொவச்சி காயப்போட்டான்னு கோர்ட்ல போயி சொல்லவால்லே இவள அவனுக்கு கட்டி வச்சேன். இத எவனாவது பேப்பர்ல போட்டுட்டா என் கவுரவம் என்னாவறது? இத யாராவது யோசிச்சீங்களா? இங்க பாருங்க. ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லுதேன்.. இந்த விஷயத்த எங்கிட்ட விட்டுருங்க.. ராசேந்திரன்கிட்டருந்து ஒனக்கு விவாகரத்து வேணும்.. அவ்வளவுதான? அதுக்கு நானாச்சி.. வக்கீலாச்சி.. இதத்தான் பகல் முழுசும் பேசிட்டு வந்தீங்களாக்கும்? என்னமோ உருப்படியா செஞ்சிட்டு வந்திருக்கீகன்னு பார்த்தா.. என் வேலைய கெடுத்து..’ என்றவர் சட்டென்று.. ‘சரீஈஈ.. இதுக்கு நம்ம மோகன் வக்கீலும் ஒத்துக்கிட்டாரா என்ன?’ என்றார் செல்வத்தைப் பார்த்து.

செல்வம் சங்கடத்துடன் அவரை பார்த்தான். ‘இல்ல மாமா.. இதெல்லாம் வேணாம். அவர் கம்பெனியிலருந்து கையாடல் செஞ்ச முழுவிவரமும் ஆடிட்டர் கிட்டருக்கு அத வச்சி மெரட்டியே அவர பணிய வச்சி டைவர்ஸ் வாங்கிரலாம்னு சொன்னார்.’

நாடார் அகண்ட புன்னகையுடன், ‘அதான பார்த்தேன்.. அப்படியில்லடா சிந்திக்கணும்.. காதும், காதும் வச்சா மாதிரி அவனெ கூப்ட்டு.. எலேய்.. இதான் நீ செஞ்சிருக்கற அக்குரும்பு.. மரியாதையா எம் பொண்ணு கேக்கறமாதிரி செஞ்சிரு.. இல்ல 420ன்னு சொல்லி செயிலுக்குள்ள தள்ளிருவேன்னு மெரட்றத விட்டுப் போட்டு.. இவள வச்சிருக்கான், அவள வச்சிருக்கான்.. என்னைய போட்டு மிதிச்சான், தொவச்சான்னுக்கிட்டு.. வக்கீல் என்ன சொன்னார்னு கேட்டா இதயல்லல்லே சொல்லியிருக்கணும்..’ என்றவர் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்த தன் மகளைப் பார்த்தார். ‘இங்க பார் ராசம்மா.. அப்பா எல்லாம் ஒன் நல்லதுக்குத்தான் செய்வேன்.. அந்த பயலுக்கு மேக்கொண்டு எதயவாது குடுத்து ஒன் விசயத்த முடிச்சிரணும்.. அந்த பய தங்கியிருக்கற வீட்ட வேணும்னாலும் எடுத்துக்கிட்டு போலேன்னு கொடுத்துருவோம்.. ஒன் விசயத்த சுமுகமா முடிச்சாத்தான் அவனயும் அவங்கப்பனையும் என்னால சரியா டீல் பண்ண முடியும்.. பிசினஸ் வேற நம்ம லைஃப் வேற தாயி.. இதயும் அதயும் போட்டு குளப்பிக்கக் கூடாது.. நீ நம்ம கம்பெனியில என்னென்னமோ செய்யப் போறேன்னு சொன்னியே அதுல கவனத்த செலுத்து.. ராசேந்திரனை எங்கிட்ட விட்டுரு.. எலேய் செல்வம்.. ஒன்னெ அவளுக்கு நல்ல புத்தி சொல்லுவேன்னு வரச் சொன்னா.. நீயும் அவளோட சேந்துக்கிட்டு புத்தி பெசகுனா மாதிரி நடந்துக்கிறாத.. சொல்லிட்டன்.. எனக்கு அந்த சேட்டு பயல பாத்து பேச வேண்டியிருக்கு.. அந்த ராசேந்திரன் வித்த பங்கெல்லாம் அவன் வேற எவனுக்காவது விக்கறதுக்குள்ள வளச்சிப் போடணும்.. நா வாரன்..’

அதுவரை சாலையையே பார்த்துக்கொண்டிருந்த ராசம்மாள் சரேலென திரும்பி, ‘அப்பா.. இருங்க..’ என்றாள்.

வாசல் வரை சென்றுவிட்ட நாடார் திரும்பி தன் மகளைப் பார்த்தார். ‘என்னடா.. சொல்லு..’

‘அந்த சேட்டுக்கிட்ட ஷேர நான் வாங்கிக்கறேன்னு மோகன் சார்கிட்ட சொல்லிருக்கேன்.. நீங்க வேற போயி எதயாச்சிம் செஞ்சிராதீங்க..?’

நாடார் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘என்னடா சொல்றே.. நீ வாங்கிக்கறியா? அவ்வளவு பணத்துக்கு எங்கலே போவே?’

ராசம்மாள் செல்வத்தைப் பார்த்தாள். ‘என்ன செல்வம் பேசாமருக்கே.. சொல்லேன்?’

செல்வம் தயக்கத்துடன் தன் மாமனைப் பார்த்தான். ‘ராசி ஒங்கக்கிட்டத்தான் அந்த பணத்த கேக்கலாம்னு இருக்கா.. கடனாத்தான்..’

நாடார் வாய் விட்டுச் சிரித்தார். ‘என்னது கடனாவா? என்னலே.. பித்து, கித்து பிடிச்சிருச்சா? என் பேர்லருக்கறது எல்லாமே இவளுதுதானடா.. அதுல தனியா எதுக்கு இவளுக்கு ஷேரு? அதுவும் எங்கிட்டருந்து பணத்த வாங்கி.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அதுக்கு வேறொரு ஐடியா நா வச்சிருக்கேன்.’

‘நீங்க பணம் தரலேன்னா நா வேற வழியில அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்கறேன். ஆனா அந்த ஷேர எம்பேர்லதான் வாங்கணும்..’ என்றாள் ராசம்மாள் உறுதியுடன்..

நாடார் அவளுடைய குரலிலிருந்த உறுதியையும் தன்னுடைய மகளுடைய பார்வையிலிருந்த தீர்மானத்தையும் பார்த்தார். எம் மவளாச்சே என்கிற பெருமிதம் ஒருபுறம் இருந்தாலும்.. இவ நம்மளயே தூக்கிச் சாப்ட்ருவா போலருக்கே என்றும் நினைத்தார்.. சாக்கிரதையாத்தான் இருக்கணும் போலருக்கு..

‘சரிம்மா.. அதுக்கு எவ்வளவு தேவையிருக்கும்னாவது ஒனக்கு தெரியுமா? சரி.. எங்கிட்டருந்து வாங்குனத எப்படி திருப்பி தருவே.. கடன்னு வந்துட்டா அப்பா மகன்னு பாக்க மாட்டேம்மா.. சொல்லிட்டேன்.. எலேய் செல்வம்.. இந்த நாடார் குடுத்த பணத்த எப்படி வசூலிப்பார்னு இவ கிட்ட சொல்லியிருகியால்லே..’ என்றார் நாடார் கேலியுடன்.

‘விளையாடாதீங்கப்பா.. ராசேந்திரனோட ஷேர வாங்கறதுக்கு எவ்வளவு பணம் வேணும், அத எப்படி திருப்பி அடைக்கறதுங்கறத எல்லாம் யோசிக்காம ஒன்னும் ஒங்க பொண்ணு இந்த விஷயத்துல எறங்கல.’

நாடார் அப்போதும் புன்னகை மாறாத முகத்துடன் தன் மகளைப் பார்த்தார். ‘சரிம்மா.. என் பணத்த எப்படி திருப்பித் தருவே.. அதச் சொல்லு.. நான் எப்பவுமே செக்யூரிட்டியோ, ஜாமீனோ இல்லாம பணம் தரமாட்டேன்.. என்னடா செல்வம்.. சொல்லேன்?’

செல்வத்திற்கு தன் மாமனின் புன்னகை பூத்த முகமே அவர் தன் மகளை சீண்டிப் பார்க்கிறார் என்பதை உணர்த்த அவன் திரும்பி சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு நின்ற ராசம்மாளைப் பார்த்தான். தானும் தன் மாமனுடன் சேர்ந்துக்கொண்டு இவளை சீண்டிப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. ‘அதானே..’ என்றான்.

ராசம்மாள் கோபத்துடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன செல்வம்.. விளையாடறியா? மோகன் அங்கிள்கிட்ட நா சொன்னத இவர்கிட்ட சொல்லு..’

நாடார் சிரித்தார். ‘எலேய் செல்வம்.. தெரிஞ்சிக்கிட்டேதான் விளையாடறியா? என்னடா சொன்னா.. சொல்லேன்.. எப்படி திருப்பி தரப்போறாளாம்?’

செல்வம் சிரிப்புடன், ‘ஒங்கக்கிட்ட மாசம் ஒரு லட்சம் சம்பளம்னு கேட்டா இல்ல? அது இதுக்குத்தான்.. அத வச்சே ஒங்க கடனெ அடச்சிரலாம்னுதான்..’

வாசலில் நின்றவாறே பேசிக்கொண்டிருந்த நாடார் உரக்க சிரித்தவாறு சற்று முன் வரை ராசம்மாள் அமர்ந்திருந்த இருக்கையில் சென்றமர்ந்தார். ‘எது.. மாசா மாசம் வாங்கப் போற சம்பளத்துலருந்தா..? இந்த கூத்த நா எங்க போய் சொல்றது..’ என்றவாறே அவர் மேலும் சிரிக்க ராசம்மாள் கோபத்துடன் வாசலை நோக்கி நடந்தாள்..

‘ஏய்.. ஏய்.. நில்லு.. எங்க போறே?’ என்றவாறு எழுந்து வாசலை நோக்கி விரைந்துச் சென்று ராசம்மாளின் தோள்களைப் பிடித்து நிறுத்தினார்.

‘கோச்சிக்கிட்டியாக்கும்? அப்பா சும்மா தமாஸ்தானப் புள்ள செஞ்சேன்.. இப்படி பொசுக்குன்னு கோச்சிக்கிட்டு போனா எப்படி?’

‘விடுங்கப்பா..’ என்று வீம்பு செய்த மகளை அழைத்துச் சென்று தன்னுடைய இருக்கையில் அமர்த்திவிட்டு தானும் செல்வம் அமர்ந்திருந்த இருக்கையினருகில் கிடந்த இருக்கையில் அமர்ந்தார்.

‘இங்க பாரு ராசம்மா.. இது நீ நெனக்கறாமாதிரியான காரியமில்ல. அப்பா இந்த மாதிரி எத்தனெ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்திச்சிருக்கேன்னு ஒனக்கு தெரியுமா புள்ள? இந்த செல்வம் ஒன்னையெ விட அஞ்சி வருசம்தான் மூத்தவன்.. ஆனா நா பட்ட எல்லா கஸ்டத்தயும் பாத்துருக்கான். ஒன்னைய அந்த ராசேந்திரனுக்கு கட்டி வச்சதுலருந்து அவன் அடிச்ச அத்தனெ கூத்தையும், அவன் நம்ம கம்பெனியிலருந்து செல்வத்த தொரத்துனது, இந்த கம்பெனி கணக்குலருந்து ஒம் பேரச் சொல்லி லட்ச, லட்சமா எடுத்தது.. குடி, கூத்தின்னு சுத்துனது.. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்கு புள்ளே.. நா நெனச்சிருந்தா அவனெ எப்பவே முடிய புடிச்சி நாலு அறை விட்டு வெளிய தொரத்தியிருக்க முடியும்.. ஆனா செய்யல? ஏன்.. நீ கண் கலங்கிட்டு வந்து நிக்கறத பாக்க முடியாதுங்கற ஒரே காரணத்துக்காக.. அவனும் அவன் அப்பனும் அவங்க ஷேர விக்கப் போறாங்கற வெசயத்த மட்டுந்தான் நா கண்டுக்காம கோட்ட விட்டுட்டேன்.. நம்ம ஆடிட்டர் சார் சூசகமா சொல்லத்தான் செஞ்சாரு.. நாந்தான் சட்டெ பண்ணாம இருந்துட்டேன்.. இப்பவும் ஒன்னு குடிமுழுகிப் போகல.. அது எனக்கு தெரியவந்த அடுத்த நாளே நம்ம வக்கீல் தம்பிய வச்சி அந்த சேட்டுக்கிட்ட பேசி அத முழுசும் ஒம் பேருக்கு மாத்தறதுக்கு வெல பேசி அட்வான்சும் குடுத்தாச்சி.. நாந்தான் வக்கீல் தம்பிக்கிட்ட ஒங்கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லி வச்சேன்.. நீ என்னடான்னா.. எங்கிட்ட கடன் கேட்டு வந்து நிக்கே.. எலே ராசம்மா அதனோட வெல தெரியுமால்லே ஒனக்கு? நீ மாசா மாசம் வாங்கற சம்பளத்துலருந்து அடைக்கக் கூடிய தொகையால்லே அது.. பைத்தியக்கார புள்ள..’

அவர் பேசப் பேச வாயடைத்து போயிருந்த ராசம்மாள் மேசையின் குறுக்கே கிடந்த தன் தந்தையின் கரத்தின் மீது பாசத்துடன் தன் கரங்களை வைத்து, ‘மன்னிச்சிருங்கப்பா.. நா முன்னெ பின்னெ யோசிக்காம..’ எனக்கு குரல் நடுங்க கூற.. நாடார் தன் மகளின் கரங்களை பற்றி ஒரு முறை அழுத்தினாள்..

‘ச்சீ.. நீ எதுக்குல்லே அப்பாக்கிட்ட..’ என்றவர், ‘சரி அத விடு.. டேய் செல்வம்.. நீ ஒடனே பொறப்பட்டு ஊருக்கு போ.. அந்த செல்விய சமாதானப்படுத்தி அளைச்சிக்கிட்டு வா.. நம்ம வளசரவாக்க வீட்டுல அவள குடி வை.. அவ அம்மாவ என்ன பண்ணணுமோ பண்ணு.. ஆனா சென்னைக்கி மட்டும் அவள கூட்டியாந்துராத.. அது ஒரு பணத்தாச புடிச்ச பொம்பள.. செல்விக்காகவும் ஒனக்காகவும்தான் அந்த பொம்பளைய பொறுத்துக்கிட்டிருக்கேன்.. செல்வி வாயாடியானாலும் புத்திசாலிப் பொண்ணு.. ராசம்மா அவ கிட்ட சொன்னதுல எனக்கு அவ்வளவா இஷ்டமில்லன்னாலும்.. செஞ்சிருவோம்.. இல்லன்னா அந்த பொண்ணு நீ கூப்ட்டா வராது.. ஒன் கடைக்கு நீ என்ன கேட்டாலும் குடுக்கலாம்டா.. நீ எனக்கு பொறக்காத இன்னொரு புள்ள மாதிரி..’ என்றவாறு செல்வத்தின் தோள்களைத் தொட அவன் பதறியாவாறு எழுந்து நின்றான்.

‘என்ன மாமா.. நீங்க சொல்லணுமா? நீங்க வச்சிக் குடுத்த கடைக்கு நா வெல பேசறதா? செல்விய எப்படி வழிக்கி கொண்டு வரதுன்னு எனக்கு தெரியும். அத நா பாத்துக்கறேன்.. நீங்க ஒரு வெலயும் குடுக்க வேணாம். அது நம்ம கம்பெனி பிராஞ்சாதான இருக்கப் போவுது..’

ராசம்மாளும் நாடாரும் ஒரே சமயத்தில் இல்லை என்று தலையை அசைக்க இருவரையும் வியப்புடன் பார்த்தான். ‘அதெப்படி ரெண்டு பேரும் ஒரே சமயத்துல, ஒரே மாதிரியான முடிவெடுக்கீங்க? எதுக்கு இப்ப இல்லேங்கறா மாதிரி தலைய அசைச்சீங்க?’

நாடார் உரக்க சிரித்தார்.. ‘எலேய் என்னதாருந்தாலும் நீ எனக்கு தங்கச்சி பையன்.. அவ என் ரத்தம்லே.. என்னெ மாதிரிதான அவளும் யோசிப்பா.. நீ என்ன சொன்னாலும் உன் பெஞ்சாதி பேர்லருக்கற கடைக்கு ஒரு வெல நா தரத்தான் வேணும்.. சரி.. அத நாம மூனு பேரும் பேச வேணாம். நம்ம ஆடிட்டர்கிட்ட விட்டுருவோம்.. அவர் திருநெல்வேலிக்கு போயி கணக்கு பொஸ்தகத்த எல்லாம் பாத்து ஒரு வெல சொல்லட்டும்.. அப்புறம் பாப்போம்.. எனக்கு முக்கியமான சோலி இருக்கு.. நீ ராசம்மா கொண்டு போயி வீட்ல விட்டுப் போட்டு ஊர் போய் சேர்ற வழிய பாரு.. இந்த வாரக் கடைசிக்குள்ள வந்துருலே..’ என்றவாறு அவர் வெளியேற சற்று நேரம் வரை அவரவர் எண்ணங்களில் மூழ்கிப்போன செல்வமும் ராசம்மாளும் மெள்ள எழுந்து அறைக்கதவை பூட்டிக்கொண்டு படியிறங்கினர்..

தொடரும்..

6.10.06

சூரியன் 130

மனைவியின் முதுகையே பார்த்தவாறு நின்றிருந்த மாணிக்கவேல் சந்தோஷிடம் தான் கூறியதை இவள் ஒட்டு கேட்டிருப்பாளோ என்று நினைத்தார்.

தன் மனைவி எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்பதை அறிந்திருந்த மாணிக்கம் கடந்த சில நாட்களாக அவர் தனக்கு ஒரு புதிராகவே மாறிப்போயிருப்பதை உணர்ந்தார்.

அவர் பொறுப்பிலிருந்த பல்லாவரம் கிளை வர்த்தக அளவைப் பொறுத்தவரை சென்னையிலுள்ள கிளைகளில் ஓரளவுக்கு முக்கியமானதாக இருந்ததால் தொடர்ந்து விடுப்பு எடுக்க இயலாது என்பதை உணர்ந்திருந்தாலும மனைவியை நம்பி எப்படி தன்னுடைய தந்தையையை விட்டுவிட்டு அலுவலகம் செல்வதெனவும் யோசித்தார்.

எப்படியும் இன்னும் ரெண்டு நாள்ல நாம ஆஃபீசுக்கு போயாகணும். ஜோ திறமையானவர்தான் என்றாலும் அவருடைய அனுபவம் அதிக நாட்களுக்கு கிளையில் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று தோனலை.. ஆனா அப்பாவையும் தனியா விட்டுட்டு போ முடியாது. என்ன செய்யலாம்? பேசாம அப்பாவ கவனிக்க ஒரு நர்ச ஏற்பாடு செஞ்சா என்ன?
அப்பாவ பாக்கற டாக்டர் கிட்ட சொல்லி இதுக்கு ஏற்பாடு செஞ்சிர வேண்டியதுதான்.. நாளையிலருந்தே வரச்சொல்லிட்டா ஒரு ரெண்டு நாள் அவங்க கூட இருந்து செய்ய வேண்டியத சொல்லிக் குடுத்துட்டு நாம ஆஃபீஸ் போயிரலாம்.

அவருடைய குடும்ப மருத்துவரை அவருக்கு பல வருடங்களாக பழக்கம் இருந்ததுடன் அவர் அருகிலேயே குடியிருந்ததால் தன்னுடைய தந்தைக்கு பணிவிடை செய்ய பிரத்தியேகமாக ஒரு நர்சை அவர் மூலமாக அமர்த்தலாம் என்று நினைத்தார். அதை உடனே செயல்படுத்தினாலென்ன என்ற எண்ணமும் தோன்ற தன்னுடைய செல் ஃபோனை எடுக்க அறைக்குள் திரும்பினார்.

‘என்ன டாட்.. வாசல்லயே நின்னுக்கிட்டு என்னமோ யோசனையில இருந்தீங்க? என்ன விஷயம்?’

‘இல்ல சந்தோஷ்.. பேசாம தாத்தாக்கு ஒரு நர்ச ஏற்பாடு செஞ்சா என்னன்னு தோனிச்சி.. அதான் யோசிச்சி பார்த்தேன். நம்ம டாக்டர்கிட்டவே கேக்கலாம்னு பாக்கேன். தெரிஞ்ச ஆளாருந்தா நல்லதில்ல? என்ன சொல்றே சந்தோஷ்?’

சந்தோஷ் குழப்பத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ‘இப்ப எதுக்கு டாட் திடீர்னு இந்த ஐடியா? அதான் அம்மா இப்ப ஃப்ரீயாத்தான இருக்காங்க?’
மாணிக்கம் இல்லையென்பதுபோல் தலையை அசைத்தார். ‘இல்ல சந்தோஷ்.. அம்மா இப்பருக்கற மனநிலையில தாத்தாவ சரியா கவனிச்சிக்க முடியும்னு எனக்கு தோனல..’

‘ஏன் டாட்.. ஏன் அப்படி சொல்றீங்க?’

மாணிக்கம் தன் மகனையே சிறிது நேரம் பார்த்துவிட்டு கட்டிலில் கிடந்த தன்னுடைய செல்ஃபோனை எடுத்து குடும்ப மருத்துவரின் எண்ணை தேடலானார். ‘ஒங்கிட்ட சொல்றதுக்கென்ன சந்தோஷ். I am unable to believe that she has changed completely.. I am not sure.. she may be faking it.. அதனாலதான்.. நா நிம்மதியா ஆஃபீசுக்கு போணும்னா தாத்தாவ கவனிக்க ஒரு ஆள் இந்த வீட்ல இருக்கணும்.. அட்லீஸ்ட் அம்மா தாத்தாவ சரியா கவனிச்சிக்கிறாங்களான்னு பாக்கறதுக்காவது.. நா சொல்ல வர்றது ஒனக்கு புரியும்னு நினைக்கேன்..’

சந்தோஷ் மெள்ள தலையை ஆட்டினான். ‘புரியுது டாட்.. இதுக்கு மேலயும் இதப்பத்தி ஆர்க்யூ பண்ண நான் விரும்பல.. If that’s what you want.. go ahead.. ஆனா ஒன்னு டாட்..’

டயல் செய்வதை நிறுத்திவிட்டு தன் மகனைப் பார்த்தார் மாணிக்கம். ‘என்ன சந்தோஷ்..?’

‘நீங்க செய்யற இந்த காரியமே அம்மாவ நீங்க இன்னமும் நம்பலைங்கறத காட்டிரும்..’

மாணிக்கம் தன் மகனை வியப்புடன் பார்த்தார். ‘காட்டட்டுமே.. அதுவும் நல்லதுக்குத்தான். அவ மனசுக்குள்ள வேற ஏதாவது ஐடியா இருந்தா அது நடக்காதுங்கறதையும் அவ புரிஞ்சிக்கணும்.. அதுக்குத்தான் இது.. Don’t try to stop me Santhosh.. Something inside me tells me that she is hiding something from you and me..’

சந்தோஷ் கவலையுடன் தன் தந்தையையே சிறிது நேரம் பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.. ‘As you wish Dad.. Go ahead..’ என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினான்.

மாணிக்கம் வருத்தத்துடன் வெளியேறிய தன் மகனையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார். பிறகு தலையை அசைத்தவாறு தேடிப்பிடித்திருந்த மருத்துவரின் எண்ணை மீண்டும் டயல் செய்வதில் முனைந்தார்.
எதிர் முனையில் நெடு நேரம் பதில் இல்லாமல் இருக்கவே துண்டித்துவிட்டு கட்டிலில் படுத்து கண்களை மூடினார்..

அவரையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு வெளியேறியது. அடுத்த நிமிடமே அவருடைய தொலைப்பேசி சிணுங்க யாரென பார்த்தார்.

வந்தனா!

*******

அவளுடைய கரங்களில் அப்படியே கவிழ்ந்து வந்தனா அழ செய்வதறியாது கலங்கிப் போனாள் நளினி..

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ..

சற்று நேரத்தில் வந்தனா சுதாரித்துக்கொண்டு எழுந்து நளினியின் கரங்களை விடுவித்தாள்.

‘I am sorry Nalini..’

‘பரவால்லை மேடம்.. நீங்க இப்படி உணர்ச்சிவசப்படறது ஒங்க ஒடம்புக்கு நல்லதில்லன்னு எனக்கு தெரிஞ்சாலும்.. ஒங்களோட துக்கத்துக்கு இது ஒரு அவுட்லெட்டா இருக்குமேன்னுதான் நான் தடை பண்ணாமல் ஒக்காந்திருந்தேன்.. How do you feel now madam, relieved?’

வந்தனா மெலிதாக புன்னகைத்தாள் தலையைக் கோதியவாறே..

‘ஆமாம் நளினி.. நீயும் நந்தக்குமாரும் வந்தது எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கு தெரியுமா? I am really grateful to you. எப்படா அந்த இருட்டடிச்ச வார்டுலருந்து போவோமோன்னு இருந்தது. சரியான நேரத்துல நீங்க ரெண்டு பேரும் வந்தீங்க.’

நளினி வந்தனாவின் கரங்களைப் பற்றி லேசாக அழுத்தினாள். ‘It’s OK Madam.. நந்து மாணிக்கம் சாரோட டாட்டர் ஃப்யூனரலுக்காக சென்னைக்கு போறேன்னு சொன்னப்போ எனக்கு வரணுங்கற ஐடியா இல்லை. அவர் ஒங்கள ICUல சேர்த்திருக்குன்னு ஜோ சொன்னார்னு சொன்னப்பத்தான் ஒடனே அவரோட வரணும்னு தீர்மானிச்சேன்.. வந்தது இப்ப எவ்வளவு நல்லதா போயிருச்சி மேடம்.. அத்தோட மேடம்.. இதுல எனக்கு வேறொரு நல்லதும் நடந்திருக்கு..’

வந்தனா வியப்புடன் அவளைப் பார்த்தாள். என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினாள்.

தன்னையுமறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் நளினையையே ஒரு நொடி திகைக்க வைத்தது. இந்த நேரத்தில் இதைப் பற்றி பேச வேண்டுமா என்று தயங்கினாள்..

‘என்ன நளினி.. ஏதோ சொல்ல வந்தே.. என்ன நல்லது நடந்தது.. நானும் தெரிஞ்சிக்கறேனே.. சொல்லேன்..’ என்றாள் வந்தனா..

நளினி தயக்கத்துடன் அவளைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துக் கொண்டாள். ‘எனக்கும் நந்துவுக்கும் கல்யாணம் ஏறக்குறைய எட்டு வருசமாயிருச்சி மேடம்.. குழந்தைன்னு இதுவரைக்கும் இல்லை. அதனாலயே எங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சினை. அத்தோட எனக்கு போன தடவ கிடைச்ச ப்ரமோஷன் வேற. கொஞ்ச நாளாவே எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஈகோ ப்ராப்ளம். நீ பெருசா நான் பெருசாங்கற மாதிரி... பிரிஞ்சி போய்ட்டா என்னன்னு கூட நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துலதான் இந்த பயணம் செய்ய வேண்டி வந்தது.. வர்ற வழியில மனச விட்டு பேச நேரமும் கிடைச்சது.. நந்துவுக்கும் எனக்கும் இடையிலருக்கற கம்யூனிக்கேஷன் கேப்பும் இப்ப சரியாயிருச்சி மேடம்.. இந்த நேரத்துல ஒரு குழந்தையும் இருந்துட்டா.. I think.. it would save our marriage..’

நளினியின் குரல் மேலே தொடரமுடியாமல் நடுங்க வந்தனா சில்லிட்டுப்போயிருந்த அவளுடைய கரங்களை எடுத்து தன்னுடைய கரங்களில் பொதிந்துக்கொண்டாள்..

‘ஏய்... what is this? உன் மனசுல கெடந்த பாரத்த எறக்கி வச்சாச்சு இல்லே.. Relax.. Let Nandakumar come back.. we will sit and discuss.. நீ சென்னைக்கு வந்ததும் நல்லதா போச்சி.. இங்க எத்தனையோ எக்ஸ்பர்ட் டாக்டர்ஸ் இருக்காங்க.. This is not a major issue.. நீ இப்ப இந்த பிரச்சினைய எங்கிட்ட சொன்னதும் என் பிரச்சினை எனக்கு மறந்தே போச்சி.. I feel energised.. சீக்கிரமே சரியாயிரணுங்கற ஆசை வந்திருச்சி.. I should thank you for this..’
நளினி கண்களைத் துடைத்துக்கொண்டு வந்தனாவைப் பார்த்தாள்..

‘Thank you Madam...’

வந்தனா கட்டிலில் கிடந்த செல்ஃபோனைப் பார்த்தாள். சட்டென்று நினைத்துக்கொண்டவளாய்.. ‘நளினி என் செல்ஃபோன்ல மாணிக்கத்தோட நம்பர் இருக்கும் பார்.. அத டயல் பண்ணி குடேன்.. அவர் கிட்ட பேசணும் போல இருக்கு.. பாவம் அவர் எந்த மனநிலையில இருக்காரோ.. ராணிக்கிட்டயும் பேசணும்போல இருக்கு நளினி.. ப்ளீஸ்..’ என்றாள்.

‘இது இப்ப தேவையா மேடம்..ஏற்கனவே எமோஷனலாருக்கீங்களே?’ என்றாள் நளினி..

வனிதா லேசான புன்னகையுடன் அவளைப் பார்த்தாள். ‘நோ நளினி.. உன்கிட்ட பேசனதுக்கப்புறம் I feel Ok.. Nothing will disturb me anymore.. Please dial the number..’

அப்போதும் நளினி பிரியமில்லாமல் நம்பர் கிடைக்கக் கூடாதே என்ற எண்ணத்துடன் டயல் செய்ய எதிர் முனையில் மாணிக்கத்தின் குரல் கேட்டதும் தயக்கத்துடன் வந்தனாவிடம் செல்ஃபோனைக் கொடுத்துவிட்டு கவலையுடன் அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

தொடரும்..

4.10.06

சூரியன் 129

நாள் முழுக்க ஷாப்பிங் செய்த களைப்பில் சரோஜாவும் வத்ஸலாவும் சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்பென்சர் காம்ப்ளக்சிலிருந்து வெளியேறி தங்களுடைய வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தளத்தை நோக்கி மெள்ள நகர்ந்தனர்.

வத்ஸலாவின் செல் ஃபோன் சிணுங்க கையிலிருந்த ஃபோனின் திரையைப் பார்த்தாள். அப்பா!

‘அம்மா அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப ஞாபகம் வந்திருக்கு போல.. என்ன சொல்ல?’ என்றாள் தன் தாயிடம்.

சரோஜா எரிச்சலுடன்.. ‘என்னத்த சொல்றது? எல்லாத்தையும் வாங்கி முடிச்சாச்சின்னு சொல்லு.. ஒங்கப்பாவுக்கு வேல.. வேலன்னுதான் நெனப்பு.. நம்மள பத்தி ஞாபகம் வந்ததே ஆச்சரியம்.. என்னத்தையாவது சொல்லி சமாளி.. எங்கிட்ட குடுத்துராத..’ என்றவாறு மகளை விட்டு நாலு எட்டு தள்ளியே நடந்தாள் எச்சரிக்கையுடன்..

அவளுக்கோ கவலை முழுவதும் சீனியின் மீதுதான்.. ஃபோனே பண்ணலையே.. இந்த மாமிக்காவது என் டென்ஷன் தெரிய வேணாம்.. வீட்டுக்கு போயி வச்சிக்கறேன்..

‘ஹை டாட்.. இப்பத்தான் ஃப்ரீயானீங்களா?’ என்றாள் வத்ஸலா.

‘ஆமாடா.. என்னெ என்ன பண்ண சொல்றே.. இங்க முதல் நாளே ஏகப்பட்ட டென்ஷன்.. பிரச்சினை.. சரி.. அதிருக்கட்டும் அம்மாவோட மூட் எப்படியிருக்கு.. அவகிட்ட பேசலாமா?’ என்ற தன் தந்தையின் தயக்கத்தைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள்.

‘என்ன டாட்.. ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு பேங்கோட சேர்மன்.. ஒங்க மூடுக்கு எத்தன பேர் கவலப்படுவாங்க.. நீங்க போய் அம்மா மூட் எப்படியிருக்குன்னு கேக்கீங்களே.. ஷேம்.. ஷேம்..’

‘என்னம்மா பண்றது.. ஊருக்கு ராஜான்னாலும் வீட்டுக்கு புருஷந்தானே.. சரி.. எப்படியிருந்தது ஒங்க ஷாப்பிங்.. ஏதாவது உருப்படியா வாங்குனீங்களா, இல்ல வெறும் விண்டோ ஷாப்பிங்தானா? இப்ப எங்கருக்கீங்க?’

‘என்ன டாட் அப்படி கேட்டுட்டீங்க? நமக்கு வேண்டிய எல்லாத்தையும் வாங்கியாச்சு.. அதுவும் ஒங்க பட்ஜெட்டுக்குள்ளவே.. மெட்றாஸ்னா மெட்றாஸ்தான் டாட்.. மும்பைய கம்பேர் பண்ணா இங்க எல்லாமே டெட் ச்சீப்.. அதுவும் கடையிலருக்கற ஆளுங்க என்ன மரியாதையா பேசறாங்க? எல்லாருக்குமே இங்க்லீஷ் தெரிஞ்சிருக்குப்பா.. அதான் ஆச்சரியமாருக்கு.. Even the junior most staff speaks English.. I was amazed..’

எதிர் முனையில் மாதவன் உரக்க சிரித்தார்.

வத்ஸலா கோபத்துடன், ‘எதுக்கு டாட் இப்ப சிரிச்சீங்க.. என்ன நான் சொன்னது ச்சும்மா கிண்டல்னு நினைச்சீங்களா?’ என்றாள்..

மாதவனின் குரல் உடனே இறங்கி வந்தது. ‘ச்சீ.. ச்சீ.. அப்படியில்லடா.. மும்பைய நினைச்சிப் பார்த்தேன்.. அவனுங்க இங்லீஷ¤ம் அவனுங்க ப்ரனன்ஷியேஷனும்.. அத நினைச்சித்தான் சிரிச்சேன்.. நீ சொல்லு... இப்ப எங்கருக்கீங்க?’

‘டாட்.. நாங்க இப்ப ஸ்பென்சர்ல இருக்கோம்.. எல்லாத்துக்கும் ஆர்டர் குடுத்துட்டு இப்பத்தான் காருக்கு போறோம்.. அப்புறம் இன்னொன்னு டாட்.. நீங்க அனுப்பிச்ச டிரைவர் சூப்பர்.. என்ன அழகா டிராஃபிக்ல ஒட்னார்னு நினைக்கீங்க.. ரொம்ப நல்லா மரியாதையாவும் நடந்துக்கிட்டார்.. அங்க மாதிரி இல்ல.. all in all I have started to enjoy Madras dad.. I never thought it would be so nice..’

மீண்டும் மாதவன் சிரிக்க.. ‘என்ன டாட்.. இப்ப எதுக்கு சிரிச்சீங்க?’ என்றாள் வத்ஸ்லா..

‘இல்ல.. ஒங்கம்மாவுக்கும் இதே ஒப்பீனியந்தானான்னு நினைச்சேன்.. இல்லே நீ இப்ப சொன்னதுக்கும் மூஞ்ச சுளிச்சிக்கிட்டு நிக்காளா?’

வத்ஸ்லா ஓரக்கண்ணால் சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தாள். சந்தோஷம் துளியும் இல்லாத அந்த முகத்தில் லேசான கவலையின் ரேகையும் தென்படவே.. ‘அம்மாவுக்கு சீனியோட நினைப்புத்தான்.. அவன் இதுவரைக்கும் ஒரு ஃபோன் கூட பண்ணல டாட்.. அம்மா is naturally very upset. ரூமுக்கு போனதும் ஃபோன் போடலாம்னு இருக்கோம்.. நீங்க வர லேட்டாவுமா டாட்?’

எதிர்முனையில் பதில்வர சற்று தாமதமாகவே, ‘என்னம்மா அப்பாக்கிட்ட பேசறீங்களா?’ என்றாள் தன் தாயைப் பார்த்து.. அவள் உடனே வேண்டாம் என்று சாடை காட்ட.. ‘என்ன டாட்.. are you there?’ என்றாள் ஃபோனில்..

‘Yes.. Yes.. I am here.. Somebody, a Police man is waiting to see me.. I do not know what he wants.. after that I am free.. நீங்க ரூமுக்கு போனதும் கூப்டுங்க.. உடனே புறப்பட்டு வந்துடறேன்.. நா வந்ததும் சீனிக்கு ஃபோன் செஞ்சா போறும்னு சொல்லு அம்மாட்ட.. இல்லன்னா எதையாச்சும் பேசி அவனெ கன்ஃப்யூஸ் பண்ணிருவா, என்ன நான் சொல்றது வெளங்குதா?’

வத்ஸாலவுக்கு மாதவனின் கடைசி வாக்கியம் பிடிக்கவில்லை.. ‘என்ன டாட்.. சின்ன பசங்கக்கிட்ட பேசறா மாதிரி வெளங்குச்சா கிளங்குச்சான்னு.. நல்லாவே வெளங்கிருச்சி.. போறுமா.. வைக்கறேன்.. பை..’

தனக்கு பதில் பேச வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்த மகளை நினைத்து புன்னகை செய்தார் மாதவன்.

பிறகு தன் மேசை மீதிருந்த சந்திப்பு அட்டையை (visiting card) மீண்டும் ஒரு முறை பார்த்தார். ‘எஸ். தனபால்.. எஸ்.பி. க்ரைம் ப்ராஞ்ச்’

எஸ்.பியா? என்கிட்ட என்ன வேணும் இவருக்கு? என்று புருவங்கள் முடிச்சிட தன்னுடைய காரியதரிசியை இண்டர்காமில் அழைத்து ‘அவரை உள்ளே அனுப்புங்க சுபோத்’ என்றார்.

***

தன் எதிரில் அமர்ந்திருந்த சீனிவாசனையும் மைதிலியையும் மாறி, மாறி பார்த்தாள் சிவகாமி மாமி.

சீனியின் முகத்தில் சங்கடமும் மைதிலியின் முகத்தில் ஒருவித சலிப்பும் தென்பட்டதை கவனித்தாள்.

அவள் தொலைப் பேசியில் கேட்டுக் கொண்டபோது முதலில், ‘நா அங்க வந்து என்னாவப் போவுது மாமி. அதான் காலையில மூஞ்சிலடிச்சா மாதிரி சீனி சொல்லிட்டானே..’ என்று மறுத்தாலும் இறுதியில், ‘சரி மாமி.. ஒங்களுக்காக வரேன்..’ என்ற மைதிலி வந்து பத்து நிமிடத்திற்கும் மேலாகிறது..

அவள் வந்து வெகு நேரமாகியும் சீனி தன்னுடைய அறைக்குள்ளிருந்து வராததால் சிவகாமி அவளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவனுடைய அறைக்குள் அமர்த்திவிட்டு தானும் அவர்களெதிரில் அமர்ந்தாள்.

சீனி அப்போதும் படுக்கை தலைமாட்டில் சாய்ந்து எங்கோ பார்த்தவாறு அமர்ந்திருந்தானே தவிர மைதிலி இருந்த திசையில் பார்க்கவே இல்லை..

‘டேய்.. என்ன இது சின்ன குழந்தையாட்டம்.. மைதிலி வந்து எம்புட்டு நேரமாச்சிடா.. நீ மனசுல நினைச்சிக்கிட்டிருத சொல்லேன்..’ என்றாள் மாமி.

மைதிலி சிடுசிடுத்தாள். ‘எதுக்கு மாமி அவனெ கம்பெல் பண்றேள்.. பேசறதுக்கு அவனுக்கு இஷ்டமில்லன்னா நா இங்கருந்து என்ன பிரயோசனம்? அதான் நீங்க கூப்ட்டப்பவே சொன்னேன்னே மாமி.. நீங்கதான் எனக்காக வாயேன்னேள்.. தோ.. நானும் வந்து செலையாட்டம் ஒக்காந்திருக்கேன்.. அரை மணி நேரமாயும் இன்னும் அவனுக்கு என்னெ தெரியலையே..’

‘Don’t exaggerate Mythili.. You are here only for the past ten minutes..not half hour..’ என்ற சீனிவாசனை இருவரும் வியப்புடன் பார்த்தனர்.

‘அட! நீ இங்கதான் இருக்கியா?’ என்றாள் மைதிலி கேலியுடன். ‘சொல்லு என்ன சொல்லணும்னு நினைக்கியோ க்ளியரா சொல்லிரு.. நேக்கும் சிலது சொல்லணும்னு இருக்கு.. அத நீ சொன்னதுக்கப்புறம் சொல்றேன்.. சொல்லு.. என்ன சொல்றதுக்காக என்னெ வரச் சொன்னே? சொல்ல வந்தத நேரா என் முகத்த பார்த்து சொல்லணும்.. மோட்டு வளைய பாத்து இல்ல.. என்ன மாமி?’

மாமி புன்னகையுடன், ‘பேஷ்.. சரியா சொன்னேடிம்மா..’ அவளைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு சீனிவாசனைப் பார்த்தாள்.. ‘என்னடா நா இங்கருக்கறது நோக்கு சங்கடமாருந்தா சொல்லு.. நா போய் ஒரு வா காப்பிய குடிச்சிட்டு ஒங்களுக்கும் கொண்டாரன்..’

சமையல்கட்டுக்கு செல்ல எழுந்து நின்ற மாமியை அவசரத்துடன் தடுத்து நிறுத்தினான் சீனிவாசன். ‘வேணாம் மாமி.. நீங்களும் இருங்கோ.. நான் சொல்லப் போறது என்னன்னுதான் ஒங்களுக்கு தெரியுமே.. ஒக்காருங்கோ..’

மைதிலி ஒன்றும் விளங்காமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள்.. ஆக.. இவா ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் என்னெ கூப்ட்ருக்காளா? இந்த விஷயத்துல இந்த மாமி யார் பக்கம்? இந்த பந்தம் வேணுங்கறாளா இல்ல வேணாங்கறாளா?

மைதிலியின் பார்வையிலிருந்ததைப் புரிந்துக்கொண்டதுபோல் அவளைப் பார்த்து பாசத்துடன் புன்னகை செய்தாள் மாமி.. நான் உன் பக்கம்தான் என்பதுபோல..

மைதிலி சந்தோஷத்துடன் தாங்ஸ் மாமி என்பதுபோல் பதிலுக்கு புன்னகைத்தாள்..

சீனிவாசன் கட்டிலிலிருந்து எழுந்து அருகிலிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்து தன் எதிரில் மிக அருகில் அமர்ந்திருந்த மைதிலியைப் பார்த்தான்..

அவன் பார்வையில் இருந்தது பரிவா, பாசமா இல்லை கையாலாகாத்தனமா என விளங்காமல் அவனையே பார்த்தாள் மைதிலி..

‘எதுக்கு சீனி இப்படி கிடந்து ஒன் எமோசஷ்ன் கூட போராடறே.. ஒனக்கு என்னெ மறந்துட்டு இருக்க முடியாதுங்கறது எனக்கு நன்னாவே தெரியும்.. இப்போ என் நிலமையும் அதே மாதிரிதான்.. ஒன்னெ விட்டுட்டு என்னாலயும் இனிமே இருக்க முடியாதுன்னு தோனறது.. அப்பா, அம்மாவ விடு.. அவாள எப்படி சமாளிக்கறதுன்னு நேக்கு தெரியும்.. அத நா பாத்துக்கறேன்.. நீ மட்டும் தெளிவா, உறுதியா சொன்னாப் போறும்.. ஒங்கூட நானும் மெட்றாசுக்கு வரத் தயார்.. நீ சரின்னு சொன்னாப் போறும்.. ஆனா நா கம்பெல் பண்ண மாட்டேன்.. ஒனக்கு சரின்னு தோனணும்.. அதுக்குத்தான் நா காத்துக்கிட்டிருக்கேன்.. சொல்லு..’

சீனிவாசனின் கண்கள் நிறைந்து பேச முடியாமல் தடுமாறுவதைப் பார்த்த சிவகாமி மாமி எழுந்து சென்று அவனருகில் அமர்ந்து அவன¨ அணைத்துக்கொண்டாள்.. ‘என்னடா சீனி இது கொழந்த மாதிரி.. அவதான் அவ மனசுலருக்கறத வெளிப்படையா சொல்லிட்டாளேடா.. நீ எதுக்கு இன்னும் மருகி, மருகி நிக்கறே.. எங்கூட வந்துருன்னு சொல்லேன்.. சரோஜாவும் சரி ஒங்கப்பாவும் சரி.. என்ன சொன்னாலும் நா பாத்துக்கறேண்டா.. ஒனக்கு மைதிலி வேணுமா வேணாமா அத சொல்லு.. மத்தத நா பாத்துக்கறேன்..’

சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு மைதிலியைப் பார்த்த சீனிவாசன், ‘அப்போ ஒன்னெ வந்து பார்த்த மாப்பிள்ளை ஒன்னெ வேணாம்னு சொல்லிட்டாரா?’ என்றான் தயக்கத்துடன்..

‘அதெதுக்குடா இப்போ..’ என்ற சிவகாமியை தடுத்து நிறுத்தி, ‘ஆமா சீனி.. நம்ம ரெண்டு பேரையும் பார்த்துட்டு அவா தப்பா நெனச்சிட்டாளாம்.. டாக்டர் மாமாதான் சொன்னார்..’ என்றாள் மைதிலி.

சீனிவாசன் பதிலேதும் பேசாமல் தன் கைகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சற்று நேரம்.. பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ‘What do you want me to say My.. I have already told you that I love you and want to marry you.. What else you want me to say.. இதுக்கும் மேல நா சொல்ல ஒன்னுமில்லை.. ஒன் அப்பா அன்னைக்கி ஃபோன்ல கெஞ்சினத என்னால இப்பவும் மறக்க முடியல மை.. I am just not able to forget that.. அதனாலதான் எதுக்கு இன்னமும் ஒன்னெ கம்பெல் பண்ணி.. I am sorry My.. இப்பவும் சொல்றேன்.. நீ எங்கூட வாழ முடிஞ்சா... I repeat.. if it is possible.. I mean.. if you could marry me.. I would be the happiest man in this world.. என்கூட நீ சென்னைக்கு வரணும்னு கூட இல்ல.. நா இங்கயே இருந்துடறேன்.. அம்மா என்ன சொன்னாலும் பரவால்லை.. I can manager her.. Dad won’t bother.. whether I am with them or not..’

மேலே பேச முடியாமல் சீனிவாசன் தடுமாற மைதிலி எழுந்து சென்று அவனருகில் அமர்ந்து அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டாள்.. ‘எனக்கு இது போறும் சீனி.. நானும் ஒங்கூடவே மெட்றாசுக்கு வரேன்.. அங்கிள் சம்மதிச்சா ரெண்டு பேரும் முதல்ல ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிக்கலாம்.. அப்புறமா என் அம்மா, அப்பாவ ஃபேஸ் பண்ணலாம்.. அவாளுக்கு மட்டும் இங்க யார் இருக்கா? என்ன மாமி?’

சிவகாமி கலங்கி நின்ற தன் கண்களை துடைத்தவாறே எழுந்து நின்றாள்.. ‘நீங்க ரெண்டு பேரும் பேசிண்டிருங்கோ.. நா காப்பி கலந்து கொண்டாரேன்..’ என்றவாறு சமையல்கட்டை நோக்கி நகரவும் ஹாலிலிருந்த தொலைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.

சென்னையிலிருந்து சரோஜா..

சிவகாமி எடுத்ததுமே எதிர்முனையிலிருந்து சரோஜாவின் குரல் கோபத்துடன் ஒலிக்க, ‘இல்லேடிம்மா.. அப்படியெல்லாம் இல்லை.. இரு சீனிய கூப்பிடறேன்..’ என்றவாறு, ‘சீனி ஒங்கம்மா.. சீக்கிரம் வா..’ உரத்த குரலெழுப்பினாள்..

மைதிலி உடனே எழுந்து கைத்தாங்கலாக சீனிவாசனை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள்..

தொடரும்..




3.10.06

சூரியன் 128

‘May I come in Sir?’ என்றவாறு தன்னுடைய அறையின் வாயிலில் தயங்கி நின்ற சுபோத் மிஷ்ராவை நிமிர்ந்து பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘Yes.’

வாயிற்கதவை மூடிவிட்டு உள்ளே வந்து நின்றவாறு தன்னைப் பார்த்தவனை சற்று நேரம் கூர்ந்து பார்த்தார் சுந்தரம். இவனை எந்த அளவுக்கு நம்பலாம்?

முன் பின் அறிமுகமாகாத ஒருவருக்காக தன்னுடைய உயர் அதிகாரியையே ஏமாற்றியவனாயிற்றே? இவனை உடனே தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிட்டுத்தான் மறுவேலை என்ற சேதுமாதவனின் எண்ணம் நிறைவேறினால் இவனுடைய கதி என்னவாகும்? ஆனால் அப்படியொரு சூழ்நிலை ஏற்படுமானால் சேர்மன் மாதவனின் ஆதரவு தனக்கு இருக்கும் என்ற கணக்கில்தானே விமானநிலையத்தில் வந்து மறைவாய் காத்திருந்தவரை வரவேயில்லையென்று சற்றும் தயங்காமல் சர்வசாதாரணமாக பொய் சொன்னான்?

அவ்வளவு நெஞ்சழுத்தம் உள்ள இவனே ஏன் அந்த பத்திரிகை நிரூபரிடம் வந்தனாவின் காரியதரிசி என்று பொய் சொல்லியிருக்கக் கூடாது? அப்படி இவன் செய்யவில்லையென்றால் யார் இவனுக்கு அந்த செய்தியை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியிருக்க முடியும்? இவனுக்கு முன் பின் பரிச்சயமில்லாத யாரோ ஒருவன் இவனை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?

‘Sir you wanted to see me?’

சுந்தரம் தன்னையே பார்த்துக் கொண்டு பேசாமல் இருப்பதை சங்கடமாக உணர்ந்தான் சுபோத். ஒருவேளை அந்த முரளி தனக்கு அனுப்பிய ஃபேக்சைப் பற்றித்தான் கேட்கப்போகிறாரோ? ஏற்கனவே சேது சாரிடம் பொய் சொல்லி அது எங்கே தெரிந்துவிடப்போகிறதோ என்ற பயத்தில் இருக்கிறேன். இதில் இந்த விஷயமும் அம்பலத்துக்கு வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். சேது சாரையாவது சமாளித்துவிடலாம். அந்த முரளி சரியான விஷம்.. இந்தியாவில் எந்த கிளைக்கு மாற்றம் பெற்று சென்றாலும் ஆளை வைத்து அடிக்கவும் தயங்க மாட்டான்.

‘Sit down Subodh. I want to ask you two or three questions. Please be truthful.’

சுபோத்துக்கு லேசாக விளங்கியது. இது அந்த ஃபேக்ஸ் சமாச்சாரம்தான். ‘Yes Sir.’ அவனையுமறியாமல் குரல் நடுங்கியது. ஏ.சி அறையிலும் வியர்த்துக் கொட்டியது.

அவனுடைய குரலிலிருந்த நடுக்கத்தையும் முகமெல்லாம் வியர்த்துப்போனதையும் கவனிக்கத் தவறவில்லை சுந்தரம். He must know.. He is tensed.. If I handle him properly.. he may spill the beans.

‘என்ன தைரியத்துல நேத்தைக்கி ஏர்போர்ட்ல சேர்மன் வரலேன்னு சேது சார்கிட்ட சொன்னீங்க சுபோத்.. He is extremely angry that you had intentionally lied to him. He wants to shunt you to the farthest corner in the world. Do you know that?’

சுந்தரத்தின் குரலில் இருந்த கோபம் அவனை ஒரு நிமிடம் திடுக்கிட வைத்தாலும் அவர் தன்னை அழைத்தது அந்த qபேக்ஸ் விஷயமல்ல என்றதும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

Aனால் அந்த ஒரு நொடி.. அவனுடைய முகத்தில் தோன்றி மறைந்த அந்த நிம்மதியை கவனிக்க தவறவில்லை சுந்தரம். வேண்டுமென்றேதான் சம்பந்தமில்லாத ஒரு கேள்வியை அவன் முன் வீசினார்.

‘Yes Subodh.. சொல்லுங்க.. எதுக்கு அந்த பொய்ய சொன்னீங்க? சேது சார் கண்டுபிடிக்க மாட்டார்ன்னு நினைச்சீங்களா? இப்ப அவரோட கோபத்துலருந்து எப்படி தப்பிக்கப் போறீங்க?’

சுந்தரம் இவ்வளவு கண்டிப்புடன் தன்னிடம் பேசியதேயில்லையே? உண்மையிலேயே இதற்குத்தான் தன்னை இவ்வளவு அவசரமாக அழைத்தாரா? இதை எப்படி சமாளிப்பது? சேர்மன் சார் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னாரே? மறந்திருப்பாரோ?

‘என்ன சுபோத் என் கேள்விக்கு பதிலையே காணோம்?’

தலையைக் குனிந்துக்கொண்டு எப்படி பதிலளிக்கலாம் என்ற யோசனையில் இருந்த சுபோத், ‘சார்.. சேர்மன் அப்படி என்னெ சொல்ல சொல்றப்போ நா எப்படி சார் முடியாதுன்னு சொல்றது? ஒனக்கு ஏதாச்சும் இதனால பிரச்சினை வந்தா நா பார்த்துக்கறேன்னு சொன்னார் சார்... அதனாலதான்..’ என்று இழுத்தான்..

இந்த பதிலுடன் சுந்தரம் சமாதானமாகிவிடுவார் என்று எதிர்பார்த்த சுபோத் அவருடைய அடுத்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

‘சரி அது போகட்டும்.. சேது சாரையாவது என்னால சமாளிக்க முடியும்.. ஆனா இன்னைக்கி ஒரு முட்டாள்தனமான காரியத்த செஞ்சிட்டு வந்து நிக்கறீங்களே இதுலருந்து எப்படி தப்பிக்கப் போறீங்க?’

சுந்தரம் என்ன சொல்ல வருகிறார் என்பது லேசாக புரிந்தாலும் ஒருவேளை இதுவும் வேறு ஏதாவது விஷயமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், ‘இன்னைக்கா? நான் என்ன சார் செஞ்சேன்?’ என்றான் சாமர்த்தியமாக.

சுந்தரம் அவனையே வியப்புடன் பார்த்தார். சரியான கல்லுளி மங்கனாருப்பான போலருக்கே.. தெரியாத மாதிரி நடிக்கிறான்?

‘உண்மையிலயே ஒங்களுக்கு தெரியல சுபோத்?’

சுபோத் பிடிவாதமாக, ‘சாரி சார்.. எனக்கு என்னன்னு தெரியல.. Please don’t mistake me..’ என்றான்.

‘அந்த ஃபேக்ஸ் விஷயம்..’

சுபோத் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தான்.

அவனுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே அவனைக் காட்டிக்கொடுத்துவிட்டது என்று நினைத்தார் சுந்தரம். இன்னும் சற்று மிரட்டினால் உண்மையைக் கக்கிவிடுவான்..

‘அத யார் ஒங்கள நேரா சேர்மன் கிட்ட கொடுக்கச் சொன்னது? அதுவும் போர்ட் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கறப்ப? நீங்க சேர்மனோட காரியதரிசின்னா.. Do you think you have direct access to Chairman for everything?’

ஓ! அதுதான் விஷயமா? நேரா சேர்மன் கிட்ட குடுத்ததுதான் தன்னுடைய முட்டாள்தனமா? நல்லவேளை.. யார் ஒனக்கு அத அனுப்பினார்னு கேக்காம விட்டாரே..

‘சாரி சார்.. அத சேர்மன் கிட்ட குடுக்கணும்னுதான் அனுப்பினவர் சொன்னார்.. அதான்..’ தன்னுடைய தவறை உணர்ந்த சுபோத் நாக்கைக் கடித்துக்கொள்ள அதைக் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கேள்விக்கு தாவினார் சுந்தரம்..

‘Did you go through the contents of the fax?’

‘Yes Sir. I just wanted to ensure that it is really serious enough to disturb the Chairman during the Board meeting. That’s why.. I just glanced through the fax’

‘That’s OK.. You knew that it was something about one of the senior most members in the Board.. Am I right?’

‘yes Sir.. It was about..’ சுந்தரம் வேண்டுமென்றே அவனை மேலே பேச விடாமல் தடுத்தார்.

‘I am not concerned with that.. Tell me..  இது சீரியசான விஷயம்னு தெரிஞ்சதும் ஒன்னு சேது சார்கிட்ட குடுத்துருக்கணும் இல்லன்னா சுந்தரலிங்கம் சார்கிட்ட குடுத்துருக்கணும்.. அதெப்படி நேரா சேர்மன்கிட்ட குடுக்கலாம்?’

இதென்னடா ரோதனை.. இந்த கேள்வியத்தான் ஏற்கனவே கேட்டு நானும் முட்டாத்தனமா பதில் சொன்னேனே சார்? அப்பவே என்னெ நீங்க மடக்கியிருக்கலாம்.. விட்டுட்டீங்க.. மறுபடியும் அதே பதில சொல்றதுக்கு நான் என்ன முட்டாளா?

‘எனக்கு அந்த நேரத்துல வேற ஐடியா வரல சார்.. அதோட..’

‘ஒங்களுக்கு அத அனுப்புனவர் நேரா சேர்மன் கிட்டத்தான் குடுக்கணும்னு சொன்னார். அப்படித்தானே?’

சுபோத் திடுக்கிட்டு சுந்தரத்தைப் பார்த்தான்.. அடடா.. மாட்டிக்கிட்டோமே.. மனுஷன் கவனிக்கலைன்னு நினைச்சா.. இப்ப என்ன சொல்றது.. ஏற்கனவே நான் சொன்ன பதில நினைவுல வச்சிருப்பாரோ?

இல்லை என்று தலையை அசைத்தான்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால அனுப்பினவர்தான் அப்படி சொன்னார்னு சொன்னீங்க?’

சை! நாம இதுவரைக்கும் சந்திச்ச சார் இல்லையே இந்த சார்.. இப்ப என்ன பண்றது? அனுப்பினது யார்னுதான அடுத்த கேள்வி வரும்? முரளிதான் சார் அனுப்புனார்னு சொல்லிட்டா என்ன?

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்..

சுந்தரம் எழுந்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தார். ‘I told you one thing in the beginning.. Do you remember that?’

சுபோத் புரியாமல் அவரையே பார்த்தான். ‘Sir?’

‘I requested you to be truthful.. Now tell me.. Who sent you the fax?’

சற்று முன் வரை அவருடைய குரலிலிருந்த கோபம் காணாமல் போனதை உணர்ந்த சுபோத் சற்று நேரம் என்ன சொன்னால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று யோசித்தான்.

‘Is it Vandana’s PA?’

சுபோத் குழப்பத்துடன் அவரை பார்த்தான். வந்தனா மேடத்தோட பி.ஏவா? இதென்ன புது குழப்பம்? அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ஆமான்னு சொல்லிட்டா என்ன? ஆனா அது சரியாயிருக்காதே.. She would be able to easily prove that she was not the person.. She was here right in the office when the fax came from outside..

‘என்ன சார் சொல்றீங்க.. வந்தனா மேடத்தோட பி.ஏவா.. No Sir.. she was not the person.’

சுந்தரம் ஒரு மர்ம புன்னகையுடன் பார்த்தார். ‘How can you be so sure?’

‘He spoke to me for a few seconds before sending the fax Sir.’

அப்படி வா வழிக்கு.. ‘Who was that?’

சுபோத் தான் மடக்கப்பட்டுவிட்டது புரிந்தது. இருப்பினும் நடப்பது நடக்கட்டும் என்று சட்டென்று தன்னுடைய மனதில் தோன்றியதை எடுத்து விட்டான்.. ‘சாரி சார்.. He did not identify himself.. He just said that he is sending a fax and that it should be immediately handed over to our Chairman.. Before I could refuse he disconnected the phone..’

சுந்தரம் எழுந்து நின்றார். ‘I am sure that you could not identify the voice in those few seconds, am I right?’

சுந்தரம் தன்னுடைய பதிலில் கோபப்படுவார் என்று நினைத்திருந்த சுபோத்திற்கு அவருடைய குரலில் தொனித்த நிதானம் லேசான அச்சத்தை ஏற்படுத்தியது.

‘Yes Sir.. I could not..’ என்றான் தயக்கத்துடன்..

சுந்தரம் குனிந்து அவனை நிதானமாகப் பார்த்தார். ‘You may go..’

சுபோத் குழப்பத்துடன் அமர்ந்தவாறே அவரைப் பார்த்தான். இத்தனை எளிதாக இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மெள்ள எழுந்து நின்றான்.. ‘சார்..’ என்று தயங்கினான்..

‘I said you may go..’ என்றவாறு சுந்தரம் தன்னுடைய அறை வாசலைக் காட்ட வேறு வழியில்லாமல் சுபோத் வாசலை நோக்கி நடந்தான்..

தயக்கத்துடன் நடந்த அவனையே பார்த்தவாறு நின்றிருந்தார் சுந்தரம். அவன் வாசலை அடைந்து வெளியேறாமல் தயங்கி நிற்பதைக் கண்டார்.. ‘Yes Subodh? Is there anything you forgot to tell me?’

சுபோத் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தான்.. ‘Sir.. I could recognise the voice.. but I am not sure.. that’s why..’

சுந்தரம் புன்னகையுடன் அவனை நெருங்கி அவனுடைய தோள்மேல் கை வைத்தார். ‘Don’t worry.. You tell me who you thought it could be.. I will find out who it could be.. Just give me a name..’

சுபோத் தயக்கத்துடன் ஒரு நொடி அவரையே பார்த்தான்.. ‘Sir.. it could be... could be.. Murali..’

சுந்தரம் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.. ‘You mean.. the Union leader? Are you sure..?’

சுபோத் அச்சத்துடன் அவரைப் பார்த்தான். ‘சார்.. I am not sure.. I just for a second thought.. நான் அவரோட பேர சொன்னேன்னு..’

சுந்தரம் புன்னகையுடன் அவனை தட்டிக் கொடுத்தார்.. ‘Don’t worry.. I will not reveal to anyone.. You may go..’

அறைக்கதவை மூடிக்கொண்டு சுபோத் வெளியேற.. சுந்தரம் யோசனையுடன் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்..

தொடரும்..