27.4.07

சூரியன் 195

சமையலறையிலிருந்து காப்பி கோப்பையுடன் வந்த நளினியைப் பார்த்தாள் வந்தனா...

காலையிலிருந்தே அவள் ஏதோ பதற்றத்துடன் காணப்படுவது தெரிந்தது. ஆனால் என்ன என்றுதான் விளங்கவில்லை...

காப்பிக் கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நகர முயன்றவளுடைய கையைப் பிடித்து நிறுத்தினாள்.. 'என்ன நளினி என்ன விஷயம்? ஏன் ஏதோ டென்ஷனோட இருக்கா மாதிரி.... நந்து ஏதாச்சும் சொன்னாரா? எங்க அவர் காலைலருந்தே காணம்?'

நளினி அவளுடைய முகத்தை நேரடியாக பார்க்காமல் அணைந்துக்கிடந்த தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தவாறு நின்றாள். 'அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மேடம்.. நார்மலாத்தான் இருக்கேன்... டிரான்ஸ்ஃபர் கிடைக்குமோ கிடைக்காதோங்கற கவலை லேசா இருக்கு... வேற ஒன்னுமில்லை...'

'அதான் மாணிக்கம் சரின்னு சொல்லிட்டாரில்ல... அப்புறம் என்ன? எல்லாம் சரியாயிரும்... இன்னைக்கி எப்படியும் டாக்டர கன்வின்ஸ் பண்ணிரணும்... இந்த மாதிரி அரை வயித்து சாப்பாடெல்லாம் சாப்ட்டுக்கிட்டிருந்தா மண்டேலருந்து ஆஃபீசுக்கு எப்படி போறது? என்னதான் ஃபிலிப்கிட்ட சொல்லிட்டோம்னாலும் நா அங்க இருந்தாத்தான ஆர்டர ஒடனே போட முடியும்...? அதனால இன்னைக்கி எப்படியும் ஹாஸ்ப்பிடலுக்கு போய்ட்டு வந்துரணும்... அதனாலதான் கேக்கேன் நந்தக்குமர் எங்க.. அவரும் கூட வந்தா நல்லாருக்குமே...'

நளினி திரும்பி அவளைப் பார்த்தாள். மூன்று நாட்களாக சரியான உணவு இல்லாததாலோ என்னவோ மெலிந்து சோர்ந்துபோயிருந்த அவளுடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது நளினிக்கு... அந்த களையிழந்த முகத்தை பார்க்கவே சகிக்கவில்லை... டீக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ஹை ஹீல் செருப்புல மிடுக்கா நடக்கற மேடமா இது? அதுவும் மூனே நாள்ல... அடையாளமே தெரியாம...

'என்ன நளினி பதில் சொல்லாம என்னையே பாக்கே... ஆளே அடையாளம் தெரியாம மாறிப்போய்ட்டனோ?'

'ச்சேச்சே அப்படியெல்லாம் இல்ல மேடம்... கொஞ்சம் டயர்டா இருக்கீங்க.. நீங்க சொன்னா மாதிரி சரியான சாப்பாடு இல்லாததுதான் காரணம்...' என்று சமாளித்த நளினி தொடர்ந்து, 'நந்து முரளிய பாத்துட்டு வரேன்னு போயிருக்கார் மேடம்... அவர் இல்லன்னாலும் பரவால்லை... நம்ம கால் டாக்சிய கூப்ட்டுகலாம்... நீங்க காப்பிய குடிங்க மேடம்.. நீங்க குளிக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்... குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா போய்ட்டு வந்துரலாம்...' என்றவாறு குளியலறையை நோக்கி நகர, 'நளினி இந்த டிவிய ஆன் பண்ணிட்டு போயேன்... மூனு நாளா ந்யூசும் கேக்கல... பேப்பரும் படிக்கலயா... பைத்தியம் புடிச்சா மாதிரி இருக்கு...' என்றாள் வந்தனா...

நளினி திடுக்கிட்டு தொலைக்காட்சி பெட்டியையும் வந்தனாவையும் பார்த்தாள். 'வேணாம் மேடம்... டாக்டர கன்சல்ட் பண்ணிட்டு பாத்துக்கலாம்... அப்புறம் அதுல ஏதாவது வேண்டாத நியூஸ் சொல்ல.. நீங்க டென்ஷனாயிருவீங்க... நீங்க காப்பிய குடிச்சிட்டு குளிங்க... ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணதும் சாப்ட்டு கெளம்பலாம்... டாக்டர் சரின்னு சொல்லிட்டா சாயந்தரம் பாத்துக்கலாமே...'

விட்டால் போதும் என்பதுபோல் ஓடுகிறாளே... என்னாயிற்று இவளுக்கு என்ற சிந்தனையுடன் அன்றைய செய்தித்தாளாவது கிடக்கிறதா என்று டீப்பாயைப் பார்த்தாள்... சாதாரணமாக ஒரு வாரத்து செய்தித்தாள்கள் ஞாயிற்றுக்கிழமை வரை டீப்பாயிலேயே கிடக்கும்... ஞாயிற்றுக்கிழமை பகலுணவுக்குப் பிறகு அவ்வார செய்தித்தாள்களை ஒன்றுவிடாமல் படித்துமுடித்து ஷெல்ஃபில் எடுத்து வைப்பது வழக்கம்... ஆனால் பேப்பர் வாங்குவதையே நளினி நிறுத்திவிட்டாள் போலிருக்கிறது... இப்படியொருத்தி சகோதரியா வந்திருந்தா... ஹூம்... இவளும் கூடப் பொறந்திருந்தா இப்படி இருக்க மாட்டாளோ என்னமோ....

*******
நாடார் சோமசுந்தரத்தின் பங்களாவைச் சென்றடைந்தபோது அவரைத் தவிர யாரும் வந்திருக்கவில்லை...

வாசலிலிருந்த பிரம்மாண்டமான இரும்பு கேட்டைத் திறந்துவிட்ட குர்க்கா நாடாரைக் கண்டதும் சலாமடித்தான்...

'சலாமெல்லாம் பலமாத்தான் இருக்கு.... ஒங்க அய்யா இன்னும் வரலையாக்கும்?' என்றார் நாடார் புன்னகையுடன்..

'இப்போ வந்துருவார் சாப்... ஆப் அந்தர் ஜாக்கே பைட்டியே.... மேனேஜர் சாப் ஹை அந்தர்...' என்றான் அவருக்கு விளங்காத மொழியில்...

நாடார் உரக்கச் சிரித்தவாறு அவரை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வந்த மேலாளரைப் பார்த்தார். 'என்னய்யா... இந்தாளுக்கு தமிழ ஒரு வாத்தியார வச்சி சொல்லித்தரப்படாதா? இப்படி போட்டு கொல்றான்..?'

மேலாளர் சிரித்தார்... 'இவனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தா நமக்கே அது மறந்துரும் சார்.. நீங்க வாங்க... வர்ற வழியில டாக்டர் வண்டி ஏதோ மக்கார் பண்ணிருச்சி போலருக்கு... இங்கருந்த வண்டிகள்ல ஒன்னெ அனுப்பியிருக்கேன்... செட்டியார் இப்பத்தான் போன் பண்ணார்... இன்னும் அஞ்சி நிமிசத்துல வந்துருவேன்னு சொன்னார்... நீங்க உள்ள வந்து ஒக்காருங்கய்யா...'

'சரி போங்க... நீங்களாச்சும் இருக்கீங்களே... இல்லன்னா நாம் பாட்டுக்கு திரும்பிப் போயிருப்பேன்.. வாசல்லருக்கற குர்க்காக்கிட்ட என்னத்த கேக்கறது... அவன் ஆத்தா ஜாத்தாம்பான்.. நான் அச்சா கிச்சான்னு சொல்லிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்...'

அந்த காலைநேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழையாதபடி இருட்டடிப்பு செய்துக்கொண்டிருந்தன சவுக்கு மரங்கள்.... 'ஜில்லுன்னு ஏசி போட்டா மாதிரி இருக்குய்யா... பேசாம ஒரு துண்ட விரிச்சி படுத்துரலாம் போலருக்கு... நிம்மதியா தூங்கி எத்தன நாளாச்சிது....'

ஹூம்.. இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது சரியாத்தான் இருக்கு.... தோளுக்கு மீது வளர்ந்து நின்ற இரு பெண்களை எப்படித்தான் கரையேற்றப் போகிறேனோ என்று நினைத்தவாறு ஆறு மாதங்களுக்கும் மேலாக உரக்கமிழந்து தவித்துக் கொண்டிருந்த மேலாளர் கோடி, கோடியா பணமிருக்கறவங்களும் நம்மளப் போலத்தான் போலருக்கு என்று நினைத்தவாறு முன்னே நடந்தார்...

அவர் வரவேற்பறை என்ற பெயரில் நாற்பதடிக்கு குறையாத நீளத்திலிருந்த அந்த அறையில் ஆங்காங்கே கிடந்த சோபாக்களில் அமராமல் அறையின் ஒரு மூலையில் கிடந்த மெத்தைகளில் ஒன்றில் அமர்ந்து அருகில் கிடந்த உருட்டை தலையணைகளில் ஒன்றில் சாய்ந்தார்...

விர்ரென்ற மெல்லிய ஓசையுடன் இயங்கிய குளிர்சாதன பெட்டியின் ஓசையைத் தவிர முழு அமைதியுடன் இருந்த அந்த சூழலில் தன்னை மறந்து கண்கள் சொருக... 'என்ன நாடார்... குட்டித் தூக்கமா?' என்ற உரத்த சிரிப்பொலியினூடே கேட்ட குரல் சத்தத்தை நோக்கி திரும்பினார்...

வாயெல்லாம் பல்லாக சிவசுப்பிரமணிய செட்டியார்.... அரசியல்வாதியைப் போன்ற வெள்ளைவெளேர் வேட்டி சட்டையில்...

'வாய்யா செட்டியாரே... வந்து ஒக்கார்... நம்மள வரச்சொல்லிட்டு இந்த டாக்டர காணம் பாத்தீகளா?'

'அவருக்கென்னய்யா.. நம்மள மாதிரியா? எத்தனை பேர அருக்கணுமோ... தைக்கணுமோ... அதயல்லாம் முடிச்சிட்டுத்தான வருவாரு?'

நாடார் ஒரு போலி பதற்றத்துடன் செட்டியாரைப் பார்த்தார்... 'என்னய்யா காலங்கார்த்தால பயங்கரமா யோசிக்கறீரு... அவர்தான் ரிட்டையராயி மக கைல ஆஸ்ப்பிட்டல குடுத்தாச்சே... அப்புறம் எதுக்கு இந்த வேலையெல்லாம்.. இப்ப அவரோட முழு நேர வேலையா யார கவுக்கலாங்கறதுதானே... என்ன சொல்லுதீரு...' என்றவாறு உரக்கச் சிரிக்க செட்டியாரும் சேர்ந்துக்கொள்ள அந்த அறையின் அமைதியே கலைந்துப் போனது...

வாசலில் நின்றிருந்த சோமசுந்தரத்தின் மேலாளர் கேட்டும் கேட்காததுபோல் வாசலை நோக்கி திரும்ப தொலைவில் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு, 'டாக்டரய்யா வந்துட்டார்யா..' என்றார் முன்னெச்சரிக்கையாக.. எங்கே இவர்கள் இருவரும் சோமசுந்தரம் வருவது தெரியாமல் அவரை கேலி செய்வதை தொடர்ந்துவிடுவார்களோ என்ற பயம் அவருக்கு..

************

தனபால்சாமியுடன் பேசிவிட்டு செல்பேசியை அணைத்து கையில் பிடித்தவாறே சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைப் பார்த்தார். 'இதே லேபரர் கூட்டம்னா தடியடி செஞ்சி கலைச்சிரலாம்... இவங்கள பாத்தா நல்ல படிச்ச ஆளுங்களாட்டம் தெரியுதே சார்.. என்ன பண்ணப் போறீங்க?' என்றாவாறு அருகிலிருந்த ஏரியா எஸ்.ஐயை பார்த்தார்.

அவரும் அதே யோசனையுடன் கூட்டத்தைப் பார்த்தார். 'பெரிசா கலாட்டா ஏதும் பண்ணாலும் ஏதாச்சும் ஆக்ஷன் எடுக்கலாம்.. எல்லாரும் அமைதியா ஒக்காந்துருக்கானுங்க... அதான் யோசனையாருக்கு.... யாராச்சும் லீடர் மாதிரி இருக்கானான்னு பாக்கலாம் வாங்க..' என்றவாறு முன்னே நடந்தவரை பிந்தொடர்ந்தார்..

அவர்களிருவரும் கூட்டத்தை நெருங்கவும் அதிலிருந்து ஒரு சிறிய கூட்டம் எழுந்து அவர்களை நெருங்கியது. அவர்களை தடுக்க முயன்ற காவலர்களை, 'அவங்கள வரவிடுங்க...' என்றார் ஏரியா எஸ்.ஐ.. 'என்ன சார் விஷயம் சொல்லுங்க.. படிச்சவங்களாருக்கீங்க.. இப்படி காலைல நேரத்துல டிராஃபிக்க ப்ளாக் பண்றீங்களே.. எதாருந்தாலும் பேசி தீர்த்துக்கலாங்க.. அவங்கள மொதல்ல ரோட்டுலருந்து விலகச் சொல்லுங்க..' என்றார்.

அவர்களை நோக்கி வந்த கூட்டத்திலிருந்தவர்களுள் ஒருவர் தொழிற்சங்க துணை செயலாளர். 'சொல்றோம் சார்... அதுக்கு முன்னால இதுக்கு காரணமாருந்தவர் பேர்ல ஆக்ஷன் எடுக்கறோம்னு சொல்லுங்க...' என்றார் முறைப்புடன்..

தனபால்சாமியின் உதவியாளர் தன் நண்பரைப் பார்த்தார். அவர், 'யார்னு சொல்லுங்க... ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அதவிட்டுட்டு வொர்க்கர்ஸ் மாதிரி மறியல்ல எறங்குனா எப்படி சார். 'என்றார்..

அவர் சொல்வதில் நியாயம் இருந்ததுபோல் தன் சகாக்களைப் பார்த்தார் சங்க துணை செயலாளர். 'சார் இது எமோஷனலா நம்ம சங்கத்து ஆளுங்க எடுத்த முடிவு... எங்களுக்கு எங்க ஈ.டி மேலதான் சந்தேகம். அவருக்கும் எங்க தலைவருக்கும் இடையில இருக்கற பெர்சனல் விரோதத்த மனசுல வச்சுக்கிட்டு இந்த காரியத்த செஞ்சிருக்கார். எங்க பேங்க் சேர்மன் இல்லாத இந்த நேரத்துல இவங்களுக்கு தங்களோட வருத்தத்த தெரிவிச்சிக்க வேற வழி தெரியல... அதான் மறியல்ல இறங்கிட்டாங்க.. நீங்க வந்து ஆக்ஷன் எடுக்கறோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா.. ஒடனே கலைஞ்சி போயிருவாங்க.. அதுக்கு நா க்யாரண்டி..'

'என்ன சார்.. சொல்லிருவோமே... டிராஃபிக் ஜாம் ஜாஸ்தியாகறதுக்குள்ள முடிச்சிருவோம் சார்.. இல்லன்னா மேடத்துக்கிட்ட பதில் சொல்ல முடியாது.' என்றவாறு ஏரியா எஸ்.ஐ. தனபால்சாமியின் உதவியாளரைப் பார்க்க அவரும் தலையை அசைத்தார். பிறகு சற்று முன் பேசிய சங்கத் தலைவரைப் பார்த்தார். 'சார்.. ஒங்க ஈ.டியோட பேர் என்னன்னு சொன்னீங்க?'

'சேதுமாதவன் சார்... கேரளாக்காரர்.. ஈ.டின்னதும் பயந்துராதீங்க... அடிபட்டுருக்கறது எங்க செக்கரட்டரி... தயவு செஞ்சி ஆக்ஷன் எடுக்கறேன்னு சொல்லிட்டு பின்வாங்கிராதீங்க...'

சேதுமாதவன் என்ற பெயரைக் கேட்டதுமே... 'சார் நீங்க போய் பேசுங்க.. நான் எஸ்.பிக்கு ஒரு ஃபோன் போட்டு சொல்லிட்டு வந்துடறேன்.. அப்புறம் என்னெ கேக்காம எதுக்குய்யா ப்ராமிஸ் பண்றீங்கன்னு கத்துவார்...' என்றவாறு தன் செல்பேசியை எடுத்துக்கொண்டு ஜீப்பை நோக்கி நகர்ந்தார் எஸ்.பி தனபால்சாமியின் உதவியாளர்.

தொடரும்...

26.4.07

சூரியன் 194

வீட்டிலிருந்து புறப்பட்டு செம்பூர் கார்டனை நெருங்கிய மைதிலி சாலையில் இடதுபுறத்திலிருந்த மருத்துவர் ராஜகோபாலனின் மருத்துவமனையைப் பார்த்தாள். This is where my life took a turn for the worse என்று நினைத்தாள். அவளையுமறியாமல் ராஜகோபாலனின் மீது கோபம் எழுந்தது. அவரை சந்தித்து சூடாக நாலு கேள்விகளைக் கேட்டாலென்ன என்று நினைத்தாள். அடுத்த நொடியே அவர மட்டும் சொல்லி என்ன பிரயோசனம்? என்ன என்று தோன்றியது. நேற்று மட்டும் தன்னை சீனியில் வீட்டின் முன்னிருந்து காரில் கடத்தி வரவில்லையென்றால் எப்படியாவது அவள் அவனை சந்தித்திருப்பாள்...

செம்பூர் கார்டன் சந்திப்பிலிருந்த போக்குவரத்து சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாறியும் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க நாலாபுறமும் காத்திருந்த வாகனங்கள் அலறத் துவங்கின. திடுக்கிட்டு மீண்ட மைதிலி அவசர, அவசரமாய் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சிக்னலைக் கடந்து சயான் செல்லும் திசையில் திரும்பினாள்.

இப்ப என்ன செய்யலாம்னு ப்ளான்? என்றது உள்மனசு. மொதல்ல சீனிக்கி என்னாச்சின்னு கண்டுபிடிக்கணும். அதுக்கு என்ன வழி... அவன்கிட்ட செல்ஃபோன் இருக்காது. வீட்டுக்கு ஃபோன் பண்ணா ஒருவேளை சரோஜா ஆன்டியோ இல்ல அங்கிளோ எடுத்தா என்னன்னு பேசறது? இது எல்லாத்துக்கும் நீதாண்டிம்மா காரணம்னு சொல்லிட்டா?

இத்தனை குழப்பங்களுடன் மேலே செல்வதா அல்லது எங்காவது அமர்ந்து யோசிப்பதா என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்க அவளுடைய செல்பேசி ஒலித்தது. கழுத்திலிருந்து மாலையாய் தொங்கிக்கொண்டிருந்த செல்பேசியை எடுத்து யாரென விளங்காமல் 'ஹலோ' என்றாள் தயக்கத்துடன்...

'மைதிலி நாந்தா வத்ஸ்... எங்கருக்கே?'

'வத்சலா நீங்களா? Thankyou so much for calling me.. நா இப்ப சயான் போய்க்கிட்டிருக்கேன்...ஒன் செக்கண்ட்... வண்டிய பார்க் பண்ணிட்டு கூப்பிடறேன்..' உடனே சாலையோரத்தில் ஒதுங்க முடியாதபடி அவளுக்கு இடமும் வலமும் வாகனங்கள் பறந்துக்கொண்டிருந்தன. அவைகளை சமாளித்து இடது புறம் ஒதுங்கி வாகனத்தை நிறுத்தவே பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.

அதற்குள் பொறுமையிழந்து வத்ஸ்லா மீண்டும் அழைக்க, 'சாரி வத்ஸ்... இங்க பயங்கர டிராஃபிக்... நானும் சீனியப் பத்தித்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன்.. யார கூப்பிடறதுங்கறது தெரியாம தடுமாறிக்கிட்டிருக்கேன்... நல்லவேளையா ஒங்க ஃபோன் வந்துது..' என்றவள் சீனி எப்படியிருக்கான்... சொல்லுங்களேன்...' என்றாள் தொடர்ந்து படபடப்புடன்.

வத்சலா அடுத்த சில நொடிகளில் நடந்தவற்றையெல்லாம் மளமளவென்று கூறிமுடித்து மருத்துவமனையின் விலாசத்தையும் கூறினாள். இறுதியில், 'நீ ஒடனே இங்க பொறப்பட்டு வா மைதிலி... சீனி ஒன்னெ பாத்தே ஆகணும்னு டென்ஷன் பண்றான்... அம்மா இருக்கற நிலையில எனக்கு எப்படி அவனெ சமாளிக்கறதுன்னே தெரியல.. ஒடனே வாயேன் ப்ளீஸ்... Don't worry about Dad.. வச்சிடறேன்...' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க மலைத்துப் போய் சில நொடிகள் நடந்ததற்கு தானும் ஒரு முக்கிய காரணம்தானே என்ற குற்றவுணர்வு மேலோங்க சாலையென்றும் பாராமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்...

செத்துக்கிடந்தாலும் கவலைப்படாமல் தன்வழியில் சென்றுக்கொண்டிருக்கும் மும்பைவாசிகள் மைதிலியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரவர் வழியில் செல்ல அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து வத்சலா சொன்ன மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்.

*******

தனபால்சாமி எஸ்.பியின் வாகனம் அலுவலகத்திற்குள் நுழைந்தால் காலை சரியாக ஒன்பது மணி என்று அர்த்தம்.

வாகனம் அவருடைய அலுவலக வாசலில் சென்று நின்றதும் இறங்கி மிடுக்குடன் அவர் முன்செல்ல அவருடைய வாகனத்தில் இருந்த பத்திரிகைகளையும் கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவர் பின்னே ஓடினார் அவருடைய பிரத்தியேக காவலர். அய்யா நடக்கும் நடையிலிருந்தே அவர் எந்த மூடுல இருக்கார்னு சொல்லிருவேன் என்று தன்னுடைய நண்பர்களிடம் பெருமையடித்துக்கொள்ளும் அவருக்கு அன்று அய்யா படு டென்ஷனுடன் இருப்பது தெரிந்தது.

எல்லா இந்த பாளாப்போன பாம்ப் ப்ளாஸ்ட்தான் காரணம்.. எங்கயோ என்னமோ வெடிக்குதுன்னா ரெண்டாயிரம் மைலுக்கப்புறம் இருக்கற எங்கள ஏன்யா டென்ஷனாக்குறீங்க? இப்பப் பார் காலைல வந்து எறங்குனதுமே இவ்வளவு டென்ஷன்லா இருந்தார்னா.. இன்னும் போகப்போக என்ன ஆகுமோ தெரியலையே... இன்னிக்கி நம்ம கதி அதோகதிதான் போலருக்கு... யார் தலையெல்லாம் உருளப் போகுதோ...

தனபால்சாமி மேசையை சுற்றிக்கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்ததுமே தன் காவலரைப் பார்த்தார். தன்னுடைய உதவி அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, 'மணி இருக்காரான்னு பார்யா. இருந்தா ஒடனெ வரச்சொல்லு... க்விக்.' என்றார். 'வந்துட்டார்யா... இதோ வரச் சொல்றேன்.' என்றவாறு சென்ற காவலர் அடுத்த சில நொடிகளில் திரும்பிவந்து, 'அய்யா அவர் இப்பத்தான் எங்கருந்தோ ஃபோன் வந்து ஜீப்ப எடுத்துக்கிட்டு போயிருக்காராம்... எங்கன்னு சொல்லலையாம்யா...' என்றவாறு தலைகுனிந்து நிற்க எரிந்து விழுந்தார் எஸ்.பி.

'என்னய்யா பண்றீங்க எல்லாரும்? அவர் எங்க போனாலும் கேக்கணும்னு சொல்லியிருக்கேனில்லே... அவர் அசிஸ்டெண்ட்ஸ் யாரும் இருக்காங்களா பார்...'

'இருக்காங்கய்யா.. ஆனா எஸ்.ஐ அய்யா போன் வந்ததுமே பரபரப்பா கெளம்பி போனாராம்யா.. அதான் டைப்பிஸ்ட் அம்மாவுக்கு கேக்கணும்னு தோனல... கேட்டா எங்க கோச்சிக்குவாரோன்னாருக்கும்...' என்றவர் எஸ்.பியின் முறைப்பதைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டார்.. 'மன்னிச்சிருங்கய்யா..'

'எதுக்கெடுத்தாலும் இந்த ஒரு வார்த்தைய சொல்லிருங்க... போயி... வயர்லெஸ் இல்லன்னா செல் ஃபோன எடுத்துக்கிட்டு போயிருக்காரான்னு பாத்துட்டு அவர என்னெ ஒடனே கூப்பிடச் சொல்லுங்க... போங்க... அடுத்த அஞ்சு நிமிசத்துல அவர் ஃபோன் மட்டும் வரல.... இருக்கு ஒங்க எல்லாருக்கும்...'

போச்சிரா.. எங்கயோ இடி இடிச்சா எங்கயோ மழை பெய்யுங்கறா மாதிரி அந்த அய்யா செஞ்ச தப்புக்கு எனக்கு இடியா... என்னடா பொளப்பு இது என்று நொந்துக்கொண்டு காவலர் வெளியேற இருக்கையிலிருந்து எழுந்து அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார் எஸ்.பி... அந்தாளு ஆஃபீசுக்கு கெளம்பறதுக்குள்ள போங்கன்னு படிச்சி படிச்சி சொல்லியிருந்தேனே.. ஒருவேளை அங்கதான் போயிருப்பாரோ... என்று நினைத்தவர் அடுத்த நொடியே முந்தைய நாள் அவர் கூறியதை நினைத்துப் பார்த்தார்... அதான் அந்த ஏரியா எஸ்.ஐய பாத்துக்க சொல்லலாம்னு சொன்னாரே...

மேசைமீதிருந்த அவருடைய செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும் விரைந்துச் சென்று திரையைப் பார்த்தார். அவர்தான். எடுத்தவுடன் 'சொல்லுங்க... அந்த பேங்க் ஈ.டி கேஸ் என்னாச்சி..?' என்று உறுமினார்.

'சார்... அந்த விஷயத்த காலைலயே ஏரியா எஸ்.ஐகிட்ட சொல்லிட்டேன் சார்... சர்ச் வாரண்டையும் நம்ம ஆஃபீஸ் ஏட் வழியா குடுத்தனுப்பியாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் அங்க போயிருவார்... நான் நீங்க வந்ததுமே சொல்லணும்னுதான் இருந்தேன்.. அதுக்குள்ள இங்க ஒரு லேபர் ப்ராப்ளம்... --------------- பேங்க் ஸ்டாஃப் யூனியன் லீடர யாரோ ரவுடிங்க இன்னைக்கி காலைல அடிச்சி காயப்படுத்திட்டாங்களாம்.. வொர்க்கர்ஸ் திடீர்னு அவங்க யூனியன் ஆஃபீஸ் முன்னால கூடி சாலை மறியல்ல எறங்கிட்டாங்க... கூட்டம் பெரிசா இருக்கு, யாராச்சும் போய் ஹெல்ப் பண்ணுங்கன்னு கமிஷனர் ஆஃபீஸ்லருந்து ஃபோன் வந்துது... அதான் ஒடனே கெளம்பி ஓடியாந்தேன்...'

தனபால்சாமிக்கு அவருடைய உதவியாளர் கூறிய வங்கியின் பெயரைக்கேட்டதும் எங்கோ பொறிதட்டியது... இதுக்கும் அந்தாளுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமோ... அப்படி மட்டும் இருந்தா சர்ச் பண்ணதோட நிக்காம.. உள்ளவே தூக்கி போட்டுரலாமே... 'அடிபட்ட ஆள் இப்ப எப்படி இருக்கானாம்... விசாரிச்சீங்களா?'

'இல்ல சார்.. நா இப்பத்தான் வந்து சேர்ந்தேன்.. ஆளாளுக்கு ஒன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க... விசாரிச்சிட்டு இன்னும் அஞ்சே நிமிசத்துல ஒங்கள கூப்பிடறேன் சார்..' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க எஸ்.பி... 'யூஸ்லெஸ் ஆளுங்க.. எத விசாரிக்கணுமோ அத விசாரிக்க மாட்டானுங்க...' என்றவர் அறையில் தன்னுடைய காவலர் நிற்பதை அப்போதுதான் கவனித்தார். 'என்னய்யா.. ஒட்டு கேக்கறீயா? தொலச்சிருவேன்... ஃபோன் பேசறப்போ ரூமுக்குள்ள வாரதன்னு எத்தன தரம் சொல்லிருக்கேன்... போ... போய் சூடா ஒரு காப்பி வாங்கிட்டு வா... ஒடு....' என்று விரட்ட... பதறியடித்தவாறு ஓடிய காவலரைப் பார்த்தவாறு நின்றிருந்தார்..

தொடரும்..

25.4.07

சூரியன் 193

தனபால்சாமிக்கும் அலுவலகம் செல்லும் வழியில் அன்றைய தினத்தாள்களை படிக்கும் வழக்கமிருந்தது. ஆகவே மறக்காமல் தினமும் வீட்டிற்கு வரும் பத்திரிகைகளை தன்னுடன் எடுத்துச் செல்வது வழக்கம்.

அன்று காலையில் புவனா தன்னிடம் காட்டிய பக்கத்திலேயே மடித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகையை எடுத்ததுமே அவர் கண்ணில் பட்டது --------------- வங்கியின் முந்தைய தின பத்திரிகை நிரூபர் கூட்டத்தைப் பற்றிய செய்தி!

அதில் வெளியாகியிருந்த புகைப்படத்தை பார்த்ததுடன் நிரூபர் கூட்டத்தைப் பற்றி பிரசுரமாகியிருந்த செய்தியையும் மேலோட்டமாக படித்தவர் அதில் வங்கியின் உயர் அதிகாரியொருவர் கூறியிருந்ததைப் படித்ததும் கோபமடைந்தார். அவரையுமறியாமல் அருகிலேயே பிரசுரமாகியிருந்த புகைப்படத்திலிருந்த சேதுமாதவனின் உருவத்தின் மீது அவருடைய பார்வை பதிந்தது. அவரருகில் அமர்ந்திருந்த மற்றொரு அதிகாரி யாராயிருக்கும் என்று கீழே அளிக்கப்பட்டிருந்த பெயரை வாசித்தார். சுந்தரலிங்கம்!

எங்கோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என்று ஒரு நொடி சிந்தித்தார். அட! இவரா? மீண்டும் ஒருமுறை முகத்தைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். இவர் போன சனிக்கிழமை ம்யூசிக் அக்காடமி ஹால்ல நடந்த கச்சேரிய நடத்துன கன்வீனர் இல்ல?

ஆம். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் தனபால்சாமி. அவரா இப்படியொரு பொறுப்பில்லாத பேட்டியை கொடுத்திருக்க முடியும்? தர்மசிந்தனை, ஆன்மீக உணர்வு உள்ள இவரைப் போன்ற ஒருவரால் எப்படி வங்கியில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்த தாமதிப்பவர்களை அடித்து மிரட்டுவதில் தவறில்லை என்று பகிரங்கமாக கூற முடிகிறது? எங்கோ பிசிரடிக்குதே என்று நினைத்தவாறு அருகில் ஒரு லேசான விஷமப்புன்னகையுடன் அமர்ந்திருந்த சேதுமாதவனின் உருவத்தைப் பார்த்தார். I think he is the culprit.. ஒன்னு இவர் சொன்னத அந்த சுந்தரலிங்கம் சொன்னதா போடச் சொல்லியிருக்கணும்.. இல்லன்னா அவர் ஏற்கனவே ப்ரிப்பேர் பண்ணி வச்சிருந்த டெக்ஸ்ட இந்த மனுசன் வேற வழியில்லாம வாசிச்சிருக்கணும்... Yes that's possible... என்று நினைத்தவர் அலுவலகம் சென்றடைந்ததும் சேதுமாதவனின் வீட்டில் ரெய்ட் நடத்த நினைத்திருந்ததை முடுக்கிவிடவேண்டும் என்று குறித்துக்கொண்டு மற்ற செய்திகளை வாசிப்பதில் மூழ்கிப்போனார்.

*****

சிலுவை மாணிக்கம் நாடார் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் வீடு அமைந்திருந்த சாலையை அடைந்த ஏழுமலையும் அவனுடைய கூட்டாளிகளும் கலைந்து சாதாரண வழிபோக்கர்களைப் போன்று நிதானமாக நடந்து அவருடைய வீட்டை நெருங்கி நோட்டம் விட்டனர். நாடாருடைய வாகனம் போர்ட்டிக்கோவில் நிற்பது தெரிந்தது.

'என்னண்ண? அவரு உள்ளதான் இருக்கார் போலருக்கு? அந்த அய்யா இவரு சரியா எட்டு மணிக்கெல்லாம் பொறப்பட்டுருவாருன்னு சொன்னாரே?' என்ற கூட்டாளி ஒருவனை முறைத்துப் பார்த்தான் ஏழுமலை.

'எலேய்... ஒன்னெ தனியா போய் பார்னு சொன்னா எம் பின்னாலயே வந்துக்கிட்டிருக்கியா? ஏன் எட்டு மணிக்கு மேல காத்துக்கிட்டிருக்க மாட்டியளோ... போல அங்கிட்டு... போய் எதிர்வாடையில நில்லு... நா அங்கன நிக்கேன்... யாராச்சும் வீட்டுக்குள்ளாற இருந்து வந்தா...'

அவன் கூறி முடிப்பதற்குள், 'என்னண்ணே ஒங்களுக்கு சிக்னல் குடுக்கவா?' என்றவனை முறைத்தான். 'எலேய்.. சிக்னலா... நீயே காமிச்சி குடுத்துருவ போலருக்கே... சும்மா கைய தலைக்கு மேல ஒசத்தி நெட்டி முறிக்கறாப்பல செய்யி... நா புரிஞ்சிக்குவேன்.. என்ன வெளங்குதா?'

'சரிண்ணே..'

'என்னத்த வெளங்குச்சோ.. போ...' என்று சலித்தவாறு ஏழுமலை வீட்டைக் கடந்து தெருக்கோடி வரை சென்றுவிட்டு மீண்டும் வந்த வழியே நடந்தான்.. அவன் வீட்டை நெருங்கவும் மெக்கானிக் போன்ற ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது. அவரை, 'வாங்கண்ணே... ' என்றவாறு கேட்டைத் திறந்தவனைப் பார்த்ததும் ஏழுமலை சடாரென்று திரும்பி வந்த பாதையிலேயே நடந்தான். 'அட இவன் எங்க இங்க? நம்மள இவன் அடையாளம் கண்டுக்குவானே? இப்ப என்ன ச்செய்ய?' மதுரையில் அவன் வசித்த பகுதியில் மந்திரச்சாமியை பார்த்த நினைவு வந்தது. தனக்கு அவனை அடையாளம் தெரியும்போது அவனுக்கும் என்னை அடையாளம் தெரியாதா என்ன? ரத்தினவேலய்யாவ கூப்பிடலாம்னா அந்தய்யா கூப்டாதேன்னு வேற சொல்லிப்போட்டாரே...

ஏழுமலை அன்று காலையில் தாம்பரம் வந்திறங்கியதும் அழைத்த தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருந்த துண்டுச்சீட்டை தன் பாக்கெட்டிலிருந்த எடுத்துப் பார்த்தான். கூப்ட்டுபாத்தா என்ன? ஏசினா ஏசிட்டு போட்டும்... பெறவு ஏண்டா சொல்லலைன்னு கேட்டா? கையில் சீட்டுடன் சுற்றிலும் பார்த்தான். சாலைக்கு குறுக்கே ஒரு பொது தொலைபேசி கூண்டு தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து கூண்டுக்குள் புகுந்தான்.

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது.. யாராச்சும் எடுங்களேன்யா... என்று முனுமுனுத்தவாறு காத்திருந்தான்... இரண்டு, மூன்று என நிமிடங்கள் கடந்தனவே தவிர யாரும் எடுப்பாரில்லை. சலிப்புடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு வெளியேறி நடைபாதையில் நின்றவாறு யோசிக்கலானான்.. பிறகு ஒரு முடிவுடன் தன் சகாக்களுள் ஒருவனை நெருங்கி, 'எலேய் நம்ம பயலுவள கூப்ட்டுக்கிட்டு வா... நா அந்தாக்ல இருக்கற பார்க்ல இருக்கேன்.. ஒரு முக்கியமான வில்லங்கம்லே.. வெரசா வந்து சேருங்க.. சேந்து வராதீங்க.. தனித்தனியா வாங்க..' என்ற கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் தெருக் கோடியிலிருந்த பூங்காவை நோக்கி விடுவிடுவென நடந்தான்..

******

'என்னண்ணே... ஏதாச்சும் ஒப்பேறுமா?' என்ற மந்திரசாமியை எரிச்சலுடன் பார்த்தான் கார் மெக்கானிக்.

'எலேய் என்ன கிண்டலடிக்கிறீகளாக்கும்...எத்தன வருசமால்ல இந்த வண்டிய ஓட்டுற பெட்ரோல் போடறத தவிர வேற ஏதாச்சும் தெரியுமால்ல? ஒன்னையும் டிரைவர்னு வச்சிருக்காங்க பார் அய்யாவ சொல்லணும்.. இதுல கேலி வேற..' என்றவாறு பானட்டைத் திறந்து கவிழ்ந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூடிவிட்டு நிமிர்ந்தான். 'அடேய் மந்திரச்சாமி... பெருசா ஒன்னுமில்லன்னு நினைக்கேன்... கூலண்ட்தான் கொஞ்சம் கம்மியாருக்கு.. வாங்கிட்டு வந்து ஊத்திட்டு ஸ்டார்ட் பண்ணி பாப்பம்.

'என்னண்ணே சொல்றீய.. இங்கன பக்கத்துல கூலண்ட் கிடைக்காதே...' என்று அலறினான் மந்திரசாமி. 'அக்கா வக்கீலாஃபீஸ் வரைக்கும் போகணும்னு ரெடியாயி நிக்காவளே...'

'அதுக்கு நான் என்னச் செய்ய... நான் ஒர்க் ஷாப்புக்கு ஃபோன் போட்டு சொல்லத்தானல்ல முடியும்.. அங்கருந்து ஒரு பயல கொண்டுவரச் சொல்வோம்.. பத்து பதினஞ்சி நிமிஷத்துல வந்துருவான்... வா வந்து போன காமி.' என்றவாறு மெக்கானிக் வாசலை நோக்கி நடக்க மந்திரசாமி பதறியவாறு தடுத்து நிறுத்தினான். 'அண்ணே இங்கிட்டு வாங்க பின் வாசல் கூடி போவம்... முன் வாசல் வழியா போனா அக்கா வையும்..'

மெக்கானிக் சிரித்தவாறு மந்திரசாமியை தொடர்ந்து பின்வாசலை நோக்கி நகர்ந்தான்.

********

'எலேய்... புதுசா ஒரு வில்லங்கம்லே.. அதனால நா இப்ப சொல்றத கவனமா கேளுங்க' என்றவாறு துவங்கி தன்னுடைய திட்டத்தை விளக்கினான் ஏழுமலை..

அவன் முடிக்கும்வரை காத்திருந்த நால்வர் அடங்கிய அவனுடைய கூட்டாளி கூட்டம் ஒருவரையொருவர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டது.

'என்னலேய்.. பிசாச கண்டாமாதிரி முளிக்கீங்க? முடியுமா, முடியாதா?'

'அதுக்கில்லண்ணே.. நீங்க இல்லாம எப்படி...? இதுவரைக்கும் நாங்க தனியா செஞ்சதில்லையேண்ணேன்.. அதான்..'

'எலேய்... தடிப்பயலுவளா இதுக்கா ஒங்கள இவ்வளவு வருசமா கூட வச்சிருக்கேன்... என்னைய அந்த பய பாத்துட்டான்னா வேற வெனையே வேணாம்லே... பெறவு ஊருக்கு போய் ச்சேந்தாப்பலதான்..' என்று எரிந்து விழுந்தான் ஏழுமலை அக்கம்பக்கம் பார்த்தவாறு. நல்லவேளையாக அந்த காலை நேரத்தில் பூங்கா ஓரிருவரைத் தவிர வெறிச்சோடி கிடந்தது.

ஒரு சில நிமிட ஆலோசனைக்குப் பிறகு கூட்டாளிக் கும்பலுள் ஒருவன், 'சரிண்ணே.. முடிச்சிருவோம்... நீங்க இங்கனயே இருங்க.. முடிச்சிட்டு வந்துட்டு பேசிக்குவம்... நீங்க சொன்ன அடையாளத்த வச்சிக்கிட்டு மொகத்த பாத்துக்கிட்டுருக்க முடியாதுல்லண்ணே அதான்.....'

'சரிண்ணே.. அந்த அய்யாவோட வேற யாராச்சும் இருந்தா என்னண்ணே ச்செய்ய? அப்புறம் அந்த டிரைவர் பய... அவன் எங்கள்ல யாராச்சும் ஒருத்தன அடையாளம் பாத்து சொல்லிருவானே.. அதுக்கென்னச் செய்ய?' என்றான் வேறொருவன்.

அவன் கூறியதிலிருந்த நியாயத்தை உணர்ந்தாலும் ஏழுமலை அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எரிச்சலுடன் அவனைப் பார்த்தான். 'எலேய்.. இதயெல்லாமா சொல்லிக்கிட்டிருப்பாக... அவன் கார விட்டுட்டு ஓடிட்டா விட்டுருங்க.. இல்லையா அவனையும் போட்டுருங்க..' என்றவன், 'எலேய்.. உள்காயம் மட்டுந்தான்.. சாகடிச்சிராதீங்கலே... அந்தய்யா மட்டுந்தான் இருப்பாகன்னுதான் கேள்வி... கூட யாராச்சும் இருந்தா என்ன செய்யன்னு யோசிச்சி எதுக்குலே மண்டையிடி... பொம்பளையாருந்தா விட்டுருங்க.. மத்தபடி யாராருந்தாலும்.. அந்தய்யாவுக்கு நேர்ந்ததுதான்... என்னச் செய்ய... அது அந்தாளோட தலையெழுத்துன்னு நினைச்சிக்கிர வேண்டியதுதான்...'

கூட்டாளிக் கும்பல் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புல்தரையில் வைத்திருந்த சாக்கு பைகளை தோள்களில் சுமந்தவாறு வெளியேறியது.. அவர்கள் வெளியேறி சில நிமடங்கள் கழித்து ஏழுமலை சிந்தனையுடன் மீண்டும் ஒருமுறை தொலைபேசி கூண்டை நோக்கி நடந்தான்.

தொடர்ந்தான்..

17.4.07

சூரியன் 192

சாதாரணமாக ஃபிலிப் சுந்தரம் அலுவலகம் செல்லும் வழியில்தான் அன்றைய தினத்தாள்களை வாசிப்பது வழக்கம்.

அவருடைய வாகன ஓட்டுனர் அவருடைய இல்லத்திற்கு வரும்போது அன்றைய ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில தினத்தாள்களை கொண்டு வந்துவிடவேண்டும் என்பது ஏற்பாடு. அவருடைய இல்லத்திலிருந்து அலுவலகம் சென்று சேர அரை மணிக்கும் கூடுதல் ஆகும் என்பதால் இரண்டு தினத்தாள்களிலுமுள்ள தலைப்புச் செய்திகளை படித்து முடிக்க வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.

அன்றும் அப்படித்தான். வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே செய்தித்தாள்களை புரட்டத் துவங்கினார். ஆனால் முதல் பக்கத்திலேயே வெளியாகியிருந்த மாதவனுடைய புகைப்படத்துடனான முந்தைய தின பேட்டியின் செய்தி அவருடைய கவனத்தைக் கவர்ந்தது.

ஆவலுடன் அதை படிக்கத் துவங்கிய சுந்தரம் அதை படித்து முடித்ததும் மேற்கொண்டு மற்ற செய்திகளை படிக்க முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

How can he do this? Of all the people CGM? என்று மாய்ந்துபோனார். உடனே தன்னுடைய செல்ஃபேசியை எடுத்து டயல் செய்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'மிஸ்டர் சுபோத் நம்ம பிஆரோ ஆஃபீசுக்கு வந்துட்டாரான்னு பாருங்க. வந்திருந்தா இன்னும் அரை மணியில நேத்து மீட்டுல நம்ம சிஜிஎம் குடுத்த ரெஸ்பான்சோட நோட்ச என் கேபினுக்கு கொண்டு வரச்சொல்லுங்க. It should not be shown to anybody else without my clearance, is that clear?' என்றார்.

பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

இது நிச்சயம் சுந்தரலிங்கம் சாரோட ஸ்டேண்ட்மெண்டாருக்காது. I think our ED has played his game again. அவருக்கு தன்னையும் சுந்தரலிங்கத்தையும் அடுத்த பதவி உயர்வு போட்டியிலிருந்து, முக்கியமாக சேர்மன் பதவிக்கான போட்டியிலிருந்து, எப்படியாவது விலக்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது தெரிந்துதானிருந்தது. அவர்களிருவருக்குமே அந்த பதவியில் ஆர்வம் இல்லை என்பதை சேதுவுக்கும் தெரியும் என்பதை பல சமயங்களில் அவர் உணர்ந்திருக்கிறார். இருந்தும் தொடர்ந்து சேது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரையும் சுந்தரலிங்கத்தையும் சிக்கலில் சிக்கவைப்பதில் முயன்றுவருவதை ஃபிலிப் நன்றாக அறிந்துவைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுந்தரலிங்கம் அதை உணரவில்லை.

முந்தைய தினம் மாதவன் புறப்பட்டுச் சென்றதுமே தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் சேது முனைந்துவிடுவார் என்பது உணர்ந்திருந்தார் என்றாலும் அவர் அதை அத்தனை பகிரங்கமாக செயல்படுத்த துணிவார் என்று நினைத்திருக்கவில்லை. அவரை மாதவன் தனக்கு சார்பாக பத்திரிகை நிரூபர் கூட்டத்தில் பேச அனுமதித்திருந்தார் என்பதுதான் அவரை உசுப்பி விட்டிருக்க வேண்டும். எங்கே தன்னிச்சையாக அவரை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்தால் பிரச்சினையாகிவிடுமோ என்ற அச்சத்தில் சுந்தரலிங்கத்தையும் தன்னுடன் கூட்டு சேர்த்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய தினம் அலுவலகத்தில் நடந்த ஒருசில நிகழ்வுகள் காரணமாக சுந்தரலிங்கத்துக்கும் தன் மீது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது சேதுவின் சதித்திட்டத்திற்கு வசதியாகப் போனது.

அவருடைய சிந்தனைகளைக் கலைப்பதுபோல் செல்பேசி ஒலிக்க அதை எடுத்துப் பேச மனமில்லாமல் யாரென்று பார்த்தார். நாடார்! அவர் இருந்த மனநிலையில் பேசாமலிருப்பதே உத்தமம் என்ற நினைப்பில் வாகன ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடி வழியாக தன்னைக் கவனிப்பதை உணர்ந்தும் பதிலளிக்காமல் பத்திரிகையில் கண்களை ஓடவிட்டார். செய்தித்தாளில் வெளியாகியுள்ளதைப் பற்றித்தான் நாடார் தன்னிடம் விளக்கம் கேட்க முனைந்திருப்பார் என்று நினைத்தார். அத்துடன் அவர் அந்த கூட்டத்திலேயே பங்குகொள்ளவில்லை என்பது நாடாருக்கு தெரிந்தால் வேறு வினையே வேண்டாம். 'அவன் சொன்னா நீரு எறங்கி போயிருவீராக்கும்?' என்று அவரையே சாடினாலும் வியப்பதற்கில்லை.

முந்தைய தினம் நடந்த பத்திரிகை கூட்டத்தைப் போன்று எந்த ஒரு முக்கிய கூட்டத்திலும் நடப்பவைகளை அப்படியே சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவென்றே ஒரு சுருக்கெழுத்தாளர் நியமிக்கப்பட்டிருப்பார். கூட்டத்தில் பேசப்படுபவற்றை ஒன்றுவிடாமல் குறிப்பெடுத்து பிறகு அதை கணினியில் ஏற்றி ஒரு நிரந்தர மென் கோப்பாக மாற்றி அதை உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் அடுத்த நாளே சமர்ப்பித்துவிடவேண்டும் என்பது நியதி. அந்த சுருக்கெழுத்தாளர் எச்.ஆர். மற்றும் போர்ட் (Board) அலுவல்களுக்கு பொறுப்பான ஃபிலிப் சுந்தரத்தின இலாக்காவில் பணியாற்றுபவர் என்பதால் அந்த மென் கோப்பை அவர் சரிபார்த்தபிறகே மற்ற அதிகாரிகளுக்கு, வங்கி முதல்வரையும் சேர்த்து, வழங்கப்படும். ஆனால் அன்றைய செய்தித்தாளில் வெளியாகியிருந்த விஷயம் நிச்சயமாக உண்மையில் கூட்டத்தில் நடந்ததற்கு முரண்பட்டது என்பதால் சேது மாதவன் அந்த குறிப்புகளையே மாற்ற முயன்றாலும் வியப்பில்லை என்பதால்தான் சுபோத்தை அழைத்து அதை அவருடைய அனுமதியில்லாமல் யாருக்கும் அதை யாருக்கும் காட்டக் கூடாத என உத்தரவிட்டார்.

அவருடைய வாகனம் அலுவலகத்திற்குள் நுழைவதை உணர்ந்த ஃபிலிப் அன்றைய தினம் முந்தைய தினத்தைவிடவும் சிக்கலாக இருக்கப் போகிறது என்று நினைத்தவாறு இறங்கி தன்னுடைய அறையை நோக்கி நடந்தார்.

********

நந்தக்குமார் வங்கி ஊழியர் சங்கத்தின் அலுவலகத்திலிருந்து சற்று தொலைவிலிருந்தே அங்கி குழுமியிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டான். உடனே அங்கேயே ஆட்டோவிலிருந்து இறங்கி கால்நடையாக அலுவலகத்தை நெருங்கினான்.

கூட்டத்தின் விளிம்பிலிருந்த ஒருவரை எங்கோ பார்த்த நினைவு. அவரை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 'என்ன சார் என்ன ஆச்சி? எதுக்கு கூட்டமா நிக்கிறீங்க?'

அவர் வியப்புடன் அவனை திரும்பிப் பார்த்தார். 'என்ன நந்தக்குமார் சார் ஒங்களுக்கு விஷயம் தெரியாதா?'

'ஏன் என்ன ஆச்சி?'

'இன்னைக்கி காலைல நம்ம முரளி சார ஆஃபீஸ் வர்ற வழியில யாரோ ரெண்டு மூனு ரவுடிப் பசங்க சவுக்கு கம்பால அடிக்க வந்திருக்காங்க சார். முரளி ஸ்கூட்டர நிறுத்தாம தப்பிக்க முயற்சி பண்ணிருக்கார். இருந்தாலும் தலையில பலமா அடிபட்டுருக்கு. எப்படியோ சமாளிச்சி ஸ்கூட்டர ஓட்டிக்கிட்டு பக்கத்துலருக்கற ஆஸ்பத்திரிக்கி போயி அட்மிட் ஆய்ட்டார். அது தெரியவந்து சிட்டி பிராஞ்ச் ஸ்டாஃபெல்லாம் ஒரே டென்ஷனாய்ட்டாங்க.. நேரா இங்க வந்துட்டாங்க... வாசகன் சார் ஹாஸ்பிட்டல் போயிருக்கார். அவர் வந்தாத்தான் மேக்கொண்டு என்ன செய்யறதுன்னு டிசைட் பண்ணுவாங்க..'

நந்தக்குமார் அதிரிச்சியில் உறைந்துப்போனான். முந்தைய தினம் சேதுமாதவன் தன்னை அடித்து மிரட்ட அடியாட்களை ஏவிவிட்டிருந்தார் என்று முரளி தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் ஏவிவிட்டவனே தன்னுடைய ஊரைச் சார்ந்தவன் என்பதால் அவன் அதை செயல்படுத்த வாய்ப்பில்லை என்றும் அவன் கூறியதை வைத்தே சேதுமாதவனை மடக்கப் போவதாகவும் முரளி கூறினானே பிறகெப்படி இது நடந்தது?

இப்போது என்ன செய்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்த நந்தக்குமார் கூட்டத்தினர் கோபத்துடன் வங்கி நிர்வாகத்திற்கெதிராக கோஷமிடுவதை கவனித்தான். இக்கூட்டம் பொறுமையிழந்து வன்முறையில் ஈடுபட நேர்ந்தால் நிச்சயம் காவல்துறையினர் வந்து கூட்டத்தைக் கலைக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்தவனாய் அங்கிருந்து புறப்பட்டான். அதற்கு முன்பு முரளி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு எப்படி செல்வதென்று அவனிடம் தகவலளித்தவரிடமே கேட்டு தெரிந்துக்கொண்டான். 'ஆனா சார்.. நீங்க இப்ப போனாலும் பாக்க முடியாதுன்னு நினைக்கேன்... அநேகமா அவர் ஐ.சி.யூவுலோ இல்ல ஆப்பரேஷன் தியேட்டர்லயோதான் இருப்பார் போலருக்கு... வாசகன் ஃபோன் பண்ணி சொன்னதுலருந்து சொல்றேன்..'

இருந்தும் சென்றுதான் பார்போமே என்ற நினைவுடன் எதற்கும் நளினியிடம் தெரிவித்துவிட்டு செல்வோம் என்று நினைத்தவனாய் வந்தனாவின் வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தான். ஆனால் நளினி அவன் கூறியதை கேட்டும் தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சம்பந்தமில்லாமல் சிரிப்பதை கேட்டவன் சினந்து, 'ஏய் என்ன நீ? நா சீரியசான விஷயம் சொல்றேன் சிரிக்கிறே? என்னதான் அவன ஒனக்கு புடிக்கலன்னாலும் இப்படியா?' என்றான்.

'மேடம் பக்கத்துல உண்டு...' என்று நளினி பதிலுக்கு கிசுகிசுக்க கோபம் தணிந்து, 'அப்படியா சாரி... நான் போய் பாத்துட்டு வந்துடறேன்...' என்றான்.

'ஏய்.. வைக்கேண்டா..' என்ற நளினி அதே கிசுகிசு குரலில்.. 'பல்லாவரத்துலருந்து ஜோ விளிச்சிண்டாயிருந்து... நந்துவெ விளிக்காம் பறஞ்சு' என்றாள்...'நம்பர் உண்டுல்லே... வேகம் விளிக்கி...'

'சரி' என்றவாறு இணைப்பைத் துண்டித்த நந்து அடுத்து ஜோவை அழைத்தான்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'என்ன மிஸ்டர் ஜோ.. கூப்டீங்களா?' என்றான்.

ஜோ அவசர, மளமளவென்று முந்தைய தினம் நடந்தவைகளை தெரிவித்துவிட்டு அன்று மாலையே இறுதிச் சடங்கு நடக்கவிருப்பதாகவும் இதை முரளியிடம் தெரிவிக்க முயன்று தோற்றுப்போனதாகவும் கூறினான். 'ஒங்களுக்கு ஒருவேளை தெரியுமான்னு தெரியுமான்னுதான் கூப்ட்டேன்.. வாசகனும் செல்ஃபோன எடுக்க மாட்டேங்கறார்.'

முரளி தாக்கப்பட்டதை சொல்வதா வேண்டாமா என்று ஒரு நொடி தடுமாறிய நந்தக்குமார் பிறகு சொல்லிவிடுவதான் நல்லதென தீர்மானித்தான்.

'அப்படியா? I am sorry to hear that Mr.Nandhu.. ஆனா என்னால இப்ப வரமுடியாது.. நீங்க போய் பாத்துட்டு வாங்க.. நான் நாளைக்கி போய் பாத்துக்கறேன்.. இங்க சாருக்கு வேற யாரும் உதவிக்கு இல்லை... I hope he will recover fast... வச்சிடறேன்.' என்றவாறு ஜோ இணைப்பைத் துண்டிக்க நந்தக்குமார் வழியில் சென்ற ஒரு ஆட்டோவை கையசைத்து ஏறி மருத்துவமனை விலாசத்தை கூற ஆட்டோ வட்டமடித்து வந்த வழியிலேயே விரைந்தது.

தொடரும்..

11.4.07

சூரியன் 191

தன்னுடைய அறையிலிருந்து வெளியேறியதுமே ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோர் இருவரும் தன்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்ததை உணர்ந்த மைதிலி தன்னுடைய நாடகத்தை அரங்கேற்ற துவங்கினாள். 'எதுக்கு ரெண்டு பேரும் எம் மொகத்த பாக்கறேள்? நேத்து அப்பா செஞ்ச காரியத்துல நேக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆனா ராத்திரி ரொம்ப நேரம் யோசிச்சி பாத்தேன். அப்பா நினைக்கறதுல தப்பில்லன்னு தோனிச்சி. அதுக்கப்புறம்தான் நிம்மதியா தூங்கினேன்.. அதான் எழுந்துக்க லேட்டாயிருச்சி..'

பட்டாபி குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். 'என்னடி சொல்றா இவ?' என்பதுபோல்.

அதை கவனியாதவள் போல் கையில் துவாலையுடன் குளியலறையை நோக்கி நகர்ந்தாள் மைதிலி. போகிற போக்கில், 'அம்மா நா பல் தேய்ச்சி குளிச்சிட்டு வர்றதுக்குள்ள டிபனும் காபியும் ரெடி பண்ணிரு. மதிய சாப்பாட்ட வெளில பாத்துக்கறேன்.. இன்னைக்கி லஞ்ச் நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பனான்னு தெரியலை' என்றாள்.

அவள் குளியலறைக்குள் சென்று மறைந்ததும். 'என்னடி இது நாம ஒன்னு நினைச்சா.. இவ ஒன்னுமே நடக்காத மாதிரி பேசறா? ஏதாச்சும் டிராமா பண்றாளோ?' என்றார் பட்டாபி.

ஜானகி முகத்தை நொடித்தவாறு எழுந்து நின்றாள். 'ஒங்கக்கிட்டா இதான்னா ரோதனை. நீங்களா எதையாச்சும் நினைச்சுக்க வேண்டியது. அப்புறம் அவள டிராமா போடறான்னு சொல்ல வேண்டியது. நேக்கென்னவோ அவோ நம்மள புரிஞ்சுண்டான்னுதான் தோன்றது. நீங்க மேக்கொண்டு எதையாச்சும் சொல்லி பிரச்சினை பண்ணாதேள்.. நா அவளுக்கு வேண்டியத செய்யணும்..' என்றவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தவள் நின்று, 'நீங்க போயி செத்த பாலத்துக்கடியிலருக்கற கடையிலருந்து ரெண்டு கொத்தமல்லி கட்டு மட்டும் வாங்கிணுடு வாங்கோ. போங்கோ..' என்றாள்.

பட்டாபி அப்போதும் நம்பிக்கையில்லாமல் மைதிலியின் குளியலறையையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ஜானகி தங்களுடைய அறையிலிருந்த அவருடைய மேல் சட்டையை கொண்டு வந்து அவர் கையில் திணித்தாள். 'மசமசன்னு ஒக்காந்துருக்காம போய்ட்டு வாங்கோ.. அவசரமில்லை... மைதிலி ஆஃபீஸ் போற நேரத்துல நீங்க மறுபடியும் ஏதாவது பிரச்சினை பண்ண வேணாமேன்னுதான் ஒங்கள வெளில அனுப்பறேன்.. சாவகாசமாவே வாங்கோ..'

'ஹூம்.. எப்படியோ போங்கோ.. நேக்கென்னவோ...' என்று இழுத்தவாறு பட்டாபி குளியலறையை மீண்டும் பார்த்தார். 'மைதிலி நா வெளில போறேன்.. நீ சாயந்தரம் சீக்கிரமா வந்துரு.. ஒங்கிட்ட இன்னம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.' என்றார் உரக்க..

அடுத்த நொடியே உற்சாகத்துடன் பதில் வந்தது. 'சரிப்பா.. ஆறு மணிக்குள்ள ஆத்துல இருப்பேன்.. போறுமா?'

'பாத்தேளா.. நா சொல்லலை.. நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கோ...' என்ற ஜானகியை முறைத்தார் பட்டாபி. அவருக்கு மைதிலியின் நடத்தையில் நம்பிக்கை வரவில்லையென்பது அவருடைய முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் வேறு வழியில்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சுடன், 'ஈஸ்வரா நீதாம்பா பொறுப்பு...' என்ற முனுமுனுப்புடன் சட்டையை தலைவழியாய் அணிந்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

****

'என்ன பூர்ணி.. ரெடியா.. shall we go?' என்றவாறு தன்னை நோக்கி வந்த மகளைப் பார்த்தார் மருத்துவர் சோமசுந்தரம். அவரையுமறியாமல் தன் மனைவியை அப்படியே உரித்து வைத்திருந்த மகளைப் பார்த்து அதிசயித்தார்.

அவருடைய பார்வையிலிருந்த வியப்பை கண்டுகொண்ட பூர்ணிமா, 'என்ன டாட்.. என்ன ஒருமாதிரி பாக்கீங்க? என்னடா பேண்ட், சர்ட்லருந்து சாரிக்கு மாறிட்டாளேன்னா?'

'அதுவுந்தான்.. என்ன திடீர்னு?' என்றார் சோமசுந்தரம் புன்னகையுடன்.. இதுவும் நல்லதுக்குத்தான் என்றது அவருடைய மனது. She looks more matured... சவுத் இந்தியாவுல இருக்கற டாப் பேங்க் ஒன்னுல போர்ட் மெம்பர்னா சும்மாவா?

'நீங்கதான டாட் சொன்னீங்க... போர்ட் மெம்பர் பொசிஷன் அவ்வளவு சீப்பானதில்லன்னு... அதான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு... how do I look? Do I look like a honourable member of the Board?' என்றாள் சிரித்தவாறு.

சோமசுந்தரமும் அவளுடைய சிரிப்பில் கலந்துக்கொண்டார். 'Yes Madam.' என்றார் கேலியுடன்.. 'Shall we go? கீழ என் ரூமுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வரச் சொல்லிருக்கேன். டோஸ்ட்டும் காப்பி மட்டுந்தான்... சாப்ட்டு கெளம்புனா சரியாருக்கும்.'

'Yes Dad..' என்றவாறு பூர்ணிமா முன்னால் செல்ல சோமசுந்தரம் தொடர்ந்தார். 'பூர்ணி ஒன்னு கேக்க மறந்துட்டேன்.. நம்ம டாக்டர்ஸ் மும்பை கெளம்பி போயிருப்பாங்க இல்ல?'

'ஆமா டாட்...நேத்து ராத்திரியே ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்... காலைல 7.50க்கு ஒரு ஃப்ளைட் இருக்கு... They must have landed now.. ஆஸ்ப்பிட்டல் போயி Mrs.Madhavanஐ பாத்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்கேன்... Don't worry dad.. everything has been taken care of.'

'பூர்ணிமாவா கொக்கா... Most capable young woman executive அவார்ட நேஷனல் லெவல்ல வாங்கணும்னா சும்மாவா?' என்றார் சோமசுந்தரம் லேசான கேலியுடன்.

அவருடைய குரலில் தொனித்த கேலியை பொருட்படுத்தாமல் நடந்தாள் பூர்ணிமா. இதான் Male Chauvinismகறது.. அதென்ன women executive? அப்பாவும் ஆம்பளதான என்று நினைத்தாள்...

அடுத்த அரைமணியில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் வாகனத்தில் ஏற அது பரபரப்பாயிருந்த மருத்துவ வளாகத்தை கடந்து விரைந்தது.

*****

'என்னய்யா... இன்னும் எத்தன நேரமாவும்?' என்றார் நாடார் ஓட்டுனரைப் பார்த்து.

ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, 'டிராஃபிக் இல்லன்னா அரை மணி நேரத்துல போயிரலாம்யா.. ஆனா இன்னைக்கி பார்த்து டிராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கே.. எப்படியும் முக்கால் மணி நேரமாயிரும் போலருக்கு. கொஞ்சம் நெருக்கி புடிச்சா ஒரு அஞ்சி பத்து நிமிசம் கொறைக்கலாம்யா..' என்றார் தயக்கத்துடன்.. 'அய்யா கொஞ்சம் கோவக்காரரு.. நீம்பாட்டுக்கு எதையாச்சும் ஒளறி வச்சிராத.. கேட்ட கேள்விக்கு மட்டுந்தால் பதில் சொல்லணும்.. என்ன வெளங்குதா?' என்று எச்சரித்துத்தான் அனுப்பியிருந்தார் டிராவல்ஸ் முதலாளி..

நாடார் பதிலளிக்காமல் சிரித்தார். 'நெருக்கல்லாம் வேணாம் தம்பி.. அவசரமில்லாம பத்திரமா கொண்டுபோய் ச்சேத்துரு அது போறும்.. அதுக்குள்ள நானும் ரெண்டு மூனு போன் போட்டுக்கறேன்... .. நா பேசறதுல கவனத்த வைக்காம நீ சாலையா பாத்து ஓட்டு.'

'சரிய்யா..' என்றவாறு வாகன ஓட்டுனர் சாலையில் கவனத்தை செலுத்த முதலில் யாரை அழைக்கலாம் என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை நோட்டம் விடலானார் நாடார். 'மொதல்ல அந்த ஃபிலிப் ஐயா என்ன பண்றார்னு பாப்பம்.'

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது. 'டிரைவ் செஞ்சிக்கிட்டு இருப்பாரோ.. இருக்காதே.. டிரைவர்பய இருப்பானே...' என்ற யோசனையில் ஆழ்ந்தார்.. அடுத்த நொடியே, ஒருவேள வேணுக்குன்னே எடுக்காம இருப்பாரோ... இருக்கும். 'எதுக்கு எடுத்து இந்த மனுசன் கிட்ட எதையாச்சும் சொல்லி பளுவடியும் திட்டு வாங்கணுமான்னு நினைச்சிருப்பார்... அதுவும் சரிதானய்யா... நம்ம வாயுந்தான் சும்மா இருக்காதே... பாவம் ஆஃபீசுக்கு போற நேரத்துல அவர எதுக்கு பாவம் டென்ஷனாக்கிக்கிட்டு... மீட்டிங் முடிஞ்சதும் கூப்டுவோம்...'

அடுத்து சோமசுந்தரத்தின் எண்ணை பார்த்தார். வேணாம்... மீட்டிங்குல பாத்துக்குவம். இல்லன்னா எதையாச்சும் சொல்லி நம்ம மூட கெடுத்துப் போட்ருவான்.. கூடவே அந்த பொண்ணும் வந்தாலும் வரும்... எதுக்கு அதுக்கு முன்னால... சரி.. வேற யாரு... ஆங்.. செட்டியார்... அவர கூப்டுவோம்.. மீட்டிங்ல வச்சி ஒன்னும் பேச முடியாமப் போயிரும்... அடுத்த நொடியே எண்ணைத் தேடிபிடித்து டயல் செய்ய அடித்தவுடனே எடுத்தார் செட்டியார் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன்... 'அண்ணாச்சி எப்படி இருக்கீங்க?'

'என்னவோ இருக்கம்யா.. .கடவுள் புண்ணியத்துல.. நீங்க எப்படி இருக்கீங்க.. கெளம்பியாச்சா இல்ல வீட்லதானா?'

எதிர்முனையிலிருந்த பெருத்த சிரிப்பு. இந்த சிரிப்ப விட்டா வேற எதுவுமே தெரியாதாய்யா என்று முனுமுனுத்தார் நாடார். 'சிரிப்புக்கு என்னய்யா அர்த்தம்.. வீட்லதான் இருக்கேன்னா?'

'இல்லண்ணாச்சி.. கார்லதான் வந்துக்கிட்டிருக்கேன்... என்னமோ சவுண்ட் ப்ரூஃப் ஏசியாம்லே, வச்சிருக்கு. அதான் வெளி சத்தம் ஒன்னும் கேக்க மாட்டேங்குது..'

நாடார் சிரித்தார். 'ஒமக்கென்னய்யா... விட்டா சிட்டிக்குள்ளயே ப்ளேன்ல போவீரு.. காசுதான் மழையா கொட்டுதில்ல...'

'நீங்க வேற அண்ணாச்சி... எல்லா நம்ம கையிலயா இருக்கு... முப்பது வருசத்துக்கு முன்னால கையில ஒரு ஓட்ட சைக்கிளோட வந்து எறங்குன ஊரு... அது கெடக்கட்டும்.. இன்னைக்கி காலைல ஹிந்து பேப்பர பாத்தீங்களாண்ணாச்சி?'

'ஹிந்துவா... அட நீங்க வேற. நமக்கு தினத்தந்திதான்...அது சரி நீங்க என்னையிலருந்து ஹிந்து படிக்க ஆரம்பிச்சீங்க செட்டியாரே?'

எதிர்முனையில் மீண்டும் வெடிச் சிரிப்பு.. செல்ஃபோனை எட்டிப்பிடித்தார். 'காது சவ்வே கிளிஞ்சிரும் போலருக்கய்யா... என்னமாத்தான் சிரிக்கீறு? சொல்லும்.. அப்படியென்ன போட்டுருக்கான்?' என்றவர் ஓசைபடாமல் ஒரு ஊசியை செருகினார் 'மருமகன் படிச்சு சொன்னாராக்கும்.' என்னைய மாதிரி கைநாட்டுதானய்யா நீரும்.. இது மனதுக்குள் நினைத்துக்கொண்டது..

அடுத்த சில நொடிகளில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவருடைய முகத்தை மேலும் கருப்பாக்க.. 'அப்படியா சொல்லியிருக்கான் லிங்கம்..? பயல விடப்படாதுய்யா.. விடப்படாதுய்யா...' என்றார் கடுப்புடன்..

thodarum..

10.4.07

சூரியன் 190

அந்த நேரத்திலும் தாம்பரம் பேருந்து நிலையம் பரபரப்புடன் இருந்தது.. தன் முன்னே நின்ற கூலிப்படை தலைவனையும் சற்று தள்ளி நின்றிருந்த அவனுடைய சகாக்களையும் பார்த்தார் ரத்தினவேலு. நல்லவேளையாக எவனும் தன்னையும் இந்த கும்பலையும் சேர்த்து பார்த்து நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று நினைத்தார். 'எலேய் ஏளுமல.. நா ச்சொன்னது பூராவும் வெளங்கிருச்சில்ல... பெறவு நான் போனதும் எதையாச்சும் செஞ்சி கொளப்பிர மாட்டீயளே...?'

'மாட்டம்யா.. அதான் நீங்க வண்டி நம்பர கொடுத்திட்டியளே... வீட்டு வெலாசமும் இருக்கு... பெறவென்ன.. எனக்குந்தான் அந்த அய்யாவ தெரியும்லே.. நா பாத்துக்கிடறேன்.. நீங்க மவராசனா போய்ட்டு வாங்க.. முடிச்சிப் போட்டுட்டு ஃபோன் போடறேன்..' என்றான்.

ரத்தினவேலு திடுக்கிட்டு அவனைப் பார்த்தார். 'எலேய்.. இதுலயே கொளப்பமா? நா இத்தன நேரம் என்னத்த சொன்னேன், நீ என்ன பேசற? நா நேத்து ஒங்கிட்ட குடுத்த போன் நம்பர எங்கனயாச்சும் எளுதி வச்சிருக்கியால்லே... இருந்தா கிளிச்சி போட்டுரு.. இனி போன் ஒன்னும் போடவேணாம். வேலைய முடிச்சதும் ஒங்கூட வந்த ஆளுங்கள அங்கனருந்தே அவனவன் ஊருக்கு அனுப்பிச்சிட்டு நீயும் கெளம்பி ஊர் போய் சேந்துரு.. நா ரெண்டு நா கழிச்சி ஊர் வந்து சேந்துருவேன்.. அங்க வச்சி பாத்துக்குவம்.. நீம்பாட்டுக்கு எனக்கு போன் போடறேன்னு போயி வம்புல மாட்டி விட்டுறாதல்லே.. என்ன வெளங்குதா.. இந்தா இத இப்பத்தைக்கி வச்சிக்க.. பெறவு வேல முடிஞ்சதும் பாத்துக்குவம்...' கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள் நிற பையை அவன் கையில் திணித்துவிட்டு மீண்டும் சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து கரைந்துபோக உதட்டை சுளித்துக்கொண்டு தன் சகாக்களை நோக்கி நடந்தான் ஏழுமலை கையிலிருந்த விலாசத்தைப் படித்தவாறு...

*****

வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்த நளினி திரும்பி தனக்கருகில் அமர்ந்திருந்த நந்தக்குமாரைப் பார்த்தாள். 'நந்து இவ்விட நோக்கு.' என்றாள் அதிர்ச்சியுடன்..

நந்தக்குமார் அவள் காட்டிய செய்தியையும் அருகிலிருந்த புகைப்படங்களையும் பார்த்தான். 'எந்தான.. என்ன போட்டுருக்கு... நம்ம மாதவன் சார் ஃபோட்டாவா இது?'

'அதில்ல நந்து... நம்ம சுந்தரலிங்கம் சார் சொன்னத படிச்சி பாரேன்... நிச்சயமா இது பிரச்சினையிலதான் போய் முடியப் போவுது.. என்னல்லாம் சொல்லியிருக்கார் பார்..' செய்தித்தாளை நந்துவிடம் நீட்டியவள் திரும்பி வந்தனாவின் படுக்கையறையைப் பார்த்தாள். நல்லவேளையாக அது மூடியிருந்தது.

செய்தியை வாசித்து முடித்த நந்தக்குமார் நளினியை பார்த்தான். 'எதுக்கு நம்ம சிஜிஎம் திடீர்னு இப்படியொரு இண்டர்வ்யூ குடுத்துருக்கார். அதுவும் ரிக்கவரி விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வந்துருக்கற சமயத்துல இது தேவைதானா? எனக்கென்னவோ இது நம்ம ஈ.டியோட வேலையாத்தான் இருக்கும்னு தோனுது..' என்றவன் சட்டென்று திரும்பி வந்தனாவின் படுக்கையறையைப் பார்த்தான். 'ஏய்.. இது நம்ம மேடத்துக்கு தெரிய வேணாம்...' என்றான் குரலை இறக்கி.

'அதெல்லாம் நா பாத்துக்கறேன்.. டாக்டர் சொல்லியிருக்கறதால மாதிரி மேடம் இப்பல்லாம் நியூஸ் பேப்பரப்பத்தி கேக்கறதில்ல.. ஆனா எத்தன நாளைக்கி இது முடியும்?' என்ற நளினி நந்துவை நெருங்கி, 'நந்து நம்ம மாணிக்கம் சாரப் பத்தி ஏதும் நியூஸ்ல வரலையே.. கொலை கேசுன்னா பேப்பர்ல வராம இருக்குமா என்ன?' என்றாள்.

நந்து தோள்களைக் குலுக்கியவாறு எழுந்து நின்றான். 'அதெல்லாம் லோக்கல் பேப்பர்லதான் வரும்.. ஹிண்டுலல்லாம் வராது.. நா ஒன்னு பண்றேன்... குளிச்சிட்டு யூனியன் ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன்.. முரளிய பாத்து பேசிட்டு வரேன்.. அப்படியே பல்லாவரம் ப்ராஞ்ச் ஜோவையும் பாத்துட்டு வரேன்.. அப்பத்தான் ரெண்டு விஷயமும் தெரியும்...'

நளினியும் எழுந்து நின்றாள். 'இதான் சாக்குன்னு முரளி ஆஃபீஸ்ல போயி ஒக்காந்துராதீங்க.. அப்புறம் நா இங்க டென்ஷன்ல எதையாவது மேடத்துக்கிட்ட ஒளறிருவேன்.. போய் குளிச்சிட்டு வாங்க.. டிஃபன் பண்ணி வைக்கறேன்.. மேடம் வெளியில வர்றதுக்குள்ள நீங்க கெளம்பி போனாத்தான் நல்லது. இல்லன்னா தேவையில்லாம அவங்கக்கிட்ட பொய் சொல்லணும்..'

'சரி... சரி... அஞ்சே மினிட்டு.. தான் ரெடியாக்கும் மும்பு வந்நேக்காம்..' என்றவாறு டவலுடன் நந்து குளியலறையை நோக்கி நகர நளினி சமையல்கட்டை நோக்கி விரைந்தாள்

****

புறப்பட தயாராகி வாசலை அடைந்த சிலுவை மாணிக்கம் நாடார் போர்ட்டிக்கோவில் கைகளை பிசைந்துக்கொண்டு நின்ற வாகன ஓட்டுனர் மந்திரசாமியைப் பார்த்தார்.

ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. 'என்னலே கைய கட்டிக்கிட்டு நிக்கே.. வண்டி எங்க?'

'அய்யா அதுல கொஞ்சம் பிரச்சினைய்யா' என்றான் மந்திரசாமி தரையை பார்த்தவாறு.

'அதான் ஒம் மூஞ்சிய பாத்தால தெரியுதே... என்ன பிரச்சினை.. அதச் சொல்லு...'

'ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதுய்யா.. நம்ம ஒர்க் ஷாப்புக்கு போன் போட்டுருக்கேன்.. நம்ம வண்டிய பாக்கற மெக்கானிக் வந்ததும் அனுப்பறேன்னு....'

'நாசமா போச்சு..' என்று எரிந்து விழுந்த நாடார் தன் எதிரில் நின்ற ஓட்டுனரை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'ஏம்லே ஒங்கிட்ட எத்தன தரம் படிச்சு, படிச்சு சொல்லிருக்கேன்... இந்த மாதிரி கடைசி நேரத்துல வந்து கைய பிசைஞ்சிக்கிட்டு நிக்காதேன்னு... கூறுகெட்ட பய... சரில்லே.. வேற ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சிருக்கியா இல்ல... நா பொடிநடையா போக வேண்டியதுதானா?'

சட்டென்று பிரகாசமான மந்திரசாமி, 'நம்ம டிராவல்ச கூப்ட்டு சொல்லிட்டன்யா.. இன்னும் அஞ்சே நிமிசத்துல வண்டி வந்துரும்.. நீங்க போனதும் நா வண்டிய சரிப்பண்ணி ராசக்காவ கூட்டிக்கிட்டு வந்துடறேன்..' என்றான்..

இவனை என்ன செய்தால் தகும் என்ற யோசனையுடன் பார்த்த நாடார் இருந்தாலும் பய புத்திசாலித்தனமா வேறொரு வண்டிய ஏற்பாடு பண்ணிட்டானே.. விட்டுருவோம்.. காலைல இவன்கிட்ட டென்ஷனடிச்சி என்ன செய்யிறது?

முதலாளியின் முகத்தில் தெரிந்த பாவனையை வைத்தே அவருடைய மனநிலையை கண்டுகொள்வதில் சமர்த்தன் மந்திரசாமி.. அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சோம் என்ற நிம்மதியுடன் வீட்டின் பின்புறத்தை நோக்கி மெள்ள நகர்ந்தான்.

'தொற அங்க எங்கிட்டு போறாப்பல?' என்ற நாடாரின் குரல் கேட்டு திரும்பியவன் என்னடாயிது பழுவடியும் முருங்கை மரம் ஏர்றாப்பல இருக்கே என்று நினைத்தான்..

'இல்லய்யா... என்னால ஏதும் ச்செய்ய முடியுதான்னு...'

நாடார் கேலியுடன் சிரித்தார். 'எது? நீ... எலேய் இந்த சிலுவைக்கே பூ சுத்தறியாலே... ஒன்னெ எனக்கு தெரியாது? வண்டிக்கு பெட்ரோல் போடறத தவிர வேற என்னம்லே தெரியும் ஒனக்கு? விட்டாப் போறும்னு ஓடப்பாக்க.. அதானலே?'

இந்த மனுசனுக்கு ஒடம்பெல்லாம் மூள போலருக்கு... இப்ப என்ன சொன்னாலும் அடி விழும்... பேசாம நிப்போம்.. என்று மனதுக்குள் நினைத்தவாறு நின்ற இடத்திலேயே நின்றான்...

அவனுடைய நல்ல நேரம் டிராவல்சிலிருந்து கார் வந்து வாசலில் நிற்க பரபரப்புடன் கேட்டைத் திறந்து 'சீக்கிரம் உள்ள வாரும்யா... எத்தன நேரந்தான் அய்யா காத்துக் கிடப்பாக?' என்றான் உரக்க போர்ட்டிக்கோவில் நின்ற நாடாருக்கு கேட்க வேண்டுமே என்பதற்காக.

'எலேய்.. ரொம்பத்தான் டிராமா போடாத... போயி ராசிய கூப்டு... ஒம் மூஞ்சில முளிச்சிட்டு போனா போற காரியம் உருப்பட்டாப்பலதான்..'

'இதோ போய்ட்டேன்யா.' என்றவாறு போர்ட்டிக்கோவுக்குள் நுழையாமல் வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்வாசல் வழியாக ஹாலுக்குள் நுழைந்து சமையலறையில் தன் தாயுடன் நின்றிருந்த ராசம்மாளை நெருங்கினான். 'அக்கா அய்யா கூப்பிடறாங்க.'

'என்ன கார் ரிப்பேர் விசயத்த சொல்லிட்டியா?' என்றவாறு ராசம்மாள் கையிலிருந்த பாத்திரத்தை மேடையில் வைத்துவிட்டு அவனை பிந்தொடர்ந்து போர்ட்டிக்கோவில் நின்றிருந்த தன் தந்தையை நெருங்கினாள். 'நாந்தாம்பா ஒங்களுக்கு வேற கார ஏற்பாடு பண்ண சொன்னேன்.. நீங்க போங்க.. நா நம்ம கார் ரெடியானதும் அதுல ஆஃபீஸ் போய்க்கறேன்.. அதுக்கு முன்னால எனக்கு நம்ம வக்கீல் அங்கிள் ஆஃபீஸ் வரைக்கும் போணும்..'

நாடார் திரும்பி மந்திரசாமியைப் பார்த்தார். 'எலேய் என்னமோ நீதான் டிராவல்ஸ் காருக்கு ஏற்பாடு செஞ்சா மாதிரி சொன்னே... அதான என்னடான்னு பார்த்தேன்.. நம்ம மந்திரம் வெளங்கிருவான் போலருக்கேன்னு... சரி.. சரி.. கார் ரெடியானதும் ராசிய கொண்டு விட்டுட்டு எனக்கு ஃபோன் போடு.. எனக்கு இன்னைக்கி நெறைய எடம் போக வேண்டியிருக்கு... நம்ம வண்டியில போறா மாதிரி வராதுல்லே... என்ன வெளங்குதா?' மந்திரசாமி தலையை அசைக்க, 'என்னத்த வெளங்கிச்சோ போ... சொல்றப்ப மண்டைய மண்டைய ஆட்டு.. அப்புறம் கோட்டைய விட்டுட்டு நில்லு... இதே பொளப்பா போச்சிது ஒனக்கு..' என்றவர் தன் மகளைப் பார்த்தார். 'நீ நம்ம ஆஃபீசுக்கு போய் எறங்குனதும் வண்டிய நம்ம டாக்டரோட பங்களாவுக்கு அனுப்பிரும்மா... ஒனக்கு வேணும்னா டிராவல்சுக்கு போன் போட்டு வேற வண்டிய வரவச்சிக்கிரு, என்ன?'

'சரிப்பா.. நா பாத்துக்கறேன்.. நீங்க போங்க..'

நாடார் ஏறிக்கொள்ள வாகனம் ரிவர்ஸ் எடுத்து கேட்டைத் தாண்டி சாலையில் இறங்கியது...

அவர் வாகனம் தெருமுனையைக் கடந்து ஈ.சி.ஆர். சாலையை நோக்கி விரைய ஏழுமலை மற்றும் அவனுடைய சகாக்களை தாங்கிய ஆட்டோ இரண்டும் அவர் குடியிருந்த சாலைக்குள் நுழைந்தன.. 'இந்த ரோடுதாங்க.. வீட்டு நம்பர சொல்லுங்க..'

ஏழுமலையின் சகாக்களுள் ஒருவன் அவனைப் பார்த்தான். 'வேணாம்யா இங்கனயே எறக்கிருங்க.. நாங்க பாத்து போய்க்கறோம்.' என்றவாறு இறங்கிய ஏழுமலையை தொடர்ந்து சகாக்கள் நால்வரும் இறங்கிக்கொள்ள 'இவனுங்கள பாக்கற பார்வையே சரியில்லையே' என்ற எண்ணத்துடன் மீண்டும் ஒருமுறை ஐவரையும் பார்த்தார் ஆட்டோ ஓட்டுனர்களுள் ஒருவர். 'என்னடே... இவனுங்கள பாத்தா.. ஏதோ வில்லங்கம் புடிச்ச பயலுவ மாதிரி தெரியல?' என்றான் தன் சகாவிடம். 'என்னமும் செஞ்சிட்டு போட்டும்.. நமக்கென்ன வந்தது.. கேட்டதுக்கு மேலயே குடுத்துட்டானுவ போய்க்கிட்டேயிருப்போம்..வா..'

தொடரும்...

5.4.07

சூரியன் 189

நேற்றைய இரவிலிருந்து சற்று முன் மாதவனின் தொலைபேசி அழைப்பு வரும்வரை நடந்தவைகளில் மூழ்கியிருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் எழுந்து தன்னுடைய செல்பேசியில் வந்திருந்த அழைப்புகளின் பட்டியலிலிருந்த ஒரு எண்ணைத் தேடிப்பிடித்து டயல் செய்தார்.

எதிர்முனையில் சற்று நேரம் மணி ஒலித்துக்கொண்டேயிருக்க துண்டித்துவிடலாமா என்று அவர் நினைத்த நேரத்தில், 'யார் வேணுங்க?' என்ற ஒரு இளம் பெண்ணுடைய குரல் கேட்க நாம்தான் தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டோமோ என்று நினைத்தார்.

'நான் ஃபிலிப் சுந்தரம் பேசறேன். இது மிஸ்டர் ஜோவோட வீடுதானே?' என்றார் தயக்கத்துடன்.

'சார் நீங்களா? நான் அவரோட வய்ஃப் பேசறேன்.. அவங்க குளிச்சிக்கிட்டு இருக்காங்க.. அவங்க வந்ததும் கூப்டச் சொல்லட்டுமா?' என்று பதற்றத்துடன் குரல் வந்தது.

'சரிம்மா.. சொல்லுங்க..' என்றவாறு துண்டித்துவிட்டு சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி எட்டைக் கடந்திருந்தது. இன்னும் அரைமணியில் அலுவலகத்திலிருந்து தன்னை அழைத்துச் செல்ல வாகனம் வந்துடும். குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான். ப்ரேக் ஃபாஸ்ட் ஆஃபீஸ்ல போயி பாத்துக்கலாம்.

குளிக்கும் சமயத்தில் ஜோ அழைக்க வாய்ப்புள்ளதே என்று நினைத்தவர் தன் செல்பேசியை கையில் எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தார்.

******

'என்னங்க ஒங்க சிஜிஎம் கூப்ட்டார். நீங்க குளிச்சிட்டு வந்ததும் கூப்ட சொல்றேன்னு சொன்னேன். இந்தாங்க கூப்டுங்க..' என்றாள் ஜோவின் மனைவி அக்சீலியா.

தலையைத் துவட்டியவாறே ஹாலுக்குள் நுழைந்த ஜோ தன் மனைவியிடமிருந்த செல்பேசியை வாங்கி யார் என்று பார்த்தான். ஃபிலிப் சார்!

'சரி.. பேசலாம். நீ போய் காப்பிய கொண்டா.'

'என்னங்க குளிக்கறதுக்கு முன்னாலத்தான குடிச்சீங்க?'

ஜிவ்வென்று எரிந்த கண்களை அழுந்த துடைத்தவாறே தன் மனைவியைப் பார்த்தான் ஜோ. 'ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம தலைய விண்ணுங்குது அக்சீ.. அதான் கேக்கேன்.. சீக்கிரம் போய் கொண்டா'

முந்தைய நாள் இரவு அவன் வீடு திரும்பியபோது நள்ளிரவைக் கடந்திருந்தது.

மாணிக்கவேல் தன் தந்தையின் உடலுடன் சென்னை பொதுமருத்துவமனையிலிருந்து வந்து சேர்ந்தபோது அன்று முழுவதும் நடந்தவைகளில் உடலும் மனதும் சோர்ந்து போயிருந்த அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.

ஆனாலும் தன்னுடைய துக்கத்தை வெளிக்காட்டாமல் நடக்கவிருந்தவைகளைக் குறித்து அத்தனை தெளிவாக அவரால் எப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போதும் நினைத்து மலைத்துப்போனான்.

மாணிக்கவேல் வந்து இறங்கிய அடுத்த சில மணித்துளிகளிலேயே இன்னுமொரு வேனில் கமலியின் இறுதிச் சடங்கில் பங்குபெற்ற பாதிரியாரும், கோவில் ஊழியர்களும், கன்னியர்களும் வந்து சேர ஜோ அவர்களுடன் சேர்ந்து இரு உடல்களையும் இறக்கி ஹாலில் முந்தைய தினம் கமலியின் உடலைக் கிடத்தியிருந்த அதே மேசையில் ராணியையும், அதற்கு சற்றுத் தள்ளி இந்து முறைப்படி மாணிக்கவேலின் தந்தையின் சடலத்தை ஒரு வெள்ளைத் துணியை தரையில் விரித்து அதன் மேல கிடத்தினான்.

அவனுடைய மனைவி தனியாக காத்திருப்பாளே என்ற நினைப்பில், 'இனியும் நீங்க இங்க வெய்ட் பண்ணணுமா ஜோ. அங்க ஒங்க வொய்ஃப் தனியா இருப்பாங்களே.. தம்பிங்க ரெண்டு பேருக்கும் ஃபோன் செஞ்சிருக்கேன்... அவங்க வந்ததும் மேல ஆகவேண்டியத பாத்துக்குவாங்க.. நீங்க போய்ட்டு காலைல வாங்களேன்.' என்று மாணிக்கவேல் வற்புறுத்தியபோதும் சென்னையில் வசித்த அவருடைய இளைய சகோதரர்கள் இருவரும் குடும்பத்துடன் வரும் வரையும் இருந்துவிட்டே புறப்பட்டான் ஜோ.

ஆவி பறக்கும் காப்பி தம்ளருடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த அக்சீலியா, 'இந்தாங்க கொஞ்சம் ஏலக்காய தட்டி போட்டுருக்கேன்.' என்றவாறே தம்ளரை அவனிடம் நீட்ட முந்தைய இரவில் நடந்தவைகளில் மூழ்கிப்போயிருந்த ஜோ திடுக்கிட்டு தன் முன்னே நின்ற தன் மனைவியைப் பார்த்தான்.

'என்னங்க.. ஏதோ யோசனையிலருக்கீங்க போலருக்கு.. மாணிக்கம் சார பத்தியா?' என்றாள் அக்சீலியா.

'ஆமா அக்சீ.. சாருக்கு வந்த மாதிரி சோதனையெல்லாம் நமக்கு வந்திருந்தா நாம எப்படி ரியாக்ட் பண்ணியிருப்போம்னு நினைச்சி பாத்தேன்.. ஒரே வீட்டுக்குள்ள இரண்டு டெட் பாடீஸ்.... ரெண்டு பேருக்குமே சார விட்டா யாருமில்லை. சாரோட தம்பிங்க ரெண்டுபேரும் வந்தாங்கன்னுதான் பேரு.. ரெண்டு குடும்பமுமே வந்ததும் முதல்ல செஞ்சது என்ன தெரியுமா? யார் எந்த பெட்ரூம எடுத்துக்கறதுன்னுதான்... சார் மட்டுமில்லன்னா இவங்க ரெண்டு பேருமே இந்த நிலமைக்கு வந்துருக்க முடியாது. ஆனா அவங்க யாருக்குமே சாரோட இழப்புல பெரிசா எந்தவித வருத்தமும் இருக்கா மாதிரி தெரியல. மேடத்தோட கார்டியன் மதர் மட்டுந்தான் துக்கம் தாங்க முடியாம மேடத்தோட சடலத்துக்கு பக்கத்துலயே ஒக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் அந்த ஃபாதர். 'என்ன மன்னிச்சிருங்க மாணிக்கம்னு' திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டேயிருந்தார். ஆனா சாருக்கு யாரோட ஆறுதலும் தேவையிருக்கல.. அவருக்கு இப்ப இருக்கற கவலையெல்லாம் சந்தோஷ் எப்படியிருக்கான்னு தெரிஞ்சிக்கறதுதான். அப்பாவோட பாடியோட வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே சார் செஞ்ச முதல் வேலை சந்தோஷ் அட்மிட்டாயிருந்த கிளினிக் டாக்டர கூப்ட்டதுதான். ஆனா பாவம் அவன் அட்மிட் பண்ணப்போ இருந்த அதே கண்டிஷன்லதான் இருக்கானாம். அவன் வீட்ல இல்லேங்கறத கூட நா சொல்லித்தான் சாரோட பிரதர்சுக்கே தெரிஞ்சதுன்னா பாரேன்... எந்த அளவுக்கு அவங்க சார பத்தியும் அவரோட குடும்பத்த பத்தியும் கவலைப்படறாங்கன்னு இதுலருந்தே தெரியல? என்ன சொந்தமோ என்ன பந்தமோ போ... நமக்கிருக்கற கவல கூட அவங்களுக்கு இருக்காது போலருக்கு... இங்க இருக்கற இவங்களே இப்படின்னா ஊர்ல இருக்கறவங்களப்பத்தி என்ன சொல்றது? அவங்க இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள வந்தா உண்டு.. இல்லன்னா அவங்க வராமயே கூட சார் ஃப்யூனரல் நடத்திருவார் போலருக்கு.. அந்த அளவுக்கு வெறுத்து போயிருக்கார்.' என்ற ஜோ தொடர்ந்து, 'பலகாரம் சாப்பிடற மூடுல நா இல்ல அக்சீ... ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கெளம்பறேன்.. நீ வீட்ட பூட்டிக்கோ.' என்றவாறு படுக்கையறையை நோக்கி நகர்ந்தான்.

'சிஜிஎம் சாருக்கு ஃபோன் பண்ணுங்களேன். அப்புறம் நாந்தான் சொல்லலன்னு நினைச்சிக்க போறார்.'

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ஜோ திரும்பி ஹால் சோபாவிலிருந்த தன் செல்பேசியை நோக்கிச் சென்றான். 'நல்ல வேளை ரிமைண்ட் பண்ணே.' என்றவாறு ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணை டயல் செய்ய துவங்கினான்.

*****

முந்தைய நாள் இரவு முழுவதும் அழுது வீங்கிய கன்னங்களுடன் படுக்கையில் படுத்து கிடந்தாள் மைதிலி.

'டீ மைதிலி! மணி எட்டாயிருச்சே.. எழுந்து வெளில வாயேன்.. உள்ளவே எத்தன நேரம்தான் அடஞ்சி கெடக்கப் போற? எழுந்து வா.. எல்லாருமா பேசி ஏதாச்சும் டிசைட் பண்லாம்.'

என்னத்த பேசி என்ன பலனிருக்க போறது? அப்பா அவனெ மறந்துரும்பார். அம்மா? புருசன பாக்கறதா இல்ல பொண்ண பாக்கறதான்னு கெடந்து அல்லாடுவா? ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான தெரியும்னு சொல்வா.. ஆனா நடக்கறதென்ன? என்னைக்கி என்னெ அம்மா புரிஞ்சிருக்கா இப்ப புரிஞ்சிக்கறதுக்கு?

அப்பாவுக்கு அவரோட ஒலகம்தான் முக்கியம். சாதி, குலம் கோத்திரம்னுட்டு... இருக்கறது twentyfirst centuryயில.. தாமசிக்கறது மெட்ரோ சிட்டியில.. ஆனா பேச்சு? பழங்காலத்துல.. என்ன சாதியோ என்ன கொலமோ.. யாருக்கு வேணும்? Outdated thoughts and idelogies... எதுவுமே வேணாம்னுட்டு போய்ட்டாத்தான் என்ன.. ஒன்னுமே நடக்காத மாதிரி எழுந்து குளிச்சி டிபன் பாக்ச தூக்கிட்டு ஆஃபீசுக்கு போய்ட்டு வரேன்னுட்டு போய் அப்படியே எங்காச்சும் போய்ட்டா என்ன?

என்னெ ஏமாத்தி நேத்தைக்கி கார்ல தூக்கி போட்டுக்கிட்டு வந்த அப்பாக்கு இதான் சரியான ரிப்ளை..

சட்டென்று மனதுக்குள் துளிர்த்த யோசனையில் உற்சாகமடைந்து துள்ளிக் குதித்தவாறு எழுந்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமானாள் மைதிலி..

தொடரும்..