27.6.06

Soorian 98

வங்கியின் போர்ட் மீட்டிங் நாட்களில் மருத்துவர். சோமசுந்தரம் தன்னுடைய மருத்துவமனை அலுவல்களையெல்லாம் தன்னுடைய மூத்த மகளிடம் ஒப்படைத்துவிடுவார்.

சென்னையிலும் அவருடைய சொந்த மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்திலுமிருந்த மருத்துவமனைகள் அவற்றை சார்ந்திருந்த மூன்று நட்சத்திர உணவு விடுதிகள் மற்றும் சென்னையை முழுவதும் இயங்கிவந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மருந்து விற்பனைக் கடைகள், பத்துக்கும் மேற்பட்ட இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் செண்டர்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்கும் பொறுப்பு மருத்துவத்துறையில் எம்.சி.எச் மற்றும் நிர்வாகத்துறையில் ஹார்வர்ட் எம்.பி.ஏ பட்டங்களை பெற்றிருந்த அவருடைய ஒரே மகள் பூர்னிமா ராவ்தான்.

அவருடைய பார்வையில் அவருடைய திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசான மகள் பூர்னிமா ஒரு மகனைப் போலத்தான் தென்பட்டாள்.

பூர்னிமாவும் தன்னை அதுபோல்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவளுடைய தந்தைக்கு இருந்த எந்தஒரு குறுக்கு புத்தியும் அவளுக்கு இல்லை. அத்தனை சொத்துக்கும் வாரிசாக இருந்தும் அவளுடைய மருத்துவமனையில் பணிபுரிந்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடைய பார்வையில் அவள் மிகவும் எளிமையானவள். ஆனால் அதே சமயம் கண்டிப்பானவள்.

சோமசுந்தரத்தின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அவருடைய மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கென இலவச மருத்துவ பகுதியை துவக்கியதுடன் நின்றுவிடாமல் சென்னையிலிருந்த பல தொண்டு நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்து இலவச மருத்துவ முகாம்களை இடைவிடாமல் நடத்துவதிலும் குறியாயிருந்தாள்..

‘இது அம்மாவோட கடைசி ஆசைப்பா.. இதுல நீங்க தலையிடாதீங்க.. நீங்க பணம் பண்றதுக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க.. அதுக்கு ஒரு பிராயச்சித்தம்னு கூட நினைச்சிக்குங்களேன்..’

பூர்னிமாவின் இந்த மறைமுகத் தாக்குதல் அவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவளுடன் எந்தவித வாக்குவாதமும் செய்யமாட்டார். அவள் எது செய்தாலும் அது நன்மையில்தான் சென்று முடியும் என்பது அவருக்குத் தெரியும்..

‘இன்னைக்கி நம்ம பேங்குல புது சேர்மன் சார்ஜ் எடுக்கறார் பூர்னி.. அதனால் இன்னைக்கிம் நாளைக்கிம் அப்பா கொஞ்சம் பிசியா இருப்பேன்.. நீதான் இங்க பாத்துக்கணும்..’

பூர்னிமா காப்பி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஒங்களோட அட்ஜஸ்ட் பண்ண முடியாம பழைய சேர்மன் போனா மாதிரி இவரையும் ஓட வச்சிருவீங்களே..’

தன் மகள் மறைமுகமாக தன்னை தாக்குவது தெரிந்தும் அதைப் பொருட்படுத்தாமல், ‘நாளைக்கும் அடுத்த நாளும் நான் செய்யறதாருந்த சர்ஜரியையெல்லாம் நம்ம சந்திரபோஸ் அப்புறம் மாதவ ராவ் டாக்டர்ஸ்ச பாத்துக்க சொல்லியிருக்கேன்.. ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான் ஒங்கிட்ட சொல்றேன்.. போஸ் ஆப்பரேட்டிவ் வார்ட்ல நீயும் அப்பப்போ போய் பார்த்துக்கிட்டா நல்லது..’ என்றார்.

‘லீவ் தட் ல் டு மி டாட்.. சொல்லுங்க.. எத்தன வருச காண்ட் ராக்ட்ல வரார் இந்த சேர்மன்..’

சோமசுந்தரம் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.. இவளையே நமக்கப்புறம் போர்ட்ல போட்டுரலாமா? எம்.பி.ஏ செஞ்சிருக்காளே?

சேச்சே.. இவள அப்படியே தூக்கி சாப்பிட்டுருவான் அந்த நாடார்.. மொதல்ல மாதவன வளைச்சிப் போட்டு நம்ம டேர்ம் முடியறதுக்குள்ள அந்த ரெக்ரூட்மெண்ட் ப்ராஜக்ட முடிச்சிரணும்.. அதுக்கப்புறம் போர்ட்ல யார நாமிநேட் பண்லாம்னு யோசிக்கலாம்..

‘என்ன டாட்.. சத்தத்தையே காணோம்.. என்னடா ஹாஸ்ப்பிடல், ஹோட்டல், மெடிக்கல் ஷாப்.. எல்லாம் போறாதுன்னு பேங்குல மூக்க நொழைக்கறாளேன்னு பாக்கறீங்களா?’

சோமசுந்தரம் தன் மகளைப் பார்த்தார்.. ‘சேச்சே.. அப்படியே நீ நொழைஞ்சாலும் தப்பில்ல பூர்னி.. If you are interested.. I will do something.’

பூர்னிமா இல்லையென்று தலையை அசைத்தாள். ‘ இல்ல டாட்.. சும்மாத்தான் கேட்டேன்..’

‘ரெண்டு வருசத்துக்குத்தான் போர்ட்லருந்து ரெக்கமெண்ட் பண்ணோம்.. ஆனா ரிசர்வ் பேங்கலருந்து நாலு வருசத்துக்குன்னு அப்பாய்ண்ட்மெண்ட் வந்திருக்கு.. முதல்ல அப்போஸ் பண்ணா என்னன்னு நினைச்சோம்.. அப்புறம் இப்போதைக்கு வேணாம்னு விட்டுட்டோம்.. பாப்போம்..ஆள் முன்னாலருந்த சேர்மன்மாதிரி ஒத்துவராத ஆளாருந்தா இருக்கவே இருக்கு ரிசிக்னேஷன் ரூட்.. போடான்னா போய்ட்டு போறார்...’

பூர்னிமா கலகலவென சிரித்தவாறே எழுந்து நின்றாள்.. ‘அதான பார்த்தேன்.. சோமசுந்தரமா கொக்கா.. ஓக்கே டாட்.. யூ கேர்ரி ஆன்.. பை..’

முழங்காலை தொடும் நெருக்கமாக ப்ளீட் வைத்து தைக்கப்பட்ட ஸ்கர்ட்.. அதற்கு ஜோடியாக அரைக்கை சட்டை.. ஹீல்ஸ் இல்லாத வெள்ளை நிற காலனி.. தோள்வரை குலுங்கும் பாப் தலை.. லிப்ஸ்ட்டிக், மேக்கப் இல்லாத பளிச் முகம்..

தன்னுடைய மகளின் ஆடம்பரமில்லாத அமைதியான இந்த தோற்றத்தைக் கண்டு சோமசுந்தரமே பிரமித்துபோயிருக்கிறார் தனக்கு இப்படியொரு மகளா என்று.. 'கல்யாணம் செஞ்சிக்கம்மா' என்று எத்தனைமுறையோ கெஞ்சி பார்த்துவிட்டார். மிரட்டியும் பார்த்தார். ஊஹும்.. ஒன்றுக்கும் மசியவில்லை.. 'என்னெ என் போக்குல விட்டுருங்கப்பா.. எப்ப எனக்கே தோணுதோ.. அப்ப செஞ்சிக்கறேன்..' வயது முப்பத்தஞ்சாகிறது... இனி எப்போதுதான் தோன்றுமோ என்று பலமுறை நினைத்திருக்கிறார்.

சென்னையிலிருந்த அனைத்து குடிகார க்ளப்பிலும் அவர் அங்கத்தினர் என்றால் நகரத்திலிருந்த அனைத்து சேவை சங்கங்களிலும் பூர்னிமா உறுப்பினராக இருந்தாள்.. அவர் சென்னை நகரின் ஷெரீஃபாக இருந்தார் என்றால் பூர்னிமா சென்னை மத்திய ரவுண்ட் டேபிளின் கவர்னராக இருந்தவள்..

எந்த வழியானாலும் பரவாயில்லை.. இறுதியில் பணம், சொத்து, புகழ் கிடைந்தால் போறும் என்று அவர் நினைத்தால்.. எத்தனை லட்சங்கள் செலவானாலும் பரவாயில்லை தனக்கு மனதிருப்தி கிடைத்தால் போறும் என்று பூர்னிமா நினைத்தாள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்..

‘அவ நம்ம மாதிரி இல்லைய்யா.. அப்படியே அவ அம்மா மாதிரி..’ என்பார் நண்பர்களிடம்..

பூர்னிமா புறப்பட்டுச் சென்றதும் சோமசுந்தரம் பரபரப்பானார்.. அவருடைய பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே இருந்தன. அதற்குள் அவர் நிறைவேற்றி முடிக்க வேண்டியவை ஒன்றிரண்டு இருந்தன..

தில்லி, மும்பை நகரங்களில் கிளை மருத்துவமனைகள் அதற்குத் தேவையான உபகரணங்களை சிலவற்றை ஜெர்மனியிலிருந்து தருவிக்க குறைந்தபட்சம் பதினைந்து கோடிகள் வேண்டியிருந்தது.

‘Why do you worry Dad.. we can borrow at a very competitive rate from a consortium of Banks.. I’ll manage it..’ என்று மகள் பொறுப்பேற்றுக்கொண்டாலும் பதினைந்து கோடி கடன் பெறவேண்டுமானால் அவருடயை பங்குக்கு மூன்று கோடி முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அதற்கு மூன்று மாத காலத்திற்கு சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிதி நிறுவனத்திலிருந்து கடனாக பெற்றிருந்தார். கெடு முடிந்து ஒரு மாதமாகிறது. ஏற்கனவே நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனம் இனியும் பொறுத்திருக்கும் என்று அவருக்கு தோன்றவில்லை. அவருடைய சி.ஏ வேணுகோபாலின் பரிந்துரையால்தான் அந்த நிறுவனம் இதுவரை பொறுத்திருந்தது என்பதும் அவருக்குத் தெரியும். நண்பர்கள், உறவினர்கள் என இரண்டு கோடியை திரட்டி அடைத்திருந்தார். இன்னும் ஒரு கோடி ரூபாய்.. அதற்கு அவர் தீட்டிய திட்டம்தான் வங்கிக்கு புதிய கடைநிலை அதிகாரிகளை ரெக்ரூட் செய்ய வகுத்த திட்டம்..

அதற்கு புதிய சேர்மனை சரிகட்டினால் போறாது அந்த நாடாரையும் சரிகட்டவேண்டும் என்று அவருக்கு தெரியும்.. அது எப்படி என்பதை இனிமேல் யோசித்து செயல்படுத்தவேண்டும் என்று நினைத்தவாறே தன் செல்ஃபோனை எடுத்து பாபு சுரேஷின் நம்பரை டயல் செய்தார்..

****

சென்னை கடற்கரைச் சாலையிலிருந்த வங்கியின் பயிற்சிக்கல்லூரி திறக்கப்பட்டு அன்றுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுகிறது.

அன்று காலை வங்கிக்கு பொறுப்பேற்றதும் புதிய சேர்மனுடைய முதல் பொது அலுவல் இந்த வெள்ளி விழாவில் பங்கு கொள்வதுதான்.

கவே அன்று காலை முதலே பயிற்சிக் கல்லூரி பரபரப்பாக இருந்தது. கல்லூரி முதல்வர் சேவியர் ஃபெர்னாண்டோவின் நேரடி பொறுப்பில் அவருடைய துனை முதல்வரும், கல்லூரியில் பயிற்றுவிப்பாளராக இருந்த ஒரு டஜன் அதிகாரிகளும் விழாவிற்கான கடைசி நிமிட தயாரிப்பில் மும்முரமாக இருந்தார்கள்.

‘சீனியர் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் சேர்மனுக்கு எச்.ஓ லாபியில வச்சி சிம்பிளா ஒரு ரிசப்ஷன் குடுக்காங்களாம் சார்.. அது முடிஞ்சதும் சேர்மன் அவரோட சேம்பருக்கு போய் ஃபார்மலா சார்ஜ் எடுத்துட்டு நேரா இங்க வருவாராம்.. நம்ம ஆக்டிங் சேர்மன் ஃபோன்ல கூப்ட்டுருந்தார்.. நீங்க ஹால்ல இருந்ததால மிஸ்டர் ஃபெர்னாண்டோக்கிட்ட சொல்லிருங்கன்னு சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டார்..’

அவரை ஃபெர்னாண்டோ என்றுதான் வங்கியில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கே சேவியர் என்ற பெயர் மறந்துபோகும் அளவுக்கு அவருடைய குலப்பெயர் அவ்வளவு பிரசித்தம்...

அந்த பெயரால் வங்கியில் அவருக்கு நியாயமாக கிடைக்கவிருந்த பதவி உயர்வும் அங்கீகாரமும் கூட கிடைக்காமல் போனதை நினைத்து பலமுறை நொந்துபோயிருக்கிறார்..

அவருடைய நேரடி தலைவர் சி.ஜி.எம் பிலிப் சுந்தரத்தைத் தவிர வேறு எந்த அதிகாரியும் அவரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை..

எல்லாம் இந்த கேடுகெட்ட சாதி துவேஷந்தான் காரணம் என்று நினைத்தபோது பேசாமல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு போனால் என்ன என்றும் பல சமயங்களிலும் அவருக்கு தோன்றியிருக்கிறது.

அப்போதெல்லாம் அவருக்கு ஆறுதலளிப்பது அவருடைய மனைவியும் மகள்களும்தான்..

அவருக்கு வாழ்க்கையில் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான பரிசு அவருடைய மனைவியும் அவருடைய இரு மகள்களும்..

அவருடைய எந்த மனநிலைக்கும் ஈடுகொடுத்து செல்லும் அவருடைய மனைவியால்தான் அவர் அலுவலகத்தில் சந்தித்த எல்லா அவமானங்களையும் சகித்துக்கொள்ள முடிந்தது..

‘புது சேர்மனுக்கு ஒங்களப்பத்தி நல்லா தெரியுமில்லீங்க.. அவர்கிட்ட நீங்க வேல செஞ்சிருக்கீங்கல்ல.. கவலைப்படாம இருங்க.. அவராலதான் ஒங்களுக்கு மறுபடியும் ஒரு புதுவாழ்வு வரப்போவுது.. பாத்துக்கிட்டே இருங்க..’

நேற்று இரவு அவருடைய மனைவி கூறிய ஆறுதலான பேச்சு நினைவுக்கு வர.. மனம் தெளிவடைந்து சேர்மனை வரவேற்று அவர் ஆற்றவிருந்த உரையாடல் நேரத்தில் காட்ட அவர் தயாரித்திருந்த பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்க்க ஆரம்பித்தார். பிறகு எழுந்து விழா ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருந்த அரங்கத்திற்கு விரைந்தார்..

தொடரும்..

7 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மாணிக்கவேலு x ராணி
மாதவன் x வத்ஸலா
இப்போ சோமசுந்தரம் x பூர்ணிமா
முரன்படும் பாத்திரங்கள் இடம்பெறும்
பொழுது ஒவ்வொன்றின் குணநலனும் அழுத்தமாககப் பதிவு ஆகின்றது

siva gnanamji(#18100882083107547329) said...

"என்கதையுலகம்"பதிவுஇடப்படும்
நேரத்தில் மாற்றம் தேவை என்று கருதுகின்றேன்
எல்லோரும் அயர்ந்திருக்கும் வேளையில்-ஓய்வெடுக்கும் நேரத்தில் இது பதிவு இடப்படுவதாகக் கருதுகின்றேன்

krishjapan said...

சேவியர்??!! ம். சரி, சரி.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

முரன்படும் பாத்திரங்கள் இடம்பெறும்
பொழுது ஒவ்வொன்றின் குணநலனும் அழுத்தமாககப் பதிவு ஆகின்றது //

ஸ்வீட்டும், காரமும் சேந்தாத்தானே நல்லாருக்கு..

டிபிஆர்.ஜோசப் said...

எல்லோரும் அயர்ந்திருக்கும் வேளையில்-ஓய்வெடுக்கும் நேரத்தில் //

ஹூம்.. மதியம் இரண்டும் மணி ஒங்களுக்கு ஓய்வெடுக்கும் நேரம்..

எனக்கும் வரும்.. மூன்றாண்டுகளில்:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா..

சோ.. படிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்க..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

ஏன் தலைப்பை ஆங்கிலத்தில் மாற்றிவிட்டீர்கள், //

இல்லை அரவிந்தன்.. நேற்று ஒரு ப்ரவுசிங் செண்டர்லருந்து போஸ்ட் செஞ்சேன். அதான்...