'டேய் வாசன்.. என்னாச்சி? ஏன் நிறுத்திட்டே மேல படிடா..'
இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கால்கள் கடுக்க அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது 'டேய், எங்கயாவது பக்கத்துல ஹோட்டல்ல ஒக்காந்து இத படிக்கலாம்டா... எங்கள்ல பாதி பேருக்கு இதுல எழுதியிருக்கறதே புரியாது... நீதான் நம்ம க்ரூப்ல அறிவுஜீவி... நீ படிச்சிட்டு சொல்லு...' என்றது நண்பர்கள் குழு வாசனைப் பார்த்து...
பிற்பகல் வேளை என்பதால் அடுத்திருந்த உணவகத்தில் கூட்டம் சற்றே குறைந்திருந்தது.. தேவைப்பட்ட இருக்கைகளை அருகிலிருந்த மேசைகளிலிருந்து இழுத்து கூட்டமாய் அமர்ந்துக்கொண்டது அந்த கும்பல்...
வாசன் தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழக விதிகள் பட்டியலில் இருந்த அடுத்த விதியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்... பிறகு நிமிர்ந்து நண்பர்கள் குழுவிலிருந்து சற்று தள்ளி அடுத்திருந்த மேசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த வின்செண்ட் முருகனைப் பார்த்தான்
அவனும் அவனுடைய குடும்பத்தாரும் சில மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்த்துவ மதத்தை தழுவியிருந்தனர் என்பது அவனுக்கு தெரியும். 'ஏண்டா திடீர்னு?'
'எங்க சேரியில நிறைய பேர் சேர்ந்தாங்கடா.. அதான் அம்மாவும் நாமளும் அப்படியே செஞ்சிரலாம்னு...'
'அதான் ஏன்னு கேக்கேன்...?'
முருகன் தயக்கத்துடன் பதிலளிக்க விருப்பமில்லாதவனைப் போல் நின்றான்...
'சரிடா இஷ்டமில்லன்னா சொல்ல வேணாம்... இப்ப இருக்கற வீட்ல இனியும் இருப்பியா இல்ல....'
'எங்கள மாதிரி ஒரு பத்து ஃபேமிலிக்கு புதுசா குடிச போட்டு குடுத்துருக்காங்கடா. அங்கக்கி ஷிப்ட் பண்ணப் போறோம்... அதான் ஒங்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...'
முருகனை அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தெரியும். அவன் குடியிருந்த தெரு முனையில் இருந்த குடிசைப் பகுதியில் தாய் மற்றும் தன்னுடைய மூன்று சகோதரர்களுடன் வசித்தவன். திடீரென்று யாரோ ஒருவர் வந்து சொந்தமாக குடிசை அமைத்துத் தருகிறேன் வாழ வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் என்பதற்காக காலங்காலமாய் இருந்த தெய்வ நம்பிக்கையை மாற்றிக்கொள்ள முடியுமா என்ன?
'சரிடா... அப்ப இனி ஒன்னெ பாக்க முடியாது... அதானே சொல்ல வரே?'
'இல்லடா.....'
'பின்னே... பரீட்சை முடிஞ்சிருச்சி... இனி எங்க பாக்கறது..' என்ற வாசன் தொடர்ந்து, 'அதுசரி... அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?'
முருகன் தயக்கத்துடன் எங்கோ பார்த்தவாறு பதிலளித்தான்... 'தெரியலடா... ரிசல்ட் வந்ததுக்கப்புறந்தான்... அதப்பத்தி யோசிக்கணும்..'
அப்போது பார்த்ததுதான்... ப்ளஸ் டூ ரிசல்ட் வந்ததும் மீண்டும் ஒருமுறை பள்ளி வளாகத்தில்.... பிறகு சற்று முன்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு வரிசையில் நின்றபோது....
விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொண்டு அவனை தவிர்க்கும் நோக்கத்துடன் நழுவ முயன்றவனை எட்டிப் பிடித்தான் வாசன்... 'டேய்... எங்க போற... ஒன்னெ இப்ப எப்படி கூப்பிடறதுன்னு தெரியல... பேர மாத்திட்டியா இல்ல அதே பேர்தானா?' என்றான் புன்னகையுடன்...
'சேச்சே... பேர மாத்திக்கலடா... முருகன்கற பேரோட வின்செண்ட்டுன்னு சேத்துக்க சொல்லிட்டார்... ஆனா சர்ட்டிஃபிக்கேட்ல மாத்த வேணாமாம்...'
'ஏன்... கெஜட்ல போட்டுட்டா போறுமேடா...'
முருகன் தயக்கத்துடன் தலையைக் குனிந்தவாறு.... 'இல்லடா அதுல ஒரு சிக்கல் இருக்கு.... சர்ட்டிஃபிகேட்ட பொருத்தவரைக்கும் நான் இந்து தலித்தாத்தான் இருக்கணுமாம்... இல்லன்னா எஸ்.சி.. பெனிஃபிட்ஸ் கிடைக்காதாம்... ப்ரீச்சர்தான் சொன்னார்....'
தன் கையிலிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான் வாசன்.... எத்தனை சரியாக படித்து வைத்திருக்கிறார் அந்த பாதிரியார்?
உண்மைதானே... ஒரு இந்து கீழ்ச்சாதிக்காரனாக சேரியில் வறுமையில் உழன்றுக்கொண்டிருந்த பத்து குடும்பங்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஒரு சின்ன மதமாற்றம் உதவுமானால் அதில் தவறேதும் இல்லையே...
ஆனால் அரசு விதித்துள்ள நியதிகளின் படி கிடைக்கக் கூடிய சலுகைகளை தொடர்ந்து அனுபவிக்கவும் வேண்டும் என்ற முருகனின் எண்ணத்துடன் அவனுக்கு உடன்பாடில்லை என்றாலும்.... ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த போது அரசின் முடிவில்தான் குளறுபடி என்று சமாதானமடைந்தான் வாசன்...
'டேய்... வாசா.... நீ இங்க இல்ல போலருக்கு.... ஒன் கண்ணெ பாத்தா என்னமோ ஸ்லோ மோஷன் ஃப்ளாஷ் பேக்ல இருக்கா மாதிரி இருக்கு... இந்த ஒலகத்துலதான் இருக்கியா... இல்ல...'
நண்பர்களின் கேலிக் குரல் வாசனை நினைவுகளிலிருந்து மீட்டது.... திடுக்கிட்டு தன் கையிலிருந்த படிவத்தைப் பார்த்தான்..
'சாரிடா... இந்த கண்டிஷன படிச்சதும்... ஏதோ பழைய நினைவு...' என்ற வாசன் 'படிச்சிட்டு நீங்களே சொல்லுங்கடா...' என்றான்...
'சரி படி.. அப்படி என்னதான் இருக்கு அந்த கண்டிஷன்ல..?' என்றான் ஒருவன்...
"No person who professes a religion different from Hinduism or Sikhism or Buddhism shall be deemed to be a member of a Scheduled caste."
வாசன் சற்று நேரம் நிறுத்திவிட்டு தன் நண்பர்களைப் பார்த்தான்... எவ்வித ரியாக்ஷனும் இல்லை... அங்கிருந்தவர்களுள் யாருமே இந்த வகுப்பில் வரவில்லை என்கிற மெத்தனம்... முருகன் புரிந்துக்கொண்டு வாசனைப் பார்த்தான்... ஆனால் பதிலேதும் பேசாமல் அமர்ந்திருந்தான்..
வாசன் தொடர்ந்தான்..
"A member of the Scheduled Caste on conversion to Christianity will be considered only under Backward class and not under Scheduled caste, for admission purposes."
நாந்தான் சொன்னேனே என்பதுபோல் தன்னை முருகன் பார்ப்பதை உணர்ந்த வாசன் அவனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தான்..
அவனுடைய பார்வை சென்ற திசையில் ஒட்டுமொத்த கும்பலும் திரும்பி அடுத்த மேசையில் தனியே அமர்ந்திருந்த முருகனைப் பார்த்தது... அவனும் அவர்கள் படித்த அதே பள்ளியில் படித்தவன் என்று பலருக்கு தெரிந்திருந்தாலும் அவனுடைய ஏழ்மைக் கோலம் அவனை விலைக்கியே வைத்திருந்தது...
வாசன் தன்னுடன் அமர்ந்திருந்த நண்பர்களைப் பார்த்தான்.. 'என்னடா ஒரு ரியாக்ஷனையும் காணம்? இந்த கண்டிஷன் inhumanஆ தெரியல?'
நண்பர்களுள் ஒருவனாக அமர்ந்திருந்த வாசனின் அண்ணன் மூர்த்தி அலட்சியத்துடன், 'இதுல என்னடா மனுஷத்தனம் இல்ல ஒனக்கு? பணம் கிடைக்கிதேன்னுட்டு கும்பிடற சாமியவே மாத்திக்கறவங்களுக்கு எதுக்குடா ரிசர்வேஷன்? என்னெ கேட்டா அவனுங்களுமக்கு நம்மள மாதிரியே பிசி ஸ்டேட்டஸ் குடுக்கறது கூட தேவையில்லைன்னு சொல்வேன்..' என்றாவறு ,குழுமியிருந்த கும்பலைப் பார்த்தான்... 'என்னடா சொல்றீங்க?'
அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையசைத்தது ஒட்டுமொத்த கும்பலும்...
முருகன் சட்டென்று எழுந்து வாசலை நோக்கி நடந்தான்..
'யார்றா அவன்? ஒன் ஃப்ரெண்டா?' என்றான் வாசனின் நண்பன் ஒருவன்.. 'ஒங்க ஸ்கூல்ல படிச்சவனா? நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே..?'
மூர்த்தி கேலியாய் சிரித்தான்.. 'அவன் ஒரு --பயடா... எங்க ரோட்டு முனையிலருக்கற சேரியிலதான் இருந்தான்.. இப்ப கொஞ்ச நாளா காணம்... வாசனுக்குத்தான் அவன் ஃப்ரெண்ட்... இவருக்கு அவர் சிஷ்யர்... அப்பப்ப டவுட் கேக்க வருவான்... நா வீட்டுக்குள்ளயே விட மாட்டேன்... அவனும் அவன் மூஞ்சியும்...'
அவனுடைய பேச்சில் தெரிந்த அநாகரீகத்தை அங்கிருந்த பலரும் விரும்பவில்லையென்றாலும் எதற்கு வம்பு என்று மவுனமாக அமர்ந்திருந்தார்கள்..
வாசன் வாசலைப் பார்த்தான்... முருகன் சாலையை கடந்து சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறுவது தெரிந்தது... வசதியாத்தான் இருக்கான் போல என்று நினைத்தவாறு தன் கையிலிருந்ததை தொடர்ந்து வாசித்தான்..
'A candidate who claims to belong to Scheduled Caste by virtue of reconversion should give full details regarding date of reconversion and whether the candidate on such reconversion is accepted by members of the particular community of the locality where he/she resides as belonging to the particular community.. என்ன அக்கிரமம் பாருங்கடா...'
'ஏன் இதுல என்ன அக்கிரமம்?' என்றான் மூர்த்தி கோபத்துடன்... 'காசு குடுத்தா மதத்த மாத்திக்கறது... அப்புறம் கிடைச்சிக்கிட்டிருக்கற கன்செஷன் கிடைக்காதேன்னதும் மறுபடியும் இருந்த இடத்துக்கே வந்துட்டேங்கறது.. .இதென்னா சட்டையா? போடறதும் கழட்டறதும்... இவன் மறுபடியும் இந்துவாய்ட்டேன்னு சொன்னா போறுமா? கூட இருக்கறவங்க ஏத்துக்க வேணாமா?'
வாசனையும் மூர்த்தியையும் மாறி மாறி பார்த்தது நண்பர்கள் குழு... 'டேய் என்னங்கடா நீங்க சம்பந்தமேயில்லாத விஷயத்துக்காக அடிச்சிக்கறீங்க? அவந்தான் எழுந்து போய்ட்டானே.... நம்ம விஷயத்த படிங்கடா...' என்றான் அவர்களுள் ஒருவன்..
வாசனுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது... நுழைவுத் தேர்வில் அவனை விடவும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதிலிருந்தே கடுகடுவென்று இருந்த மூர்த்தியுடன் வாதத்தை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவன் அடுத்த நியதியை வாசித்தான்..
'ST/SC/MBC & DNC/BC candidates are eligible for selection under Open Competition in addition to the reservations made for them.'
'அப்படிப் போடு' என்றான் மூர்த்தி உரக்க... 'இது நம்மள மாதிரி ஆளுங்களோட காலம்டா... மேல் சாதிக்கார பயலுங்களுக்குத்தான் அப்பன் ஆத்தா சேத்து வச்ச துட்டு இருக்குல்லே... குடுத்து படிக்கட்டுமே... என்ன நா சொல்றது?' நண்பர்கள் குழுவும் புன்னகையுடன் ஆமோதித்தது...
மூர்த்தியின் இந்த கருத்திலும் உடன்பாடில்லாவிடினும் வாசன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாசிக்கலானான்...
தொடரும்...
No comments:
Post a Comment