'என்னடி சொல்றே? இதென்ன ஸ்கூலா மொபைல புடுங்கிக்கிட்டு பேரண்ட்ச வர சொல்றதுக்கு?'
'ஆமாம்மா' என்றாள் ஜோதிகா அழுகையினூடே 'எனக்கு அந்த காலேஜுக்கு போறதுக்கே புடிக்கலம்மா....'
லதாவுக்கு சிரிப்பு வந்தது. 'ச்சீ... இதுக்கா அழுவறே... நா மன்னிப்பு லெட்டர் எழுதி தரேண்டி... அப்படியும் மொபைல குடுக்க மாட்டேன்னு சொன்னா வர்ற சனிக்கிழமை நானே வந்து ஒங்க பிரின்சிக்கிட்ட பேசறேன்.... அதுக்கெதுக்கு காலேஜுக்கு போமாட்டேங்கறே?'
ஜோதிகா முகத்தைத் துடைத்துக்கொண்டு தன் தாயைப் பார்த்தாள். இவங்கக்கிட்ட காலேஜ்ல நடந்ததா சொல்லணுமா, வேணாமா? ஃபர்ஸ்ட டெர்ம் ஃபீச கட்டிட்டு திடீர்னு இந்த காலேஜ் வேணான்னு சொன்னா அம்மா என்ன சொல்றாங்களோ ஆனா அப்பா நிச்சயம் வயலண்டா ரியாக்ட் பண்ணுவாங்க... வேணாம்... நமக்குள்ளவே வச்சுக்குவம்.... அதான் பரத் நல்லா திருப்பிக் குடுத்தானே....
அன்று காலை வகுப்பு பிரதிநிதி தேர்தலில் அவள் வைஸ் ரெப்பாக தெரிவு செய்யப்பட்டதுமே வகுப்பிலிருந்த ஒரு மாணவன் அடித்த கமெண்ட்டில் நொந்துப்போனாள் ஜோதிகா. ஆனால் வந்தனா உடனே தலையிட்டு அவனை கடிந்துக்கொண்டதும் பரத் உடனே முன்வந்து அவன் சார்பில் மன்னிப்பு கேட்டதும் அவளை ஒருவிதத்தில் சமாதானமடையச் செய்தன.
வந்தனா மேடம் அளித்த படிவங்களை நிரப்பி அவரிடமே சமர்ப்பித்தாள்.
அவளுடைய படிவத்தை மேலோட்டமாக படித்த வந்தனா அவளை நோக்கி புன்னகைத்தாள். 'You have a beautiful handwriting... I think you would be good in studies too.'
ஜோதிகா வெட்கத்துடன், 'தாங்க்ஸ் மேம்..' என்றாள்.
மொத்த வகுப்பும் ஒருவித பொறாமையுடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் மெள்ள தன் இருக்கைக்கு திரும்பினாள்.
'One Second Jothika...'
ஜோதிகா திரும்பிப் பார்த்தாள். 'Yes Mam?'
வந்தனா அவளுடைய படிவத்தையும் சற்று முன் பரத் சமர்ப்பித்திருந்த படிவத்தையும் எடுத்துக்கொண்டு, 'Both of you come with me. I will introduce you to our HOD.' என்றவாறு வாசலை நோக்கி நடக்க பரத்தும் அவரைப் பின் தொடர்ந்தான். சற்றே தயங்கி நின்ற ஜோதிகா அவர்களை தொடர்ந்து அதே தளத்தின் கோடியில் இருந்த அறையை நோக்கி நடந்தாள்.
எச் ஓ டி யின் அறையில் வேறு எவரும் இல்லை என்பதை கண்டுக்கொண்ட வந்தனா நுழைய பரத்தும் ஜோதிகாவும் தயங்கி வெளியில் நின்றனர்.
பரத் தயக்கத்துடன் ஜோதிகாவைப் பார்த்தான். 'ரொம்ப நெர்வசா இருக்கீங்க போலருக்கு?'
'ஆமாங்க.... வீட்ல என்ன சொல்வாங்களோன்னுதான் பயமாருக்கு..'
பரத் புன்னகைத்தான். 'வீட்லயா? ஏன்? அப்பா டெரறா?'
ஜோதிகா மறுப்பதற்குள் வந்தனா எச்.ஓ.டியின் காபின் வாசலில் நின்று அழைப்பதைப் பார்த்தாள். பரத்தை தொடர்ந்து அவளும் காபினுக்குள் நுழைய அறையின் நடுநாயகமாக அமர்ந்திருந்த எச்.ஓ.டி. தன்னைப் பார்த்த பார்வையிலேயே நொந்துப் போனாள். 'இந்தாளுக்கு நம்மள புடிக்கலை.'
'I am Bharath' என்றவாறு பரத் நீட்டிய கையை பொருட்படுத்தாமல் எச்.ஓ.டி. வந்தனாவைப் பார்த்தார்.
'இந்த பொண்ணு கோட்டாவுல வந்தது போலருக்கே... வைஸ் ரெப்புக்கு ஒங்களுக்கு வேற ஆள் கெடைக்கலையா மேடம்?'
எச்.ஓ.டியின் குரலில் இருந்த நையாண்டி அவளை மட்டுமல்லாமல் வந்தனாவையே துணுக்குற வைத்ததை ஜோதிகாவால் உணர முடிந்தது.
அதுவரை பார்த்திராத பரத்தின் மறு பக்கத்தையும் அவளால் பார்க்க முடிந்தது.
'என்ன சார் இண்டீசண்டா பேசறீங்க? கோட்டாவுல வந்தா? What do you mean by that?'
எச்.ஓ.டி அலட்சியத்துடன் அவனைப் பார்த்தார். 'என்ன தம்பி, நாக்கு நீளுது... ஜாக்கிரதை, ஒட்ட அறுத்துருவேன்... ஒங்கப்பா என்ன பண்றார்? கலெக்டரா? இந்த துள்ளு துள்றீங்க?'
பரத்தின் கோபம் அவனுடைய அடுத்த பதிலில் தெரிந்தது. 'அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம் சார்... இருந்தாலும் சொல்றேன். அவர் பேர் ராஜசேகர்.... நம்ம யூனிவர்சிட்டி வைஸ் சான்சலரோட க்ளாஸ்மேட்... போறுமா?'
எச்.ஓ.டியின் பார்வையில் கலக்கம் தெரிந்தது. 'எந்த ராஜசேகர்? CDMல ஹெட்டா இருக்காரே அவரா?'
'வைஸ் ஹெட்...'
எச்.ஓ.டி. எழுந்து வந்து பரத்தை அணைத்துக்கொண்டார். 'சாரி தம்பி... ஒங்கப்பாவ பத்தி கேள்வி பட்டுருக்கேன்... ரொம்ப நல்ல மனுஷன்... அறிவுஜீவி... நீங்க போங்க... ஆல் தி பெஸ்ட்'
பரத் அவருடைய பிடியிலிருந்து விலகி வாசலை நோக்கி நடந்தான் கோபம் தணியாமல்... ஜோதிகா தயக்கத்துடன் அவனைப் பிந்தொடர.. 'ஏய் நில்லு...' என்றார் எச்.ஓ.டி.
பரத் வாசலில் நின்று திரும்பி பார்த்தான்.
'நீங்க போங்க தம்பி....'
பரத் வேறு வழியின்றி வந்தனாவையும் ஜோதிகாவையும் ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினான்...
'சார் என்ன இருந்தாலும் நீங்க...' என்று துவக்கிய வந்தனாவை இடைமறித்த எச்.ஓ.டி. ஜோதிகாவை பார்த்தார். 'ஏய்... நீ எந்த கோட்டாவுல வந்துருக்கே... எஸ்.டியா எம்.பி.சியா?'
ஜோதிகாவுக்கு கோபத்தில் உதடுகள் துடித்தன. என்னை ஆணவம் இவனுக்கு? ராஸ்க்கல்... அப்பா சொன்னது எவ்வளவு சரி? நாம ஒப்பன் கேட்டகரியில ஃபீஸ் கட்டி வந்துமே இவன் இப்படி கேக்கறான்னா நாம எம்பிசி கோட்டாவுல வந்திருந்தா என்னாவறது? இருந்தாலும் நாம இன்சல்ட்டாய்ட்டோம்னு காட்டிக்கக் கூடாது. பொங்கி வந்த அழுகையை அடக்கினாள். எச்.ஓ.டியை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்த்தாள்.
'ரெண்டுலயும் இல்லை... ஓப்பன் கேட்டகரி..' என்றாள்.
வந்தனாவுக்கு சிரிப்பு வந்தது. நல்லா குடுத்தேம்மா என்று நினைத்துக்கொண்டாள். 'பொண்ணு நாம நெனச்சா மாதிரி பயந்தாங்கொள்ளி இல்லை... வேணும் இந்தாளுக்கு.. கருப்பு தோலாருந்தாவே ஒரு எளக்காரம்.'
எச்.ஓ.டி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. இருப்பினும் தன்னை நோக்கிய அவருடைய பார்வையில் சந்தேகம் தெரிந்ததை பார்த்தாள். தன்னுடைய பேட்ஜில் இருந்த அட்மிஷன் எண்ணை சொன்னாள்.
'எனக்கெதுக்கு ஒன் நம்பர்?'
'என் அப்ளிகேஷன ஒங்களுக்கு வெரிஃபை பண்ணணும் தோனிச்சின்னா... அதுக்குத்தான்.'
எரித்துவிடுவதுபோல் பார்த்த எச்.ஓ.டியின் பார்வையில் தயங்காமல் சந்தித்தாள் ஜோதிகா.
'ஏய் என்ன நக்கலா? தொலைச்சிருவேன்... ஒன் க்ளாசுக்கு போ...'
எச்.ஓ.டியின் குரலில் இருந்த மிரட்டல் ஜோதிகா உண்மையிலேயே பாதித்தது. விட்டால் போதும் என்று தலையை குனிந்தவாறு வெளியேறியவள் கொஞ்சம் ஓவரா போய்ட்டமோ என்று நினைத்தாள்...
'என்ன ஜோதிகா வேற எதுவும் இன்சல்ட்டிங்கா சொன்னாரா?'
பரத்தின் மிருதுவான குரல் அவளை நிறுத்தியது. திடுக்கிட்டு நிமிர்ந்தாள். சட்டென்று பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இல்லையென்று தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் வகுப்பறைக்கு விரைந்தாள்...
******
'இப்ப புரியுதா அப்பா எதுக்கு நம்ம ஜாதி பேர சர்டிப்பிகேட்ல போடலைன்னு?'
லதா எரிச்சலுடன் தன் கணவரைப் பார்த்தார். 'என்னங்க நீங்க, இப்ப அதுவா முக்கியம்? என்ன தைரியம் இருந்தா அந்த எச்.ஓ.டி இவள இப்படி கேவலமா ட்ரீட் பண்ணியிருப்பான். அவனெ சும்மா விடக்கூடாதுங்க.'
ராம்குமார் சிரித்தார். 'பின்னே? போயி சண்டை போடலாங்கறியா? போடி பைத்தியக்காரி.'
'என்ன சொல்ல வரீங்க? இப்படியே விட்டுரலாம்னா?' என்றாள் லதா கோபத்துடன்.
'அப்பா சொல்றது சரிதாம்மா..' என்றாள் ஜோதிகா முகத்தை துடைத்தவாறு... 'நீங்களோ அப்பாவோ வந்து கேக்கறதுனால பிரச்சினை பெரிசாத்தான் ஆவுமே ஒழிய குறையாது... அந்தாள பாத்தாலே ஒரு வில்லன் மாதிரி இருக்கான்... ஏதோ தைரியத்துல அந்தாள் மொகத்த பாத்து பேசிட்டு வந்துட்டேன்... அதான் பயமாருக்கு...'
லதா தன் கணவனைப் பார்த்தாள். 'பாருங்க, மொதல் நாளே எப்படி பயப்படறான்னு.. பேசாம வேற காலேஜ்ல சேத்துருவோம்..சுமாரான காலேஜாருந்தாக் கூட பரவால்லை.'
ராம்குமார் மீண்டும் சிரித்தார். 'ஏய் லதா.. ஒவரா ரியாக்ட் பண்ணாதே... இந்த மாதிரி நிறைய சிக்கல்லாம் வரும்... ஒவ்வொன்னுக்கும் வேற காலேஜ் பாக்க முடியுமா? பேசாம அவளெ அவ போக்குல விடு... அவளே மேனேஜ் பண்ணிக்குவா...மொபைலுக்கு மாத்திரம் ஒரு லெட்டர் எழுதிக் குடு...' என்றவர் தன் மகளை நெருங்கி அவளுடைய தலையை வருடிக்கொடுத்தார். 'இதெல்லாம் சகஜம் ஜோதி.... நாளைக்கி அந்தாள பாத்தா ஒன்னும் நடக்காத மாதிரி குட்மார்னிங் சொல்லிரு... மனசுல வச்சிக்கிட்டு டென்ஷனாகாத... எல்லாம் போகப் போக சரியாயிரும்...என்ன சொல்றே?'
'யெஸ்ப்பா...' என்றாள் ஜோதிகா மெதுவாக...
'சரி... அப்படியே கொஞ்சம் படுத்துக்கிட்டுரு...' என்ற ராம்குமார் தன் மனைவியைப் பார்த்தார். 'அவளெ டிஸ்டர்ப் பண்ணாம போய் கிச்சன் வேலைய பார்...'
ஆனாலும் லதா வெளியேறாமல் தன் அருகில் அமர்ந்திருந்த மகளை சாய்த்து தன் மடியில் படுக்க வைத்து தடவிக்கொடுத்தாள்... 'நீயே மானேஜ் பண்ணிக்குவியா ஜோதி?' என்றாள் மிருதுவாக... 'இல்ல அம்மா வந்து பேசட்டுமா?'
'வேணாம்மா... நானே பாத்துக்கறேன்....' என்றவாறு ஜோதிகா கண்களை மூடினாள்... ஒரத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்தவாறு...
தொடரும்...
2 comments:
எந்தா ஸாரே ஒரு வாரம் ஆச்சு.. இன்னும் அடுத்த பகுதிய காணோம். ரொம்ப ஆணி ஆய்டுச்சா என்ன
வாங்க நரசிம்மன்,
ரொம்ப ஆணி ஆய்டுச்சா என்ன//
அப்படீன்னா?
Post a Comment