அன்றைய வகுப்புகள் முடிந்து மாணவர்கள் சிறு, சிறு குழுவாக வெளியேற பரத்தும் வாசனும் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். மாணவிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு அவர்களை நெருங்கி நின்றாள்.
'நீ போ ஜோதிகா. நானும் வாசனும் கொஞ்ச நேரம் கழிச்சி வரோம்.' என்றான் பரத்.
'எதுக்கு? நீதான க்ளாஸ் முடிஞ்சதும் பிரின்சிய பாத்து பேசிட்டு போலாம்னு சொன்னே? இப்ப என்னாச்சி?'
பரத் வாசனை திரும்பிப் பார்த்தான். 'இல்ல ஜோதிகா. பரத் கம்ப்ளெய்ண்ட்லாம் குடுக்க வேணாம்னு ஃபீல் பண்றான்.' என்றான் வாசன்.
'அதான் ஏன்னு கேக்கேன். அவனெ இனியும் டிஃபெண்ட் பண்றது சரியில்லைன்னு எனக்கு தோனுது.'
பரத் பதிலளிக்காமல் பெஞ்சில் இருந்த தன்னுடைய புத்தகங்களை கைப்பையில் வைப்பதில் முனைப்பாயிருந்தான். பிறகு எழுந்து ஜோதிகாவை பார்த்தான். 'I think it is better to forget what happened in the morning. குமாருக்கு எதிரா கம்ப்ளெய்ண்ட் பண்ணா விஷயம் இன்னும் சீரியசா ஆகுமே தவிர குறையாது. அதனலதான் லஞ்ச் டைம்ல நானும் வாசனும் டேவிட்ட போயி பாத்து இதப்பத்தி பேசினோம். He also feels the same way.'
ஜோதிகாவுக்கும் அவன் சொல்ல வந்தது விளங்காமல் இல்லை. அவளுக்கும் குமாரும் அவனுடைய நண்பர்களும் நடந்துக்கொண்டவிதம் அதிர்ச்சியை அளித்தது என்னவோ உண்மைதான். ஆனால் வகுப்பில் இருந்த பலரும் குமாருக்கு எதிராக கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்க வேண்டுமென்று பரிந்துரைத்தபோது அவளுக்கு அதில் தவறில்லையென்றே தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் அவனை கல்லூரிக்குள் அனுமதித்தலிருந்தே அவனுடைய நடவடிக்கையில் ஒருவித ஆணவம் தெரிந்ததை அவள் மட்டுமல்லாமல் சக மாணவர்களும் உணர்ந்திருந்தனர். பரத் அவர்களுடைய ஆலோசனைக்கு உடனே சம்மதிக்கவில்லையென்றாலும் முதல்வரின் அறையிலிருந்து திரும்பிய குமார் அன்று முழுவதும் ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் பரத்தை சீண்டிக்கொண்டிருக்கவே அவனுக்கெதிராக புகார் அளிப்பதில் தவறில்லையென்றே நினைத்திருந்தாள்.
ஆகவேதான் பரத் இப்படியொரு முடிவெடுத்ததில் அவளுக்கு அத்தனை உடன்பாடில்லை. இருப்பினும் பரத் எடுத்த முடிவுக்கு பிறகு கல்லூரி மாணவர் தலைவன் டேவிட்டின் அறிவுரையும் ஒரு காரணம் என்பதை நினைத்து அதை மறுப்பதில் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாள்.
'பரத் சொல்றது சரிதான் ஜோதிகா. நாம கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போயி அதனால குமார காலேஜ்லருந்தே டிஸ்மிஸ் பண்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு டேவிட் சொன்னதாலதான் நாங்க இந்த டிசிஷன் எடுத்தோம். So let us not discuss this anymore.' என்றவாறு வாசன் எழுந்து வாசலை நோக்கி நடக்க பரத்தும் ஜோதிகாவும் அவனை தொடர்ந்தனர்.
**********
ஜோதிகா பேருந்திற்குள் நுழைந்து அமர்வதற்கு ஏதாவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்தாள். மாணவர்கள் இடதுபுறமும் மாணவிகள் வலதுபுறமும் அமர வேண்டும் என்பது கல்லூரியின் நியதிகளுள் ஒன்று. 'நாம படிச்ச ஸ்கூல்லக் கூட இந்த மாதிரி கண்டிஷன் எதுவும் இல்ல, இல்லடா?' என்பான் மூர்த்தி அடிக்கடி. வாசன் கண்டுக்கொள்ள மாட்டான். 'உங்கிட்ட வந்து சொன்னன் பார்.' என்று சலித்துக்கொள்வான் மூர்த்தி. இதற்காகவே கல்லூரி பேருந்தில் மூர்த்தியுடன் அமர்வதை வாசன் தவிர்த்துவிடுவான்.
மாணவிகள் அமர்ந்திருந்த பகுதியில் ஒரேயொரு இருக்கை மட்டும் இருந்தது. ஆனால் அதில் அமர்வதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள் ஜோதிகா. ப்ரியா அந்த இருக்கையில் அமர்ந்திருந்ததுதான் காரணம். ப்ரியா வேண்டுமென்றே அவளை கவனியாதுபோல் பேருந்துக்கு வெளியில் பார்வையை செலுத்தியது தன்னை தவிர்ப்பதற்காக என்றே நினைத்தாள்.
'ஏய் இங்கதான் ஒரு சீட் இருக்கே?' என்றான் மூர்த்தி உரக்க.
'ஹல்லோ...' என்று எழும்பியது ஒரு குரல் பேருந்தின் பின் இருக்கைகளிலிருந்து, 'எல்லாம் அவங்களுக்கு தெரியும். ஒன் வேலைய பாரு. காலேஜ் ரூல்ஸ் தெரியுமில்ல?'
'யார்யா அது?' என்றவாறு திரும்பினான் மூர்த்தி. கல்லூரி ஊழியர்களுள் ஒருவர். அடியாள் வடிவில்.. கல்லூரி பேருந்துகள் எல்லாவற்றிலுமே இப்படி ஒருவர் இருப்பது வழக்கம். 'பஸ்ல பசங்க பொண்ணுங்கள கலாட்டா பண்றதா எந்த கம்ப்ளெய்ண்டும் வரக்கூடாது. அது ஒங்க ட்யூட்டி.' என்பது கல்லூரி நிர்வாகியின் கட்டளை.
ஆனால் மூர்த்தி இதற்கெல்லாம் கவலைப்படமாட்டான். 'யோவ் ஒன் வேலைய பாருய்யா... நீ என்ன போலீசா?' என்றான் எரிச்சலுடன். 'ஹல்லோ நீங்க போய் ஒக்காருங்க... இவனுங்களுக்கு வேற வேலையில்லை.'
மூர்த்தியின் இந்த பதிலை விரும்பாத கல்லூரி ஊழியன் எழுந்து அவனை நோக்கி நெருங்க இடை வழியிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வாசன் எழுந்து அவனை சமாதானப் படுத்துவதைக் கவனித்த ஜோதிகா தன்னால் மேலும் எந்த பிரச்சினையும் வரவேண்டாமே என்ற நினைப்புடன் விரைந்து சென்று ப்ரியாவின் அருகில் அமர்ந்துக்கொள்ள பேருந்து புறப்பட்டது. பேருந்தில் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கைக் கூடுதலாக எந்த மாணவனோ, மாணவியோ ஏறக்கூடாது என்பதும் கல்லூரி நிர்வாகத்தின் நியதி.
பேருந்து கல்லூரி வளாகத்தைக் கடந்து விரைந்தது. ப்ரியா அப்போதும் தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்த ஜோதிகா தன் கையிலிருந்த சஞ்சிகையில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இருந்தும் மனம் அதில் செல்ல மறுக்கவே ஓரக்கண்ணால் ப்ரியாவைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளிர்த்த கண்ணீர் ஜோதிகாவை திடுக்கிட வைத்தது. 'ஏய் ப்ரியா... நீ எதையோ எங்கிட்டருந்து மறைக்கறதுக்குத்தான் என்னெ அவாய்ட் பண்றேன்னு நினைக்கேன்... சரியா?' என்றாள் சன்னமான குரலில்.
ப்ரியா வெளியில் பார்த்தவாறு பதிலளித்தாள். 'அதெல்லாம் ஒன்னுமில்லை.' ஆனால் இவகிட்ட கன்ஃபைட் பண்றதுனால உன் டென்ஷன் குறையுமேடி என்றது அவளுடைய உள்மனது. சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து அவள் விடுபடுமுன் அவள் இறங்கும் இடம் வந்தது. ஆனால் அவள் எழாமல் அமர்ந்திருக்க, 'என்னம்மா இங்க நீ எறங்கணுமே?' என்றவாறு ரியர்வ்யூ கண்ணாடியில் அவளைப் பார்த்தார்.
ப்ரியா திடுக்கிட்டு எழுந்து நின்றாள். 'நானும் ஒங்கூட எறங்கட்டுமா?' என்றாள் ஜோதிகா. 'If you don't mind.'
'சரி' என்று தலையை மட்டும் ஆட்டிய ப்ரியா கைப்பையுடன் வாசலை நோக்கி நகர ஜோதிகா எழுந்து அவளைத் தொடர்ந்து, 'என்னம்மா நீயும் இங்கவே எறங்கறயா?' என்ற ஓட்டுனரின் கேள்வியை பொருட்படுத்தாமல் ஜோதிகா பேருந்திலிருந்து இறங்கினாள்.
************
வாசனும் மூர்த்தியும் ஒரே கல்லூரி பேருந்தில் பயணம் செய்தாலும் மூர்த்தி எப்போதுமே வாசனுடன் வீட்டுக்கு திரும்பியதில்லை. தெரு முனையிலிருந்த சகாக்களுடன் ஒரு சிகரெட்டை இழுத்து அரட்டையடித்துவிட்டு வரவில்லையென்றால் அவனுக்கு உறக்கம் வராது. அன்றும் அப்படித்தான் பேருந்திலிருந்து இறங்கி நடை தூரத்திலேயே இருந்த தங்களுடைய வீட்டை நோக்கி வாசன் நடக்க மூர்த்தி தெருமுனையில் காத்திருந்த தன் சகாக்களை நோக்கி சென்றான்.
வீட்டு வாசலிலேயே நின்ற தன் தாயைக் கண்டதும், 'என்னம்மா என்ன விஷயம் ஏன் இங்க நிக்கீங்க? உங்க முகத்த பார்த்தா ஏதோ டென்ஷன்ல இருக்கா மாதிரி தெரியுது?' என்றான் வாசன்.
'எங்கடா மூர்த்தி?'
வாசன் வியப்புடன் தன் தாயைப் பார்த்தான். 'ஏன்... அவந்தான் ஃப்ரெண்ட்சோட பேசாம வரமாட்டானே?'
'இன்னைக்குமா?' என்றாள் பார்வதி. 'என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இன்னைக்கும் அவன் ஃப்ரெண்ட்சோட அரட்டையடிக்க நின்னுருப்பான்.'
'ஏன்...இன்னைக்கி என்ன?'
பார்வதி எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தாள். 'என்னடா தெரியாத மாதிரி கேக்கே?'
வாசன் குழப்பத்துடன் திரும்பி தெருமுனையைப் பார்த்தான். அரட்டைக் கச்சேரி கனஜோராக துவங்கியிருந்தது அங்கிருந்தே தெரிந்தது. திரும்பி தன் தாயைப் பார்த்தான். 'எனக்கு வெளங்கலை. இன்னைக்கி என்னம்மா ஸ்பெஷல்?'
'உள்ள வா சொல்றேன்.' என்றவாறு பார்வதி வீட்டுக்குள் திரும்ப மீண்டும் ஒருமுறை தெருமுனையைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் வாசன்.
'இப்ப சொல்லுங்க... என்ன விஷயம்?'
'உண்மையிலயே ஒனக்கு தெரியாதா? இல்ல எங்கிட்டருந்து மறைக்கறியா?'
'இல்லம்மா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னே எனக்கு தெரியல....'
'மூர்த்தி காலேஜ்லருந்து ஃபோன் வந்துது... அவனெ ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்களாம். அப்பாவே நேரா வந்து மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி தந்தாத்தான் மறுபடியும் சேத்துப்பாங்களாம்.'
வாசன் அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தான். காலையில் கோபத்துடன் மூர்த்தி தன் கல்லூரியை நோக்கி சென்றது நினைவு வந்தது. செய்றதையும் செஞ்சிட்டு கல்லுளிமங்கன் மாதிரி சைலண்டா இருந்துருக்கானே. இந்த லட்சணத்துல பஸ்சுல வேற தகராறு செஞ்சான்? நாம மட்டும் இல்லன்னா அங்கயும் பெரிய தகராறாயிருக்கும்.
'இப்ப சொல்லு... ஒனக்கு தெரியுமா தெரியாதா? அப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொல்லப் போறேன்.' என்றாள் பார்வதி கண்டிப்புடன்.
'இல்லம்மா... நிச்சயமா நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும். என்னெ நம்புங்க, ப்ளீஸ்.''
அப்போதும் பார்வதி நம்பாமல் வாசனைப் பார்த்தாள். பிறகு, 'சரி நம்பறேன். அவன் வர்றதுக்குள்ள போய் ஒங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணு.'
வாசன் தயங்கினான். 'அவன் வந்துறட்டுமேம்மா... அவன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு சொல்வமே...'
'டேய். நான் சொல்றத செய்யி. இந்த வாரக் கடைசியில ஒருவாரம் இருக்கறா மாதிரி வரச்சொல்லு. அவன் வந்தா ஃபோன் பண்ண வுடமாட்டான்... போ சீக்கிரம்.'
வாசன் வேறு வழியில்லாமல் படுக்கையறையிலிருந்த தொலைபேசியை நோக்கி நகர்ந்தான்.
தொடரும்...