2.11.07

நாளை நமதே 29

கல்லூரி நிர்வாகி நாகராஜுலு தன் எதிரில் நின்றிருந்த மாணவர் தலைவர் டேவிட்டையும் அவனுடன் நின்றிருந்த ஐந்தாறு வகுப்பு பிரதிநிதிகளையும் ஏளனமாக பார்த்தார். அவருடன் அவருடைய மனைவி அதாவது கல்லூரி கரஸ்பாண்டண்ட் வெங்கடேஸ்வரலுவின் மூத்த புதல்வி ரோகினி, அவளுடைய சகோதரி ரோஜா மற்றும் கல்லூரியின் துணை நிர்வாகியான அவளுடைய கணவர் பிரசாத் ஆகியோரும் மற்றும் கல்லூரி முதல்வர். அவர்களுக்கு பின்னால் கல்லூரியின் அடியாள் படைத் தலைவன், சில இலாக்கா தலைவர்கள் என....

'என்ன தம்பிகளா நிறைய தமிழ் சினிமா பாப்பீங்களோ?' என்றார் கல்லூரி நிர்வாகி நாகராஜுலு.

'என்ன சார் கிண்டலா?' என்றான் குமார் கோபமாக.

நிர்வாகி அவனை எரித்து விடுவது போலப் பார்த்தார். 'நீதானே ஒரு மாசத்துக்கு முன்னால சஸ்பெண்ட் ஆன பையன்? ஃபர்ஸ்ட் இயர்?'

'ஆமா சார். அதுக்கென்ன இப்போ?'

நிர்வாகி டேவிட்டைப் பார்த்தார். 'என்ன டேவிட் நீ இந்த விசயத்துக்கெல்லாம் இந்த மாதிரி பசங்க கூட சேந்துக்கிட்டு டைம வேஸ்ட் பண்ணலாமா? இந்த மாதிரி பசங்களுக்கு படிக்கறதே ஒரு பொழுதுபோக்கு. ஆனா நீ அப்படியில்லையே?'

டேவிட் சங்கடத்தில் நெளிந்தான். அவர் சொல்வதும் சரிதான். யூனிஃபார்ம்னு வந்துட்டா அவனுக்கும் நிம்மதிதான். இருக்கறதே அஞ்சாறு ட்ரெஸ். அத வச்சிக்கிட்டு டெய்லி ஒன்னுன்னு மாத்திக்கிட்டு வர்றதுலருக்கற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். 'தொரைக்கு டெய்லி ஒரு ட்ரெஸ் கேக்குதோ? ஒன் துணிய தொவைக்கறதுக்கே தனியா ரெண்டு கிலோ ரின் பவுடன் வாங்கணும் போலருக்கே?' நேத்து கூட அப்பா கேட்ட கேள்வி.

ஓரக்கண்ணால் தன் பக்கத்தில் நின்றிருந்த குமாரைப் பார்த்தான். பாக்கப்போனா இவன் க்ளாஸ் ரெப் கூட இல்லை. பணத் திமிர் பசங்கள கூட்டு சேத்துக்கிட்டு கலாட்டா பண்றான். போறாததுக்கு என் கூட பிரின்சி ரூமுக்கு நீ வந்துதான் ஆகணும்னு புடிவாதம் அவனையும் புடிச்சி இழுத்துக்கிட்டு வந்து இந்தாள் முன்னால கேவலப்படறது நமக்கு தேவைதானா... இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா வேற வெனையே வேணாம்.

'காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம எதுக்குடா இந்த லீடர் வேலை? இந்த ஒரு வருசத்தோட இந்த மாதிரி வேலையையெல்லாம் ஏறக்கட்டி வச்சிட்டு ஒழுங்கா படிச்சி டிஸ்டிங்ஷன் வாங்கப் பாரு. ஒன்னைய நம்பித்தான் குடும்பம் இருக்குங்கறத மறந்துராத.' அவன் கல்லூரி மாணவர் தலைவராக தேர்வு செய்த அன்று வீட்டில் அவனுக்கு கிடைத்த அர்ச்சனை.

'சார்.. அப்படியில்லை... இப்படி ஒரு டிசிஷன் எடுக்கறதுக்கு முன்னால எங்களோட கலந்து பேசியிருக்கலாம். என்ன இருந்தாலும் எங்கள இப்படி ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ட்ரீட் பண்றது.....'

'டேவிட் எதுக்கு இவர்கிட்ட போயி கெஞ்சறீங்க? நா பேசறேன்.' என்று இடைமறித்த குமார் நிர்வாகியை முறைத்தான். 'இங்க பாருங்க சார். இது எஞ்சினியரீங் காலேஜ். எலிமெண்டரி ஸ்கூல் இல்லை. நீங்க மட்டும் இந்த டிசிஷன ரிவோக் பண்ணலைன்னா நாளையிலருந்து ஸ்ட்ரைக் பண்ணுவோம். ஒங்களால ஆனத பாத்துக்குங்க. டேய் வாங்கடா.'

அவனை தடுத்து நிறுத்த முயன்ற டேவிட்டின் கைகளை உதறிவிட்டு குமார் அறையிலிருந்து வெளியேற அவனுடைய சகாக்கள் நிர்வாகிக்கு எதிரான கோஷங்களுடன் அவன் பின்னே சென்றனர்.

டேவிட் தயக்கத்துடன் நிர்வாகியைப் பார்த்தான். 'அவன் சொன்னத சீரியசா எடுத்துக்கிறாதீங்க சார். நா அவன் கிட்ட பேசறேன். இத இத்தோட விட்டுருங்க. நா எல்லா க்ளாஸ் ரெப்ஸ்ங்களோடயும் பேசிட்டு ஒங்களுக்கு சொல்றேன்.'

நிர்வாகி சிரித்தார். 'டேவிட் இதுல ஒனக்கு சம்மதமில்லேன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் வேற வழியில்லாம இவன் சொல்லி நீ இங்க வந்துருக்கே. நீ எந்த ரெப்புக்கிட்டயும் பேசி ஒன் டைம வேஸ்ட் பண்ண வேணாம். இந்த டிசிஷன் எடுத்தது கரஸ்பாண்டண்ட் மட்டுமில்லை. நம்ம காலேஜோட எண்டயர் போர்டும் சேந்து எடுத்தது. நம்ம காலேஜ் மட்டுமில்லாம நம்ம க்ரூப் காலேஜஸ் எல்லாத்துலயும் இண்ட்ரொட்யூஸ் பண்ற ஐடியா. யூனிவர்சிட்டி வி.சி கிட்டயும் பேசியாச்சு. அதனால இந்த டிசிஷன ரிவோக் பண்ணணுங்கற பேச்சுக்கே இடமில்லை. அதனால டோண்ட் வேஸ்ட் யுவர் டைம். கோ டு யுவர் க்ளாஸ்.'

டேவிட்டுக்கு அவர் பேசிய தோரனை அடியோடு பிடிக்கவில்லையென்றாலும் தன்னுடைய குடும்ப சூழலை மனதில் கொண்டு மறுபேச்சு பேசாமல் வாசலை நோக்கி நடந்தான்.

அவன் வாசலை கடந்ததும் நாகராஜுலு தன்னுடன் அமர்ந்திருந்த குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களை நோக்கி கண்ணசைத்தார். அடுத்த நொடியே மறுபேச்சில்லாமல் அனைவரும் எழுந்து வெளியேறினர். கதவு அடைக்கப்படும்வரை காத்திருந்த நாகராஜுலு தன் சகலையை பார்த்தார்.

'நாம இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு எடுக்கலன்னா ராத்திரி மாமாகிட்ட பதில் சொல்ல முடியாது.'

பிரசாத் தன் மனைவியைப் பார்த்தான். தன்னுடைய அனுமதி இல்லாமல் எதுவும் பேசக்கூடாது என்பது ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்.

'என்ன சகலை.. எப்பவும் போல பெர்மிஷன் வேணுமா?'

'அதெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க சொல்றது சரிதான். ஆனா எப்படி இத முடிக்கறதுன்னுதான் யோசிக்கறேன். அந்த பையன் கொஞ்சம் வசதியான எடம்னு கேள்விபட்டுருக்கேன். போனதடவை அந்த பையனை சஸ்பெண்ட் பண்ணப்பவே எங்கெங்க இருந்தோ ஃபோன் வந்துதே...'

உண்மைதான். குமாருடைய தந்தையே நேரில் வந்து தன்னுடைய மகனுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டாலும் அவருடைய மனைவி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி லோக்கல் எம்.எல்.ஏவை விட்டு நேரடியாக வெங்கடேஸ்வரலுவுக்கே ஃபோன் செய்து தன் மகனின் சஸ்பென்ஷனை ரத்து செய்யுமாறு கேட்க வைத்தாள். கல்லூரி நிர்வாக குழுவில் இருந்த 'அய்யா' கட்சியை சேர்ந்தவர் என்பதால் வெங்கடேஸ்வரலு, 'எதுக்குய்யா என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அந்த பையனை சஸ்பெண்ட் செஞ்சீங்க?' என்று தன்னுடைய மருமக்கள் மீது எரிந்து விழ அடுத்த நாளே சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டி வந்தது.

'பிரசாத் சொல்றது உண்மைதான். அப்பா அன்னைக்கி பயங்கர கடுப்பாய்ட்டாரில்ல? அதனால இதுல எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னால அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்றதுதான் நல்லதுன்னு நா நெனக்கேன்.' என்றாள் ரோஜா.

அந்த யோசனையை நிராகரிக்க யாருக்கும் தைரியமில்லை. ஆனால் அன்று இரவு உணவின்போதுதான் மாமாவுடன் ஆலோசிக்க முடியும் என்று 'எதுக்கும் நம்ம முருகுக்கிட்ட அந்த பையன் மேல ஒரு கண் வைக்கறதுக்கு சொல்லி வைப்போம். என்ன சொல்றீங்க?' என்றார்.

அனைவரும் ஒத்துக்கொள்ள நாகராஜுலு இண்டர்காமை எடுத்து, 'முருகேசன உள்ள வரச்சொல்லுங்க.' என்றார்.

அடுத்த சில நொடிகளில் செக்யூரிட்டிகளின் தலைவன் முருகு என்கிற முருகேசன் உள்ளே நுழைய அவன் மீது எரிந்து விழுந்தார். 'ஏன்யா இந்த பசங்கள்லாம் கோஷம் போட்டுக்கிட்டு காலேஜ் காம்பஸ்குள்ள சுத்தறதுக்கு நீங்க எப்படிய்யா பெர்மிட் பண்ணீங்க. ஏறக்குறைய அம்பது பேர வச்சிருக்கறது இதுக்குத்தானா? ஒங்களுக்கெல்லாம் வெக்கமாயில்ல? போய்யா போய் ஒன் ஆளுங்கக்கிட்ட சொல்லி வை. இதான் லாஸ்ட் வார்னிங்.

இனிமே இந்த மாதிரி ஏதாச்சும் நடந்துது கூண்டோட எல்லாத்தையும் வீட்டுக்கனுப்பிச்சிருவேன். என்ன வெளங்குதா?'

முருகேசன் பணிவுடன், 'வெளங்குது சார்.' என்றான். பிறகு தொடர்ந்து, 'அந்த பையன ரெண்டு தட்டு தட்டி வைக்கட்டுங்களா?' என்றான் குரலை இறக்கி.

நாகராஜுலு அவனை எரித்து விடுவது போல் பார்த்தார். 'ஏன்யா நா ஒன்கிட்ட அட்வைஸ் கேட்டனா? அதிகப்பிரசங்கித்தனமா எதையாவது செஞ்சி வைக்காத. அப்புறம் கரஸ்பாண்டண்ட் கிட்ட பேச்சு வாங்க முடியாது. போய் நா சொன்ன வேலைய மட்டும் பாரு, போ.'

'சரி சார்.' என்று பணிவுடன் கூறிவிட்டு சென்றாலும் தன்னை இப்படியொரு சிக்கலில் சிக்கவைத்த குமாரை சும்மா விடக்கூடாது என்ற முடிவுடன் வெளியேறினான் முருகேசன்.

'என்ன சார் ஐயா ஏதாச்சும் சூடா சொல்லிட்டாங்களா...?' என்று சூழ்ந்துக்கொண்ட சகாக்களைப் பார்த்தான். தனக்கு கிடைத்த ஏச்சையும் பேச்சையும் இவர்கள் மீது காட்டினால் என்ன என்று எழுந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்தான். அதனால் மோசமான விளைவுகளே ஏற்படும் என்பது அவனுக்கு தெரியும். இருப்பினும் இவர்களை சற்று தட்டி வைப்பதுதான் நல்லது என்று நினைத்தான்.

'பின்னெ என்ன தட்டி குடுப்பாரா? நாமல்லாம் இங்க வந்து சேர்ந்து ரெண்டு வருசம் ஆவுதில்ல? இதுக்கு முன்னால இப்படி ஏதாச்சும் நடந்துருக்கா? அந்த பொடிப்பய இன்னைக்கி நம்ம எல்லார் மூஞ்சிலயும் கரி பூசிட்டானில்ல? நீங்களும் பாத்துக்கிட்டுத்தானய்ய நின்னீங்க? நீங்க மட்டும் அசால்ட்டா இல்லாம இருந்துருந்தா இப்படி நடந்துருக்குமா? ஒழுங்கா டூட்டி பாக்கலே எல்லாரையும் கூண்டோட வேலைய வுட்ட தூக்கிருவேங்கார். என்ன சரியா?'

'சார் அந்த பையன் கொஞ்சம் வசதியான பையன்னு கேள்வி. அத்தோட நம்ம ---------- எம்.எல்.ஏ கனெக்ஷனும் இருக்கு போலருக்கு. அதனால....' என்றது ஒரு குரல் குழுவிலிருந்து.

அவனைப் பார்த்து முறைத்தார் முருகு. 'அதுக்காக? அவன் என்ன பண்ணாலும் பாத்துக்கிட்டு இருப்பீங்களா? போங்கய்யா... அவனவன் லொக்கேஷனுக்கு போங்க. மறுபடியும் இப்படியொரு பிரச்சினை வராம பாத்துக்குங்க. நம்ம காம்பஸுக்குள்ள எந்த பையனும், பொண்ணும் பிரச்சினை பண்ணக்கூடாது. அது ஒங்க பொறுப்பு. சொல்லிட்டேன். போங்க...'

மறுபேச்சு பேசாமல் கூட்டம் கலைந்து செல்ல முருகேசன் தன் அறையை நோக்கி நடந்தார் மனதுக்குள் எழுந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றலாம் என்ற எண்ணத்துடன். அந்த பையன இப்படியே விட்டா சரிவராது. தட்டி வைக்கணும். ஆனா தப்பு நம்ம மேல விழுந்துராம பாத்துக்கணும்.

தொடரும்...

2 comments:

Anonymous said...

Late'a vanthalum semma viruviruppa vanthu irukku... enna sir diwali sirapithala?? double damaka lam koduthu asathureengalaey sir..

TBR. JOSPEH said...

வாங்க நரசிம்மன்,

enna sir diwali sirapithala?? double damaka lam koduthu asathureengalaey //

போன வாரம் போட முடியலையே. அதான் ரெண்டு:-)