24.12.07

நாளை நமதே - 34

ஜோதிகாவும் ப்ரியாவும் எதிர் எதிர் திசையில் செல்ல வேண்டியவர்கள் என்பதாலும் ஜோதிகா எப்படியாவது தன்னுடைய தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டை சென்றடையவேண்டும் என்று கருதியதாலும், 'சரிடி ப்ரியா, மண்டே காலேஜ்ல வச்சி பாக்கலாம்.' என்றாள் விடைபெறும் நோக்குடன்.

ஆனால் ப்ரியா விடவில்லை. 'ஏய், இரு. நானும் ஒங்க வீடு இருக்கற டைரக்ஷன்லதான் போணும்.' என்றாள்.

'ஏன்... ஒங்க வீடு ஆப்போசிட் டைரக்ஷன்லதான இருக்கு?' என்றாள் ஜோதிகா வியப்புடன்.

'இல்லடி... நீ போற டைரக்ஷன்லதான்.'

'என்னடி சொல்றே?'

ப்ரியா அவளுடைய முகத்தை தவிர்த்து எதிரில் ஆட்டோ ஸ்டாண்டில் வரிசையாக நின்ற ஆட்டோக்களில் ஒன்றை கையசைத்து அழைத்தாள். அதிசயமாக என்ன, ஏது என்று கேட்காமல் ஆட்டோ வட்டமடித்து அவர்கள் முன் வந்து நின்றது. 'வா சொல்றேன்.' என்று ஜோதிகாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.

'எங்கம்மா போகணும்?' என்றார் ஆட்டோ டிரைவர்.

'சொல்றேன் இப்படியே போங்க..' என்றாள் ப்ரியா.

'இல்லம்மா.... எங்கன்னு சொன்னாதான எவ்வளவு குடுப்பீங்கன்னு....'

'நீங்க கேக்கறத குடுக்கறேன், போறுமா?' என்றாள் ப்ரியா எரிச்சலுடன், 'வண்டிய எடுங்க....'

வாகனம் நகரும்வரை காத்திருந்த ஜோதிகா, 'நா சொல்லட்டுமா... இப்ப நீ ஒங்க வீட்ல இல்லை... சரியா?' என்றாள்.

'ஆமா.....'

'நா அன்னைக்கி அவ்வளவு தூரம் சொல்லியும்......'

ப்ரியா ஜோதிகாவின் கரங்களைப் பற்றினாள். 'அந்த அங்கிள் இப்ப வீட்டுக்கே வந்துட்டார்டி.... இதுக்கப்புறம் நா எப்படி....?'

ஜோதிகா திடுக்கிட்டு தன் தோழியைப் பார்த்தாள்.... சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தபடி அமர்ந்திருந்த ப்ரியாவின் கண்கள் கலங்கி இருப்பதை காண முடிந்தது. அவளாக மேலே தொடரும் வரை காத்திருப்பது என தீர்மானித்தாள். இந்த மனநிலையில் அவளை விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை அவளுக்கு. இருவரும் சிறிது நேரம் மவுனமாக சாலையை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். இதற்கு மேலும் ஆட்டோவில் அமர்ந்து தங்களுடைய பர்சனல் விஷயங்களை பேசுவது அத்தனை உசிதமாக படவில்லை அவளுக்கு.

'இறங்கி எங்கயாவது ஒக்காந்து பேசலாமா ப்ரியா?'

ப்ரியாவும் சரியென்று தலையை அசைத்தாள். ஆட்டோ டிரைவருக்கு புரிந்தது. வேகத்தை குறைத்து சாலையின் இடதுபுறம் ஒதுங்கி நின்றார். அவர்கள் கடந்திருந்த தூரம் சிறிதளவேதான் என்றாலும் முப்பது ரூபாயை எடுத்து நீட்டினாள் ப்ரியா. 'வேணாம்மா.... ஒங்க கண்ணுல கண்ணீர பாத்ததுக்கப்புறம் ஒங்கக் கிட்ட காசு வாங்க மனசு வரல.... வேணும்னா பக்கத்துலருக்கற பார்க்ல ட்ராப் பண்ணிட்டு வெய்ட் பண்றேன்... சாவகாசமா பேசிட்டு வாங்க... எங்க கொண்டு வுடணுமோ வுட்டுடறேன்....'

ப்ரியாவும் ஜோதிகாவும் சென்னையில் இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவரா என்பதுபோல் அவரை பார்க்க....'எனக்கும் ஒங்க வயசுல ஒரு பொண்ணு இருக்கும்மா... ஒங்க வீட்டுல ஏதோ பிரச்சினைன்னு தெரியுது... மனசு கேக்கல... அதான்....' என்றார் ஆட்டோ டிரைவர்.

'தாங்ஸ்ங்க.... ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்லாம்னா...' என்றாள் ப்ரியா தயக்கத்துடன்..

'வெய்ட் பண்றேன்.... இருங்க பக்கத்துலதான் பார்க்...'

அடுத்த சில நிமிடங்களில் ஆட்டோ அருகில் இருந்த பூங்கா ஒன்றில் நிறுத்த இருவரும் இறங்கி காலியாய் இருந்த பூங்காவுக்குள் நுழைந்து புல் தரையில் அமர்ந்தனர். ஆட்டோ டிரைவர் இறங்கி ஒரு பீடியை பற்றவைத்தார்.

ப்ரியா தலை குனிந்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்க....'ஒங்கம்மா எப்படிறி இதுக்கு ஒத்துக்கறாங்க?' என்றாள் ஜோதிகா.

'I think she is being blackmailed by him....'

'அப்ப போலீசுக்கு போவேண்டியதுதானே....?'

ப்ரியா கேலி புன்னகையுடன் தன் தோழியைப் பார்த்தாள். 'என்னன்னு கம்ப்ளைண்ட் பண்ண? எங்கம்மாதான் ஏறக்குறைய ரெண்டு வருசமா அந்த அங்கிளோட ரிலேஷன்ஷிப் வச்சிருக்காங்களே.... I think he is having some photos with him.... அம்மா அந்தாள் சொல்றத கேக்கலன்னா சைட்ல போட்டுருவேன்னு மிரட்டறான்னு சொல்றாங்க...'

அவள் கூறுவதில் இருந்த நியாயம் ஜோதிகாவுக்கு புரிந்தது. 'சரிடி... வீட்ட வெளிய வந்துட்டே.... பணத்துக்கு? காலேஜ் ஃபீஸ் வேற இருக்கு....எப்படி மேனேஜ் பண்ணுவ?'

'சுந்தர் மூலமா ஒரு ஜாப் கிடைச்சிருக்குடி....'

ஜோதிகா வியப்புடன் பார்த்தாள். 'என்னடி சொல்ற? சுந்தர் மூலமாவா? என்ன வேல?'

'------- டிவியில ஜாக்கியா..... வாரத்துல மூனு ப்ரோக்ராம்...'

ஜோதிகாவின் விழிகள் வியப்பால் விரிந்தன. 'அப்படியா வெரி குட்... ஆனா ஸ்டடீஸ் அஃபெக்ட் ஆகாதா?'

'இல்லடி..... ஈவ்னிங்லதான் ரெக்கார்டிங் வச்சிக்கறாங்க... சுந்தரோட அம்மாதான் ப்ரொட்யூசர்.. அவங்க ரெக்கமெண்டேஷன்லதான்.....'

'என்னடி சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைசா தரே... சுந்தரோட அம்மா டிவி ப்ரொட்யூசரா?'

'ஆமாடி.... தற்செயலாத்தான் கேட்டேன்.... சுந்தர் was very understanding....'

ஜோதிகாவால் தான் கேட்பதை ஜீரனிக்க முடியவில்லை. 'சரிடி... ஆனா சுந்தருக்கு ஒன் விஷயம் எப்படி தெரியும்? எங்கிட்ட சொன்னா மாதிரியே அவங்கிட்டயும் ஒங்க அம்மாவப்பத்தி சொன்னியா என்ன?'

ப்ரியா சோகத்துடன் தன் தோழியைப் பார்த்தாள். 'We are in the same boat ஜோதி.... அதான் அவனால எனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோனியிருக்கு...'

'என்னடி சொல்றே? அப்படீன்னா?'

ப்ரியா பதிலளிக்காமல் சற்று தூரத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுவர்களை பார்த்தாள். இப்படியே இருந்துருந்தா எவ்வளவு நன்னாருந்துருக்கும்..... அவளையுமறியாமல் இரு வாரங்களுக்கு முன்னால் சுந்தரை சந்தித்த அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்....

தொடரும்...

 

Technorati Tags:

1 comment:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என்னமோ போங்க.உங்க வழக்கமான கதை படிக்கிற சுவாரஸ்யம் இதில்லில்லை.