23.8.10

விக்கினங்கள் (சிறுகதை).

ஃபாதர் வின்செண்ட் அன்றைய காலை திருப்பலிக்குப் பிறகு தன்னுடைய பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு ஆலயத்தை விட்டு வெளியில் வந்தார்.

திருப்பலி முடிந்து பத்து நிமிடமே ஆகியிருந்தாலும் ஆலயமே வெறிச்சோடி போயிருந்தது. திருப்பலி எப்போது முடியும் வீடு போய் சேரலாம் என்று காத்திருந்தார்கள் போலும் என்று நினைத்தவாறு தன் அறையை நோக்கி நடந்தார். அவசர உலகத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து திருப்பலிக்கு வருவதே ஏதோ கர்த்தருக்கு செய்யும் அதிகபட்ச உபகாரம். இதில் திருப்பலி முடிந்தபிறகும் ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தித்துவிட்டு செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பலனில்லை என்றது அவருடைய மனது.

அவர் குருத்துவத்தில் நுழைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் இளம் குருத்துவராக இருந்த காலத்தில் காலை திருப்பலி அதிகாலை ஐந்து மணிக்கே துவங்கிவிடும். ஆனால் அப்போதும் ஆலயம் நிரம்பி வழியும். திருப்பலி முடிந்த கையோடு உபதேசியார் ஜபமாலையை துவக்கிவிடுவார். ஒருவித ராகத்தோடு அவர் முற்பாதி ஜெபத்தை கூற விசுவாசிகள் அனைவரும் அதே ராகத்தில் பிற்பாதி ஜெபத்தை கூறுவார்கள். ஒவ்வொரு பத்து மணிக்குப் பிறகும் அனைவரும் இணைந்து பாடும் திருப்பாடல்களால் அந்த கிராமமே விழித்தெழுந்துக்கொள்ளும். ஜெபமாலை, அதனைத் தொடர்ந்து தேவ அன்னையின் பாமாலை என வழிபாடு முடிய குறைந்தது ஒரு மணி நேரமாகும். அதற்குப் பிறகும் விசுவாசிகள், குறிப்பாக பெண்கள் உபதேசியார் விளக்குகளை அணைத்துவிட்டு ஆலயக் கதவுகளை மூடும் வரையிலும் ஆலயத்தினுள் அமர்ந்து தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பிரார்த்தித்துவிட்டுத்தான் செல்வார்கள். அவர்கள் ஆலயத்தை விட்டு வெளியில் வருவதை எதிர்கொண்டு காத்திருப்பார் வின்செண்ட்டும் அவருடைய பங்கு குரு லாரன்சும்.

அவர்கள் இருவரையும் கண்டதுமே 'சர்வேசுரனுக்கு தோஸ்திரம் சாமி' என அவரைவிட பல வருடங்கள் மூத்தவர்களும் கூறும்போது அவருடைய மனத்தில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி கிளர்ந்தெழும். பெற்றோர், உற்றார் உறவினர் என அனைத்து சொந்தங்களையும் துறந்துவிட்டு கர்த்தருக்கு சேவை செய்ய வந்ததற்கு இதைவிட வேறென்ன பிரதிபலன் இவ்வுலகில் இருக்கிறது என எண்ணி, எண்ணி மகிழ்ந்துபோவார்.

ஆனால் இப்போது?

திருப்பலி காலை ஆறு மணிக்கு மேல்தான் துவங்குகிறது. இருந்தும் திருப்பலியை அவர் துவக்கும்போது ஆலயத்தையொட்டி இயங்கி வந்த கன்னியர் இல்லத்திலிருந்து வரும் பத்து பதினைந்து கன்னியர்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆலயத்தில் ஐந்தாறு பேருக்கு மேல் இருந்ததில்லை. திருப்பலி முடியும்போது அதிகம் போனால் ஐம்பது பேர் இருந்தால் அதிகபட்சம்! அவர்களிலும் பெரும்பாலானோர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

அவருக்கு எழுபது வயதாகிறது. பங்கு சேவையில் இருந்து ஓய்வுபெறும் வயதை அவர் கடந்திருந்தாலும் ஆள் பற்றாக்குறை (குருத்துவ வாழ்க்கையை இப்போதெல்லாம் யார் தெரிவு செய்கிறார்கள்?) காரணமாக அவர் இப்போதும் பங்கில் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது.

அவர் இருந்த பங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்ததால் அவருக்குக் கீழ் மூன்று பாதிரியார்கள் இருந்தனர். அவர் பெயருக்குத்தான் பங்கு தந்தை. பங்கு அலுவல்களில் பெரும்பாலானவற்றை மூன்று பாதிரியார்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்திருந்ததால் அவருக்கு அவ்வளவாக வேலைப்பளு இல்லை. அதிகாலை திருப்பலியை முடித்துக்கொண்டு பங்கு அலுவலக அறையில் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார். அதற்குப் பிறகு காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முதல் மாடியிலிருந்த தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். அவருடைய அன்றைய தினசரி அலுவல் அத்துடன் முடிந்தது. மாலையில் அரை மணி நேரம் மொட்டை மாடியிலேயே நடப்பார். அதன் பிறகு அடுத்த நாள் காலை திருப்பலிக்குத்தான் இறங்கி வருவார்.

தன்னுடைய அறையை நெருங்கியபோது ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் காத்திருந்ததைக் கண்டார்.

அறைக்கதவை திறந்தவாறு, 'என்ன தம்பி, என்னைப் பார்க்கவா காத்துக்கிட்டிருக்கீங்க?' என்றார் புன்னகையுடன்.

'ஆமா ஃபாதர்.'

அவனுடைய கண்களிலிருந்த ஒருவித சோகம் அவரை ஈர்த்தது.

'என்ன தம்பி ஏதாச்சும் ப்ராப்ளமா?' என்றார் தன் மேசையை நெருங்கியவாறு. 'வாங்க, வந்து உக்கார்ந்து சொல்லுங்க.'

அந்த இளைஞன் தயங்கியவாறு வந்து அவருடைய மேசைக்கு எதிரில் இருந்த இருக்கைகள் ஒன்றில் அமரும் வரை காத்திருந்தார்.

'சொல்லுங்க.'

'போன சண்டே வாசிச்ச கல்யாண ஓலைய (திருமண ஓலை என்பது இன்னாருடைய மகனுக்கும் இன்னாருடைய மகளுக்கும் திருமணமாகப் போகிறது என்று மணமகன் மற்றும் மணமகள் அங்கத்தினராக உள்ள தேவாலயங்களில் தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டில் வாசிக்கப்படும் அறிக்கை) பத்திய விஷயம் ஃபாதர். விக்கினம் ஏதாச்சும் இருந்தா பங்கு தந்தைக்கிட்ட தெரிவிக்கலாம்னு....'

அந்த இளைஞன் மேற்கொண்டு தொடராமல் தயங்கி நிற்க ஃபாதர் வின்செண்ட் வியப்புடன் அந்த இளைஞனை கூர்ந்து பார்த்தார். அவருடைய பார்வையின் தீர்க்கத்தை சந்திக்க முடியாமல் அவன் தலை குனிந்துக் கொண்டான்.

வெளியில் அவ்வப்போது ஒலித்த அதிகாலை பறவைகளின் ஒலியைத் தவிர ஆலய வளாகமே அமைதியாகிப்போனது போன்றதொரு ஆழ்ந்த நிசப்தம் அந்த அறையை சூழ்ந்துக்கொண்டது.

அவருடைய ஐம்பதாண்டு கால குருத்துவ வாழ்க்கையில் முதல் முறையாக அவருடைய ஆலயத்தில் அவர் நடத்தி வைக்கப்போகிற திருமணங்களில் ஒன்றில் விக்கினம்!

அவரையும் அறியாமல் அவருடைய உதடுகள் புன்னகையால் விரிந்தன. இப்போதெல்லாம் தமிழ் திரைப்படங்களில்தான் எப்படியெல்லாம் கிறிஸ்துவ திருமணங்களை கேலிக்கூத்தாக்கி காட்டுகிறார்கள். திருமண ஓலைகளை பாதிரியார் ஆலயத்தில் வாசித்துவிட்டு 'இந்த திருமண பந்தத்தில் யாருக்கேனும் ஏதும் எதிர்ப்பு இருந்தால் இப்போது கூறலாம்' என்பார். உடனே ஏற்கனவே காதலில் சிக்கியிருக்கும் கதாநாயகி எங்கே தன்னுடைய எதிர்ப்பை சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்துடன் அவருடைய பெற்றோர் அவருடைய கரத்தைப் பற்றி அமர்த்துவர். அவரும் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்!

கிறிஸ்துவ ஆலயங்களில் அர்ச்சிக்கப்படும் திருமணங்களில் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிடலாகாது என்கிற உண்மையான அக்கறையில் திருச்சபை 'விக்கினங்கள்' அதாவது அந்த திருமணம் நடைபெறுவதற்கு தடையாக எதேனும் இருக்குமானால் எந்த ஆலயத்தில் ஓலை வாசிக்கப்படுகிறதோ அந்த ஆலயத்தின் தலைமை குருவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தியிருந்தது.

அவருடைய குருத்துவ வாழ்க்கையில் அதுவரை ஏறத்தாழ ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைத்திருந்தார். ஆனால் அவற்றில் ஒன்றில் கூட 'விக்கினம்' இருந்ததாக அவரை எவரும் அணுகியதில்லை. ஏனெனில் திருமண ஓலை வாசிப்பதற்கு ஏற்பாடு மணமக்களின் பெற்றோர் அவரை அணுகும் சமயத்திலேயே தீர விசாரித்துவிட்டுத்தான் ஓலையையே பதிவு செய்வார். அப்படித்தான் கடந்த ஞாயிறன்று திருப்பலியில் மூன்று திருமணங்களின் ஓலையும் வாசிக்கப்பட்டன. இதில் எந்த திருமணத்தில் இந்த இளைஞன் விக்கினத்தை கொண்டு வந்திருக்கிறான் என்ற திகைப்புடன் அவனை மீண்டும் தன் தீர்க்கமான பார்வையால் துளைத்தார். அவருடைய ஐம்பதாண்டு பங்கு வாழ்க்கையில் அந்த பார்வையில் சிக்கி தங்களுடைய தவற்றை ஒப்புக்கொள்ளாதவர் வெகு சிலரே.

'சொல்லுங்க தம்பி, எந்த கல்யாண ஓலையை பத்தி சொல்றீங்க?'

அதுவரை தலைகுனிந்து அமர்ந்திருந்த இளைஞன் தயக்கத்துடன் பதிலளித்தான். 'ஞானப்பிரகாசம் சார் குடும்பம் சாமி. பொண்ணு பேரு விஜய ராணி.'

'ஞானப்பிரகாசம் குடும்பமா?' அவர் அந்த நகரின் பெரிய தொழிலதிபர். பங்கில் மிகவும் செல்வாக்குள்ள செல்வந்தர் மட்டுமல்லாமல் பங்கின் பெரிய நன்கொடையாளரும் கூட. 'சரி சொல்லுங்க, என்ன விக்கினம்?'

'அந்த பொண்ணுக்கும் எனக்கும் ரெண்டு வருசமா பழக்கம் சாமி....'

பாதிரியாரின் முகம் அதிர்ச்சியால் சிவந்தது. இரண்டு வருடங்களாக பழக்கமா?

'தம்பி நீங்க எந்த பங்கு? உங்கள நா இதுக்கு முன்னால பாத்ததில்லையே?'

'நா பக்கத்து ஊர் பங்கு சாமி'

'விஜய ராணியை உங்களுக்கு எப்படி பழக்கம்?'

'நாங்க ரெண்டு பேரும் எட்டு வருசமா ஒரே பள்ளியில படிச்சோம். அதுக்கப்புறம் இப்ப பட்டணத்து காலேஜுல படிச்சிக்கிட்டிருக்கோம், ஒரே வகுப்புல...'

'அந்த பொண்ணோட குடும்பத்துக்கு இது தெரியுமா தம்பி?'

'தெரியும் சாமி.'

பாதிரியார் யோசித்தார். இளைஞன் சொல்லும் வெறும் காதல் மட்டுமே திருச்சபையின் சட்டப்படி விக்கினமாக ஆகிவிட முடியாது. இவர்கள் இருவருக்கும் இடையில் நிச்சயதார்த்தமோ அல்லது பதிவு திருமணமோ நடந்திருக்க வேண்டும். அல்லது, அல்லது.... இதை எப்படி இந்த இளைஞனிடம் கேட்பது....

பாதிரியாரின் மனம் கணத்தது. 'ஒங்க ரெண்டு பேர் மத்தியில தவறான உறவு ஏதும்.....'

இளைஞன் ஒருமுறை அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை குனிந்துக்கொண்டான். 'மன்னிச்சிருங்க ஃபாதர். இது ஒரு சாவான பாவம்னு தெரியும்... ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை.... ராணி கர்ப்பமானதுக்கப்புறந்தான் அவங்க வீட்டுக்கே விஷயம் தெரிஞ்சி... என்னெ ஆளுங்கள விட்டு அடிச்சிப் போட்டுட்டாரு... நா அட்மிட் ஆயிருந்த அதே ஆஸ்பத்திரியிலதான் ராணியோட மூனு மாச கர்ப்பத்தையும் கலைச்சி....'

பாதிரியார் காதுகளைப் பொத்திக்கொண்டார்.

சிறிது நேரம் மவுனமாய் அமர்ந்திருந்த பாதிரியார். 'இதுக்கு ஏதாச்சும் ப்ரூஃப் கொண்டு வந்திருக்கிங்களா தம்பி?'

இளைஞன் சங்கடத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தான். 'எங்கிட்ட என் சொல்ல தவிர வேறெந்த ப்ரூஃபும் இல்ல சாமி. அந்த ஆஸ்பத்திரியில வேணும்னா நீங்களே விசாரிச்சி பாருங்க. நா உண்மையதான் சொல்றேன்.'

'சரி... என்னால என்ன செய்ய முடியுமோ அத செய்றேன். நீங்க போய்ட்டு வாங்க.'

'சாமி... நா அந்த பொண்ண கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படறேன். ஞானப்பிரகாசம் சார் என்னோட சாதிய காட்டி சம்மதிக்க மாட்டேங்கறார். நீங்க கொஞ்சம் பேசினா.....'

பாதிரியார் சோகத்துடன் சிரித்தார். ஒரே கடவுள், ஒரே மதம் ஆனாலும் இவர்களுக்கிடையிலும் சாதி வேறுபாடுகள். ஆலயத்தில் அருகருகில் அமர்ந்து பிரார்த்திப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் திருமணம் என்று வந்துவிட்டால் நான் இந்த சாதி, நீ அந்த சாதி.... என்றுதான் முடிவுக்கு வரப்போகிறது இந்த சாதி வெறி?

'தம்பி நீங்க இப்ப இங்க வந்துருக்கறது இந்த கல்யாணத்துல இருக்கற விக்கினத்த எங்கிட்ட முறையிடறதுக்குத்தானே? அத மட்டும் செஞ்சிட்டு போங்க. இந்த தள்ளாத வயசுல என்னெ இன்னொரு பிரச்சினையில சிக்க வச்சிடாதீங்க.' என்றார் எரிச்சலுடன். காதலிப்பதற்கு முன்பே இதை பற்றி இவர்கள் சிந்தித்திருக்க வேண்டாமா? ஞானப்பிரகாசம் அந்த பகுதியில் செல்வாக்கு நிறைந்த தொழிலதிபர். விஜய ராணி அவருடைய ஒரே மகள். இந்த இளைஞனைப் பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன்போல் தெரிகிறான். ஆகவே இந்த திருமணம் சாதிப் பிரச்சினையால் மட்டும் நின்றிருக்க வாய்ப்பில்லை.

'சாரி ஃபாதர்...'

'பரவால்லை... நீங்க போகலாம்... நான் ஞானப்பிரகாசத்துக்கிட்ட உங்களப்பத்தி பேசிப்பாக்கறேன். அப்புறம் இறைவன் விட்ட வழி. உங்க பெயர், உங்களுடைய பெற்றோர்களுடைய பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாத்தையும் குறிப்பிட்டு எழுத்து மூலமா ஒரு புகார் எழுதிக் குடுத்துட்டு போங்க. ஏன்னா இது ஒரு பெண்ணோட வாழ்க்கை பிரச்சினை. நீங்க குடுக்கற புகார் உண்மைக்கு புறம்பாக இருக்கற பட்சத்துல நானே போலீசுக்கு புகார் குடுக்க வேண்டி வரும், மறந்துறாதீங்க.'

'நான் சொல்றது உண்மைதான் ஃபாதர்.' என்ற இளைஞன் அவர் நீட்டிய காகிதத்தில் தன்னுடைய புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு செல்ல பாதிரியார் யோசனையில் ஆழ்ந்தார்.

திருமணத்திற்கு மணமகள் அல்லது மணமகனின் சம்மதம் வற்புறுத்தி பெறப்பட்டிருக்கலாகாது என்பதும் கத்தோலிக்க திருச்சபை அறிவித்திருந்த விக்கினங்களில் ஒன்று.

ஆகவே அடுத்த ஞாயிறன்று வாசிக்கவிருந்த திருமண ஓலைகள் அடங்கிய குறிப்பேட்டை எடுத்து அதிலிருந்து ஞானப்பிரகாசத்தின் மகள் இரண்டாவது திருமண ஓலைக்கான அறிவிப்பை நீக்கினார். தன்னுடைய துணை பாதிரியார்களுள் மூத்தவரை அழைத்து விஷயத்தை சுருக்கமாக கூறிவிட்டு ஞானப்பிரகாசதுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.

ஞானப்பிரகாசம் இதை லேசில் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருந்தும் அவரை எதிர்கொள்ள தயாராக இருந்தார் ஃபாதர் வின்செண்ட்.


********

3 comments:

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

rhoswens@blogspot.com said...

a good portrayal of the current status of the catholic church. hats off

S Sekar said...

என்ன நீங்க முத்தமிழ்மன்றத்துக்கு வருவதை நிறுத்து விட்டீர்களே! மீண்டும் வந்து நீங்கள் தொடங்கிய வங்கி வாழ்க்கையைப் பற்றிய தொடரைத் தொடரும் படி கேட்டுக் கொள்கிறேன்!
சேகர்