29.4.13

நிஜமல்ல நிழல்..(உண்மை சம்பவம்)


தலையை வாரி முடித்த சுமதி நெற்றி பொட்டை சரி செய்துக்கொள்ள கண்ணாடியை நெருங்கினாள்.

வாசலில் நிழலாடுவது தெரிந்தது. யாரென்று பார்த்தாள்.

எதிர் வீட்டு அக்கா: ராஜி என்கிற ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரியை பார்க்கும்போதெல்லாம் சுமதிக்கு பொறாமையாக இருக்கும். ஒல்லியான ஆனால் வாளிப்பான  உடல்வாகு. எலுமிச்சை நிறம். இடுப்பிற்கு கீழ் இறங்கும் அழகான அடர்த்தியான தலைமுடி. எப்போதும் பளிச்சென்று
ஈறுகள் தெரிய சிரிக்கும் விதம்... ராஜியின் கணவர் பாஸ்கரும் பார்க்க அம்சமாக, இருவருக்கும் அபாரமான ஜோடிப் பொருத்தம்.

அவர்கள் இருவருடனும் ஒப்பிடும்போது சுமதி சற்று சுமார் ரகம்தான். ஆகவே சிறுவயது முதலே அவளுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்தது. அதிகமாக யாருடனும் பேசமாட்டாள். அப்படி இருந்தவளை வலிய, வலிய வந்து பேசி ஆறே மாதத்தில் கலகலப்பாக்கியவள் இந்த ராஜிதான். அவளைப் பற்றி அக்கம்பக்கத்தில் அரசல்புரசலாக பேசிக்கொள்வதைக் கேட்டும் சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடன சகஜமாக பேசிப் பழகினாள்.

'உருவத்துல என்ன இருக்கு சுமி? நீ நல்லா படிச்சிருக்கே. சேகரும் படிச்சிருக்கார். கவுரமான போலீஸ் வேலை. என்னெ விட சின்னவளா இருந்தாலும் எத்தனையோ விஷயங்கள் கத்து வச்சிருக்கே. நானும் பாஸ்கரும் கம்ப்யூட்டர் என்ஜினியர்ஸ்னுதான் பேரு அத தவிர எனக்கோ அவருக்கோ ஒன்னும் தெரியாது. அதுவுமில்லாம நாம வாழப் போறது கொஞ்ச நாள்தான். இதுல எதுக்கு வீணா ஈகோ பாத்துக்கிட்டு அக்கம்பக்கத்துல யார் கிட்டயும் பேசாம... என்னாலல்லாம் அப்படி இருக்க முடியாதும்மா... இங்க நிறைய பேருக்கு நா சிரிக்கிற ஸ்டைலே புடிக்காது தெரியுமா? வாய் விட்டு சிரிச்சா நோய்விட்டு போச்சுங்கறத முழுசா நம்பறவ நா..' என்பவளை எப்படி வெறுக்க முடிகிறது என்று நினைப்பாள் சுமதி.

ராஜி அழைப்பு மணியை அடிக்க முயல்வதைக் பார்த்தாள். 'வாங்கக்கா, திறந்துதான் இருக்கு.' என்றாள்.

'பிசியா இருக்கியா சுமி?'

'இல்லியே... என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க? ஆஃபீசுக்கு லீவா?'

பதிலேதும் கூறாமல் சோபா நுனியில் அமர்ந்த ராஜியின் கண்கள் கலங்கியிருந்ததை பார்க்க முடிந்தது.

'என்னாச்சிக்கா, இப்படி உங்கள நா பாத்ததேயில்லையே?'

ஆம். குடியேறிய முதல் நாளே புன்னகை நிறைந்த முகத்துடன் வாசலேறி வந்து 'வாங்க, நியூலி மேரிடா, குடிவந்த நேரம் சீக்கிரமே அழகா ஒரு குட்டி பொறக்கணும்னு விஷ் பண்றேன்' என்றவள் ராஜி. சுமதி திருமணம் முடிந்த கையோடு குடி வந்த வீடு அது. சென்னை சைபர் க்ரைமில் எஸ்.ஐ. ஆக போஸ்ட்டிங் ஆகி சென்னை வந்ததும் அவர்கள் பார்த்த முதல் வீடே பிடித்துப் போக வாடகை சற்று அதிகமாக இருந்தாலும் உடனே ஹவுஸ் ஓனர் கேட்ட
முன்தொகையை கொடுத்து அடுத்த வாரத்திலேயே குடியேறினர். பிறகுதான் தெரிந்தது ராஜிக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்பது.

பதிலேதும் கூறாமல் சோபாவில் அமர்ந்த ராஜி தன் கையில் வைத்திருந்ததை அவளிடம் நீட்டினாள்.

'என்னக்கா இது... டைரி மாதிரி இருக்கு?'

'ஆமாம் பாஸ்கரோடது... ஃபோல்ட் பண்ணி வச்சிருக்கற பேஜ கொஞ்சம் படியேன்?'

சுமதி தயங்கினாள். 'எப்படிக்கா... மத்தவங்க டைரிய.....'

'பரவால்லை... நாந்தான சொல்றேன்... படி..'

சுமதி தயக்கத்துடன் முனை மடிக்கப்பட்டிருந்த பக்கத்தை திறந்து பார்த்தாள்....

'என்னைக்கிம் போலவே பளிச்சின்னு... அவள பாக்கறப்பல்லாம் என் மனசுல ஏதோ ஒன்னு கிடந்து உருளுதே... ஏன்...?'

சுமதி திடுக்கிட்டு ராஜியை பார்த்தாள்.. 'என்னக்கா இது, யார பத்தி சொல்றார்?'

'அடுத்த பக்கத்த பாரு புரியும்..'

சுமதி அடுத்த பக்கத்தை பார்த்தாள்... அதிலும் அதே மாதிரியான வசனங்கள்.. அடுத்த பக்கம்.. அடுத்த பக்கம் என பாஸ்கருடைய கவனத்தை ஈர்த்த அந்த பெண்ணைப் பற்றிய வரிகள்... அநேகமாய் அனைத்துமே அந்த பெண்ணின் உடல் அழகைப் பற்றியதாகவே இருக்க... இத்தன அம்சமா வைஃப் இருக்கறப்ப இந்த மனுசனுக்கு ஏன் இப்படி புத்தி போவுது என்ற நினைப்புடன் மேலும் படித்தாள்....

'ஏப்ரல் 28 தேதிய பாரேன்...'

'இன்று அவளுடன் தனியாக.......' மேலே தொடர்வதை விடுத்து டைரியை மூடினாள் சுமதி. 'வேணாக்கா. மேல படிக்க முடியல....' டைரியை ராஜியிடம் நீட்டினாள். 'ஏன் சாருக்கு இப்படி புத்தி போவுது? ஒங்களுக்கு என்ன குறை?'

ராஜி கண்களை ஒத்திக்கொண்டு.... 'இன்னொரு பேஜில மார்க் வச்சிருக்கேன் பாரேன்.... செப்டம்பர் 8ம் தேதி.. அதயும்

படிச்சிட்டு சொல்லு...'

சுமதிக்கு இது தேவையா என்று தோன்றியது.  ராஜி சொன்ன பக்கத்தை புரட்டினாள். அதிர்ந்து போனாள்.

'எவ்வளவு பெரிய முட்டாள் நான்? எவ்வளவு ஈசியா அவ விரிச்ச வலையில மாட்டிக்கிட்டேன்.... ஏற்கனவே எவ்வளவோ

குடுத்தாச்சே... இப்ப கேக்கறத எப்படி புரட்டறது? பேசாம ராஜி கிட்ட சொல்லிரலாமா?'

'இது எல்லாமே ஒரு ப்ளான் போல இருக்கே ராஜிக்கா?' என்றாள் சுமதி அதிர்ச்சியுடன்.

ராஜி வேதனையுடன் புன்னகைத்தாள். 'பாஸ்கர் இன்னைக்கி காலையில இந்த டைரிய நா ஆஃபிசுக்கு போனப்பறம் படிச்சிப்பாருன்னு ஒரு கன்டிஷனோட குடுத்தப்ப என்னவாருக்குங்கற கன்ஃப்யூஷனோடத்தான் வாங்கினேன். ஆனா
இப்படி ஒரு ஷாக்கிங் விஷயம் இருக்கும்னு நா எதிர்பாக்கலே சுமி...'

'இது நம்ம வாசுதேவ மேனன் டைரக்‌ஷன்லு ஒரு படம் வந்துச்சே... பேர் கூட... ஆங்... பச்சக்கிளி முத்துச்சரம்னு... அதுல வர்ற மாதிரியே இருக்கு? பேசாம இத சேகர் கிட்ட குடுத்து டீல் பண்ண சொல்லலாமா?'

'அதுக்குத்தான் சுமி உங்கிட்ட கொண்டு வந்தேன். அந்த டைரியில இருக்கற பொண்ணு இத தனியா செஞ்சிருக்க சான்ஸே இல்ல.'

'எனக்கும் அப்படித்தான் தோனுதுக்கா... ? ஒருவேள அந்த படத்துல வர்ற மாதிரி இவ ஹஸ்பென்டே இதுக்கு பின்னால இருப்பானோ?'

'இருக்கும்... யார் கண்டா?'

'இந்த டைரிய நானே வச்சுக்கவா? சேகர் வந்ததும் குடுத்து ஏதாச்சும் பண்ண முடியுமான்னு கேக்கறேன். என்ன சொல்றீங்க?'

'சரி' என்றவாறு எழுந்து நின்றாள் ராஜி.'தப்பா நினைச்சிக்காத சுமி.. எனக்கு ஒன்னெ விட்டா வேற ஆள் இல்ல... அக்கம் பக்கத்துல தெரிஞ்சா இவளுக்கு வேணும்னு சந்தோசப்படுவாங்களே தவிர யாரும் ஹெல்ப்புக்கு வரமாட்டாங்க... அதான்...

சேகர் நினைச்சா இத ஈசியா சால்வ் பண்ணிரலாம்னு நினைக்கறேன்... நா சேகர் வந்ததும் அந்த முட்டா மனுஷனையும் கூட்டிக்கிட்டு வரவா?'

'வேணாக்கா... நீங்க கவலப்படாம ஆஃபீசுக்கு போய்ட்டு வாங்க. நா முதல்ல சேகர் கிட்ட சொல்லி அவர் என்ன சொல்றார்னு பாக்கறேன். அதுக்கப்புறம் நா ஒங்களுக்கு ஃபோன் பண்றேன்.'

'சரி சுமி... அப்ப நா வரேன்... இது இப்போதைக்கு வேற யாருக்கும் தெரிய வேணாம்..'

'இல்லக்கா... நீங்க கவலப்படாம போங்க... நான் ஃபோன் பன்றேன்...'

ராஜி அரை மனதுடன் எழுந்து வாசலை நோக்கி நடக்க சுமதியும் அவளுடன் வாசல் வரை சென்றி வழியனுப்பி விட்டு திரும்பி வந்து சோபாவில் அமர்ந்தாள்.

'ச்சே, எத்தன சந்தோஷமா இருந்த குடும்பம்? இந்த மனுசனுக்கு ஏன் இப்படி புத்தி போவணும்? இந்த ஆம்பளங்களே இப்படித்தான் போல இருக்கு... கண்ணுக்கு லட்சணமா இருக்கற வய்ஃப விட்டுப்போட்டு....' ஏதோ நினைத்துக்கொண்டு சட்டென்று எழுந்து சென்று ட்ரிஸ்சிங் டேபிளில் இருந்த முழு நீள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்... அத்தன அழகா இருந்துமே இவங்களுக்கு இந்த கதின்னா... நம்ம கதி? எல்லாத்துக்கும் ஒரு குழந்தை இல்லாததுதான் காரணமா இருக்கும்... சீக்கிரமே ஒன்னெ பெத்துறணும்... அப்பத்தான் சேகரையும் நம்ம கைக்குள்ள வச்சிக்க முடியும்.. 'ஒம்மேல
இருக்கற மோகம் தீர்றதுக்குள்ளயே ஒரு புள்ளய பெத்துக்கணும்டி இல்லன்னா ஆம்பள கண்ணு மத்தவளுங்க மேல மேய ஆரம்பிச்சிரும். அலைபாயற ஆம்பிளைய கட்டி போடறதுக்கு ஒரு குழந்தையாலதான் முடியும். சொல்லிட்டன்.' பாட்டி சென்னைக்கு வழியனுப்பும்போது கூறியது நினைவுக்கு வந்தது.

தொடரும்..

4 comments:

துளசி கோபால் said...

சிறுகதைன்னு போட்டுட்டு, தொடரும்?

ஊஹூம்.......... சீக்கிரம் அடுத்த பகுதி வெளியிடுங்க.

உங்க பக்கம் ஒரேடியா குதிக்குது. ஏழெட்டுதடவை ரீஃப்ரெஷ் பண்ணவேண்டியதாப்போச்சு:(

உஷா அன்பரசு said...

இண்ட்ரஸ்ட்டிங்... தொடர்க..!

TBR. JOSPEH said...

வாங்க துளசி,


உங்க பக்கம் ஒரேடியா குதிக்குது. ஏழெட்டுதடவை ரீஃப்ரெஷ் பண்ணவேண்டியதாப்போச்சு:(//

அப்படியா தெரியலையே? ஒருவேளை ரொம்ப சந்தோஷமா இருக்கோ என்னவோ?

சிறுகதைன்னு போட்டுட்டு, தொடரும்? //

குறுந்தொடர்னு போட்டிருக்கணும். மூனு நாளைல முடிஞ்சிரும்:)

TBR. JOSPEH said...

வாங்க உஷா!

இண்ட்ரஸ்ட்டிங்... தொடர்க..!//

அடுத்த பகுதிகளையும் படிச்சிட்டு சொல்லுங்க. இதுதான் உங்களுடைய முதல் வருகைன்னு நினைக்கிறேன்.நன்றி.