நேற்றைய தினம் நான் கூறியதுபோன்று இந்த சிறுகதை ஒரு உண்மை நிகழ்வு என்பதால் அதன் முடிவு நான் எழுதியது போல் சுமுகமாக இருக்கவில்லை.
உண்மையில் முடிவில் என்ன நடந்தது என்பது இதோ....
சுமதி தன்னுடைய நகைகளில் சிலவற்றை ராஜியிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபிறகு சேகர் தன்னிடம் தொலைபேசியில் கூறியவற்றை ராஜியிடம் கூறிவிட்டு...
கிச்சனுக்குள் நுழைந்து சாமி படங்களை பார்த்து 'சாமி ஒரு சிக்கலும் இல்லாம முடியணுமே' என்று முனுமுனுத்தாள். 'இது ஒனக்கு தேவையா?' என்று புலம்பிய உள்மனதை பொருட்படுத்தாமல் படுக்கையறைக்குள் நுழைந்து கட்டிலுள் விழுந்தாள். அசதியாய் நேரம் போவது தெரியாமல் உறங்கிப் போனாள்.
*******
'கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' அழைப்பு மணியின் தொடர்ந்து அலறும் ஓசை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்த சுமதி வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து மணியை பார்த்தாள்.
மணி எட்டு!
நாலு மணி நேரமா தூங்கிட்டேன் என்று நினைத்தவாறே வாசலுக்கு விரைந்தாள். வெளியில் சேகர்!
அவள் வாசற்கதவை முழுவதுமாய் திறப்பதற்குள் அவளை தள்ளிக்கொண்டு நுழைந்த சேகர் சோபாவில் விழுந்து தலையை கரங்களில் பற்றிக்கொண்டு அமர்ந்ததை பார்த்த சுமதி 'இவர் சொன்னா மாதிரியே என்னமோ ப்ராப்ளம் ஆயிருச்சி போலருக்கே' என்று நினைத்தாள்.
'என்னங்க ஆச்சி?'
'ஹூம்' என்ற உருமலுடன் சுமதியை நிமிர்ந்து பார்த்த சேகரின் கண்களிரண்டும் ரத்தமாய் சிவந்திருக்க அப்படியொரு கோபத்தை கண்டிராத அவள் அச்சத்தில் உறைந்துபோனாள்.
'ஏதாச்சும் பிரச்சினையாயிருச்சா?'
அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சிறிது நேரம் அமர்ந்திருந்த சேகர் 'முட்டாள்... முட்டாள்....' என்றான் அடிக்குரலில்.
'யார, என்னையா சொல்றீங்க?' என்றாள் சுமதி நடுங்கும் குரலில்.
'இல்ல என்னைய சொல்றேன். ஒன் பேச்ச நம்பி இந்த விஷயத்துல இறங்குனேன் பாரு... என்னெ சொல்லணும்... நாந்தான் முட்டாள்...'
சுமதி விழித்தாள். 'என்னங்க சொல்றீங்க? புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.
சொல்றேன்... கேட்டுட்டு அழறியா சிரிக்கிறியான்னு பாக்கறேன்... இங்க வந்து ஒக்கார்.'
சுமதி பதில் பேசாமல் அவன் எதிரில் அமர்ந்தாள்.
*******
அன்று மாலை சரியாக ஐந்தரை மணிக்கு ராஜேஸ்வரி வாடகை வண்டியின் கமிஷனர் அலுவலகத்தை அடைந்தாள். அலுவலக வாசலிலேயே ஒரு சுமோ வண்டியில் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் காத்திருந்த சேகர் அவளை நெருங்கினான். டாக்சி ஓட்டுனரைப் பார்த்து. 'நீ கொஞ்சம் வெளியில நில்லுய்யா' என்று கூறிவிட்டு தன் வசமிருந்த கைப்பையை அவளிடம் கொடுத்தான்.
'மேடம் நீங்க எதுக்கு டாக்சியில வந்துருக்கீங்கன்னு அந்த டிரைவருக்கு தெரியக் கூடாது, சரீங்களா?'
'சரிங்க.. அவருக்கு எதுவும் தெரியாது. எக்மோர் போய்ட்டு ரிட்டர்ன் வரணும்னுதான் சொல்லியிருக்கேன்.'
'குட். இந்த பேக்ல மேல் வரிசையில மட்டும் பணம் இருக்கும். நீங்க குடுக்கறப்ப அவங்க தொறந்து பாத்தாலும் கீழ இருக்கறது வெத்து பேப்பர்ஸ்னு தெரியாது. நீங்க இந்த பேக்கை கலெக்ட் பண்ண வர்றவங்கக்கிட்டு குடுத்துட்டு போய்க்கிட்டே இருங்க.... மத்தத எங்க ஆளுங்க பாத்துப்பாங்க. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்தா போறும்...'
ராஜேஸ்வரி தயங்கினாள். 'இதுல ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கு சார்.'
சேகருக்கு எரிச்சல் வந்தது. அடக்கிக்கொண்டு, 'இதுல என்ன ப்ராப்ளம்?' என்றான்.
'இல்ல... அந்த பொன்னுகிட்ட நா பணத்த குடுத்ததும் பாஸ்கர் கூட அவ எடுத்துக்கிட்ட ஃபோட்டோ, வீடியோ ஒரிஜினல்ஸ் எல்லாத்தையும் ஒரு பேக்ல வச்சி கொண்டு வரணும்னு சொல்லியிருக்கேன். அந்த பேக நா வாங்காம போயி பேக்ல இருக்கறது போலின்னு தெரிஞ்சி ஏதாச்சும் பிரச்சினையாயிருமோன்னுதான்.....'
சேகர் எரிச்சலுடன் குறுக்கிட்டான். 'இங்க பாருங்க மேடம்... நீங்க பேக குடுத்துட்டு ஒரு நிமிசம் கூட அங்க நிக்கக் கூடாது. ஒங்கக் கிட்டருந்து பேக வாங்கிக்கிட்டு அவங்க எங்கயும் போயிர முடியாது. நீங்க அவங்கள மீட் பண்ற ஸ்பாட்லருந்து நூறு அடிக்குள்ள எங்க சுமோ நிக்கும். நாங்க யாருமே யூனிஃபார்ம்ல இல்லங்கறதால எங்கள அவங்களோ இல்ல அவங்களோட வேற யாராச்சும் இருந்தாலோ கண்டுபிடிக்க முடியாது. யார் இருந்தாலும் அத்தனை பேரையும் ரவுண்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துருவோம். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒங்க திங்ஸ வாங்கிக்கலாம். இதான் ப்ளான். இதுக்கு நீங்க ஒத்துக்கலைன்னா இப்படியே நாங்க போயிருவோம்... என்ன சொல்றீங்க?'
ராஜேஸ்வரி ஒரு நோடி யோசித்தாள். இறுதியில் 'சரிங்க... நீங்க சொல்றாப்பலவே செஞ்சிரலாம்.'
'குட்... இப்ப மணி அஞ்சி நாப்பது... இன்னும் இருபது நிமிஷம் இருக்கு... டிரைவர் கிட்ட நீங்க ஒரு காப்பி குடிக்கணும்னு சொல்லி ஸ்டேஷன் வாசல்லருக்கற ஹோட்டல் முன்னால நிறுத்த சொல்லுங்க. அங்க சரவணா பவன்ல காப்பி பார்சல் தருவான். டிரைவர அனுப்பி வாங்கி வரச் சொல்லிட்டு நீங்க மீட் பண்ண வேண்டிய லேடி வந்துருக்காங்களான்னு பாருங்க. அவங்கள நீங்க பாத்ததும் இந்த நம்பருக்கு ஒரு SMS அனுப்புங்க. எங்கள திரும்பி பாக்கறதோ சிக்னல் காட்றதோ ஒன்னும் கூடாது. புரிஞ்சிதுங்களா?'
'சரிங்க...ஆனா... ஒரு சந்தேகம்.''
'சொல்லுங்க..'
'பாஸ்கரோட ஃபோட்டோஸ், வீடியோஸ் மட்டும் வேற யார் கண்ணுலயும்....
'அதுக்கு நான் கியாரன்டி... நீங்க கெளம்புங்க.'
'இதுவரைக்கும் நீங்க செஞ்ச உதவிக்கி ரொம்ப நன்றி சேகர்...'
சேகர் என்ற தன்னுடைய பெயரை ஒரு கொஞ்சலுடன் அவள் உச்சரித்த விதம் அவனை ஒரு நொடி திடுக்கிட வைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் திரும்பி சாலையை கடந்து தன் வாகனத்தை அடைந்தான்.
ராஜேஸ்வரியின் வாகனம் சென்று பத்து நிமிடங்கள் கழித்து சேகர் தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து எக்மோர் ஸ்டேஷனை அடைந்தான். சரவணா பவன் வாசலில் அவளுடைய வாகனத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து சற்று தள்ளி தன்னுடைய வாகனத்தை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் காத்திருந்தான்.
சரியாக ஆறு மணிக்கு அவனுடைய கைப்பேசியில் வந்த ராஜியின் SMS 'தனியாத்தான் சார் வந்துருக்கா' என்றது. தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபிள்களை பார்த்தான். 'அந்த லேடி பேக குடுத்துட்டு போன அடுத்த ஒரு நிமிஷத்துக்குள்ள அத வாங்குன லேடிய அங்கருந்து நகர விடாம நின்னுக்குங்க... நா வண்டியோட ஒரு செக்கன்ட்ல வந்துருவேன். சரியா?'
இருவரும் வாகனத்திலிருந்து 'யெஸ் சார்' என்றனர். பிறகு ராஜி அமர்ந்திருந்த வாகனத்தை நோக்கி நகர்ந்தனர்.
சேகர் ஏற்கனவே கூறியிருந்தபடி ராஜேஸ்வரி அவன் கொடுத்திருந்த பேகை அவளை சந்திக்க வந்த இளம் பெண்ணிடம் கொடுப்பதை பார்த்தான்.... ஆனால் அடுத்த நொடியே அந்த பெண்ணிடம் இருந்த பேகை ராஜி பெற்றுக்கொள்ள அவள் அமர்ந்திருந்த வாகனம் விருட்டென்று புறப்பட்டு சென்றது. அந்த பெண் பேகை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர முயல்வதற்குள் அவன் அனுப்பிய கான்ஸ்டபிள்கள் அவளை இருபுறமும் நெருங்கி நிற்பதை பார்த்ததும் வாகனத்துடன் அவர்களை அவன் நெருங்க சுற்றிலுமிருந்த கூட்டம் கவனிப்பதற்குள் அந்த பெண்ணுடன் இருவரும் வாகனத்தில் ஏறினார்கள்.
சேகர் வண்டியை கிளப்புவதற்குள் அந்த பெண்.. 'யாருங்க நீங்க போலீசா?' என்றாள் அதிர்ச்சியுடன்.
'பாத்தா தெரியுதுல்ல... பேசாம வா... ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம்.'
''சார்... எங்கிட்டருந்து பணத்த வாங்கிக்கிட்டு போறவள வுட்டுட்டு என்னெ புடிச்சிக்கிட்டு போயி என்ன பண்ண போறீங்க?'
சேகர் அதிர்ச்சியுடன் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு திரும்பி அந்த பெண்ணை பார்த்தான்....
*****
சுமதி திகைப்புடன் சேகரை பார்த்தாள். 'என்னங்க நிறுத்திட்டீங்க? அந்த பொண்ணு பணம் குடுத்தாளா? அப்படீன்னா?'
சேகர் அவளுடைய அதிர்ச்சியை பார்த்து எரிந்து விழுந்தான். 'ஷாக்கா இருக்கா? அப்ப எனக்கு எப்படி இருந்திச்சி தெரியுமா? அந்த பொண்ணு சொன்னத கேட்டதும் என் கூட வந்திருந்த கான்ஸ்டபிள்ங்க ரெண்டு பேரும் நக்கலா சிரிச்சப்ப அப்படியே எறங்கி ஓடிரலாமான்னு இருந்தது.'
'ஐயோ தெளிவா சொல்லுங்களேன்..'
'என்னத்த சொல்றது? ஒன் ஃப்ரெண்டு ராஜேஸ்வரி சரியான ஃப்ராடு. அவதான் அந்த பொண்ணோட புருஷன வளைச்சி போட்டு ப்ளாக்மெய்ல் பண்ணி இருக்கா. அவ கொண்டு வந்த அஞ்சி லட்சத்த வாங்கிக்கிட்டு நாங்க குடுத்த பைய அவக்கிட்ட குடுத்துட்டு கம்பிய நீட்டிட்டா அந்த ராஜி. அந்த பேக்ல தன் புருஷனோட ஃபோட்டோவும், வீடியோ ஒரிஜினல்சும் இருக்குன்னு அந்த பொண்ணும் நினைச்சி அத வாங்கிக்கிட்டு தன் கையிலருந்த பணத்த குடுத்துரிச்சி.. இதான் நடந்தது. உன் பேச்ச கேட்டு இதுல நா மூக்க நுழைச்சி இப்ப இது எங்க போயி முடிய போவுதோ தெரியல.'
'ஐயோ அப்ப நம்ம நகை?' என்று அலறியவாறே மூர்ச்சையாகி விழுந்தாள் சுமதி..
******
பி.கு: சுமதி மூர்ச்சையாகி விழுந்ததில் அவளுடைய பின்தலையில் பலமாக அடிபட கோமாவில் சென்று ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகும் நினைவு திரும்பாமலேயே மரித்துவிடுகிறாள்.
இந்த ஆறு மாத காலத்தில் சேகர் மீது அதிகார துஷ்பிரயோகம், அதிகார எல்லை மீறி செயல்பட்டது, அலுவலக வாகனத்தை அனுமதியின்றி தன் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தியது என பல குற்றச்சாட்டுகளை சுமத்தி பணியிட நீக்கம் செய்யப்பட்டார். பிறகு இலாக்கா ரீதியான ஒழுங்குமுறை விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டடார். விசாரனையில் அவருடன் விருப்பமில்லாமல் துணைக்கு சென்ற இரு காவலர்களின் சாட்சியம் முற்றிலுமாக அவருக்கு எதிராக இருந்ததுதான் இதற்குக் காரணம்! தங்களை விட வயதில் இளைய அதிகாரிகள் மீது அதிகம் படிக்காத, வயதில் முதிர்ந்த காவலர்களுக்கு இருக்கும் துவேஷம்தான் இதற்கு காரணமாம்.
இதற்கிடையில் ஐந்து லட்சத்தை ராஜியிடம் கொடுத்து ஏமாந்த அந்த பெண் சேகர் தன்னை எந்த புகாரும் இல்லாமல் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதால்தான் ராஜி தப்பிக்க முடிந்தது எனவும் ஆகவே சேகரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கக் கூடும் என்று தான் நம்புவதாக புகார் அளிக்க சேகர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருடைய தந்தை காவல்துறை ஆய்வாளராக (Inspector of Police) சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதால் அவருடைய பழைய மேலிடத்து தொடர்புகளை பயன்படுத்தி மிகுந்த சிரமத்துக்குப் பிறகு வெளியில் கொண்டு வருகிறார்.
சேகர் இப்போதும் தன் பணி மற்றும் மனைவியை இழந்த சோகத்தில்.....
இதுதான் நடந்தது.
அதிகார துஷ்பிரயோகத்திற்கு பெயர்போன காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை அதிகாரிகளுக்கு (junior officers) மட்டும் தனியாக ஒரு விதி உள்ளது. அதுவும் பணியில் சேர்ந்து ஒரு வருடம் கூட முழுவதும் பூர்த்தியாகாத நிலையில் சேகர் தன் அதிகார எல்லையை மீறி நடந்துக்கொண்டதால் அது மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதப்பட்டது.
சமீபத்தில் உதயம் NH4 என்ற திரைப்படத்தில் அரசியல் தலைவர் ஒருவருடைய மகளை மீட்க எவ்வித எழுத்து பூர்வ புகாரும் இல்லாமல் ஒரு துணை ஆய்வாளர் அலைவதாக சித்தரிக்கப்படுவதைக் கண்ட பிறகுதான் இந்த கதையை எழுத வேண்டும் என்று தோன்றியது. சினிமாவும் நிஜ வாழ்க்கையும் எவ்வளவு மாறுபடுகிறது! சினிமாவில் ஹீரோயிசம் என போற்றப்படும் நிஜ வாழ்க்கையில் அதிகப்பிரசங்கித்தனம் என்று கருதப்படுகிறது! இதுதான் நிதர்சனம்.
5 comments:
அட ராமா!!!!!! பாவம் அந்தப் பொண்ணு.. ... உதவப்போய் இப்படி ஆச்சே:(
வாங்க துளசி,
உதவப்போய் இப்படி ஆச்சே:(//
பாத்திரம் அறிஞ்சி பிச்சை போடணுங்கறா மாதிரி ஆளுங்கள தெரிஞ்சிக்கிட்டு உதவ போகணும்னு சொல்லலாம்.
உதவி இப்படியெல்லாம் மாறுதோ?
வேடந்தாங்கல் - கருண் said...
உதவி இப்படியெல்லாம் மாறுதோ?//
அதனாலதான் இப்பல்லாம் யார் உதவின்னு வந்து கேட்டாலும் செய்யிறதுக்கு தயங்கறாங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்.
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
Post a Comment