'ஒனக்கு என்னைக்கி கவுன்சிலிங் வருது?'
ஜோதிகா பதிலளிக்காமல் டி.வியையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ராம்குமார் எரிச்சலுடன் எழுந்து சமையல்கட்டில் வேலையாயிருந்த தன் மனைவியிடம் சென்றார். 'ஏய்.. என்னாச்சி அவளுக்கு? ஏன் உம்முன்னு ஒக்காந்திருக்கா?'
'அவளுக்கு கவுன்சிலிங் வரும்போது எல்லா நல்ல காலேஜுலயும் சீட் முடிஞ்சிருக்கும் போலருக்கு... அதான் கோபம்.... நீங்க வேற எதையாவது சொல்லி எரிச்சல் மூட்டிறாதீங்க?' என்றாள் லலிதா.
சுர்ரென்று எழுந்த கோபத்துடன் வரவேற்பறைக்குள் நுழைந்து டி.வி பெட்டியை அணைத்துவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார் ராம்.
தந்தைக்கு ஒன்றும் சளைத்தவளல்ல என்பதை நிரூபித்தாள் ஜோதிகா. உடனே எழுந்து அவரை பிந்தொடர்ந்து சென்று இறைந்தாள். 'எதுக்கு இப்ப டிவிய ஆஃப் பண்ணீங்க?'
ராம்குமார் அடக்க முடியாத கோபத்துடன், 'ஏய் என்ன என்னைய எதுத்து பேசற அளவுக்கு ஆய்ட்டியா?' என்றவாறு தன் மகளை கன்னத்தில் ஓங்கி அறைய அதை முற்றிலும் எதிர்பாராத ஜோதிகா கன்னத்தைப் பிடித்தவாறு சுவரோடு சரிந்தாள்....
பதறிப் போய் சமையலறையில் ஓடி வந்தாள் லலிதா... 'என்னங்க நீங்க? எதுக்கு இப்ப இப்படி கோபப் படுறீங்க?'
'பின்ன என்னடி...? இவளுக்கு கவுன்சிலிங் துவங்குன முதல் வாரத்துலயே கால் வரணும்னா எண்ட்றன்சுக்கு ப்ரிப்பேர் பண்றப்ப அதே கவனமா இருக்கணும்.. அத விட்டுப்போட்டு எந்த நேரமும் டிவியே கதின்னு கெடக்கறது...மார்க் கொறஞ்சி போச்சினா... எதுக்கு சாதி பேர சர்டிஃபிகேட்ல போடலன்னு அப்பனையே குத்தம் சொல்றது? நானும் பொறுத்து, பொறுத்து பாக்கேன்... இவ போக்கும் சரியில்ல... பேச்சும் சரியில்ல... ஒழுங்கு மரியாதையா இருக்கச் சொல்லு.. இல்ல படிச்சது போறும்னு கட்டி வச்சிருவேன்....'
கணவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது லலிதாவுக்கு தெரிந்தாலும் அவருடைய வார்த்தைகளில் தெறித்த க்ரோதம் அவளையும் தாக்கவே, 'ஏங்க... தெரியாமத்தான் கேக்கேன்.. ஜோதி சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஒங்களுக்கு கவுரவம்தான முக்கியமா போச்சிது... ஊர் முழுக்க சாதி, சாதின்னு கட்டிக்கிட்டு அலையறாங்க... நீங்க ஒருத்தர் சாதிய காட்டி சீட் வாங்கறதில்லேன்னு டிசைட் பண்ணா போறுமா? யூனிவர்சிட்டியிலருந்து அட்மிஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்த அன்னைக்கி ஜோதி சொன்னது ஞாபகம் இருக்கா... அவ ஃப்ரெண்ட் விஜி... அவளும் இவள மாதிரித்தான் எண்ட்ரன்ஸ்ல மார்க் வாங்கிருக்கா... அவளுக்கு கேஸ்ட் கோட்டாவுல சீக்கிரமாவே கவுன்சிலிங் வந்து நல்ல காலேஜ்ல சேர்ந்துருவாளேன்னு ஜோதி நினைக்கறா... நம்ம அப்பாவாலதான் நமக்கு கிடைக்க வேண்டிய சீட் போயிருச்சின்னு அவ நினைக்கறதுல என்னங்க தப்பு? அதச் சொன்னா ஒங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது... கவலைய மறக்க டிவி பார்த்துக்கிட்டுருக்கறது கூட பொறுக்காம டிவிய ஆஃப் பண்ணதும் இல்லாம அத கேக்க வந்த பொண்ண கை நீட்டி அடிக்கற அளவுக்கு என்னங்க கோவம்?'
ராமுக்கு தான் செய்தது தவறு என்று தெரிந்தும் அவருடைய சுயகவுரவம் அதை ஏற்றுக்கொள்ள தடுத்தது. அதனாலேயே விளைந்த கோபம் அதிகரிக்க தன்னை தன்னுடைய மனைவியும் குற்றம் சாட்டுவதாக நினைத்தார். 'ஏய்... என்ன நீயும் புத்தி கெட்டத்தனமா பேசறே? இவ ப்ளஸ் டூவுல ஒழுங்கா ஒக்காந்து படிச்சதாலத்தான தொன்னூறுக்கு மேல வாங்க முடிஞ்சிது? அப்ப சாதிய பத்தி கவலைப் பட்டாளா? நா கீழ்ச்சாதின்னு சொல்லிக்கிட்டு கூனிக் குறுகி யார் முன்னாலயும் என் பிள்ளைங்க நிக்கக் கூடாதுன்னு நா நெனச்சது தப்பா? காலெஜ்ல வேணும்னா கீழ்சாதிக்காரனுக்கு சீட் கிடைக்கும்டி... ஆனா ஒரு வேலைன்னு ஆய்ட்டா நம்மள எந்த மேல்சாதிப் பயலும் மதிக்க மாட்டான்.. மாடா ஒளச்சாலும் நீ கீழ்சாதிக்கார பயதானேன்னு சொல்லி எளப்பமா பாப்பான்... நா இவளுக்கு என்னடி செஞ்சி குடுக்கல... மெரிட்லயே இவ சீட் வாங்கணும்னுதானடி சிட்டியிலயே பெஸ்ட் இன்ஸ்ட்டியூட்ல கோச்சிங்குக்கு சேத்து விட்டேன்... ப்ள்ஸ் டூவுல படிச்ச மாதிரியே ஒழுங்கா ஒக்காந்து படிச்சிருந்தா எண்ட்ரன்ஸ்லயும் நல்லா மார்க் வாங்கிருக்கலாமே... அத விட்டுப் போட்டு இவ டிவி பாத்துக்கிட்டு ஒக்காந்துருக்கப்பல்லாம் தல பாடா அடிச்சிக்கிட்டேன்... அப்பல்லாம் ப்ளஸ் டூவுலயும் இப்படித்தான பாத்துக்கிட்டிருந்தேன் மார்க் வாங்காமயா போய்ட்டேன்... ஒங்களுக்கு வேற வேலயில்லப்பான்னு சொன்னா... நீயும் எம்பொண்ணு புத்திசாலின்னுதான பீத்திக்கிட்டே... இப்போ மார்க் கொறஞ்சதும் எதுக்கு எம்மேல குத்தம் சொல்றீங்க...?'
கோபத்தின் உச்சியில் விகாரமாகிப் போன முகத்துடன் தன்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தவாறு நின்ற அவருடைய கோலம் லலிதாவையே ஒரு நொடி திகைப்புற செய்தது. அவர் ஹைப்பர்டென்சிவ் என்பது நினைவுக்கு வர இனியும் விவாதத்தை வளர்ப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவளாய் பதில் பேசாமால் தன் காலடியில் சுவரில் சாய்ந்தவாறு தலை குனிந்து அமர்ந்திருந்த ஜோதிகாவின் அருகில் அமர்ந்தாள்.... 'ஏய்... ஜோதி அழாத...' என்றவாறு அவளுடைய தலையை தடவி விட்டாள்... ஜோதிகா அப்படியே தன் தாயைக் கட்டிக்கொண்டு துக்கம் தாளாமல் குலுங்கி அழ லலிதா தன் மகளை இறுக அணைத்துக்கொண்டு கலங்கிய கண்களுடன் தன் கணவனை நிமிர்ந்துப் பார்த்தாள்... 'நீங்க ஒங்க ரூமுக்கு போங்க... நா இவள பாத்துக்கறேன்... அப்பறமா பேசிக்கலாம்.'
சுர்ரென்று தலை வரை ஏறி நின்ற கோபம் சடுதியில் இறங்கிவிட குனிந்து தன் மகளைப் பார்த்தார் ராம்குமார். 'ச்சே... என்னாச்சி எனக்கு...?' தன் மீதே கோபம் வந்தது.. தன்னுடைய கோபம் தவறானது என்பது தெரிந்தது.... இருப்பினும் இறங்கி வந்து தன் மகளிடம் மன்னிப்பு கேட்க விடாமல் அவருடைய தன்மானம் தடுத்தது. 'எப்படியோ ஒழிஞ்சி போங்க.. என் நிம்மதியே போயிருச்சி...' என்றவாறு தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட.. 'பாத்தியாம்மா இந்தப்பா சொல்லிட்டுப் போறத... ஒழிஞ்சிபோயிடறேன்... என்னாலதான அப்பாவுக்கு நிம்மதி போயிரிச்சி... போறேன்... எங்கயாச்சும் போயிடறேன்...' என்றவாறு ஜோதிகா எழுந்து தன் அறையை நோக்கி ஓடிப் போய் அறைக்கதவுகளை தாளிட செய்வதறியாமல் ஒரு நொடி திகைத்து நின்றாள் லலிதா...
பிறகு சுதாரித்துக்கொண்டு ராம்குமாரின் அறைக்கதவைத் தட்டினாள், 'ஏங்க... ஜோதிகா அழுதுக்கிட்டே போயி கதவ சாத்திக்கிட்டாங்க... அவ இருக்கற மூடுல எதையாச்சும் செஞ்சிக்கப் போறாங்க... வந்து அவள கூப்டுங்க..' என்றாள் உச்ச குரலில்.
மனைவியின் குரலைக் கேட்ட ராம் அந்த குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கதவுகள் திறக்கப்படுவதை உணர்ந்தார். இதுதான் குடியிருப்பில் வசிப்பவர்களுடைய தர்மசங்கடம்... சற்றே குரலை உயர்த்தினால் போதும்... ஒட்டுக் கேட்பதற்கென்றே சில ஜன்மங்கள் காத்திருப்பதுண்டு...
கழற்றவிருந்த சட்டையை மீண்டும் அணிந்துக்கொண்டு கதவுகளை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். 'ஏய்... எதுக்குடி இப்ப கூப்பாடு போடுற... பார் எதுர்த்த ஃப்ளாட்ல, பக்கத்து ப்ளாட்டுலருக்கறவங்கல்லாம் பாக்கறத. நீ போ... நா அவள பாத்துக்கறேன்...'
ஜோதிகாவின் அறைக்கதவை தட்டி அழைத்தால் நிச்சயம் அவள் வீம்பு பண்ணுவதுடன் அதுவே அக்கம்பக்கத்து ஆட்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கும் என்று நினைத்தவராய் என்ன செய்யலாம் என்று யோசித்தார். சட்டென்று ஒரு யோசனை நினைவுக்கு வர தன் செல்ஃபோனை எடுத்து மகளின் எண்ணை டயல் செய்தார். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை எடுத்ததற்காக அவர் பரிசாக வாங்கி அளித்த செல்ஃபோன் அது!
எதிர் முனையில் அடித்துக்கொண்டே இருப்பது கேட்டது. வரவேற்பறையில் ஜோதிகா அமர்ந்திருந்த இடத்தில் செல்ஃபோன் கிடக்கிறதா என்று பார்த்தார்... ஊஹும்.... அப்ப அவ ரூம்லதான் இருக்கணும்... ஸ்க்ரீன்ல பாத்துட்டு பேசாம இருக்கா போலருக்கு... அடிச்சிக்கிட்டே இருப்போம்... எப்படியும் எடுப்பா....
அவருடைய செய்கையை மவுனத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தாள் லலிதா... அவளுக்கும் கணவனைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது. அவருடைய குணமே அப்படித்தான்... எதற்கெடுத்தாலும் கோபப்படுவதும், கோபத்தில் வார்த்தைகளால் எதிராளியின் மனதை புண்படுத்துவதும்... அடுத்த நொடியே கோபம் இறங்கி மன்னிப்பு கோருவதும்... தாஜா செய்து வழிக்கு கொண்டு வருவதும்... இருபதாண்டு கால தாம்பத்தியத்தில் அவள் காண்பதுதானே...
'எதுக்குங்க இப்படி கோபப்படுறீங்க... சமயத்துல கையையும் நீட்டுறீங்க.. பெண்டாட்டி நாந்தான் சரின்னுட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறேன்... பிள்ளைகளுமா?' என்றால் அடிக்கற கைதான் அணைக்கும் சொல்றதுல இன்னொரு அர்த்தம் இருக்கு தெரியும்லே.... அணைக்கற கை அடிக்கவும் செய்யும்... அதான் அர்த்தம்... அணைக்கறதுக்கு எப்படி உரிமையிருக்கோ அதுபோலத்தாண்டி அடிக்கறதுக்கும் என்பார்... எதுக்கு அடிக்கறது, எதுக்கு அணைக்கறது? என்ன ஆம்பிளையோ என்று மாய்ந்துபோவாள்....
'ஏய்... ஜோதி.. வச்சிராத...' ராம்குமார் செல்ஃபோனில் பேசுவது கேட்கவே கணவனை நெருங்கி நின்றாள்...
'சாரிடா... அப்பா ஏதோ மூட்ல அடிச்சிட்டேன்... நாம போட்ட சத்ததுல அக்கம் பக்கத்துலருக்கறவங்கள்லாம் பாக்கறாங்க பார்... அழாதே... அதான் அப்பா சாரி கேட்டுட்டேன்லே... வெளியில வா...'
இதற்கெனவே காத்திருந்ததுபோல் ஜோதிகா கதவுகளைத் திறந்துக்கொண்டு வெளியே வர ராம்குமார் மகளை நெருங்கி அணைத்துக்கொண்டார்... 'சாரிடா.... அப்பா ஒரு இடியட்டுன்னுதான் தெரியும் இல்ல.... கோபம் வந்தா என்ன பண்றேன்னே சில சமயத்துல தெரியமாட்டேங்குதுடா... I am terribly sorry... அப்பாவ மன்னிச்சிரு... வா... ஒக்காந்து பேசலாம்..' என்றவாறு மகளை அழைத்துக்கொண்டு வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தார். 'லலி.. நீயும் ஒக்கார்... என் மனசுலருக்கறத வெளிப்படையாவே சொல்றேன்..' என்று ஆரம்பித்தார். 'இங்க பார் ஜோதி, அப்பா எது செஞ்சாலும் அதுக்கு பின்னால ஏதாச்சும் ஒரு காரணம் இருக்கும்.... சாதி பேர ஒன் சர்ட்டிஃபிகேட்ல போடாம இருக்கறதுக்கு காரணம் இருக்கு. நீ என்னதான் மார்க் வாங்கி மெரிட்ல ஃப்ரீ சீட் வாங்கினாலும் நீ சாதி அடிப்படையிலதான் சீட் வாங்குனேன்னு ஒன் ஃப்ரெண்ட்சே பின்னால கேலி பண்ணாலும் பண்ணுவாங்க... சீட் வாங்கறதுக்கு வேணும்னா இது பிரயோஜனப் படலாம். ஆனா படிச்சி முடிஞ்சி வேலைன்னு போறப்போ இதெல்லாம் ஒன்னும் செல்லுபடியாகாது... அதுக்கு நீ வாங்கற மார்க்கும்.. இண்டர்வ்யூல நீ ஆன்சர் பண்றதுலயும்தான் இருக்கு... ஒனக்கு ஏதாவது ஒரு காலெஜ்ல சீட் கிடைச்சிரும்... ஃப்ரீ சீட் கிடைக்கலன்னா பேமெண்ட் சீட் வாங்கிரலாம்... ஒருவேளை நீ பெரிய காலேஜ்னு நினைச்சிக்கிட்டிருக்கறதுல கிடைக்காம போயிரலாம்... உன் ஃப்ரெண்டுக்கு அங்க கிடைக்கவும் செய்யலாம்... ஆனா அதப்பத்தியெல்லாம் கவலைப்பட்டு எந்த யூசும் இல்லை... நமக்கு கிடைக்கற வாய்ப்ப சரியா யூஸ் பண்ணிக்கணும்... அதுதான் புத்திசாலித்தனம்.. நீ அன்னைக்கி கொண்டு வந்த லிஸ்ட்லருக்கற காலேஜுகள நாளைக்கி போய் அப்பா பாத்துட்டு வரேன்... நீயும் வரதான்னா வா.. அதுல ஏதாச்சும் ஒரு காலேஜ்ல சீட் கிடைக்காம போயிராது... போன வருசம் மாதிரியே சி.எஸ்.சிக்கு இந்த வருசமும் பெருசா டிமாண்ட் இருக்காதுன்னு சொல்லிக்கறாங்க... அதனால ஒன் ஃப்ரெண்ட்சுக்கு எங்க கிடைக்குதுங்கறத பத்தி டென்ஷனாவாம இருக்கணும்... சரியா...?'
'ஆமா ஜோதி.. அப்பா சொல்றதும் சரியாத்தான் இருக்கு... நீ இந்த நேரத்துலதான் டென்ஷனாகாம இருக்கணும்... விஜிக்கி எங்க கிடைச்சா நமக்கென்ன...' என்றாள் லலிதா...
ஜோதிகா மவுனமாக தன் பெற்றோர்களை பார்த்தாள்... அம்மா சொல்றது சரிதான்.. விஜி சேரப்போற காலேஜ்ல நாம சேராம இருக்கறதுதான் நல்லது... அவ மட்டுமில்ல... எந்த ஸ்கூல் ஃப்ரெண்ட்சும் நமக்கு வேணாம்... It might help me to start an altogether new chapter... எதுக்கு பழைய ஃப்ரெண்ட்ஷிப்... அப்பா சொன்ன மாதிரியே செஞ்சுருவோம்... 'சாரிப்பா... நானும் மரியாதையில்லாமத்தான் நடந்துக்கிட்டேன்... மன்னிச்சிருங்க...' என்றாள் கலங்கிய கண்களுடன்... 'நீங்களே போயி காலேஜ பார்த்துட்டு வாங்க.. நீங்க பாத்தா போறும்... வேணும்னா அம்மாவையும் கூட்டிக்கிட்டு போங்க... என்னம்மா?' அவளுடைய கலங்கிய கண்கள் லலிதாவின் கண்களையும் குளமாக்கின...
இருவரையும் மாறி, மாறி பார்த்த ராம்குமார் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றார்... 'நா போய் குளிச்சிட்டு வரேன் லலி...' என்றவாறு குளியலறையை நோக்கி நடக்க, 'நா ஒன் மடியில படுத்துக்கறேம்மா...' என்றவாறு ஜோதிகா தன் தாயில் மடிமீது சாய... லலிதா வாஞ்சையுடன் தன் மகளின் தலையை கோதிவிட்டவாறே குளியலறையை நோக்கி நடந்த தன் கணவனைப் பார்த்தாள்...
தொடரும்...
நாளையும் வரும்..
2 comments:
அப்படியே எங்க வீட்டில நடந்த மாதிரி எழுதியிருக்கீங்க சார். இப்படித்தான் நானும் எங்க அப்பாவும் ரொம்ப காரசாரமா சண்டை போட்டுப்போம். கொஞ்ச நேரத்தில, இரண்டு பேரும் கீழ இறங்கி வந்துடுவோம். சமயத்தில, அந்த பிரச்சினைய தீர்த்துட்டு, உடனே சினிமா பார்க்கக் கிளம்பிடுவோம். என்ன, அக்கப் பக்கத்தில இருக்கிறவங்க இப்ப ஜோடியா சினிமாவுக்கு கிளம்பறதுங்கதான் கொஞ்ச முன்னாடி அந்த சண்டைய போட்டதுங்களான்னு அதிசயமா பார்ப்பாங்க...
நாளையும் வருவது சந்தோஷம். ரொம்ப அலையறீங்க போலிருக்கு, உடம்பயும் பாத்துக்குங்க...
வாங்க கிருஷ்ணா,
அப்படியே எங்க வீட்டில நடந்த மாதிரி எழுதியிருக்கீங்க சார். //
வீட்டுக்கு வீடு வாசற்படி:-))
எத்தனை மனத்தாங்கல் ஏற்பட்டாலும் நொடிப்பொழுதில் அதை மறந்துவிட்டு நடப்பது என்னுடைய குடும்பத்திலும் உள்ளதுதான்..
சின்ன அபிப்பிராய பேதங்களையும் மனதுக்குள்ளேயே வச்சிக்கிட்டு முறச்சிக்கிட்டு நிக்க மாட்டோம்...
ரொம்ப அலையறீங்க போலிருக்கு..//
என்ன பண்றது பொழப்பாச்சே... பயணம் பண்ண முடியலேன்னு சொன்னா சரி கொச்சிக்கே மறுபடியும் போயிருன்னு சொல்லிட்டா.... அதான் பொறுத்துக்கிட்டு போறேன்...
இன்னும் ஒரு முப்பது மாசம்தானேன்னு ஒரு சின்ன ஆறுதல்..
Post a Comment