அன்று வொர்க் ஷாப் வகுப்பு இருந்ததால் அதற்கென கல்லூரி நிர்வாகம் வழங்கியிருந்த சீருடையில் செல்ல வேண்டியிருந்தது.
கரு நீல கலரில் சட்டையும் பேண்டும். காலில் கருப்பு நிற ஷூ. என்.சி.சி ஸ்டைலில்! தலையில் கேடட் தொப்பி சகிதம் சீருடையில் ப்ரியா படு ஸ்மார்ட்டாக இருந்ததை வொர்க் ஷாப்பில் குழுமியிருந்த அத்தனன கண்களும் மொய்த்தன.
'ஏய் ப்ரியா யூ லுக் ரியலி க்யூட்.' என்றாள் ஜோதிகா புன்னகையுடன்.
'ஏன் நீயுந்தான்' என்றாள் ப்ரியா.. 'ஆனா என்ன, மூச்சு விட முடியாத மாதிரி டைட்டா இருக்கு. கால்ல வேற ஷூ டன் கணக்குல..'
ப்ரியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவன், 'என்ன காலேஜ்டா மச்சான்... பொண்ணுங்கக் கிட்ட பேசக்கூடாதுன்னு... ச்சை... நச்சுருக்கீங்கன்னு ஒரு வார்த்தை சொல்லணும்னு கிடந்து மனசு அடிச்சிக்குது... ஆனா முடியலையே...' என்று தனக்கு அடுத்திருந்த மாணவனிடம் கிசு கிசுத்தான். ' அந்த எச்.ஓ.டி மட்டும் எப்படி சைட் அடிக்கிறான் பார். அவனும் அவன் தலையும்... சதுர மண்டைன்னு பேர் வச்சிரலாமாடா?'
அடுத்திருந்தவன் முறைத்தான். 'டேய் வாய வச்சிக்கினு சும்மாரு... அந்த எச்.ஓ.டி. இந்த பக்கம் பாக்கறான் பார்... கழுகு பார்வைடா அவனுக்கு. அப்புறம் இண்டர்னல்ல கைய வச்சிருவான்.. சொல்லிட்டேன்.'
அவர்களுக்கு அருகில் நின்றிருந்த சுந்தர் தன்னையுமறியாமல் ப்ரியாவை பார்த்தான். ஆனால் அடுத்த கணமே அவளுடைய பார்வை தன்மேல் படிவதைக் கண்டு கண்களை தாழ்த்திக்கொண்டான்.
ப்ரியாவின் உதடுகள் அவளையுமறியாமல் புன்னகையால் விரிந்தன.
'என்ன ப்ரியா... அப்பப்ப அந்த சுந்தர் பக்கம் உன் பார்வை போகுது...' என்று விளையாட்டாக அவளுடைய விலாவில் இடித்தாள் ஜோதிகா... 'ஒரு வாரம் கூட முழுசா ஆவலை...'
ப்ரியா பொய்க் கோபத்துடன் அவளை முறைத்தாள். 'ஏய் என்ன ஒவரா இமாஜின் பண்றே? அதெல்லாம் இல்லை...' என்றவள் தொடர்ந்து, 'ஆனா பார்க்கறதுக்கு ஸ்மார்ட்டா இருக்கான் இல்லே.' என்றாள்.
ஜோதிகா ஓரக்கண்ணால் சுந்தர் இருந்த திசையைப் பார்த்தாள். அவன் லெக்சர் அடித்துக்கொண்டிருந்த எச்.ஓ.டியையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்...
'ஹல்லோ... வைஸ் ரெப்..' என்ற கேலி குரல் அவளுடைய கவனத்தை கலைத்தது. திடுக்கிட்டு திரும்பி எச்.ஓ.டியை பார்த்தாள். 'இவன் அன்னைக்கி முதல் நாள் பேசுனத மனசுல வச்சிக்கிட்டு டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்கானே.'
'என்ன முறைக்கிறீங்க? நா இவ்வளவு நேரம் சொல்லிக்கிட்டிருந்தது காதுல விழுந்துச்சா இல்லையா?'
ஜோதிகா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். மாணவிகளில் சிலர் சிரித்தனர்.
'அதான பார்த்தேன். காலேஜுக்கு நீங்கல்லாம் படிக்கவா வரீங்க... டைம் பாஸ் பண்ணத்தானே...'
சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு 'சாரி சார்.' என்றாள்.
'இந்த வார்த்தைய மட்டும் மறக்காம சொல்லிருங்க.' என்று வேண்டுமென்றே எரிந்து விழுந்த எச்.ஓ.டி மாணவர்கள் பக்கம் திரும்பினார். 'Look Boys. You can form teams of four each. Boys and Girls should not mix. I will give you five minutes. If you don't form the teams yourselves I will do it. Right?'
அடுத்த சில நிமிடங்களில் மாணவ, மாணவியர் தங்களுக்குள் குழுக்களை பிரித்துக்கொண்டனர்.
'என்ன மனுசண்டா இவன்.. ரெண்டு பொண்ணுங்களை நம்ம க்ரூப்புல சேத்துக்கினா என்னா சோக்கா இருக்கும்.' என்று குரல் எழும்ப
'டேய் நீ இன்னைக்கி அடிப்படப் போறே... வாய பொத்திக்கினு இரு..' என்று பதில் எழுந்தது.
'No talking please...' என்றது எச்.ஓ.டி குரல்.
'இவன் ஒருத்தண்டா, அசரீரி கணக்கா.' என்ற குரல் சற்றே ஓங்கி ஒலிக்க மொத்த குழுவும் கொல்லென்று சிரித்தது.
'யார் மேன் அது? I want to see that face... Come out. Otherwise no workshop today... I will not award any marks to any of you.'
அதிர்ச்சியில் அமைதியாகிப் போனது மாணவ, மாணவியர் குழு. அடுத்த சில நிமிடங்கள் சங்கடமான அமைதி நிலவ அடுத்த பகுதியில் மாணவர் குழு மும்முரமாக தங்களுடைய பயிற்சியில் ஈடுபட்டிருந்தது தெளிவாக கேட்டது.
'பரத்' என்றார் எச்.ஓ.டி. உரக்க. 'Could you identify the person who made that comment?'
பரத் தன் அருகில் நின்ற வாசனைப் பார்த்தான். இருவருக்குமே கமெண்ட் அடித்த மாணவனை தெரியும். ஆனாலும் மவுனம் காத்தனர்.
'Ok then... You can go back to your class room. I will report this to the Principal.' என்றவாறு எச்.ஓ.டி. வாசலை நோக்கி நடந்தார்.
'டேய்... போய் ஒத்துக்கடா... இல்லன்னா இந்த செமஸ்டர்ல எல்லாரோட இண்டர்னல் மார்க்லயும் கைய வச்சிருவான்.' என்றவனைப் பார்த்து முறைத்தான் எச்.ஓ.டிக்கு எதிராக கமெண்ட் அடித்தவன்.
ஒட்டுமொத்த மாணவர் குழுவும் அவனை முறைப்பதைப் பார்த்த பரத் எச்.ஓ.டி. வெளியேறும் வரை காத்திருந்துவிட்டு தன் சக மாணவர்களைப் பார்த்தான். 'இங்க பாருங்க. இவர் செஞ்சது தப்புன்னாலும் இவர காட்டிக் குடுத்து நமக்கு கிடைக்கற மார்க் வேணாம்... After all five marks. பிரின்சிப்பால் கேட்டாலும் யாரும் சொல்லக் கூடாது. Let us take that decision. What do you say?'
மாணவ, மாணவியர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சிலருக்கு பரத் கூறியதில் ஒப்புதல் இல்லையென்றாலும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர்.
'தாங்ஸ்...' என்ற பரத் கமெண்ட் அடித்த மாணவனைப் பார்த்தான். 'ஆனா let this be the last time. என்ன?' என்றான்.
'டேய் நீ என்ன பெரிய ஹீரோவா... வார்னிங் குடுக்கறே?' என்று மனதுக்குள் கருவினாலும், 'ஓக்கெ பிரதர்' என்று பதிலளிக்க மாணவர் குழு தங்களுடைய வகுப்பை நோக்கி நகர்ந்தது.
'இதுக்கா காலையிலருந்து இந்த ட்ரெஸ்சை போட்டுக்கிட்டு அவஸ்தை பட்டோம்.' என்ற மாணவியை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
தொடரும்...
1 comment:
enna sir.. oru varathuku maela aachu.. puthusu kanomaey :(..
Post a Comment