19.10.07

நாளை நமதே - 27

அன்று ஜோதிகா வகுப்பு முடிந்து தனியாக கல்லூரி கேண்டீனை நோக்கி நடந்தாள்.

காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் அவசரத்தில் டிபன் பாக்ஸை எடுக்க மறந்ததன் விளைவு...

கல்லூரி கேண்டீனில் சாப்பிடுவது இதுதான் முதல்...

தினமம் கேண்டீனில் சாப்பிடும் மாணவர்கள் வகுப்பில் புலம்புவதை கேட்டிருந்தாலும் சரி பரீட்சித்துத்தான் பார்ப்போமே என்ற தைரியத்தில் கிளம்பினாள்.

அவள் எதிர்பார்த்ததையும் விட கேண்டின் விசாலமாக இருந்தது. கல்லூரி வளாகத்தில் ஒரு கோடியில் இருந்த 'எச்' ப்ளாக்கின் தரை தளத்தில் நீள் வடிவத்தில் சுமார் நூறடி நீளத்தில்.. ரயில்வே ப்ளாட்பாரம் போல்... நீண்டு கிடந்தது. வலதுபுறத்தில் சுவரையொட்டி நீண்ட கவுண்டர். அதில் பல மாணவர்கள் நின்றவாறு உணவு அருந்திக்கொண்டிருந்தனர்.

'செல்ஃ சர்விங்மா... டோக்கன் வாங்கிட்டு அந்த கோடியிலருக்கற டெலிவிரி கவுண்டர்ல வாங்கிட்டு எங்க வேணும்னாலும் ஒக்காந்துக்கலாம்.' வாசலையொட்டி அமர்ந்திருந்த க்ளார்க் அவளை தடுத்து நிறுத்த, அவர் நீட்டிய மெனுவைப் பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. வாயில் நுழையாத அயிட்டங்கள்...

'ஒரு லைம் ரைஸ், ஒரு கர்ட் ரைஸ்'

இரண்டு அலுமினிய டோக்கன்களும் மீதி சில்லறையும் கிடைக்க 'அட! பரவால்லையே சீப்பாத்தான் இருக்கு..'

'சாப்பாடும் சீப்பாத்தான் இருக்கும் கவலைப்படாதீங்க...'

ஜோதிகா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். புன்னகையுடன் ஒரு அறிமுகமில்லாத மாணவன். அதெப்படி நாம மனசுல நினைச்சத இவ்வளவு கரெக்டா சொல்றான்?

'ஒங்க மனசுல நினைச்சத எப்படி கரெக்டா சொல்றான்னு பாக்கறீங்களா?'

ஜோதிகா பதறிப்போனாள்... நடையை வேகப்படுத்தி டெலிவிரி என்ற பலகை தொங்கிய கவுண்டரை நோக்கி நடந்தாள்...

இரண்டு கைகளிலும் பேப்பர் ப்ளேட்டுடன் காலியாக இருக்கையை தேடி கண்களை ஓடவிட்டாள். சற்று தொலைவில் ப்ரியா வேறு சில மாணவிகளுடன் அமர்ந்திருப்பது தெரிந்தது. சற்று தயங்கி நின்றாள்.

ஒருவாரமாகவே அவளுடைய போக்கை புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தது. தன்னை தவிர்க்க நினைப்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஏன் என்பதுதான் புரியாத புதிராக.... இப்ப நாமளா போயி எதுக்கு... ப்ரியா அமர்ந்திருந்த திசைக்கு நேர் எதிர் திசையில் திரும்பி கண்களை ஓடவிட்டாள். எல்லா மேசைகளிலும் மாணவ, மாணவியர்கள்.....

சரி நின்னுக்கிட்டுத்தான் சாப்டணும் போலருக்கு...

'ஹலோ மேடம்... இங்க வந்து ஒக்காருங்க...' சட்டென்று திரும்பி பார்த்தாள். சற்று முன்பு அவள் மனதிலிருந்ததை படம் பிடித்த அதே மாணவன்...

எந்த ஒரு மேசையிலும் மாணவர்களும் மாணவியரும் சேர்ந்து அமராதிருக்க இவன் மட்டும் எப்படி இவ்வளவு தைரியமாக தன்னுடன் வந்து அமருமாறு அழைக்கிறான் என்று நினைத்தாள். இந்த பதினைந்து நாட்களில் கல்லூரியின் சட்டதிட்டங்கள் அவளுக்கு நன்றாக தெரிந்திருந்தன.

கல்லூரி வளாகத்தில் எந்த மாணவியும் மாணவனும் பேசிக்கொள்ளவே அனுமதியில்லாதபோது இவனுக்கு ரொம்பத்தான் துணிச்சல் என்று நினைத்தவாறு அவனுடைய அழைப்பை புறக்கணித்து திரும்பி 'நின்னடிச்சான் கவுண்டரை' நோக்கி நடந்தாள்.

அவள் நெருங்குவதை கண்ட வேறொரு மாணவி சற்று நகர்ந்து நின்று அவளை பார்த்து புன்னகைத்தாள். ஜோதிகா 'தாங்ஸ்' என்று பதிலுக்கு புன்னகைத்துவிட்டு கையிலிருந்தவற்றை கவுண்டர் மேடையில் வைத்துவிட்டு சற்று தள்ளியிருந்த குடிநீர் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த தம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பினாள்.

'அவன் பேர் டேவிட்...' என்றாள் அவளுக்கு இடமளித்த மாணவி...

'யார சொல்றீங்க?'

'ஒங்கள இன்வைட் பண்ணானே.. அவந்தான்... செக்கண்ட் இயர்... இந்த வருச காலேஜ் ஸ்டூடண்ட் ப்ரெஸ்... கொஞ்சம் நக்கல் புடிச்சவன்... ஆனால் ரொம்ப நல்லவன்...'

'ஓ!' என்று நினைத்தவாறு ஓரக்கண்ணால் டேவிட் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள்...

'என்னங்க... நம்மள பத்தி தப்பா சொல்றாங்களா? நம்பாதீங்க...' என்று அவளைப் பார்த்து அந்த மாணவன் கண்ணடிக்க பதறிப்போய் பார்வையை திருப்பிக்கொண்டு அவசர, அவசரமாக எலுமிச்சை சாதத்தை அள்ளி சாப்பிடலானாள் ஜோதிகா...

'எப்படிங்க அவர் நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றாரு?' என்றாள் ரகசிய குரலில்...

'அவன் அப்படித்தான்... சும்மா குத்து மதிப்பா சொல்வான்... சில சமயங்கள்ல கரெக்டாருக்கும்... கேட்டா நா ஃபேஸ் ரீடிங் படிச்சிருக்கேம்பான்... கண்டுக்காதீங்க...' என்ற அந்த பெண் ஜோதிகாவைப் பார்த்தாள்... 'நீங்க ஃபர்ஸ்ட் இயரா? எந்த க்ரூப்? ஐட்டியா?'

'இல்ல சிஎஸ்சி'

'ஓ! ஒங்க பேர்?'

'ஜோதிகா...'

'I am இந்த்ரா... இந்துன்னு கூப்டலாம்... ஐட்டி... செகண்ட் இயர்.. டேவிடோட க்ளாஸ்தான்...'

'என்னங்க என் பேர் அடிபடறா மாதிரி இருக்கு...' என்றவாறே டேவிட் என்ற அந்த மாணவன் எழுந்து அவர்களை நெருங்க... 'அய்யா ப்ரெஸ்சு...... இது இங்க கூடாதுன்னு தெரியாதா?' என்ற குரல் வந்தது அடுத்த மேசையிலிருந்து. கல்லூரி ஊழியர்களுள் ஒருவன் என்பது அவனுடைய சீருடையிலிருந்தே தெரிந்தது.

டேவிட் அலட்சியமாக திரும்பி பார்த்தான். 'எது?'

'லேடி ஸ்டூடண்ட்ஸ் கிட்ட தேவையில்லாம பேசக் கூடாதுன்னு.'

'தெரியாம என்ன? எல்லாம் தெரிஞ்சிதான் இருக்கு...' என்றவாறு அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி அவர்களைக் கடந்து சென்று கையிலிருந்தவற்றை அதற்குரிய தொட்டியில் எறிந்துவிட்டு கைகளை கழுவியவாறு கல்லூரி ஊழியனை நோக்கி நடந்தான். 'பேசாம கேண்டீன் நடுவுல ஒரு வால எழுப்பு பிரிச்சிடறதுதான... லேடீஸ், ஜெண்ட்ஸ் டாய்லெட் இருக்கறாப்பல ரெண்டு கேண்டீனாக்கிருங்க. அப்ப இந்த பிரச்சினையே இருக்காது... பிரின்சிக்கிட்ட போயி நான் சொன்னேன்னு சொல்லு'

கல்லூரி ஊழியன் கோபத்துடன் எழுந்து டேவிட்டை முறைக்க அவன் அதை பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்....

கேண்டீனில் இருந்த அனைத்து மாணவர்களுடைய பார்வையும் தங்களை நோக்கி திரும்பியதத கண்ட ஜோதிகா நிச்சயம் இது பிரச்சினையில்தான் முடியப் போகிறது என்று நினைத்தாள். திரும்பி தன் அருகில் நின்றிருந்த இந்துவைப் பார்த்தாள். 'நாம போயிரலாமா?'

இந்து சிரித்தாள். 'பயப்படாதீங்க... சாப்ட்டு முடிங்க... பாதி சாப்பாட்ட தொட்டியில போட்டாலும் காலேஜ் ஹேண்ட் எவனாவது புடிச்சிக்குவான்... இங்க நாம வாங்குன சாப்பாட்ட கூட தூக்கி போட முடியாது... உடனே நம்ம எச். ஓ.டிகிட்ட கம்ப்ளெய்ன் பண்ணிருவாங்க...'

ஜோதிகா அவசர, அவசரமாக ப்ளேட்டில் இருந்ததை உண்டு முடித்து கைகளை கழுவிக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்... 'நா வரேங்க... '

'வாங்க... நீங்கதான் ஜோதிகாவா.. லலிதா டீச்சர் பொண்ணுதான?' என்றவாறு டேவிட் வாசலுக்கருகில் அவளைப் பார்த்து புன்னகைக்க ஜோதிகா பதற்றத்துடன் திரும்பி சற்று முன் கல்லூரி ஊழியன் அமர்ந்திருந்த மேசையைப் பார்த்தாள். காலியாக இருந்தது.

'ஆமா... ஆனா அது....'

டேவிட் சிரித்தான். 'லலிதா டீச்சர் ஃப்ரெண்ட் ஸ்டெல்லா டீச்சரோட சன்... சொல்லியிருப்பாங்களே?'

ஓ! நீதானா அது.... அம்மா சொன்னது சரிதான்.. சரியான அதிகப்பிரசங்கிதான் நீ..... 'சொல்லியிருக்காங்க...' என்ற ஜோதிகா சற்று தொலைவில் தங்கள் இருவரையும் பார்த்தவாறே தன்னுடைய எச்.ஓ.டி. வருவதைப் பார்த்தாள். 'சரிங்க நா வரேன்... அப்புறம் பாக்கலாம்.'

'என்ன இவ்வளவு பயந்தாங்கொள்ளியாருக்கீங்க?' என்றவன் அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தான்.... 'ஓ சதுர மண்டையா? இவனுக்கெல்லாம் பயந்தா வேலைக்காகாதுங்க...'

ஜோதிகா அவனைப் பொருட்படுத்தாமல் தலையைக் குணிந்தவாறு தன் வகுப்பை நோக்கி விரைந்தாள்..

'என்ன சார்... ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்சையெல்லாம் டெரரைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போலருக்கு?' என்று கேலியுடன் டேவிட் எச்.ஓ.டியை கேட்பது அவளுக்கு கேட்டது...

'யாரு... இந்த பொண்ணா...? நீ வேற டேவிட்... இது பயங்கரமான கேடி....பாத்து ஆப்ட்டுக்காத..நல்ல வீட்டு பையன் மாதிரி இருக்கே...' என்ற பதிலளித்தவாறு எச்.ஓ.டி. அதிர்ந்து நின்ற டேவிட்டை கடந்து செல்ல ...

எச்.ஓ.டியின் குரூரமான பதில் அவளுடைய காதுகளை தீயாய் சுட பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் தன் வகுப்பறையை நோக்கி விரைந்தாள் ஜோதிகா...

'அடப்பாவி... என்ன மோசமா பேசறான்.. இவனெல்லாம் ஒரு காலேஜ் ப்ரொஃபசர்... பொறுக்கி...' என்று முனுமுனுத்தவாறு ஜோதிகா ஓடி மறைந்த திசையைப் பார்த்தவாறு நின்றான் டேவிட்..

தொடரும்...

Technorati Tags:

3 comments:

Aani Pidunganum said...

saarval,

seekaram seekaram , innum nirayah ezhudhunga...

Anonymous said...

sir friday aachu..inum kanomaey!!!

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.