இவ்வளவு நடக்கற வரைக்கும் நீங்கல்லாம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க?' என்று எரிச்சலுடன் இரைந்தார் வெங்கடேஸ்வரலு. ஏற்கனவே 'உள்ளே' சென்றிருந்த அரை பாட்டில் உயர் ரக மது அவரை உசுப்பிவிட்டிருந்தது. தன்னுடைய மருமகன்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.
மேசையை சுற்றிலும் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரலுவின் குடும்பத்தினர், முக்கியமாக மருமகன்கள் இருவரும் தலையைக் குனிந்துக்கொண்டனர்.
தெண்ட பசங்க. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கானுங்களேங்கற ஒரே காரணத்துக்காக ஊர்லருந்து புடிச்சி கட்டி வச்சதுக்கு இது தேவைதான். காலேஜ்ல சேந்து மூனு மாசம் கூட ஆகாத வெத்து பசங்க காலேஜுக்குள்ளவே ரகள பண்ணிருக்கானுங்க. அங்கயே நாலு மொத்து மொத்தி தொரத்திவிடாம... இதுக்கு இடியன் தடியன் மாதிரி செக்யூரிட்டி வேற.
உள்ளுக்குள் புகைந்த வெங்கடேஸ்வரலு ஹாலின் மறுகோடியில் தலையைக் குனிந்தவாறு நின்ற கல்லூரி வாட்ச் அண்ட் வார்ட் தலைவனை பார்த்தார். 'யோவ்... ஒன்னெ நம்பித்தான நா காலேஜையே விட்டுருக்கேன். அந்த காலிப் பயலுங்க லேபூக்குள்ள பூந்து எல்லாத்தையும் போட்டு ஒடச்சிருந்தா என்னய்யா ஆவறது?'
செக்யூரிடி ஆஃபீசர் முருகேசன் தயக்கத்துடன் திரும்பி அவரைப் பார்த்தார். 'அந்த அளவுக்கு போயிருவானுங்களாய்யா?'
'கிளிச்சிருப்பே.... போய்யா... வாய்ல சும்மா வந்துறப்போவுது...' வெங்கடேஸ்வரலு மேலும் இரைந்தார். வசவுகள் சரமாரியாக வந்து விழுந்தன.
மேசையை சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் மூவரும் காதுகளைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியது.... ஆனால் இது நாளும் நடக்கும் நிகழ்வுகளாயிற்றே.... ஒன்றும் நடவாததுபோல் அமர்ந்திருந்தனர்.
'சரிங்க... இப்புடு என்னெ பண்றது?' அவரை அப்படியொரு கேள்வி கேட்கக் கூடிய ஒரே ஆள் கற்பகம்..
'என்னையவே கேளு.. ஏன் காலேஜ் அட்மினிஸ்ட்ரேட்டர கேக்கறது? டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கார்ல போய் வறாங்கள்லே?'
நாகராஜுலு இருக்கையில் நெளிந்தார். அடுத்து அமர்ந்திருந்த அவருடைய மனைவி ரோகினி இடுப்பில் இடித்தாள். அதற்கு 'வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கவும்' என்று அர்த்தம். இவர் எங்க எதையாவது ஒளறிக்கொட்டி அப்பாவோட எரிச்சலை கூட்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. ஓரக்கண்ணால் தன் தங்கை ரோஜாவைப் பார்த்தாள். ஏதாச்சும் சொல்லி அப்பாவ சமாதானப்படுத்தேன் என்று கெஞ்சியது அவளுடைய பார்வை. இருந்தும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் ரோஜா. அவளுக்கு எப்படியாவது கல்லூரி நிர்வாகி பொறுப்பு தன்னுடைய கணவனை வந்தால் போதும் என்ற எண்ணம்.
'அதில்லீங்க... நம்ம மருமக புள்ளைங்களுக்கு ஒங்கள மாதிரி வயசும் விவரம் இல்லீங்களே.... அதான் கேக்கேன்.' என்றாள் கற்பகம். 'அந்த பையனத்தான் ஏற்கனவே ஒரு தடவ டிஸ்மிஸ் செஞ்சி அத வித்ட்றா பண்ணமே... அதான் யோசனையாருக்கு....'
வெங்கடேஸ்வரலுவுக்கும் இந்த பிரச்சினையிலிருந்த தீவிரம் தெரிந்துதானிருந்தது. இருந்தும் இதை தவிர்த்திருக்கலாமே என்ற ஆதங்கம்தான் ஆத்திரமாக வெளிவந்தது. 'அது தெரியுதுல்ல... அப்ப என்ன பண்ணியிருக்கணும்? அந்த பையன ஆஃபீஸ் ரூமுக்கு கூப்ட்டு கடுப்படிச்சிருக்க வேணாம்லே... ரெண்டாம் வருச பசங்கள விட்டே அவனுங்கள மொத்தியிருக்க வேணாம்... இல்லையா செக்யூரிட்டிங்கள விட்டு ரெண்டு போட்டுருக்கணும். ஏதாச்சும் பிரச்சினையாயிருந்தா ரெண்டு மூனு செக்யூரிட்டிங்கள வேலைய விட்டு தூக்கி நாம தப்பிச்சிருக்கலாம். அத விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் நேரடியா தலையிட்டு...' என்றவர் மீதமிருந்த மதுவை ஒரே மூச்சில் அடித்துவிட்டு அறையிலிருந்த அனைவரையும் எரித்துவிடுவதுபோல் பார்த்தார்.
கற்பகம் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கணவனை நெருங்கினாள். 'சரிங்க... தப்புத்தான்... அதான் சொன்னேனே.... விவரம் பத்தாம இவங்க....' என்றவள் அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் மீது இருந்த மது பாட்டிலை மூடி விலக்கி வைத்தாள்.
'ஏய்... என்ன பண்றே.... இன்னும் ரெண்டு பாக்கி இருக்கே...' என்றார் இதை எதிர்பாராத வெங்கடேஸ்வரலு நாக்குழற...
'இருக்கட்டும்.' என்றாள் கற்பகம் புன்னகையுடன். 'நீங்க மொதல்ல இந்த எம்.எல்.ஏவ கூப்ட்டு அந்த பையன் செஞ்சத பத்தி சொல்லுங்க. அவர் ஏதாச்சும் சொன்னார்னா நம்ம 'அய்யாவ' கூப்ட வேண்டியிருக்கும்னு சொல்லுங்க... அவர் பேர சொன்னா வாய மூடிக்கிருவான்...'
'அய்யா' என்ற வார்த்தையை கேட்டதுமே போதை கலைந்துபோக நிமிர்ந்து அமர்ந்தார் வெங்கடேஸ்வரலு. 'ஏண்டி ஒனக்கென்ன பைத்தியமா? ஒங்கய்யாவுக்கு முளுசா சொளையா குடுத்து ரெண்டு மாசம் கூட ஆவல... இந்த லட்சணத்துல இதுக்கு தனியா கறந்துருவாண்டி... நீயே அந்த எம்.எல்.ஏ கிட்ட பேசி சமாளி. சரிவரலையா அவனுக்கு ஏதாச்சும் குடுத்துடறேன், அந்த பையன் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொல்லு....என்னால முடியாது... நா ரூமுக்கு போறேன்.'
விருட்டென்று இருக்கையை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து தடுமாறியவாறு வெங்கடேஸ்வரலு தன் அறையை நோக்கி செல்ல கற்பகம் வேறு வழியின்றி மேசை மீதிருந்த தன் செல்போனை கையில் எடுத்தாள்.
********
'இப்ப என்னடா செய்யப் போறே?' என்றாள் பார்வதி எரிச்சலுடன்.
மூர்த்தி அவளுடைய கோபத்தை பொருட்படுத்தாமல் டிவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
'டேய் ஒன்னத்தான்...' சாதாரணமாக எந்த சூழலிலும் பதற்றப்படாமல் இருக்கும் பார்வதி எழுந்து சென்று தொலைக்காட்சி பெட்டியை அணைத்தாள்.
'இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி?'
மூர்த்தி கோபத்துடன் வாசனைப் பார்த்தான். 'டேய் இது ஒன் வேலைதான? வந்ததும் வராததுமா போட்டுக் குடுத்துட்டியா?'
'டேய்... அவனுக்கே நா சொல்லித்தான் விஷயம் தெரியும்.' இடைமறித்தாள் பார்வதி. 'இவ்வளவு நடந்துருக்கு, வீடு வந்து சேர்ற வரைக்கும் அவங்கிட்ட கூட சொல்லல நீ...'
'அவன் சொல்லலனா ஒனக்கு எப்படி தெரியும்?'
'அப்பவே போன் வந்துருச்சி... ஒங்க கரஸ்பாண்டண்ட் ஆஃபீஸ்லருந்து....அதான் நம்ம வீட்டு ஃபோன் நம்பர் அவங்க ரெக்கார்ட்ல இருக்கே... இப்ப சொல்லு... என்ன நடந்திச்சி? ஒங்கப்பாவுக்கு ஒடனே ஃபோன் பண்ணி சொன்னாத்தான் இந்த சனிக்கிழமையாவது வந்து சேர்வார்...'
'அவர் எதுக்கு? பைசா பொறாத விஷயம்... எல்லாம் நானே பாத்துப்பேன்...' என்றவாறு மூர்த்தி எழுந்து தன் அறையை நோக்கி செல்ல பார்வதி அவனை இடைமறித்தாள்.
'டேய்.. நீ நெனக்கறா மாதிரி இல்ல....ரிஜிஸ்தர் தபால்ல எக்ஸ்ப்ளனேஷன் லெட்டர் வருதாம்... ஒங்கப்பா நேர்ல வந்து எக்ஸ்பிளனேஷன் குடுத்து எம் பையன் இனி இப்படி செய்யமாட்டான்னு எழுதி குடுத்தாத்தான் ஒன்னெ மறுபடியும் காலேஜ்ல சேத்துக்குவாங்களாம்......'
மூர்த்தி வாய்விட்டு சிரித்தான். 'என்னது..... எக்ஸ்ப்ளனேஷன் லெட்டரா? அதுவும் அப்பா வந்தா? என்ன புருடா விடறியா? இல்ல இவன் சொல்லி குடுத்து நீ சொல்றியா?'
வாசன் அவனுடைய குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல் அன்று அவனுடைய கல்லூரியில் நடந்ததை விவரித்தான். 'இங்க பார் மூர்த்தி... அவனையும் சஸ்பெண்ட் பண்ணிருவாங்கன்னுதான் நெனைக்கேன்... ஆனா அவனுக்கு யாரோ பொலிடிஷியன் சப்போர்ட் இருக்காம். ஒன் கேஸ் அப்படியில்லை...அத்தோட நீ காலேஜ் ப்ராப்பர்ட்டிய வேற ஏதோ டேமேஜ் பண்ணிருக்கியாம்... ஃபோன்ல சொல்லியிருக்காங்க... அதனாலதான் பயமாருக்கு...'
மூர்த்தி மீண்டும் சிரித்தான். 'போடா டேய்... போடா... ஒன்னைய மாதிரின்னு நினைச்சியா...' என்றவன் தன் தாயை பார்த்தான். 'இங்க பார்மா... அப்பாவுக்கெல்லாம் ஒன்னும் சொல்ல வேணாம்.... நம்ம தெரு பசங்கள விட்டு மறுபடியும் ஒரு கலாட்டா பண்ணா எல்லா சரியாயிரும்... இரு சொல்லிட்டு வரேன்...'
பார்வதி தடுத்தும் கேளாமல் வாசலில் கிடந்த செருப்பை அணிந்துக்கொண்டு வெளியேறினான்.
'என்னடா வாசன்... இப்ப என்ன செய்யிறது?' என்றாள் பார்வதி...
வாசன் எழுந்து நின்றான். 'நீங்க கவலைப் பட்டு என்னம்மா பிரயோசனம்.... அவனா நாம சொல்றத கேக்கப் போறான்... அவன் திரும்பி வர்றதுக்குள்ள அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருவோம்... வாங்க...'
'இவன் திரும்பி வந்து குதிப்பானடா?'
வாசன் தன் தாயை நெருங்கி அவளுடைய தோள்களை அணைத்துக்கொண்டான். 'அதுக்கெல்லாம் பயந்தா சரி வராதும்மா.... இவன் பாட்டுக்கு அந்த பசங்களோட சேந்துக்கிட்டு மறுபடியும் ஏதாச்சும் செஞ்சான்.... இவன் கூட பொறந்த பாவத்துக்கு என்னையும் வெளியில தள்ளிருவாங்க...அப்பா வந்தாத்தான் இதுக்கு சொலுஷன்... திட்டுனா திட்டிக்கட்டும்... நீங்க வாங்க...' தன் பெற்றோர்களுடைய படுக்கையறையில் இருந்த தொலைபேசியை நோக்கி அவன் நடக்க பார்வதி வேறு வழியின்றி தன் கணவர் என்னவெல்லாம் பேசுவாரோ என்ற அச்சத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.
தொடரும்...
1 comment:
சுவாரஸ்யமா போகுது.
Post a Comment