19.7.07

நாளை நமதே - 17

சென்னையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் வசிக்கும் பகுதியான அடையாறில் ஓரு சொகுசு பங்களா..

பங்களாவின் முகப்பில் சுமார் ஒரு கால்பந்தாட்ட களத்திற்கு நிகரான புல்வெளி... பச்சைப் பசேலென.. நடுவில் இருபத்திநாலு மணி நேரமும் பூமழை பொழியும் ஃபவுண்டன்.

பங்களாவின் முகப்பை சாலையிலிருந்து முற்றிலும் மறைத்தவாறு ஏழடி உயர காம்பவுண்ட் சுவரையொட்டி வளர்க்கப்பட்ட விசிறி வாழை மரங்கள் வரிசையாக..

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அந்தக் காலத்து பாணியிலிருந்த அந்த பங்களாவை அடிமாட்டு விலைக்கு வாங்கி - அபகரித்து என்பதுதான் சரி - ஒரு புது பங்களாவை கட்டுவதற்கு தேவையான... ஏன் அதற்கும் கூடுதலாகவே, பணத்தை வாரியிறைத்து புதுப்பித்து வெளிப்புறத்தை அதே பழைய பாணியிலும் உட்புறத்தை அல்ட்றா மாடர்ன் வசதிகளுடனும் மாற்றியமைத்திருந்தார் வெங்கடேஷ் என்கிற வெங்கடேஸ்வரலு.. வேல்முருகன் க்ரூப் ஆஃப் எஜுகேஷன்ஸ் உரிமையாளர்.

வெங்கடேஷ் பங்களாவில் நடுநாயகமாக இருந்த அலுவலக அறையில் ஒரூ நீஈஈஈஈள மேசைக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்பக்கத்தில் அவருக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக பக்கபலமாக இருந்துவரும் 'அப்பா' என்று தொண்டர்கள் அன்புடன் அழைக்கும் அரசியல்தலைவர். அதாங்க, தமிழக அரசியல்ல.... எந்த பதவியும் வகிக்காம கடந்த பத்து வருசமா எந்த கட்சி ஆட்சிய புடிச்சாலும் அந்த கூட்டணியில இருக்கற நம்ம தலைவர்தாங்க...

அவருடைய பார்வை நீண்டு, பரந்துக் கிடந்த, பணக்காரத்தனமான ஹாலை ஒரு வலம் வந்தது.

'நாம மட்டும் இல்லன்னா இந்த கொல்ட்டிக்கி இந்த அந்தஸ்த்து கெடச்சிருக்குமாடே?' அன்று காலையில் வரும் வழியில் தன் அந்தரங்க காரியதரிசியிடம் கேட்டது நினைவுக்கு வந்தது.

'அய்யாவுக்கு வேணும்னு சொன்னா முடியாதுன்னு சொல்றதுக்கு யாருக்குய்யா தைரியம் இருக்கு? ஒரு வார்த்த சொல்லுங்கய்யா... அடுத்த வாரமே பங்களா நம்ம கையில...'

'அடேய்... அடேய்... நா என்ன சொல்ல வரேன்... நீ என்ன சொல்லுதே... அந்த பங்களா எதுக்குடா நமக்கு...?'

காரியதரிசி சட்டென்று பின்வாங்கினார். இந்தாளு என்ன சொல்ல வரார்னு நமக்கே சில சமயத்துல வெளங்கமாட்டேங்குதே.. 'சரிங்கய்யா... நமக்கு வேண்டியது நமக்கு அவருக்கு வேண்டியது அவருக்கு....'

தலைவர் சிரித்தார். 'அதாண்டே... நமக்கு என்ன வேணும்... அது கிடைச்சிக்கிட்டே இருக்கணும்...'

வெத்துப் பயலாருந்தவனுக்கு வந்த வாழ்வு... ஹூம் என்று பெருமூச்செறிந்தார்.... இவனுக்கு பின்னால எவனெவன் இருக்கானோ... ஆந்திராவுல நம்மளவிட பெரும்புள்ளிங்கல்லாம் இருக்கானுங்களே.. மிளகா, புகையலன்னு தங்கச் சுரங்கத்தையல்ல வச்சிருக்கானுங்க... போறாததுக்கு சாராயம் வேற... காசுக்கென்ன... இல்லன்னா ஒரு பழைய பேப்பர் வித்துக்கிட்டிருந்த பயலுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்திருக்க முடியும்? லட்டு மாதிரி ஒரு பொஞ்சாதி.. இவள காட்டியே எங்கங்க பணம் பண்ணானோ?

அவருடைய நெருங்கிய நண்பரான ஒரு ஆந்திர அரசியல்வாதியின் 'இந்தாளு நம்ம பினாமி தலைவரே. நீங்க இருக்கீங்கன்னுதான் இவனெ ஒங்க ஊருக்கு அனுப்பறேன். இவனுக்கு செய்யிறது எனக்கே செஞ்சா மாதிரி... நம்ம '... ...' கூட இதுல ஒரு இன்வெஸ்டர். அத மறுந்துராதீங்க.' என்ற பரிந்துரையோடு சென்னை வந்தவர்தான் இந்த வெங்கடேஸ்வரலு.

இன்றைய வேல் முருகன் குரூப் சேர்மன் வெங்கடேஷ்..... அப்பப்போ படியளக்கற மொதலாளின்னும் சொல்லிக்கலாம்...

வெங்கடேஷுக்கு இடப்பக்கத்தில் அவருடைய அன்பு மனைவி கற்பகம். அவருக்கு அடுத்து வெங்கடேஷ்-கற்பகம் தம்பதியரின் இரு புதல்விகள்: ரோகினி மற்றும் ரோஜா. அவர்களையடுத்து அவர்களுடைய கணவன்மார்கள் நாகராஜுலு மற்றும் பிரசாத், அதாவது வேல் முருகன் க்ரூப்பில் இருந்த இரண்டு கல்லூரிகளின் நிர்வாகிகள்.

வெங்கடேஷ் ஒரு மகிழ்ச்சி புன்னகையுடன் தலைவரைப் பார்த்தார். 'மீட்டிங்க தொடங்கிரலாங்களா?' என்றா பவ்யமாக.

'தொடங்கித் தொலைடா கொல்ட்டி' என்று உள்மனதில் கறுவிய 'அப்பா' புன்னகையுடன், 'தொடங்கிரலாங்க....' என்றார் பெருந்தன்மையுடன். 'சீக்கிரம் முடிச்சிட்டா நல்லது. எனக்கு ஒரு மறியல் போராட்டத்துக்கு தலைமை தாங்கணும்.'

'போய்யா நீயும் ஒன் மறியலும்.. அதான் தெனம் ஒரு மறியல் நடத்தி ஊரையே நாறடிக்கறியே' என்று மனதுக்குள் முனகினார் வெங்கடேஷ்.. 'செஞ்சிரலாங்க...' என்று பதிலளித்தார் தன் மூத்த மருமகனைப் பார்த்தவாறு.

வெங்கடேஷின் பார்வையைப் புரிந்துக்கொண்ட மூத்த மருமகன் நாகராஜுலு தன் முன்னிருந்த அறிக்கையிலிருந்து வாசிக்கத் துவங்கினார். 'இந்த வருசமும் நாம கவுன்சிலிங்குக்கு அலாட் செஞ்சிருந்த எல்லா சீட்டுங்களூம் ஃபில் அப் ஆயிருக்கு. தமிழ்நாட்டுலருக்கற மொத்த காலேஜ்லயுமா சேர்த்து சுமார் இருபதாயிரம் சீட் வேக்கண்டா இருக்கறப்ப நம்ம க்ரூப் காலேஜஸ் மூனுலயுமே எல்லா சீட்டும் ஃபில்லப் ஆயிருக்கறது ஒரு ஹிஸ்டரி.'

'போறுண்டா டேய் ஒங்க பிலாக்கணம். சிட்டிங் ஃபீசோட குடுக்க வேண்டியத சேர்த்து குடுத்தா நா போய்க்கிட்டே இருப்பேன்ல?' என்று நினைத்தார் 'அப்பா'

ஆனாலும் 'அப்படியா...' என்றார் வாயெல்லாம் பல்லாக. 'அஞ்சு வருசத்துல ரொம்பவே சாதிச்சிருக்கீங்க..'

'எல்லாம் ஒங்க தயவுய்யா...' என்றார் வெங்கடேஷ்... 'அப்பப்போ கறந்துட்டாலும்...' இது அவர் மனதில் நினைத்தது.

தொடர்ந்து தன்னுடைய நிர்வாகத்தில் இருந்த கல்லூரியின் அருமை பெருமைகளை நாகராஜுலு படிக்க ஆரம்பிக்க 'தலைவர்' பொறுமையிழந்து எழுந்து நின்றார்.

'நீங்க தொடர்ந்து போட் மீட்டிங்க நடத்திக்குங்க.. எனக்கு அவசரம்...'

வெங்கடேஷுக்கு புரிந்தது. தன்னுடைய இளைய மருமகன் பிரசாதைப் பார்த்தார். அவன் உடனே தன் காலடியில் வைத்திருந்த கைப்பெட்டியை எடுத்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து தன் மாமனாரிடம் நீட்ட அவர் அதை சம்பிரதாயமாக தலைவரிடம் நீட்ட, அவர் பெயருக்கு அதை தொட்டுவிட்டு விலகிக்கொண்டார். இது வழக்கமாய் நடக்கும் சடங்குதான். நாடு போற்றும் ஒரு தலைவர் கைப் பெட்டியை தூக்கிக்கொண்டு ஒரு 'கஸ்டமரின்' அலுவலகத்திலிருந்து வருவதை ஏதாவது பத்திரிகையாளர் பார்த்துவிட்டால் என்னாவது!

தலைவர் தன்னுடைய வாகனத்தை நெருங்குவதற்குள் பெட்டி டிக்கியில் வைக்கப்பட்டுவிடும் என்பது அவருக்கு தெரியும் என்பதால் புன்னகையுடன் மேசையை சுற்றிலும் இருந்தவர்களிடம் கரம் குவித்து விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார். வெங்கடேஷ் அவர் பின்னால் இரண்டடி தள்ளி ஒரு நாடகத்தனமான பவ்யத்துடன் நடந்தார்.

கஞ்சியில் தோய்த்து தேய்த்த வேட்டி சட்டையில் விசுக், விசுக்கென்று நடந்து வாகனத்தில் ஏறி கேட்டைக் கடந்து தலைவர்' மறையும் வரை பவ்யமாய் நின்றிருந்த வெங்கடேஷ் காறித் துப்பினார்... 'ராஸ்கோல், ராஸ்கோல்... எந்துக்குறா? எந்துக்கு... குடுத்ததெல்லாம் பத்தாதா.... கொஞ்சமா நஞ்சமா.... சொளையா ---------- லட்சம்... எவன் அப்பன் வீட்டுக்காசு... குடுத்து வச்சா மாதிரி வாங்கிட்டுப் போறே..?'

மாமனாரின் வாயிலிருந்து தொடர்ந்து வந்த வசவுகள் இளைய மருமகனை சிறிதளவும் பாதிக்கவில்லை. இது 'அவர்' வந்து போகும்போதெல்லாம் கேட்பதுதானே. ஆனாலும் சாமியறையிலிருந்து வெளியில் வந்து பத்து நிமிடம் கூட ஆகாத நிலையில்.... இன்று சற்று அதிகம்தானோ என்று தோன்றியது.

எங்கே மாமனாரின் கோபம் தன் மீது பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் விடுவிடுவென்று ஹாலை நோக்கி விரைந்தான் பிரசாத்.

சில நிமிடங்கள் கழித்து ஹாலுக்குள் மீண்டும் நுழைந்த வெங்கடேஷ் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து தன் குடும்பத்தினரைப் பார்த்தார்.

'என்னங்க அந்த மனுசனுக்கு மறுபடியும் குடுத்தீங்களா?' என்றார் கற்பகம்.

'பின்னே... வேறென்ன செய்யிறது... இனி மூனு, நாலு மாசத்துக்கு இந்த பக்கம் தலைய வைக்காம இருக்கற அளவுக்கு குடுத்துருக்கேன்.... சாமிக்கு குடுத்தோம்னு நினைச்சிக்குவம்... சரி.. அது தொலையட்டும்... நாளையிலருந்து அட்மிஷன் தொடங்கணுமே... அதப்பத்தி பேசுவோம்.'

அவருடைய பார்வை தன் மீது படுவதை உணர்ந்த நாகராஜுலு, 'எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சி... இங்கயே வச்சி செஞ்சிரலாம்னு....'

வெங்கடேஷ் எரிந்து விழுந்தார். 'அதென்ன செஞ்சிரலாம்னு இளூக்கீங்க... பின்னே காலேஜ்ல வச்சா செய்ய முடியும்? சரி.. அந்த நோட் கவுண்டிங் மெஷின ரிப்பேர் பண்ண சொன்னேனே செஞ்சாச்சா...?'

நாகராஜுலு தன் அருகில் அமர்ந்திருந்த பிரசாதைப் பார்க்க அவன் என்னெ ஏன் பாக்கறே என்பதுபோல் திருப்பிப் பார்த்தான்.

'என்னய்யா ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பாக்கீங்க... என்னம்மா ரோகினி, இதான் நீ சொல்லிக் குடுக்கற லட்சணமா?' என்றார் கற்பகம் புன்னகையுடன். பிறகு தன் கணவரைப் பார்த்தார். 'நீங்க டென்ஷனாகாம போங்க... ஏற்கனவே சிஸ்டாலிக் ப்ரஷர் லிமிட்டுக்கு மேல இருக்கு... இத நா பாத்துக்கறேன்... ஃபோன் பண்ணா ஒரு மணி நேரத்துல வந்துருவான். நாம மொதல்ல யூனிவர்சிட்டி ஃபிக்ஸ் பண்ணதுக்கு மேல எவ்வளவு வாங்கணும்னு டிசைட் பண்ணிருவோம்.'

கற்பகத்தின் வார்த்தைகள் வெங்கடேஷ பணிய வைத்தன. தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்து இளைய மகள் ரோஜா தன் முன்னாலிருந்த கோப்பிலிருந்து முந்தைய தினம் விவாதத்தின் முடிவில் தயாரித்திருந்த தொகைகளை ஒவ்வொன்றாக வாசிக்க வெங்கடேஷ் கண்களை மூடிக்கொண்டு வருகின்ற வாரத்தின் முடிவில் தன் கஜானாவில் எத்தனை லட்சங்கள் சேரும் என்பதை கணக்கிடலானார்.

தொடரும்..

No comments: