இதுவரை...
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் துவங்கி மளமளவென்று இடங்கள் நிரப்பப்பட்டன.
நம்முடைய கதைக்களத்தின் நாயகனான வேல் முருகன் பொறியியல் கல்லூரி அரசு கவுன்சிலிங்குக்கு விட்டுக் கொடுத்த அனைத்து கூடுதல் கட்டணம் இல்லாத இலவச இடங்களும் கவுன்சிலிங் துவங்கி இரண்டு வாரங்களுக்குள்ளேயே நிரம்பிவிட பரத்தின் நண்பர்கள் பலருக்கும் அவன் தெரிந்தெடுத்திருந்த கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது. கவுன்சிலிங் சென்ற அன்று கிண்டி பொறியியல் கல்லூரியிலேயே இடம் இருந்தும் வேல் முருகன் கல்லூரியில் பேமெண்ட் இடத்தை தெரிவு செய்ய அவனை வினோதத்துடன் பார்த்தவர்களை பொருட்படுத்தாமல் இருந்த பரத் தன்னுடைய நெருங்கிய நண்பன் கணேசனுக்கும் எந்த கல்லூரியிலும் இலவச இடம் கிடைக்காமல் போனதும் சோர்ந்துப்போனான். 'சாரி பரத்... அப்பாவும் இப்படியாவும்னு நினைக்கல... Ask them to join in any of the arts colleges. அட்மிஷன்ல ஏதாச்சும் ப்ராப்ளம் இருந்தா சொல்லு... நா ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாக்கறேன்.' என்றார் ராஜசேகரன்.
வாசனுக்கு வேல் முருகனில் ஃப்ரீ சீட் கிடைத்தது. ஆனால் மூர்த்திக்கு அந்த கல்லூரியில் பேமெண்ட் சீட்டும் கிடைக்கவில்லை. பிறகு பஞ்சாபகேசன் தன் நண்பர் ஒருவரின் உதவியுடன் அதே க்ரூப்பைச் சார்ந்த அடுத்த வளாகத்திலிருந்த வேலன் தொழில்நுட்பக் கல்லூரியில் நிர்வாகிகள் கோட்டாவில் பெருமளவு பணம் செலுத்தி இடம் பிடித்துக்கொடுத்தார். 'அப்பாவுக்கு ஏற்பட்ட இந்த நஷ்டத்துக்கு ஒன்னோட சுயநலம்தாண்டா காரணம்.' என்று பஞ்சாபகேசன் வாசனை சாடியபோது அவரை எதிர்த்து வாதாடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து மவுனமாய் நின்றான். எப்படியோ இனியாவது தன் சகோதரனுடைய தொல்லையிலிருந்து விடுதலை கிடைத்ததே என்று நினைத்தான்.
ஜோதிகாவுக்கும் பேமெண்ட் சீட்டே கிடைத்தது. 'ஒரு பொட்ட பொண்ணுக்கு இவ்வளவு பணம் கட்டி படிக்க வைக்கணுமான்னு கேக்கறாங்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம். அம்மாவோட கட்டாயத்துக்காகத்தான் அப்பா சம்மதிச்சேன். இனியாவது டி.வியே கதின்னு கிடைக்காம நல்லா படிச்சி கேம்பஸ்லயே ஒரு வேலையா வாங்கிக்க வேண்டியது உன் பொறுப்பு, சொல்லிட்டேன்..' ஜோதிகாவுக்கு 'பொட்ட பொண்ணுதானே' என்ற அப்பாவின் சுடுசொல் அவமானமாக இருந்தாலும் இதற்கு தானும் ஒரு காரணம்தானே என்று நினைத்து பொறுத்துக்கொண்டாள். 'அப்பா கடனாயிருச்சேங்கற ஒரு ஆதங்கத்துல பேசறாங்கடி. அத பெருசா எடுத்துக்காத.' என்றாள் லதா. 'வருசம் எழுபத்தஞ்சின்னு இவ படிச்சி முடிக்கறதுக்குள்ள காலேஜுக்கே மூனு லட்சம் ஆயிரும் போல... அதுக்கப்புறம் டவுரி வேற... அதுக்கப்புறம் மிச்சம் மீதி இருந்தாத்தான் எனக்கு... அப்படித்தானேம்மா?' என்ற மகன் ராஜ்குமாரிடம், 'டேய் பொறாமைப் படாதே. படிக்கற வயசுல வாழ்க்கைய அனுபவிக்கணும்னு நினைச்சா இந்த கதிதான்.. இனியாவது ஒழுங்கா படிச்சி ப்ளஸ் டூவ முடிக்கப் பாரு. ஈவ்னிங் காலேஜ்லயாவது சேரலாம்.' என்றாள்.
ப்ரியாவுக்கு வேல் முருகனில் பேமெண்ட் சீட் கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் அலாட்மெண்ட் கடிதம் கிடைத்ததுமே மாலதி அவளுடைய தோழியின் உதவியுடன் வங்கியை அணுக அதிக சிரமமில்லாமல் கடனும் கிடைத்தது. 'ரொம்ப தாங்ஸ்மா....' என்று தன்னை இறுக அணைத்த மகளின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள் மாலதி... எப்படி அடைக்கப் போறேன்.... அசலும் வட்டியும் சேர்த்து நாலு லட்சத்த கடந்துரும் போலருக்கே.... மாசா மாசம் சம்பளத்துல இருந்தே அடைக்கணும்னு நினைச்சா நடக்கற காரியமா இது.... அதுக்கப்புறம் இவளுக்கு நகைகள சேக்கணும், வரதட்சணை... கல்யாணச் செலவு... இந்த கடன அடைச்சி இவள கல்யாணம் பண்ணி அனுப்புனதுக்கப்புறமும் பணத்தேவை இருக்குமே... என்ன செய்யப்போறேன்? ஏய் ஒம் பொண்ணுக்கு ப்ராமிஸ் செஞ்சி குடுத்துருக்கே... என்று இடித்த உள்மனதை அடக்கினாள் மாலதி... எம் புருசனுந்தான் ப்ராமிஸ் பண்ணான், அக்னி சாட்சியா.. கடைசி வரைக்கும் கண் கலங்காம வச்சிக்கிறேன்னுட்டு... செய்யலையே... Yes.... என் வழி தனி வழிங்கறாப்பல .... இதுவரைக்கும் நான் travel பண்ண பாதைதான் இதுக்கு ஒரே சொலுஷன்... சுவர் இருக்கும்போதுதான சித்திரம் வரைய முடியும்... ....ஆனா அதே சமயம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவ நம்மள சந்தேகப்படாதபடி நடந்துக்கணும்....
சுந்தருக்கும் அதே கல்லூரியில் பேமெண்ட் சீட்... அவளுடைய தாயின் கருணையில். 'டேய்.. என்னவோ பெரிய ஆள்மாதிரி குதிச்சே.. அம்மாவ எவ்வளவு கேவலாம நடத்தினே... இப்பவாவது புரிஞ்சிக்கோ. என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான். அப்பா அப்பாதான்... ' என்று ப்ரேமா கேலியுடன் பேசியபோது அவமானத்தில் தலைகுனிந்து நின்றான் சுந்தர். 'என்னம்மா நீ... நீ எப்பவாச்சும்தான வரே... நீயும் இல்லாதப்போ அண்ணாதான என்னெ பாத்துக்கிட்டான்.' என்றான் சுதாகர். 'பரவால்லையே ஒன்னையும் எனக்கு எதிரா திருப்பிட்டானா ஒங்கண்ணன்?' என்ற ப்ரேமா, 'இங்க பாருங்கடா ஒங்க ரெண்டு பேருக்கும் சொல்லிக்கறேன்.... நா தொடர்ந்து அடுத்த வருசமும் ஒங்களுக்கு ஃபீஸ் கட்டணும்னா ஒங்கப்பாவ ஒதறிட்டு ஒழுங்கு மரியாதையா எங்கூட இருங்க... இல்ல இதான் நா இந்த வீட்டுக்கு வர்ற கடைசி நாள்.. என்ன சொல்றீங்க?' என்று மிரட்ட சுதாகர் சுந்தரைப் பார்த்தான். 'ஒத்துக்கயேன்...' என்பதுபோல... 'சரி' என்று தலையாட்டினான் சுந்தர், வேறு வழியில்லாமல். மாசா மாசம் அஞ்சாயிரத்த அனுப்புனா போறும்னு நினைக்கற அப்பாவ நம்பி என்ன பிரயோசனம்? நாலே வருசம்... பல்ல கடிச்சிக்கிட்டு இருந்துருவோம்... அதுக்கப்புறம்... இவங்க யாரும் வேணாம்... சுதாகர் மட்டுந்தான் என் வாழ்க்கைன்னு முடிச்சிக்குவோம் என்ற நினைத்தான்...
*******
நாளை கல்லூரிகள் திறக்கும் நாள்....
பலருடைய கனவுகள் நனவாகும் காலம் துவங்கப் போகும் நாள்... பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க விருக்கும் காலத்தின் ஆரம்ப நாள்...
கடந்த இரண்டாண்டு கால பள்ளி வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களுக்கு, உறங்காமல் விழித்திருந்து செலவழித்த இரவுகளுக்கு விடியல் நாளைதான்...
எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள்...
நாளைய உலகின் பிரதிநிதிகள் இவர்கள்...
நாளைய உலகம் இவர்களை கையில்தானே...
எத்தனை, எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள்....
இத்தனை கனவுகளுடன், எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிகளில் நுழையும் இவர்களுடைய எண்ணங்கள், அபிலாஷைகள், ஆசைகள், கனவுகள்...
நிறைவேறுமா?
நாளை முதல்... இவர்களுடைய அடுத்த நான்காண்டு கல்லூரி அனுபவங்கள்...
தொடர்கிறது....
நாளை நமதே...
6 comments:
ஜோசப் சார், இதெப்போ தொடங்குனீங்க? இதெல்லாம் கண்லயே படலை. எல்லாம் இந்த நேர வித்தியாசம் செய்ற வேலை.
இனிமே வந்துருவோம்ல. தொடருங்க தொடருங்க உங்க தொடருங்க. :)
வாங்க ராகவன்,
எல்லாம் இந்த நேர வித்தியாசம் செய்ற வேலை.//
இப்ப நீங்க இந்தியாவுல இல்லையா? எங்கருக்கீங்க?
இனிமே வந்துருவோம்ல.//
வாங்க.. டைம் கிடைக்கறப்பல்லாம்...
நான்கூட வெளியூர் போய்ட்டு இப்பவந்தேன்...புதுபதிவு பற்றி பின்னூட்டம் போட்டு இங்கேவர லேட்
// tbr.joseph said...
வாங்க ராகவன்,
எல்லாம் இந்த நேர வித்தியாசம் செய்ற வேலை.//
இப்ப நீங்க இந்தியாவுல இல்லையா? எங்கருக்கீங்க? //
இப்ப நெதர்லாந்துல இருக்கேங்க. புரோஜக்ட் வேலையா வந்திருக்கேன்.
இப்ப நெதர்லாந்துல இருக்கேங்க. //
நெதர்லேண்ட பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.. படங்களோட:-)
வாங்க சிஜி!
நான்கூட வெளியூர் போய்ட்டு இப்பவந்தேன்...புதுபதிவு பற்றி பின்னூட்டம் போட்டு இங்கேவர லேட் //
என்ன சார் க்ளாசுக்கு லேட்டா வர்ற ஸ்டூடண்ட் மாதிரி...;-)
Post a Comment