அண்ணா பல்கலைக்கழகத்தின் ரேங்க் பட்டியலையும் வெவ்வேறு நிலைக்கான கவுன்சிலிங் தேதிகளையும் இணையதளத்தில் பார்த்த சுந்தர் எப்படியிருந்தாலும் தன்னுடைய கவுன்சிலிங் தேதி வரும் சமயத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளிலுள்ள ஃப்ரீ சீட்டுகளில் தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான். கவுன்சிலிங் துவங்கி சுமார் இரண்டு வாரங்கள் கழித்தே அவனுடைய மதிப்பெண்களூக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
போன தடவ ஃபோன் பண்ணப்பவே அப்பா க்ளியரா சொல்லிட்டாங்க, என்னால பணம் கட்டி படிக்க வைக்க முடியாதுன்னு... இப்பவும் அதயேத்தான் சொல்லப் போறாங்க... எண்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருக்கும்னு அப்பாவுக்கு தெரியாமயா இருக்கும்? ஏறக்குறைய ரெண்டு வாரமாகியும் அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி கேக்கணும்னு கூட தோனலையே... வேணும்னா நீயே கூப்டுன்னு இருக்கற அப்பாக்கிட்டா சாரிப்பா எனக்கு பேமெண்ட் சீட்தான் கிடைக்கும் போலருக்குன்னு எப்படி சொல்ல?
அம்மாவும் எப்படியும் நமக்கு ஹெல்ப் பண்ணப் போறதில்ல. எண்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்ததுமே ஏதாச்சும் ஒரு ஆர்ட்ஸ் காலேஜுக்கு அப்ளை செஞ்சிருக்கலாம்...
இந்த அம்மா பண்ற அட்டூழியத்துல எதுலயுமே மனசு போமாட்டேங்குது.... அவங்க வீட்டுக்கு வந்தே ஒருவாரமாகப் போகுது...
'என்னடா அண்ணா சாப்டாம அப்படியே ஒக்காந்துருக்கே... பசி இல்லையா? நா ஒன்னத எடுத்துக்கட்டுமா?'
சுந்தர் வேதனையுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த தன் சகோதரன் சுதாகரைப் பார்த்தான். அவனும் சரியாக சாப்பிட்டு ஒரு வாரமாகிறது... தன்னால் என்ன முடியுமோ அதை சமைத்துப் போடத்தான் செய்தான்... ஆனால் உப்புசப்பில்லாத அந்த சாப்பாட்டை அவனாலேயே சாப்பிடமுடியாதபோது பாவம் சுதாகர் என்ன பண்ணுவான்...
'சாரிடா சுதாகர்... எனக்கு சாப்பிடற மூடே இல்லடா..' என்றவாறு தன் ப்ளேட்டிலிருந்த இரண்டு ரொட்டித் துண்டுகளையும் சுதாகரின் ப்ளேட்டில் வைத்துவிட்டு எழுந்து சென்று ஃப்ரிட்ஜை திறந்து பாத்திரத்திலிருந்த குளிர்ந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி கொண்டு வந்தான்.. 'இதயும் குடிச்சிட்டு நீ போய் ஹோம் ஒர்க் ஏதாச்சும் இருந்தா பண்ணு.. இல்லையா டிவி பாரு... நா அம்மாவுக்கு ஃபோன் பண்ணி பாக்கேன்...'
கிருஷ்ணன் துபாய் கிளம்பிச் சென்ற நாள் முதலே அவனை விடவும் நான்கு வயது இளையவனான சுதாகரை அவனால் இயன்றவரை பராமரிக்கத்தான் செய்தான். ப்ரேமா கடந்த சில ஆண்டுகளாகவே தன் மனம் போக்கில் சென்றுக் கொண்டிருந்ததால் கிருஷ்ணனுடைய மேற்பார்வையில் சில்லறை சமையல் வேலைகளை படித்து வைத்திருந்தான் சுந்தர்.
கிருஷ்ணன் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பே வீட்டை விட்டு கிளம்பிவிடும் ப்ரேமா இரவு வெகு நேரம் கழித்து திரும்பவது வழக்கம். அதை தடுக்க முயன்று தோற்றுப்போன கிருஷ்ணனும் அலுவலகம் முடிந்ததும் நேரே வீடு திரும்பும் பழக்கத்தை கைவிட்டுவிட பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்ந்ததும் சுந்தர் தனக்கும் சுதாகருக்கும் தேவையானவற்றை சமைத்துக்கொள்ள பழகிக்கொண்டான். இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்கும் ஏன் ப்ரேமாவுக்கும் கூட வசதியாகிப் போனது.
நாளடைவில் காலையுணவைத் தவிர வீட்டில் உணவருந்தும் பழக்கத்தையே கிருஷ்ணனும் ப்ரேமாவும் விட்டுவிட சுந்தரும் சுதாகரும் தங்களுடைய தேவைகளை தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆகவே கிருஷ்ணன் துபாய் புறப்பட்டுச் சென்றதோ அல்லது ப்ரேமா வாரத்தில் நான்கைந்து நாள் இரவு வீட்டிற்கு திரும்பாமல் இருப்பதோ சுந்தரை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் கடைக்குட்டியான சுதாகரை அது வெகுவாகப் பாதித்ததை அவனால் உணர முடிந்தது. குறிப்பாக அவனுடைய படிப்பு. 'இங்க பார் சுதாகர். அப்பாவும் இப்போதைக்கு திரும்பி வரப்போறதில்லை... அம்மாவும் அவங்க போக்கை மாத்திக்கப் போறதில்லை... ஒனக்கு நான், எனக்கு நீ... இதான் நம்ம லைஃப். அத நீ மொதல்ல புரிஞ்சிக்கணும்... அப்பா வரலைன்னாலும் நம்ம ரெண்டு பேருக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிக்கிட்டுத்தானடா இருக்கார்... அத வச்சி நம்மால எந்த அளவுக்கு வசதியா லைஃப ஸ்பெண்ட் பண்ண முடியுமோ அப்படி ஸ்பெண்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.. கிடைச்சத சாப்ட்டுட்டு படிக்கணும்... ஒனக்கு அதுதான் முக்கியம்...' என்பான் சுதாகர் சோர்வடையும் போதெல்லாம்.
ரிங் போய்க் கொண்டேயிருந்தது..... அம்மா வேணும்னே எடுக்காம இருப்பாளோ என்று நினைத்து இணைப்பைத் துண்டிக்க முனைந்தான்...அந்த நேரத்தில் எதிர்முனையிலிருந்து, 'எதுக்குடா இப்ப போன் பண்றே... அம்மா இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்கவா?' என்று குரல் வந்தது.
சுந்தர் ஒரு நொடி எப்படி பதிலளிப்பதென தெரியாமல் திகைத்து நின்றான்... பிறகு செல்ஃபோனை வரவேற்பறையிலிருந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சுதாகரிடம் நீட்டினான். 'டேய்... அம்மா... பேசறியா?'
சுதாகர் ஆவலுடன் செல்ஃபோனை வாங்கிக்கொண்டான். 'என்னம்மா நீ வீட்டுக்கே வரமாட்டேங்கறியே?' என்றான்...
சுந்தர் அவனருகில் அமர்ந்து டிவி பெட்டியை அணைத்துவிட்டு காத்திருந்தான். சுதாகர் கேட்டால் அம்மா வருவாள் என்று தெரியும். அவள் வீட்டுக்கு வந்தால் வெட்கத்தை விட்டு அவளிடம் கேட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தான்...
'இல்லம்மா சுந்தர் அப்படியெல்லாம் சொல்லமாட்டான்... நீ வாம்மா...' சுந்தருக்கு... சுதாகரைப் பார்க்க பாவமாக இருந்தது.. 'அம்மா என்ன சொல்றாடா?' என்று வாயசைத்தான்... 'இரு... சொல்றேன்.' என்று சைகைக் காட்டிய சுதாகர்,, 'இன்னைக்கி வரியா... தாங்ஸ்மா... நா தூங்காம காத்துக்கிட்டிருப்பேன்..' என்றவாறு இணைப்பைத் துண்டித்து சுந்தரிடம் நீட்டினான்..
'என்னடா.. வராங்களாமா?'
'ஆமாடா...'
'வேற ஏதாச்சும் சொன்னாங்களா?'
'வர்றப்போ நாம சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வராங்களாம்... சமைக்க வேணாம்னு சொன்னாங்க...'
'ரொம்ப முக்கியம்' என்று தனக்குள் முணகியவாறு எழுந்து வீட்டையும் சமையலறையையும் ஒழுங்குப் படுத்த முயன்றான்...
'டேய் அண்ணா...' என்றவாறு அவனைப் பின்தொடர்ந்து வந்தான் சுதாகர், 'நான் வேணும்னா ஒன் எஞ்சினீயரிங் சீட்ட பத்தி அம்மா கிட்ட பேசட்டா?'
'என்ன பேசப் போறே?' என்றான் சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை கழுவியவாறு... ப்ரேமாவுக்கு எது எப்படியோ வீடு அதிலும் சமையலறை, சுத்தமாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் சாமியாடுவாள் என்பது இருவருக்குமே தெரிந்துதானிருந்தது... ஆனால் சுதாகர் என்ன சொன்னாலும் தன் போக்கிலேயேதான் செல்வான்.. அவன் பின்னாலேயே சென்று அவன் வீசி எறிந்த துணிமணிகளை தேடிப்பிடித்து மடித்து வைப்பதிலேயே சுந்தரின் நேரம் வீணாகிவிடும். ஆனாலும் ஒரு தந்தையின் பாசத்தோடு சுதாகரை கடிந்துக்கொள்ளவே மாட்டான்...
'நீ தான சொன்னே.. ஒனக்கு ஃப்ரீ சீட் கிடைக்கறதுக்கு சான்ஸ் இல்லேன்னு....'
'அதுக்கு? அம்மாட்ட பேமெண்ட் சீட்டுக்கு காசு தாங்கன்னு கேக்கப் போறியா?' என்றவாறு சிரித்தான் சுந்தர்.. 'வந்தவுடனே இப்படி கேளு... வந்ததே தப்புன்னு போயிரப் போறாங்க..'
'ச்சீச்சி.. அப்படியெல்லாம் பண்ண மாட்டங்கடா... நீதான் அம்மாவ தப்பா நினைச்சிருக்கே... நான் கேட்டா நிச்சயமா தருவாங்க..'
சுந்தருக்கும் அந்த யோசனை பிடித்திருக்கவே சரி என்பதுபோல் தலையை அசைத்தான். இருந்தாலும் இந்த அம்மா பணத்துல படிக்கணுமா? என்றும் நினைத்தான்....அத சொல்லிக்காட்டியே அவங்க போக்குக்கு தன்னையும் இழுப்பாங்களே...
'என்னண்ணா.. கேக்க வேணாம்னா கேக்கலை... ஆனா எனக்கென்னவோ கேட்டுத்தான் பாப்பமேன்னு தோனுது..'
பதிலளிக்காமல் தன் சகோதரனைப் பார்த்தான் சுந்தர்... 'சரிடா.. கேளூ... உன் ஆசையைக் கெடுப்பானேன்.... ஆனா எனக்கென்னவோ அம்மா தருவாங்கற ஹோப் இல்லை...என்னோட எண்ட்ரன்ஸ் எக்ஸாம் மார்க் குறையறதுக்கே அவங்கதானடா காரணம்... அவங்க மட்டும் அன்னைக்கி அப்படி வந்து அசிங்கம் பண்ணலன்னா நாம இங்க காலி பண்ணி வந்துருக்கவே வேணாம்... என் ப்ரிப்பரேஷனே அதனாலதான ஸ்பாய்லாயிருச்சி...?'
சுதாகருக்கு தன் சகோதரனைப் பார்க்க பாவமாக இருந்தது. ப்ளஸ் டூவில் 90 சதவிகித மதிப்பெண்கள் வாங்கியவன் எண்ட்ரன்சிலயும் நிச்சயம் அதே பெர்சண்ட் வாங்கியிருப்பான்... எல்லாத்துக்கும் அம்மாதான் காரணம்... அதனால அம்மாதான் இதுக்கு வழி சொல்லணும். அதனால அம்மா வர்றதுக்குள்ள ஹோம் ஒர்க்க முடிச்சிட்டு ரெடியா இருக்கணும்... என்று நினைத்தவாறு தன்னுடைய ஸ்டடி மேசையை நோக்கி நகர்ந்தான்....
தொடரும்...
2 comments:
அட! ஊர்லேயிருந்து வந்தாச்சா!
அப்ப இனி தொடர்ந்து படிக்கக் கிடைக்கும்?
வாங்க ஜி!
ஆமா.. வந்துட்டேன்...
இந்த வார எப்பிசோட்கள் தடங்கல் இல்லாமல் வரும்னு நினைக்கேன்...
Post a Comment