12.7.07

நாளை நமதே 15

பஞ்சாபகேசன் தன் எதிரில் அமர்ந்திருந்த இரு புதல்வர்களையும் பார்த்தார்.

வாசனுடைய முகம் சோகத்தில்.... மூர்த்தியின் முகத்தில் முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சியா, இளக்காரமா என்பது அவருக்கு புரியவில்லை.

இருவரும் அதிகபட்சம் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள் என்றாலும் இவர்களுக்குள்தான் எத்தனை வேற்றுமை என்று நினைத்தார். உணவு மேசையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்தார். 'நீ என்ன சொல்றே?' என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார். 'நீங்களே சொல்லுங்க.' என்பதுபோல் பார்வதி தோள்களைக் குலுக்க தொண்டையை கனைத்துக்கொண்டு தன் புதல்வர்களைப் பார்த்தார்.

'என்னங்கடா, ரெண்டு பேரும் சும்மாவே எவ்வளவு நேரம் ஒக்காந்துருப்பீங்க? என் ஐடியா புடிச்சிருக்கா இல்லையா?'

வாசன் தன் தாயைப் பார்த்தான். 'என்னம்மா நீயும் பேசாம ஒக்காந்துருக்கே?' என்பதுபோலிருந்தது அவனுடைய பார்வை.

'இப்ப எதுக்குடா அம்மாவ பாக்கே... நான் சொன்ன ஐடியாவுல ஒனக்கு சம்மதமில்லேங்கறியா?'

'இல்லப்பா...' என்றான் வாசன் மிருதுவாக. அவனுக்கு எப்போதுமே அதிர்ந்து பேச வராது. மூர்த்தி அவனுக்கு நேர் எதிர்... சாதாரணமாகவே அவன் குரல் கணீர் என்று இருக்கும். கோபம் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்... நல்லவேளை அவர்களுடையது தனி வீடு... அடுத்த வீடு என்பதே ஐந்நூறடி தள்ளித்தான்....

'என்னடா சுடுகாடு மாதிரி இருக்கு? இங்க போயி வீடு கட்டப் போறேங்கறே?' என்ற அவருடைய தந்தையின் மறுப்பையும் மீறி அப்போது குக்கிராமமாயிருந்த புறநகர் பகுதியில் மலிவாய் கிடைக்கிறதென்று பத்து செண்டு நிலத்தில் வசதியாக கட்டிய வீடு. கடந்த ஐந்தாண்டுகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் முளைக்க, மண்சாலை தார் பூசிக்கொண்டது. தெரு விளக்குகளும் முளைத்தன... கார்ப்பரேஷன் குடிநீரும், கழிவுநீர் வசதியும்தான் இன்னும் வரவேண்டும். 'அது ரெண்டு வந்துரட்டும் பாரு செண்ட் விலைய...' என்பார் பஞ்சாபகேசன் அடிக்கடி... 'ஆமா... இப்படியே சொல்லிக்கிட்டிருங்க... நாமளும் வந்து பத்து வருசம் ஆகப்போகுது... இன்னும் பெருசா ஒன்னும் ஏறக்காணம்..' என்பார் பார்வதி அடிக்குரலில்.

'அப்படீன்னா? உன் மனசுல என்னதான் இருக்கு? அப்பா சொன்னதெல்லாம் மறந்துப்போச்சா?' என்றார் பஞ்சாபகேசன் எரிச்சலுடன். வாசனின் அமைதியான குணமும் அவனுடைய படிப்புத் திறனும் அவருக்கு பிடித்ததுதான்... ஆனால் அவனுடைய சுயநலம்... யார் எப்படி போனால் எனக்கென்ன என்ற அவனுடைய குணம்... 'இவனா நம்மள கடைசி காலத்துல வச்சி பாக்கப் போறான்.. மூர்த்திய வேணும்னா நம்பலாம், இவனெ நம்பவே கூடாதுடி' என்பார் தன் மனைவியிடம்.. 'படிச்சி முடிச்சி ஒரு வேலை மட்டும் கிடைச்சிரட்டும்... டாட்டா காமிச்சிட்டு போய்கிட்டே இருப்பான்.. நீ வேணும்னா பாத்துக்கிட்டே இரு..'

பார்வதிக்கு தன் கணவனைப் பற்றியும் தெரியும், அதைவிட தன் இரு மகன்களை பற்றியும் நன்றாகவே தெரியும். ஆகவே தன் கணவனுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தவே மாட்டார். 'நீங்க ஒங்க புள்ளைங்களப் பத்தி தெரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்.' என்பார் சுருக்கமாக.

'எதுக்குங்க வாசன போட்டு டார்ச்சர் பண்றீங்க? அவனுக்கு புடிச்ச காலேஜில அவன் சேந்துக்கட்டும்.. மூர்த்திக்கி புடிச்ச காலேஜில அவனெ சேத்து விடுங்க... எதுக்கு இன்னும் ரெண்டு பேரும் ஒரே காலேஜில ஒரே கோர்ஸ்ல சேரணும்னு பிடிவாதம் பண்றீங்க?'

பஞ்சாபகேசன் எரிச்சலுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'இங்க பார் பார்வதி, ஒனக்கு ஒன்னும் தெரியாது... நீ இதுல தலையிடாத... நா டிசைட் பண்ணா மாதிரி வாசன் கவுன்சிலிங்கில நா சொல்ற இந்த மூனு காலேஜஸ்ல ஒன்னுலதான் சேரணும்... மூர்த்திக்கி கவுன்சிலிங் வர்றப்ப இந்த க்ரூப் காலேஜ்லதான் சீட் இருக்கும்னு ஒரு யூகம்... அதனாலத்தான் சொல்றேன்.'

'எதுக்குப்பா? எனக்கு கவுன்சிலிங் வர்றப்ப யூனிவர்சிட்டியிலயே கெடச்சிருமே... அப்படியே இல்லன்னாலும் வேற ஏதாச்சும் ஆர்.ஈ.சியில கிடைக்கும்...' என்றான் வாசன்...

அவனுடைய குரலில் எரிச்சல் லேசாக எட்டிப்பார்ப்பதை உணர்ந்த பஞ்சாபகேசன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார். பாத்தியாடி ஒம் புள்ளையோட லட்சணத்த என்றது அவருடைய பார்வை... பார்வதி வாசனைப் பார்த்தார்.. அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவனை தான் ஆதரித்தால் தன் கணவருடைய கோபம் அதிகமாகும் என்பது தெரிந்துதானிருந்தது. ஆனாலும் அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. 'அவன் சொல்றதுல என்னங்க தப்பு? அவன் நல்ல காலேஜில சேர்றது நமக்கும் நல்லதுதானே?' என்றார்.

அவர் நினைத்ததுபோலவே பஞ்சாபகேசனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. தன் மனைவியை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'இங்க பார்வதி.. மறுபடியும் சொல்றேன்... நீ இதுல தலையிடாத... ஒன்னு நீ சும்மா வாய மூடிக்கிட்டு இரு... இல்லையா கிச்சன்ல போய் வேலையிருந்தா பாரு...'

இனியும் அங்கு அமர்ந்திருந்தால் அவருடைய கோபம் அதிகமாகும் என்பதை உணர்ந்த பார்வதி, 'எப்படியோ போங்க...'என்று முனுமுனுத்துவிட்டு அப்பா சொல்றத கேளுப்பா என்பது போல் வாசனை நோக்கி பார்த்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார். ஆனாலும் அவருடைய கவனமெல்லாம் ஹாலிலேயே இருந்தது..

பஞ்சாபகேசன் வாசனைப் பார்த்தார். 'இங்க பார் வாசன்... கடைசியா சொல்றேன்... நீ நா சொல்ற காலேஜ ஆப்ட் பண்ணிட்டு வந்தா நா ஃபீஸ் கட்டுவேன்... இல்லன்னா..... அப்புறம் ஒன் இஷ்டம்...'

வாசன் பதில் பேசாமல் எழுந்து நின்றான். கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை அடக்க அவன் சிரமப்படுவது தெரிந்தது... 'அப்படீன்னா எனக்கு ஃபீஸ் கட்ட மாட்டேன்னு சொல்றீங்களாப்பா?'

'அப்படித்தான் வச்சிக்கோ...'

'ஏம்ப்பா...' நடுங்கும் குரலை சிரமப்பட்டு சீர்படுத்திக்கொண்டு பேசினான். 'எதுக்குப்பா... நா நல்ல மார்க் வாங்குனது என் தப்பா? Why do you treat me like this? நானும் ஒங்க புள்ளதானப்பா?'

பஞ்சாபகேசன் அப்போதும் கல்மனதுடன் அமர்ந்திருக்க வாசன் சமையலறையைப் பார்த்தான். 'என்னம்மா நீ? நீயும் சும்மாவே இருந்தா என்ன அர்த்தம்? அப்பா சொல்றதுல ஒனக்கும் சம்மதமா?'

தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் மகன் கண்கலங்கி நிற்பதை காணச் சகியாமல் பார்வதி அவனை நெருங்கி தோளில் கைவைத்தார். 'அப்பா கட்டாட்டி என்னடா நா கட்டறேன்... நா இருக்கேன்டா...' என்றார் தன்னையுமறியாமல்...

பஞ்சாபகேசன் அதிர்ச்சியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'ஏய் ஒனக்கென்ன பைத்தியமா? அவந்தான் டிராமா போடறான்னா நீயும் அத நம்பிட்டியா? இப்பிடி அழுது, அழுதே ஒவ்வொரு காரியத்தையும் நடத்திக்குறான்.... இவனெ நம்பாதே... விஷம்... அவ்வளவும் விஷம்.... நல்ல மார்க் வாங்கிட்டானாம்... நா நல்ல கோச்சிங் க்ளாஸ்ல சேர்த்ததாலதானடா மார்க் வாங்க முடிஞ்சது? நாம மட்டும் படிச்சா போறும்னு நினைக்காம கூடப் பொறந்தவனையும் கோச் பண்ணணும்னு தோனலையே... சுயநலம்.. ஆரம்பத்துலருந்தே நீ இப்படித்தான்னு எனக்கு தெரியாதா என்ன? Selfish fellow... இது தெரியாம இவ ஒருத்தி...' என்று இறைந்தவர் எழுந்து தன் மனைவியை நெருங்கினார். 'ஏய்... என்ன சவால் விடறியா? இவனுக்கு எவ்வளவு கட்டணும்னு கூட ஒனக்கு தெரியாது... தற்குறி, தற்குறி...'

பதினாறு வருடங்களாக சுமுகமாக நடந்து வந்திருந்த தாம்பத்தியத்தில் முதன் முதலாக விரிசல் ஏற்படும் சூழலை உணர்ந்தார் பார்வதி... ஆயினும் அவருக்கு வேறு வழி தெரியவில்லை.... வருவது வரட்டும் என்ற வீம்புதான் மேலோங்கி நின்றது... 'ஆமாங்க நா தற்குறிதான்... ஆனா நீங்க செய்யற அழும்புக்கு ஒரு எல்லையே இல்லையா? நல்லா படிக்கற புள்ளைய வீணுக்குன்னா ஏசறது... அவனெ கோச் பண்ணலேன்னுட்டு இவனெ சொல்றீங்களே... அவன் என்ன செஞ்சான்னு ஒங்களுக்கு தெரியுமா... ஃப்ரெண்ட்சோட சேர்ந்த்து படிக்கறேன் பேர்வழின்னு இவன் புத்தகத்தையும் புடுங்கிக்கிட்டு போயி கூத்தடிச்சிட்டு ராத்திரியானதும் வருவான்... அவன் தூங்கனதுக்கப்புறம் அந்த புத்தகத்த எடுத்து வச்சிக்கிட்டு விடிய, விடிய இவன் படிப்பான்... இவன் செஞ்சது சுயநலம்னா... அவன் செஞ்சது போக்கிரித்தனம்... அவனெ எதுக்கு எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க?'

பஞ்சாபகேசனுக்கு தன்னுடைய செயலிலிருந்த தவறு தெரிந்தும் அவருடைய மூத்த மகன் மீது இருந்த கண்மூடித்தனமான பாசம் அவருடைய கண்களை மறைத்தது. மூர்த்தியின் பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அவருடைய குணத்தை ஒத்திருந்ததும் இதற்கு ஒரு காரணம். தன்னையே அவனில் பார்த்தார் பஞ்சாபகேசன்.... யாருடனும் ஒத்துப்போக முடியாமல் ஊர் ஊராக மாற்றலாகி அவர் பட்டிருந்த அவதி அவரை ஒரு மூர்க்கனாகவே மாற்றியிருந்தது. மேலும் தன்னைவிடவும் புத்திசாலிகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வக்கிர குனமும் அவருக்கு நாளடைவில் உருவாகிப் போனது. ஆகவேதான் வாசனுடைய புத்திசாலித்தனமும் அறிவுத்திறனும் பிடித்திருந்தும் அந்த இரண்டுமே அவரையுமறியாமல் அவனிடம் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

'முடிவா சொல்றேன்... நீ இதுல தலையிட்டு கிறுக்குத்தனமா ஏதாச்சும் செய்ய நினைச்சே... அப்புறம் ஏற்படற விளைவுகளை நீதான் ஃபேஸ் பண்ணணும்.. சொல்லிட்டேன்... மூர்த்தி சேர்ற காலேஜ்லதான் வாசனும் சேரணும்... அதுக்கு சம்மதிக்கறவங்க மட்டும் இந்த வீட்ல இருந்தா போறும்... இல்லன்னா அவங்கவங்க லைஃப பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்....'

தன்னுடைய தந்தையில் குரலில் இருந்த உறுதி வாசனை அதிர்ச்சியடையச் செய்தது... 'எதுக்குடா... ஒனக்கு மேலருக்கறவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனா இந்த மாதிரி லோல் படவேணாமில்ல?' என்று அறிவுறுத்திய வயதான தன் தந்தையையே, 'ஒங்க பொண்ணுக்கூட போயி இருங்க...அப்பத்தான் புத்தி வரும்' என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றியவராயிற்றே தன் தந்தை என்று நினைத்த வாசன் சட்டென்று எடுத்த முடிவுடன் தன் தந்தையை நெருங்கி அவருடைய கரத்தைப் பற்றினான். 'சாரி டாட்... அம்மா ஏதோ எமோஷன்ல அப்படி பேசிட்டாங்க... ஒங்க டிசிஷன் படியே செஞ்சிடறேன்... I am sorry..' என்றான்..

இதை பஞ்சாபகேசன் எதிர்பார்க்கவில்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மூர்த்தியைப் பார்த்தார். 'நீ என்னடா சொல்றே?'

மூர்த்தி தோள்களை அலட்சியத்துடன் குலுக்கியவாறு எழுந்து நின்றான். 'டாட், இவன் படிக்கற காலேஜ்லயோ இல்ல இவன் எடுக்கற கோர்ஸ்லயோ நான் சேரமாட்டேன்...That's final.' என்றவாறு அதிர்ந்து நின்ற மூவரையும் பொருட்படுத்தாமல் வாசலை நோக்கி நடந்தான்..

தொடரும்.

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

வீட்டிலே ஹிட்லர்!
வெளியில் படும் அடியை எல்லாம் இப்படித்தானே தீர்த்துக்கணும்1

TBR. JOSPEH said...

வாங்க ஜி!

வீட்டிலே ஹிட்லர்!
வெளியில் படும் அடியை எல்லாம் இப்படித்தானே தீர்த்துக்கணும்//

உண்மைதான். நம்மில் பலரும் இப்படித்தான். ஆனால் ஒன்று... வெளியில் நாம் படும் அவதிகளுக்கும், வேதனைகளுக்கும் வீடுதாவே வடிகால்... நம்முடைய மனைவியர் மட்டும் பொறுமையுடன் நம்முடைய கோபதாபங்களை அனுசரித்து செல்லவில்லையென்றால் நம்மில் பலரும் மனநோயாளிகளாகவே மாறியிருப்போம்...