26.7.07

நாளை நமதே - 19

ஜோதிகா கல்லூரிக்கு முதல் நாள் கிளம்பிச் செல்லும்போது ராம்குமாரும் கூடவே செல்வதாக ஏற்பாடு.

முந்தைய நாள் இதைக் குறித்து பெருத்த விவாதமே நடந்தது.

'எதுக்கு ஜோதி அப்பாவ வேணாங்கறே... first day.. காலேஜ் பஸ்சுக்கும் பணம் கட்டலே... இவ்வளவு தூரம் நீயே ஒத்தையா போயிருவியா?' என்றாள் லலிதா.

'போயிருவேம்மா... நா என்ன சின்ன குழந்தையா?'

'இங்கருந்து ஸ்டேஷன் வரைக்கும்னா சரி. அங்கருந்து பீச் வரைக்கும் ஒரு ட்ரெய்ன். அப்புறம் அங்கருந்து இன்னொரு ட்ரெய்ன். அந்த ஸ்டேஷன்லருந்து மறுபடியும் டவுண் பஸ். ஒன்னால தனியா முடியுமா?'

'முடியும். நா போய்க்குவேன்.' என்றாள் ஜோதிகா பிடிவாதமாக உள்ளுக்குள் பயம் இருந்தாலும். பிடிவாதமாக காலேஜ் பஸ் கட்டணத்தை செலுத்த மறுத்த தந்தைக்கு தண்டனையளிப்பதாக நினைத்துக்கொண்டு இந்த ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று உள்மனது அவளை எச்சரித்தாலும் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.

'அப்பா காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்டமாட்டேன்னு சொல்லிட்டாங்கன்னுதான இப்படி பிடிவாதம் பிடிக்கே?' என்றார் ராம்குமார்.

ஆமாம், என்ன இப்போ என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனால் காலேஜுக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் விவாதம் எதற்கு என்றது உள்மனது. 'அதெல்லாம் இல்லை...'

'பின்னே ஏன் வேண்டாங்கறே? நா பாட்டுக்கு ஒன்னைய கொண்டு வந்து விட்டுட்டு திரும்பிட்டுப் போறேன். அதுக்குன்னுதான லீவும் எடுத்துருக்கேன்?'

ஜோதிகா எரிச்சலுடன் தன் தாயைப் பார்த்தாள். 'அப்ப எங்கூட வந்தா தனியா வர்ற பசங்கல்லாம் ஒருமாதிரி கேலியா பார்ப்பாங்கம்மா? முதல் நாளே ஒரு சிஸ்சின்னு பேர் வாங்க புடிக்கலை... அதான் சொல்றேன்...'

ராம்குமார் கேள்விக்குறியுடன் தன் மனைவியைப் பார்த்தார். 'சிஸ்சியா... என்னடி சொல்றா இவ?'

ராஜ் முந்திக்கொண்டு, 'சின்னப் பாப்பான்னு அர்த்தம்ப்பா... ஜோதி சொல்றது சரிதான். காலேஜுக்கு அப்பா, அம்மாவோட வர்ற பசங்கள மத்த பசங்க அப்படித்தான் கூப்டுவாங்க..' என்றான் சிரித்தவாறு.

அப்பாடா, மொத முறையா எனக்கு பரிஞ்சிக்கிட்டு வந்தியே என்றவாறு அவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள் ஜோதிகா.

ராம்குமார் தலையில் அடித்துக்கொண்டார். 'சரி எப்படியோ போ...' என்றவாறு அவர் குளியலறையை நோக்கி செல்ல லலிதா மகளுடன் குடியிருப்பின் வாசல்வரை வந்து வழியனுப்பினாள்.

'ஒரு வாரம் இப்படியே போய்ட்டு வா ஜோதி... முடியலன்னா நான் அப்பாவ கம்பெல் பண்ணி காலேஜ் பஸ்சுக்கு ஃபீஸ் கட்ட சொல்றேன்...'

'ஆமா கிழிச்சீங்க.' என்றாள் ஜோதிகா எரிச்சலுடன். 'ஏம்மா அப்பா இப்படி இருக்காங்க.. அன்னைக்கி ஃபீஸ் கட்டப் போன எடத்துல எல்லார் முன்னாலயும் வச்சிக்கிட்டு பஸ்சுக்கெல்லாம் என்னால தண்டம் அழ முடியாதுன்னு சொல்லி மானத்த வாங்கிட்டாங்க... அங்க இருந்த பசங்கல்லாம் என்னெ எல்லாரும் எப்படி பாத்தாங்க தெரியுமா? அதுல யாராச்சும் என் க்ரூப்பையே எடுத்து என்னோட க்ளாஸ்லயே இருந்தா என்ன செய்யிறது? இந்த லட்சணத்துல அப்பாவும் கூட வந்தா வேற வெனையே வேணாம். இன்னைக்கிம் எதையாச்சும் சொல்லி மானத்த வாங்கிருவாங்க. அப்புறம் நா அந்த காலேஜுக்கே போமுடியாது. ...'

லலிதாவுக்கு மகளுடைய ஆதங்கம் புரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்ய? வேதாளத்துடன் வாழ்க்கை நடத்தினால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்? ஆனால் பிள்ளைகளும் சேர்ந்து அவதிப்படுவதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை. இருந்தாலும் கணவருக்கு பரிந்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 'இங்க பார் ஜோதி. அப்பா வளர்ந்து வந்த விதம் அப்படிடீ. அப்பா கோபத்துல பேசறதையெல்லாம் பெரிசு பண்ணாதன்னு எத்தனை தடவ ஒங்கிட்ட சொல்லியிருக்கேன்.. ராஜ பாரு.. அவன் கேக்காத பேச்சா? அதயெல்லாம் நினைச்சிக்கிட்டு டென்ஷனாகாத... முதல் தடவையா போறப்போ சங்கடத்தோட போகாம சிரிச்சிக்கிட்டே போ... அன்னைக்கி நடந்தத அந்த பசங்க அப்பவே மறந்துப் போயிருப்பாங்க... அவங்கள்ல யாரையாச்சும் பாத்தாக்கூட அன்னைக்கி நடந்ததயே நினைச்சிக்கிட்டு ஒதுங்கி போகாத... என்ன புரியுதா... பத்திரமா போய்ட்டு வா... முடிஞ்சா கேம்பஸ்லருந்து ஃபோன் பண்ணு.'

ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பியவள் இரண்டு மின்வண்டிகள் பிடித்து கல்லூரி வளாகத்தை வந்தடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவள் எதிர்பார்த்ததையும் விடவும் வளாகம் பிரம்மாண்டமாக இருந்ததைப் பார்த்து வியந்து நின்றாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஒரே மாதிரியான கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஐந்து மாடிகள். ஒவ்வொன்றின் முகப்பிலும் ஏ,பி,சி,டி எழுதப்பட்டு 'எச்' வரையிலும் என எட்டு கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளையின் பெயரையும் தாங்கியிருந்தன. அதனையடுத்து பிரம்மாண்டமான லாப், வொர்க்ஷாப் கட்டிடங்கள். கட்டிடங்களுக்கு பின்புறம் வின்னை முட்டும் டவர் ஒன்று. இண்டர்நெட் வசதிக்காக என்று நினைத்தாள்.

வாசலில் இருந்த பிரம்மாண்ட இரும்பு கேட்டுகளையொட்டி வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகளை தன்னையுமறியாமல் கணக்கிட்டாள். இருபதுக்கும் மேல் இருந்தன. ஒவ்வொன்றின் முகப்பிலும் அதற்குரிய எண்ணும் அது செல்லும் வழித்தடங்களும் எழுதப்பட்டிருந்தன. அவளுடைய குடியிருப்பு இருந்த இடத்திற்கான பேருந்தும் அங்கு நிற்பதைப் பார்த்த ஜோதி இதுல வந்துருந்தா எப்படியும் ஆஃபனவர் சேவ் பண்ணிருக்கலாம். இப்படி வேத்து விறுவிறுத்து வந்துருக்க வேணாம். இந்த வேர்வை நாத்தத்தோட மொதல் நாளே க்ளாசுக்குள்ள போயி இது சரியான கச்சறா கேசுடான்னு நினைச்சிருவானுங்களோ....

அவளையுமறியாமல் அவளுடைய பார்வை கேட்டிற்கு முன்பு வரிசையில் நின்ற மாணவர்கள் மீது படிந்தது. 'பசங்க அட்டகாசமாத்தான் இருக்கானுங்க...' உதடுகள் முனுமுனுத்தன. அவர்களை தொடர்ந்து எதிர்புறத்தில் நின்ற பெண்களின் வரிசையை நோட்டம் விட்டாள்... ஹூம் என்ற பெருமூச்சுடன் குனிந்து தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ச்சே... பேசாம ஸ்கூல் மாதிரியே காலேஜுக்குன்னு யூனிஃபார்ம் இருந்தாக்கூட நல்லது போலருக்கு... நாம போட்டுட்டுருக்கறது இருக்கறதுலயே நல்லதுன்னு நினைச்சி போட்டுக்கிட்டிருக்கோம். இதுங்களோட கம்பேர் பண்றப்ப இதுவே அசிங்கமா இருக்கு... இந்த லட்சணத்துல டெய்லி ஒன்னுன்னு வாரத்துல ஆறு நாளைக்கு.... எங்க போறது? பேசாம ஆர்ட்ஸ் காலேஜுக்கே போயிருக்கலாம் போலருக்கு... ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்குன்னு சும்மாவ சொன்னாங்க... நம்ம லட்சணத்துக்கு எஞ்சினியரிங் காலேஜ்லாம் ரொம்ப ஜாஸ்தி போலருக்கு... நல்லவேளை விஜி இங்க வரலை.. இல்லன்னா அவளே இதுங்ககிட்ட நம்ம வண்டவாளத்த எடுத்து விட்டுருப்பா.

ஒரு பெருமூச்சுடன் சென்று மாணவிகள் வரிசையில் நின்றாள்.

'என்னடா இது.. மொபைல வாங்கிக்கிறானுங்க?'

குரல் வந்த திசையை பார்த்தாள்.

'கோட்டாவில வந்தவனுங்கன்னு பாத்தால தெரியுது.. அவனுங்களும் அவனுங்க மூஞ்சியும்...இதுங்களுக்கு மொபைல் ஒன்னுதான் கேடு..'' தனக்கு பின்னாலிருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரிகளை திரும்பிப் பார்க்க ஆசை...அடக்கிக் கொண்டாள்...

'அதான் பாக்கறியே பெறவென்ன கேள்வி வேண்டிக் கிடக்கு. வாங்க்கினு போறப்போ குடுத்துருவானுங்களோ என்னவோ... இந்த காலேஜ்லருக்கறவனுங்கள பத்திதான் போன வருசமே பேப்பர்ல நாறுச்சே மாமு... சொன்னா கேட்டத்தான... என்னமோ ஊர்லல்லாத காலேஜ்ல சேத்துவுட்டா மாதிரி பீத்தறாரு எங்கப்பா... இன்னும் நாலு வருசம்... நினைச்சாலே கபீருங்குது...'

'பேசாம இப்பவே சிம் கார்ட எடுத்துரலாமாடா? அப்பால அவனுங்க செல்ஃபோன திருப்பிதரமாட்டோம்னுட்டா?'

எதிர் வரிசையில் இருந்து வந்த ஐடியா அவளையும் ஈர்க்கவே உடனே தன்னுடைய கைப்பையிலிருந்த செல்ஃபோனை எடுத்து சிம் கார்டை உருவுவதில் முனைந்தாள்.

தொடரும்...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

என்ன சார்!
எந்தக் காலேஜ்ல முதல் நாள் பசங்க நடுவில மிங்கில் ஆணீங்க?

TBR. JOSPEH said...

வாங்க சிஜி!

எந்தக் காலேஜ்ல முதல் நாள் பசங்க நடுவில மிங்கில் ஆணீங்க?//

ஏன் சரியா சொல்லலையா? இல்ல ரொம்ப சரியா சொல்லிட்டனா:-)

என்னுடைய வாரிசுகளுடைய ஃபீட்பேக்குன்னும் கூட வச்சிக்கலாம்.