11.5.07

சூரியன் 200

இரண்டாம் பாகம் - நிறைவுப் பகுதி

'சரிய்யா... நீங்க சொல்றதெல்லாத்தையும் நான் ஒத்துக்கறேன்... ஃபிலிப் சுந்தரத்துக்கு இனிஷியேட்டிவ்னு என்னமோ சொன்னீங்களே அது இல்லதான்... அவருக்கு அவரோட வாழ்க்கையிலயே பெருசா சாதிக்கணுங்கற விருப்பமில்ல... ஆஃபீஸ் விட்டா வீடு.. மிஞ்சிப் போனா பக்கத்துலருக்கற க்ளப்ல போயி பேட்மிண்டன் ஆடுவார்... சனி, ஞாயிறு ஆனா கோவில்... இதான் அவரோட ஒலகமே... ஆனா அவருக்கு இருக்கற தெய்வ பக்தி நம்ம பேங்கையும் காப்பாத்தும்யா... மாதவன் திருப்பி வர்ற வரைக்கும் தான? வேணும்னா நாம சேர்மன் கமிட்டின்னு ஒன்னெ அமைச்சி அவருக்கு ஒத்தாசையா இருப்போம்... இப்பருக்கற மேனேஜ்மெண்ட் கமிட்டியே கூட இத பாத்துக்கலாம்... எதுக்கு சொல்றேன்னா சேதுமாதவன நம்பி சேர்மன் பதவிய குடுக்க முடியாதுய்யா.. அவர் எந்த நேரத்துல என்ன செய்வார்னு யாருக்குய்யா தெரியும்?'

சோமசுந்தரத்துக்கும் சிலுவை மாணிக்கம் நாடாருடைய வாதத்தில் இருந்த உண்மை தெரிந்துதானிருந்தது. ஆனால் அவர் மனதில் நினைத்திருந்த அந்த ஆஃபீசர் ரெக்ரூட்மெண்ட்... இயக்குனர் பதவி பறிபோன பிறகு சேதுவைப் போன்றவர்களை வைத்துத்தானே அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.. மாதவன் விடுப்பில் போவது கூட நல்லது என்றே நினைத்திருந்தார்... ஃபிலிப் சுந்தரத்தைப் போன்ற தெய்வபக்தியுள்ளவரை அந்த பதவியில் அமர்த்திவிட்டால் நம்முடைய திட்டம் நிறைவேறாதே... சேது-பாபு சுரேஷ் கூட்டணியை வைத்து தான் நினைத்திருந்ததை நடத்திவிடலாம் என்று தான் நினைத்திருந்தது நிறைவேறாது போலிருக்கிறதே என்று அவருடைய சிந்தனை ஓடியது... இருப்பினும் தற்போதைக்கு நாடாருடைய தயவு நமக்கு மிகவும் தேவை.. அவர் நினைத்தால் பூர்ணிமா இயக்குனர் குழுவில் நுழையமுடியாதபடி செய்துவிட முடியும்... 'சரி நாடார்.. நீங்க சொல்றத ஒத்துக்கறேன்...'

நாடார் விடவில்லை...'அப்படி மொட்டையா சொன்னா எப்படிய்யா? எத ஒத்துக்கிறீரு... ஃபிலிப் சுந்தரத்த போடலாம்னா?'

ஆமாம் என்று தலையை அசைத்தார். 'அத்தோட நீங்களே சொன்னா மாதிரி ஒரு கமிட்டிய போட்டுரணும்... அதுலயும் பூர்ணிமா இருக்கணும்.. அது நடக்கணும்னா இந்த வாரத்துலயே போர்ட கூட்டி அதுல பூர்ணிமாவ போர்ட்ல கோ ஆப்ட் செய்ய வேண்டியிருக்கும்... என்ன சொல்றீங்க?

'செஞ்சிருவம்யா... ஒம்ம மக இல்லாமலாய்யா... மொதல்ல நாளைக்கே பகலுக்கு மேல மேனேஜ்மெண்ட் கமிட்டிய கூட்டச் சொல்லி நம்ம கம்பெனி செக்கரட்டரிக்கு சொல்லிருவம்... அதுலயே பூர்ணிமாவ போர்ட்ல சேக்கற விஷயத்த முடிவு பண்ணிருவம்யா.. நீரே செக்கரட்டரிக்கிட்ட சொல்லிடறீரா... அந்தாளுக்கு தமிழ் சரியா வராதேய்யா... அதுக்குத்தான் சொல்றேன்...'

சோமசுந்தரம் முறைத்தார். 'என்ன நாடார் வெளையாடறீங்களா நா எப்படி?'

நாடார் புரிந்துக்கொண்டார்.. 'மன்னிச்சிரும்யா... நா மறந்துட்டேன்... நா ஒன்னுச் செய்யறேன்... ஃபிலிப் சார கூப்ட்டு சொல்றேன்...' என்றவர் விஷமத்துடன் சோமசுந்தரத்தைப் பார்த்தார். 'ஒம்மத்தான் செலக்ட் செஞ்சிருக்கோம்னு சொல்லிரலாமாய்யா?'

சரி என்று சோமசுந்தரம் தலையை அசைக்க நாடார் தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணை தேடினார்... அதற்குள் செல்ஃபோன் சிணுங்கியது...

'யார்யா... ஃபிலிப் சாரா? ஒங்களுக்கு ஆயுசு கெட்டிய்யா... ஒங்க நம்பரத்தான் துழாவிக்கிட்டிருந்தேன் நீரே கூப்ட்டுட்டீரு...' என்றவர் எதிர்முனையிலிருந்து வந்த செய்தியைக் கேட்டுவிட்டு வாய்விட்டுச் சிரித்தார்...'அப்படியா... நல்லதா போச்சுய்யா.. எங்க விசயம் சுளுவா போயிருச்சி... அவன் கெடக்கட்டும்... இனி நீங்க நிம்மதியா சேர்மன் சேர்ல ஒக்காந்துரலாம்... என்னது... எதுக்கா? அத நாங்க பாத்துக்கறோம்...நீங்க நம்ம செக்கரட்டரிய கூப்ட்டு நாளைக்கு பகலுக்கு மேல... ஒரு மூணு, நாலு மணி வாக்குல நம்ம எம்.சி கூட்டத்த கூட்டச் சொல்லுங்க... ஒம்ம பேர அதுல முடிவு பண்ணிருவம்... என்னய்யா? சொல்லுங்க... எது... அந்தாள் விஷயமா? அதான் எங்கிட்ட சொல்லிட்டீங்கல்ல.. இங்கதான் டாக்டர் இருக்காரு... அப்புறம் செட்டியார்... நா சொல்லிக்கறேன்... என்னதுய்யா? ஏதாச்சும் செய்யறதா? நாம இதுல செய்யறதுக்கு என்னய்யா இருக்கு... திணைய வெதச்சவன் திணைய அறுக்கான்... கொஞ்ச நாளைக்கு படட்டும்யா... நீங்க கவலப்படாம நா சொன்னத செய்ங்க... பெறவு கூப்புடுறேன்...'

அவர் அதுவரை பேசியது ஒன்றும் விளங்காமல் அங்கு இருந்த மூவரும் நாடாரையே பார்த்தனர்... 'எய்யா டாக்டரே நீங்க சேர்மன் பதவியில போடலாம்னு சொன்னீங்களே... அவர அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபிசுக்கு கொண்டு போயிருக்காங்களாம்..நம்ம லேபர் யூனியன் தலைவர் முரளிய இந்தாளு ஆள வச்சி அடிச்சிப் போட்டாராமே?'

சோமசுந்தரம் மட்டுமல்லாமல் செட்டியாரும் இதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களிருவர் முகம் போன போக்கிலிருந்து தெரிந்தது.

'என்ன நாடார் சொல்றீங்க.. யார் சேதுவா.. அவரா இப்படி செஞ்சிருப்பாரு?' என்றார் சோமசுந்தரம் நம்பமுடியாமல்.

'யார்க்குய்யா தெரியும்? நா கேட்டுக்கலை... நமக்கு அதுவா முக்கியம்?' நாடாருடைய செல்ஃபோன் மீண்டும் சிணுங்க... திரையில் தெரிந்த தன்னுடைய மகளுடைய எண்ணைப் பார்த்தார். 'எம் பொண்ணு கிட்டருந்து ஃபோன்... பேசிட்டு வந்துடறேன்..' என்றவாறு ஹாலை விட்டு வெளியேறினார்... 'என்னம்மா சொல்லு...' என்றவர் அடுத்த நொடியே, 'என்ன தாயி சொல்றே.. எது? நம்ம மந்திரச்சாமியையா? அடப் பாவமே... ஒனக்கு ஒன்னுமில்லையே... அங்கனயே இரு... தோ அஞ்சு நிமிசத்துல காத்தா பறந்து வந்துட்டேன்...' என்றவர் உள்ளே காத்திருந்தவர்களை மறந்து தன்னுடைய வாகனத்தை நோக்கி ஓடினார்...

************

மருத்துவமனையின் தலைவர் அறையில் அமர்ந்திருந்த மாதவன் சென்னையிலிருந்து வந்திருந்த இரு மருத்துவர்களையும் பார்த்தார். 'Are you sure that my wife is fit to travel by air doctor?'

'Yes... I think so... Since she has come out of the shock now... We feel we can take her to Chennai for further treatment..'

மாதவன் மருத்துவமனையின் தலைவரைப் பார்த்தார். 'Do you have any objection Doctor?'

அவர் புன்னகையுடன் இல்லை என்று தலையை அசைத்தார். 'I think she is physically strong.. Especially after she was told that your son has survived his suicide attempt she has recovered very fast from her stroke.. Her BP has come down faster than we thought... From now on she needs only the emotional support from you and your family... she should be able to walk in another couple of months with the help of a good and supportive physio... but to get back her speech.... I think it might take little more than that...maybe a year or so...' என்றவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தார்...'It's settled then... Thankyou gentlemen... Goodday.. I've got to run...'

மாதவனும் திருப்தியுடன் எழுந்து அறையிலிருந்து வெளியேறி தன் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி விரைந்தார்..

*******

பாபு சுரேஷ் என்ன பதில் பேசுவது என தெரியாமல் திகைத்து நிற்க ஆய்வாளர் மணியின் செல்ஃபோன் அடித்தது.

எதிர்முனையில் எஸ்.பி தனபால்சாமியின் குரல்... எஸ்.ஐ. விறைப்பாக, 'எஸ் சார்..' என்றார். அடுத்த நொடியே அவருடைய முகம் அஷ்டகோணலாகியது... 'எஸ் சார்... இப்பவே வரேன்.. சார்...' என்றவர் பாபுவைப் பார்த்தார்..இவரிடம் எஸ்.பி தன்னிடம் கூறியதை சொன்னால் தனக்கு நல்லதல்ல என்று நினைத்தார்... 'யோவ் நா அப்பவே சொன்னேன்... அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு... எல்லாத்துக்கும் காரணம் அந்த பேங்க் ஈ.டி. சேதுமாதவந்தான்னு அவன் ஏவிவிட்ட ஆளே ஒத்துக்கிட்டான்... சேதுவ அரெஸ்ட் பண்ணி கமிஷனர் ஆஃபீசுக்கு கொண்டு வர லோக்க எஸ்.ஐய அனுப்பிட்டேன்... நீங்க மிஸ்டர் பாபுசுரேஷ் கிட்ட சாரி சார்ன்னு சொல்லிட்டு ஒடனே கமிஷனர் ஆஃபீஸ் வந்து சேருங்க... க்விக். .'

இவர்கிட்ட சாரின்னு சொல்றதா? எனக்கென்ன பைத்தியமா? 'சார்... இப்ப போறேன்... தேவைப்படறப்போ கூப்பிடறேன்.. ஸ்டேஷனுக்கு வரவேண்டியிருக்கும்...' என்று கெத்தாக கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார் மணி தன்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை வீணாகப் போகிறதென்பதை உணராமல்...

அவர் வாசலை தாண்டுவதற்கு முன் பாபு சுரேஷின் சம்மந்தி வாசலை நோக்கி நடந்தார். இதை எதிர்பாராத பாபு அவரைத் தொடர்ந்து ஓடினார்...' சம்மந்தி வந்த விஷயத்த சொல்லாம போறீங்க?'

'இனிமே பேசறதுக்கு என்னய்யா இருக்கு? நீங்க பேங்க்ல ஒரு சீனியர் ஆஃபீசர்... நம்ம லெவலுக்கு ஏத்த ஆளுன்னு நெனச்சித்தான் சம்மந்தம் பேசினேன்... ஆனா இப்ப? விட்டா சந்தேகத்தின் பேர்ல ஒங்கள அரெஸ்டே பண்ணிருப்பார் போலருக்கே அந்த எஸ்.ஐ? ஏதோ நா வந்தேன்... அப்புறம் வரேன்னு கெளம்பிட்டார்... இதுல கூப்டறப்பல்லாம் ஸ்டேஷனுக்கு வரணும்னு வேற ஆர்டர்.. இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா எங்க குடும்பத்துக்கும் சேர்த்துல்லே அவமானம்? அதான் கெளம்பிட்டேன்...'

பாபு சுரேஷ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்...'என்ன சம்மந்தி இப்படி திடீர்னு சொல்றீங்க... கல்யாண ஹால்லருந்து எல்லாமே ரெடி பண்ணிட்டு இப்ப இப்படி சொன்னா எப்படீ? நா பண்ண தப்புக்காக என் பொண்ண தண்டிச்சா எப்படி?'

தன் தந்தையின் கெஞ்சும் குரலைக் கேட்ட ரம்யா சமையலறையிலிருந்து வெளியேறி ஹாலுக்குள் நுழைந்தாள் 'அப்பா என்ன பண்றீங்க?' என்றாள் உரத்த குரலில். பிறகு ஓடிச்சென்று தலைகுனிந்து நின்ற தன் தந்தையின் சட்டையைப் பிடித்து பின்னுக்கு இழுத்தாள். 'நோ.... வேணாம்ப்பா... Don't beg him... எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்....'

'ஏய் ரம்யா... நீ சும்மாயிரு... நீ வேற எதையாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துராத...'என்ற தன் தாயை திரும்பிப் பார்த்தாள்.

'ஏம்மா.. எதுக்கு சும்மாருக்கணும்? கேவலம் ஒரு சின்ன சந்தேகத்தின் பேர்ல அப்பாவ கொஸ்ச்சின் பண்ண வந்ததுக்காக இவங்க அப்பாவ என்ன வேணா பேசலாம்.. நா பேசக் கூடாதா? முடிவா சொல்றேன்... எனக்கு இந்த மாப்பிள்ள வேணாம்... I am not interested.. just leave me out of this....' என்றவாறு மாடிப்படிகளை நோக்கி ஒடிய தன் மகளைப் பார்த்தவாறு நின்றார் பாபு சுரேஷ் கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறிய சம்மந்தியை தடுத்த நிறுத்த தோனாமால்...

********

'என்ன ஃபிலிப்.. என்ன சொல்றார்?' என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார் ஃபிலிப் சுந்தரம்...

இவரிடம் தன்னையே சேர்மன் பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று எப்படி சொல்வது என்று நினைத்தார். நிச்சயம் தனக்கு கீழே பணியாற்ற ஒப்புக்கொள்ள மாட்டார்... இன்று மாலை மாணிக்கவேலின் வீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு நாடாரிடம் இவரையே மீண்டும் அந்த பதவியில் அமர்த்த பரிந்துரைக்க வேண்டும்... பார்ப்போம்... 'நம்ம ஈடியோட விஷயத்துல ஒன்னும் செய்யறதுக்கில்லன்னு சொல்லிட்டார் சார்.. அதான் கொஞ்சம் ஷாக்காப் போயிருச்சி...' என்றார் பட்டும் படாமலும். 'நாளைக்கு எம்.சிய வேற கூட்டணுமாம்... ஏன், எதுக்குன்னு சொல்லல...

எம்.சி மீட்டிங்கா? ஒருவேளை சேர்மன் போஸ்ட்ல யார போடலாம்னு டிசைட் பண்றதுக்காருக்குமோ... சேதுவும் இல்லாத நேரத்துல.. Will I get a chance again என்று சிந்திக்க ஆரம்பித்தார் சுந்தரலிங்கம்...

'ஈ.டியும் இல்லாத நேரத்துல ஒங்க ரிசிக்னேஷன ரீக்கன்சிடர் பண்ணுங்களேன் சார்.. அட்லீஸ்ட் நாளை மீட்டிங் முடியறவரைக்கும்...'

ஃபிலிப் சுந்தரத்தின் இந்த கேள்வி அவருடைய செவியில் தேனாக பாய்ந்தது... இருந்தும் சுயகவுரவத்தை விட்டுக்கொடுக்காமல்... 'யோசிச்சி நாளைக்கு சொல்றேன் ஃபிலிப்.' என்றார்...

'தாங்ஸ் சார்... நீங்களே செக்கரட்டரிக்கிட்ட சொல்லி நாளைக்கு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ண சொல்லிருங்க... அஜெண்டான்னு ஒன்னும் சொல்லலைன்னு சொல்லிருங்க.. அவர் வேணும்னா நாடார கூப்ட்டு கேட்டுக்கட்டும்..' என்றவாறு ஃபிலிப் வெளியேற மீண்டும் ஒருமுறை சேர்மன் பதவியில் அமரப்போவதை நினைத்து மகிழ்ந்தார் சுந்தரலிங்கம்.. பதவி மோகம்தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது!

*****

ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை....

ஃபிலிப் சுந்தரம் எத்தனை கெஞ்சியும் நாடார் ஏற்றுக்கொள்ள மறுத்து அடுத்த நாள் கூட்டத்தில் மாதவன் விடுப்பில் இருந்து திரும்பும் வரையில் சேர்மன் பதவிக்கு அவரையே நியமித்தது வங்கியின் மேனேஜ்மெண்ட் கமிட்டி. கூட்டத்தின் முடிவு அறிவிக்கப்பட்டதும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஃபிலிப் சுந்தரத்திடம் சமர்ப்பிக்கிறார் சுந்தரலிங்கம்.

'Don't stop him... Let him go' என்ற சென்னை திரும்பிய மாதவனின் பரிந்துரையை ஏற்று அவருக்கு பிரிவு உபசாரமளித்து விடையளிக்கிறார் ஃபிலிப்.

மாணிக்கவேலின் மனைவி மற்றும் தந்தையின் இறுதிச் சடங்கில் வங்கியின் தாற்காலிக முதல்வர் என்ற முறையில் பங்குக் கொள்ளும் ஃபிலிப் சுந்தரம் 'என்னுடைய மன ஆறுதலுக்கு கொஞ்ச நாளைக்கு சென்னையிலருக்க வேணாம்னு நினைக்கிறேன் சார்...' என்ற அவருடைய வேண்டுகோளை பரிசீலனை செய்வதாக உறுதியளிக்கிறார்.

அடுத்த நாளே வந்தனாவை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை அறிவிக்கிறார். அப்படியா என்று மகிழ்ந்து போகிறார் வந்தனா. தன்னை எதிர்வரும் திங்கள் முதல் அலுவலகம் திரும்பலாம் என்று மருத்துவர் அனுமதித்த விஷயத்தை கூறுகிறார்.

மாணிக்கவேலுவின் குடும்பத்தில் நடந்த துயரச் சம்பவங்களை பக்குவமாக அவரிடம் எடுத்துரைக்கின்றனர் நந்துவும் நளினியும்.... அன்றே மாணிக்கவேலுவும் அவரை வீட்டில் சந்தித்து தனக்கு சென்னையிலிருந்து மாற்றம் பெற்றுத்தரும்படி கோருகிறார்.

ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறவர் என்ற நினைப்புடன் வங்கியின் பயிற்ச்சிக் கல்லூரியின் தலைவர் ஃபெர்னாண்டோவை தலைமையகத்துக்கு மாற்றி புதிதாக துவக்கப்பட்ட வங்கியின் கணினி இலாக்காவை அவரிடம் ஒப்படைக்கிறார். வந்தனாவை வங்கியின் பயிற்சிக் கல்லூரி தலைவராக நியமிக்கிறார். 'You need rest for some time Vandana... I think you can relax in this post...' என்று அவரை சமாதனப்படுத்துகிறார்.

சேதுமாதவனின் தூண்டுதலின் பேரில் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட ரவி பிரபாக்கரின் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்து அவரை தன்னுடைய பிரத்தியேக காரியதரிசியாக நியமிக்கிறார். 'The domestic enquiry ordered against you would however go ahead. Is that ok?' 'Yes Sir..'என்று அவருடைய முடிவை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பணியில் மீண்டும் சேர்கிறார் ரவி.

அடுத்த வாரம் பணிக்கு சேரும் வந்தனாவின் வேண்டுகோளை ஏற்று நளினியை பல்லாவரம் கிளைக்கும் மாணிக்கவேலை எர்ணாகுளம் கிளைக்கும் மாற்றம் செய்கிறார் மாதவன்.

'எங்க ஊர் ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் பண்ணா சந்தோஷுக்கு சீக்கிரமே குணமாயிரும் சார்' என்ற நளினியின் பரிந்துரையை சந்தோஷை அழைத்துக்கொண்டு கேரளா பயணமாகிறார் மாணிக்கவேல்...

சோமசுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று பாபு சுரேஷை எச். ஆர் தலைவராக நியமிக்கிறார் ஃபிலிப்.

சேதுமாதவன் தலைகீழாக நின்றும் யாரும் அவருடைய உதவிக்கு வராததால் வங்கி ஊழியர் சங்கத் தலைவரை கொலை செய்ய முயன்றதற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை ஜாமீனில் வெளிவராதபடி அவருடைய கைதை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்குகிறார் எஸ்.பி தனபால்சாமி.

நாடாரை தாக்க வந்த கும்பல் அவர் அந்த வண்டியில் இல்லை என்பதைக் கண்டுக்கொண்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற வெறியில் காரில் இருந்த மேனேஜரை தாக்காமல் அவருடன் அமர்ந்திருந்த ராசம்மாளை தாக்க முயல்கிறது. வண்டியிலிருந்து இறங்கி அதை தடுக்க முயன்ற மந்திரச்சாமி அவர்களுக்கிடையில் சிக்கி காயமடைகிறான். ராசாம்மாள் சிறு காயங்களுடன் தப்பிக்கிறாள். படுகாயமடைந்த மந்திரச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். உயிருக்கு ஆபத்தில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

தன்னை கொலை செய்ய முயன்றது ராசேந்திரன்தான் என்று அவளுடைய தந்தை தடுத்தும் கேளாமல் போலீசில் புகார் செய்கிறாள் ராசம்மாள்..காவல்துறை புகாரை பதிவு செய்து விசாரனையில் இறங்குகிறது... விஷயத்தைக் கேள்விபட்ட ரத்தினவேலுவும் ராசேந்திரனும் இரவோடு இரவாக தலைமறைவாகிறார்கள்...

சீனிவாசன் குடும்பத்தினருடன் சென்னை செல்ல உத்தேசிக்கும் மைதிலி தன் பெற்றோரிடம் போராடுகிறாள். 'நீங்க சம்மதிச்சாலும் இல்லாட்டியும் நா சென்னை போறது உறுதிப்பா... நீங்க சம்மதிச்சா ஒங்க மகளா போயி திரும்பி வருவேன்.. இல்லன்னா வரவே மாட்டேன்...' 'அவளெ தடுக்காதீங்கோன்னா... அப்புறம் அவளே நமக்கு இல்லாம போயிருவா' என்ற தன் மனைவியின் பரிந்துரையை தட்ட முடியாமல் விமான நிலையம் வரை வந்து வழியனுப்புகிறார் பட்டாபி ...

மாதவனுடைய நியமனத்தை உறுதிப்படுத்தும் போர்ட் இயக்குனர் குழு கூட்டத்தில் பூர்ணிமா இயக்குனராக கோ ஆப்ட் செய்யப்படுகிறார்.

அதற்கடுத்த கூட்டத்தில் நாடார்-சோமசுந்தரம் இருவரிடையே ஏற்படும் ஒப்பந்தப்படி நாடாரின் வழக்கறிஞரான மோகனும் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

முதல் இயக்குனர் கூட்டத்தில் பங்கேற்க வரும் உயர் அதிகாரிகள் பட்டியிலில் வந்தனா என்ற பெயரைக் கண்டு விசாரித்துக்கொண்டு வங்கியின் பயிற்சிக் கல்லூரிக்கு செல்கிறார்.... பழைய நினைவுகள் திரும்புகின்றன...

********

இது ஒரு தாற்காலிக முடிவுதான்....

மாதவன் மீண்டும் வங்கிக்கு திரும்புவாரா?

சேதுமாதவன் சிறைத்தண்டனையிலிருந்து மீள்வாரா?

ரவி பிரபாகர் தனக்கெதிரான விசாரனையிலிருந்து மீள்வாரா?

ரத்தினவேல், ராசேந்திரன் பிடிபடுவார்களா? நீயா நானா என்ற போராட்டத்தில் வெற்றி யாருக்கு? நாடார் - ராசம்மாள் ஜோடிக்கா இல்லை ரத்தினவேல் - ராசேந்திரன் ஜோடிக்கா?

மாணிக்கவேலின் மகன் குணமடைவாரா?

ரம்யாவின் தடைபட்டுப் போன திருமணம்.....

மோகன் - வந்தனாவின் வாழ்வில் வசந்தம் திரும்புமா?

சீனிவாசன் - மைதிலியின் திருமண ஆசை...

இன்னும் எத்தனை, எத்தனையோ தீர்வு கிடைக்காத வினாக்கள்.....

அடுத்த பகுதியில்... ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு....

சூரியன் தொடரை தொடர்ந்து ஆதரவளித்து வந்த தமிழ்மண நண்பர்களுக்கு மிக்க நன்றி... இத்தொடரின் மொத்த ஹிட்... சுமார் 50000 - பழைய ப்ளாகரில் 30000 மற்றும் புதிய ப்ளாகரில் 20000...

அவ்வப்போது வந்து பின்னூட்டம் இட்ட ஜப்பான் கிருஷ்ணாவுக்கும்...

விடாது பின்னூட்டம் இட்டு என்னை ஊக்குவித்த என் அருமை நண்பர் சிவஞானம்ஜி அவர்களுக்கும் இரட்டை நன்றிகள்...

சூரியன் மீண்டும் உதயமாகும்வரை.....இடைபட்ட காலத்தில்... அதாவது, எதிர்வரும் பதினைந்தாம் தேதி முதல்.....

நாளை நமதே... புதிய தொடர்... இளைய சமுதாயத்தினரின் ஆசைகள், நிராசைகள்.....

**********

15 comments:

அருண்மொழி said...

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

சொல்லியபடி நிறைய கதைகளை சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி கூறியதற்கு மிக நன்றி...

//சேதுமாதவன்.....கொலைசெய்த முயற்சிக்காக..//...{கொலைமுயற்சியில் ஈடுபட்டதற்காக}

//பூர்னிமா சேதுமாதவன் இயக்குனராக//
{பூர்னிமா/பூர்னிமாசோமசுந்தரம்)


target fix செய்தா இதுதான் தொல்லை

Unknown said...

cool story... thanks a lot.
looking forward the 2nd part in 6 months time.

TBR. JOSPEH said...

வாங்க அருண்மொழி,

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி

சொல்லியபடி நிறைய கதைகளை சுருக்கமாக முடித்து விட்டீர்கள். //

இவர்கள் அனைவருமே மீண்டும் வர இருப்பவர்கள்தானே... அவ்வப்போது பழைய நினைவுகளில் மூழ்க வாய்ப்புள்ளது... அப்போது விரிவாக சொல்லிவிடலாம்...

TBR. JOSPEH said...

வாங்க ஜி,

இனிமே பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடி ஒங்கக்கிட்ட ப்ரூஃப் ரீடிங்குக்கு அனுப்பலாம் போலருக்கு...

டார்கெட் ஃபிக்சிங்குக்கும் தவறுகளுக்கும் சம்பந்தமில்லை ஜி!

தவறுகள் நிதானமாக எழுதினாலும் ஏற்படத்தான் செய்யும்... அஞ்சாறு தரம் படிச்சிட்டுத்தான் பப்ளிஷ் பண்றேன்...

எனிவே, சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி...

TBR. JOSPEH said...

வாங்க முகின்,

cool story... thanks a lot.
looking forward the 2nd part in 6 months time. //

மிக்க நன்றி.... புதிய தொடரையும் படிங்க... கருத்துக்களை அவ்வப்போது எழுதுங்கள்...

siva gnanamji(#18100882083107547329) said...

//target fixing.க்கும் தவறுகளுக்கும்
சம்பந்தமிருப்பதாக நானும் சொல்லவில்லை.....
200 பதிவுகள்தான் என்று வரம்பு கட்டியதால், சுமார் 10 பதிவுகளுக்கு உரிய விதயங்களை 10 வரிகளில் சுருக்கியதைத்தான் குறிப்பிட்டேன்...

ராகவன் -வந்தனா குறிப்பும் குழப்பம்
வந்தனா சட்டக்கல்லூரியில் பயிலும் பொழுது.....அவர் பெயர் மோகனா அல்லது ராகவனா?

புதினம் நன்றாக அமைந்தது;எப்பொழுது நூல்வடிவம்
பெறும்?

மேலும் மேலும் எழுத
மேலும் மேலும் சிறப்படைய
வாழ்த்துகிறேன்!

TBR. JOSPEH said...

சுமார் 10 பதிவுகளுக்கு உரிய விதயங்களை 10 வரிகளில் சுருக்கியதைத்தான் குறிப்பிட்டேன்...//

உண்மைதான்... ஒப்புக்கொள்கிறேன்..

ராகவன் -வந்தனா குறிப்பும் குழப்பம்
வந்தனா சட்டக்கல்லூரியில் பயிலும் பொழுது.....அவர் பெயர் மோகனா அல்லது ராகவனா?//

மோகன் என்பதுதான் சரி... மாற்றிவிட்டேன்... நன்றி :-)

புதினம் நன்றாக அமைந்தது;//

அப்படியா? நன்றி.

எப்பொழுது நூல்வடிவம்
பெறும்?//

யாராவது இத பிரிண்ட் போட முன்வருவாங்கன்னு நினைக்கிறீங்க.. I don't think so..

மேலும் மேலும் எழுத
மேலும் மேலும் சிறப்படைய
வாழ்த்துகிறேன்! //

ரொம்ப நன்றி ஜி! இருந்தாலும் ஒங்களுக்கு ரொம்பத்தான் பெரிய மனசு:-)

krishjapan said...

இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள். Retired Hurt!? சரியாக, ஐந்து மாதம் கழித்து, ஞாபகப்படுத்தி, குடைந்து கொண்டே இருப்பேன்.

இது நான்காவது முயற்சி. இந்த பிளாகரோடு பெருந் தொல்லையாயுள்ளது..

மா.சிவகுமார் சொன்னது போல, ஆர்தர் ஹெய்லி பாணியில் அட்டகாசமான ஒரு தொடர். வங்கிப்பணியை மையமாக வைத்து, அங்கு நடக்கும், விஷயங்களை, விவகாரங்களை, விஷமங்களை, விபரீதங்களை மிக சுவாரசியமாக தந்தீங்க சார்.

சென்னை வரும்போது, கதாசிரியருக்கு, ஜப்பான் டிபிஆர் ரசிகர்மன்ற சார்பாக, சிறப்பான விருந்தளிக்கப்படும் (விருந்து சார், விருது இல்ல...). அன்னிக்கி மட்டும் வீட்டம்மாகிட்ட ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிடலாம்...

krishjapan said...

//இவர்கள் அனைவருமே மீண்டும் வர இருப்பவர்கள்தானே... அவ்வப்போது பழைய நினைவுகளில் மூழ்க வாய்ப்புள்ளது... அப்போது விரிவாக சொல்லிவிடலாம்... //

பலே! என்னடா, நிறைய சுவாரசியங்களை ரத்தினச்சுருக்கமாக முடித்துவிட்டாரேன்னு நினைச்சேன், அருமையான உத்தி...

நன்றிக்கு, நன்றி...

நால்ரோடு said...

TBR ayya,

enna ippidi mudichitteeka, suvaarasiyamaa porappo tappunnu oru intervael vittuttenkale iyyaa athum 6 maasathukku. seekkiram
aarambinkayaa. kaathukkittu irukkomla

TBR. JOSPEH said...

வாங்க கிருஷ்ணா,

இது நான்காவது முயற்சி. இந்த பிளாகரோடு பெருந் தொல்லையாயுள்ளது..//

தொல்லைகளை மீறி வெற்றிகொண்டீர்கள்.. வாழ்த்துக்கள்:-)

மா.சிவகுமார் சொன்னது போல, ஆர்தர் ஹெய்லி பாணியில் அட்டகாசமான ஒரு தொடர். வங்கிப்பணியை மையமாக வைத்து, அங்கு நடக்கும், விஷயங்களை, விவகாரங்களை, விஷமங்களை, விபரீதங்களை மிக சுவாரசியமாக தந்தீங்க சார். //

சுவாரசியமா இருந்துருக்கலாம்.. ஆனா ஆர்தர் ஹெய்லி அளவுக்கு... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மாதிரிதானே... மேலும் மா.சிவக்குமார் ஒரு அருமையான மனிதர்... மிகவும் பெருந்தன்மையுடன் அவர் இதை கூறியிருக்கிறார்.. உங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி கிருஷ்ணா..

சென்னை வரும்போது, கதாசிரியருக்கு, ஜப்பான் டிபிஆர் ரசிகர்மன்ற சார்பாக, சிறப்பான விருந்தளிக்கப்படும் (விருந்து சார், விருது இல்ல...). அன்னிக்கி மட்டும் வீட்டம்மாகிட்ட ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிடலாம்... /

:-))))))

சரியாக, ஐந்து மாதம் கழித்து, ஞாபகப்படுத்தி, குடைந்து கொண்டே இருப்பேன்.
//

நிச்சயமாக.. இந்த கரு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இதை எவ்வளவு விரிவாகவும் எழுதலாம்... நிச்சயம் திரும்பி வருவேன்.. கதையின் போக்குப்படி இடையில் கொஞ்சம் இடைவெளி வேண்டும் என்று நினைத்தேன்.. அதனால்தான்...

மேலும் அடுத்த தொடருக்கு நான் நினைத்திருக்கும் கருவும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்... படித்துவிட்டு சொல்லுங்கள்..

TBR. JOSPEH said...

என்னடா, நிறைய சுவாரசியங்களை ரத்தினச்சுருக்கமாக முடித்துவிட்டாரேன்னு நினைச்சேன், அருமையான உத்தி...//

200வது பதிப்பில் நான் இறுதியில் சுருக்கமாக கூறிய அனைத்து சம்பவங்களுக்கும் நான் எழுதி வைத்துள்ள பதிவுகளை நிச்சயம் அடுத்த பாகத்தில் வெளியிடுவேன்...

முதல் பாகம் நூறுடன் முடிந்ததால் இதையும் நூறுடன் நிறுத்தலாம் என்றதன் விளைவுதான் அவற்றை சுருக்கமாக எழுத வைத்தது...

TBR. JOSPEH said...

வாங்க னால்ரோடு,

enna ippidi mudichitteeka, suvaarasiyamaa porappo tappunnu oru intervael vittuttenkale iyyaa athum 6 maasathukku. seekkiram
aarambinkayaa. kaathukkittu irukkomla //

சாரிங்க... இது முடிவில்லையே... ஒரு இடைவெளிதான்... கண்ணெ மூடி திறக்கறதுக்குள்ள ஆறு மாசம் ஓடிரும்...

Meenapriya said...

200க்கு வாழ்த்துக்கள்... கதைல வர பெர்னாண்டோ நீங்க தானே... 6 மாசம் முடிஞ்சதும் நீங்களே தொடர்ந்துடுங்க இல்லன்னா ஆட்டோ அனுப்ப வேண்டி இருக்கும்..