14.11.06

சூரியன் 142

எதிர்முனையிலிருப்பவர் சோமசுந்தரம் என்று அறிந்தவுடனே நாடார் தர்மசங்கடமாகிப்போவார் என்று நினைத்த மோகனுக்கு அவர் படு உற்சாகமாக ‘இப்பத்தான் ஒம்மரப் பத்தி நம்ம வக்கீல் தம்பிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தேன்..’ என்றதும் திடுக்கிட்டார்.

சோமசுந்தரத்தையும் அவருடைய குணத்தையும் ஏற்கனவே நன்கு அறிந்துவைத்திருந்த மோகன் இனி அவருடைய குறி தன் மீதும் பாயும் என்பதை உணர்ந்து சங்கடப்பட்டார்.

‘சொல்லும்யா. என்ன விசயம், திடீர்னு கூப்ட்றீரு?’ என்று தொடர்ந்தவாறு தன்னை ஓரக்கண்ணால் பார்ப்பதைப் புரிந்துக்கொண்ட மோகன் ‘நான் கெளம்பட்டுமா’ என்று சைகையால் கேட்க ‘வேணாம் இங்கேயே இருங்க’ என்றதுடன் அவருடைய மேசை மீது எப்போதுமிருக்கும் கையடக்க ஒலிப்பதிவு சாதனத்தை இயக்கச் சொல்லி நாடார் சைகைக் காண்பிக்க அவருடைய சங்கடம் மேலும் கூடியது.

வேறுவழியின்றி அதன் 'பதிவு' பட்டனை அழுத்திவிட்டு சங்கடத்துடன் நாடாரைப் பார்த்தார்.

நாடார் தன்னுடைய செல்ஃபோனிலிருந்த ஒலிபெருக்கி பட்டனை அழுத்தி ஒலிப்பதிவு சாதனத்தின் அருகில் வைத்து அதன் ஒலியை சற்று கூட்டினார்.

எதிர்முனையில் சோமசுந்தரத்தின் குரல் ஸ்பஷ்டமாக அறையெங்கும் பரவியது. அவர் பேசப் பேச அவருடைய குரல் ஒலிப்பதிவாக நாடாரின் உதடுகள் விஷமத்துடன் நெளிந்தன.

அவர் பேசி முடிக்கும்வரை குறுக்கிடாமல் காத்திருந்த நாடார், ‘என்னது ஒம்ம பொண்ணா.. யாரு பூர்ணிமாவா?’ என்றவாறு மோகனை ‘பார்த்திராய்யா என்னமோ நியாயம் தர்மம்னு பேசினீரே’ என்பதுபோல் பார்த்தார்.

‘ஏன் நாடார்.. என் பொண்ணுக்கென்ன.. அவ நம்ம போர்ட்லருக்கற சிலரெ விட நல்லாவே படிச்சிருக்கா நாடார்.’ சோமசுந்தரம் அந்த ‘சிலரில்’ சற்றே அழுத்த நாடாரின் கருத்த முகம் மேலும் கருத்ததைக் கவனித்தார் மோகன்.

‘அதுக்கு சொல்லலய்யா.. அது சின்னப் பொண்ணு.. போர்ட் ரூம் சண்டையை எல்லாம் பாத்துருக்குமோ இல்லையோ.. அதுக்காகச் சொன்னேன்..’

சோமசுந்தரம் எதிர் முனையில் சிரித்தார். ‘எங்க ஹாஸ்ப்பிட்டல் போர்ட்ல நடக்காததா.. நாலு வருசமா அதுல பூர்ணி இருந்திருக்காளே..’

நாடார் என்ன பதிலளிக்கலாம் என்று யோசித்தவாறு தயங்குவது தெரிந்தது. அவர் மேசையில் தன் கை விரல்களால் லேசாக தாளம் போடுவதைக் கவனித்த மோகனால் அவருடைய மனதில் ஏதோ வில்லங்கமான எண்ணம் உருவாவதை ஊகிக்க முடிந்தது.

ஒன்றா இரண்டா பதினைந்தாண்டுகால பழக்கமாயிற்றே. நாடார் எந்த நேரத்தில் என்ன சிந்திப்பார், எப்படி சிந்திப்பார் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி.

‘சரிய்யா.. அப்படியே செஞ்சிருவோம்.. ஒமக்கென்ன, ஒடனே ஒம்ம பொண்ணெ போர்ட்ல ஏத்திரணும்.. செஞ்சிருவோம்.. ஆனா அதே சமயத்துல நீரும் எனக்கு ஒரு உதவி பண்ணோணும்..’ நாடாரின் குரல் இறுகுவதை கவனித்தார் மோகன்.

எதிர்முனையில் இவர் என்ன கேட்கப் போகிறார் என்ற நினைப்பில் சில நொடிகள் கழித்தே பதில் வந்தது. ‘சொல்லுங்க நாடார்..’

‘கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம பளைய சேர்மன்.. வக்கீலுக்கோ ஆடிட்டருக்கோ படிச்ச மெம்பர்ஸ் நம்ம போர்ட்ல இல்லே. அடுத்த இன்ஸ்பெக்ஷனுக்குள்ள அத நிவர்த்தி பண்ணணும்னு ரிசர்வ் பேங்க்லருந்து ஒரு லெட்டர் வந்துதுன்னு சொன்னாரில்ல?’

அவர் முடிப்பதற்குள் எதிர்முனையிலிருந்து விஷமமான சிரிப்பொலி கேட்டது. ‘நாடார்.. நீங்க பயங்கரமான ஆளுய்யா.. என்னெ போர்ட விட்டு வெளியே அனுப்பிட்டு நீங்க ஒங்க வக்கீலாஃபீசுக்கு நேரா போயி அந்த எடத்துல அவர சேர்த்து விட்டுறப் போறேன்னு திட்டம் போடறீங்களாக்கும்.. சரியான நேரத்துல நா கூப்பிடலன்னா என் எடத்துலயே மோகன் சார போட்டுருப்பீங்க போல?’

நாடார் முகத்தில் கேலியான ஒரு புன்னகை தவழ்ந்தது. ‘நான் பயங்கரமான ஆளுதான்யா.. நீர் மட்டுமென்ன.. இப்படியொரு எண்ணம் என் மனசுல வந்துரப்போவுதுன்னு எப்படியோ ஊகிச்சிருக்கிரேய்யா.. இல்லன்னா சரியா இந்த நேரம் பார்த்து எம் பொண்ணெ சேக்கணும்னு எங்கிட்ட ஒதவி கேட்டு ஃபோன் செஞ்சிருப்பீரா?’

இரு பக்கமும் சிரிப்பொலி எதிரொலிக்க பயங்கரமான ஆளுங்கப்பா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார் மோகன். இனி இவர்களுடைய விளையாட்டில் தானும் ஒரு பகடைக்காய் போல்தான் என்று ஓடியது அவருடைய எண்ணம்.

******

சேதுமாதவனின் வாகனம் அவருடைய வீடு நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது.

சாலையிலிருந்த வாகன நெரிசல் அவர் நினைத்த வேகத்தில் செல்ல முடியாமற்போகவே ஓட்டுனரைப் பார்த்து எரிந்து விழுந்தார். ‘என்ன மேன் ஓட்டுற? ஒன்னெ சைக்கிள்ல போறவன்கூட முந்திக்கிட்டு போயிருவான் போல.. தள்ளிப்புளி.. வேகமா போன்னு எத்தனெ தரம் சொல்றது ஒனக்கு?’

இதற்காகவே சேதுமாதவனின் வாகனத்தை வங்கியிலிருந்த எந்த டிரைவருமே மனமுவந்து ஓட்டுவதற்கு முன்வருவதில்லை.

குறித்த நேரத்தில் புறப்படாமல் கடைசி நேரத்தில் வந்துவிட்டு, ‘இங்க பார் மேன்.. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனிக்கி அறியில்லா.. இன்னும் பத்தே நிமிஷத்துல ஞான் செல்லாம் பறையன எடத்துக்கு போயிரணும்.. டிராஃபிக் இருக்கு, சிக்னல் இருக்குன்னுல்லாம் பறையாம் பாடில்லா.. எந்தா மனசிலாயோ..’ என்று வறுத்தெடுத்துவிடுவார்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாகனத்தை செலுத்த வேண்டிவரும். தப்பித்தவறி காலதாமதமாகிவிட்டாலோ அவ்வளவுதான், அலுவலகம் திரும்பியவுடனேயே ஒரு எச்சரிக்கை மெமோ கொடுக்கப்பட்டுவிடும்..

சாதாரணமாகவே கோபத்துடன் காணப்படும் சேதுமாதவன் இன்று ஏதோ கூடுதல் ‘சூடாக’ இருப்பதாகப் பட்டது அவருடைய ஓட்டுனருக்கு.. ஆகவே நாம் ஏதாவது சொல்லப் போக நாளைக்கு மெமோ கிடைத்துவிடுமே என்ற பயத்தில் மவுனமாக வாகனத்தின் வேகத்தைக் கூட்டுவதில் முனைந்தான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அன்று நெரிசல் சற்று கூடுதலாகவே இருந்தது.

மாநில ஆளுனர் ஏதோ விழாவுக்காக உயர்நீதி மன்றத்திற்குச் செல்கிறாராம் கடற்கரைச் சாலை முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு அத்தனை வாகனமும் அண்ணா சாலையில் நிறைந்து வழிந்தன..

சேதுமாதவனுக்கு இன்று காலை முதல் ஏற்பட்ட தோல்விகள் ஏற்கனவே அவருடைய பொறுமையை மிகவும் சோதித்திருந்தது. இதில் வாகன நெரிசலும் சேர்ந்துக்கொள்ள அவருடைய கோபம் உச்சந்தலை வரை ஏறி அத்தனையும் வாகன ஓட்டுனர் தலையில் இறங்கியது.

‘ஒன்னெ மாதிரியான ஆளுங்கள வச்சிக்கிட்டிருக்கறதுக்கு...’ என்று கோபத்தில் பல்லைக் கடித்தார். ரியர்வ்யூ கண்ணாடி வழியாக எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்தைப் பார்த்தார் டிரைவர் மகா எனப்படும் மகாலிங்கம்.. இவருக்கு திரு தான் லாயக்கு.. நம்மளால ஒரு அரைமணி நேரமே இந்தாள சமாளிக்க முடியலையே எப்படிதான் அவன் இத்தன வருசமா இவர்கிட்ட குப்பைய கொட்டறானோ தெரியலையே..

சேதுமாதவனுடைய அந்தரங்க ஊழியன் திரு என்கிற திருநாவுக்கரசு ஒருமுறை அவனிடம், ‘இங்க பார் மகா.. சார் எங்க போறார்.. யாரெ பாக்கறார்னு டெய்லி எங்கிட்ட சொல்லணும்.. ஒன்னெ தனியா கவனிச்சுக்கிறேன்.. ஆனா அந்தாளுக்கு தெரியக்கூடாது என்ன?’ என்றான்.

எதுக்கு இவனுக்கு இதெல்லாம்? என்று தோன்றினாலும் அவனிடமிருந்து கிடைத்த தொகை கணிசமானதாகவே இருக்கவே சேதுமாதவனுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாகனம் ஓட்ட மகாலிங்கம் முன்வந்தான்.

‘எடோ திரு.. நான் வந்துக்கிட்டிருக்கேன்.. மாயா வீட்டிலுண்டா?..’

‘.....’

‘எவ்விட போயி? எப்போ வரும்னு எந்தெங்கிலும் பறஞ்சோ?’

‘.......’

‘சரி.. போட்டே.. நீ நம்மட வீட்டு ஃபோன்லருந்து பப்பனெ விளிச்சி வீட்டிலேக்கி வராம் பற..’

‘... ...’

எதிர் முனையிலிருந்து என்ன பதில்வந்ததோ சேதுமாதவன் எரிந்து விழுவதை கவனித்தான் மகாலிங்கம்..

‘எந்தாயி திரு.. அதாடா.. அந்த பத்னமநாபன்.. அவனெ விளிச்சி வராம் பறயி.. ஞான் இனியும் பத்து நிமிசத்துல வந்துரும்.. பின்னே நம்மட க்ளப்பு ஆபீஸ்லெக்கி விளிச்சி நம்ம விஸ்வநாதன் சார் வந்தா வீட்டிலோட்டு வராம் பறயி.. மறக்கண்டடா.. பின்னே கூலர்ல குப்பியுண்டில்லே.. விஸ்வன் சார்னெ வோட்காயிருக்கிம் வேண்டது.. வீட்டிலெ உண்டுல்லே..’

‘.... ...’

மகாலிங்கத்திற்கு அரைகுறையாக மலையாளம் விளங்கும்.. அதுவும் வோட்கா என்றால் மலையாளம் என்ன பிரெஞ்சும் புரியுமே.. அவன¨யுமறியாமல் நாக்கில் எச்சில் ஊறியது..

இப்படிப்பட்ட சமயங்களில் சேதுமாதவனே போதையின் உச்சியில் ‘எடோ திரு.. நம்ம டிரைவருக்கு வேணோன்னு சோய்க்கி.. கொறச்செ கொடுக்குடா.. குடிச்சி களிச்சோட்டே..’ என்பார்..

இணைப்பைத் துண்டித்த சேதுமாதவன் தன்னுடைய டிரைவர் கண்ணாடி வழியாக தன்னைக் கவனிப்பது தெரிய எரிந்து விழுந்தார். ‘எடோ.. எந்தா நோக்குனெ.. இன்னும் பத்து நிமிசத்துல நம்ம வீட்டு முன்னால நிக்கலே.. ஒனக்கு சஸ்பென்ஷந்தான் சொல்லிட்டேன்..’

போச்சிரா என்றிருந்தது மகாவுக்கு.. தன் கண்ணெதிரே அணிவகுத்து நின்ற வாகனங்களைப் பார்த்தான்.. சஸ்பென்ஷன் என்ற வாக்கில் சற்று முன் எச்சில் ஊறிய நாக்கு வரண்டுபோக முண்டியடித்துக்கொண்டு செல்ல ஏதாவது வழி தெரிகிறதா என்று பார்ப்பதில் முனைந்தான்..

தொடரும்..

12 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஆடு புலி ஆட்டம் ஆரம்பமாய்டிச்சி
எத்தனுக்கு எத்தன் மகாஎத்தன் யாரோ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

எத்தனுக்கு எத்தன் யாருங்கற போட்டியில இடையில மாட்டிக்கிட்டு அவஸ்தைப்படற அதிகாரிகளின் பாடுதான் திண்டாட்டம்..

அருண்மொழி said...

சூரியன் புதன் தானே வரும். நாமதான் கிழமை தெரியாம இருக்கோம் என்று calendarஐ பார்க்க வைத்துவிட்டீர்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

நேத்து ஜி ஒரு கிடுக்கிப்பிடி போட்டாரில்லையா? அதான் இன்னைக்கிம் போட்டுட்டேன். அடுத்தது வெள்ளிதான்:)

krishjapan said...

ஜி கேட்டாத்தான், அடுத்த நாளே பதிவு போடுவீங்களோ.....நான் கேட்டா போடமாட்டீங்களோ......ன்னு கலாய்க்கத்தான் ஆசை. ஆனால், உங்க சிரமம் தெரியும். அதனால, வெள்ளியே வாங்க...காத்திருக்கோம்.

ரவி said...

நன்றாக இருக்கிறது...மற்ற அத்தியாயங்களை பேக்குல போய் படிக்க போறேன்...

siva gnanamji(#18100882083107547329) said...

முன்னாலே ஒரு வெள்ளி டோக்கர் அடிச்சிட்டிங்க.அத இன்னிக்கு காம்பன்சேட் செஞ்சுட்டீங்க.....
சொன்ன சொற்படி புதனுக்குரிய பதிவ
போட்றுங்க.....நீங்க நல்ல பிள்ளை..அதாலே போட்றுவீங்கதானே

டிபிஆர்.ஜோசப் said...

அதனால, வெள்ளியே வாங்க...காத்திருக்கோம். //

கிருஷ்ணான்னா கிருஷ்ணாதான். தாங்ஸ்..

டிபிஆர்.ஜோசப் said...

நீங்க நல்ல பிள்ளை..அதாலே போட்றுவீங்கதானே //

போடணும்னு ஆசைதான்.. ஆனா முடியாது போலருக்கே.. இன்னும் ரெண்டு வாரம்.. அப்புறம் டெய்லி:)

krishjapan said...

ஆஹா...இன்னும் ரெண்டு வாரம்..சந்தடி சாக்கில, அடுத்த கேஸுல வாய்தா வாங்கறீங்களே...சரியான ஆளுதான்...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ரவி,

இப்பத்தான் முதல் தடவையா படிக்கறீங்களா?

தாங்ஸ்..

டிபிஆர்.ஜோசப் said...

ஆஹா...இன்னும் ரெண்டு வாரம்..சந்தடி சாக்கில, அடுத்த கேஸுல வாய்தா வாங்கறீங்களே...சரியான ஆளுதான்..//

டெய்லி போடறதுக்குன்னுதான் ரெண்டு வாரம் வேணும்னு கேட்டேன்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடறதுக்கில்லேல்லே:)

என்ன பண்றது? வேல நெட்டி முறிக்குதுங்க.. எர்ணாகுளத்துல ஒரு சி.எம்மெ போடறேன், போடறேன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்களே தவிர இன்னமும் போட்ட பாடில்லை..

பாவம் தனஞ்செய்.. அவர் போனதுக்கப்புறம் என் பாடுதான் பாவமாயிருச்சி..

ரெண்டு வாரம்னு சொல்லியிருக்காங்க.. அதுக்குள்ள போட்டுட்டா எனக்கு கொஞ்சம் ரிலீஃபாருக்கும்..