23.11.05

போடாங்.. உன் ஐடியாவும் நீயும்

காட்சி 1

பாத்திரங்கள்
திருடன் 1: கவுண்டமனி
திருடன் 2: செந்தில்.
காவற்காரர் (Police): எஸ்.எஸ். சந்திரன்.


திருடன் 1 & 2 சாலையில் சென்றுக்கொண்டிருக்கிறார்கள். நேரம் நள்ளிரவு.

திரு1: டேய் திரிசூலத் தலையா!

திரு2: என்னண்ண நீங்க? பழைய ஸ்டைல்லயே கூப்டுக்கிட்டு..எல்லாத்துலயும் ஒரு புதுபாணி வேணும்ணே.

திரு1: பார்றா? திட்டுறதுலகூட புதுபாணி வேணுமாக்கும்? சரி நீயே சொல்லு, உன்ன மாதிரி ஆளுங்கள என்னன்னு சொல்லி திட்டுறது?

திரு2: கம்ப்யூட்டர் தலையா, சாட்டிலைட் தலையான்னு சொல்லுங்க.. ஒரு கெளரவுமா இருக்கும்லே..

திரு1: கம்ப்யூட்டர், சாட்டிலைட்டுன்னு சொல்லி திட்டறதுக்கும் ஒரு கெட்டப் வேணும்டா.. உன்னப் போயி .. சரி, சரி.. நாம இன்னைய வேலைய பார்ப்போம்.. நா சொன்னது நினைவிருக்கா?

திரு2: (பின்னந்தலையை சொறிந்துக்கொண்டு மேலே வானத்தைப் பார்க்கிறான்) என்னண்ணே சொன்னீங்க?

திரு1: (வானத்தைப் பார்க்கிறான்) அதென்னடா மேல வானத்த பாக்குற? அங்க எங்கயாச்சும் நா சொன்னத எழுதி கிழுதி வச்சிருக்கியா என்ன?

திரு2: அதில்லண்ண?

திரு1: என்ன நொன்னண்ன? சரி, சரி. மறுபடியும் சொல்றேன் கேட்டுக்க. அங்க வந்து ஏதாவது ஏடாகூடமா செஞ்சே, மவனே. (சென்சாரில் நீக்கி விட்டதால்.. வாயசைப்பு மட்டும்)

திரு2: (கோபத்துடன்) அண்ணே, என்னை என்ன வேணும்னா சொல்லுங்க.. அனாவசியமா.. வீட்லருக்கறவங்கள இழுக்காதீங்க.. வேனாண்ண, சொல்லிட்டேன்.

திரு1: (திரு2 தோளில் கைவைத்து) சரிடா.. டென்ஷனாகாத..

திரு2: சரி பரவால்ல, சொல்லுங்க.

திரு1: (சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து வாசிக்கிறான்) மஞ்சள் 100 கிராம், அரிசி 1 கிலோ ... பருப்பு..

திரு2: (கேலியுடன்) என்னண்ணே? அக்கா வீட்டுக்கு திரும்பி வரும்போது வாங்கிட்டு வரச்சொன்ன லிஸ்டாட்டம் இருக்குது..

திரு1: (கோபத்துடன்) சை.. சட்டைய மாத்தி போட்டுட்டு வந்துட்டேன் போலருக்குடா..

திரு2: இப்ப என்னண்ண பண்ண போறீங்க? பேசாம நம்ம ப்ளான நாளைக்கி வச்சிக்கலாம்ணே..

திரு1: டேய், என்ன விளையாடறியா?

திரு2: பின்ன என்னன்ன பண்ண சொல்றீங்க? பெருசா திட்டம் போட்டேன்னு சொன்னீங்க.. இப்ப ப்ளான வீட்ல வச்சிட்டு வந்து நிக்கறீங்க? இதே நானாயிருந்தா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா?

திரு1: கம்ப்யூட்டர் தலையா, என்ன நக்கலா? !

திரு2: (கேலியுடன்) நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் கம்ப்யூட்டர் தாண்ணே. அப்படியே ப்ளான மூளையிலயே பதிஞ்சி வச்சிருப்பேன்.. உங்களால அதெல்லாம் முடியாதுண்ணே..

திரு1: போடாங்... அப்புறம் ஏதாச்சும் சொல்லிடப் போறேன். கடுப்பேத்தாம சும்மா வா.. (சட்டென்று நின்று நேர் எதிர்புறமாய் திரும்பிக்கொள்கிறான். திரு2 விழிக்கிறான்)

திரு2: என்னன்ன தேள் கொட்டினாமாதிரி நின்னுட்டீங்க?

திரு1: டேய் சாட்டிலைட் தலையா.. நேரா பாரு.. வர்றது யாருன்னு தெரியுதா?

திரு2: எங்கண்ணே? (கண்களுக்கு மேல் கையை வைத்து உற்று பார்க்கிறான்) அண்ணே... (பீதியுடன் பின்வாங்குகிறான்) நம்ம தாணாக்காரருண்ணே.. அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.. திரும்பிப் போயிரலாம்னு..

திரு1: (திரும்பாமல் அப்படியே ஓரக்கண்ணால் பின்னால் பார்க்கிறான்) டேய்.. இந்த பக்கம்தான் வர்றானா பாரு..

திரு2: (பயத்துடன் அலர்கிறான்) ஆமாண்ணே.. ஐயையோ.. இப்ப என்னன்னே பண்றது.. அந்த குப்பைத்தொட்டியில ஒக்காந்துக்கறேன்.. அவரு வந்தார்னா நா இல்லேன்னு சொல்லிருங்கண்ணே.. (குப்பைத் தொட்டியை நோக்கி ஓடுகிறான்.)

திரு1: (திரு2ஐ பாய்ந்து பிடித்து அமுக்குகிறான்) டேய். என்ன மாட்டிவுட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆயிடலாம்னு பாக்கறயா? நில்றா..

(இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நிற்க.. அவர்களை நோக்கி சைக்கிளில் வந்த காவற்காரர் அவர்களைப் பார்த்துவிட்டு சைக்கிளில் இருந்து கீழே இறங்குகிறார். அதைப் பார்த்துவிட்டு இருவரும் அவருக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கின்றனர்)

காவல்: டேய் யார்றா நீங்க? இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க? (அவர்களுடைய முகத்தைப் பார்க்க ஏதுவாக அவர்களைச் சுற்றிக்கொண்டு முன்புறம் செல்ல இருவரும் திரும்பி நிற்க காவல்காரருக்கு அவர்களுடைய முதுகு மட்டுமே தெரிகிறது) (தனக்குள்) என்ன இவனுங்களுக்கு முகமே இல்ல? (முனகுகிறார்)

திரு1: போலீஸ்காரர், போலீஸ்காரர். நாங்க ரெண்டு பேரும் முகமே இல்லாத அதிசயப் பிறவிங்க போலீஸ்காரர்.

திரு2: ஆமாஞ்சார்.. எனக்கு கூட கடவுள் மூஞ்சே படைக்காம விட்டுட்டான் சார்.

காவல்: (தனக்குள்) நாம நெனச்சது சரிதான். இவன்களுக்கு மூஞ்சே இல்ல.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் தன்னுடைய கையிலிருந்த லட்டியால் அவர்களுடைய முதுகில் ஓங்கி அடிக்கிறார். இருவரும் வலியைப் பொறுத்துக்கொண்டு நிற்கின்றனர்) டேய், தப்பா நெனச்சுக்காதீங்க. வலிச்சா கத்துறதுக்கு வாயாவது இருக்கான்னு பார்த்தேன். (சத்தமே வராததால்) சரிதான். வாய்கூட இல்ல போலருக்குது.. நாமதான் நம்ம டைம வேஸ்ட் பண்ணிட்டோம்.. (நகர்கிறார். திருடர்கள் இருவரும் நிம்மதி பெருமூச்சுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். நகர ஆரம்பித்த காவல்காரர் அவர்களைச் சுற்றி வந்து தன்னுடைய சைக்கிள் ஸ்டான்டை விலக்கி சைக்கிள் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அவர்களைப் பார்க்க அவர்கள் மீண்டும் திரும்பி அவருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.) சரி, சரி. நாம இன்னைக்கி முழிச்ச மூஞ்சே.. (அவர்களைத் திரும்பி பார்க்கிறார்) சீச்சீ, பாத்த முதுகே சரியில்லன்னு நினைக்கறேன். (அவர்கள் தோளில் லட்டியால் தட்டி) டேய், முகமில்லா பசங்களா, ஒழுங்கா வூட்டுக்கு போய் சேருங்க.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) அதான் உங்களுக்கு முகமே இல்லையே.. எப்படிறா வூட்டுக்கு போய் சேருவீங்க?

(திருடர்கள் ஒருவரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு விழிக்கிறார்கள்.)

திரு1: (அடிக்குரலில்) இப்ப என்னடா பண்றது? இந்த தொப்பித்தலையன் நம்மள ஒருவழி பண்ணாம போமாட்டான் போலருக்குதே.

திரு2: (அதே அடிக்குரலில்)ஆமாண்ணே.. என்ன பண்லாம்? (ஒரு விநாடி யோசித்துவிட்டு..) அண்ணே, ஒரு ஐடியா?

திரு1: உனக்கா? வேண்டாம்டா..

திரு2: அண்ணே நான் சொல்றத கேளுங்க. இல்லன்னா நாம இவரு கிட்டருந்து தப்பிக்கவே முடியாது

திரு1: சரி, சொல்றா... சொல்றத வாய திறக்காம சொல்லு..

திரு2: அதெப்படின்னே வாய திறக்காம..

காவல்: (தனக்குள்) மாசக் கடைசியில ஏதாவது ஒரு கேஸ் மாட்டும்னு பாத்தா ஒன்னும் படியமாட்டேங்குதே.. (திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் இருவரையும் பார்க்கிறார்) மூஞ்சில்லாட்டி என்ன? இவனுங்களையே தள்ளிக்கிட்டு போனா என்னா? மூஞ்ச பாக்காமயே திருடன்ங்கதான்னு முடிவு பண்றதுக்கே ஒரு சாமர்த்தியம் வேணுமில்ல? இன்னொருதரம் மூஞ்ச தெரியுதான்னு பார்த்துரலாம்.. (இருவரையும் பார்த்து) டேய்.. அப்படியே திரும்புங்க..

திரு1: டேய் நீ முதல்ல திரும்பு..

திரு2: முதல்ல நீங்க திரும்புங்கண்ணே.

காவல்: டேய் என்னங்கடா.. நான் சொல்லிக்கிட்டேருக்கேன்.. இப்ப மவனே திரும்பல.. (அவர்களை சுற்றிக்கொண்டு செல்கிறார். அவர்கள் இருவரும் திரும்பி மீண்டும் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கின்றனர்)

காவல்: சுத்தம்.. இவனுகளுக்கு மூஞ்சே இல்லை.. டேய் அப்படியே ஸ்டேஷனுக்கு நடங்கடா.. அங்க போயாவது மூஞ்சி தெரியுதான்னு பார்ப்பம்..

திரு1: இப்ப என்னடா பண்றது?

திரு2: நீங்கதான் நான் சொல்ல வந்த ஐடியாவ வேணாம்னுட்டீங்களே?

திரு1: சரி சொல்லுடா..

திரு2: சார்.. போலீஸ் சார் உங்களத்தான்..

காவல்: டேய் என்கிட்டயா பேசறீங்க?

திரு2: ஆமா சார்..

காவல்: அதெப்படிறா மூஞ்சே இல்லாம பேசறீங்க? சரி சொல்லு..

திரு2: சார் இன்னைக்கி என்ன கிழமை?

காவல்: ஏன் நாள் நல்லாங்கலைங்கறியா?

திரு2: அதில்ல சார்.

காவல்: எதில்ல சார்?

திரு2: இன்னைக்கி செவ்வா கிழமைதானே?

காவல்: ஆமா..அதுக்கென்ன இப்போ?

திரு2: செவ்வாய் வெறுவாய்னு நீங்க கேள்வி பட்டதில்லே?

காவல்: வெறுவாயா.. அப்படீன்னா.. வாயே இல்லைங்கறியா?

திரு2: கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க சார்.. செவ்வாய் கிழமை அன்னிக்கி எங்க ரெண்டு பேரோட வாயும் பேசத்தான் செய்யும், தெரியாது..

காவல்: தெரியாதுன்னா.. உனக்கும் கூடவா?

திரு2: ஆமா சார் தெரியாது.

காவல்: அப்ப சாப்பாடு?

திரு1: பட்டினிதான்.. அதுமட்டுமில்ல சார்.. எங்க மூஞ்ச எங்களுக்கே தெரியாது.. அதுனாலதான் தூங்க கூட முடியாம இப்படி பேயா அலைஞ்சிட்டிருக்கோம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல பொழுது விடிஞ்சுருமில்ல.. அப்ப மூஞ்சி, கண்ணு, மூக்கு, வாயி எல்லாம் தெரிய ஆரம்பிச்சிரும். வீட்ட கண்டுபிடிச்சி போயிருவோம். என்னண்ணே எப்படி என் ஐடியா? (பேசிக்கொண்டே காவற்காரர் நிற்கும் திசையை நோக்கி திரும்பிவிடுகிறான். காவற்காரர் இனம் கண்டுகொள்ள இருவரும் பிடிபடுகின்றனர்.)

காவல்: டேய்.. டேய்.. உங்கள மாதிரி எத்தன பேர நான் பாத்திருக்கேன்? எப்படி கணக்கு பண்ணி புடிச்சேன் பாத்தியா? மவனே.. மூஞ்சா இல்ல மூஞ்சி.. நடங்கடா.. ஸ்டேஷனுக்கு போனா தெரிஞ்சிரும் மூஞ்சி இருக்கா இல்லையான்னு..

(இரு திருடர்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்)

திரு1: டேய் பணங்கொட்டை தலையா, நீ ஐடியா சொல்றேன் சொன்னப்பவே தெரியும்டா இப்படித்தான் முடியும்னு.. டேய் மவனே.. லாக்கப்பில போய் வச்சிக்கறேன் உன்ன...

முடிவு

11 comments:

Anonymous said...

சூப்பர் காமடி சார்..

ஏஜண்ட் NJ said...

அப்டியே செந்தில், கவுண்டபெல் பேசிக்கற எபெஃக்ட்ட சூப்பரா எழுத்துல வடிச்சிருக்கீங்க!

நேர்ல பாக்கறப்ப கெடக்கிற பீலிங் இதப் படிக்கறப்ப கெடக்கிது!

சிரிச்சு சிரிச்சு வாயும் வயிரும் நெஜமாவே வலிக்குது போங்க!!

:-)))))

comment posted by: ஞானபீடம்

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி ஞானபீடம்.

Anonymous said...

என்ன நொன்னண்ன? சரி, சரி. மறுபடியும் சொல்றேன் கேட்டுக்க. அங்க வந்து ஏதாவது ஏடாகூடமா செஞ்சே, மவனே. (சென்சாரில் நீக்கி விட்டதால்.. வாயசைப்பு மட்டும்)//

Anonymous said...

என்ன நொன்னண்ன? சரி, சரி. மறுபடியும் சொல்றேன் கேட்டுக்க. அங்க வந்து ஏதாவது ஏடாகூடமா செஞ்சே, மவனே. (சென்சாரில் நீக்கி விட்டதால்.. வாயசைப்பு மட்டும்)//

சாரி சார். சொல்ல வந்தத சொல்றதுக்குள்ள Enter ஐ அடிச்சிட்டேன்.

இப்ப சொல்றேன்.

அப்படியே கவுண்டபெல் பேசறா மாதிரியே இருந்திச்சி சார்.

அப்புறம், அதென்ன சென்சார் கட் பண்ணது?

நான் உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருக்கேன். அதுலயாச்சும் சொல்றீங்களா?

ஹி,ஹி

டிபிஆர்.ஜோசப் said...

நான் உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருக்கேன். அதுலயாச்சும் சொல்றீங்களா?

ஹி,ஹி/

உங்களுக்கு மெயில்ல அனுப்பியிருக்கேன்.

நல்லாருந்திச்சா? அத எப்படி நான் பதிவுல போடறது?

குழலி / Kuzhali said...

//தாணாக்காரருண்ணே//
கலக்குறிங்க

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க குழலி, ரொம்ப நாளாச்சி உங்க குரல கேட்டு!

நன்றி..

அடிக்கடி வாங்க.. உங்க கருத்துகளை என் போன்ற புது ஆளுங்ககூட பகிர்ந்துக்குங்க..

சூடா இருந்தாலும் பரவால்லை..

kirukan said...

excellent...

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
கவுண்டமணி-செந்திலுக்கு காமெடி எழுதுற வீரப்பன் நீங்களா சார்? இந்த போடு போடுறீங்க.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி ஜோ.

பழைய நகைச்சுவை நடிகர் வீரப்பன் சமீபத்தில் காலமானார் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏதோ என்னால் முடிந்தது. கிறுக்குகிறேன். நன்றாய் இருந்தால் சந்தோஷம்.