13.7.06

சூரியன் 108

Madras Credit Corporation ன்  சேர்மன் முத்தையா செட்டியாரின் அறை.

தனக்கு முன்பு அமர்ந்திருந்த தன்னுடைய நேத்தாஜி, மருமகன் ஜவஹர், தன்னுடைய பொது மேலாளர் (நிதி) சாம்பசிவ மூர்த்தி ஆகியோரை பார்த்தார்.

அவருடைய மகன் நேத்தாஜியின் முகத்தில் கவலையின் எந்தவித சுவடும் தெரியவில்லை. முத்தையா அவனை வேதனையுடன் பார்த்தார். எல்லாம் இவனால்தான். தன்னுடைய மனைவியின் மிதமிஞ்சிய பாசம்தான் அவனை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு என்பது அவருக்கு தெரியும்..

ஒரே மகன். புத்திசாலி. அதிபுத்திசாலி என்பதுதான் உண்மை. சிறு வயது முதலே எதிலும் தான்தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்ற ஒருவகை வெறி.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டத்துடன் தாய்நாடு திரும்பியவனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறிக்கு தன்னுடைய நிறுவனம் பலியானதுதான் மிகப் பெரிய துரதிர்ஷ்டம் என்று நினைத்தார் முத்தையா.

‘ஏங்க அவன் இஷ்டப்பட்டதத்தான் அவன செய்ய விடுங்களேன். அவன் என்னெ ஒங்க கம்பெனியி மென்னு மிழுங்கவா கேக்கான்? நீங்களுந்தான் இந்த முப்பது வருசமா கம்பெனிய நடத்திக்கிட்டு வர்றீங்க? போன வருசம் லாபம் எவ்வளவு? பிச்சாத்து நாலு கோடி.. அதுல ஒளுங்கா டிவிடெண்ட் கூட குடுக்க முடியல.. கேப்பிட்டல கூட்டணும்டின்னுட்டு பத்து பர்சர் டிவிடெண்ட் குடுத்து முடிச்சிட்டீங்க. பணம் முதலீடு செஞ்ச ஆளுங்களுக்கு ஒளுங்கா அதுக்குண்டான டிவிடெண்ட் கூட குடுக்க முடியாம ஒரு கம்பெனிய நடத்தணுமாக்கும்? பேசாம நம்ம பையனையும் நம்ம மருமகனையும் சுதந்திரமா நடத்த விட்டுட்டு நீங்க வீட்லருந்து ரெஸ்ட் எடுங்க.. போதும் ஒளச்சது.’ என்று கேலியுடன் பேசிய தன் மனைவி இப்போதும், ‘அவன் என்னத்த செஞ்சிட்டான்னு இப்போ அவன கம்பெனி பக்கமே வராதேன்னு சொல்றீங்க?’ என்று தன்னையே குறை சொல்வதுதான் வேதனை..

‘சார்..’ என்ற குரல் வர திடுக்கிட்டு தன்னுடைய பொது மேலாளரைப் பார்த்தார் முத்தையா..

‘சொல்லுங்க..’

‘நீங்கதான் சார் ஆரம்பிக்கணும்..’

முத்தையா ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தவாறு தன் மருமகனைப் பார்த்தார். நேத்தாஜியின் ஹார்வர்ட் பல்கலைக்கழக க்ளாஸ்மேட்..

மும்பையில் பிறந்து, வளர்ந்த பாலக்காட்டு ஐயர் பிள்ளை. நேத்தாஜியே இவன்தான் தன்னுடைய தங்கை பிரேமிக்கு சரி என்று தீர்மானித்து ஹார்வர்டில் படித்துக்கொண்டிருக்கும்போது அங்கிருந்தே தன் தங்கைக்கு அறிமுகம் செய்துவைத்து பழக விட்டவன். ‘டாட்.. This is Jawahar..’ என்று சென்னை ஏர்ப்போர்ட்டில் இறங்கியதும் அறிமுகப்படுத்தியவனை மேலும் கீழும் பார்த்தார் முத்தையா. செக்கச் செவேலென்று திரைப்பட நாயகனைப்போன்ற களையான முகத்தில் தவழ்ந்த கவர்ச்சிகரமான புன்னகையுடன் நின்றவனைப் பார்த்ததுமே மனதில் ஏதோ லேசாக நெருடியது. என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவன் தன் மகனுக்கு ஏற்ற தோழனல்ல என்பதுமட்டும் விளங்கியது. ஏன் என்று அவரால் உணரமுடியவில்லை. சிலரை பார்த்ததுமே இவன் பிரச்சினைக்குரியவன் என்று தோன்றுமே அதுபோன்றதொரு உணர்வு.

அவருடைய இந்த உணர்வுதான் அவரை பல இக்கட்டுகளிலிருந்து மீட்டிருக்கிறது. தன்னிடம் கடனுதவி கோரும் வரும் எவரையும் பார்த்த மாத்திரத்திலேயே தோன்றும் இந்த உணர்வை நம்பித்தான் இத்தனை காலம் அவர் வர்த்தகம் புரிந்து வந்திருக்கிறார்.

அதேபோன்ற உணர்வுதான் ஜவஹரை கண்டபோதும் அவருக்கு தோன்றியது. அதனால்தான் அவனை தன்னுடைய மகள் பிரேமிக்கு கணவனாக, தன்னுடைய மருமகனாக அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆயினும் என்ன பலன்? அதிலும் தன்னுடைய மகனுக்காகவும் மனைவிக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியில சூழ்நிலைக்குத்தானே தள்ளப்பட்டார்?

தன் மகனும் மருமகனும் சேர்ந்து அடித்த கூத்துதானே தன்னை இந்த நிலைக்குள்ளாக்கியிருக்கிறது? தன் எதிரில் அமர்ந்திருந்த ஜவஹரை முதன் முதலில் பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்வு அவனைக் காணும்போதெல்லாம் அவருடைய உள் மனது இப்போதும் இவனை நம்பாதே என்று கூறிக்கொண்டே இருந்ததன் பொருள் விளங்காமல் அவனை ஒரு நொடி மீண்டும் பார்த்தார். What is he upto? இதுவரைக்கும் தனக்கும், தன் நிறுவனத்துக்கும் செய்த தீங்கு போறாதா?

‘என்ன டாட்.. எங்கள ஏதோ அர்ஜண்டா டிஸ்கஸ் பண்ணணும் வாங்கன்னுட்டு நீங்க எதையோ யோசிச்சிட்டுருந்தா..?’

தன்னையுமறியாமல் மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்துபோன முத்தையா தன் முன் வைக்கப்பட்டிருந்த நிதியறிக்கையையும் நேற்று மாலை நடந்த அவசர இயக்குனர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் அடங்கிய அறிக்கையையும் பார்த்தார்.

‘Whatever you have in your mind.. shoot Dad. We will find a solution.. What do you say Jawahar?’

தன்னுடைய மகனுடைய அமெரிக்க தோரணையுடனான இந்த பேச்சுதான் தன்னுடைய நிறுவனத்தின் சரிவுக்கு காரணம் என்று நினைத்த முத்தையா, ‘நேத்தாஜி, ஜவஹர்.. நீங்க ரெண்டு பேரும் என்னுடைய விருப்பத்துக்கு விரோதமாக எடுத்த பல முடிவுகளின் விளைவுதான் இந்த நிறுவனத்துக்கு இப்ப ஏற்பட்டிருக்கற தொய்வு. அத நீங்க புரிஞ்சிக்கிட்டிருக்கீங்களான்னு எனக்கு தெரியணும்.. Do you realize that? Both of you?’

‘இதையே எத்தன தடவ சொல்வீங்க டாட்.. விஷயத்துக்கு வாங்க.. சாம்பசிவம் சார்.. நீங்களாவது சொல்லுங்க. What actually is the problem?’ என்றவாறு தன்னைப்பார்த்த நேத்தாஜியை பொருட்படுத்தாமல் சாம்பசிவம் தன் சேர்மனைப் பார்த்தார்.

அவர் கோ அஹெட் என்று முனுமுனுக்க சாம்பசிவம் தன் எதிரே இருந்த அறிக்கையிலிருந்து வாசித்தார்.

‘நம்ம கம்பெனியில டெப்பாசிட் செஞ்சிருக்கறவங்களுக்கு அசலும் வட்டியும இந்த வருசம் திருப்பி குடுக்க வேண்டிய தொகை ரூ.32 கோடி.. அதாவது மாசா மாசம் சுமார் ரூ.2.5 கோடி. போன ஆறுமாசமா குடுக்காம இருக்கற தொகையையும் சேர்த்தா இந்த வருசம் நம்முடைய aggregate payout சுமார் ரூ.50 கோடி. அதாவது மாசம் ரூ.4.25 கோடி.’

ஜவஹர் குறுக்கிட்டு பேச முயல முத்தையா கையை உயர்த்தி அடக்கினார். அவனுடைய முகம் கோபத்தில் சிவந்துபோனதை பொருட்படுத்தாமல் தன்னுடைய பொது மேலாளரை நோக்கி ‘you go ahead. Read out the entire report including the decisions of the Board’ என்றார்.

அவருடைய குரலிலிருந்த அசாதாரண உறுதி நேத்தாஜியையும் வாயடைக்கச் செய்தது.

‘போன ஆறுமாசத்துல நம்ம கம்பெனிக்கு வசூலாக வேண்டிய எந்த கடனும் சரிவர வசூலாகாததால நம்ம கம்பெனி திருப்பிக் குடுக்க வேண்டிய முழுதொகையான ரூ.50 கோடியையும் ஒன்னு ப்ரொமோட்டர் டைரக்டர்ஸ் கொண்டு வரணும் இல்லன்னா நம்ம கம்பெனியிலருந்து நம்ம க்ரூப் கன்சன்ஸ¤க்கு டைவர்ட் பண்ண தொகையிலருந்து கொண்டு வரணும்..’

‘இப்போதைக்கு இது போறும் சார்..’ என்ற முத்தையா தன் மகனையும் மருமகனையும் பார்த்தார். ‘Now you can talk. What do you say?’

நேத்தாஜி தயக்கத்துடன் தன் மைத்துனனைப் பார்க்க அவன் என்கிட்ட கேட்டா என்பதுபோல அமெரிக்க பாணியில் தோள்களை உயர்த்தினான்.

‘டாட்.. You have any ideas?’ என்றான் நேத்தாஜி.

‘Yes..' என்று பதிலளித்த முத்தையா தன்னுடைய கைப்பெட்டியில் இருந்து இரண்டு கடிதங்களை எடுத்து அவன் முன்னால் வைத்தார். 'Sign these papers and get out. Once and for all.’

தன் முன்னால் வைக்கப்பட்ட ராஜிநாமா கடிதத்தை பார்த்த நேத்தாஜி அதிர்ச்சியுடன் தன் தந்தையைப் பார்த்தான்.. ‘டாட்.. what do you mean? Why me?’

‘நீ மட்டுமில்லடா.. உன் ஃப்ரெண்டுன்னு கூட்டிக்கிட்டு வந்தியே, இவருந்தான்.. Both of you should resign from not only this company but other companies in the group as well. Don’t ever step into any of my offices from now on.. Just sign these papers and get out. NOW!’

தன்னுடைய தந்தையின் குரலிலிருந்த கோபமும், வேதனையும் இருவரையும் மிரட்ட பதிலேதும் பேசாமல் அவர் தங்கள் முன் நீட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டு எழுந்து நடந்தனர் நேத்தாஜியும், ஜவஹரும்..

அவர்களுக்கு பின்னால் ஓசைப்படாமல் மூடிய கதவையே ஒரு சில நிமிடங்கள் பார்த்த முத்தையா அதிர்ந்துபோய் அமர்ந்திருந்த தன் பொது மேலாளரைப் பார்த்தார்.

‘மிஸ்டர் சாம்பசிவம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம கன்சார்ஷியம் பேங்கர்ஸ் மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்க. If possible, in the next couple of days.’

உடனே எழுந்து அவருடைய கட்டளையை செயல்படுத்தும் நோக்கத்துடன் வாசலை நோக்கி விரைந்த சாம்பசிவம்.‘One second..’ என்ற தன்னுடைய முதலாளியின் குரல் கேட்டு நின்று அவரை திரும்பிப் பார்த்தார். ‘இப்பவே நம்ம க்ரூப் கம்பெனிசோட ஹெட்ஸ் எல்லாரையும் கூப்ட்டு இவங்க ரெண்டு பேருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை. அவங்க சொல்ற எதையும் செய்ய தேவையில்லைன்னு நான் சொன்னதா சொல்லிருங்க. அதுக்கான ஆர்டரையும் டிராஃப்ட் பண்ணி என் டேபிளுக்கு அனுப்புங்க.. நீங்க போலாம்.. But keep me posted of the developments.’

சாம்பசிவம் அறையிலிருந்து வெளியேறியதும் தன் இருக்கையின் முதுகில் சாய்ந்து கண்களை மூடினார் முத்தையா அவர் இன்று எடுத்த முடிவு அடுத்த சில தினங்களில் அவரையே பாதிக்க போகிறது என்பதை உணராமல்..

தொடரும்..


  

5 comments:

டிபிஆர்.ஜோசப் said...

Welcome Mr.Pavlov!

You must have seen the first three words and entered my blog!

Anyway thanks for coming.

I really appreciate the concern shown by you for the sad happenings in Mumbai..

On behalf of all those who have sufferred their lives and their kith and kin, I express my sincere thanks.

Bye!

siva gnanamji(#18100882083107547329) said...

NO என்ற வார்த்தையை சொல்லவேண்டிய நேரத்திலே சொல்லாட்டா பிறகு எல்லாமே
NO தான்! சமீபத்திலெ இங்கதான் படிச்சேன்

G.Ragavan said...

இந்த மாதிரி முடிவெடுக்குறதுக்கு முன்னாடி பலவிதமா யோசிச்சிருக்கனும். அதிலயும் தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னா ரொம்பவே யோசிக்கனும். எடுத்தேன் கவுத்தேன்னு எடுத்தா சரியில்லை. எங்கயாவது போய் இடிக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

NO என்ற வார்த்தையை சொல்லவேண்டிய நேரத்திலே சொல்லாட்டா பிறகு எல்லாமே
NO தான்! //

சரியான வார்த்தை.. இந்த ரெண்டெழுத்து வார்த்தை எத்தனையோ பேர.. நம்ம ரவி கதாபாத்திரம் ஒரு சான்று.. சரித்திருக்கிறது..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

அதிலயும் தெரிஞ்சவங்க சொந்தக்காரங்கன்னா ரொம்பவே யோசிக்கனும். //

தாயும் புள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறதானே..