31.1.06

சூரியன் 16

கோபால் ஒதுங்கி நின்று வழிவிட பாபு அவசர அவசரமாக வெளியேறி கட்டிடத்தின் அடித்தளத்தில் நிறுத்தி வைத்திருந்த தன் ஓப்பல் ஸ்ட்ராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

சென்னைப் புறநகர் பகுதியிலிருந்த SSR மருத்துவமனையை அடைந்தபோது இரவு மணி 8.00 ஆகியிருந்தது.

அந்த நேரத்திலும் சுமார் நூறு வாகனங்கள் நிறுத்தக் கூடிய வளாகத்தில் அவருடயை வாகனத்தை நிறுத்த இடமில்லாமல் வளாகத்தை ஒட்டியிருந்த திறந்தவெளியில் நிறுத்தி வாகனத்தைப் பூட்டினார்.

மருத்துவமனையை ஏறிட்டு பார்த்தார். எட்டு மாடிகளுடன் வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியைப் போன்ற வெளி அலங்காரத்துடன் கம்பீரமாக நின்றது.

சோமசுந்தரம், பரம்பரை செல்வந்தரான பரந்தாம ரெட்டியாரின் திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசு என்று பாபு கேள்விப்பட்டிருக்கிறார்.

சோமசுந்தரம் ரெட்டியார் என்ற பெயரை சுருக்கி SSR Hospital என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் டாக்டர். சோமசுந்தரம் இப்படியொரு மருத்துவமனையைத் துவக்குவது என்று முடிவெடுத்து பாபு அப்போது மேலாளராகவிருந்த கிளையை நெருங்கியபோது அவருக்கும் அத்தனை நம்பிக்கை இருக்கவில்லை.

மருத்துவமனை, அதுவும் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக... இருப்பினும் முப்பத்தைந்து வயதே நிரம்பிய, அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து அங்கேயே மிகச் சிறப்பான வேலை கிடைத்தும் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டு தன்னுடைய வளர்ந்த ஊரான சென்னைக்கு திரும்பிய சோமசுந்தரம் தன்னுடைய முடிவில் மிகவும் உறுதியாயிருந்ததைப் பார்த்தார் பாபு.

சோமசுந்தரத்தின் குடும்பப் பின்னணியைக் கேள்விப்பட்டதும் அவருக்கு இருந்த ஐயம் மேலும் கூடவே செய்தது. பரம்பரை, பரம்பரை விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவர் அதில் ஈட்டிய தொகை முழுவதையும் முற்றிலும் பரிச்சயமில்லாத துறையில் முதலீடு செய்து தோற்றுப் போவாரோ என்றும் அஞ்சினார்.

அத்துடன் அவருடைய கிளையில் அதுவரை கொடுத்திராத மிகப் பெரிய தொகையை அவர் கடனாக கேட்டபோது பாபுவுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. ஆனால் அவர் கேட்ட கடன் தொகைக்கு ஈடான சொத்துக்களை ஜாமீனாக அளிக்க முன்வந்தபோது சரி, அனுப்பித்தான் பார்ப்போமே என்று அவருடைய கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்து அனுப்பினார்.

சோமசுந்தரத்தின் அதிர்ஷ்டம் அச்சமயத்தில் வங்கியின் சேர்மனாக இருந்தவர் மருத்துவத் துறையில் மிகவும் ஈடுபாடுள்ளவர். அவருடைய குடும்பத்திலும் அவரைத் தவிர எல்லா ஆண்களும் மருத்துவத்துறையில் இருந்தனர். ஆகவே இளைஞர் சோமசுந்தரத்தின் கடன் விண்ணப்பத்தைக் கண்டதுமே அவரை தலைமையலுவலகத்திற்கு அழைத்து தானே நேர்காணல் நடத்தியதுடன் அவருடைய தன்னம்பிக்கையான பேச்சால் கவரப்பட்டு அவர் கேட்ட தொகையைக் கடனாக போர்ட் அங்கத்தினர்களின் உதவியுடன் வழங்கினார்.

அக்கடன் டாக்டர். சோமசுந்தரத்தை மட்டுமல்ல பாபு சுரேஷின் அலுவலக பாதையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சோமசுந்தரத்தின் தந்தை அரசியலிலும் மிகுந்த செல்வாக்குடையவராயிருந்ததால் அடுத்த ஐந்து வருடங்களில் பாபு பதவி உயர்வுக்காக சென்ற அனைத்து நேர்காணல்களிலும் வெற்றி கிடைத்து படிப்படியாக முன்னேற முடிந்தது.

துணைப் பொது மேலாளராக இருந்த கிளையில் கையூட்டு பெற்று கையும் களவுமாக பிடிபட்டபோது அப்போது தன்னுடைய தொழிலில் அபிரிதமான வெற்றிப் பெற்று தான் கடனுதவி பெற்ற அதே வங்கியின் இயக்குனர்களில் ஒருவராயிருந்த சோமசுந்தரம் அவரை எல்லா தண்டனைகளிலிருந்தும் விடுவித்தது மட்டுமல்லாமல் அடுத்த வருடமே டெப்புடி பொது மேலாளராக பதவி உயர்வும் கிடைக்கச் செய்தார்.

ஆனால் அதற்கு பிரதிபலனாக பாபுவை அவருடைய சொந்த பணியாளரைப் போல் நடத்தினார். கடன் வழங்கிய வங்கியின் இயக்குனரானவுடன் ரிசர்வ் வங்கியின் நியதியின்படி அவருடைய மருத்துவமனைக்கு அவர் பெற்றிருந்த கோடிக் கணக்கான கடனை திருப்பி அடைக்க வேண்டிய நிர்பந்தத்திற்காளானபோது பாபுவிடம்தான் சென்று நின்றார்.

பாபுவின் சமயோசிதமான யோசனையை அப்படியே ஏற்று மருத்துவமனையின் போர்டில் இருந்து ராஜிநாமா செய்தார். அத்துடன் தன் குடும்பத்திலிருந்த அனைவரையும் தன்னுடன் விலகச் செய்து மருத்துவமனையில் பணிபுரிந்த நம்பிக்கையுள்ள ஊழியர்களை பேருக்கு இயக்குனராக்கினார்.

அவர்களிடமிருந்து பவர் ஆஃப் அட்டார்னி பெற்றுக் கொண்டு தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தார் பேரிலிருந்த பங்குகளை அவர்கள் பேரில் மாற்றினார். ஆனால் அவர்கள் கையில்  அத்தனைப் பெரிய தொகை வேண்டுமே ? அதற்கும் பாபு சுரேஷின் தயவு தேவைப்பட்டது. அவருடைய சொந்த பொறுப்பில் வங்கியின் நியதிகளை சாதுரியமாக வளைத்து அவர்களுக்கெல்லாம் கடன் வழங்கினார்.

அந்த வருடத்தில் நடந்த ரிசர்வ் வங்கியின் ஆய்வில் இக்கடன்களைக் குறித்து கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. பாபுவின் கதி அதோகதிதான் என்று அவருடைய சக மற்றும் உயர் அதிகாரிகள் நினைத்திருந்தபோது யாரும் எதிர்பாராமல் அடுத்த ஆறு மாதத்தில் நடந்த பொது மேலாளர் போட்டியில் அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது. அவருடன் பதவி உயர்வு பெற்ற வேறொரு நபர் குமாரி. வந்தனா தேவி!

வந்தனா தேவியின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார் பாபு சுரேஷ். வந்தனா தேவியென்ன சேலைச் சுற்றிய யாராயிருந்தாலும் அவருக்கு அவர்கள் மேல் ஒரு கண் உண்டு. சரியான சபலக்கேஸ் என்று அவருடைய மனைவியே ஏளனம் செய்யும் அளவுக்கு அவருடைய சபலம் பிரபலம்.

இருவருக்கும் இடையே மூன்று வயது வித்தியாசமிருந்தும் அவருக்கு பதவி உயர்வு கிடைத்த போதெல்லாம் வந்தனாவுக்கும் பதவி உயர்வு கிடைக்கவே அவருக்கு வந்தனாவைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமை கொழுந்துவிட்டெரியும். ‘எல்லாம் தேவடியாத்தனம் பண்ணி வாங்குன ப்ரொமோஷன்’ என்று மனதுக்குள் கறுவுவார்.

ஒருமுறை அவர்களிருவரும் தனித்திருந்த வேளையில் பாபு சுரேஷ் மிகவும் கவர்ச்சியாக உடையுடுத்தியிருந்த வந்தனாவை உணர்ச்சிவசப்பட்டு கட்டிப் பிடித்து முத்தமிட முயற்சிக்க அவருடைய நடத்தையை முற்றிலும் எதிர்பார்க்காத வந்தனா தன் காலனியால் அவரை அடித்துவிட்டார்.

அத்துடன் அவருடைய குரல் கேட்டு வந்த பணியாளர்கள் கையில் காலனியுடன் நின்ற வந்தனாவையும் கன்னத்தைப் பிடித்தவாறு நின்றிருந்த பாபுவையும் பார்த்தனர். அடுத்த நிமிடமே காட்டுத் தீ போல் விஷயம் தலைமையலுவலகம் முழுவதும் பரவியது. ‘சரி.. தொலைஞ்சான்.’ என்று எல்லோரும் நினைக்க சோமசுந்தரம் மீண்டும் தலையிட்டு வந்தனாவை சமாதானம் செய்து வைத்தார். அத்துடன் நில்லாமல் பாபுவை அதே பதவியில் அவருடைய மருத்துவமனை கணக்கு வைத்திருந்த கிளைக்கு தலைவராக மாற்றி விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார்.  

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! பாபு சுரேஷ¤க்கு முன்பிருந்த கிளை மேலாளர் சோமசுந்தரத்தின் விருப்பத்திற்கு நடக்க மறுத்ததால் அவரை வட கிழக்கு மாநில கிளைக்கு (போராளிகளுக்கு பேர்பெற்ற மாநிலம்) மாற்றவும் அவரால் முடிந்தது.. பாபுவின் துணையுடன் தன்னுடைய மருத்துவமனைக்கு தேவைப்பட்ட சகலவித சலுகைகளையும் அவருடைய கிளையிலிருந்து பெறவும் முடிந்தது!

***

எட்டாவது தளத்திலிருந்த சோமசுந்தரத்தின் Presidential Suiteஐ நெருங்கியபோது அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்று தனக்குள்ளேயே ஒருமுறை கூறிப் பார்த்துக் கொண்டார் பாபு.

‘வாங்க பாபு சார், வாங்க. I’ve been waiting for over two hours. வாங்க வந்து உக்காருங்க.’

என்ன சார், கீர்னு வரவேற்பு ரொம்ப பலமாயிருக்கு? நாம ஒரு ஃபேவர் கேட்க வந்தா இந்தாளு மறுபடியும் பதிலுக்கு ஏதாவது ஏடாகூடமா கேப்பாரோன்னு தெரியலையே..

மனதிலுள்ளதை வெளியே சொல்லவா முடியும்?

அசடு வழிந்துக் கொண்டு, ‘சாரி சார். ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை.. அதான். Sorry for having kept you waiting, Sir.’

சோமசுந்தரத்தின் உதடுகள் கேலியுடன் வளைய பாபு திகைப்புடன் அவரையே பார்த்தார்.

ஆனால் சோமசுந்தரம் அதைக் கண்டுக்கொள்ளாதவர்போல், ‘சரி, சொல்லுங்க, என்ன விஷயமா என்னை பாக்கணும்னு கேட்டீங்க?’ என்றார்.

பாபு தயக்கத்துடன் அவரைப் பார்த்தார். ‘பிராஞ்சுல இருந்தது போறும்னு ஆயிருச்சி சார். அதான் ஹெட் ஆஃபீஸ்ல போஸ்டிங் கிடைச்சா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதுவும் புது சேர்மன் வந்து ஜாய்ன் பண்ற நேரத்துல ஹெட் ஆஃபீஸ்ல இருந்தா நல்லதுன்னு...’

‘குட் ஐடியா.’

பாபு சுரேஷ் ஒன்றும் விளங்காமல் ஒரு நிமிடம் அவரையே பார்த்தார். வரும் வழியெல்லாம் என்ன சொல்வாரோ ஏது சொல்வாரோ என்ற அங்கலாய்ப்புடன் வந்தவருக்கு சோமசுந்தரத்தின் உடனடி சம்மதம் மகிழ்ச்சியை விட கலவரத்தையே அளித்தது.

‘சார்.. நீங்க..’

‘நல்ல ஐடியான்னு சொன்னேன்.நம்ம H.R. Head பதவிய ஜி.எம் பதவியா அப்க்ரேட் பண்ணலாம்னு ஒரு ப்ரொப்போசல் இருக்கு. அதுல உங்கள போடச் சொல்றேன். என்ன சொல்றீங்க?’

எச்.ரா? அதுல ‘ஒன்னுமே’  கிடைக்காதே.. ஃபேவரபிளா டிரான்ஸ்ஃபர் குடுத்தா எவனாச்சும் ஒரு ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கிஃப்டா தருவான். அத வச்சிக்கிட்டு பொண்ணு கல்யாண செலவ எப்படி ஈடுகட்டுறது? க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட் கிடைக்கும்னு நினைச்சா... இந்தாளு காரியத்தையே கெடுத்துருவார் போலருக்கே..

‘எச்.ஆர்க்கு மிஸ். வந்தனாத்தான் சரியான கேண்டிடேட்டுன்னு நினைக்கிறேன் சார்.’ என்றார் பாபு.

சோமசுந்தரம் உரக்கச் சிரித்தார். ‘அதாவது நீங்க க்ரெடிட் டிப்பார்ட்மெண்ட குறி வச்சிதான் போஸ்ட்டிங்கே கேக்கறீங்க? அப்படித்தானே... அப்பத்தானே பொண்ணோட கல்யாணத்துக்கு சீரா கொடுக்க வேண்டியதையெல்லாம் எந்த இளிச்சவாயன்கிட்டருந்தாவது கறக்க முடியும்னு பாக்கறீங்க? என்ன பாபு சார்?’

பாபு சுரேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குணிந்து நிற்க சோமசுந்த்தரம் அவரை நெருங்கி வந்து அவருடைய தோளைத் தொட்டார்.

‘டோண்ட் ஒர்றி பாபு சார். எச்.ஆர்லயும் உங்களுக்கு தேவையானது கிடைக்க வழியிருக்கு.. ஐ வில் டேக் கேர் ஆஃப் யுவர் நீட்ஸ்.. நீங்க பதவியேற்ற ரெண்டு மாசத்துலயே Trainee Officers Recruitment Proposal ஒன்ன ப்ரிப்பேர் பண்ணி மேனேஜ்மண்ட் கமிட்டிக்கு வைக்கறீங்க... குறைஞ்சது முன்னூறு பேர்.. அதுல சுமார் நூறு பேர்கிட்டருந்து  மேனேஜ்மெண்ட் கோட்டான்னு சொல்லி தலா ரெண்டுலருந்து மூனு லட்சம் வரைக்கும் கறக்கறதா ப்ளான். அதுக்கு நீங்கதான் லாயக்கு.. எனக்கு போர்ட்ல இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்குன்னு தெரியும்லே.. இதான் மாஸ்டர் ப்ளான்.. என்ன சொல்றீங்க?’

பாபுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. தலா ரெண்டு லட்சம்னு வச்சாலும் நூறு பேருக்கு ரெண்டு கோடி! அதுல நமக்கு? பிச்சாத்து பத்தோ பதினைஞ்சோ லட்சம்.. வேணாம்னு சொன்னா.. பிராஞ்சுலருந்து மாற்றம் கிடைக்காதுங்கறது மட்டுமில்ல.. இந்தாளு நம்மள நார்த்துக்கு எங்கயாவது தூக்கியடிச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.. சரின்னு சம்மதிப்போம்.ஆளெடுத்து முடிச்சதும்.. மறுபடியும் க்ரெடிட் இலாக்காவுக்கு ட்ரை பண்ணுவோம்..

தன்னையே கள்ள சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த சோமசுந்தரத்தைப் பார்த்து புன்னகையுடன், ‘சரி சார். நீங்க சொல்றா மாதிரியே செய்யறேன்.’ என்றார்.

‘யெஸ்.. தட்ஸ் தி ஸ்பிரிட். யூ வில் நாட் ரெக்ரட் திஸ்.. நான் தயார் பண்ணி குடுக்கற நூறு பேரோட  லிஸ்ட நீங்க Eligible for recruitment லிஸ்டோட கலந்துட்டா போறும். மிச்சத நான் பாத்துக்கறேன்.’ என்றவர் வேலை முடிந்ததும் கழட்டி விடும் நோக்கத்துடன், ‘அப்புறம்? பாக்கலாம். எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. மண்டே H.O.வுக்கு வந்துருங்க. I’ll speak to the new Chairman about your posting, OK. See you.’ என்றார்

தன்னுடைய கையைப் பிடித்து குலுக்கிவிட்டு சென்ற சோமசுந்தரத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த பாபு சுரேஷ் திரும்பி வாசலை நோக்கி நடந்தவாறு தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். இரவு மணி 10.00!

தன்னுடைய வாகனத்திற்கு செல்லும் வழியிலேயே கைத்தொலைப் பேசியை இயக்கி தன் மனைவியை அழைத்தார். ‘பத்மா நான் வந்துக்கிட்டிருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன். நீ ட்ரெஸ் பண்ணிக்கிட்டு ரெடியாயிரு. சுகன்யா, நீ, நான் மூனுபேரும் வெளிய போய் சாப்டலாம்.’

இன்னியிலருந்து நல்ல காலம்டா டேய்.. உன் காத்துல மழைதான்.. என்று தனக்குத்தானே கூறியவாறு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் பாபு சுரேஷ் வீட்டில் தன்னை எதிர் நோக்கியிருக்கும் அதிர்ச்சியை அறியாதவராய்..

தொடரும்



4 comments:

G.Ragavan said...

தகிடு தத்தம் டோய். எல்லாம் தகிடு தத்தம் டோய்.

அது சரி சார். அதென்ன கவர்ச்சியுடன் உடையணிந்திருந்த வந்தனாவை....நீங்களுமா சார் பெண்களோட உடைகள் மேல காரணங்களை ஏற்றிச் சொல்லனும்!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நான் முதல் எபிசோட்லய நம்ம வந்தனா மேடத்த பத்தி சொல்லியிருக்கேன். கவர்ச்சியா ட்ரெஸ் பண்ணி ஆம்பிளைங்கள கவுக்கறதுல கூட தப்பில்லைன்னு நினைக்கிற காரெக்டர் அவங்கன்னு. அப்புறம் பாபு அவங்கள என்னைக்கிமில்லாம அன்னைக்கி கட்டிப்பிடிக்கறதுக்கு அவங்களோட அந்த கவர்ச்சியான உடையும் காரணம்தான்னு அழுத்தமா சொல்லணும்கறதுக்காக அப்படி வர்ணிச்சேன். பாபுவோட பார்வையிலருந்து பார்த்ததுனாலயும் வந்திருக்கலாம். அவரோட சபல புத்தியும் என்னையும் ஒட்டிக்கிச்சோ என்னவோ..

siva gnanamji(#18100882083107547329) said...

dear mr joseph,
kindly let me know the days n which you publish ennulagam & enkathaiulagam...sory i am often disapointed

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சிவஞானம்ஜி,

Sorry I could not upload two episodes, ie. yesterday and today as I have been continuous meetings at my office.

I could barely manage a post on my Ennulagam blog during my luch time. I hope, things would be back to normal from tomorrow.

Sorry to disappoint you.