10.2.06

சூரியன் 22

‘அதான் சஸ்பென்ஷன் ஆர்டர் செர்வ் பண்ணிட்டீங்களே சார்.. இப்ப வேற என்ன நான் பண்ண முடியும்.’ என்று மேலே தொடர முடியாமல் தலை குனிந்தவாறே அழுதவனை தடை செய்யாமல் அமைதியுடன் அழுது தீர்க்கட்டும் என்று அமர்ந்திருந்தார் சுந்தரம்..

சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்த ரவியைப் பார்த்து லேசாக புன்னகையுடன், ‘என்ன ரவி இது சின்ன குழந்தையாட்டமா? எத்தனை எச்.ஆர் ப்ரோக்ராம்ஸ் அட்டெண்ட் பண்ணியிருப்பீங்க? When things get tough the tough gets goingனு கேள்விப்பட்டதில்லை நீங்க? சோதனை வரும்போதுதான் நாம இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கணும். இப்ப என்ன நடந்திருச்சின்னு கவலைப்படறீங்க? We have only suspended you, not terminated your services! உங்க மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணனும்னு மேலருந்து பயங்கர ப்ரெஷர் வந்ததுங்கறது உங்களுக்கு தெரியுமா ரவி?’

ரவி திடுக்கிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தான். ‘போலீஸ் க்ம்ப்ளெய்ண்டா? எதுக்கு சார்? What did I do to deserve this kind of treatment?’

அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் அவனையே பார்த்தார். அவருடைய காரியதரிசி ராஜி கதவை லேசாகத் திறந்துக் கொண்டு வாசலில் நிற்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பதுபோல் புருவங்களை உயர்த்தினார்.

‘எம்.டி சார் லைன்ல இருக்கார் சார். உங்கக் கிட்ட அர்ஜெண்டா பேசணுமாம்.’ என்றவள் அவருக்கு முன்னால் அமர்ந்திருந்த ரவியை நோக்கி சைகைக் காண்பித்தாள், ‘இவரப் பத்தித்தான்’ என்பது போல..

அவளுடைய சைகையின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டதுபோல் தலையை அசைத்த பிலிப், ‘லைன் குடுங்க.’ என்றார்.

சில நொடிகளில் அவருடைய தொலைப் பேசியில் இண்டர்காமின் ‘பீப்’ ஒலி கேட்கவே எடுத்து பேசினார்.

‘யெஸ் சார். I have already discussed with Ms.Vandana. I only told her not to proceed.’

எதிர் முனையில் கோபத்துடன் உரக்க பேசியது எதிரில் இருந்த ரவிக்கு கேட்டது. தன்னைப் பற்றிய பேச்சுதான் என்பதைப் புரிந்துக் கொண்டவன் மெள்ள எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.

ஒலிவாங்கியின் வாயைப் பொத்திய பிலிப் சுந்தரம் அவனை, ‘ரவி.. ஒன் செக்கண்ட்.. you need not leave. It is ok.’ என்றார்.

அவன் தயங்கியவாறு வாசலருகே அவர்கள் பேசுவது கேட்காவண்ணம் நின்றான்.

சி.ஜி.எம். இண்டர்காமில் தொடர்ந்து, ‘Don’t worry Sir. I’ll take care of it. We will do it when it is required. Till such time... yes I understand Sir.. I’ll explain to the Vigilance committee if it is required. Yes, it is my responsibility.’ என்பதை செவியுற்ற ரவி இவர் தனக்காக அந்த வக்கிரம் பிடித்த எம்.டியுடன் போராடுகிறார் என்று உணர்ந்துக் கொண்டான்.

அவனுடைய மனதிலும் ஒரு வைராக்கியம் பிறந்தது. நான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதை இவர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் எல்லோரும் தன்னைக் கைவிட்டப் பிறகும், விஜிலன்ஸ் கமிட்டியே தன் மேல் போலீசில் புகார் கொடுக்க ஆணையிட்டப் பிறகும் அதை நிறைவேற்றாமல் தன்னைப் பாதுகாக்க நினைக்கும் இவருக்காக நான் நிச்சயம் போராடுவேன்.. தன்னம்பிக்கையிழந்து கோழையைப் போல் அழுததும் போதும் என்ற முடிவுடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.

‘சார் நீங்க எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார். என்னால நிச்சயமா என்னோட இன்னொசன்ஸ்ச நிரூபிக்க முடியும் சார்.’

பிலிப் பதில் கூறாமல் அவனையே பார்த்தார். பிறகு தன் முன்னே இருந்த இருக்கைகளைக் காட்டினார். ‘முதல்ல வந்து உக்காருங்க.’ என்றார்.

ரவி உடனே விரைந்துச் சென்று அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து அவர் சொல்லப் போவதைக் கேட்க தயாரானான்.

பிலிப் தன் மேசைக்கு கீழிருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அடுத்த நொடியே வந்த அவருடைய பிரத்தியேக சிப்பந்தி சோமுவைப் பார்த்து, ‘சோமு சூடா ரெண்டு காப்பி கொண்டு வாங்களேன்..  அர்ஜண்ட்.’ என்றார் புன்னகையுடன்..

பிறகு அவன் தலை மறைந்ததும், ‘இங்க பாருங்க ரவி. Do you know why I chose to stretch my neck for you?’ என்றார்.

அவருடைய குரலில் முன்பிராத உறுதியைக் கண்ட ரவி.. ‘யெஸ் சார்.’ என்றான் உண்மையுடன்.

‘எதுக்குன்னு நீங்க நினைக்கிறீங்களோன்னு தெரியலை.. ஆனா நான் உங்கள நம்பறேன். உங்களோட பிசினஸ் அணுகுமுறை வேணும்னா தவறா இருந்திருக்கலாம். ஆனா அதுல தவறான நோக்கம் இல்லைன்னு நான் இன்னமும் நம்பறதுனாலதான் போன விஜிலன்ஸ் கமிட்டியில உங்க மேல போலீஸ் க்ம்ப்ளெய்ண்ட் குடுக்க சொல்லி டிசைட் பண்ணியும் இதுவரைக்கும் அத நான் செய்யலை. இந்த சஸ்பென்ஷன் ஆர்டரையும் கூட நான் விரும்பி செய்யலை ரவி. There is no other alternative. Some of the executives still feel that I am too soft with you. Do you know that Ravi?’

அவன் ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டினான்.

‘குட். அத காப்பாத்திக்கறது உங்க கையிலதான் இருக்கு. உங்க மேல என்க்வயரி ஆர்டராயிருச்சி.. அநேகமா இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள அதுக்குண்டான நோட்டீஸ் என்க்வயரி ஆபீசர் கிட்டருந்து உங்க வீட்டு அட்ரசுக்கு வரும். என்ன பண்ணுவீங்க, ஏது பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது. உங்களோட இன்னொசன்ஸ நிரூபிக்கற எல்லார ஆதாரங்களையும் நீங்க திரட்டணும். ஆனா இந்த சஸ்பென்ஷன் ஆர்டர் நிலுவையில இருக்கற வரைக்கும் நீங்க இருந்த உங்க ப்ராஞ்சுக்குள்ள மறுபடியும் நீங்க நுழைய முடியாதுங்கற ஒரு துர்ப்பாக்கியம்தான். அதுக்கு என்னால ஒன்னும் செய்ய முடியாது. ஆனா உங்களுக்கு இந்த விஷயத்துல உதவி செய்யறதுக்கு உங்களுக்கு விசுவாசமான ஆபீசர்ஸ் யாரும் பிராஞ்சில  இருக்காங்களா?’

அவன் யோசித்துப் பார்த்தான். அவனுடைய முரட்டுத்தனமான அணுகுமுறை அவனிடம் வேலை பார்த்த எல்லோரையுமே பாதித்திருந்ததால் அவனுடைய இந்த நிலமையைப் பார்த்து அவர்களனைவருமே சந்தோஷமடைந்தார்களே தவிர அவனுக்காக இரக்கப்பட அவனுக்குத் தெரிந்தவரை யாருமே இல்லை என்றுதான் நினைத்தான்.

ஆகவே ‘இல்லைன்னுதான் நினைக்கிறேன் சார்.’என்றான் தலைக் குணிந்தவாறே..

பிலிப் விரக்தியுடன் அவனையே பார்த்தார். ‘ஓக்கே.. Don’t worry. நீங்க இப்பவே சீட்டுக்கு போயி உங்க பார்வையில நடந்தத அப்படியே சுருக்கமா, ரெண்டு மூனு பேஜுக்கு மேல போகாம எழுதி எங்கிட்ட குடுங்க. நான் படிச்சிட்டு மேல்கொண்டு என்ன செய்யலாம்னு சொல்றேன்.’

ரவி உடனே எழுந்து, ‘யெஸ் சார்.’ என்றான்.

பிலிப் ஒரு கண்டிப்பான குரலில், ‘I need only facts, not your imagination. I have the resources to find out whether you are telling the truth or not. If I ever come to know that I had been misled I’ll ditch you. Is that clear?’ என்றார்.

ரவி கலவரத்துடன் அவரையே பார்த்தான். இவரும் கைவிட்டுட்டா நான் அவ்வளவுதான் என்பது அவனுக்கு புரிந்தது.

‘நீங்க சொல்றது எனக்குப் புரியுது சார். என் பேர்ல எந்தவிதமான தப்பும் இல்லைன்னு நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். ப்ரொசீஜரல் தவறுகள் நான் செய்திருக்கிறேன். But I never had any ulterior motive Sir.’ என்றான்.

‘Ok. That is what I want. If you could prove that you did not collude with the customer, I’ll use all my powers to see that you are not dismissed from the service. You can rely upon me. But you may have to face the consequences for your folly. Do you understand that you can’t be completely exonerated from this?’

அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற சொல்லை அவனும் கேட்டிருக்கிறானே.

அவன் முட்டாள்தனமாக செய்த தவறுகள் ஒன்றா இரண்டா? வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவன் செய்தவை வெறும் தவறுகள் மட்டும்தான், அவன் தெரிந்தே செய்த மோசடிகள்அல்ல என்பதை நம்பத்தான் முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

‘I fully understand Sir. Whatever I am going to state in my brief write up, will be true and nothing but true Sir.’ என்றான்.

பிலிப் அப்போதும் அவன் மேல் நம்பிக்கையில்லாததுபோல் பார்ப்பது அவனுக்கு தெரிந்தது. நாம் எப்படியாவது இவருடைய நம்பிக்கையை திரும்பிப் பெற வேண்டும்.

அவன் தவறிழைத்த கிளையிலிருந்து உடனே அவனை தலைமயலுவலகத்திற்கு மாற்றம் செய்தபோது  அவனை ஏற்றுக் கொள்ள எந்த இலாக்கா அதிகாரியுமே முன்வரவில்லை. அப்போது தாமாகவே முன்வந்து தன்னுடைய நேரடி பார்வையிலிருந்த சி.ஜி.எம் செக்கரடேரியட்டில் அமர்த்தச் சொல்லி எச்.ஆர் இலாக்காவை பணித்தவர் அவர் என்பது  அவனுக்குத் தெரியும்.

அவன் அவருடைய செக்கரடேரியட்டில் சேர வந்த சமயத்தில் அவர் டூரில் இருந்தார். அவர் வரும்வரை அவ்விலாக்காவிலிருந்த ஒருவரும் அவனுக்கென ஒரு மேசை நாற்காலியைக் கூட ஒதுக்க முன் வரவில்லை. அவன் பிலிப் சுந்தரம் ஒரு வாரம் கழித்து டூரிலிருந்து வரும் வரை அவனுடன் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு கிளையொன்றில் பணிபுரிந்து இப்போது  சி.ஜி.எம்மின் காரியதரிசியாக இருந்த ராஜி பெரிய மனது வைத்து ஒழித்துக் கொடுத்த இருக்கையில்தான் அமர வேண்டியிருந்தது.

அந்த நன்றிக்கடனுக்காவது தான் எப்பாடு பட்டாலாவது தன்னுடைய செயல் எந்தவித தவறான உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு தன் இருக்கைக்கு திரும்பினான் ரவி..

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பிலிப் சுந்தரம் அவனைப் பற்றி அவருக்கு நெருக்கமான போர்ட் அங்கத்தினர் நாடாரிடன் பேச வேண்டும் என்று நினைத்தார்.

அந்த நேரம் பார்த்து அவருடைய  பெர்சனல் தொலைப்பேசி அடிப்பதைக் கண்டு எடுத்து, ‘ஹலோ’ என்றார்.

நாடார்தான். Think of the devil and there he is! என்று நினைத்துக் கொண்டார் அவர்.

தொடரும்..





No comments: