14.2.06

சூரியன் 24

வத்ஸ்லாவுக்கு நாள் எந்த நாளாக இருந்தாலும் எட்டு மணிக்குதான் அவளுக்கு பொழுதே விடியும்..

ஆனால் எழுந்துவிட்டால் பரபரப்பாகிவிடுவாள். அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து முடித்து ஒரு அழுக்குப் பிடித்த ஜீன்ஸ் (ஏண்டிம்மா, அத தொவைக்க தாடீன்னு எத்தன தரம் கேட்டுட்டேன்? அதுல அப்படி என்னத்தத்தான் கண்டியோ? பொண்ணா, லட்சணமா எல்லாரும் போட்டுக்கறாளே சூடிதார் அத போட்டுக்கறதுதானடிம்மா? என்று புலம்பும் சிவகாமி மாமியைக் கண்டுக்கொள்ளவேமாட்டாள்.) தினந்தோறும் மாற்றும் டாப்சுடன் (கையில்லாதது) இறங்கி வந்துவிடுவாள்..

காலை உணவு இரண்டு ஜாம் தடவிய வரட்டு ரொட்டித் துண்டு.. ஒரு பால் கலக்காத கட்டம் காப்பி (பசும்பால் முஞ்சிக்கு கலர் கொடுக்கும்டிம்மா. நோக்குத் தெரியாது. தோலெல்லாம் கூட சில்க் மாதிரி பளபளன்னு இருக்கும். திக்கா டிகாக்ஷன் எறக்கி வச்சிருக்கேன்.. ஆடை படிஞ்சிருக்குன்னு சொல்வியேன்னு வடிகட்டி வச்சிருக்கேன்.. என்று சிவகாமி மாமி கெஞ்சுவாள்.. பாலெல்லாம் குழந்தைகளுக்குத்தான் மாமி.. எனக்கெதுக்கு என்பாள் பதிலுக்கு..). நின்றுக்கொண்டே சாப்பிட்டுவிட்டு தன்னுடைய மாருதி எஸ்டீமை நோக்கி ஓடுவாள் ஏதோ தலைபோகும் வேலை இருப்பதுபோல..

அப்படி என்னதாண்டி செய்றே என்று சரோஜா கேட்கும்போதெல்லாம் அதெல்லாம் உனக்கெதுக்கு மம்மி.. நீ போய் உன் லேடீஸ் க்ளப்ல நீ என்ன பண்றேன்னு நான் கேட்டேனா? ஆனா நீ செய்யறத விட உருப்படியாத்தான் நான் செய்யறேன்.. என்பாள்..

ஆமா, அந்த தாராவில போயி சோஷியல் சர்வீஸ்ங்கற பேர்ல என்ன கர்மத்த செய்றியோ.. நீ என்ன தலைகீழா நின்னாலும் அதுங்க உருப்படப் போறதே இல்லை என்பாள் சரோஜா.

இந்த அம்மா-பெண் ஆல்டர்கேஷனை (altercation) மாதவன் பலமுறைக் கேட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறைக் கூட அவர் தலையிட்டதேயில்லை. 'முப்பது வயசாகுது. கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கற உத்தேசம் ஏதாவது இருக்கா வத்ஸ¤' என்று இரண்டு மூன்று முறைக் கேட்டிருக்கிறார்..

'ஏம்பா நா நிம்மதியா இருக்கறது பிடிக்கலையா? ஆம்பிளைங்க என்னைக்கு மேல் ஷாவனிஸத்த விடறீங்களோ அன்னைக்கித்தான் கல்யாணம்.. நா இங்கருக்கறது உங்களுக்கு ஏதாவது கஷ்டமாயிருந்தா சொல்லிருங்க டாட். I know how to take care of myself' என்பாள்.. மாதவன் வாயை மூடிக்கொள்வார். அவளை வீட்டிலிருந்து வெளியேற்றினால் ஒருவேளை அவள் தாராவிக்குப் பக்கத்திலேயே குடியேறிவிட்டால் என்னாவது என்பது அவருடைய கவலை!

மாதவன் அவளுடைய அறைக்கதவைத் தட்டி, தட்டி கை வலித்ததுதான் மிச்சம்.. கதவு திறக்கப்படவே இல்லை..

சரி, சீனியைப் பார்ப்போம் என்ற சிந்தனையுடன் அடுத்த அறைக்கதவைத் தட்டினார்.

சீனிவாசன் வத்ஸலா எழுந்து புறப்பட்டுச் செல்லும்வரை கீழிறங்கி வரமாட்டான். எத்தனை மணிக்கு எழுந்தாலும் இந்த விஷயத்தில்மட்டும் குறியாயிருப்பான்.

அவன் எழுவதற்கு நேரம் காலம் என்றெல்லாம் இருந்ததில்லை.. உறக்கம் கலைந்த அந்நிமிடமே எழுந்து உக்கார்ந்துவிடுவான். அது காலை எத்தனை மணியானாலும்..

சில நாட்களில் அது ஏழு மணியாயிருக்கும் சில நாட்களில் அது அதிகாலை நாலு மணியாகவும் இருக்கும்!

அதிகாலையில் எழுந்து கட்டில் தலைமாட்டில் எழுந்து உட்கார்ந்துக்கொண்டு கனவு காண்பது அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு..

கனவு காண்பதில்தான் எத்தனை சுகம்!

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்.. யாருடைய தொந்தரவும் இல்லாமல்.. எந்தவித எல்லையுமில்லாமல்.. அப்படியே வானத்தில் பறப்பதுபோல்.. கடலின் விளிம்பில் மிதப்பதுபோல்.. பூமியின் ஆழத்தில் அமிழ்வதுபோல்..

அன்றும் அப்படித்தான் இருந்தான் கனவுலகில்..

அறைக்கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க அவனுடைய தனி உலகிலிருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது.. சரி அதுவும் கனவில்தான்போல் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

ஆனால் ‘டொக், டொக்’ ஒலி அவனை விடுவதாயில்லை..

யார் இது என்று நினைத்து வேண்டா வெறுப்புடன் எழுந்து சென்று திறந்தான்..

தாடியும் மீசையுமாய் கழுத்துவரைத் தொங்கிய தலைமுடியுடன் கனவுகள் நிறந்த கண்களுடன் தன் எதிரில் நிற்பவன் தன் மகனா என்று அவனுடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி அதிர்ந்துப் போய் நின்றார் மாதவன்.

சீனிவாசன் கண்கள் விரிய தன் முன்னே நின்ற தன் தந்தையையே ஒரு சில விநாடிகள் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவனும் மாதவனும் ஒருவரையொருவர் சந்தித்தே பல வாரங்கள் ஆகியிருந்தன. ஒரே வீட்டில்தான் வசித்தனர் என்பதென்னவோ உண்மைதான்.

‘என்னடா கோலம் இது சீனி? சரி அது போட்டும்.. நீ ஒன்னு பண்ணு.. குளிச்சி தலைய ஒழுங்கா சீவிட்டு கீழ இறங்கி வா.. எல்லாரும் கோயிலுக்கு போலாம்னு ப்ளான்.’

சீனிக்கு ஒன்றும் புரியவில்லை.. கோவிலுக்கா? யார் நானா? அதுவும் எல்லோரோடயுமா? என்னாச்சி இந்த அப்பாவுக்கு?

புத்தம்புது வேட்டியும் சட்டையுமாய் நெற்றியில் சந்தணப் பொட்டுடன் தன் முன்னே நின்றுக்கொண்டிருந்த மாதவனை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.

‘என்னடா அப்படி பாக்கறே.. போ.. போய் வேகமா குளிச்சிட்டு உனக்கு பிடிச்சத போட்டுக்கிட்டு.. தயவு செய்து ஜீன்ஸ், டீஷர்ட் வேணாம்.. வெள்ளையில ஒரு குர்த்தா போடுவியே.. அத போட்டுக்கிட்டு சீக்கிரம் இறங்கி வா.. அம்மா ரெடியாயிருப்பா.. நான் வத்ஸ¤வை போய் எழுப்பறேன்..’ என்றவாறு அடுத்த அறைக்கதவைத் தட்ட ஆரம்பித்த மாதவனை எட்டி தொட்டான் சீனிவாசன்..

மாதவன் நின்று, திரும்பி தன் மகனைப் பார்த்தார். ‘என்னடா?’

‘நான் எதுக்கு டாட். நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்களேன்.’

மாதவன் கோபப்படக்கூடாது என்ற தீர்மானத்தில் இருந்ததால் அவனைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தார். ‘எல்லாருமா சேர்ந்து போகலாம்னு ப்ளான்னு சொன்னேனே சீரினி.. ப்ளீஸ், டாடி சொல்றத கேளு.. இன்னைக்கி மட்டும்.. இட் ஈஸ் டாடிஸ் டே அவுட்.. என்ன? போ.. சீக்கிரம் ரெடியாவு..’

‘சரி, நாம என்ன சொன்னாலும் அவர் கேக்கப் போறதில்லை.. அவர் சொன்னா மாதிரி இன்னைக்கி ஒரு நாள் அவர் சொல்றதத்தான் கேப்பமே..’ என்று நினைத்தவாறு அடுத்த அறைக்கதவைத் தட்ட ஆரம்பித்த தன் தந்தையை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு தன் அறைக்குள் திரும்பினான் சீனிவாசன்..

குளியலறைக்குள் நுழைந்து ஒரு சுவர் முழுவதும் அடைத்தவாறிருந்த நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். அவனுக்கே அவனைப் பார்க்க வெறுப்பாயிருந்தது.. நேற்று மைதிலி அவனை உதாசீனப்படுத்துவதுபோல் திடுதிடுப்பென்று கிளம்பிச் சென்றதை நினைத்துப் பார்த்தான்..

ஓகே.. today maybe the turnaround day.. டாடி சொன்னா மாதிரி போவோம்..

கடவுள பார்க்க கோவிலுக்கு போணுமாக்கும்.. என்று இடக்கு செய்த உள்மனதை உதாசீனப்படுத்திவிட்டு கண்ணாடி ஸ்டாண்டிலிருந்த கத்தரியை எடுத்து தாடியை வெட்டித்தள்ள துவங்கினான்.. today is daddy’s day out என்ற தன் தந்தையின் வார்த்தைகள் கண் முன்னே வர அவனையுமறியாமல் அவனுடைய உதடுகளில் ஒரு கேலிப் புன்னகை தவழ்ந்தது.. today, this son’s day out too!

மாதவன் வத்ஸலாவின் கதவை மீண்டும் தட்ட கையெடுக்கவும் கதவு திறக்கவும் சரியாயிருந்தது..

கண்களிரண்டும் ஆச்சரியத்தில் விரிந்து ஏற்கனவே பெரிதான கண்களுடன் சிறுவயதில் ஏய் முண்டக்கன்னி என்று பள்ளித்தோழிகள் பட்டப் பெயருக்கு சொந்தக்காரியான வத்ஸலாவின் கண்கள் மேலும் விரிய சந்தோஷத்துடன்.. ‘ஹாய் டாட்! வாட் அ சர்ப்பரைஸ்! புது வேஷ்டி, புது சட்டை.. நெத்தியில சந்தணப் பொட்டு.. என்னாச்சி டாட்.. இன்னைக்கி ஞாயித்துக் கிழமைதானே..’ என்ற தன் மகளுடைய சந்தோஷம் தன்னையும் தொற்றிக்கொள்வதை உணர்ந்தார் மாதவன்..

வத்ஸ¤ மாதவனுடைய செல்லம்.. சிறு வயது முதலே.. அவர்களுடைய இருவர் குணமும் ஒன்று என்று அவர் நினைத்திருக்கிறார்..

அவருக்கு எப்படி பெண்களென்றால் துச்சமோ.. அவளுக்கு ஆண்களென்றால் துச்சம்..ஆனால் அவர்களிருவருக்கும் பரஸ்பரம் பிடிக்கும்..

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால உன் கதவ தட்டோ தட்டுன்னு தட்டினேனே நீ திறக்கவேயில்ல?’

‘நான் டாய்லெட்ல இருந்தேன் டாட்.. சரி.. என்ன விஷயம் சொல்லுங்க.. வெளீல எங்காச்சும் போறீங்களா?’

‘நா மட்டுமில்லடா.. நாம எல்லாருமா.. இன்னைக்கி மும்பையில கடைசி நாள் இல்லையா? அதான் கோவிலுக்கு போய்ட்டு ப்ரேக்ஃபாஸ்டையும் முடிச்சிட்டு வரலாம்னு ப்ளான் பண்ணேன்.. அம்மாவும் சீனியும் ரெடி.. இப்ப நீ தான்..’

வத்ஸலா தான் கேட்பது சரிதானா என்பதுபோல் மாதவனையே பார்த்தாள்.. what are you talking dad.. அம்மாவும் சீனியும் கூட வராங்களா? Is it true?’

மாதவன் கண்கள் விரிய தன் முன் நின்ற தன் மகளுடைய கன்னத்தில் லேசாக தட்டினார். ‘ஆமாம்.. it is true.. கேக்கறதுக்கு நம்ப முடியலை இல்லே.. ஆனா உண்மை.. சீனியும் வரேன்னுட்டு குளிக்க போயிருக்கான்.. நீயும் போய் குளிச்சிட்டு.. ரெடியாவு..’

‘ஒகே டாட்.. பத்தே நிமிஷம்..’என்றவாறு தன் அறைக்குள் திரும்ப முயன்ற தன் மகளை தடுத்து நிறுத்தினார் மாதவன். ‘ஜீன்ஸ், டீஷர்ட் கூடாது..’

வத்ஸலா திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். ‘Anything other than that is ok?’

மாதவன் புன்னகையுடன், ‘Yes.. but make it fast.’ என்று கூறிவிட்டு படியிறங்கினார்.

தொடரும்..





No comments: