23.2.06

சூரியன் 29

நியூ இந்தியா பவனின் பெயர் மாற்ற ராசியோ என்னவோ அவருடைய நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் நாடாரே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அண்டை நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் தமிழர்கள் அதிகம் வசித்த மேற்கத்திய நாடுகளான யூ.கே., யு.எஸ், கனடாவிலும் பிராஞ்சைசி என்ற பாதையில் பரந்து விரிந்து வளர்ந்தது.

இத்தனை வளர்ச்சியிலும் மாணிக்கம் நாடார் மற்றும் அவருடைய பங்காளி, ரத்தினவேல் இருவரிடையிலிருந்த நட்பு ஆழமானதே தவிர எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுடைய நட்புக்கு பந்தம் வரவில்லை. வரவிடக்கூடாது என்பதில் இருவருமே முனைப்பாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்...

அதாவது நாடாரின் வாலிப மகள் ராசம்மாள் ரத்தினவேலுவின் வாலிப மகன் ராசேந்திரனை சந்திக்கும் வரை...

ராசேந்திரன் பார்ப்பதற்கு சந்திரனைப் போல் சிவப்பாக (வெள்ளப் பாச்சான் மாதிரி இருக்கான்ல உம் பையன் என்பார் நாடார் தமாஷாக) பார்ப்பதற்கு சினிமா ஹீரோ தோற்றத்திலிருந்ததால் அமாவாசை நிறத்தில் ஆனால் லட்சணமான முக அமைப்புடன் இருந்த ராசம்மாள் (என்னப்பா பேர் வச்சீங்க? அம்மாள்னு.. எனக்கே கேக்க சகிக்கலை என்று சலித்துக் கொள்ளும்போதெல்லாம்.. ஏய் அது என்னைப் பெத்த ஆத்தா பேரும்மா.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்பார் நாடார்) மயங்கிப் போனதில் வியப்பில்லை..

நாடாரின் வளர்ச்சியில் ரத்தினவேலுவுக்குப் பிறகு ஒருவன் உண்டென்றால் அது அவருடைய தங்கை மகன் செல்வரத்தினம்தான். பத்தாவது முடித்தவுடனே தன்னுடைய மாமனுடைய உணவகத்தில் நுழைந்தவன் அவர் தன்னுடைய மகளுக்கு வரன் தேட துவங்கியபோது அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருந்தான்.

சென்னையில் ஐந்து கிளைகளை ஒரே நாளில் துவக்கி சென்னை நகரையே கலக்கியதும் அவனுடைய யோசனைதான். அத்துடன் இன்று கடல் கடந்து கிளைகளைத் திறந்து ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதில் அவனுடைய உழைப்பும் உண்டு .

அத்துடன் சட்ட ஆலோசகர் மோகனுடன் இனணந்து நாடாரை ஒரு வங்கியின் இயக்குனர் நிலைக்கு உயர்த்தியதும் செல்வம்தான்..

அவனைத்தான் தன் மகளுக்கு ஏற்றவனாக தன் மனதில் வரித்திருந்தார் நாடார்..

‘ச்சீய்.. உங்களுக்கென்ன பைத்தியமா? அவன் உங்க வேலைக்காரன்.. தங்கச்சி மகனாத்தான் எப்பவும் இருக்கணும்.. அவனும் அவன் மூஞ்சியும்.. கருச்சட்டி மாதிரி ஒரு மொகத்த வச்சிக்கிட்டு.. ஏங்க தெரியாமத்தான் கேக்கறேன்? கருச்சட்டி மாதிரி இருக்கற ஒங்களுக்கு என்னைய மாதிரி செகப்பு நிறத்துல ஒரு பொண்ணு வேணும்னு ஒங்காத்தா கட்டி வச்சது எதுக்கு? செகப்பா ஒரு பேரக்குளந்த பெறக்கணும்னுதான? என் தலையெளுத்து, ஒங்க நெறத்துல வந்து பொறந்திருச்சி.. அதையும் போயி மறுவாட்டியும் ஒரு கருச்சட்டி தலையனுக்கு நா கட்டி வைக்க மாட்டேன்.. ஒங்க பங்காளி பய இருக்கானே.. சினிமா கீரோ மாதிரி. அவனத்தான் எம்பொண்ணுக்கு பிடிச்சிருக்கு. கட்டுனா அவனத்தான் கட்டுவேன்னு நிக்கறா.. இத்தன சொத்துக்கும் அவதானங்க ஒரே வாரிசு.. அந்த பய சம்மதிக்கலன்னாலும் உங்க பங்காளி ஒத்துக்குவாறு.. போயி பேசி முடிங்க..’ என்ற தன்னுடைய தர்ம பத்தினியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் ரத்தினவேலுவிடம் பேசுவதற்கு முன் தன் மருமகனிடம் பேசுவோம் என்று நினைத்து தயங்கி, தயங்கி அவனிடம் விஷயத்தை சொன்னார்.

ஆனால் அவனோ அவர் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக, ‘என்ன மாமா நீங்க? நா எங்க.. ராசம்மா எங்க? அவ படிப்புக்கு ராசேந்திரன் மாதிரி படிச்ச மாப்பிள்ளை தான் மாமா சரியாயிருக்கும். நிறமில்லேன்னா என்ன? ராசம்மா பாக்கறதுக்கு லட்சணமாத்தான இருக்கா? உங்களுக்கு தயக்கமா இருந்தா சொல்லுங்க நா போயி ரத்தினவேல் மாமாக்கிட்ட பேசுறேன்.’ என்றதுடன் நிற்காமல் அடுத்த நாளே ரத்தினவேலிடம் சென்று தன் தாய்மாமனின்  மனதில் இருந்ததைக் கூறினான்.

ரத்தினவேலுவுக்கும் அவருடைய ஒரே மகன் ராசேந்திரனுக்கும் ராசம்மாவைப் பிடித்ததோ இல்லையோ அவளுடைய தந்தைக்கு இருந்த திரண்ட சொத்து மிகவும் பிடித்திருந்தது.

ராசேந்திரனின் குணத்தைப் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தும் தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நிர்பந்தம் காரணமாக அவர்களுடைய திருமனத்தை மதுரை நகரே வியக்கும் விதத்தில் தடபுடலாக நடத்தி முடித்தார் நாடார்.

ராசேந்திரனின் விருப்பத்திற்காக தன் மகள் பெயரில் சென்னையிலேயே ஒரு பிரம்மாண்டமான பங்களாவையும் விலைக்கு வாங்கி குடி வைத்தார்.

முதல் ஆண்டிலேயே ராசேந்திரனைப் போலவே ஒரு அழகான ஆண் மகனை ராசம்மாள் பெற்றெடுக்க பூரித்துப் போனாள் ராசாத்தியம்மாள்..

ஆனால் அதற்கடுத்த ஆண்டிலேயே ராசேந்திரனின் ‘பொம்பளை வீக்னஸ்’ தலைகாட்ட ஆரம்பித்தது.

நீயு இந்தியா பவனின் நிர்வாக இயக்குனர் என்ற பதவியளித்த போர்வையில் தன் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களிடத்தில் தன் லீலைகளைத் துவக்கியவன் நாளடைவில் வெளியேயும் பெண் சிநேகிதர்கள் வட்டத்தை விரிவாக்க.. கண்ணீரும் கம்பலையுமாய் தன் தந்தை முன் சென்று நின்றாள் ராசம்மாள்.

தன் மாமன் மகளுக்கா இந்த நிலை என்றி பரிதவித்துப்போன செல்வம் சீறிக்கொண்டு ராசேந்திரனை எதிர்கொள்ள அவன் தன் தந்தையைத் தூண்டிவிட்டு இருபதாண்டுகாலம் வரை உண்மையாய் உழைத்த செல்வத்தையே மன வேதனையுடன் நிறுவனத்தை விட்டே நீக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார் நாடார்..

ஆனால் அவர் யாருக்கும் தெரியாமல் பெருந்தொகையொன்றை முதலீடாக அவனுக்குக் கொடுத்து திருநெல்வேலியில் இனிப்பு மற்றும் சிற்றுண்டி கடையை நிறுவ உதவினார்..

உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டிருந்த செல்வம் அடுத்த இரண்டாண்டுகளிலேயே ஒரு கடையை மூன்று கடைகளாக பெருக்கி திருநெல்வேலியின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவராகிப் போனான்..

ராசம்மாளோ ராசேந்திரனுடன் வாழப்பிடிக்காமல் தன் தந்தை வீட்டில் வந்து சேர்ந்தாள்..

‘அய்யா.. ஒங்க பங்காளி வீடு வந்திருச்சிங்க..’

டிரைவரின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மாணிக்க நாடார்.. தோள் மேல் கிடந்த துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி தன் கண்ணெதிரே தெரிந்த பிரம்மாண்டமான மாளிகையை ஏறெடுத்துப் பார்த்தார்..

‘ஹ¥ம்..’ என்ற பெருமூச்சு அவரையும் அறியாமல் வெளிவர தன் பங்காளி ரத்தினவேலுவின் வீட்டுப் படியில் ஏறினார்.

‘அடடா, என்ன சம்மந்தி? ஒரு போன் போட்டிருந்தா நானே வந்திருக்க மாட்டேன்.. மெட்றாசுக்கு போயிருந்தீங்கன்னுல்லே நினைச்சிக்கிட்டிருந்தேன்..’ என்று காவிப்படிந்த பற்கள் தெரிய புன்னகையுடன் தன்னை வரவேற்ற ரத்தினவேலுவின் கண்களில் அவன் செய்திருந்த நம்பிக்கைத் துரோகம் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தார்..

‘என்ன சம்மந்தி அப்படி பாக்கறீங்க?’

‘நீ தான் சொல்லணும் ரத்தினம்.. நீதான் சொல்லணும்.. அதுக்காவத்தான மெட்றாஸ்லருக்கற வேலைய எல்லாம் போட்டத்து போட்டபடியே கெடக்கட்டும்னு போட்டுட்டு வந்துருக்கேன்.’

ரத்தினவேலுவுக்கு சுருக்கென்றது... படுபாவிப்பய. நாம ரகஸ்யமா செஞ்சது இவனுக்கெப்படி தெரிஞ்சது? இல்ல சும்மாட்டியும் நூல் விட்டு பாக்கறானா? இருக்கும்.. இருக்கும்.. ரத்தினவேலுவா கொக்கா.. அவனாவே கேக்கட்டும்.. அதுவரைக்கும் மூச்சு விடப்படாது..


தொடரும்..

2 comments:

G.Ragavan said...

ம்ம்ம்...உழைப்பு முன்னேற்றும். இதைத்தான் முயற்சி திருவினையாக்கும்னு வள்ளுவர் சொல்லிருக்காரு.

ரத்தினவேலு பயங்கர யேமாத்துக்காரன இருப்பான் போல...இவ்வளவு வந்தப்புறம் பிஸினஸ்ஸ விட்டுப் பத்தவும் முடியாது...நாடாரு என்ன செய்யப் போறாருன்னு தெரியலையே...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

ரத்தினவேலு பயங்கர ஏமாத்துக்காரன இருப்பான் போல...//

எந்த ஒரு கூட்டுலயும் பாருங்க இந்த மாதிரி ஆளுங்க நிச்சயம் இருப்பாங்க..

தீட்டுன மரத்தையே வெட்டறதுக்கு..