27.2.06

சூரியன் 31

சட்டென்று நினைவுக்கு வந்ததுபோல் நிமிர்ந்தார் சேது மாதவன். ‘எடோ தான் ஒரு காரியம் செய்யி. தாழ போயி எண்ட கார் டாஷ் போர்ட்ல நம்மட சீக்ரெட் டைரி உண்டாவும். அத கொண்டுட்டு வேகம் வா.’

அது அவருடைய நெருங்கிய நண்பர்கள், அடியாட்களின் தொலைப்பேசி எண்கள் அடங்கிய ரகசியப் புத்தகம். எண்கள் மட்டுமே இருக்கும். யாராவது சம்பந்தம் இல்லாதவர்கள் எடுத்தால் அவை என்னவென்று விளங்கவே சிறிது நேரம் பிடிக்கும். அப்படியொரு புத்தகம் இருப்பதே அவருக்கும் திருநாவுக்கரசுவுக்கும் மட்டுமே தெரியும்.

அதைப் புரட்டி ஒரு எண்ணை அவனிடம் சுட்டிக்காட்டி, ‘திரு, தான் தாழ போயி இயாள விளிச்சி இன்னும் அரைமணிக்குள்ளில என்னெ வந்து காணாம் பற.. வேகம் போ..’ என்றார்.

அந்த எண்ணைப் பார்த்ததுமே அவனுக்கு புரிந்தது. வியப்புடன் அவரைப் பார்த்தான். ஆனால் அடுத்த விநாடியே ஒன்றும் கூறாமல் படியிறங்கி ஓடி அவர் கூறியதை செய்தான்.

அவன் பார்வையிலிருந்து மறையவும் அவருடைய செல் ஃபோன் சிணுங்கவும் சரியாயிருந்தது. யார் என்று பார்த்தார். அவருடைய புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. என்ன வேணும் இவனுக்கு? அதுவும் இந்த நேரத்துல?

எடுத்து, ‘என்ன?’ என்று உறுமினார்.

அடுத்த சில விநாடிகளில் அவர் முகம் அதிர்ச்சியில் உறைந்து பிறகு படிப்படியாக மாறி சோகமானது..

‘Is it? Where is she now?’ என்றார்.

மறுமுனையிலிருந்து என்ன பதில் வந்ததோ.. ‘Ok. Leave it to me. I’ll try and bring her back. Don’t do anything stupid till I call back and don’t tell anyone. Ok?’ என்றார்.

இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் கையில் இருந்த டைரியிலிருந்த வேறொரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் சம்பந்தப்பட்டவர் எடுத்ததும் கடகடவென ஆணைகளைப் பிறப்பித்தார். ‘எடோ.. தான் எங்கன செய்யாம் போனன்னு ஞான் பறையில்லா.. பட்ச காரியம் நடந்திருக்கணும்.. நோ எக்ஸ்க்யூஸ்.. மனசிலாயோ?’

மறுமுனையிலிருந்து பதில் வருவதற்கு முன் இணைப்பைத் துண்டித்துவிட்டு செல் ஃபோனை கட்டிலில் வீசியெறிந்துவிட்டு அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

அவர் வீசியெறிந்ததும் அடிக்கத் தொடங்கிய செல் ஃபோனை எடுக்காமல் குனிந்து யாரென பார்த்தார். ‘சே.. இயாளெந்துனா ஈ சமயத்துல விளிக்கின? எடுக்காதிருந்தாலோ?’ என்று நினைத்தவர் அது தொடர்ந்து உச்ச ஸ்தாயியில் ஒலிக்கவே அரைமனதுடன் எடுத்து, ‘என்ன சார், இந்த நேரத்துல?’ என்றார்.

‘சார் நான் சுந்தரம்’

அதான் தெரியுதேய்யா..

‘தெரியுது சார். சொல்லுங்க.’

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால முரளி கூப்டு எல்லாம் நீங்க நெனச்சா மாதிரியே சுமுகமா முடிஞ்சிருச்சின்னு சொன்னார் சார்.. எம்.டி கிட்ட சொல்லிருங்கன்னும் சொன்னார். அதான் உங்கள இன்ஃபார்ம் பண்ணலாம்னு கூப்டேன்..’

மாதவன் அதிர்ச்சியில் என்ன பதில் பேசுவதென தெரியாமல் ஒரு நிமிடம் சிலையாய் நின்றார்..

‘என்னாச்சி மிஸ்டர் மாதவன்? ஆர் யூ தேர்?’ என்ற சுந்தரத்தின் குரல் செவியில் அறைய சுதாரித்துக்கொண்டு.. ‘நான் எதிர்பார்த்ததுதான் சார்.. உங்க இன்ஃபர்மேஷனுக்கு ரொம்ப தாங்க்ஸ்..’ என்றார்.

‘சார், அப்புறம் இன்னொரு விஷயம்.’

என்னய்யா நை நைன்னு..?

‘சொல்லுங்க சார்.’

‘நம்ம மாதவன் சார ரிசீவ் பண்ண போணுமில்லே..’

வாயில் வந்த வசவுகளை கஷ்டப்பட்டு மென்று விழுங்கினார். ‘நாம எதுக்கு சார் போணும்? அவரு எந்த ஃப்ளைட்டுல வரேன்னு கூட நமக்கு சொல்லலையே.. போர்ட் மெம்பர்ஸ் வந்தாப் போறும்னு நினைச்சித்தானே டாக்டர்கிட்ட மட்டும் சொல்லியிருக்கார். அவரே போட்டும்..’ என்றார் பற்களைக் கடித்துக்கொண்டு..

மறுமுனையில் இருந்து சிறிது நேரம் ஒன்றும் பதில் வராமல் போகவே.. இணைப்பைத் துண்டித்துவிட்டு ‘போடா தெண்டி’ என்றார் உரக்க.

அவருக்குப் பின்னால் ஓசைப்படாமல் வந்து நின்ற திருநாவுக்கரசு முதலாளியின் வசவு யாருக்கு என்று தெரியாமல் விழித்தான். ‘சரி, ஐயா அந்தப்பக்கம் போனதும் செல்ல எடுத்து கால் ரெஜிஸ்டர்ல பாத்து வச்சிக்கணும். பின்னால யூஸ் ஆவும்.’ என்று மனதில் குறித்துக்கொண்டு.. ‘சார்.. நீங்க சொன்ன நம்பருக்கு ஃபோன் பண்ணிட்டேன்.. கரெக்டா இன்னும் அரை மணி நேரத்துல வந்துர்றேன்னிட்டான்..’ என்றான்.

‘இனி அயாளு வந்து எந்தெய்யானா? வேணாம்னு விளிச்சிப் பற’ என்ற மாதவனைப் பார்த்து ஒன்றும் விளங்காமல் விழித்தான் திரு. என்னாச்சி இந்தாளுக்கு, காலைலருந்தே முன்னுக்கு பின்னா பேசறாரு? சரி நமக்கென்ன, இன்னொரு ஃபோன் போடணும், அவ்வளவுதானே?

‘சரிங்கய்யா.’ என்றவாறு நகர்ந்தான். அவன் ஓரடி எடுத்து வைக்கும் முன், ‘ஏய், நில்லு.. வேண்டா.. அவன் வந்தோட்டே.. தான் போயி.. இனியும் ஒரு சாயா ஸ்ட்ராங்காய்ட்டு கொண்டு வா..’ என்றார் மாதவன்.

நாம நெனச்சது சரிதான். என்னமோ முக்கியமான காரியம் நடந்திருக்கு இல்லே, நடக்கப் போவுது.. இல்லன்னா இந்தாளு இப்படி தடுமாறமாட்டான்..

அவன் நகர்ந்ததும் தன் செல் ஃபோனை எடுத்து கோபத்தில் நடுங்கும் விரல்களுடன் ஒரு எண்ணைச் சுழற்றி காதில் வைத்தார்.. கோபத்தின் உச்சியில் நடுங்கும் உதடுகளைக் கடித்துக்கொண்டு மறுமுனையில் எடுக்கும்வரைக் காத்திருந்தார்.. யாரும் எடுக்காமல் போகவே ஆத்திரத்துடன் ஃபோனை கட்டிலில் வீசியெறிந்தார்..

தெண்டி, தெண்டி, தெண்டி.. எடோ, தான் கூடுதல் களிக்கான் நோக்கியாலே.. பட்டி.. கட்டுக்கடங்காமல் சரமாரியாக வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கூறி தன்னுடைய செல் எண்ணைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே எடுத்து பதிலளிக்காதிருந்த முரளிதரனைத் திட்டித் தீர்த்தார்..

கொல்கொத்தா விவகாரத்தை சுமுகமாக முடிக்க விடக்கூடாது என்பதில் தீவிரமாயிருந்த சேது மாதவன் அதற்காகவே முரளி கொல்கொத்தா செல்லும் முன் தன்னை அழைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தார். ஆனால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அவருடைய உள்நோக்கத்தை அறிந்திருந்த முரளி வேண்டுமென்றே ஷண்முக சுந்தரத்தின் பேரில் இருந்த விசுவாசத்தால் தன்னை அழைக்காதிருந்திருக்கிறான் என்று நினைத்தபோது அவரால் கோபத்தை அடக்க முடியவில்லை..

வாசலில் இருந்து ஒலித்த அழைப்பு மணியோசை அவருடைய நினைவுகளை கலைக்க படுக்கையறையை விட்டு வெளியேறி மாடியிலிருந்தே கீழே பார்த்தார்.

திருநாவுக்கரசு சென்று கதவைத் திறந்ததும் அவனை முரட்டுத்தனமாய் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அடியாட்கள் கூட்டத்தின் தலைவனைப் பார்த்ததும் ஒரு வன்மப் புன்னகை மாதவனின் முகத்தில் படர்ந்தது..

‘எடா.. மோள்லேக்கு வா..’ என்றார் மாடியில்ருந்தவாறு..

திருநாவுக்கரசுக்கு மாதவன் யாரை மாடிக்கு அழைக்கிறார் என்று தெரிந்தது.. அவன் ஒன்றும் பேசாமல் வாசற்கதவை அடைத்துத் தாளிட்டுவிட்டு சமையலறையை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்த அடியாள் படியேறி மேலே சென்றான்..

‘எந்தா சாரே.. அர்ஜெண்டாய்டு?’

இருபது வருடங்களுக்கு கேரள மாநிலம் கம்யூனிச கட்சிகளின் பாசறையான அலுவாவிலிருந்து (Alluva District) தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கத்தைத் துவக்க வந்தவர்களுள் ஒருவன் தான் இப்போது அடியாட்களின் தலைவனாக உருவெடுத்திருக்கும் பாஸ்கரன் நம்பியார்.. அவனுக்கு கிடுக்கி நம்பியார் என்ற பட்டப் பெயரும் உண்டு!

அவனிடம் அகப்பட்டவர்கள் ஒருவரும் தப்பித்ததில்லை. அதற்காக அவனுடைய சகாக்கள் வைத்த பெயர்தான் ‘கிடுக்கி’.

சேதுமாதவன் தன் எதிரே ஆறடிக்கும் கூடுதலான உயரத்தில் வாட்ட சாட்டமான உருண்டு திரண்டிருந்த புஜங்களுடன், பாதி முகத்தை மறைத்துக்கொண்டிருந்த தாடியுடனூடே காவியேறிய பற்கள் தெரிய ஒரு கொடூர புன்னகையுடன் நின்றவனைப் பார்த்தார்.

அவருடைய ஆணையின் பேரில் கடன் பெற்றுவிட்டு திருப்பி அடைக்காமல் மக்கார் செய்த எத்தைனையோ வங்கி வாடிக்கையாளர்களை மிரட்டி பணியவைத்தவன் இந்த பாஸ்கரன்..

‘எந்தா சாரே.. எந்தா ஆலோய்க்கண?’

‘தனிக்கி ஒரு ஜோலி கொடுக்கான் விஜாரிச்சதான பாஸ்கரா.. அதுகொண்டா தன்ன விளிப்பிச்சது.. பட்சே அதிண்ட அவஸ்யம் தீர்ந்நுபோயி.. அதான ஆலோய்க்கண..’ என்ற சேதுமாதாவன் சட்டென்று நினைவுக்கு வந்தவராய்.. ‘எடோ நம்மட பத்மன் இல்லே..?’ என்றார்.

பாஸ்கரனுக்கு தெரியாமலா? அவனுடைய நெருங்கிய சகா பத்மநாபனை மறக்க முடியுமா என்ன? ‘அதே சார்..’

‘ஞான் இன்னு ராவிலெ அவண்டெடுத்து ஒரு காரியம் எல்ப்பிச்சிட்டுண்டு.. தான் அவனெ விளிச்சோ.. அவன் பறஞ்சு தரும்.. நிங்களு ரெண்டு பேரும் ச்சேர்ந்து போக்கோ.. காரியம் கொறச்ச புத்திமட்டுள்ளதான.. தானும் ச்சேர்ந்தாலே சரியாவுள்ளு.. பத்மன் தேஷ்யத்ல எந்தெங்கிலும் ச்செய்துபோயா பிரஸ்ணம் சீரியாவான் சான்ஸ்சுண்டு.. தான் இப்பத்தன்னே அவனெ விளிச்சோ..ஞான் தன்னெ விளிச்ச காரியம் பின்னே அவசியம் வரும்போ பறயாம்..’

பாஸ்கரன் ‘ பாஸ் ராவில விளிச்ச காரியம் எந்தாயிருக்கும்?’ என்ற யோசனையில் பதிலளிக்காமல் சில விநாடிகள் மெளனமாய் நிற்க சேதுமாதவன் எரிச்சலுடன், ‘தான் எந்தா ஆலோய்க்கண? வேகம் போக்கோ.. எனிக்கி வேற ஜோலியுண்டு.’ என்றார்.

அவருடைய குரலில் இருந்த கோபத்தைக் கண்ட பாஸ்கரன்.. ‘ஒன்னுமில்லா சாரே..’ என்றவாறு தயங்கி நின்றான்..

'எந்தாடோ? பறஞ்சோ..' என்றார் எரிச்சலுடன்.

‘சார், பைசா கொடுத்துட்டு கொறே காலமாயி.. அதுவுமில்லாண்டு.. சார் இப்போ பறஞ்ச காரியம் கொறச்ச ரிஸ்க்குள்ளதான.. போலீஸ் பிடிக்கானங்கில் அவருக்கு எந்தெங்கிலும் கொடுக்கண்டே சாரே?’

சேதுமாதவனுக்கு புரிந்தது.. அறையை விட்டு வெளியேறி, ‘எடோ திரு..’ என்று இரைந்தார்.

அடுத்த நொடியே மாடிப்படிகளில் பறந்து வந்த திருநாவுக்கரசிடம் பாஸ்கரனைப் பார்த்து கண் ஜாடை செய்ய அவன் புரிந்துக்கொண்டு அவனைப் பார்த்து கீழே வா என்று கண் ஜாடைக் காட்டியவாறு படிகளில் இறங்கினான்..

தொடரும்




3 comments:

டிபிஆர்.ஜோசப் said...

சாரிங்க,

நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லை.

இலவசக்கொத்தனார் said...

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத இடுகை.

//
1. டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் வசிக்கும் வீட்டின் கதவு இலக்கம் என்ன?//

At February 28, 2006 1:13 PM, இலவசக்கொத்தனார் said...

ஓக்கே.
முதலில் ஜோசப் சார் கதை.

1) ஜோசப் சார் ஒரு வங்கியில் வேலை செய்கிறார் என்பது தெரியும்.
2) கூகிளாண்டவர் புண்ணியத்தால் எந்த வங்கி என்று கண்டுபிடித்தாகிவிட்டது.
3) அவ்வங்கியின் இணைய தளத்திற்கு சென்று தேடினால் அவரின் வீட்டு தொலைபேசி எண் கிடைத்தது. சார், பெரிய போஸ்ட் அல்லவா.
இரண்டு நம்பர்கள் கிடைத்தன.
4) அவற்றை வைத்து பி.எஸ்.என்.எல் இணைய தளத்தில் தேடினால் முதல் எண்ணுக்கு ஒரு தகவலும் இல்லை. அது அவரின் தனிப்பட்ட தொடர்ப்பு போலும்.
ஆனால் இரண்டாம் எண்ணில் அடித்தது யோகம். கிடைத்தது முகவரியும், அதனுடன் 10 புள்ளிகளும்.

மேலும் விபரங்களுக்கு http://nilaraj.blogspot.com/2006/02/4_27.html#comments

டிபிஆர்.ஜோசப் said...

அடடா.. எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கீங்க!

உங்கள் அணி வெற்றிபெற வாழ்த்துக்கள்.