15.2.06

சூரியன் 24

‘இப்படி எல்லாருமா சேர்ந்து வெளிய வந்து எவ்வளவு நாளாச்சி டாட்.’  என்றாள் வத்ஸலா.

மாதவன் தன் முன் அமர்ந்திருந்த தன் குடும்பத்தாரை பார்த்தார். தாதர் சந்திப்பில் அமைந்திருந்த டம்பரமான அந்த உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாசலில் இருந்த சொகுசு சோபாக்களில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் எந்த மேசை காலியாகும் அமர்ந்துக் கொள்ளலாம் என்று பொறுமையிழந்து காத்திருப்பது தெரிந்தது.

‘ஆமா வத்ஸ்.. நாம சென்னைக்கு போனதும் we should do this often.’

சரோஜா சட்டென்று நிமிர்ந்து மாதவனைப் பார்த்தாள். ‘என்ன சொன்னீங்க?’

மாதவன் உதட்டில் புன்னகையுடன் அவளைப் பார்த்தார். ‘நான் தமிழ்லதானே சொன்னேன்.’

சரோஜா பொங்கி வந்த எரிச்சலை அடக்க முயற்சிப்பது வத்ஸலாவுக்குப் புரிந்தது. ‘டாட்.. மம்மி.. Please, Not here.. We will discuss this topic when we return home..’

சீனிவாசன் அவர்கள் பேசுவதில் சிரத்தையில்லாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ப்ளேட்டில் இருந்த இட்லி வடை கேட்பாரற்று கிடந்தது..

‘சீனி.. are you elsewhere?’ என்று வத்ஸலா சீண்டினாள்..

ஆனாலும் சீனிவாசன் அவனுடைய கனவுலகத்தில் இருந்தான் என்பது அவனுடைய கண்களைப் பார்த்தாலே தெரிந்தது..

வத்ஸலா மீண்டும் அவனை சீண்ட முயல.. ‘Hey.. leave him alone..’ என்றாள் சரோஜா.

மாதவன் தன் மகனை திரும்பிப் பார்த்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை தனியாக மும்பையில் விட்டு விட்டு போகக்கூடாது என்று நினைத்தார். சரோஜாதான் தன்னுடைய யோசனைக்கு முட்டுக்கட்டு போடுவாள் என்றும் நினைத்தார்.

வத்ஸலா சொன்னதும் சரிதான். வீட்டுக்கு போனதும் பேசிக்கலாம். எப்படியும் மூனு மணி ஃப்ளைட்ல எல்லோரும் போகணும். அங்க செட்டில் ஆகப்போறமா இல்லையாங்கறத அங்க போயி கூட பேசிக்கலாம்.

‘ஒகே.. சீனி, நீ சாப்டு முடிச்சா நாம கிளம்பலாம்.’ என்றார் மாதவன்.

அவன் அப்போதும் சாலையிலேயே மூழ்கியிருந்தான். மாதவன் அவனை லேசாக தோளில் தொட்டார்.

திடுக்கிட்டு திரும்பி அவரைப் பார்த்த சீனிவாசன், ‘என்ன டாட்?’ என்றான் ஒன்றும் புரியாமல்.

மாதவன் புன்னகையுடன், ‘நீ சாப்டு முடிச்சா கிளம்பலாம்னேன்..’

அவன் அசிரத்தையுடன் தன் முன்னே இருந்த ப்ளேட்டைப் பார்த்தான். ‘I don’t feel like eating dad..’

சரோஜா.. ‘அவன கம்பெல் பண்ணாதீங்க.. நீங்க அவன கேக்காம ஆர்டர் பண்ணிட்டு அவன சாப்டு, சாப்டுன்னா அவன் என்ன பண்ணுவான்?’ என்றாள்..

வத்ஸலா தன் பெற்றோர் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். ‘மம்மி.. லெட் அஸ் கோ ஹோம்.. டேய் சீனி.. நீ சாப்டாட்டா பரவாயில்லை.. கிளம்பு போலாம்.’

சீனிவாசன் எல்லோரையும் ஒரு முறை பார்த்துவிட்டு.. ‘நீங்க போங்க.. நான் மைதிலியை பார்த்துட்டு வரேன்..’

‘ப்ளீஸ் சீனி.. நமக்கு எல்லோருக்குமா சேர்த்துதான் ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணியிருக்கேன். நீ இப்ப போனா டைமுக்கு வரமாட்டே.. அந்த பொண்ண அப்புறம் பார்த்துக்கலாம்.’

சரோஜா எரிச்சலுடன் தன் கணவனைப் பார்த்தாள். ‘என்ன சொன்னீங்க, நம்ம எல்லோருக்கும் ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணியிருக்கீங்களா? எங்க போறதுக்கு? சென்னைக்கா? நாந்தான் நேத்தே...’

அவளை மேலே பேசவிடாமல் சைகைக் காட்டி தடுத்தார் மாதவன். ‘ப்ளீஸ் சரோ.. கார்ல போய்க்கிட்டே பேசலாம்..’

மாதவன் கார் சாவியை வத்ஸலாவிடம் கொடுக்க அவள் கார் நிறுத்திவைத்திருந்த பேஸ்மெண்ட்டுக்குச் சென்று எடுத்துக்கொண்டு வந்து முகப்பில் நிறுத்த சிவகாமி மாமியைத் தவிர எல்லோரும் ஏறிக்கொண்டனர்.

‘நான் பக்கத்துலருக்கற ஆசிரமத்துக்கு போயிட்டு சாயந்திரமா வரேன்.’ என்றாள் சிவகாமி மாமி.

மாதவன், ‘மாமி.. அநேகமா நீங்க வீட்டுக்கு வரும்போது நாங்க நாலு பேரும் கிளம்பிப் போயிருப்போம். ஆறுமுகமும் அவன் பெஞ்சாதியும் வீட்ல இருப்பாங்க. ராத்திரிக்கு மேல சாமான்கள கட்டுறதுக்கு ஒரு கம்பெனியிலருந்து ஆள்ங்க வருவாங்க. நீங்க அந்த சமயத்துல வீட்ல இருக்கணும்.. நான் சென்னைக்கு போய்ட்டு ஃபோன் பண்றேன்.’ என்றார்.

காருக்குள்ளிருந்தவாறே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சரோஜாவின் முகம் கோபத்தால் சிவந்தது. இவராவே முடிவெடுத்துட்டு சொல்றத பாரு.. கார்ல ஏறட்டும் பேசிக்கறேன்.

‘நீ தள்ளிக்க வத்ஸ், நான் ஓட்டறேன்.’ என்ற மாதவனைப் பார்த்தாள் வத்ஸலா.. அப்பா கார்ல ஏறுனதுமே கடிச்சு குதற மம்மி காத்துக்கிட்டிருக்கா.. இந்த நிலமையில அப்பா கார் ஓட்டாம இருக்கறதுதான் நல்லது..

‘இல்ல டாட்.. நிங்க பின்னால மம்மி பக்கத்துல உக்காருங்க. சீனி முன் சீட்ல உக்காரட்டும். நான் ஓட்டறேன்..’

மாதவன் பின்சீட்டிலிருந்த தன் மனைவியைப் பார்த்தார். அவளுடைய சிவந்த முகம் அவருக்கு வத்ஸலா கூறியது சரிதான் என்று உணர்த்தியது. அவள் கார் புறப்பட்டதுமே பிரச்சினையை நிச்சயம் கிளப்புவாள் என்று நினைத்தார்..

சீனிவாசன் பின் சீட்டிலிருந்து இறங்கி முன்பக்க கதவைத் திறந்துக் கொண்டு ஏறிக்கொண்டான். மாதவன் பின் இருக்கையில் அமர கார் சீறிக்கொண்டு புறப்பட்டது.

‘வத்ஸ் ஞாயிற்றுக்கிழமைங்கறதுக்காக ஸ்பீட் லிமிட்டைத் தாண்டாத.. மெதுவாவே போ.. வீ ஹேவ் லாட் ஆஃப் டைம்..’ என்ற மாதவன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார்.

‘இங்க பார் சரோ.. I am going to take you all to Chennai only for a week. அங்க போயி மண்டே சார்ஜ் எடுத்துக்கிட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு பேசி முடிவெடுப்போம். நாம நாலு பேரும் போறதுக்கான டிக்கெட்ஸ் பேங்க்ல கொடுக்கறாங்க.. அதை ஏன் வேஸ்ட் பண்ணனும்? அது மட்டுமில்லாம ஐ நீட் யுவர் ஹெல்ப் இன் செட்டிங் அப் தி ஹவுஸ்.. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள வீட்லருக்கற எல்லாத்தையும் பேக்கர்ஸ் வந்து பேக் பண்ணி வச்சிருவான். எனக்கு தேவையான திங்க்ஸ்  மட்டும் இப்போதைக்கு சென்னைக்கு  அனுப்பிருவான். மீதிய அவங்க கொடவுன்லயே வச்சிருப்பான். நீங்க என்ன டிசைட் பண்றீங்களோ அதப் பொறுத்து எங்க அனுப்புனுமோ அனுப்பிருவான். பத்து நாளைக்கு ஃப்ரீயா கொடவுன்ல வச்சிக்கறேன்னு சொல்லிருக்கான். பார்ப்போம்.. சென்னைக்கு எல்லோருமே வந்துட்டீங்கன்னா ஐ வில் பி ஹாப்பி. இல்ல இங்க வீடோ ஃப்ளாட்டோ வாங்கணும்னாலும் வாங்கலாம்.. ஐ வில் லீவ் தி டிசிஷன் டு யூ சரோ..’

மாதவன் முடிக்கும்வரை பேசாமல் இருந்த வத்ஸலா தன் தந்தையை ரியர் வ்யூ மிரரில் பார்த்தாள். ‘எக்ஸலண்ட் ஐடியா டாட்.. என்ன மம்மி?’

சரோஜாவுக்கும் மாதவன் தெரிவித்த யோசனை பிடித்துத்தானிருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே, ‘இத நேத்தைக்கே சொல்லியிருக்க வேண்டியதுதானே. கிளம்புறதுக்கு இன்னும் ரெண்டு மூனி நேரம்தான் இருக்கு.. திடுதிடுப்புன்னு இப்படி சொல்லி கடுப்படிக்கணுமாக்கும்.’ என்றாள் எரிச்சலுடன்..

மாதவன் பதில் பேசாமல் இருந்தார்.

சீனிவாசன் தயக்கத்துடன், ‘டாட்...’ என்றான்.

‘சொல்லு.’

‘என்னோட டிக்கட்ட மட்டும் ரெண்டு நாளைக்கு தள்ளி போட்டுக்கறேனே..’

‘ஏன்?’

‘மைதிலிக்கும் எனக்கும் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. இன்னைக்கி அவள மீட் பண்ணிட்டு..’

மாதவன் திரும்பி சரோஜாவைப் பார்த்தார்.

அவள் எரிச்சலுடன், ‘எதுக்கு என்ன பாக்கறீங்க? நீங்களாச்சு உங்க மகனாச்சு.’ என்றாள்.

சிறிது நேரம் மவுனமாயிருந்த மாதவன், ‘ஒகே சீனி.. if you want you can either bring her along to Chennai or stay back for two more days.’ என்றார்.

அவருடைய இந்த பதிலை எதிர்பார்க்காத மூவரும் அவரைத் திரும்பிப் பார்த்தனர்..

சீனிவாசன் அதிர்ச்சி மாறாமல்.. ‘டாட் என்ன சொன்னீங்க? You mean I could bring Mythili to Chennai?’

‘ஆமா.. If that is what you want.’

சீனிவாசன் திரும்பி சாலையிலேயே குறியாயிருந்த வத்ஸலாவைப் பார்த்தான். ‘நீ என்ன சொல்றே வத்ஸ்..?’

அவள் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டாள் ‘எனக்கொன்னும் தெரியாது. You decide.’

சிறிது நேரம் காரிலிருந்த யாரும் பேசாமல் அவரவர் சிந்தனையில் மூழ்கிப் போயினர்..

‘டாட்..’ என்றான் சீனிவாசன் தயக்கத்துடன்..

‘எதுக்குடா எல்லாத்துக்கும் தயங்கறே? என்ன சொல்ல வர்றியோ தைரியமா சொல்லேன்.’ என்றாள் சரோஜா..

‘ஒன்னுமில்ல மம்மி.. நாந்தான் இன்னைக்கி வரலையே.. நா இங்க இறங்கி மைதிலிய பார்த்துட்டு வரேனே..’

சரோஜா மாதவனைப் பார்த்தாள். அவர் ‘சரி.. இறங்கிக்கோ.. வத்ஸ் அவன இறக்கி விட்டுரு.. Let him come later.’ என்றார்.

அவன் இறங்கிக்கொள்ள வாகனம் வேகமெடுத்து அடுத்த அரை மணியில் அவர்கள் வீட்டை அடைந்தது..

தொடரும்..







No comments: