16.2.06

சூரியன் 25

சீனிவாசன் காரிலிருந்து இறங்கியதும் தன் செல் ஃபோனிலிருந்த மைதிலியின் செல் எண்ணை டயல் செய்தான்.

மணி அடித்துக்கொண்டே இருந்தது. இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பொறுமையிழந்தான். அடுத்து என்ன செய்வதென புரியாமல் நடைபாதையில் சிறிது நேரம் முன்னும் பின்னும் நடந்தான்.

மைதிலி வேண்டுமென்றே எடுத்து பேசாமல் இருப்பாளோ?

இதுவரை அவர்கள் இருவருக்கும் இடையில் பலமுறை அபிப்பிராய பேதங்கள் எழுந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவன் முறுக்கிக்கொண்டு எத்தனை நாளானாலும் அவளிடம் பேசாமல் இருப்பான்.

ஆனால் மைதிலியால் இரண்டு நாட்கள் தொடர்ந்து அவனுடன் பேசாமல் இருக்கமுடியாது. அவனுடைய தந்தை வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு நேரே புறப்பட்டு அவனுடைய வீட்டுக்கே வந்துவிடுவாள்.

சீனிவாசன் போதைப் பொருட்களின் பிடியிலிருந்து முழுவதுமாய் விடுதலையடைந்து மீண்டும் மனிதனானதில் மைதிலிக்கிருந்த பங்கு என்னவென்று சரோஜாவுக்குத் தெரியும். ஆகவே அவளும் சில வேளைகளில் அவர்களுக்கிடையில் புகுந்து சமரசம் செய்து வைப்பாள்.

அவர்கள் இருவருடைய நட்பும் காதலாய் மலர்ந்து மைதிலியைப் பார்க்காமல், அவளுடன் பேசாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்பதை சீனிவாசன் உணர ஆரம்பித்து அவளிடம் அவனுடைய உள்ளத்திலிருந்ததை கூறியபோது அவள் உடனே பதிலளிக்கவில்லை.

சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு, ‘எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா சீனி?’ என்றாள்.

சீனிவாசன் நாம கல்யாணம் பண்ணிக்கறதுக்கும் உங்க வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதுபோல் அவளைப் பார்த்தான். ‘Why do you say that?’

அவளிடமிருந்து பதில் வராமல் போகவே, ‘என்னை உனக்கு பிடிச்சிருக்கா மைதிலி. அத முதல சொல்லு.’ என்றான்.

‘பிடிச்சிருக்கு. ஆனா அது மட்டும் போறாதே சீனி.’

அவனுக்கு விளங்கவில்லை. ‘ஏன்? What else is needed?’

‘நான் எங்காத்துல ஒரே பொண்ணுன்னு உனக்கு தெரியுமில்லே?’

‘ஆமா, தெரியும். அதுக்கென்ன இப்போ?’

அப்போது அவள் கூறிய பதிலை இப்போது நினைத்துப் பார்த்தான். ஒருவேளை அதுதான் எடுத்து பேசாமல் இருக்கிறாளோ.. Ok. Why can’t we try once again? என்ற நினைப்புடன் மீண்டும் அவளுடைய செல் நம்பரை தவிர்த்து அவளுடைய வீட்டு எண்ணைச் சுழற்றினான்.

மறுமுனையில் ஒரு ஆண்குரல். அவளுடைய அப்பா பட்டாபி!

இப்ப என்ன பண்றது? டிஸ்கனெக்ட் பண்ணிரலாமா? பேசலாமா? என்ற குழப்பத்தில் ஒரு நொடி தவித்தான். பிறகு சரி, பேசுவோம் என்ற முடிவுடன். ‘நான் சீனி பேசறேன்.’ என்றான் தயக்கத்துடன்.

‘சொல்லு சீனி. நாந்தான் பட்டாபி. அவ வீட்ல இல்லையே. உன்ன பாக்கத்தான் வந்திருப்பான்னு நான் நினைச்சேன். நீ எங்கருந்து பேசறே?’

‘நான் தாதர்லருந்து பேசறேன் அங்கிள்.’

‘ஓ! தாதர்ல என்ன?’

கேள்வியின் பொருள் விளங்காமல், ‘என்ன அங்கிள்?’ என்றான்.

மறுமுனையில் இருந்து ஆயாசத்துடன் வந்தது குரல். ‘இல்ல சீனி, நீ தாதர்ல என்ன பண்றேன்னு கேட்டேன்.’

‘ஓ! அதுவா. அங்கிள்  டாட் இன்னைக்கி சென்னைக்கி போறார். அதனால நாங்க எல்லாரும் பிள்ளையார் கோவிலுக்கு வந்தோம். நேத்தைக்கி எனக்கும் மைதிலிக்கும் இடையில ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. அதான் நான் மைதிலிய பார்த்து பேசிட்டு ரெண்டு நா கழிச்சி வரேன்னு சொல்லிட்டு கார்லருந்து இறங்கி இங்க நிக்கறேன்.’

மறுமுனையில் சிறிது நேரம் ஒரு பதிலும் இல்லாமல் போனது. சீனிவாசன் குழப்பத்துடன் காதில் செல் ஃபோனை வைத்துக்கொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

‘சீனி.. ஆர் யு தேர்?’ என்ற குரல் அவன் காதில் விழுந்ததும் பதறிக்கொண்டு, ‘யெஸ் அங்கிள்.’ என்றான்.

‘நான் உங்கிட்ட ஒன்னு சொன்னா அதும்படி நடப்பியா?’ என்றார் மைதிலியின் தந்தை.

‘சொல்லுங்க அங்கிள்.’

‘Can you just leave Mythili alone for some time. Maybe a month or so?’

கேள்வியின் பொருள் விளங்காமல், ‘என்ன அங்கிள் சொல்றீங்க?’ என்றான் சீனிவாசன். What does it mean? மைதிலிய விட்டுருங்கறாரா? How is it possible? How can I leave her?

மனது கிடந்து அடித்துக்கொள்ள என்ன செய்வதென தெரியாமல் தவிப்புடன், ‘அங்கிள்.. Why do say that?’ என்றான்.

‘Look here சீனி.. மைதிலி எங்களுக்கு ஒரே பொண்ணு.. எங்களுக்குன்னு சொல்லிக்க வேற யாரும் இல்லை.. நீங்க ரெண்டு பேரும் நினைச்சிக்கிட்டிருக்கிறது நடக்கறதுக்கு சான்சே இல்லை.. நீ பேசாம உங்கப்பாவோட புறப்பட்டு சென்னைக்கு போயி ஒரு புது வாழ்க்கைய தொடங்கறதுதான் சரின்னு படுது..’

சீனிவாசனால் அதற்கு மேல் கேட்க முடியவில்லை.. அப்படியே கண்களிரண்டு இருட்டிக்கொண்டு வர நடைபாதையில் சரிந்து விழுந்தான்.

***

பரபரப்பான தாதர் பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த மைதிலி தன்னுடைய செல் ஃபோன் ஒலிப்பதைக் கேட்டு சாலையோரத்தில் நிறுத்தி எடுத்து பார்த்தாள்.

அப்பா!

‘என்னப்பா?’ என்றாள்.

‘நீ எங்க இருக்கே?’

‘தாதர் சர்க்கிள்ல இருக்கேன். ஏன், என்ன விஷயம்?’

‘சீனி தாதர்லருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஆத்துக்கு ஃபோன் பண்ணான் மைதிலி. நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன். திடீர்னு பேசறதி நிறுத்திட்டான். அப்புறம் அக்கம்பக்கத்துலருந்த ஆளுங்க பேசிக்கிட்டது மட்டும்தான் கேட்டுது. அவன் மயங்கி விழுந்துட்டான் நினைக்கிறேன்.’

என்னது? எங்கே? ஐயோ அப்பா.. எது நடக்கக் கூடாதுன்னு இத்தனை நாள் நினைச்சிக்கிட்டிருந்தேனோ அதுக்கு நீங்களே காரணமாயிட்டீங்களே.. நா இப்போ எங்கேன்னு போய் தேடுவேன்..

காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்தே நேற்று அவனிடம் கோபித்துக்கொண்டு கிளம்பி வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்து, நினைத்து மருகிப்போனாள். அவனை சென்று பார்த்தால்தான் நிம்மதியென்று நினைத்து கிளம்பலாம் என்று நினைத்தபோதுதான் அப்பா பிடித்துக்கொண்டார்.

‘என்ன மைதிலி. இன்னைக்கி ஞாயித்துக்கிழமை.. நான் சொன்னது நினைவிருக்கா இல்லையா?’

மைதிலி ஒன்றும் விளங்காமல் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொன்னீங்க?’

பட்டாபி திரும்பி தன் மனைவி ஜானகியைப் பார்த்தார். ‘பாத்தியாடி இவ சொல்றத?’

ஜானகி, ‘என்னண்ணா நீங்க. அவ வேணும்னா போய்ட்டு வரட்டுமே. அவா சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேலத்தான வரா.’ என்றாள்.

மைதிலி வியப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள். ‘என்னம்மா சொல்றே? சாயந்தரம் யார் வரா?’

‘பார்த்தியாடி தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி கேக்கறத?’ என்ற தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்ற? நெசமாவே தெரியலை..’

‘என்ன மைதிலி நீ. உன்ன பொண்ணு பாக்க வரான்னு அப்பா ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னாரே.. நீ கூட சரிங்கறா மாதிரி ஒன்னுமே சொல்லாம கிளம்பி போயிட்டே. சரி நீ சம்மதிச்சிட்டியாங்காட்டியும்னு நாங்க நினைச்சி ஜாதகப் பொருத்தம்லாம் பார்த்துட்டோம். எல்லா பொருத்தமும் அம்சமா இருக்குன்னு ஜோஸ்யர் சொன்னதுக்கப்புறம்தான் அவாள வாங்கோன்னு சொல்லிருக்கோம். நீ என்னடான்னா ஒன்னும் தெரியாத மாதிரி பேசறே?’

மைதிலிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. அன்றும் அப்பா கூறியதற்கு ஒன்றும் கூறாமல் சென்ற தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து எரிச்சலடைந்தாள். ஆனால் அதே சமயம், சரி இப்ப என்ன பொண் பாக்கத்தானே வறா.. வந்துட்டு போட்டும்.. அப்புறம் வேணான்னுட்டா போறது என்றும் நினைத்தாள்..

தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து.. நேரே போய் சீனியைப் பார்த்து பேசிவிட்டு திரும்பினாலும் மூன்று மணிக்குள் திரும்பிவிடலாம்.

‘சாரி டாட். நாந்தான் மறந்துட்டேன். மூனு மணிக்குள்ள வந்துருவேன். ப்ராமிஸ்.’ என்றாள் புன்னகையுடன்.

இந்த அளவுக்கு சம்மதித்தாளே என்றிருந்தது ஜானகிக்கு. எங்கே தன் கணவர் அவளை விடமாட்டேன் என்று தடுத்து பிரச்சினை செய்வாரோ என்று நினைத்து, ‘சரி மைதிலி. போய்ட்டு சீக்கிரம் வந்துரு..’

வீட்டை விட்டு வெளியே வந்ததும் சீனியின் செல் எண்ணை டயல் செய்தாள். Not reachable என்று வரவே அவனுடைய வீட்டுக்கு டயல் செய்தாள். யாரோ எடுத்து அவன் குடும்பத்துடன் தாதரிலிருந்த கோவிலுக்கு போயிருப்பதாக சொல்ல.. அவள் உடனே தாதரை நோக்கி வண்டியைச் செலுத்தினாள்.

ஞாயிற்றுக் கிழமை என்றுதான் பெயர். செம்பூரிலிருந்து தாதர் வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

அதற்குள் அவன் அவளை செல்லில் அழைக்க அவள் போக்குவரத்து நெரிசலில் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தை செலுத்துவதிலேயே குறியாயிருந்தாள்.

அதன் விளைவு.. இப்ப சீனியை எங்கேன்னு தேடறது தெரியலையே.. என்று தவியாய் தவித்தாள்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சின்னதாய் ஒரு மனிதக் கூட்டம் தெரிய, வாகனத்தை நடைபாதையில் ஏற்றி நிறுத்திவிட்டு காலிலிருந்த ஹை ஹீல்சை கையில் எடுத்துக் கொண்டு  கூட்டத்தை நோக்கி ஓடினாள், ‘Please god. Let it be Sreeni.’ என்ற பிரார்த்தனையுடன்..

தொடரும்


2 comments:

G.Ragavan said...

கத ரொம்ப ஓடிருச்சு....எல்லாத்தையும் படிச்சாச்சு..இனிமே வர்ர பகுதிகளுக்காவது முடிஞ்ச வரைக்கும் ஒழுங்கா பின்னூட்டம் போடனும்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

தொடர்ந்து படிச்சி உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க. எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.