8.6.06

சூரியன் 92

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலையில் எழுந்ததுமே வீட்டிற்கருகிலுள்ள உள்ளரங்க விளையாட்டு மையத்திற்கு பேட்மிண்டன் விளையாட செல்வது பிலிப் சுந்தரத்தின் வழக்கம்.

ஆனால் அன்று திங்கட்கிழமையாயிருந்தும் காலையில் எழுந்ததும் அவருக்கு தலைக்கு மேல் வேலையியிருநததால் சூடான காப்பி கோப்பையுடன் சோபாவில் அமர்ந்து தன்னருகில் கோப்புகளை பார்வையிடத் துவக்கினார்..

அன்று புதிய சேர்மன் பதவியேற்பது என்பதுடன் அன்று முழுவதும் காலை பத்து மணியிலிருந்து பகலுணவு வரை நடக்கவிருந்த ஆடிட் கமிட்டி, விஜிலன்ஸ் கமிட்டி, சேர்மன் கமிட்டி, மேனேஜ்மெண்ட் கமிட்டி  என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நடக்கவிருந்த எல்லா கமிட்டிகளிலும் பங்குகொள்ள வேண்டியிருந்தது.

வங்கியின் தலைமையலுவலகத்திலிருந்த இரண்டு சி.ஜி.எம்களில் சுந்தரலிங்கம் தாற்காலிக சேர்மனாக பதவியமர்த்தப்பட்டதிலிருந்து அவர் பங்குகொள்ள வேண்டியிருந்த கமிட்டிகளிலும் பிலிப் சுந்தரமே பங்குகொண்டு போர்ட் அங்கத்தினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது.

சமயோசிதமாக எல்லா கமிட்டிகளிலும் சப்மிட் செய்யவேண்டியிருந்த அறிக்கைகளின் நகலை அவருடைய செயலாளர் சனிக்கிழமையே  தனித்தனி கோப்பில் இட்டு அவருடைய வாகனத்தில் வைத்திருந்தார்.

முந்தைய நாள் இரவு நள்ளிரவுவரை புதிய சேர்மன் மாதவனுடன் இருக்க வேண்டியிருந்ததால் அன்று அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு கோப்பாக பார்த்து குறிப்பெடுப்பதில் மும்முரமானார்.

அன்று நடக்கவிருந்த கமிட்டிகளில் சீனியர் இயக்குனர்கள் பங்குகொள்ளவிருந்த ஆடிட், சேர்மன் மற்றும் மேனேஜ்மெண்ட் கமிட்டிகள் காரசாரமாக இருக்கும் என்பதை அவற்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கைகளே அவருக்கு உணர்த்தின.

சனிக்கிழமை இரவே நாடார் அவரிடம் ஆடிட் கமிட்டியில் அவர் சமீபத்தில் ரிசர்வ் வங்கிக்கு சென்று வந்த விபரத்தை ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்பேன் என்று பயமுறுத்தியிருந்தார். அன்றைய கூட்டத்தில் நிச்சயம் இதை அவர் எழுப்புவார். கமிட்டியில் ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவரும் அங்கத்தினராக இருந்தது வேறு தொல்லை. அவர் முன்னிலையில் வைத்து ஏதாவது தர்மசங்கடமான கேள்விகளை நாடாரோ அல்லது சோமசுந்தரமோ கேட்டுவிட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பதை மனதுக்குள் ஒத்திகைப் பார்த்துவிட்டு கோர்வையாக லாப்டாப்பில் குறித்தும் வைத்துக்கொண்டார்.

‘என்ன சார் ஏற்கனவே யோசிச்சி எளுதி வச்சிருக்கா மாதிரி தெரியுது? நீங்க சொல்றது உண்மைதானா இல்லே கட்டுக்கதையா?’ என்று நாடார் அதற்கும் ஒரு கேள்வி வைத்திருப்பார்.

நாடாரை சுமார் பத்து பன்னிரண்டு வருடங்களாகத்தான் அவருக்கு பழக்கம். சென்னையில் அவருடைய தேவாலயத்திற்குத்தான நாடாரும் வருவார். தேவாலய நிர்வாகக்குழுவில் அப்பங்கிலேயே செல்வந்தர் என்ற முறையில் அவருக்கு ஒரு பிரத்தியேக மதிப்பும் மரியாதையும் இருந்தது.

அப்போது பிலிப் சுந்தரம் பணியாற்றிய வங்கியில் துணை பொது மேலாளர் பதவியில் சென்னையிலிருந்த தலைமையகத்தில் இருந்தார். பணியில் சேர்ந்து இரண்டு வருடங்களே ஆகியிருந்தன.

அப்போதுதான் நாடார் சென்னையில் ஒரே நாளில் நகரம் முழுவதும் தன்னுடைய உணவகத்தின் கிளைகளைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவற்றினுடைய திறப்புவிழாவில் தேவாலய நிர்வாகக்குழுவில் அங்கத்தினராகவிருந்த எல்லோரையும் அழைத்திருந்ததால் அவரும் அவற்றில் பங்குகொள்ள சென்றிருந்தார். அப்போதுதான் நாடாருடைய சகோதரி மகன் செல்வத்தை சந்தித்தார்.

நாடாருடைய வர்த்தகத்தின் அபிரிதமான வளர்ச்சிக்கும் சென்னையில் ஒரே நேரத்தில் பல கிளைகளை துவக்கி சென்னைவாசிகள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியதற்கும் செல்வத்தின் உத்திதான் காரணம் என்பதைக் கேள்விப்பட்டதும் அவருக்கு அவன் மீது ஒரு தனி மதிப்பு ஏற்பட்டது.

செல்வம் பிலிப் சுந்தரத்தின் உத்தியோகத்தை பற்றி கேள்விப்பட்டதும் தங்களுடைய உணவகம் மேலும் விருத்திபெற கடனுதவி வேண்டி அவரையணுக அவரும் சென்னையிலிருந்த அவருடைய வங்கி கிளையொன்றிற்கு அவனை பரிந்துரைத்தார். அத்துடன் நாடாரின் சட்ட ஆஆலோசகர் மோகனுடைய அறிமுகமும் அவருக்கு கிடைத்தது.

அந்த நட்பு நாளடைவில் நாடாரிடமும் பரவியது. செல்வம் வழியாக பிலிப் சுந்தரம் செய்த உதவியைக் கேள்விப்பட்ட அவரை சந்திக்க விரும்பவே அவர்களுக்கிடையில் சில தினங்களுக்குப் பிறகு நடந்த சந்திப்பு நாளடைவில் நட்பாக மாறியது.

பிறகு நாடாரே அவருடைய வங்கியில் பங்குகளை வாங்கி இயக்குனராக சேர்ந்தார். அதன் பிறகுதான் அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த நட்பு வலுப்பெற்றது. தன்னுடைய நிறுவனம் வளர ஒருவகையில் பிலிப் சுந்தரமும் துணையாயிருந்ததை நினைவில்கொண்டிருந்த நாடார் அவருடைய அலுவலக வாழ்க்கையில் தனி அக்கறை செலுத்த துவங்கினார்.

ஆனால் கடந்த ஒரு வருட காலமாக இயக்குனர்களுக்கிடையில் வறட்டு கவுரவம் காரணமாக ஏற்பட்டிருந்த அபிப்பிராய வித்தியாசம், அதிகார போராட்டமும் அவருக்கும் நாடாருக்கும் இடையிலிருந்த நட்பை சற்று அதிகமாகவே பாதித்திருந்தது. அவர்களிருவரும் சார்ந்திருந்த சமூகத்தையே ஒட்டுமொத்தமாக சேதுமாதவன் இழிவுபடுத்துவதைக் கேள்விப்பட்ட பிலிப் பேசாமல் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வெளிநாட்டிலிருந்த தன்னுடைய மகளுடன் போய்விட்டாலென்ன என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார்.

அன்று எச்.ஆர் தலைவர் வந்தனாவும் உடல்நலமில்லாமல் இருந்ததால் அவர் பங்குகொள்ளவேண்டியிருந்த மேனேஜ்மெண்ட் கமிட்டியிலும் அவர் ஆஜராக வேண்டியிருந்தது. இக்கமிட்டியில்தான் வங்கியிலிருந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடந்த/நடக்கவிருந்த விசாரனைகள், செய்லபடுத்தப்பட்ட/படவிருந்த பணிநீக்கம், தண்டனை போன்றவைகளைக் குறித்து விவாதிக்கப்படும். அதன் சம்பந்தப்பட்ட கோப்புகளை சரிவர படிக்காமல் சென்று தவறான தகவல்களை கமிட்டியில் கூறிவிட்டால் அதற்காகவே ஏச்சும், சில சமயங்களில் எழுத்து மூலமான விளக்கமும் கூட அளிக்கவேண்டியிருக்கும். வந்தனா இருந்திருந்தால் அவர் நேரடியாக சம்பந்தப்படும் இதுபோன்ற விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்.

மேலும் அவர் அங்கத்தினர்களிடம் பேசும் அழகே அழகு. அவர் பேசும்போது யார் குறுக்கிட்டாலும் பயப்பட மாட்டார். கோபத்தை தன்னுடைய அழகான கண்களிலேயே காட்டி மடக்கிவிடுவார்.ஆகவே அவர் அறிக்கைகளை தாக்கல் செய்து பேசும்போது சேர்மன் உட்பட ஒருவரும் குறுக்கிடமாட்டார்கள்.ஆனால் தனக்கு அப்படியொரு சலுகைக் கிடைக்காது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அத்துடன் அவருக்கு கோபம் இயல்பாகவே எப்போதாவதுதான் ஏற்படும். அதுவே அவருடை பலஹீனமாக இருந்திருக்கிறது.

அன்றைய கமிட்டியில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த அறிக்கைகளில் ரவியின் மீது நடத்தப்படவேண்டியிருந்த விசாரனையை பற்றிய அறிக்கையும் இருந்ததைப் பார்த்தார் பிலிப்.

சனிக்கிழமை பகல் சேது மாதவன் தன்னிடம் அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லையென்றும் அவர் மீது ஏன் போலீசில் புகார் செய்யவில்லையென்றும் தன்னை வினவியதை நினைவு கூர்ந்தார்.

‘அன்னைக்கே நாம கொடுத்த விளக்கம் அவருக்கு அவ்வளவா திருப்தியில்லை. அதனால டைரக்டர்ங்க முன்னால வேணும்னே இதப்பத்தி பேசாம இருக்க மாட்டார்.’

அத்துடன் ரவியைக் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யவேண்டும் என்பதில் சேதுமாதவன் குறியாயிருந்தார் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆனால் ரவிக்கு எதிராக நடந்திருந்த இன்வெஸ்டிகேஷன் அறிக்கையைப் படித்ததிலிருந்து அவர் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரால் ஏமாற்றப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது.

அத்துடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேதுமாதவனுடன் தொடர்புடையவராக இருப்பாரோ என்றும் தோன்றுவதாக விசாரிக்கச் சென்றவர் அவருக்கு தனிப்பட்டமுறையில் சமர்பித்திருந்த பிரத்தியேக அறிக்கையை வாசித்தபோது  தோன்றியது.

இருப்பினும் தகுந்த ஆதாரமில்லாமல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மீது களங்கம் விளைவிப்பது அத்தனை எளிதல்ல என்பதுடன் விவேகமான செயலாகாது என்பதால் அதைக்குறித்து சம்பந்தப்பட்ட விசாரனை அதிகாரியை சந்தித்து பேசுவதென தீர்மானித்தார்.

ரவியின் கிளையில் அவர் மேலாளராக பொறுப்பேற்றிருந்த நாள்முதல் அவர் வழங்கியிருந்த எல்லா கடன்களைக் குறித்தும் ஆராயவேண்டும் என்று சேதுமாதவன் அன்று கமிட்டிக்கு சமர்ப்பிக்கவிருந்த அறிக்கையில் எழுதியிருந்ததையும் அதை ஆமோதிப்பதுபோல் எச்ஆர் இலாக்கா தலைவர் வந்தனா பரிந்துரைத்திருந்ததையும் பார்த்தார் பிலிப்.

‘என்ன அக்கிரமம்? இவருக்கும் ரவிக்கும் இடையில் ஏதோ தனிப்பட்ட மனக்கசப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சாதாரண முதன்மை மேலாளர் விஷயத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஏன் இத்தனை குரோதம் காட்டவேண்டும்? இதற்கு வந்தனாவும் துணைசென்றிருக்கிறாரே’ என்ற வேதனையுடன் இதை எப்படி தவிர்ப்பது என்பதைக் குறித்து தீவிரமாக ஆலோசித்து அதை எப்படியெல்லாம் முறியடிப்பதென குறித்துக்கொண்டார்.

ரவி சற்று முரடனென்பதும் அடிக்கடி கோபப்பட்டு எல்லோரையும் அவமானப்படுத்துபவன் என்றும் கேள்விப்பட்டிருக்கிறார்.ஆனால் தில்லுமுல்லு செய்பவன் என்று இதுவரை யாரும் அவனைப் பற்றி அவரிடம் கூறியதில்லை.

அவரும் எத்தனையோ கிளைகளில் மேலாளராக இருந்தவர்தான்.

ஒரு கிளையில் மேலாளராக இருக்கும் நேரத்தில் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுமே சரியானதாக அமைந்துவிடுவதில்லை. ஒவ்வொரு முடிவும் எடுக்கப்படும் சூழ்நிலை, அதை எடுக்க தூண்டும் சான்றுகள் இவற்றைப் பொருத்துதான் நாம் எடுக்கும் முடிவும் அமையும்.

சில சமயங்களில் நாம் முடிவெடுக்க காரணமாயிருந்த சூழலும் சான்றுகளும் தவறானதாகவோ அல்லது அந்த முடிவெடுக்க துணையாயிருந்த நபர்களோ தவறாக வழிநடத்தியிருக்கக்கூடிய நேரத்தில் அந்த முடிவும் தவறாக வாய்ப்பிருக்கிறது என்று பிலிப் சுந்தரத்திற்கு நன்றாகவே தெரியும்.

அவருடைய இருபதாண்டு கால வங்கி மேலாளர் அனுபவத்தில் அவர் எடுத்த எத்தனையோ முடிவுகள் தப்பிப்போயிருக்கின்றன.ஆனால் அவற்றால் வங்கிக்கு பெரிதாக இழப்பு ஏற்படாதிருந்தது அவருடைய நல்ல நேரம்தான். இல்லையென்றால் அவருக்கும் இந்த ரவிக்கு ஏற்பட்ட அதே நிலமை ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தார்..

அதுபோலத்தானே ரவியும்.. அவர் எடுத்த சில முடிவுகள் தவறாக போயிருக்கின்றன..

அவருடைய துரதிர்ஷ்டம் அவரெடுத்த முடிவால் வங்கிக்கு இரண்டு கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுவிட்டது..

It might not be his fault.. He might have been cheated..

கோப்பில் மூழ்கியிருந்தவரை அருகிலிருந்த செல் ஃபோன் அழைக்கவே யாரென்று பார்த்தார்.

ரவி!

‘என்ன ரவி? இந்த நேரத்துல?’

‘சார் இன்னைக்கி பிராஞ்சுக்கு நானும் மஞ்சுவும் போலாம்னிருக்கோம்.. எனக்கு தேவைப்படற டாக்குமெண்ட்செல்லாம் குடுக்கச் சொல்லி நீங்க கொஞ்சம் சொன்னா...’

அவரையுமறியாமல் அவருடைய உதடுகளில் ஒரு அனுதாபப் புன்னகை.. ‘ஓக்கே.. நா கூப்ட்டு சொல்றேன்.’ என்றவாறு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை 9.00 மணி..

பதற்றத்துடன் கோப்புகளை அடுக்கி வைத்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தார்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

'நல்ல மணம் வாழ்க;நாடு போற்ற வாழ்க'[பிலிப் சுந்தரம்]
சேதுவின் ஆண்ட்டிகிளைமேக்ஸ் ஆரம்பம் ஆகின்றது...........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நீங்க சொல்றது நிஜம்தான். நம்ம மனசுல களங்கம் இல்லாம எந்த காரியத்துல இறங்கினாலும் வெற்றிதான்..