13.6.06

சூரியன் 94

ரம்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாக நாட்கள் இருந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுப்பு எடுத்தால் என்ன என்று ஆலோசித்தார் பாபு சுரேஷ்.

ஆனால் சனிக்கிழமை மாலை வங்கியின் இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய காட் ஃபாதராக இருந்தவருமான டாக்டர் சோமசுந்தரம் தன்னிடம் இன்று தலைமையலுவலகத்திற்கு வரச்சொல்லி பணித்திருந்தது நினைவுக்கு வர விடுப்பு எடுக்கும் எண்ணத்தை ஒரு நாளைக்கு தள்ளி வைத்தார்.

ஏற்கனவே திருமண மண்டபம், திருமண ஜவுளி, நகை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்துவிட்டிருந்த நிலையில் இன்னும் திருமணத்திற்கு பரிசாக அளிக்க வேண்டிய மற்ற சீதனப் பொருட்களை சேகரிக்கும் வேலை மட்டுமே மீதமிருந்தது. அதற்கு அதிகபட்சம் நான்கைந்து நாட்கள் போதும் என்று தோன்றியது.

ஆனால் முந்தைய நாள் இரவு தன்னுடைய மனைவி மற்றும் மகளிடம் இன்று ஷாப்பிங் போகலாம் என்று கூறியிருந்தது நினைவுக்கு வரவே காலையில் எழுந்ததும் தன் மனைவியை தேடிக்கொண்டு சமையலறைக்குச் சென்றார்.

அவருக்கு காலையில் டீ, காப்பி குடிக்கும் பழக்கம் கடந்த பல வருடங்களாகவே இருந்ததில்லை. காலையில் எழுந்ததும் அன்றைய தினசரிகளை வாசித்து முடிக்கவே எட்டு மணியாகிவிடும். உடற்பயிற்சி செய்வதோ நடக்க செல்வதோ தேவையில்லாத சமாச்சாரம் என்பது அவருடைய முடிவு.

‘என்ன மிஸ்டர் பாபு? Just look at your senior colleagues. அவங்களோட கம்பேர் பண்ணா you look over weight. நீங்க காரியர் லேடர்ல இன்னும் மேல போகணும்னா ஒங்க பாடிய
ட்ரிம்மா வச்சிக்க முயற்சி செய்யணும்.’ என்பார் முந்தைய சேர்மன் அவரை காணும்போதெல்லாம்.

அப்போதெல்லாம் அடுத்த சில வாரங்கள் படுசிரத்தையுடன் உடற்பயிற்சி செய்வார், பேருக்கு ஒரு பத்து நிமிடம் அவருடைய வீட்டைச் சுற்றி நடப்பார். அதற்குள்ளாகவே களைத்துப்போய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து மூச்சு விடமுடியாமல் திணறுவார்.

அவர் படும்பாட்டை மறைவில் நின்று அவருடைய மனைவி சுசீந்தரா பார்ப்பாளே தவிர அருகில் சென்று என்ன ஏது என்று விசாரிக்க மாட்டாள். அவராகவே அடுத்த சில நிமிடங்களில் ஆசுவாசமடைந்து எழுந்து குளிக்கச் செல்வார்.

‘சாப்பிடறதிலயும் ஒரு கட்டுப்பாடு இல்ல.. குடிக்கறதயும் விடமாட்டார். அப்புறம் எப்படி ஒடம்பு குறையும்?’ என்று முனுமுனுத்தவாறு சுசீந்தரா தன்னுடைய வேலையைக் கவனிக்கச் செல்வாள்.

இது அதிக பட்சம் ஒரு வாரம் நடக்கும். பிறகு மறுபடியும் பழைய குருடி கதவத் திறடி என்பதுபோல் உடற்பயிற்சியும், நடப்பதும் அவருக்கு மறந்து போய்விடும். மீண்டும் சேர்மனை சந்திக்க நேரும்போது ‘ஒடம்பு கொஞ்சம் சரியில்லை சார். அதான் நடக்க போறதில்லை.’ என்று சமாளிப்பார்.

‘Exercise பண்றதிலயும் walking போறதிலயும் ஒரு passion வேணும் மிஸ்டர் பாபு. Then only you would enjoy that. Otherwise it would look like a big burden. In my estimate you should be overweight at least by twenty kilos. That should be knocked off. The earlier the better..’ என்று சேர்மன் அடிக்கும் லெக்சர் அவர் மண்டைக்குள் ஏறாது. ஆனால் அறுபத்திரண்டு வயதிலும் நாற்பது வயது இளைஞரைப் போன்று தோற்றமளித்த அவரைப் பார்த்து பெருமூச்சு விடுவார்.

ஆனாலும் சேர்மன் அறையிலிருந்து வெளியேறியதுமே அவருடைய அறிவுரைய மறந்துவிடுவார். தன் போக்கிலேயே செல்ல ஆரம்பித்துவிடுவார்.

அதற்கு வேறு ஒரு காரணத்தையும் தனக்குத்தானே கற்பித்துக்கொள்வார். ‘என்னுடைய குடும்ப வாழ்க்கையிலருக்கற கசப்புத்தான் சார் நா இப்படி இருக்கறதுக்கு காரணம்.. I have a miserable wife who can’t understand what I want. My daughter is worse. She won’t bother about me at all. இப்படியிருக்கற சூழ்நிலையில what can I do?  I seek relief in food and liquor. அதான் சார் காரணம்..’ என்பார் தன்னுடைய சக அதிகாரிகளிடம்.

ஏதோ நினைவில் ஹாலைக் கடந்து வாசல்வரை வந்துவிட்டதை உணர்ந்த பாபு சுரேஷ் திரும்பி மனைவியைத் தேடிக்கொண்டு சென்றார்.

சமையலறையில் மனைவியைக் காணாமல் பின்புற வாசலை நோக்கி நடந்தவர், ‘டாட்.’ என்ற மகளின் குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.

‘டாட் அம்மா என் ரூம்லருக்காங்க. நீங்க நேத்து சொன்னீங்களே.. அதான் காலைல எழுந்ததுமே அம்மாவும் நானுமா ஒக்காந்து லிஸ்ட் ப்ரிப்பேர் செஞ்சிக்கிட்டிருக்கோம்.’

பாபு, ‘அது விஷயமாத்தான் அம்மாக் கிட்ட பேசணும்னு தேடிக்கிட்டிருக்கேன். இதோ வரேன்.’ என்றவாறு மாடியை நோக்கி விரைந்தார்.

‘என்னங்க.. ஒங்க ப்ளான்ல ஏதாச்சும் சேஞ்சா..? நினைச்சேன்..’ என்ற மனைவியை புன்னகையுடன் பார்த்தார்.

‘ஆமா சுசீ.. இன்னைக்கி நம்ம புது சேர்மர் ஜாய்ன் பண்றத மறந்தே போய்ட்டேன். இன்னைக்கி எச்.ஓவுக்கு கண்டிப்பா போயாவணும். எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங் இருக்கும்னு சனிக்கிழமையே டாக்டர் சொல்லியிருந்தார். அதனால...’

ரம்யா இடைமறித்தாள். ‘It’s ok டாட். நீங்க ஆஃபீஸ்க்கு போய்ட்டு கார திருப்பி அனுப்புங்க. நானும் அம்மாவும் போய் புவனாவ அழைச்சிக்கிட்டு பாண்டி பஜார், டி.நகர்ல பர்ச்சேஸ் பண்ண வேண்டியத பண்ணிட்டு சாயந்திரம் மூனு மணிக்குள்ள கார திருப்பி அனுப்பிச்சிடறோம். அப்புறம் நீங்க வந்ததும் மறுபடியும் போலாம்.’

பாபுவுக்கு அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது. ‘சரிம்மா.. அப்படியே செய்ங்க.. ஆனா கார திருப்பியனுப்ப வேணாம்.. நா என் வேல முடிஞ்சதும் பாங்க் கார்ல வந்துடறேன். யூ கேர்ரி ஆன் வித் யுவர் ஷாப்பிங். நான் வீட்டுக்கு வந்ததும் ஒங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு ஒங்களோட வந்து ஜாய்ன் பண்ணிக்கறேன். என்ன சொல்றீங்க?’

சுசீந்தரா வியப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். இதே பழைய கணவராயிருந்தால், ‘என்னெ எதுக்குடி இந்த சில்லறை விஷயத்துக்கெல்லாம் டிஸ்டர்ப் பண்றீங்க? ஒரு கால் டாக்சிய கூப்ட்டுக்கிட்டு போய் தொலைய வேண்டியதுதானெ? ஒரு பேங்க்ல ஜி.எம் பொசிஷன்ல இருக்கறவன் ஒங்க பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி சுத்திக்கிட்டிருக்கணுமா?’ என்று எரிந்து விழுந்திருப்பாரே..

‘என்ன சூசி அப்படி பாக்கறே? பழைய ஞாபகமா?’

சுசீந்தரா திடுக்கிட்டு அவரை பார்த்தாள். பிறகு அவருடைய கேள்வியின் பொருள் புரிந்து தலையைக் குனிந்துக்கொண்டு புன்னகை செய்தவாறு தலையை அசைத்தாள் ‘ஆமாம்’ என்று.

ரம்யா இருவரையும் மாறி, மாறி பார்த்து புன்னகைத்தாள். இந்த மாதிரியே இவங்க ரெண்டு பேரும் இருந்துட்டா எவ்வளவு நல்லாருக்கும் என்று நினைத்தாள்.

‘ஓக்கே டாட்.. நீங்க கிளம்புங்க.. ஒங்க கார் வர்றதுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ரெடியாயிடறோம்.’

‘கேஷ் வேணுமா இல்ல க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணிக்கறயா?’ என்றார் பாபு மகளைப் பார்த்து.

‘க்ரெடிட் கார்டே யூஸ் பண்ணிக்கறேம்பா.. ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்குமே..’ என்றாள் ரம்யா புன்னகையுடன்.

‘அதுவும் சரிதான். ஸ்பெண்ட் பண்றதுக்கு ஃப்ரீயா ஒரு டீட்டெய்ல்ட் லிஸ்ட்டும் கிடைக்குமே..’ என்ற பாபு சுரேஷ்.. இதற்காகவே லஞ்சமாகவும், அன்பளிப்பாகவும் கடந்த சில வருடங்களாக திரட்டியதை ரொக்கமாகவே லாக்கரில் சேர்த்துவைத்திருந்தது நினைவுக்கு வர
‘கணக்குல வராத கையிலருக்கற இந்த கேஷ எப்படி டிஸ்போஸ் பண்றது?’ என்று மனதுக்குள் நினைத்தவாறு மகளுடைய அறையையொட்டியிருந்த தன்னுடைய அறைக்குள் நுழைந்தார். அதை மகளிடமோ மனைவியிடமோ கூறவா முடியும்?

குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்படும் நேரத்தில் அவருடைய செல் ஃபோன் ஒலிக்க பதறிக்கொண்டு எடுத்து, ‘குட்மார்னிங் டாக்டர்’ என்றார்.

‘குட் மார்னிங் மிஸ்டர் பாபு.. நான் சனிக்கிழமை சொன்னது ஞாபகத்தில் இருக்குல்ல?’ என்று எதிர்முனையிலிருந்த வந்த டாக்டர் சோமசுந்தரத்தின் அதிகார குரல் அவரை கதிகலங்க வைத்தது.

இருப்பினும் அதை மறைத்துக்கொண்டு, ‘இருக்கு சார். நான் ஹெட் ஆஃபீசுக்கு புறப்பட்டுக்கிட்டு இருக்கேன்.’ என்றார்.

‘குட்.. I am told that senior executives at HO are arranging a private reception to Chairman in the lobby. I want you to be there..’

‘Yes Sir.’

‘நீங்க எங்க இங்கன்னு சி.ஜி.எம் மோ இல்ல யாராவதோ கேட்டா நான் சொன்னேன்னு சொல்லுங்க.. ஒங்க ரிக்வெஸ்ட்ட பத்தி நான் ஏற்கனவே எம்.டி கிட்ட டிஸ்கஸ் பண்ணியாச்சு. அவரும் சரின்னு சொல்லிட்டார். அவர் வாய்ஸ்ல கொஞ்சமா லேசா ஒரு ரிலக்டன்ஸ் தெரிஞ்சது. ஏன்னு தெரியலை. நீங்க இன்னைக்கி நேரம் கிடைக்கறப்போ அவர மீட் பண்ணி கன்வின்ஸ் பண்ணணும். நா சொல்றது ஒங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நா சனிக்கிழமை சொன்ன ரிக்ரூட்மெண்ட் விஷயம் அவருக்குக் கூட தெரியக்கூடாது. Keep it to yourself. ஒங்கள மிஸ். வந்தனாவோட போஸ்ட்ல நியமிக்கப் போறோம்னு மட்டுந்தான் அவர்கிட்ட சொல்லி வச்சிருக்கேன்.’ என்ற சோமசுந்தரம்  ‘ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?’ என்று வினவ, ‘என்ன சொல்லுங்க சார்.’ என்றார்  பாபு சுரேஷ்.

‘நாம போட்டிருக்கற ப்ளானுக்கு சாதகமா நேத்து மிஸ் வந்தனா திடீர்னு சீரியசாகி ஆஸ்பட்ல அட்மிட் ஆயிருக்காங்க. ஒங்க கிட்ட யாரும் சொல்லலையா?’

அப்படியா என்று பாபு சுரேஷ் அதிர்ச்சியடைந்தார்.

‘ஒங்களுக்குத்தான் எந்த லெவல்லயும் ஃப்ரெண்ட்ஸ் இல்லையே.. ஒங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்க போவுது? ஆனா இனிமேலும் இந்த மாதிரி இருந்தா சரிவராது மிஸ்டர் பாபு. You should change your attitude. If you want to succeed at HO you should start making friends.. Do you understand what I am trying to say?’

‘Yes Sir. I understand.’

‘Good.. We will meet later in the day. இன்னைக்கி நடக்க இருக்கற மேனேஜ்மெண்ட் கமிட்டியிலயே ஒங்க போஸ்ட்டிங் முடிவாயிரும்னு நினைக்கிறேன்.. ஆல் தி பெஸ்ட்’

அவருடைய பதிலுக்கு காத்திராமல் இணைப்பு மறுமுனையில் துண்டிக்கப்பட சிறிது நேரம் செல் ஃபோனையே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தார் பாபு சுரேஷ்..

இரண்டு தினங்களுக்கு முன்பு கிளை மேலாளராக இருந்தது போதும், தலைமையலுவலகத்துக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து சோமசுந்தரத்தை தொடர்புகொண்டதென்னவோ உண்மைதான். ஆனால் இப்போது இந்த மாற்றம் தேவைதானா என்று அவருக்கு தோன்றியது..

அந்த ரெக்ரூட்மெண்ட் விவகாரம் தன்னை சிக்கலில் மாட்டிவிடுமோ என்ற அச்சமும் அவருள் எழுந்தது..


தொடரும்..




2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

'என்னமோ நடக்குது உலகத்திலே
மர்மமாய் இருக்குது.....'

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சிலதெல்லாம் மர்மமா இருந்தாத்தான் லைஃப்ல ஒரு த்ரில் இருக்கும்.

எல்லாமே வெட்ட வெளிச்சமாய்ட்டா ஒரு க்யூரியாசிட்டியும் இருக்காதே..

எந்த ஒரு நிறுவனத்துலயும் மேல் மட்டத்துல நடக்கறது மர்மமாத்தான் இருக்கும்.