14.6.06

சூரியன் 95

சென்னை செண்ட்ரலில் இறங்கியதுமே இப்படியொரு பிரச்சினை காத்திருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை நளினி.

‘அவனெ வரச்சொல்லியிருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்ல வேணாம் இந்த மனுஷன்? ஒரு ஸ்டேஷனுக்கு முன்னாலயே எறங்கியிருப்பேனே?’ என்று நினைத்தவாறு வாசலை நோக்கி எரிச்சலுடன் நடந்தாள்..

கூட்ட நெரிசலில் வேகமாய் நடப்பதும் சிரமமாயிருந்தது. போறாததற்கு முந்தைய வண்டிகளில் வந்திறங்கியிருந்த பார்சல்களும் ப்ளாட்பாரத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தால் கரணம் தப்பினால் மரணம் என்பதுபோலிருந்தது.

தனக்குப் பின்னால் நந்து ஓடிவருவதை ஓரக்கண்ணால் பார்த்த நளினி ரயில் நிலையத்தின் தெற்கு வாயிலிலிருந்த சரவணபவன் உணவகத்தை அடைந்ததும் நின்று அவன் வரட்டும் என்று காத்திருந்தாள்.

அவளையடைந்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நின்றவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது நளினிக்கு. அவனுக்கு பின்னால் அந்த தாடிக்கார முகம் தெரிகிறதா என்று பார்த்தாள்.. காணவில்லை..

‘எந்துனா.. அவனெ இங்கோட்டு வராம் பறஞ்சது..?’ என்றாள் எரிச்சலுடன்..

நந்து எப்படி இவளுக்கு சொல்லி விளக்குவதென நினைத்துக்கொண்டிருந்தபோதே அவனுடைய செல் ஃபோன் ஒலிக்க எடுத்து, ‘எந்தாடோ.. நீ எவ்விடயா?’ என்றான்.

எதிர் முனையில் முரளி, ‘நந்து, நீ நளினிய கூட்டிக்கிட்டு கோடம்பாக்கம் போ.. ப்ரீ பெய்ட் ஆட்டோவில லிபர்ட்டின்னு சொல்லு.. ஒரு சீட்டு எழுதி தருவான்.. லிபர்ட்டிங்கறது ஒரு தியேட்டர். அதுக்கு பக்கத்துலதான் ஒங்களுக்கு புக் பண்ண ஹோட்டல் இருக்கு. லிபர்ட்டி பார்க்குன்னு பேரு.. நீங்க ரெண்டு பேரும் போய் செக் இன் செய்துட்டு ஒரு ஒன்பது மணிக்கு மேல என்னெ கூப்டு.. அப்போ பேசலாம்..’ என்று கூறிவிட்டு இனைப்பை துண்டித்தான்.

‘யாரு.. அவந்தானே?’ என்ற நளினியைப் பார்த்தான் நந்து..

அவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘அதே.. பட்செ அவன் போயி.. நாம ரெண்டு பேரும் போய் செக் இன் பண்லாம் வா..’ என்று இரண்டு பெட்டிகளையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.

நளினி அவனுடைய நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பின்னால் ஓடினாள். ‘நந்து.. நிக்கு.. அயாளு ஃபிக்ஸ் செஞ்ச ரூமுக்கு ஞான் வருனில்லா.’ என்றாள்.

நந்து நின்று திரும்பி அவளைப் பார்த்தான். கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும்.. இந்த பயணம் இருவர் இடையிலும் இருந்த பிணக்கை தீர்க்க உதவுமே என்றுதானே அவளையும் அழைத்து வந்தான்..?

‘நளினி.. பி ரீசனபிள்.. இந்த நேரத்துல வேற எங்க போயி ரூம தேடறது? அவன் ஏற்பாடு செஞ்சாங்கறதுனால எதுக்கு ரூம் வேணாங்கற? போய் பார்ப்போம்.. பிடிக்கலையா? ஒரு நாள் தங்கிட்டு வேற ரூம பார்த்து போலாமே..?’

நளினிக்கு தான் செய்வது சரியில்லை என்று தெரிந்துதானிருந்தது. இருப்பினும் அந்த முரளிதரனுடைய தொடர்பு நந்துவை மீண்டும் பாதிக்குமே என்றுதான் அவள் அப்படி நடந்துக்கொண்டாள்..

சரி.. நந்து சொல்றதும் சரிதான்.. இப்ப பெட்டியையும் தூக்கிக்கிட்டு எங்க போய் தேடறது?

எதிரில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த நந்துவைப் பார்த்தாள். எதுக்கு பாவம் இவர போயி டார்ச்சர் பண்ணிக்கிட்டு..

‘சரி வாங்க.. அயாள கண்டதும் எண்டெ மூடே போயி.. சாரி நந்து’ என்றவாறு அவனிடமிருந்த ஒரு பெட்டியை வாங்க முயற்சித்தாள்..

‘வேணாம்.. இந்த கூட்டத்துல ஒன்னால பெட்டிய தூக்கிக்கிட்டு நடக்க முடியாது. வாசல்லருக்கற ப்ரீ பெய்ட் ஆட்டோவிலயே போயிரலாம்.. இங்கருந்து பக்கத்துலதானாம்..’ என்றவாறு நந்தக்குமார் வேகமாக முன்னே நடக்க நளினி அவனைப் பிந்தொடர்ந்தாள்..

அடுத்த அரைமணியில் அவர்களுக்கென முன்பதிவு செய்திருந்த அறைக்குள் நுழைந்து, ‘கொழப்பல்லல்லோ.. இது மதி நந்து.. வேற எங்கயும் ஷிப்ட் பண்ண வேணாம்..’ என்றவாறு அவனைப் பார்த்து நளினி வீசிய புன்னகையில் ஒரு கணம் தன்னை மறந்து நின்றான் நந்து..

***

ராசம்மாள் குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய சூடான மதுரை காப்பி தயாராக இருந்ததை பார்த்தாள்.. 'என்னம்மா வரும்போதே நம்ம ஊர் காப்பித்தூளையும் எடுத்துக்கிட்டே வந்துட்டியா?'

‘பின்ன? இந்த ஊர் காப்பிய மனுசன் குடிப்பானா? இந்தா.. நீ குடிச்சிட்டு ஒங்கப்பாவுக்கு கொண்டு கொடு..’ என்ற ராசாத்தியம்மாள்.. ‘ஆமா, வீட்ல ஒன்னுமே இல்லையே.. குடும்பம் நடத்திக்கிட்டிருந்த வீடுதானே இது..?’ என்றாள் ராசம்மாள் மகளைப் பார்த்து.

குடும்பமா?

தான் ராசேந்திரனுடன் நடத்தியது குடும்ப வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அவளுக்கு திருமணம் முடிந்து சென்னைக்கு வந்த நேரத்திலேயே அவளுடைய அவளுக்கென வாங்கி வைத்திருந்த வீட்டில்தான் குடியேறினாள். ஆரம்பத்திலிருந்தே ராசேந்திரனுடைய போக்கில் அவள் மீதிருந்த சொத்து பத்துகளைப் பற்றிய சிந்தனைதான் மேலோங்கி இருந்ததை அவள் உணர்ந்தாள்.

‘இங்க பார் ராசி.. நீ குடும்பத்துல ஒரே பொண்ணு.. ஒங்கப்பாவுக்கு இருக்கற பிசினச பத்தி ஒனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு தெரியல.. ஆனா எங்கப்பா சொல்றத வச்சி பாக்கும்போது அத இப்ப நடத்திக்கிட்டிருக்கறா மாதிரி நடத்தாம பெரிய அளவில நடத்துனா நல்லதுன்னு நெனக்கேன். ஒங்கப்பாவுக்கும் சரி அந்த செல்வத்துக்கும் சரி படிப்பறிவு போறாது.. வெறும் வொர்க் எக்ஸ்பிரீயன்ஸ வச்சிக்கிட்டு இத நடத்த முடியாது.. அதனால பேசாம ஒங்கப்பா கிட்ட சொல்லி என்னை கம்பெனிக்கு எம்.டி யா ஆக்கிரச் சொல்லு.. மத்தத நா பாத்துக்கறேன்.’ என்றான் முதல் வாரத்திலேயே..

ராசம்மாளோ, ‘ஏய்.. ஒனக்கு இப்படியொரு ராசா மாதிரி மாப்பிள்ளையாடி.. கொடுத்து வச்சவடி நீ.. சும்மா சிவக்குமாராட்டம் இருக்கார்..’ என்று அவளுடைய கல்லூரி தோழிகள் புகழ்ந்துரைத்த ராசேந்திரனின் உருவத்திலும் நிறத்திலும் மனதைப் பறிகொடுத்திருந்தாள்.

ஆகவே அவன் கேட்டதை அப்படியே அவளுடைய தந்தையிடம் சென்று கூறியதுடன் நின்றுவிடாமல், ‘அவர் கேக்கறா மாதிரி நீங்க செஞ்சிதான் ஆவணும்..’ என்று பிடிவாதம் பிடித்தாள்..

‘பாத்தியாலே.. இந்த அக்கிரமத்த.. வீட்டுக்குள்ளாற நொளஞ்சி முளுசா.. முப்பது நாள் ஆவலே.. அவன் கேக்கறதா பாத்தியாலே.. எம்.டி. போஸ்ட்டுல்ல வேணுமாம்? வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம்னாப்ல.. இந்த மூதிய என்னத்த சொல்றது..? அவன் தோல் கலர் இல்லேல்லே அவளுக்கு தெரியுது..?’ என்று நாடார் செல்வத்திடம் சொல்லி முறையிடுவதை நேரிலேயே கேட்டுவிட்ட ராசேந்திரன் செல்வத்தை ஒழித்துக்கட்டினால்தான் தன்னால் தன் மாமனாருடைய நிறுவனத்தை வளைத்துப் போட முடியும் என்ற முடிவுக்கு வந்தான்.

ராசம்மாளின் நிர்பந்தத்தை தவிர்க்க முடியாமல் நாடார் தன் மருமகனை தன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்க அடுத்த சில மாதங்களிலேயே செல்வத்தின் மீது வீண் பழி சுமத்தி அவனை நிறுவனத்திலிருந்தே விலக்கினான் ராசேந்திரன்.

‘பாத்தியாம்மா ஒன் புருசன் லக்ஷணத்த? இதுக்குத்தான் படிச்சி, படிச்சி சொன்னேன்.. நீ கேக்கல.. இப்ப பார்.. நம்ம செல்வத்த கம்பெனியிலருந்து வெளியேத்தறதுக்கு ஒம் மாப்பிள்ளையே வேலைக்கு கொண்டு வந்து வச்ச பசங்களோட சேர்ந்து நாடகமாடியிருக்கார்ம்மா.. செல்வம் யாரு? அவன் இந்த கம்பெனிக்கு ஒளச்சது கொஞ்சமா நஞ்சமா? யாரு, யாரம்மா வேலைய விட்டு அனுப்பறது?’ என்று தன் முன்வந்து அங்கலாய்த்த தன் தந்தையுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமல் அவளும் சேர்ந்துக்கொண்டு செல்வத்தை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியதை நினைத்துப் பார்த்தாள்.

நாசமாகிப்போன தன்னுடைய வாழ்க்கையை இதோ இப்போது மீட்கப்போவதும் செல்வந்தானே..  

‘ஏய் என்னத்த யோசிச்சிக்கிட்டு நிக்கே.. காப்பிய கொண்டு குடு..’

திடுக்கிட்டு நினைவுகளிலிருந்து மீண்ட ராசம்மாள், ‘தோ.. போறேம்மா.. நம்ம மந்திரண்ணாவ அனுப்பி வீட்டுக்கு வேண்டியத வாங்க சொல்லும்மா.. இங்க ரெடிமேட் தோசை மாவு கிடைக்கும்.. வாங்கி அப்படியே தோசை சுட்டுறலாம்.. நான் வாங்கி வரச் சொல்றேன்.. நீ போயி குளிச்சிட்டு வா..’ என்றவாறு ஹாலில் அமர்ந்து தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்த தன் தந்தையை நோக்கி நகர்ந்தாள்..

‘ஆமாய்யா... அந்த டாக்டர் பய எம்டன்னா நா அதுக்கு மேலன்னு ஒங்களுக்கு தெரியாதா என்ன? நீங்க பாட்டுக்கு வந்து சேருங்க..’

‘அப்பா காப்பி.. வந்ததுலருந்து அப்படி யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க?’

தொலைப்பேசியின் ஒலிவாங்கியை மூடியவாறு, ‘என்னம்மா?’ என்று கேட்ட நாடாரை பார்த்து, ‘காப்பி’ என்று கோப்பையை சுட்டிக்காட்டினாள்.

‘சரிய்யா.. நீரு ஆடிட் கமிட்டியில இருக்கீருல்ல? அங்க வச்சி பாப்போம்..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த தந்தையைப் பார்த்தாள்.

‘என்னப்பா நீங்க வக்கீல் வீட்டுக்கு வரலையா?’

காப்பியை உறிஞ்சியவாறே தன் மகளைப் பார்த்தார் நாடார். ‘இல்லம்மா.. இன்னைக்கித்தான் நம்ம பேங்க்ல புது சேர்மன வராறே? இன்னிக்கி முழுசும் அங்கனதான்.. ராத்திரியாயிரும்னு நெனக்கேன்.. நீ நம்ம செல்வத்துக்கூட போயிரு.. அவன் ஊருக்குள்ள வந்துட்டானாம்.. இன்னும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துருவான்.. நா குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான்.. நா போய்ட்டு கார அனுப்பறேன்.. நீ அவனோட போயி வக்கீல பார்த்துட்டு அப்படியே நம்ம தி.நகர் ஆஃபீசுக்கும் போய்ட்டு வந்துரு.. சாயந்தரம் மேக்கொண்டு என்ன செய்யணும் பேசலாம்.. என்னம்மா..?’

‘சரிப்பா.. அப்ப நீங்க கெளம்புங்க.. நாம் மந்திரண்ணாவ கொஞ்சம் வீட்டுக்கு வேண்டியத வாங்கறதுக்கு அனுப்பலாம்னு பாக்கேன்..’

காப்பியை குடித்து முடித்து எழுந்து நின்றார் நாடார். ‘சரி.. அப்படியே எனக்கு வெத்தல சீவலையும் வாங்கி வரச்சொல்லு.. வாய் நமநமங்குது..’

‘ஆமா.. இப்ப அதுதான் முக்கியம்..’ என்று முனுமுனுத்தவாறு வாசலை நோக்கி சென்ற தன் மகளைப் பார்த்து புன்னகை செய்தவாறே மாடிப்படிகளில் ஏறி தன் அறையை நோக்கிச் சென்றார்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

புதிய உதயம் பூபாளம் இசைக்கட்டும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

புதிய உதயம் பூபாளம் இசைக்கட்டும் //

அப்படியே ஆகட்டும்:)