9.6.06

சூரியன் 93

ரவி பிரபாகர் அன்று காலையில் எழுந்ததுமே ஒரு இனம் புரியாத உற்சாகம் மனதில் நிறைந்திருந்ததை உணர்ந்தான்..

சுமார் ஒரு மாத காலத்திற்குப்பிறகு காலையில் எழுந்ததுமே பூஜையறையிலிருந்து மனதை மயக்கும் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியின் வாசனை வீடு முழுவதும் நிறைந்திருந்ததை உணரமுடிந்தது..

மஞ்சு காலையிலேயே எழுந்து குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டிருப்பாள் போலிருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு ‘மஞ்சு’ என்று அழைத்தான்.

சமையலறையில் வேலையாயிருந்த மஞ்சு அங்கிருந்தவாறே ‘என்ன ரவி?’ என்றாள்.

‘இங்க வாயேன்..’

மஞ்சு கைகளை இடுப்பில் கட்டியிருந்த ஆப்ரனில் (apron) துடைத்தவாறே படுக்கையறைக்கு விரைந்தாள். ‘என்ன சொல்லுங்க?’

கண்களை மூடியிருந்த கைகளை விலக்கி அவளை பார்த்து புன்னகைத்தான். ‘இன்னைக்கி உன் முகத்துல முளிக்கணும்னு ஆசை.. அதான் கூப்ட்டேன்.. போன ஒரு மாசமா இருட்டாயிருந்த இந்த வீட்ல.. இன்னைக்கித்தான் வெளிச்சம் வந்தா மாதிரி இருக்கு.. ரொம்ப தாங்ஸ்.. மஞ்சு..’

மஞ்சு வெண்ணிற பற்கள் தெரிய புன்னகையுடன் அவனை நெருங்கி கட்டிலில் அமர்ந்தாள். ‘ஆமா ரவி.. எனக்கும் காலைல எழுந்ததும் அப்படித்தான் இருந்தது. நேத்தோட நம்ம ரெண்டு பேரையும் பிடிச்சிருந்த கெட்ட காலம் முடிஞ்சிருச்சின்னு நினைக்கிறேன். அதான் காலைல எழுந்ததும் குளிச்சிட்டு சாமி படத்தையெல்லாம் தொடச்சி.. விளக்கேத்தி கும்பிட்டேன்.. கும்பிட்டு முடிச்சதும் இனிமே ஒங்க ரெண்டு பேருக்கும் நல்ல காலந்தான்னு என் காதுல யாரோ சொன்னா மாதிரி இருந்துது ரவி..’

குளித்து முடித்த ஈர தலையில் ஒரு துவாலையை சுற்றிக்கொண்டு நெற்றியில் வட்ட வடிவ குங்கும பொட்டுடன் முகம் மலர அமர்ந்திருந்த மஞ்சுவையே பார்த்துக்கொண்டிருந்த ரவியின் கண்கள் கலங்க.. ‘என்ன ரவி இது.. காலங்கார்த்தால.. எழுந்து போய் குளிச்சிட்டு வாங்க.. காப்பிய குடிச்சிட்டு இன்னைக்கி என்ன செய்யலாம்னு ப்ளான் பண்ணலாம். காலையிலயே பக்கத்து வீட்டு அங்கிள் கூப்ட்டு இன்னைக்கி அந்த ப்ராஞ்சுக்கு ரெண்டு பேருமா சேர்ந்து போய்ட்டு வாங்கன்னு சொன்னார். ராத்திரி அவர் ஆஃபீஸ்லருந்து வந்ததும் மீட் பண்ணலாம்னும் சொன்னார்.’ என்றாள்.

‘ரைட்.. இன்னைக்கி அதான் முக்கியமான ப்ளான்.. ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சினை இருக்கு.. இரு நா பாத்ரூம் போய்ட்டு வரேன். நீ ப்ரேக்பாஸ்ட் மட்டும் பண்ணா போறும்.. லஞ்ச் வெளிய வச்சிக்கலாம்..’ என்றவாறு குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைக்க மஞ்சு அவன் படுத்திருந்த படுக்கையை சரி செய்துவிட்டு பால்கனி கதவைத் திறந்தாள்.

கிழக்கு நோக்கியிருந்த பால்கனி வழியாக காலை வெய்யிலும் குளிர்ந்த காற்றும் வீட்டை நிரப்ப நெஞ்சு நிறையை காற்றை உள்ளிழுத்து விட்டாள் மஞ்சு.. மனதில் ஒரு சந்தோஷம் நிறைய சமயைலறையை நோக்கி நடந்தாள்..

ரவி குளியலறையிலிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் நின்று சவரம் செய்ய துவங்கினான். அவன் கிளை மேலாளராக இருந்த காலத்தில் எதை மறந்தாலும் தினமும் சவரம் செய்வதை மறந்ததில்லை..

‘என்ன ரவி.. இந்த வயசுலயே மீசையையெல்லாம் மழிச்சிரணுமாக்கும்.. சின்னதா ஒரு அரும்பு மீசை வச்சிருந்தீங்களே அது எவ்வளவு நல்லாருந்துது?’ என்று மஞ்சு கூறியபோது அலட்சியத்துடன், ‘இங்க பார்.. மீசை வச்சிக்கணுமான்னு முடிவு பண்ண வேண்டியது நான். அது ஒரு எக்ஸ்க்யூட்டிவ் லுக் குடுக்கலைன்னு தெரிஞ்சிதான் எடுத்துட்டேன்.. எனக்கு எது நல்லாருக்குன்னு எனக்கு தெரியாதா என்ன? இந்த மாதிரி தேவையில்லாத அட்வைஸ் எல்லாம் குடுக்கற வேலைய வச்சிக்காத என்ன?’ என்று எரிந்துவிழுந்தது நினைவுக்கு வந்தது.

இந்த தன்னுடைய முன்கோபமும், ஆணவமும்தான் இந்த பத்து பதினைந்து வருடங்களில் எத்தனை விரோதிகளை சம்பாதித்து கொடுத்திருக்கிறது?

ரவி இளநிலை ப்ரொபேஷனரி அதிகாரியாக பணியில் சேர்ந்த முதல் மாதத்தில் பயிற்சிக்காக அவனுடைய வங்கி நடத்திய பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டிருந்தான்.

வங்கியில் முதல்முறையாக பணிக்கு சேரும் அதிகாரிகளுக்கு வங்கியின் செயல்பாட்டைப் பற்றியும், கிளை நிர்வாகத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியவற்றைப் பற்றிய இரண்டுவார கால பயிற்சி அது.

பயிற்சி காலத்தில் இலக்கியம், கணிதம், பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்த அதிகாரிகளுக்கு வங்கியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அடிப்படை விஷயங்களையும் கூட விரிவாக போதிப்பது வழக்கம்.

பி.காம் பட்டத்துடன் சி.ஏ. பட்டத்தையும் பெற்றிருந்த ரவிக்கு ஆரம்ப நாட்களில் நடந்த வகுப்புகளில் போதிக்கப்பட்டவைகளைக் குறித்து நன்றாக தெரிந்திருந்ததால் வகுப்பில் எவ்வித சிரத்தையுமில்லாமல் இருந்தான்.

அவனுடைய நடத்தை வகுப்பில் போதித்துக்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு எரிச்சல் மூட்டியதை அவன் உணர்ந்திருந்தும் இயல்பாகவே அவனிடமிருந்த ஆணவம் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்க செய்தது.

அத்துடன் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த அதிகாரிகளை இடைமறித்து தனக்கு சரியென்று தோன்றியதை அவன் வெளிப்படையாக சக பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில் தெரிவிக்க ஆரம்பிக்கவே பொறுமையிழந்த அதிகாரிகள் அவனைக் குறித்து பயிற்சிக் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர்.

அப்போது முதல்வராக இருந்த சேது மாதவனும் இயல்பாகவே ஆணவம் உள்ளவர். தனக்கு போட்டியாக வேறொருவனா, அதுவும் வங்கியில் சேர்ந்து இரண்டு மாதங்களைக் கூட பூர்த்தி செய்யாத ஒரு இளைஞனா என்ற கோபம் தலைக்கேற அடுத்த நாள் அவரே ஒரு முழு வகுப்பையும் நடத்த முடிவு செய்தார்.

அவருடைய விஷய ஞானத்தைப் பற்றி நன்றாக தெரிந்திருந்த அவருடைய அதிகாரிகள் இந்த விஷப்பரீட்சை தேவைதானா என்று நினைத்தாலும் மறுத்து பேசாமல் இருந்துவிட அடுத்த நாள் முதல் வகுப்பிலேயே தன்னுடைய அரைகுறை ஞானத்தை படு பந்தாவாக காட்டினார் சேது மாதவன்.

அவர்தான் கல்லூரி முதல்வர் என்பதை முதல் நாளே அறிந்திருந்த பயிற்சி அதிகாரிகள் படு சிரத்தையுடன் அவர் கூறியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொள்ள ரவி மட்டும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சேது மாதவன் அவருக்குக் கீழே பணிபுரிந்த அதிகாரிகளைவிட மோசம் என்பதை அவர் வகுப்பெடுக்க துவங்கிய நிமிடமே கண்டுக்கொண்ட ரவி யாரிடமும் அனுமதி கோராமல் வகுப்பிலிருந்து வெளியேற நினைத்து வாசலை நோக்கி நகர்ந்தான்.

ஏற்கனவே சேது மாதவன் ஒரு முன்கோபி. அத்துடன் ரவியைப் பற்றி அவருடைய அதிகாரிகள் வேறு முந்தைய தினம் புகார் அளித்திருந்தனர். அவன் அனுமதியின்றி எழுந்து செல்வதைக் கண்டவருக்கு கோபம் தலைக்கேற, ‘ஏய் மிஸ்டர்.. what do you think you are doing?’ என்று உரக்க குரலெழுப்ப ரவி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.

‘Are you addressing me?’ என்றான் நக்கலாக.

அவனுடைய குரலும், கேள்வி கேட்ட பாங்கும் சேது மாதவனின் கோபத்தை மீண்டும் கிளற கண்கள் இரண்டும் சிவக்க, ‘Is this the way to address your superiors? How dare you?’ என்றார் உரத்த குரலில். கோபத்தில் அவருடைய குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை வகுப்பறையிலிருந்த எல்லோரும் உணர்ந்தனர். வகுப்பின் இறுதி வரிசையில் அமர்ந்து இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கல்லூரியின் இளம் அதிகாரிகளும் கல்லூரி முதல்வரின் கோபத்தைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தனர்.

ரவியோ அவருடைய கோபத்தில் பாதிப்படையாமல் நின்ற இடத்திலேயே நின்று சேது மாதவனைப் பார்த்தான். ‘If I you think I have not addressed you properly I also feel that you have not addressed me properly..’

சேது மாதவனுக்கு தன் செவிகளை நம்ப முடியாமல் அவனையே பார்த்தார். என்ன ஒரு நெஞ்சழுத்தம் இவனுக்கு? பதினைந்து வருடங்கள் சர்வீஸ் உள்ள என்னை, அதுவும் இந்த கல்லூரியின் முதல்வரைப் பார்த்து நேற்று வங்கியில் சேர்ந்த ஒரு பொடியன் எதிர்த்து பேசுவதா? விடக்கூடாது.. இவனை வேலையை விட்டே தூக்க வேண்டும்..

‘Not only that.. நீங்க சொல்லிக்கிட்டிருக்கறதையெல்லாம் நான் ஏற்கனவே காலேஜ்ல முதல் வருசத்திலயே படிச்சிருக்கேன்.. I don’t know whether you have gone through my profile or not. For your information, I had passed B.Com Honors with high distinction from Madras University. I am also a CA.. அதுமட்டுமில்ல சார்.. நீங்க இப்ப சொல்லிக்கிட்டிருக்கறதுல நிறைய fundamental mistakes இருக்கு.. அத கேட்டுக்கிட்டு ஒக்காந்திருக்க முடியாமத்தான் வெளியே போலாம்னு எழுந்தேன். ஒங்கள பர்மிஷன் கேட்டு டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்.. அது தப்புன்னா I am sorry. Now I am asking your permission to leave the class.. Can I go now?’

அவன் பேசிய விதம், அவனுடைய குரலில் இருந்த அகங்காரம், அவன் நின்றிருந்த விதம் சேது மாதவனுடைய கோபத்தை மேலும் அதிகரிக்க கையிலிருந்த சாக் பீசை வீசி எறிந்துவிட்டு வழியில் நின்றிருந்த அவனை ஒதுக்கி தள்ளிவிட்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்.

அவர் வெளியேறி பல நிமிடங்கள் வரை வகுப்பிலிருந்த அனைவரும் ஸ்தம்பித்து அமர்ந்திருக்க ரவி ஒன்றும் நடவாததுபோல் வெளியேறி ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு வராந்தாவில் வானத்தைப் பார்த்தவாறு நின்றான்.

‘ரவி.. It is getting late..  என்ன செய்யறீங்க இவ்வளவு நேரம்..?’ என்ற மஞ்சுவின் குரல் அவனை உசுப்பிவிட கையில் பிடித்திருந்த ரேசரை கழுவிவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு ஷவரை திறந்தான்..

காலையில் எழுந்ததுமே ஹீட்டரை ஆன் செய்திருந்தாள் மஞ்சு.. ஷவரிலிருந்து அவன் மேல் விழுந்த வெதுவெதுப்பான தண்ணீர் அவனுடைய மனதிலிருந்த பாரத்தை வெகுவாக குறைத்ததை உணர்ந்தான்..

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்..?

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை இப்போதும் நினைவில் வைத்திருந்து தன்னை பழிவாங்க துடித்த சேதுமாதவனை தன்னுடைய மனதிலிருந்து ஒதுக்கிவிட்டு பரபரவென்று குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டு டைனிங் டேபிளில் காத்திருந்த மஞ்சுவினருகில் சென்று அமர்ந்தான்.

‘என்னமோ பிரச்சினைன்னு சொன்னீங்களே?’ என்ற மஞ்சுவைப் பார்த்தான்..

ரவி ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தான். 'பிரச்சினையா.. என்ன பிரச்சினை?' என்றான்.

மஞ்சு அவனைப் பார்த்து சிரித்தாள். 'நீங்க தான ரவி குளிச்சிட்டு வந்து சொல்றேன்னு சொன்னீங்க?'

'ஓ! ஆமா மஞ்சு மறந்தே போய்ட்டேன். நாம பிராஞ்சுக்கு போனா அங்க இப்பருக்கற பி.எம் காமிப்பாரான்னு தெரியலை.. அதான் இப்ப பிரச்சினை..'

என்னங்க நீங்க.. பிலிப் சார கூப்ட்டுட்டுத்தான் பிராஞ்சுக்கு போணும்னு நீங்கதான நேத்து சொன்னீங்க? பேசாம அவர கூப்டுங்க.'

'கரெக்ட்.. நா மறந்தே போய்ட்டேன்.. இதோ கூப்டறேன்..’ என்றவாறு பிலிப் சுந்தரத்தின் செல் ஃபோனுக்கு டயல் செய்தான் ரவி..

தொடரும்..



4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"நாளாம் நாளாம் திருநாளாம்...."

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஒரு வங்கியோட தலைவர் மாற்றம் அதிலுள்ள எல்லா பணியாளர்களையும் பாதிக்கக்கூடிய விஷயம்.

ஆகவே அதுவும் ஒரு திருநாள் போலத்தான்..

G.Ragavan said...

ம்ம்ம்...யாகாவாராயினும் நாகாக்கன்னு சும்மாவாச் சொன்னாங்க......

சரி. ஆண்டவன் இருக்கான். எப்பவும் முடிவுல தருமந்தான் ஜெயிக்கும்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

யாகாவாராயினும் நாகாக்கன்னு //

கரெக்டா சொன்னீங்க. மனுஷனோட நாலங்குல நாக்கு இருக்கே அது எத்தனை உச்சத்துலருக்கற மனுஷனையும் குப்புற கவுத்துருமாம்..

நாக்க அடக்கத் தெரியாத மனுஷன் நாறித்தான் போவான்னும் சொல்லியிருக்காங்க..