23.6.06

சூரியன் 97

தூக்க மாத்திரை போட்டால்தான் உறக்கம் வரும் என்பதே வந்தனாவின் சரித்திரத்தில் கிடையாது..

அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீடு திரும்பியதும் காலையில் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்திருப்பதை வெளியில் எடுத்து வைத்துவிட்டு குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு திரும்பும் போதே அவளுக்கு உறக்கம் கண்களை அழுத்தும்.

பேருக்கு உண்டு முடித்துவிட்டு பத்துமணி செய்தியை பார்த்து முடித்ததுமே விளக்குகளை அணைத்துவிட்டு படுத்துவிடுவாள்..

இந்த ரொட்டீன் வாரத்தின் எல்லா நாட்களிலும்.. சனிக்கிழமை தவிர..

அப்படிப் பழகிப்போன அவளுக்கு மருத்துவமனை சூழலில் ஒன்றுக்கு இரண்டுக்கு மாத்திரைகளை போட்டுக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூங்க முடிந்தது..

தூக்க மாத்திரைகளின் தாக்கம் விடுபட்டு விடியற்காலையிலேயே முழிப்பு வந்துவிட தான் படுத்திருந்த ICU வின் மெல்லிய நீல நிற விளக்கொளியில் தன்னைச் சுற்றிலும் பார்த்தாள்.

கொசுவலையினூடே அடுத்த கட்டிலில் படுத்திருந்தவரின் உருவம் நிழலாக தெரிந்தது..

நேற்றிரவு உறங்கச் செல்வதற்கு சற்று முன்னர் கொண்டுவந்து கிடத்தப்பட்டது நினைவுக்கு வந்தது..

‘What is this Sister, you call this five star facility? My Dad deserves better than this. He is after all the Chairman of the....’ என்று கோபப்பட்ட இளம் பெண்ணின் குரல் இப்போதும் அவளுடைய செவிகளில் கேட்டது. அவர் எந்த நிறுவனத்தின் முதல்வராயிருந்தால் எனக்கென்ன என்பதுபோல் நர்ஸ் அப்பெண்ணைப் பார்த்ததை நினைக்கும்போதே வந்தனாவின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது..

அத்தனை சிறிய பெண்ணுக்கு தந்தையா? இவரா?

‘This is not uncommon for a person of this age. How old is he, Eighty?’ என்ற சீஃப் மருத்துவரின் கேள்விக்கு, ‘Yes Doctor.. He is eighty plus.’ என்று அந்த இளம் பெண் பதிலளித்தது நினைவுக்கு வந்தது.

‘I thought so. His breathlessness is more due to his age and fatigue than anything less.. Don’t worry.. he should be ok in the morning. I will just give him a sedative so that he can sleep peacefully..’

சீஃப் டாக்டரின் அமைதியான அதே சமயம் உறுதியான பேச்சு அந்த பெண்ணை சமாதானப்படுத்த சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு அந்த பெண் புறப்பட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது..

கட்டிலின் அருகிலிருந்த குறு மேசையில் இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.

மணி 3.30!

நேற்று காலை படுக்கைக்கு சென்ற நேரம்..!

யார் நினைத்தார்கள் அடுத்த நாள் காலை மருத்துவமனையில் கண் விழிப்பேன் என்று..

இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் என்னவெல்லாம் நடந்துவிட்டது..?

நினைத்த மாத்திரத்திலேயே கண்கள் கலங்க  கன்னங்களில் வடிந்தோடிய கண்ணீரை தன்னையுமறியாமலே துடைத்துக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..

முடிந்தால்தானே..

மனதும், உடம்பும் சோர்ந்திருந்தபோதெல்லாம் கமலியை செல் ஃபோனில் அழைத்து அவள் பேசுவதுண்டு..

‘என்ன ஆண்ட்டி நீங்க? You are the head of H.R. in your Bank.. A person in charge hundreds of employees.. நீங்களே இதுக்கெல்லாம் சோர்ந்து போனா எப்படி.. சீயர் அப்..’ என்பாள் கமலி சிரிப்புடன்.

இந்த சின்ன வயசுல இப்படியொரு மனப்பக்குவமா என்று எத்தனை முறை வியந்து போயிருக்கிறாள்..

ராணிக்கு தெரியாமல் கமலி பலமுறை அவளுடைய ஃபாளாட்டுக்கு வந்திருக்கிறாள்.. வரும்போதெல்லாம் மறக்காமல் அவள் கொண்டுவரும் ஒரு கருவி அவளுடைய வயலின்..

‘நீங்க அப்படியே சாஞ்சி ஒக்காருங்க.. நா எங்க சர்ச்சில வாசிக்கற ரெண்டு ட்யூன வாசிக்கறேன்.. You will forget what you are and who you are.. Surrender yourself totally to me..’ என்ற வார்த்தைகளுடன் வந்தனாவை அடுத்த பத்து பதினைந்து நிமிடங்கள் அவள் கேட்டறியாத தன்னுடைய இசை உலகிற்கு அவளை அழைத்துச் சென்றுவிடுவாள் கமலி..

அந்த நளினமான பிஞ்சு விரல்கள் கம்பிகளில் ஆடும் நர்த்தனத்தைக் கண்டு பெருமிதமும், மகிழ்ச்சியும் பொங்க அப்படியே கண்களை மூடிக்கொண்டு உறங்கிப்போவாள் வந்தனா..

எத்தனை இனிமையான நாட்கள் அவை..

அவை மீண்டும் வருமா என்ன?

‘ஐயோ கமலி.. I am going to miss you a lot.. a lot Kamali.. a lot..’

நெஞ்சு லேசாக வலிப்பதுபோல தோன்றவே தடவிக்கொண்டு கண்களை மூடி உறங்க முயற்சித்தாள்..

முடியவில்லை..

தனித்து விடப்பட்டது போல.. எனக்குன்னு இருந்த ஒரே உயிரும் போயிருச்சே என்று அவள் மனம் கிடந்து அலைபாய்கிறது.. அரற்றுகிறது..

அவளையுமறியாமல் மோகனை நினைத்துக்கொண்டாள்..

இத்தன வருசம் கழிச்சி ஏன் திடீர்னு அவரப் பத்திய இந்த நினைவு எனக்கு வருது..?

ஏன்னு தெரியலையே..

கண்கள் கலங்கி நிறைய வழிந்தோடிய கண்ணீரை பொருட்படுத்தாமல் படுத்துக் கிடந்தாள் வந்தனா..

****

செல்வத்தின் வாகனம் நாடாரின் வீட்டு வாசலை அடைந்து ஓய்ந்தது..

‘மகா.. நீ பின்பக்கமா போய் குளிச்சிட்டு கொஞ்சம் நேரம் படுத்து எழுந்திரி.. பத்துமணிக்கு மேல நம்ம மோகன் சார் வீட்டுக்கு போவேண்டியிருக்கும்.. என்ன?’

மகாதேவன் வாகனத்தை அணைத்துவிட்டு இறங்கி ஓடிச்சென்று செல்வம் இறங்குவதற்காக கதவை திறக்க அதற்கு முன்பே செல்வம் இறங்கி அவனை முறைத்தான்..

‘எலெ.. இந்த வேலையெல்லாம் வேணாம்னு ஒங்கிட்ட எத்தனெ தடவ சொல்லியிருக்கேன்.. எனக்கு இறங்க தெரியாதா? போய் குளிச்சிட்டு ஒரு குட்டித் தூக்கத்த போடு.. போ.. நா பெரிய மொதலாளி, இவர் வந்து கார் கதவ தெறந்து விடறாரு..’

மகாதேவன் சிரித்துக்கொண்டே டிக்கியிலிருந்த செல்வத்தின் பெட்டியை இறக்கி வாசலில் வைத்துவிட்டு கதவில் பொருத்தப்பட்டிருந்த அழைப்பு மணியை அடித்தான்.

‘யார் செல்வந்தானே.. கதவு தெறந்துதான் இருக்கு.. வா.. மகா’

‘அக்கா பயங்கரமான ஆளுங்கய்யா.. நாமதான் வரோம்னு உள்ளருந்துக்கிட்டே கொரல் கொடுக்காங்க பாருங்க..’

செல்வம் சிரித்தான். ‘எலேய்.. போ.. போ.. உள்ளாற கொண்டு பெட்டிய வச்சிட்டு ஓடு.. ரொம்ப ஐஸ் வைக்காத.. அதுல மயங்குறதுக்கு ராசம்மா ஒன்னும் பழைய ராசம்மா இல்லல்லே..’

மகாதேவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு தன்னுடைய வாகன ஓட்டுனர்களுக்கென நாடார் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருந்த இருப்பிடம் நோக்கி விரைய செல்வம் ஹாலிலிருந்த சோபாக்களில் ஒன்றில் அமர்ந்து அறையை சுற்றி நோட்டம் விட்டான்.

அவன் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்றபிறகு இன்றுதான் முதல் முறையாக இந்த வீட்டிற்குள் நுழைகிறான்..

ஏறத்தாழ ஒன்னரை வருடம்!

ராசம்மா - ராசேந்திரனுடைய திருமணம் இவ்வளவு காலம் நீடித்ததே பெரிய விஷயம் என்று நினைத்தான்..

‘என்ன செல்வம்.. எப்படியிருக்கே.. ஒன்னெ பாத்ததுந்தான் எனக்கு தெம்பே வந்திருக்கு.. சொல்லு, வீட்ல செல்வி செளக்கியந்தானே..’

கையோடு கொண்டு வந்திருந்த காப்பி தம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு எதிரில் சென்றமர்ந்த தன் மாமன் மகளை தலையிலிருந்து கால்வரை பார்த்தான் செல்வம்..

எப்படி இருக்க வேண்டியவ இப்படி இளைச்சி, கறுத்து..

‘என்ன செல்வம் அப்படி பாக்கே? பாக்க பரிதாபமாருக்கேனா?’

செல்வம் புன்னகையுடன் தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்..

‘பெறவென்ன? காப்பிய குடிச்சிட்டு குளி.. வேணும்னா ஒரு குட்டி தூக்கம் போடு.. பத்து பத்தரைக்கு மோகன் சார போயி பாக்கணும்.. அநேகமா இன்னைக்கி முழுசும் அங்கனதான் இருக்கணும்னு நினைக்கேன்..’

செல்வம் சுடச் சுட இருந்த காப்பியை குடித்துவிட்டு எழுந்தான்.. கைகள் இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தான்..

‘மாமா எங்க?’

‘குளிக்க போயிருக்காக.. இன்னைக்கி நம்ம பேங்க்ல புது சேர்மன் சார்ஜ் எடுக்காராம்.. அதனால அப்பா இன்னைக்கி முழுசும் ஃப்ரீ இல்லையாம்.. சாயந்தரத்துக்கு மேல பாக்கலாம்னுட்டாக..’

செல்வம் அவளைப் பார்த்து புன்னகைத்தான். ‘சரி அதுவும் நல்லதுக்குத்தான்.’

ராசம்மாள் வியப்புடன் அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.

‘நாம ரெண்டு பேரும் ஃப்ரீயா மோகன் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம் இல்ல?’

ராசம்மாள் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

‘நீ மனசுல என்ன நினைச்சிக்கிட்டிருக்கேன்னு ஒரு மாதிரியா ஊகம் செஞ்சி வச்சிருக்கேன்.. ஒன்னோட முடிவுக்கு மாமா எப்படியோ நிச்சயமா அத்தை ஒத்துக்கிட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கேன்.. சரிதானே?’

ராசம்மாள் அதற்கும் சரி என்று தலையை அசைத்தாள்..

‘நீ சொல்றது சரிதான் செல்வம்.. அம்மாவால இத ஜீரணிக்க முடியல.. ஆனா நா முடிவெடுத்தாச்சி.. ராசேந்திரன டிவோர்ஸ் பண்றது மட்டுமில்ல செல்வம்.. அவர் என்னைய போன ஒரு வருசமா ட்ரீட் பண்ணதுக்கு என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு திருப்பியடிக்கப் போறேன்.. எங்க அடிச்சா எப்படி வலிக்கும்னு எனக்கு தெரியும் செல்வம்.. அங்க பாத்து அடிக்கற அடியில...’

அவளுடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று தன்னுடைய மனதை பிசைவதை உணர்ந்த செல்வம் சன்னல் வழியாக போர்ட்டிக்கோவை பார்த்துக்கொண்டிருந்த அவளையே பார்த்தான்..

வேதனையுடன்..

தொடரும்..








4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மீண்டும் அந்த இளஞ்சிட்டின் நினைவை கொண்டுவருகின்றீர்கள்.ஏனோ?


எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பது அடிபட்ட பெண்புலிக்கு
நன்றாகவெ தெரியும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சுமார் நூறு வலைஞர்களுக்கும் கூடுதலாக இந்த தொடரை தினமும் வாசித்தாலும் lone sentinel என்பார்களே அதுபோல தினமும் நீங்க ஒருத்தராவது தவறாம பின்னூட்டம் போடறீங்களே.. ஒங்களுக்கு நான் உண்மையிலயே நன்றிக்கடன் பட்டிருக்கேன் ஜி! நீங்க நீடுழி வாழணும்:)

மீண்டும் அந்த இளஞ்சிட்டின் நினைவை கொண்டுவருகின்றீர்கள்//

அந்த சிட்டை எப்படீங்க மறக்க முடியும்? இந்த கதை முழுசும் கமலி வந்துக்கிட்டே இருப்பா..

எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்பது அடிபட்ட பெண்புலிக்கு
நன்றாகவெ தெரியும் //

நீங்களும் 'ஜெ' பத்தி இங்க குறிப்பிடலை.. நானும் அவங்களபத்தி நீங்க சொன்னா மாதிரி நினைச்சிக்கலை:)

siva gnanamji(#18100882083107547329) said...

ரொம்ப நன்றிங்க ஜொஸப்

//நீங்களும்........நினைச்சுக்கலெ//

அட தேவுடா

டிபிஆர்.ஜோசப் said...

அட தேவுடா //

சரிதானே..

இல்லன்னா அப்புறம் வம்பா போயிரும்லே..