11.5.06

சூரியன் 75

ஆலப்புழா - சென்னை ரயில் எர்ணாக்குளம் நிலைய்த்தில் வந்து நின்றதும் நந்தக்குமார் பிளாட்பாரத்தில் இறங்கி நளினியைத் தேடினான். தூரத்தில் வந்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கையைசைத்துவிட்டு அவளை நோக்கிச் சென்றான்.

‘வழியில டிராஃபிக்ல பெட்டுப்போயி நந்து. அதுகொண்டா லேட்டாயது. பாகியத்தின சரிக்கி சமயத்துல எத்தி. ஏது கம்பார்ட்மெண்டா?’ என்ற நளினியின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக்கொண்டு.. ‘ஏசி த்ரீ டயர் கிட்டி.. கொறச்செ புத்திமுட்டு உண்டாயிருந்நு.. பட்செ மேனேஜ் செய்து.. வா..’ என்றவாறு முன்னே நடக்க அடுத்த சில நிமிடங்களில் இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். நல்ல வேளையாக அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை.

டீசல் எஞ்ஜினை மாற்றி மின்சார எஞ்ஜினை பூட்டுவதற்கு சில நிமிடங்கள் இருக்கவே நந்தக்குமார் மீண்டும் இறங்கிச்சென்று சில சஞ்சிகைகளையும், பழமும் வாங்கி வந்தான். ‘சாயா எந்தெங்கிலும் வேணோடி..?’ என்றான்.

நளினி வியப்புடன் நந்துவைப் பார்த்தாள். என்ன இன்னைக்கி புதுசா? ஆள் நல்ல மூடில இருக்கறாப்பல இருக்கு? ‘அதே நந்து.. கொறச்செ பிஸ்கட்டும் வெடிச்சோ.. வெஷக்குன்னு.. உச்சக்கி ஊண் கழிக்கான் சமயம் கிட்டில்லா.’

நந்து நளினிக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வந்து ஏறவும் வண்டி கிளம்பவும் சரியாயிருந்தது. அநேகமாக திருச்சூர் சென்றடையும்வரை பெட்டிக்குள் வேறு யாரும் வந்து ஏற வாய்ப்பில்லை என்று நினைத்த நளினி அடுத்த இரண்டு மணி நேரத்தில் இவனிடம் என்ன பேசுவது என யோசித்தாள். மனம் விட்டு பேசவேண்டும். மருத்துவரை சென்று பார் என்று சங்கீத்தா இவனிடம் கூறினாளா என்று தெரியவில்லை.

‘என்ன நளினி ஏதோ புதுசா பாக்கறா மாதிரி பாக்கறே?’ என்ற நந்தக்குமாரை பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள் நளினி. நந்து வியப்புடன் அவளைப் பார்த்துவிட்டு திரும்பி கடந்து சென்ற வாகனங்களைப் பார்த்தான்.

இந்த மாதிரி இவ சிரிச்சி எத்தன நாளாவுது? இந்த சிரிப்புலதானடா மயங்கிப்போயி இவள காதலிச்சி வீட்ட எதுத்து கல்யாணமும் பண்ணே? அப்புறம் எதுக்காக வீணா வீம்பு பண்ணி உன் வாழ்க்கையையும் நரகமாக்கி, அவளையும் நிம்மதியா இருக்க விடாம.. இதுதான் நந்து உனக்கு கிடைச்சிருக்கற கடைசி சான்ஸ்.. இதயும் கோட்டை விட்டுட்டா அவ்வளவுதான்.. உனக்கு நளினிய விட்டா வேற யார் இருக்கான்னு நினைச்சிக்கிட்டு இப்படி விட்டேத்தியா இருக்கறே..? அவளோட அம்மாவும் அப்பாவும் இறந்துப்போனதுக்கப்புறம் அவளுக்கும் ஒன்ன விட்டா ஆளில்லையே நந்து.. Why don’t you realize that? உனக்கு அவளும் அவளுக்கு நீயும்னு இனியாவது உன் ஈகோவையெல்லாம விட்டுட்டு இறங்கி வா.. அவ கிட்ட மனம் திறந்து பேசுடா..

நந்தக்குமார் ஜன்னலில் இருந்து திரும்பி நளினியைப் பார்க்க அவள் தன்னையே குறும்புடன் பார்ப்பதைப் பார்த்துவிட்டு ‘எந்தாடி அங்ஙன நோக்குன?’ என்றான்.

‘சேட்டன் எந்தா ஆலோய்க்கனேன்னு ஞான் பறயட்டே?’ என்றாள் நளினி குறும்புடன்.

நந்துவும் லேசாக சிரித்தான். ‘என்ன சொல்லு.’

‘என்னடா இது தெரியாத்தனமா இவகிட்ட மாட்டிக்கிட்டமே.. என்னத்த கேப்பான்னு தெரியலையே.. அப்படீன்னுதானே..’

நந்து எழுந்து அவளுக்கருகில் காலியாயிருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் மவுனமாய் ஜன்னல் வழியே திருச்சூர் செல்லும் NH 47ல் போட்டி போட்டுக்கொண்டு செல்லும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘அந்த வண்டிங்கள பார்த்தியா நளினி.. என்னமோ இவன் அவன முந்திக்கிட்டு போலனா உலகமே இடிஞ்சி விழப்போறாப்பல ஒவ்வொருத்தனும் ஓடறத?’ என்றான் சட்டென்று..

நளினி வியப்புடன் அவனைப் பார்த்தாள்.. ‘என்ன நந்து திடீர்னு.. நீங்க இப்படி பேசமாட்டீங்களே?’

நந்து திரும்பி மிக நெருக்கத்தில் தெரிந்த அவளுடைய முகத்தை, அந்த அழகான கண்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நிலைதடுமாறினான்.. ‘என்னவோ தோணிச்சிடி.. இதே மாதிரித்தானே நாம ரெண்டு பேரும் ஓடிக்கிட்டிருந்தோம்.. இந்த அஞ்சாறு வருஷமான்னு நினைச்சிப் பார்த்தேன்.. அதான்...’

நளினியும் அவனுடைய பார்வை சென்ற பாதையில் பார்த்தாள். நந்து கூறியதுபோலத்தான் நடந்துக்கொண்டிருந்தது.. நாட்டில் கடந்த சில வருடங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட சகலவித வாகனங்களும் கேரளத்து சாலைகளில், முக்கியமாக கொச்சி சாலைகளில் வந்திருந்தன.. யாருக்கும் பணம் ஒரு பொருட்டான விஷயமாகவேபடவில்லை.. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அவளே அவளுடைய கிளையிலிருந்து இத்தகைய புதுரக வாகனங்களை வாங்க எத்தனை கடன்களை வழங்கியிருக்கிறாள்..? எல்லோருக்கும் எதிலும் வேகம் வேண்டும்.. ஆனால் அந்த ஒட்டத்தின் முடிவில் என்னத்தை சாதித்திருக்கப் போகிறார்கள்..? வீட்ல சந்தோஷத்த தொலைச்சிட்டு ரோட்டுல தேடிக்கிட்டு ஓடறாப்பல..  இதோ என்னையும் நந்துவையும் போல..

‘என்ன சொல்ல வறீங்க நந்து.. நாம ரெண்டு பேரும் போற வேகம் சரியில்லைன்னா.. இல்லே.. இந்த வேகம் தேவையானதுதானான்னா?’

‘ரெண்டும்தான்’ என்ற நந்து சட்டென்று நளினியின் கரங்களை எடுத்து தன்னுடையதில் பொதிந்துக்கொண்டான்.

அவனுடைய செயலை முற்றிலும் எதிர்பாராத நளினி அப்படியே அவனுடைய கரங்களில் தலையை சாய்த்துக்கொண்டு தன்னையுமறியாமல் விம்மினாள். நந்துவும் அவள் அழுது முடிக்கட்டும் என்று அமைதியுடன் ஜன்னல் வழியே தட தடவென ஓடி மறைந்த அலுவா (Alwaye) பாலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு எழுந்த நளினி அவனுடைய கரங்களிப் பற்றிக்கொண்டு, ‘ஐ ம் சாரி நந்து.. நா ஒங்கள கொஞ்ச நாளா மதிக்கறதே இல்லை.. அது எனக்கே தெரியுது. ஆனா நா ஏன் இப்படி நடந்துக்கறேன்னு எனக்கே தெரியலை நந்து.. எல்லாம் அந்த சி.எம் ப்ரொமோஷனுக்கப்புறம்தான்.. இந்த பாழாப்போன வேலைதான் நமக்கிடையில எமனா வந்திருக்குன்னு நினைக்கிறேன்.. பேசாம ராஜிநாமா பண்ணிட்டு வீட்ல இருந்தா என்னன்னு கூட சில சமயம் தோனுது நந்து.. நீங்க ஒரு எடத்துலயும் நா ஒரு எடத்துலயும் மாஞ்சி, மாஞ்சி வேல பார்த்து யாருக்கு நந்து நாம சேர்த்து வைக்கிறோம்..?’

நந்து திரும்பி அவளைப் பார்த்தான். ‘சரிதான்..  யாருக்காக..? குழந்தையா குட்டியா?’

நளினி இதுதான் சமயம் என்று நினைத்து, ‘நந்து நா ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டீங்களே?’ என்றாள்.

‘என்ன?’

‘சங்கீத்தா இன்னைக்கி காலையில ஒரு யோசனை சொன்னாள்..’

‘அந்த கமலா டாக்டர்கிட்ட போகச்சொல்லிதானே? எங்கிட்டயும் சொன்னாள்.. அந்த டாக்டர் ரொம்ப கைராசி டாக்டராம். டெஸ்ட் ட்யூப் சன்செப்ஷனுக்கு பேர்போனவங்களாம். போய் பாரேன் சேட்டான்னு சொன்னா. What do you say? இந்த வயசுல இது வேணுமா?’

நளினி வியப்புடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன நந்து அப்படியென்ன நமக்கு வயசாயிருச்சி? நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே வயசுதான? என்ன, நீங்க என்னெ விட ஆறு மாசம் பெரிசாயிருப்பீங்களா? நாற்பது வயசெல்லாம் ஒரு வயசேயில்லை.. பெத்தெடுக்கப் போறது நாந்தானே..?’

நந்து புன்னகையுடன், ‘அதென்னமோ சரிதான். அதுமட்டும்தானே இன்னும் எங்க தலையில வைக்காம இருக்கீங்க?’ என்றான்..

நளினி பதிலள்ளிக்குமுன்பு வண்டி ஆல்வே நிலையத்திற்குள் நுழைய அவர்களை சுற்றிலும் இருந்த இருக்கைகளில் பயணிகள் ஏறி அமர நந்து எழுந்து எதிர் இருக்கையில் அமர்ந்தான்..

அவர்களருகில் வந்தமர்ந்த கல்லூரி மாணவிகள் அடித்த அரட்டையில் நந்துவும் நளினியும் மேற்கொண்டு ஒன்றும் பேசிக்கொள்ள இயலாமல் போனது..

****

மைதிலி கண்களைத் துடைத்துக்கொண்டு கட்டிலில் இருந்து எழுந்து சுவரிலிருந்த மணியைப் பார்த்தாள். மணி எட்டு ஆகியிருந்தது.

சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் பதறிக்கொண்டு எழுந்தாள். ‘ஐயோ சீனிய மறந்தே போய்ட்டேனே..’

கடகடவென முகம் கழுவி தலையை ஒதுக்கொக்கொண்டு அறைக்கதவைத் திறந்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்து தன்னுடைய கைப்பையையும் ஸ்கூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு, ‘அம்மா நா அங்கிளோட க்ளினிக் வரைக்கும் போய்ட்டு வரேன்.’ என்று சமையலறையை நோக்கி கூறிவிட்டு வாசலை நோக்கி விரைந்தாள்.

ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து அரை தூக்கத்திலிருந்த பட்டாபி திடுக்கிட்டு எழுந்து, ‘ஏய் மைதிலி, இந்த நேரத்துல எங்க போறே?’ என்றார்.

மைதிலி வியப்புடன் திரும்பி பார்த்தாள். ‘என்னப்பா புதுசா? எத்தன நாள் ஒன்பது மணி ராத்திரியிலே வெளிய போயிருக்கேன்? அப்பல்லாம் கேக்காத நீ இன்னைக்கி என்ன புதுசா?’

பட்டாபி தயக்கத்துடன் தன் மகளைப் பார்த்தார். ‘ஒன்னுமில்லே மைதிலி இன்னைக்கி போவேண்டாம்னுட்டுத்தான்.’

‘அதான் ஏன்னு கேக்கறேன்? நா இங்க வரச்சே சீனிய சித்த நேரம் இங்க இருடான்னு க்ளினிக்ல விட்டுட்டு வந்தேன். அட்லீஸ்ட அவன டாக்சியிலயாவது ஏத்திவிட வேண்டாமா? அவன் என்ன நினைச்சிப்பான்?’

சமையலறையிலிருந்து வந்து நின்றிருந்த ஜானகி, ‘ஆமா மைதிலி இப்ப நீ போவேணாம். அப்பா வேணும்னா க்ளினிக்குக்கு போன் பண்ணி சொல்லட்டுமே. அவா யாராச்சும் அவனெ டாக்சியில ஏத்தி விடமாட்டாளா என்ன?’ என்றாள்.

மைதிலி சலிப்புடன் தன் பெற்றோர்களைப் பார்த்தாள். ‘சரி. ஒன்னு வேணா பண்ணலாம். அப்பாவும் என்னோட வரட்டும்.. ரெண்டு பேருமா போயி டாக்சி புடிச்சி சீனிய அனுப்பிட்டு வரோம்.’

பட்டாபி ஜானகியைப் பார்த்தார்.

‘சரி.. நீங்களும் கூட போயி ஏத்திவிட்டு வாங்களேன். அந்த பையன நினைச்சாலும் பாவமாத்தான் இருக்கு. போங்க..’

பட்டாபியும் மைதிலியும் வெளியேற வாசற்கதவை மூடிவிட்டு, ‘முருகா, பிள்ளையாரப்பா.. இந்த பொண்ணுக்கு ஒரு விடிவு காலத்த குடுப்பா..’ என்று முனுமுனுத்தவாறு சமையலறையை நோக்கி நடந்தாள் ஜானகி..

தொடரும்

3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

"veetle santhoshathe tholaichittu,
roadle thedi..."-good observation

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

veetle santhoshathe tholaichittu,
roadle thedi../

உண்மைதானே ஜி!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

இப்பொழுது பலருடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்சியாகிவிட்டது. //


உண்மைதான்.