31.5.06

சூரியன் 87

மாதவன் இரவு எந்த நேரத்தில் படுக்கைக்குச் சென்றாலும் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே விழித்துவிடுவார்.

எந்த ஊரில் இருக்க நேர்ந்தாலும் எழுந்ததுமே அவர் செய்யும் முதல் வேலை படுக்கையருகில் ஒரு பெட்ஷீட்டை விரித்து பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள்வரை யோகாசனம் செய்வது..

மும்பையிலிருந்த காலத்தில் கற்றதை கடந்த பத்தாண்டுகாலமாக விடாமல் செய்து வருவதுதான் அவருடைய இளமையான தோற்றத்தின் ரகசியம்.

அன்றும் காலையில் எழுந்ததும் தன்னுடைய வழக்கத்தை விடாமல் கட்டிலில் கிடந்த விரிப்பை தரையில் விரித்து அடுத்த இருபது நிமிடங்கள் கண்களை மூடி தன்னுடைய முழுக்கவனத்தையும் தான் செய்யவிருந்த ஆசனங்களில் செலுத்தலானார்.

ஆசனங்களின் இறுதியில் தரையிலேயே படுத்து பத்து நிமிடம் கால் பாதத்திலிருந்து நெற்றி வரை அங்கமங்கமாக ரிலாக்ஸ் செய்யும்  சவாசனத்துடன் முடித்துக்கொண்டு புத்துணர்ச்சியுடன் எழுந்தார்.

இன்று அவருடைய வாழ்க்கையின் புது அத்தியாயம் துவங்கவிருந்தது. அடுத்த நான்காண்டுகள் அவரை நம்பியிருக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் தலைவராக செயலாற்றப்போகிறவர்.

அவர் அன்றுமுதல் எடுக்கவிருக்கும் ஒவ்வொரு முடிவும், பேசவிருக்கும் ஒவ்வொரு சொல்லும் இந்த குடும்பங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

நாடு முழுவதும் ஆயிரம் கிளைகளுக்கு மேல் கொண்டிருந்த அந்த தனியார் வங்கியின் முதல்வர் பதவி என்ற அந்தஸ்த்து அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கப்போகிறது.

சவாசனத்தை முடித்துக்கொண்டு எழுந்தவர் நேரே குளியலறைக்குள் சென்று காலைக்கடன்களை முடித்து வெளியே வந்தபோது மணி ஆறு என்றது சுவர்க்கடிகாரம்.

கையோடு கொண்டுவந்திருந்த வாக்கிங் காலணியையும் அரைக்கால் நிஜார் மற்றும் டீ ஷர்ட்டை அணிந்துக்கொண்டு வெளியேறினார்.

ஹோட்டல் லாபியில் ரிசப்ஷனில் இருந்தவர்களின் காலை வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அருகில் பூங்கா ஏதும் உள்ளதா என்று விசாரித்தார்.

‘It is not like Bombay Sir.. You may have to drive down to the Beach for clean air.. Otherwise you can cross the road and walk on the side lanes..’  

இதுதான் இங்க தொல்லை.. மும்பையில் என்றால் மூலைக்கு மூலை விசாலமான பூங்காக்கள் காலையில் நடப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.. அழகான பூங்காவைச் சுற்றி பிரத்தியேக கான்க்ரீட் பாதைகள் நடப்பவர்களுக்கென அமைக்கப்பட்டிருப்பதை  நினைத்தவாறு சாலையில் இறங்கி இடமும் வலமும் பார்த்தார்.

காலை நேரத்தில் வாகனங்கள் அவ்வளவாக இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த சாலையைக் கடந்து அடுத்தடுத்து இருந்த சந்துகளில் அடுத்த அரைமணி நேரம் வேகமாக வியர்வை பெருக்கெடுத்து ஒழுகும் வரை நடந்தார்..

பூங்கா இல்லையென்றாலும் வாகனங்களின் ஓசையும், புகையும் இல்லாதிருக்கவே நிம்மதியுடன் கால்வீசி நடக்க முடிந்தது..

இன்னைக்கி ராத்திரி பேங்க் கார இங்கவே விட்டுட்டு போகச் சொல்லணும்.. நாளைலருந்து சரோவையும் கூட்டிக்கிட்டு பீச்சுக்கு போய் நடக்கலாம்.. என்ற முடிவுடன் மீண்டும் சாலையைக் கடந்து ஹோட்டலுக்குள் நுழைந்து ரிசப்ஷனில் இருந்த இளம் பெண்ணிடம், ‘தாங்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ்.. இட் வாஸ் நைஸ்..’ என்று புன்னகையுடன் கூறிவிட்டு அறையை சென்றடைந்தார்..

அவர் அறைக்குள் நுழையவும் சரோஜா படுக்கையிலிருந்து எழவும் சரியாக இருந்தது. அவர்களுடைய அறையிலிருந்து வத்ஸலாவின் அறையை கனெக்ட் செய்யும் கதவும் திறந்திருக்க வத்ஸ்லா ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்..

‘Hi everybody.. First day first show in Chennai..’ என்றார் புன்னகையுடன்..

‘ஆமா நேத்துலருந்து சீனி என்னான்னு கவலையோடருக்கேன்.. நீங்க வேற.. ஒங்களுக்கு ஒங்க ஆஃபீச விட்டா வேறன்னெ கவலை..’ என்ற தன் மனைவியை நெருங்கி அவருடைய தோள்களைப் பிடித்தார் மாதவன்.

‘சரோ.. He is not a child anymore.. Don’t bother. He will take care of himself.. ரெண்டு மூனு நாளைக்கு அவனெப் பத்தி கவலப் படாம இரு.. I will send the car back after reaching my office.. நீங்க ரெண்டு பேரும் ஸ்பென்சர் பளாசா போங்க.. வேணுங்கறத வாங்குங்க.. இந்த ஓட்டல்லருந்து போனா போறுண்டான்னு இருக்கு.. இந்த வார கடைசிக்குள்ள பெசண்ட் நகர் வீட்டுக்கு போயிரணும்.. அங்க போனதுக்கப்புறம் சீனி வந்தா போறும்.. Let him enjoy Mumbai and that girl’s company..’

என்னாச்சி இந்த மனுஷனுக்கு என்பதுபோல் அவரைப் பார்த்த சரோஜா அவருடைய கைகளை லேசாக விலக்கிவிட்டு படுக்கையிலிருந்து இறங்கி குளியலறையை நோக்கி நடந்தார்.

‘நீங்க மொதல்ல சூடா ரெண்டு காப்பி கொண்டு வரச்சொல்லுங்க.. ஒங்களுக்குத்தான் காலைல காப்பி, டீ ஒன்னும் வேணாம்.. டம்ளர், டம்ளரா பச்ச தண்ணிய குடிப்பீங்க.. எனக்கும் வத்சுவுக்கும் காலைல எழுந்ததும் சிவகாமி மாமி காப்பிய குடிக்கலன்னா தலையே வெடிக்கிறா மாதிரி இருக்கும்..’

மாதவன் சரி என்று தலையை அசைத்தவாறு அறையிலிருந்த ஸ்பீக்கர் ஃபோனிலிருந்த ரூம் சர்வீஸ் பொத்தானை அழுத்தியதும், எதிர்முனையிலிருந்து ‘குட் மார்னிங் மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் மாதவன்..’ என்ற தேனொழுகும் குரலில் காலை வணக்கம் ஒலிக்க புன்னகையுடன் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘send me a pot of strong Chennai coffee please. No cookies.’ என்றார்.

மும்பை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காலை காப்பி என்றால் நிச்சயம் குக்கி எனப்படும் இனிப்பு பிஸ்கட்டுகள் நிச்சயம் இருக்கும்.. சென்னையில் எப்படியோ.. எதற்கும் சொல்லிவைப்போம் என்றுதான் ‘No cookies’ என்றார்.

‘Yes Sir.. in five minutes Sir.’ என்ற பதிலுடன் இணைப்பு துண்டிக்கப்பட மாதவன் எழுந்து தன் கைப்பையிலிருந்த மின்சார ஷேவரை எடுத்து படுக்கையருகிலிருந்த ப்ளக்கில் சொருகி தலைமாட்டிலிருந்த பெல்ஜியம் கண்ணாடியைப் பார்த்தவாறு சவரம் செய்யத் துவங்கினார்.

அவர் சவரம் செய்து முடிக்கவும் சரோஜா குளியலறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. சற்றும் தாமதியாமல் குளியலறைக்குள் நுழைந்த மாதவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தார்..

பால்கனியில் அமர்ந்து காப்பிக் கப்பை உறிஞ்சிக்கொண்டிருந்த மனைவியையும் மகளையும் அமைதியாகப் பார்த்தார்..

கிழக்கு திசையிலிருந்து கடற்கரை காற்று மெலிதாக வீச.. காலை நேர சென்னை மும்பையிலிருந்து வெகுவாய் மாறுபட்டிருந்ததை உணர முடிந்தது..

மும்பையில் இந்த நேரத்திலேயே சாலைகளை அடைத்துக்கொண்டு வாகனங்கள் கரும்புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்..

அதனுடன் ஒப்பிடும்போது சென்னை ஒரு மோட்சம் என்று நினைத்தார்..

‘கையில டவல வச்சிக்கிட்டு என்ன யோசிக்கிறீங்க.. டைம் ஆவலையா? ப்ரேக் ஃபாஸ்ட் இங்கருந்தே ஆர்டர் பண்லாமா இல்ல ரெஸ்டாரண்ட் போலாமா?’ என்ற மனைவியின் குரல் அவரை திடுக்கிட வைத்தது..

‘என்ன சரோ..?’ என்றவரை வியப்புடன் பார்த்து சிரித்தாள் சரோஜா..

‘என்ன டாட் காலைலயே கனவா?’  என்றார் வத்ஸலா பால்கனியிலிருந்து..

மாதவன் புன்னகையுடன், ‘சேச்சே.. மும்பைய நினைச்சி பார்த்தேன். இந்த நேரத்துலயே அங்க எப்படியிருக்கும் ட்ராஃபிக்னு நினைச்சி பார்த்தேன்.. Compared to Mumbai Chennai is a heaven இல்ல?’

‘பின்னே இல்லையா.. ஊரா அது? எப்ப பாத்தாலும் பரபரன்னு.. ச்சே.. போறும்பா..’ என்று சலித்துக்கொண்ட தன் தாயைப் பார்த்து, ‘அம்மா.. வேணாம்.. ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னத மறந்துராத..’ என்றாள் வத்ஸலா கேலியுடன்..

சரோஜா திரும்பி தன் மகளை முறைத்தாள்.. ‘என்னடி சொன்னேன்? எல்லாம் நம்ம சீனிக்காகத்தான்.. அவந்தான் அந்த பொண்ண விட்டுட்டு வரமாட்டேன்னு நின்னானே.. அவனுக்காகத்தான் அப்படி சொன்னேன்.. ஒரு எடத்துக்கு நிம்மதியா போ முடியுமா, வர முடியுமா? கார் இருந்துதுன்னுதான் பேரு.. ஒரு நாளாவது என்னால ட்ரைவ் பண்ண முடிஞ்சிருக்கா.. ஸ்டீரிங்க புடிச்சே பத்து வருஷத்துக்கு மேலாவுது..’

வத்ஸ்லா சிரித்தாள். ‘சரிம்மா.. அதுக்குன்னு இங்க டிரைவ் பண்ணப் போறியா என்ன? அங்கயாவது டிராஃபிக்ல வண்டிங்கதான் இருக்கும்.. இங்க  பாரு.. நடுரோட்ல அந்த மாடு சாவகாசமா நடக்கறத..’

சரோஜா, ‘நிஜமாவா சொல்றே?’ என்றவாறு எம்பிப் பார்க்க கீழே சாலையில் வாகனங்கள் செல்வதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு பசுமாடும் அதன் கன்றும் சாலையின் நடுவே அசைபோட்டவாறு செல்வதைப் பார்த்து, ‘என்னடி இது கொடுமையாருக்கு.. மெட்றாஸ் இத்தன வருஷத்துக்கப்புறமும் மாறவே இல்லடி.. இருந்தாலும் பாறேன்.. யாராவது அந்த ரெண்டையும் மைண்ட் பன்றாங்களான்னு..’ என்றாள் வியப்புடன்..

அவர்களுக்கு பின்னால் நின்ற மாதவன், ‘That’s what Chennai is.. Everyone and everything will coexist without too much of  fuss.. ஆனா ஒன்னு.. வத்ஸ் சொல்றா மாதிரி வண்டி ஓட்டி பாக்கலாங்கற விஷப் பரீட்சை இப்போதைக்கு வேணாம்.. ரெண்டு, மூனு மாசம் போவட்டும்.. பாக்கலாம்..’ என்றவாறு அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு விரைந்து சென்று திறக்க, ‘Good Morning Sir. Welcome to Chennai once again’ என்று புன்னகையுடன் நின்ற தன்னுடைய காரியதரிசியைப் பார்த்து அகண்ட புன்னகையுடன்.. ‘Thank you, Mr Subodh.. Good Morning. Come in..’ என்றார்.

அவனோ, ‘No sir. I will wait in the lobby. I just wanted to inform you that I am here to take you to the Office. I did not want to call you over the house phone. That’s why I came up..’ என்றவாறு விடைபெற்று செல்ல அறைக்கதவை அடைத்துவிட்டு ரூம் சர்வீசை அழைத்து காலை உணவை அறைக்கு கொண்டு வர உத்தரவிட்டார்..

‘நான் ரெண்டு இட்லி மட்டும் சாப்ட்டுட்டு ஓடறேன். மொதல் நாளே லேட்டா போனா நல்லாருக்காது.. இன்னைக்கி ஃபுல் டே நா பிசியாருப்பேன்னு நினைக்கிறேன்.. நான் போனதும் கார அனுப்பறேன்.. நீங்க ஒங்க ப்ளான் ப்ரகாரம் செய்ங்க.. நான் சாயந்திரம் ஃப்ரீயாவும்போது கூப்டறேன்..’

சரோஜாவும் வத்ஸலாவும் அவரைப் பார்த்து சரியென்று தலையை அசைக்க மாதவன் உடைமாற்றிக்கொண்டு புறப்பட்டார்..

தொடரும்..

7 comments:

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் இங்கே மெதுவா போரவங்க யாருமில்ல? //

அதாவது ஒரு கிராமவாசியின் பார்வையில் சென்னைவாசிகள் அவசரமானவங்கதான்..

ஆனா இந்தியாவிலருக்கற மத்த மூனு பெருநகரங்களோட ஒப்பிடும்போது சென்னை ஒரு சொர்க்கம்தான். சந்தேகமேயில்லை.

siva gnanamji(#18100882083107547329) said...

இந்த இனிய சூழ்நிலை குடும்பத்தில்
மேலும் வளரட்டும். அப்பதான் அலுவலகத்தை சமாளிக்க முடியும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இந்த இனிய சூழ்நிலை குடும்பத்தில்
மேலும் வளரட்டும்//

கரெக்ட்.. அப்படியே இருக்கும்னு நம்புவோம்.

G.Ragavan said...

ம்ம்ம்....மாதவன் ஆபிசுக்குப் போறாரா? போகட்டும்....உள்ள என்னென்ன காத்திருக்கோ!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

உள்ள என்னென்ன காத்திருக்கோ! //

பதவி உயர உயர பிரச்சினைகளும் உயர்ந்துக்கிட்டுத்தான போவும்..? நாளுக்கு ஒரு மண்டையிடின்னு இருக்கத்தான செய்யும்.

அதுல இவர் மட்டும் விதிவிலக்கா என்ன..

krishjapan said...

இதுல யாரு டிபிஆர் அய்யான்னு எனக்கு தெரிஞ்சு போச்சே... அவர் பாதி, இவர் மீதி, இரண்டும் சேர்ந்த கலவை நான் என்று சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

இதுல யாரு டிபிஆர் அய்யான்னு எனக்கு தெரிஞ்சு போச்சே//

என்னெ ரிசம்பிள் பண்ணி ஒரு காரக்டெர் இனிமேத்தான் வரும்:)